ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 150

கேள்வி: திருத்திய மலை பற்றி (திருச்சி அருகே):

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் செய்கின்ற தவறுகள் அநேகம். ஒவ்வொரு ஸ்தலமும் அந்தந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் தூர தூர பகுதியிலிருந்து வரும் மாந்தர்களுக்காக ஏற்பட்டது. அவற்றிலே ஒன்றுதான் இந்த பிழை திருத்தும் கிரி (மலை) யாகும். மனிதன் மீண்டும் பிழை செய்யாமல் உள்ளன்போடு மனம் வருந்தி மன்னிப்பை கேட்டு கொண்டால் இந்த இடத்திலே அவனுடைய விதி திருத்தப்படும். எனவே மனிதன் பிழையை மட்டுமல்ல அவன் தலை எழுத்தையே திருத்த கூடிய மலை ஆகும். அபிஷேகங்கள் தொடர்ந்து செய்ய பிதுர் தோஷங்களும் பிரம்ம ஹத்தி தோஷங்களும் குறைய வாய்ப்பு உண்டு.

கேள்வி: சரபேஸ்வரர் வழிபாடு பற்றி:

சரபேஸ்வரர் என்பது சிவனின் அம்சம். சிவ பெருமானின் எத்தனையோ தோற்றங்களில் சரபேஸ்வரரும் ஒன்று. எனவே சரபேஸ்வரரை வணங்கினாலும் சிவனை வணங்கினாலும் ஒன்றுதான். அது உக்ரமான தெய்வம். அவரை வணங்கினால் நமது கஷ்டங்கள் தீரும் என்ற நம்பிக்கை இருப்பதால் அந்த நம்பிக்கையை மனோரீதியாக தீர்க்க இந்த வழிபாடு உதவுகிறது.

கேள்வி: விஷ்வக்சேனர வழிபாடு பற்றி:

இது விஷ்ணு சார்ந்த வழிபாடு.

விஷ்வக்சேனர் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

திருத்தியமலை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

திருத்தியமலை

திருதேசமலை எனும் திருத்தியமலை திருத்தலத்தில் சிவபெருமான் ஏகபுஷ்பப் பிரியநாதன் என்னும் திருப்பெயரோடு அருளுகிறார். அம்பாள் தாயினும் நல்லாள். இறைவனுக்கும் அம்பாளுக்கும் இடையில் அமர்ந்தவாறு சுவரில் உள்ள துவாரம் மூலம் அதிகார நந்தி இறைவனை தரிசிக்கிறார். இங்கு தெய்வானையுடன் சுப்பிரமணியர் காட்சி தருகிறார். உமா மகேஸ்வரர் பைரவர் மகாலட்சுமி சண்டிகேஸ்வரர் சூரியன் நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளார்கள். இந்த மலையில் வற்றாத நீர் உள்ள ஒரு சுனையில் பல யுகங்களுக்கு ஒரே ஒரு முறை மட்டும் மலர் ஒன்று பூக்கும். அந்த மலரின் பெயர் தேவ அர்க்கய வள்ளிப்பூ. இறைவனால் படைக்கப்பட்ட எத்தனையோ மலர்கள் இறைவனுக்குச் சாத்தப்படுகின்றன. ஆனால் இந்த தேவ அர்க்கய வள்ளிப்பூ என்னும் ஒரு மலரை மட்டுமே இறைவனே காத்திருந்து ஏற்றுக் கொள்கிறார். தேவ அர்க்கய வள்ளிப்ப்பூவை அணிந்து மகிழ்வதற்காக யுக யுகாந்திரமாய் காத்திருப்பதால் இந்த சிவபெருமானின் திருப்பெயர் ஏகபுஷ்பப் பிரியநாதர் என்று வழங்கப்படுகிறது. பிருகு முனிவரும் அகத்தியரும் அவரது மனைவி லோபமுத்ராவும் இந்த இறைவனையும் இறைவியையும் தரிசித்துள்ளார்கள். கோவிலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவலிங்கத்திற்கு வில்வத்தாலும் ஆவுடையாருக்கு துளசியாலும் அர்ச்சனை செய்யப்படுகிறது.

ஒரு மகாசிவராத்திரி நாளில் நாரதர் தேவலோகத்தில் உள்ள ரிஷிகளிடம் பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் தேவ அர்க்கவல்லி என்ற மலரினால் சிவபெருமானை பூஜித்தால் உலகில் உள்ள எல்லா மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்று சொன்னார். இதனைக் கேட்ட பிருகு மகரிஷி அம்மலரைக்காண பூவுலகில் பல இடங்களில் தவம் செய்தார். சிங்கம்புணரியை அடுத்த திருக்களம்பூரில் தவம் செய்த போது அங்கு ஒரு வாழை மட்டையானது பிரான்மலை குளக்குடி நெடுங்குடி வழியாக அந்த மகா முனிவருக்கு வழிகாட்டி இறுதியாக திருத்தியமலை வந்தவுடன் அந்த வாழை மட்டையானது மறைந்தது.

திருத்தியமலையில் அப்போது மாமுனிவர் அகத்தியரும் அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து கொண்டிருந்திருந்தார்கள். பிருகு மகரிஷி அகத்திய முனிவரிடம் தேவ அர்க்கவல்லி மலரின் இரகசியத்தைக் கேட்டு அறிந்து கொண்டு பல காலம் அங்கு தவமிருந்தார். ஒரு மகாசிவராத்திரி நாளில் மலையின் மீது மிகப்பெரிய மரமும் அதில் ஆயிரக்கணக்கான பறவைகளும் காணப்பட்டன. அகத்தியர் தான் கிரிவலம் செய்த போது இதுபோன்ற மரமும் பறவைகளும் இல்லையென்றும் எனவே இன்று ஒரு மகா அதிசயம் நடக்க இருப்பதாக லோபமாதாவிடமும் பிருகு முனிவரிடமும் கூறினார். அவ்வாறே மகா சிவராத்திரியான அந்த நாளில் அந்த மரத்தில் இருந்த பறவைகள் எல்லாம் ஓம் நமச்சிவாய என்று கூறியவாறு பறந்து சென்றதை அவர்கள் கண்டனர். அகத்திய முனிவர் பறவைகளின் மொழியை அறிந்தவர் ஆதலால் தேவ அர்க்கவல்லி பூவை அப்பறவைகள் கண்டு கொண்டதால் அவை சிவலோகம் செல்வதாக கூறினார். பறவைகள் மட்டும் அம்மலரைக் கண்டு கொண்டதால் பிருகு முனிவர் சிறிது வருத்தப்பட்டார்.

அகத்திய முனிவர் பிருகு முனிவரையும் லோப மாதாவையும் திருத்தியமலை குன்றின் மீது சுனைக்கு அருகே அழைத்து சென்றார். அங்கு உள்ள சுனைநீரில் தேவ அர்க்க வல்லி பூவின் பிம்பத்தை அவர்கள் மூவரும் கண்டனர். பூவின் பிம்பத்தை மட்டும் கண்ட அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றார்கள். அப்போது சுனையில் தோன்றிய தேவ அர்க்கய வள்ளிப்பூ மெல்ல நகர்ந்து போய் ஏகபுஷ்பப் பிரியநாதரின் சிரசில் அமர்ந்தது. இந்த அரிய காட்சியைக் கண்ட பிருங்கி முனிவர் ஆனந்தக் கூத்தாடினார். அப்போது சிவபெருமான் அந்த தேவ அர்க்க வல்லி பூவை சூடிக்கொண்டு சுயம்புவாக அகத்தியருக்கும் லோபமாதாவுக்கும் பிருகு முனிவருக்கும் காட்சியளித்தார்.

இத்திருக்கோயிலானது 5000 ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்தது. ஆதித்திய சோழர் விக்ரம சோழர் மற்றும் இரண்டாம் இராஜேந்திர சோழர்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டு இறுதியாக கிபி1883 ஆம் கால கட்டத்தில் சென்னையை ஆண்டு வந்த சென்னப்ப நாயக்கர் மற்றும் நக்கன நாயக்கரால் புதுப்பிக்கப்பட்டது. திருக்கோயில் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் சோழர்கள் காலத்தின் அளவை முறைகள் மற்றும் கோவிலின் சிறப்பு முதலியவற்றை பற்றி எடுத்துரைக்கின்றன.

விஷ்வக்சேனர்

விஷ்வக்சேனர்

வைகுண்டத்தில் திருமாலுக்கு இடைவிடாது தொண்டு செய்பவர்களில் முதன்மையானவர்கள் மூவர். அனந்தன் கருடன் விஷ்வக்சேனர். துலா மாசம் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் விஷ்வக்சேனர். இவரின் மனைவி பெயர் சூத்ரவதி. இவர் எல்லாத் திசைகளிலும் விஷ்ணுவின் படைகளுக்கு சேனைத் தலைவராக விளங்குகிறார். ஆகையால் இவர் சேனைமுதலி என்றும் சேனாதிபதி ஆழ்வான் என்றும் பெயர் பெற்றார். விஷ்ணு என்ன நினைக்கிறாரோ அதை உணர்ந்து செயல்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்தவர் விஷ்வக்சேனர். இவரின் கையில் ஒரு பிரம்பு ஒன்று இருக்கும். செங்கோல் போன்ற இதை ஏந்தி தேவர்கள் முனிவர்கள் யட்சர்கள் கந்தர்வர்கள் கின்னரர்கள் கிம்புருடர்கள் மருத கணங்கள் வித்யாதரர்கள் ஆழ்வார்கள் மற்றும் அடியார்கள் என்று விஷ்ணுவைப் தரிசிக்க வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவார். நம்மாழ்வாருக்கு உபதேசம் செய்த பெருமை உடையவர். பராசர பட்டரால் வணங்கப்பட்ட பெருமைக்குரியவர். சடகோபர் இவரின் அம்சமாகவே அவதரித்தார். இத்தனை பெருமை உடையவர் விஷ்வக்சேனர்.

ஒரு முறை சலந்திரன் என்னும் அரக்கனை அழிக்க விஷ்ணுவுக்கு ஈஸ்வரன் ஒரு சக்ராயுதத்தைக் கொடுத்தார். அந்த சக்ராயுதத்தை விஷ்ணு வீரபத்திரர் மீது கோபத்தில் ஏவினார். வீரபத்திரர் கபாலங்களைக் கோத்து மாலையாக அணிந்திருப்பார். அதில் ஒரு வெண் தலை கபாலம் விஷ்ணு ஏவிய சக்ராயுதத்தை வாயை அகலமா திறந்து விழுங்கி விட்டது. சக்ராயுதத்தை இந்த வெண் தலை கபாலம் விழுங்கி விட்டதே என்று யோசனையில் ஆழ்ந்தார் விஷ்ணு. விஷ்ணு நினைத்ததும் அது விஷ்வக்சேனருக்குத் தெரிந்து விட்டது. வயிரவரின் சூலத்திலிருந்து ஒரு முறை விஷ்வக்சேனரை விஷ்ணு அந்த சக்ராயுதத்தை வைத்து காப்பாற்றி இருந்தார். ஆகையால் அந்த சக்ராயுதத்தை மீட்டு விஷ்ணுவுக்குத் தர வேண்டும் என்று விஷ்வக்சேனர் எண்ணினார்.

வீரபத்திரர் இருக்குமிடம் சென்றார் விஷ்வக்சேனர். அங்கே காவல் காத்துக் கொண்டிருந்த பானுகம்பன் என்ற காவலாளிகள் விஷ்வக்சேனரை உள்ளே விட மறுத்தார்கள். உடனே விஷ்வக்சேனர் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து லிங்கத்தையே வீரபத்திரராக நினைத்து வழிபட்டார். இவரின் பக்தியைப் பார்த்த வீரபத்திரர் இவர் முன்னே தோன்றி என்ன வேண்டும் விஷ்வக்சேனா என்று கேட்டார். அதற்கு விஷ்வக்சேனர் விஷ்ணுவின் சக்ராயுதம் வேண்டும் என்றார். அதற்கு வீரபத்திரர் சக்ராயுதம் என்னிடம் இல்லை. என் கழுத்தில் மாலையாக இருக்கும் இந்த வெண் தலை கபாலம் சக்ராயுதத்தை விழுங்கி விட்டது. அது சிறிது குறும்புத்தனம் உடையது அதனிடம் கேள். அந்த வெண் மலை கபாலம் திருப்பிக் கொடுத்தால் எடுத்து செல் என்றார் வீரபத்திரர்.

விஷ்வக்சேனர் யோசனை செய்தார். சண்டையிட்டோ பிடுங்கியோ அந்த வெண் தலை கபாலத்திடமிருந்து சக்ராயுதத்தை வாங்க முடியாது. ஆகையால் அதன் வழியில் அது வழியிலேயே நாமும் குறும்புத்தனம் செய்வோம். அப்போது அது திரும்பிக் கொடுத்து விடும் என்று எண்ணினார். உடனே தன் உடம்பை அஷ்ட கோணலாக மாற்றினார். அதைப் பார்த்த மற்ற கபாலங்கள் எல்லாம் திகைத்துப் பார்த்து சிரித்தார்கள். விஷ்வக்சேனர் எதற்காக இப்படி செய்கிறார் என்பதை அறிந்த வெண் தலை கபாலம் அமைதியாக இருந்தது. திரும்ப கைகாலை முறுக்கி உடம்பை அஷ்டகோணலாக்கி ஆடி நின்றார். அப்போதும் வெண் தலை கபாலத்துக்கிட்ட லேசான சிரிப்பு மட்டுமே வந்ததே தவிர அந்த சக்ராயுதத்தை கொடுக்காமல் அமைதியாக இருந்தது. மற்ற கபாலங்கள் எல்லாம் சிரித்துக் கொண்டே இருந்தது. மூன்றாவது முறையாக விஷ்வக்சேனர் தன் முகத்தை அஷ்ட கோணலாக்கி கண் வாய் மூக்கு அனைத்தையும் அங்கேயும் இங்கேயும் திருகி அகட விகடம் செய்தார். உடனே ஒரு பெரும் சிரிப்புச் சத்தத்துடன் தன்னை மறந்த அந்த வெண் தலை கபாலம் தன் வாயில் பிடிச்சிருந்த சக்ராயுதத்தை நழுவ விட்டது. இதற்காகவே காத்துக் கொண்டிருந்த விஷ்வக்சேனர் அந்த சக்ராயுதத்தை எடுக்க விரைந்தார்.

வினாயகர் அப்போது அந்த இடத்திற்கு விரைவாக வந்து அதனை எடுத்துக் கொண்டார். வினாயகரிடம் சக்ராயுதம் சென்றதை பார்த்த விஷ்வக்சேனர் இது என்ன சோதனைன்னு மீண்டும் யோசிக்க ஆரம்பித்தார். அப்போது வினாயகர் இதே போல் எனக்காக மீண்டும் ஒரு முறை விகடக் கூத்தாடு அப்போது இந்த சக்ராயுதத்தை தருகிறேன் என்றார். விநாயகருக்காக ஒரு முறை தன் உடம்பு கைகால் முகம் கண் வாய் அனைத்தையும் அஷ்டகோணலாக்கி விகடக் கூத்தாடி அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தார் விஷ்வக்சேனர். கைதட்டி சிரித்து மகிழ்ந்த விநாயகர் அந்த சக்ராயுதத்தை விஷ்வக்சேனரிடம் கொடுத்தார். அதை எடுத்து வந்து விஷ்ணுவிடம் சமர்ப்பித்தார் விஷ்வக்சேனர். இதில் மகிழ்ந்த விஷ்ணு விஷ்வக்சேனரை சேனாதிபதியாக்கி அவரைத் தன் தலைமைத் தளபதியாக நியமித்தார்.

சுலோகம் -82

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #35

இந்த போரில் உள்ள மகாரதர்கள் இது வரையில் உன்னை மிகவும் உயர்வாக மதித்து வந்தார்கள். இப்போது நீ யுத்தம் செய்யாமல் சென்று விட்டால் நீ பயம் காரணமாக யுத்தத்தை விட்டு சென்று விட்டாய் என்று எண்ணுவார்கள். அவர்கள் முன்பு நீ தாழ்ந்த நிலையை அடைவாய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த குருசேத்திரப் போரில் யுத்தம் செய்வதற்காக பல மகாரதர்கள் என்று சொல்லக்கூடிய வீராதி வீரர்கள் இரண்டு பக்கமும் வந்திருக்கிறார்கள். அவர்கள் இதற்கு முன்பாக நீ செய்த யுத்தத்தில் உனது வீரத்தை பார்த்து உன்னை மிகவும் உயர்வாக மதித்து வந்தார்கள். இப்போது யுத்தகளத்திற்கு நீ வந்ததும் பாசத்தின் காரணமாக யுத்தம் செய்ய மாட்டேன் என்று திரும்பி சென்று விட்டால் உயிர் பயத்தின் காரணமாகவே நீ சென்று விட்டாய் நீ கோழை என்று உன்னை தாழ்த்திப் பேசுவார்கள். அனைவரின் முன்னிலையிலும் நீ தாழ்ந்த நிலையை அடைவாய். இது உன் உயர்ந்த நிலைக்கு சரியானது இல்லை என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 149

கேள்வி: கோவில் வழிபாடு பற்றி?

முதலில் கோவில் கோபுரங்களை வணங்க வேண்டும் கோவில் படிக்கட்டுகளில் பெரும்பாலும் முனிவர்கள் தவம் செய்து கொண்டிருப்பார்கள் அவர்களிடம் மானசீகமாக நான் மனிதனாய் பிறந்துவிட்டேன் வேறு வழி இல்லாமல் உங்களை மிதித்துக் கொண்டு செல்கிறேன். மன்னித்து ஆசி கூறுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். (வேறொரு வாக்கில் கோவில் படிக்கட்டுகளுக்கு பால் அபிசேகமே செய்யலாம் தெரியுமா என்று உரைத்திருந்தார்). கோவில் புண்ணிய தீர்த்தங்கள் இருந்தால் அவற்றில் நீராடி இயலவில்லை என்றால் அவற்றில் பாதம் நனைத்து அந்த தீர்த்தத்தை தெளித்துக் கொள்ளவேண்டும். கருவறை உள்ளே செல்லும் முன்னர் துவார பாலகர்களை வணங்கி விட்டு உள் செல்ல வேண்டும். நிறைய வாசனை மிக்க மலர்களை சாற்றி அந்த ஆலயத்தில் உள்ள நம்பிக்கையின்படி நிறைய நெய் தீபங்களை ஏற்றிட வேண்டும். ஆலய அர்ச்சகர் மற்றும் மிக முக்கியமாக கோவில் சுத்தம் செய்யும் பணிகளில் உள்ளவர்களுக்கு அவர்கள் வாழ்நாளில் இதுபோல் இன்னொரு முறை தர்மம் கிடைக்குமா என்று என்னும் அளவுக்கு நிறைய தர்மம் செய்து விட வேண்டும். பின்னர் ஆலய பிரகாரங்களை வலம் வந்து கொடி மரத்தின் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். பின்னர் தனிமையில் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து பிராத்தனை செய்து கொள்ள வேண்டும். மேலே சசொன்ன விஷயங்களில் மிக முக்கியம் செய்கின்ற பிராத்தனை ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும்.

கேள்வி: மந்திரங்களை உறு ஏற்ற:

மனம் திடம் பெறத்தான் மந்திரம். நலம் பெறத்தான் மந்திரம். மந்திரத்தை உதடு சொன்னாலும் மனமும் சேர்ந்து சொல்ல வேண்டும். மனதை ஒரு நிலை படுத்தி உறு ஏற்றுவது நலம். பல வகையான மந்திரங்களை உறு ஏற்ற முடியாத நிலையில் ஏதேனும் தெய்வ வடிவத்தின் ஒரே வகையான மூல மந்திரங்களை அதிகம் அதிகம் உறு ஏற்றலாம். உடல் சுத்தம் உள்ள சுத்தத்துடன் சினம் இன்றி பதற்றமின்றி விரக்தி இன்றி அகமும் முகமும் மலர மந்திரம் உறு ஏற்றப்பட வேண்டும். இல்லத்தில் அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ உறு ஏற்றலாம். பூஜைக்கு பிறர் இடர் செய்ய கூடாது என்று எப்படி நாம் எண்ணுகிறோமோ அப்படியே நாம் செய்யும் பூஜையும் பிறருக்கு இடையூறு செய்ய கூடாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 148

கேள்வி: மும்மூர்த்திகளில் (பிரம்மா சிவன் விஷ்ணு) மூவரும் ருத்ரன் தான் சிவனா அல்லது இவர்கள் மூவருக்கும் மேலே உள்ள சக்தியா?

ஒரே பசுவின் கால் கண் வால் மடியைக் காட்டி இதுதான் பசுவா? இதுதான் பசுவா? என்றால் எப்படி இருக்குமோ அப்படிதான் நீ வினவிய வினாவும். அனைத்துமே பரம்பொருள்தான். பரம் பொருளை நீ பிரம்மா விஷ்ணு ஏன் சிறிய தேவதையாக அன்னை பராசக்தியாக வணங்க விரும்பினால் அப்படியே செய். இறையை வணங்க ஒரு வுருவம் தேவை. அதை வைத்துதான் ஒரு மனிதன் தன் கவனத்தை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதற்காக தான் ஒரு புற தோற்றம். அதையும் தாண்டிய ஒரு நிலைதான் இறை உணர்வு. அந்த இறை உணர்வை நீ உணரும் போது நீ வினவிய அனைத்து வினாக்களும் ஏன் அனைத்து ஐயங்களும் அடிப்பட்டுப் போய்விடும். பரிபூரண நிசப்தம் சாந்தம் சாந்தி ஒரு இனம் புரியாத இன்ப உணர்வு அதாவது கடுமையான குளிர் வாட்டி கொண்டிருக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிக்கும் போது ஏற்படும் அனுபவம் போல் வைத்துக் கொள். எனவே இது அதுவா? அது இதுவா? ஏன் நான்முகனுக்கு (பிரம்மன்) ஆலயம் இல்லை? இது எல்லாம் இறையோ பரம் பொருளோ எடுத்த முடிவு அல்ல. இன்று எப்படி தன்னை புத்திசாலி என்று கூறிக்கொண்டு முட்டாள்தனமான மனிதர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்களோ அப்படி ஒரு முட்டாள் பின்னால் பல முட்டாள்கள் போய் கொண்டிருக்கிறார்கள்.

வெறும் பகட்டு மயக்கு வாரத்தைகளை கேட்டு அவன் பின்னால் செல்லும் கூட்டம் எக்காலத்திலும் இருக்கிறது. அப்படிதான் கால ஓட்டத்தில் அனைத்து ஆலயங்கள் வழிபாடுகள் இருந்தது போய் சில தெய்வ வழிபாடுகள் மறைந்து போயிருக்கிறது. எனவே இதற்கும் இறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனக்கு இப்படித்தான் ஆலயம் வேண்டும் என்று தெய்வம் கூறியதே இல்லை. மனிதர்கள் பாமர நிலையில் உணர வேண்டும் என்பதற்காக ஒரு சில வழிபாட்டு முறைகளையும் உச்ச நிலையில் தியானம் போன்ற முறைகளையும் மகான்கள் வகுத்து கொடுத்தார்கள். ஆனால் இவன் ஏதாவது ஒரு நிலையில் நின்று கொண்டு அதுதான் உச்ச கட்டம் என்று வாதாடுகின்ற பரிதாபத்திற்குரிய மனிதர்களாக கால போக்கிலே ஒவ்வொருவரும் மாறிவிட்டது தான் வேதனை.

சுலோகம் -81

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #34

இந்த உலகத்தில் உள்ளவர்கள் நீண்ட காலம் உன்னைப் பற்றி நீங்காத பழியை பேசுவார்கள். பல புகழை உடைய உன்னைப் போன்றவனுக்கு இப்படிப்பட்ட அவச்சொற்கள் மரணம் போன்றது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த தர்ம யுத்தத்தை நீ செய்யவில்லை என்றால் இந்த உலகத்தில் உள்ளவர்கள் நீண்டகாலம் உன்னை இகழ்ந்து கொண்டே பேசிக் கொண்டிருப்பார்கள். தர்மத்தின் வழி நிற்பவன். யாராலும் செய்ய முடியாத பல மேலான தவங்கள் செய்து பல அஸ்திர சாஸ்திரம் கற்றவன். தைரியம் மிகுந்தவன் என்றெல்லாம் பெரும் புகழ் பெற்ற உனக்கு உலக மக்களின் இந்த இகழ்ச்சியான அவச் சொற்களும் பழிச் சொற்களும் மரண அவஸ்தையை கொடுக்கும். ஆகவே இந்ந பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் இந்த யுத்தத்தை செய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 147

கேள்வி: வேல் வழிபாடு பற்றி:

வேல் வழிபாடு என்பது துவக்க காலத்தில் இருந்தே இருக்கிறது. இடையிலேதான் வேல் வழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. வேல் யார் தெரியுமா? அன்னை தான் (பராசக்தி). அன்னையின் (பராசக்தி) அம்சம்தான் வேல். வேலை வணங்குவதும் அன்னை பராசக்தியை வணங்குவதும் ஒன்றுதான். எனவே முருகனின் ஆயுதமாக மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட விஷயம் வேல் என்பதால் மனிதனுக்கு அதைத் தாண்டிய விஷயங்கள் தெரியாமல் போய்விட்டது. எதிர்ப்புகளும் தோஷங்களும் கடுமையான கர்மாக்களும் குறைவதற்கு இந்த வேல் வழிபாடு உதவும். வேலை பவித்ரமாக வைத்து அதை வணங்கினால் பல்வேறு வேதனைகள் தீரும். அது மட்டும் அல்லாது மனிதன் ஆசைப்படுகிறானே வைரம் வைடூரியம் முத்து கனகம் (தங்கம்) போன்ற கற்கள் எங்காவது தனக்குதானே மதிப்பு வைத்திருக்கிறதா? மனிதன்தான் அவற்றின் மீது மதிப்பு வைத்திருக்கிறான். இந்த நவரத்னங்கள் உலோகங்களில் வெளிப்படும் கதிர்வீச்சுகள் எல்லாம் மனிதனுக்கு நன்மையைத் தரும். அதனால் பலருக்கு நன்மை தரும் நோக்கிலேதான் சுவாமிக்கு வைரக் கிரீடம் தங்கக் கவசம் வைள்ளிக் கிரீடம் நவரத்னம் பதிக்கப்பட்ட வேல் வைப்பதன் காரணம் இதுதான். இவற்றை தரிசனம் செய்தாலே கற்கள் உலோகங்களின் தோஷம் குறையும். சில தோஷங்களை தரிசனம் நயன (பார்வை) தீட்சயாலே ஒரு குரு நீக்குவது போல நீக்கிக் கொள்ளலாம். அது போல ஐம்பொன்னால் செய்யப்பட்ட வேல் செம்பால் பித்தளையால் செய்யப்பட்ட வேல் – எதுவாயினும் உரு ஏற்றி பூஜை செய்தால் கடுமையான எதிர்ப்பு முக்கியமாக காவல் துறை ரணகளத் துறையில் உள்ளவர்களுக்கு இந்த வழிபாடு நன்மையைத் தரும்.

சுலோகம் -80

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #33

இந்த தர்மத்தோடு கூடிய யுத்தத்தை நீ செய்யவில்லை என்றால் அப்போது குல தர்மத்தையும் புகழையும் இழந்து பாவத்தை பெறுவாய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த தர்ம யுத்தத்தை அர்ஜூனனாகிய நீ செய்யவில்லை என்றால் இத்தனை வருடங்களாக தர்மத்தை காத்து நிற்கும் உனது குல தர்மத்தை நீ விட்டவன் ஆவாய். நீ இத்தனை நாட்கள் பல நல்ல காரியங்கள் மற்றும் பல யுத்தங்கள் செய்து சேர்த்து வைத்த புகழையும் இழந்து விடுவாய். நீ உனது கடமையில் இருந்து விலகியவன் ஆவாய். இதனால் நீ நீங்காத பாவத்தை பெறுவாய் ஆகவே யுத்தம் செய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 146

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 146

கேள்வி: ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்கள் பற்றி:

அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. தன்னாலும் முடியும் என்றால் தன்னம்பிக்கை. தன்னால் மட்டும்தான் முடியும் என்றால் அது ஆணவம். ஒரு தொழில் ரீதியாக புகழ் ரீதியாக ஒரு பதவி ரீதியாக மட்டும் ஆணவம் வருகிறது என்பதல்ல. நான் எப்படி செய்வேன்? என்னைப் போய் இப்படி கூறிவிட்டானே? நான் எப்பேற்பட்ட மனிதன்? என்னை ஒருவன் இப்படி பேசிவிட்டானே? நான் எப்படியெல்லாம் வாழ்ந்தேன்? என்னை எப்படியெல்லாம் வளர்த்தார்கள்? இப்படி பேசிவிட்டானே? என்று ஒருவன் எண்ணினால் அதுவும் ஆணவத்தின் ஒரு பகுதிதான். நாம் இந்த அண்ட சராசர பிரபஞ்சத்திலே வெறும் தூசியிலே தூசி. இந்தக் காற்றிலே கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ பூச்சிகள் உயிரினங்கள் அலைந்து கொண்டு இருக்கின்றன. அது போல இந்த அண்ட சராசரங்களை எல்லாம் பார்க்கும் போது எத்தனையோ கிரகங்கள் உயிரினங்கள். அனைத்திற்கும் அதனதன் வழியில் அதனதன் போக்கில் துன்பங்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. எனவே துன்பம் ஒருவனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. மனதை தெளிவாக வைத்துக் கொண்டால் எல்லாம் மாயை என்பது புரியவரும்.

கேள்வி: நவகிரகங்கள் பற்றி?

கையூட்டு வாங்காத நேர்மையான காவல் அதிகாரிகள்.

கேள்வி: என்றாவது நவகிரங்கள் தங்களால் இவ்வளவு ஆத்மாக்கள் துன்பப்படுகிறார்களே என்று எண்ணி வருத்தப்பட்டதுண்டா?

எதற்காக வருந்த வேண்டும்? ஒரு குழந்தை பிற்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தடுப்பு ஊசி போட வேண்டும் ஊசி போடுவது என்பது குழந்தைக்கு வலியை உண்டாக்கும் என்பதால் அந்த குழந்தைக்கு அந்த தடுப்பு பூசி போட வேண்டுமா வேண்டாமா?