ஹம்பியில் உள்ள துங்கபத்ரா நதிக்கரையில் காணப்படும் பழமையான சிவலிங்கம்.

ஹம்பியில் உள்ள துங்கபத்ரா நதிக்கரையில் காணப்படும் பழமையான சிவலிங்கம்.


தமிழகத்தின் கலையழகு மிக்க கோயில்களில் திருவிடைமருதூருக்கு சிறப்பிடம் உள்ளது. இங்கிருக்கும் மகாலிங்கேசுவரர் சன்னதி முன்பு இருக்கும் பாவை விளக்கின் நேர்த்தி அளவிட முடியாத அழகுடையது. சிறந்த வேலைப்பாடுகள் உடைய புடவையுடுத்தி சந்திர பிரபை சூரிய பிரபை நெற்றிச்சுட்டி நாகசடை வில்லை தோள்வளை பூமுகம் முத்தாரம் காரை அட்டிகை கைவளை கடகம் இடுப்பணி கால் கொலுசு மெட்டி என்று தலை முதல் கால் வரை மங்கல ஆபரணங்கள் பூட்டி முகம் கனிந்த சிரிப்புடன் நின்றிருக்கும் பாவை விளக்கின் அழகு கண் கொள்ளாதது. அவ்விளக்கிலிருக்கும் பாவை பற்றிய குறிப்புகள் அப்பீடத்தின் அடியில் பொறிக்கப்பட்டுள்ளது.
மராட்டிய அரசு குலத்தை சேர்ந்த அம்முனு பாய் என்பவர் தான் இந்த பாவை விளக்குப் பெண்மணி. பிரதாப சிம்மன் என்னும் தஞ்சை அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசனின் மாமன் மகளாகிய அம்முனு லட்ச தீபம் ஏற்றி மகாலிங்கேஸ்வரர் அருள் பெற்றதாக அதில் குறிப்புள்ளது. இதன் மூலம் அம்முனு தான் விரும்பிய மாமன் மகனை திருமணம் செய்துக் கொண்டு தன் வேண்டுதல் வழி தன்னையே பாவை விளக்காக சிலை செய்து இறைவனுக்கு சமர்பித்ததாக யூகங்கள் இருந்தன. ஆனால் உண்மை கதை வேறு. குடவாயில் பாலசுப்பிரமணியம் ஐயா சிலையின் கீழ் பொறிக்கப்பட்டிருந்த குறிப்புகள் துணைக் கொண்டு திருவிடைமருதூர் அரச குடும்பம் குறித்த ஏடுகள் மற்றும் தஞ்சை மராட்டியர் நூலகத்தில் கிடைத்த ஏடுகள் மூலம் அறிந்த உண்மை கதையை தனது ஆய்வின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார். அமரசிம்மன் என்னும் மராட்டிய அரசனின் மகன் பிரதாப சிம்மன். அவர்கள் தஞ்சையில் தங்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்து திருவிடைமருதூர் மாளிகையில் வசிக்கின்றார்கள். முன்னரே மணமாகி குழந்தை இல்லாத பிரதாபசிம்மன் தன் மாமன் மகள் அம்முனு பாய் மீது காதல் கொள்கிறான். அம்முனுவும் பிரதாப சிம்மனை உயிருக்குயிராய் நேசிக்கிறாள். இவர்கள் அன்பு உற்றார்களால் அங்கீகரிக்கப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரதாப சிம்மன் இறக்கிறான். பிரதாப சிம்மனை தன் மனதில் கணவராக எண்ணியிருந்த அம்முனு துறவு கொள்கிறார். தன் மனம் விரும்பியவனின் ஆத்ம மோட்சத்திற்காக மகாலிங்கேஸ்ரர் சன்னதியில் லட்ச தீபம் ஏற்றி அதில் ஒரு விளக்காக தன் மங்கல கோலத்தை வார்க்க செய்து வழிப்படுகிறாள் அம்முனு அம்மிணி. பின் தன் ஆயுள் வரை மகாலிங்கேஸ்வரர் ஆலய பணியில் ஈடுபடுகிறார். தமிழகம் முழுவதும் எண்ணற்ற பாவை விளக்குகள் உள்ளன. அவற்றிற்கு பின் இன்னும் எத்தனையோ கதைகள் அறியப்படாமல் இருக்கிறது.

சிவலிங்க வழிபாடு முகலிங்க வழிபாடு இல்லையேல் சிவனின் முழு உருவ கோலம் என சிவனின் பல ரூபங்களில் இந்த சிவன் சற்று வித்தியாசமாக ரூபத்தில் இருக்கிறார். ஆவுடை மீது லிங்கம் இருக்கும் இடத்தில் நந்தி தேவர் மீது அமர்ந்த கோலத்தில் ஜடாமுடி மற்றும் இதர அணிகலன்கள் அணிந்து காட்சியளிக்கின்றார் ரிஷபவாகனதேவர். இது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புரசோமேஸ்வரர் கோவில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கோவிலில் இவர் இருக்கிறார்.

கிருஷ்ணர் மீது ஏழ்மையான பெண் ஒருத்தி மிகவும் பக்தி வைத்திருந்தாள். ஒருநாள் துவாரகை சென்ற அவள் கிருஷ்ணா உன் விருப்பப்படி நடந்து கொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்? என்றாள். கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதி இதுபோல் அவள் கேட்டாள். ஆனால் ஒரு அழுக்கு கோணிப்பை மூட்டையை அவளிடம் தந்த கிருஷ்ணன் நான் செல்லும் இடமெல்லாம் இதைத் தூக்கிக் கொண்டு வா அது போதும். அனைவரின் முன்னிலையிலும் இந்த அழுக்கு கோணிப்பை மூட்டையை எப்படி கொண்டு செல்வது என்று எண்ணாதே நம் கண்களை தவிர வேறு கண்ணிற்கும் இது தெரியாது என்றார். திகைத்துப் போனாள் அந்தப் பெண். பக்திப்பூர்வமாக எதையாவது சொல்வார் என நினைத்தால் அழுக்கு மூட்டையை சுமக்கச் சொல்கிறாரே என்று எரிச்சல் தோன்றினாலும் வேறு வழி இன்றி அதை அவர் செல்லும் இடம் எல்லாம் தூக்கிக் கொண்டு போனாள். பலமுறை அவள் சலித்துக் கொண்ட போதும் கிருஷ்ணர் எதுவும் சொல்லவில்லை. பல முறை அவள் கோணிப்பை மூட்டையை சுமக்க சிரமப்பட்ட சமயங்களில் தானும் ஒரு கைகொடுத்து உதவினார் கிருஷ்ணர்.
ஒரு நாள் போதும் நீ சுமந்தது மூட்டையை இறக்கி வை என்று சொன்ன கிருஷ்ணர் மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா? என்று புன்முறுவலுடன் கேட்டார். கோணிப்பை மூட்டை தானே அவிழ்ந்தது. அதில் விலை மதிப்பற்ற பொன்னும் மணியும் வைர வைடூரியங்களும் குவிந்து கிடந்தன. இத்தனை காலம் பொறுமையுடன் காத்திருந்த உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பகவான். சட்டென்று கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்த அப்பெண் கிருஷ்ணா என்னை மன்னித்துவிடு அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தைப் புரிந்து கொண்டிருந்திருந்தால் இந்தச் சுமை எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ குறை சொல்லியிருக்கவோ மாட்டேன் என்று கண்ணீர் விட்டுக் கதறினாள். அமைதியாகப் புன்னகைத்தார் கிருஷ்ணர்.
இறைவன் ஒவ்வொருவருக்கும் உரியவற்றை மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேமாகத் தயாரித்து அவர்களிடமே தருகிறான். அதனை சுமையாக நினைப்பதும் பொக்கிஷமாகப் பார்ப்பதும் அவரவர் மனநிலையில் இருக்கிறது. யாரால் எதைச் சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்குத் தெரியும். தாங்க முடிந்த அளவு மட்டுமே அவன் சுமையைத் தருவான். அதுமட்டுமல்ல அதனைச் சுமக்க தன் கரம் கொடுத்தும் அருளுவான். அனைத்தும் இறைவன் செயல் அனைத்தும் நம் நன்மைக்கே என்று நம்பினால் சுமைகள் எல்லாம் சுகமாகத் தெரியும்.

சிவலிங்கம் ஒன்றை வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய் என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான். இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல் பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஒருநாள் திடீரெனப் பெய்த மழையினால் சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது. சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய சாம்பல் இல்லையே என வருந்திய அவனும் விராட்டிகளை அடுக்கி தீயை மூட்டிவிட்டு தனது மனைவியிடம் நான் இந்த தீயில் விழுகிறேன். என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய் என்று கூறினான். ஆனால் மனைவியோ நீங்கள் அப்படி இறந்து விட்டால் இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும் நானே தீயில் குதிக்கின்றேன் என்று கூறிக்கொண்டே தீயில் வீழ்ந்தாள். இருவரது பக்தியிலும் திளைத்த சிவபெருமான் பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியைஉயிர்ப்பித்து இருவருக்கும் முக்தி கொடுத்து அருளினார். இந்த தகவலை அறிந்த அரசனும் தங்கத்தால் ஆன சிவலிங்கத்திற்குப் பன்னீர் பஞ்சாமிர்தம் என்றும் வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த எனக்கு காட்சிதராத இறைவன் சுடுகாட்டுச்சாம்பலையும் பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு மோட்சம் அளித்துள்ளாரே என்று வருந்தினாலும் பக்தி என்பது ஆடம்பரத்தில் இல்லை அன்பினால் மட்டுமே மலரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்.
பக்தர்களிடம் சிவபெருமான் எதிர்பார்ப்பது அன்பு மற்றும் தூய்மையான திடமான நம்பிக்கையான பக்தி மட்டுமே தான்.
