திருவிடைமருதூர் பாவை விளக்கின் வரலாறு

தமிழகத்தின் கலையழகு மிக்க கோயில்களில் திருவிடைமருதூருக்கு சிறப்பிடம் உள்ளது. இங்கிருக்கும் மகாலிங்கேசுவரர் சன்னதி முன்பு இருக்கும் பாவை விளக்கின் நேர்த்தி அளவிட முடியாத அழகுடையது. சிறந்த வேலைப்பாடுகள் உடைய புடவையுடுத்தி சந்திர பிரபை சூரிய பிரபை நெற்றிச்சுட்டி நாகசடை வில்லை தோள்வளை பூமுகம் முத்தாரம் காரை அட்டிகை கைவளை கடகம் இடுப்பணி கால் கொலுசு மெட்டி என்று தலை முதல் கால் வரை மங்கல ஆபரணங்கள் பூட்டி முகம் கனிந்த சிரிப்புடன் நின்றிருக்கும் பாவை விளக்கின் அழகு கண் கொள்ளாதது. அவ்விளக்கிலிருக்கும் பாவை பற்றிய குறிப்புகள் அப்பீடத்தின் அடியில் பொறிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய அரசு குலத்தை சேர்ந்த அம்முனு பாய் என்பவர் தான் இந்த பாவை விளக்குப் பெண்மணி. பிரதாப சிம்மன் என்னும் தஞ்சை அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசனின் மாமன் மகளாகிய அம்முனு லட்ச தீபம் ஏற்றி மகாலிங்கேஸ்வரர் அருள் பெற்றதாக அதில் குறிப்புள்ளது. இதன் மூலம் அம்முனு தான் விரும்பிய மாமன் மகனை திருமணம் செய்துக் கொண்டு தன் வேண்டுதல் வழி தன்னையே பாவை விளக்காக சிலை செய்து இறைவனுக்கு சமர்பித்ததாக யூகங்கள் இருந்தன. ஆனால் உண்மை கதை வேறு. குடவாயில் பாலசுப்பிரமணியம் ஐயா சிலையின் கீழ் பொறிக்கப்பட்டிருந்த குறிப்புகள் துணைக் கொண்டு திருவிடைமருதூர் அரச குடும்பம் குறித்த ஏடுகள் மற்றும் தஞ்சை மராட்டியர் நூலகத்தில் கிடைத்த ஏடுகள் மூலம் அறிந்த உண்மை கதையை தனது ஆய்வின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார். அமரசிம்மன் என்னும் மராட்டிய அரசனின் மகன் பிரதாப சிம்மன். அவர்கள் தஞ்சையில் தங்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்து திருவிடைமருதூர் மாளிகையில் வசிக்கின்றார்கள். முன்னரே மணமாகி குழந்தை இல்லாத பிரதாபசிம்மன் தன் மாமன் மகள் அம்முனு பாய் மீது காதல் கொள்கிறான். அம்முனுவும் பிரதாப சிம்மனை உயிருக்குயிராய் நேசிக்கிறாள். இவர்கள் அன்பு உற்றார்களால் அங்கீகரிக்கப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரதாப சிம்மன் இறக்கிறான். பிரதாப சிம்மனை தன் மனதில் கணவராக எண்ணியிருந்த அம்முனு துறவு கொள்கிறார். தன் மனம் விரும்பியவனின் ஆத்ம மோட்சத்திற்காக மகாலிங்கேஸ்ரர் சன்னதியில் லட்ச தீபம் ஏற்றி அதில் ஒரு விளக்காக தன் மங்கல கோலத்தை வார்க்க செய்து வழிப்படுகிறாள் அம்முனு அம்மிணி. பின் தன் ஆயுள் வரை மகாலிங்கேஸ்வரர் ஆலய பணியில் ஈடுபடுகிறார். தமிழகம் முழுவதும் எண்ணற்ற பாவை விளக்குகள் உள்ளன. அவற்றிற்கு பின் இன்னும் எத்தனையோ கதைகள் அறியப்படாமல் இருக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 176

கேள்வி: மோட்ச தீபம் ஏற்றும் வழி:

தேவையானவை:

  1. வாழை இலை
  2. பச்சை கற்பூரம்
  3. சீரகம்
  4. பருத்தி கொட்டை
  5. கல் உப்பு
  6. மிளகு
  7. நவ தானியம்
  8. கோதுமை
  9. நெல் (அவிக்காதது)
  10. முழு துவரை
  11. முழு பச்சை பயறு
  12. கொண்டை கடலை
  13. மஞ்சள் (ஹைபிரிட் இல்லாதது)
  14. முழு வெள்ளை மொச்சை
  15. கருப்பு எள்
  16. முழு கொள்ளு
  17. முழு கருப்பு உளுந்து
  18. விளக்கு (200 மில்லி கொள்ளளவு) – 42 விளக்குகள்
  19. தூய பருத்தி துணி (கை குட்டை அளவு) – 21
  20. சுத்தமான நெய்

விளக்கு ஏற்றும் முறை:

எல்லா பொருள்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நினைத்து காய வைக்க வேண்டும். தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை ஆறு மணி. எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஆலயத்தில் தீபம் ஏற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி அனுமதி பெற வேண்டும். எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்த வரை ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் ஏற்றுவது சிறப்பு. முதலில் திரி தயாரிக்க வேண்டும். நல்ல சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம் கருப்பு எள் சீரகம் பருத்தி கொட்டை கல் உப்பு மிளகு ஆகியவற்றை முடிச்சு போட்டு கொள்ள வேண்டும். இந்த முடிச்சின் மறுமுனைதான் நமக்கு திரியாக பயன்பட போகிறது. ஆலயத்தில் இதற்கு என்று தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தலை வாழை இலையினை வைக்க வேண்டும். அதன் மேல் நவ தானியங்களை பரப்ப வேண்டும். பிறகு 21 விளக்குகளையும் தனித்தனியாக வைத்து அதனுள் எள் நிரப்ப வேண்டும். அதன் மேல் ஒவ்வொரு விளக்குக்கும் ஒரு விளக்காக மீதம் உள்ள விளக்குகளையும் வைக்க வேண்டும். நெய் நன்றாக நிரப்பப்பட வேண்டும். பின்னர் முன் செய்த திரியினை இதனுள் நன்றாக நனைக்க வேண்டும். சரியாக நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் மேல் நோக்கி மட்டுமே எரிய வேண்டும் (எந்த திசை பார்த்தும் இருக்க கூடாது). பார்ப்பதற்கு லிங்கம் போல் காட்சி கிடைக்கும். பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவய) குறைந்தது நூற்றி எட்டு முறை ஜபிக்க வேண்டும். (விஷ்ணு ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம்). இறுதியாக இறைவனிடம் இப்பூவுலகில் பிறந்து இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூஜா பலனை சமர்ப்பிக்கிறோம். இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி சற்கதி அடைய பிராத்தனை செய்கிறோம். மேலும் இந்த பூஜையை செய்வதும் செய்ய வைப்பதும் இறைவனும் சித்தர்களுமே. நாங்கள் வெறும் கருவிகளே என்று பிராத்தனை செய்ய வேண்டும். இவ்வாறு பூஜை செய்வதோடு நிறைவு பெறுவது இல்லை. மறுநாள் நாம் பூஜை செய்த விளக்குகள் (இலை நவ தானியம் உட்பட) ஒரு துளி கூட சிந்தாமல் அனைத்து பொருட்களையும் நதியில் சேர்த்து விட வேண்டும் இது கட்டாயம். ஏனென்றால் ஒவ்வொரு பொருளும் ஏன் ஒவ்வொரு எள்ளும் கூட ஒரு ஆத்மா. ஆதலால் நதியில் சேர்த்து விட வேண்டும். கண்டிப்பாக முறையாக அனுமதி பெற்று தான் தீபம் ஏற்ற பட வேண்டும்.

ரிஷபவாகனதேவர்

சிவலிங்க வழிபாடு முகலிங்க வழிபாடு இல்லையேல் சிவனின் முழு உருவ கோலம் என சிவனின் பல ரூபங்களில் இந்த சிவன் சற்று வித்தியாசமாக ரூபத்தில் இருக்கிறார். ஆவுடை மீது லிங்கம் இருக்கும் இடத்தில் நந்தி தேவர் மீது அமர்ந்த கோலத்தில் ஜடாமுடி மற்றும் இதர அணிகலன்கள் அணிந்து காட்சியளிக்கின்றார் ரிஷபவாகனதேவர். இது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புரசோமேஸ்வரர் கோவில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கோவிலில் இவர் இருக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 175

கேள்வி: பசு பாவம் செய்வதில்லையே அதற்கு மோட்சமா? அல்லது மறுபிறவியா?

தேவர்களோ மாந்தன் (மனிதன்) நிலையை விட மேம்பட்ட ஆன்மாக்களோ தாமே விரும்பி பூமியில் பிறவி எடுப்பது உண்டு. சாபத்தினாலோ பாவத்தினாலோ இவ்வாறு பிறவி எடுப்பதும் உண்டு. பாவம் காரணமாக பிறவி எடுத்த ஆன்மாக்கள் எத்தனை பிறவிகள் எவ்வகையான விலங்குகள் எந்த வனங்கள் எத்தனை மனிதரிடம் சித்ரவதை பட வேண்டும்? எத்தனை நாள் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் அலைய வேண்டும்? என்று எல்லாம் கூட கணக்கு இருக்கிறது. ஒரே வகை விலங்கா? அல்லது வேறு வகை விலங்கா? என்று கூட கணக்கு இருக்கிறது. ஒரு ஆத்மாவிற்கு விலங்கு பிறவி வந்து விட்டால் மீண்டும் மனித பிறவி எடுக்க எத்தனையோ கல்ப கோடி ஆண்டுகளாகும். ஆனாலும் கூட இறுதியாக மனிதனாக அல்லது தேவனாக இருந்து செய்த புண்யம் தவறுகள் இரண்டின் அளவுகளையும் இறைவன் கணித்து மீண்டும் மேம்பட்ட பிறவியை அடைய அருள் செய்வார். எனவே ஒரு முறை விலங்காக பிறந்து விட்டால் அதற்கு பாவம் இல்லை என்பது உண்மை. ஆனால் அது பாவத்தை கழிக்கத்தான் அவ்வாறு பிறந்திருக்கிறது. இப்படி அது சேர்த்த வைத்த பாவ தொகுப்பு கழியும் வரை அது பிறவி எடுத்து மீண்டும் அது மேன்மையான சிந்திக்கக்கூடிய பிறவியாக பிறக்கும். அதனால்தான் மனித பிறவி மேம்பட்டது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறுகிறோம். ஏன் என்றால் மனிதன் தானம் தர்மம் பிறருக்கு உதவி செய்து பாவத்தை ஒரு பிறவிலேயே போக்கி கொள்ளலாம். விலங்குகளுக்கு அந்த வாய்ப்பு இல்லாததால் மீண்டும் மீண்டும் விலங்கு தேகத்தையே (உடலையே) பெற வேண்டி இருக்கிறது. சரி விலங்கின் பாவம் எங்கு போகும்? அது விலங்காக இருந்தாலே கழியுமா? கழியாது. அதை ஒரு மனிதன் பிடித்து அடைத்து சித்ரவதை செய்வதன் மூலம் அந்த விலங்கின் பாவத்தை இவன் எடுத்து கொள்கிறான். இவனிடமிருந்து அந்த புண்யம் அந்த விலங்குக்கு போகிறது. இப்படி சில விலங்குகள் வேண்டும் என்றே தனது தவ வலிமையால் சித்ரவதை பட்டு வெகு விரைவிலேயே பிறவியை முடித்து கொள்கிறது. அதற்கும் முந்தைய புண்ய பாவம் இடம் தர வேண்டும்.

பொக்கிஷம்

கிருஷ்ணர் மீது ஏழ்மையான பெண் ஒருத்தி மிகவும் பக்தி வைத்திருந்தாள். ஒருநாள் துவாரகை சென்ற அவள் கிருஷ்ணா உன் விருப்பப்படி நடந்து கொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்? என்றாள். கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதி இதுபோல் அவள் கேட்டாள். ஆனால் ஒரு அழுக்கு கோணிப்பை மூட்டையை அவளிடம் தந்த கிருஷ்ணன் நான் செல்லும் இடமெல்லாம் இதைத் தூக்கிக் கொண்டு வா அது போதும். அனைவரின் முன்னிலையிலும் இந்த அழுக்கு கோணிப்பை மூட்டையை எப்படி கொண்டு செல்வது என்று எண்ணாதே நம் கண்களை தவிர வேறு கண்ணிற்கும் இது தெரியாது என்றார். திகைத்துப் போனாள் அந்தப் பெண். பக்திப்பூர்வமாக எதையாவது சொல்வார் என நினைத்தால் அழுக்கு மூட்டையை சுமக்கச் சொல்கிறாரே என்று எரிச்சல் தோன்றினாலும் வேறு வழி இன்றி அதை அவர் செல்லும் இடம் எல்லாம் தூக்கிக் கொண்டு போனாள். பலமுறை அவள் சலித்துக் கொண்ட போதும் கிருஷ்ணர் எதுவும் சொல்லவில்லை. பல முறை அவள் கோணிப்பை மூட்டையை சுமக்க சிரமப்பட்ட சமயங்களில் தானும் ஒரு கைகொடுத்து உதவினார் கிருஷ்ணர்.

ஒரு நாள் போதும் நீ சுமந்தது மூட்டையை இறக்கி வை என்று சொன்ன கிருஷ்ணர் மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா? என்று புன்முறுவலுடன் கேட்டார். கோணிப்பை மூட்டை தானே அவிழ்ந்தது. அதில் விலை மதிப்பற்ற பொன்னும் மணியும் வைர வைடூரியங்களும் குவிந்து கிடந்தன. இத்தனை காலம் பொறுமையுடன் காத்திருந்த உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பகவான். சட்டென்று கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்த அப்பெண் கிருஷ்ணா என்னை மன்னித்துவிடு அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தைப் புரிந்து கொண்டிருந்திருந்தால் இந்தச் சுமை எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ குறை சொல்லியிருக்கவோ மாட்டேன் என்று கண்ணீர் விட்டுக் கதறினாள். அமைதியாகப் புன்னகைத்தார் கிருஷ்ணர்.

இறைவன் ஒவ்வொருவருக்கும் உரியவற்றை மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேமாகத் தயாரித்து அவர்களிடமே தருகிறான். அதனை சுமையாக நினைப்பதும் பொக்கிஷமாகப் பார்ப்பதும் அவரவர் மனநிலையில் இருக்கிறது. யாரால் எதைச் சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்குத் தெரியும். தாங்க முடிந்த அளவு மட்டுமே அவன் சுமையைத் தருவான். அதுமட்டுமல்ல அதனைச் சுமக்க தன் கரம் கொடுத்தும் அருளுவான். அனைத்தும் இறைவன் செயல் அனைத்தும் நம் நன்மைக்கே என்று நம்பினால் சுமைகள் எல்லாம் சுகமாகத் தெரியும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 174

கேள்வி: கலி முற்றி விட்டது என்பதற்கு என்ன அடையாளம்?

கலி என்றால் துன்பம் என்று ஒரு பொருள். அலுப்பிலும் சலிப்பிலும் விரக்தியிலும் ஒரு மனிதன் கூறுவது கலி முற்றிவிட்டது என்று. கலி காலம் என்பது தனியான ஒரு காலம் அல்ல. துவாபர யுகத்திலும் திரேதா யுகத்திலும் கலி இருந்தது. எல்லா காலத்திலும் உண்டு. பஞ்ச பாண்டவர்கள் எந்த காலம்? அங்கே பலர் அறிய ஒரு பெண்ணை துகில் (ஆடை) உரியவில்லையா? எனவே எல்லா காலத்திலும் மனிதரிடம் உள்ள தீய குணங்கள் வெளிப்பட்டு கொண்டு தானிருக்கும். அதற்கு ஆதாரவாகத்தான் அசுர சக்திகள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கும். அதனால்தான் தவறான வழியில் செல்பவர்களுக்கு செல்வம் அதிகமாக சேர்வதற்கு அந்த தீய தேவதைகள் உதவி செய்கின்றன. நாங்கள் (சித்தர்கள்) அவ்வாறு செய்வதில்லை. அதனால்தான் நல்வழியில் செல்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள். உடனடி லாபம் ஆதாயம் பெற தீய வழியில் செல்லக்கூடாது என்று நாங்கள் பலமுறை கூறுகிறோம். எனவே இந்த நல்ல எண்ணங்களும் நல்ல செய்கைகளும் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் நன்மைகளை விட்டு விடாமல் நல்லவனாக வாழ வேண்டும் என்ற உறுதி ஒரு மனிதரிடம் இருக்க இருக்கத்தான் அந்த தீய சக்தியின் அட்டூழியங்கள் குறையும். இல்லை என்றால் கலி முற்றி விட்டது. கலி காலத்தில் இப்படி தான் வாழ வேண்டும் என்று இவனாகவே வேதாந்தம் பேசி தவறு மேல் தவறு செய்து கொண்டே போனால் முதலில் அது இன்பத்தை காட்டி முடிவில் முடிவில்லா துன்பத்தில் ஆழ்த்தி விடும். எனவே கலி முற்றி விட்டது என்பது எப்போதுமே பேசக்கூடிய ஒரு வழக்கு சொல்தான்.

கேள்வி : மற்ற சமயங்கள் பற்றி:

பிற ஜீவனுக்கு இம்சை செய்யாதே என்றால் நீ அந்த பிரிவில் இருந்து கொண்டுதான் அவ்வாறு இருக்க வேண்டுமா? எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாமே? அதற்கு எதற்கு ஒரு பிரிவு மதம்? மதம் என்பது என்ன? மனிதனை மிருகமாக்காமல் வாழும் போதனைகளை எல்லாம் பிற்காலத்திலே யாரெல்லாம் அதை பின்பற்றுகிறார்களோ அவர்களை எல்லாம் அடையாளப் படுத்த வேண்டும் என்பதற்காக கூறப்பட்டது. எனவே நீ எந்த மதம் என்று கூறுவது கூட தவறு. நீ எந்த பிரிவில் இருந்தாலும் இருந்து கொள். மனித நேயம் மனித அன்பை போதிப்பதற்காகத்தான் பெரிய ஞானிகள் பாடுபட்டார்கள். எனவே கட்டாயப்படுத்தி திணிக்கப்படுகின்ற எந்த விஷயமும் காலப்போக்கில் நிர்மூலமாக்கப்படும். இது நல்லவைக்கும் தீயவைக்கும் பொருந்தும். எனவே நல்ல விஷயத்தை கூட சர்வ சுதந்திரமாக அவனே உணர்ந்து செய்யும் போதுதான் அந்த பிரிவிலே தொடர்ந்து வாய்ப்புகள் இருக்கும். அதே போல் பொருளாதார தேவைக்காகவும் அச்சுறுத்தலுக்காகவும் பிரிவுக்கு பிரிவு தாவுகின்ற நிலைமை எல்லா காலத்திலும் உண்டு. இவையெல்லாம் காலப் போக்கிலே ஏற்றமும் இரக்கமும் கருத்து மாற்றத்தோடும் இருப்பது மனிதனின் குணாதியத்தை பொறுத்துதான். எனவே அதனால் அதிலுள்ள கோட்பாடுகளுக்கு அழிவு என்பது இல்லை.

நம்பிக்கையான பக்தி

சிவலிங்கம் ஒன்றை வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய் என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான். இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல் பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஒருநாள் திடீரெனப் பெய்த மழையினால் சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது. சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய சாம்பல் இல்லையே என வருந்திய அவனும் விராட்டிகளை அடுக்கி தீயை மூட்டிவிட்டு தனது மனைவியிடம் நான் இந்த தீயில் விழுகிறேன். என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய் என்று கூறினான். ஆனால் மனைவியோ நீங்கள் அப்படி இறந்து விட்டால் இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும் நானே தீயில் குதிக்கின்றேன் என்று கூறிக்கொண்டே தீயில் வீழ்ந்தாள். இருவரது பக்தியிலும் திளைத்த சிவபெருமான் பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியைஉயிர்ப்பித்து இருவருக்கும் முக்தி கொடுத்து அருளினார். இந்த தகவலை அறிந்த அரசனும் தங்கத்தால் ஆன சிவலிங்கத்திற்குப் பன்னீர் பஞ்சாமிர்தம் என்றும் வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த எனக்கு காட்சிதராத இறைவன் சுடுகாட்டுச்சாம்பலையும் பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு மோட்சம் அளித்துள்ளாரே என்று வருந்தினாலும் பக்தி என்பது ஆடம்பரத்தில் இல்லை அன்பினால் மட்டுமே மலரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்.

பக்தர்களிடம் சிவபெருமான் எதிர்பார்ப்பது அன்பு மற்றும் தூய்மையான திடமான நம்பிக்கையான பக்தி மட்டுமே தான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 173

கேள்வி: ஐந்து தலை நாகம் பற்றி:

ஐந்து தலை நாகம் இருப்பது உண்மைதான். ஸ்ரீ ராகவேந்திரருக்கு தஞ்சையிலே எந்த இடத்தில் ஸ்தலம் அமைக்க வேண்டும்? என்று யோசித்த ஒரு அரசனுக்கு குறிப்பு காட்டுவதற்காக ஐந்து தலை நாகம் வந்து ஒரு இடத்தை காட்டியது. மனிதனுக்கு புலப்படாததால் இவையெல்லாம் கற்பனை என்கிறான். பொதுவாகவே தாருகாவன முனிவர்கள் சிவன் மீது ஏவிய எதையுமே ஐயன் (சிவன்) தனக்குள்ளே வைத்துக் கொண்டார். எதிரும் புதிருமாகத்தான் உலகம் இருக்கும் என்பதை காட்டத்தான் ஐயன் (சிவன்) அனலையும் புனலையும் வைத்திருக்கிறார். மனிதர்கள் அஞ்சி நடுங்கும் நாகத்தையும் வைத்திருக்கிறார். எனவே ஐந்து தலை நாகம் படமெடுத்து காட்சி தரும் ஆலயங்களுக்கு சென்று ஐயனுக்கு (சிவனுக்கு) நாகலிங்க பூவைக் கொண்டு வழிபாடு செய்தால் நாக தோஷம் விலகும்.

கேள்வி: இறந்தவர்கள் உயிர் பெற்றது பற்றி:

இறந்தவர்கள் உயிர் பெற்றதாக ஆங்காங்கே சில கதைகள் உண்டு. பல நிஜங்களும் உண்டு. இறையின் அருளைக் கொண்டு சஞ்சீவினி மந்திரத்தை பிரயோகித்தால் மட்டுமே இறந்த உடலை (அதாவது உடலில் உயிர் இருக்கும் பொழுதே பரகாயப் பிரவேசம் செய்பவர்கள் உடலை விட்டு ஆன்மாவை வெளிக் கிளப்பி பல இடங்களுக்கும் சென்று வருவார்கள். அவ்வாறு செய்யும் பொழுது கண்ணுக்கு தெரியாத நூலிழை போன்ற ஒன்று உடலையும் ஆன்மாவையும் பிணைத்திருக்கும். மரணத்தின் போது அந்த இழை நிரந்தரமாக அறுந்து விடும். அந்த இழையை ஒன்று படுத்துவதுதான் சஞ்சீவினி மந்திரத்தின் வேலை உயிர்ப்பிக்க முடியும். இறையின் கருணையைக் கொண்டு எத்தனையோ முறை இவ்வாறு நடந்திருக்கிறது. ஞான சம்பந்தர் பூம்பாவையை எழுப்பி இருக்கிறார். திருநாவுக்கரசர் அரவு (பாம்பு) தீண்டி இறந்த பாலகனை எழுப்பி இருக்கிறார். ஆனால் இந்த இடத்திலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நிரந்தரமாக அந்த ஆன்மா பிரிந்திருக்காது. ஒரு ஆழ் மயக்க ஆழ் துயில் (தூக்கம்) நிலையில் இருந்தால் தான் அவ்வாறு எழுப்ப இயலும். உயிரானது நிரந்தரமாக உடலை விட்டுப் பிரிந்தால் அடுத்த கணம் அது புகை போல் கரைந்து விடும் என்பதால் அதை மீண்டும் உடலோடு ஒன்று சேர்க்க முடியாது. உடனேயே உறுப்புகள் செயலிழக்கும். குருதி (இரத்தம்) கெட்டிப் படத்துவங்கும். ஆன்மா உள்ளே நுழைந்தாலும் கூட அந்த உடல் சரிவர இயங்காது.