கேள்வி: பெண்கள் குங்குமம் வைப்பதன் அவசியம் மற்றும் தாத்பரியம் பற்றி கூறுங்கள்
இறைவன் அருளால் இடை காலத்தில் இந்த பழக்கம் ஏற்பட்டது. மங்கல சின்னம் என்று நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் உடலுக்கு தீங்கைத் தரும் இராசாயனங்களையெல்லாம் வைத்துக் கொள்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையப்பா. இன்னமும் கூறப் போனால் நீ கூறிய அந்த செந்நிற வண்ணத்தை விட நேரடியாக தூய்மையான சந்தனத்தை வைத்துக் கொள்ளலாம். நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட திருநீற்றை வைத்துக் கொள்ளலாம். பெண்கள் அப்படி செந்நிற வண்ணத்தை இட்டுக் கொள்ளாமல் மங்கலமான கஸ்தூரி மஞ்சள் பொடியை பொடித்து அவற்றை வைத்துக் கொள்ளலாம். அதுதான் சித்தர்கள் முறையாகும்.
கேள்வி: அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கும் பொழுது அது விதிப்படிதான் நடக்கிறதா ஐயனே?
அனைத்தும் விதிப்படிதான்.
கேள்வி: கோடி கோடியாக தர்மம் செய்ய வேண்டும்.
தர்மத்தின் தன்மை கொடுக்கின்ற பொருளின் அளவைப் பொருத்ததல்ல. கொடுக்கின்ற மனிதனின் மனதைப் பொறுத்தது. கோடி கோடியாக அள்ளித் தந்துவிட்டு தனிமையில் அமர்ந்து கொண்டு அவசரப்பட்டு விட்டாமோ? நமக்கென்று எடுத்து வைத்துக் கொள்ளாமல் கொடுத்து விட்டாமோ? என்று ஒரு தரம் வருத்தப்பட்டாலும் அவன் செய்த தர்மத்தின் பலன் வீணாகிவிடும். ஆனால் ஒரு சிறு தொகையை கூட மனமார செய்துவிட்டு மிகவும் மனம் திறந்து இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததே? என்று ஒருவன் மகிழ்ந்தால் அது கோடிக்கு சமம். எனவே இது குறித்து நீ வருந்த வேண்டாம்.
வெறும் வயது மட்டும் பெரியவர் என்ற தகுதியைத் தந்துவிடாது. மனதிலே தெளிவு உள்ளத்திலே உறுதி எண்ணத்திலே உறுதி வேண்டும். இச்சைகள் குறைந்திருக்க வேண்டும். மனதிலே சபலங்கள் இருக்கக் கூடாது. தேகத்தை யோகாசனம் செய்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். ஆன்மாவை சுற்றியுள்ள அலைவரிசையானது மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அது போன்ற மனிதரிடம் ஆசி பெற்றால்தான் உண்மையாக பலிதமாகும். எனவே இறை நிலையிலே எமது நிலையிலே இருப்பவர்களின் காலில் விழுதல் தவறல்ல நன்மைகள் உண்டாகும்.
உந்தனுக்கு கடை (கடைசி) வரையில் இறையருள் தொடர நல்லாசிகள். எது குறித்தும் கலக்கம் கொள்ள வேண்டாம். அன்றன்று காலம் விதிப்படி விதிப்பயனாக அவனவன் செய்த வினையின் எதிரொலியாக ஆண்டாண்டு காலம் சில கஷ்டங்களும் மன உலைச்சல்களும் தொடரத்தான் செய்யும். கஷ்டங்கள் தொடருகிறதே என்று இறை வழி விட்டு விலகக்கூடாது. சிறப்பில்லா வாழ்க்கையிலே சிறப்பில்லா சம்பவங்கள் எதிர்பட்டாலும் இறை வணங்க மறுத்தல் கூடாது. செய்கின்ற தர்மத்தை விடக் கூடாது. சிந்தை கொள். எம்மீது ஆர்வம் கொண்டு நீ செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் எமது அருளாசி உண்டப்பா. அப்பனே அது குறித்து மனிதர்கள் விமர்சனங்கள் செய்தாலும் மனம் சிதிலம் கொள்ளாதே. அவ்விடத்தில் அது குறித்து நீயும் விவரங்கள் ஆர்வத்தோடு கொடுத்தாலும் கூட உந்தனுக்கு தவறான நாமம் (பெயர்) தான் சூட்டப்படும். நல்ல எண்ணத்தில் நீ செய்தாலும் குதர்க்கமாகத்தான் பேசுவார்கள். அப்படி தொடர்ந்து பேசினால் நீயும் ஒதுங்கிக் கொள் என்பதே எமது அருள்வாக்கு ஆகும்.
ஒவ்வொரு மனிதனின் மனம் எப்படி? என்று எமக்குத் தெரியும். ஒவ்வொரு மனிதனையும் இறை சக்தியைக் கொண்டு பக்குவம் அடைந்த மனிதனாக மாற்ற முடியும் என்றாலும் கூட இறைக்கு வேலை அதுவல்ல. அன்னவனே உழன்று சிதிலப்பட்டு வேதனைப்பட்டு கவலைப்பட்டு கஷ்டப்பட்டு பக்குவப்பட்டு தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இறையின் எண்ணமாகும். அறிவிலே தெளிவும் மனதிலே உறுதியும் இருக்க வேண்டும். இது கிடைப்பதற்கு மனிதன் வாழ்விலே துன்பங்கள் பட வேண்டும். அதை அறிவிலே ஊடுருவி நாங்களே தெளிய வைப்போம். சதுரகிரியோ திருவண்ணாமலையோ இயன்ற போது சென்று வா. நல்லதோரு அனுபவங்களும் இறை அருளாசியும் உனக்குக் கிடைக்கும். தொடர்ந்து பூஜைகள் செய்ய முடியவில்லையே? என்று வருந்தாதே. அந்த ஏக்கமே ஒரு பூஜைதான். எந்த இடத்தில் அமைதி கிடைக்கிறதோ அங்கு அமர்ந்து பூஜை செய்யலாம். அங்குதான் இங்குதான் அதிகாலைதான் உச்சிப்பொழுதுதான் என்பது இல்லை. இறையை வணங்க காலம் நாழிகை சூழல் எதுவும் தேவையில்லை. மனம் ஒன்றி இருந்தால் மட்டும் போதும். எனவே இதனை எண்ணி அமைதியாக வாழ். நல்லதொரு வாழ்க்கை இறைவன் அருளால் உனக்கு கிடைக்கும் ஆசிகள்.
மூலவர் கைலாசநாதர் கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத் திருவுருவில் அழகிய வடிவாக காட்சித் தருகிறார். இவருக்கு விசேஷ காலங்களில் நாகாபரணம் சாத்தி அலங்காரம் செய்யப்படும். அம்மை சிவகாமி தெற்கு நோக்கிய தனி கருவறையில் நின்ற கோலத்தில் ஒரு கையில் மலர் ஏந்தியும் மறு கையை கீழே தொங்கவிட்ட படியும் இடை நெளித்தும் அழகிய புன்சிரிப்புடனும் காட்சித் தருகிறாள். கார்கோடகன் வழிபட்டதால் இந்த ஊர் கார்கோடக நல்லூர் என்று அழைக்கப்பட்டது. தற்போது பெயர் மருவி கோடக நல்லூர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தனி சன்னதியில் காட்சித் தரும் ஆனந்த கெளரி அம்மை ஐந்து தலை நாகம் குடைபிடித்த நிலையில் காட்சித் தருகிறாள். இவளுக்கு சர்ப்பயாட்சி நாகாம்பிகை என்ற பெயர்களும் உள்ளது. இக்கோவில் வினாயகருக்கு கல்யாண வினாயகர் என்று பெயர். இங்கு கல்யாண விநாயகரும் சுப்பிரமணியருமே துவார பாலகர்களாக காட்சித் தருகின்றார்கள். இங்கு நவக்கிரகங்களுள் அங்காரக பகவான் சிவனை வழிபட்டுள்ளார். இங்கு கொடி மரம் பலி பீடம் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதி இல்லை. இங்கு மாசி மாத சிவராத்திரி மார்கழி திருவாதிரை ஆகிய வருடாந்திர உற்சவங்களும் பிரதோஷம் மற்றும் செவ்வாய்கிழமை சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. கோடகநல்லூர் சிவன் கோவில் திருநெல்வேலி நகரம் சேரன் மகாதேவி சாலை வழியில் சுமார் 16 கி. மீ தொலைவில் உள்ளது.
தல வரலாறு: அடர்ந்த காடாக இருந்த பகுதியில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருந்தார். ஒரு நாள் அந்த முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அந்த முனிவர் யாகம் செய்வதற்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்காக அந்த முனிவரின் மகன் காட்டிற்குள் சென்றிருந்தான். அப்போது அந்த நாட்டின் இளவரசனாக இருந்த பரிஷத் மகாராஜாவின் மகன் அந்த காட்டிற்குள் வேட்டையாட வந்திருந்தான். அவன் வேட்டையாடிக் கொண்டே முனிவர் அமர்ந்து தியானம் செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். நீண்ட நேரம் காட்டிற்குள் அலைந்து திரிந்து வேட்டையாடியதால் களைப்பும் சோர்வும் அடைந்த அந்த இளவரசனுக்கு தாகம் ஏற்பட்டிருந்து. அவன் குடிக்க நீர் வேண்டி முனிவரை அழைத்தான். ஆனால் ஆழ்ந்த தியானத்தில் இருந்த முனிவருக்கு அது காதுகளில் கேட்கவில்லை. இதனால் கோபம் கொண்ட இளவரசன் தன்னுடைய அழைப்பிற்கு செவி சாய்க்காமல் இருந்த முனிவரின் மீது ஆத்திரத்தில் அருகே கிடந்த இறந்த போன பாம்பின் சடலத்தை எடுத்து கழுத்தில் போட்டு விட்டு குதிரையில் ஏறி வந்த வழியே சென்று விட்டான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் அங்கு நடந்த சம்பவங்கள் பற்றி அவர் எதுவும் அறிந்திருக்க வில்லை.
முனிவரின் மகன் தனது தந்தை யாகம் செய்வதற்கு தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். தனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். தன்னுடைய ஞான திருஷ்டியால் அங்கு நடந்தது என்ன என்பதை முனிவரின் மகன் அறிந்து கொண்டான். இதனால் அவனக்கு பெருங் கோபம் ஏற்பட தன் தந்தையும் குருவும் ஆனவரை அவமானப்படுத்திய இளவரசனின் தந்தை பரிஷத் மகாராஜா பாம்பு தீண்டி இறந்து போகட்டும் என்று சாபமிட்டான். இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து பரிஷத் மகாராஜாவின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர்கள் அவருக்கு சர்ப்ப தோஷம் இருப்பதாகவும் அதனால் பாம்பு தீண்டி அவர் இறந்து விட நேரிடும் என்றும் மகாராஜாவிடம் தெரிவித்தனர். அதனைக் கேட்ட பரிஷத் மகாராஜா தனது உயிரை பாம்பிடம் இருந்து காத்துக் கொள்ள ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி கப்பலில் மண்டபம் ஒன்று கட்டி பாம்பு எளிதில் புக முடியாத இடத்தில் வசிக்கத் தொடங்கினார். அப்போது கார்கோடகன் என்ற பாம்பானது மகாராஜா சாப்பிடும் பழத்திற்குள் புழுவாக உருமாறி புகுந்து பரிஷத் மகாராஜாவை சாபப்படியும் கர்ம வினைப் படியும் தீண்டியது. இதனால் மகாராஜா இறந்து விட்டார். கார்கோடகன் பாம்பு தன்னுடைய இருப்பிடத்திற்கு வந்து வசிக்கத் தொடங்கியது.
கார்கோடகன் என்னும் அந்த பாம்பு தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டது. அப்போது அந்த வழியாக சூதாட்டத்தில் நாட்டையும் சொத்தையும் இழந்த மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த நள மகாராஜா சோகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். கார்கோடகன் பாம்பு தீயில் மாட்டிக் கொண்டதை பார்த்த நள மகாராஜா அந்த கார்கோடகன் பாம்பை உயிருடன் மீட்டு காப்பாற்றினார். தன்னை காப்பாற்றியதற்கு பிராயச்சித்தமாக கார்கோடகன் பாம்பு நள மகாராஜாவை தீண்டியது. இந்த விஷம் அவரது உடலை உருமாற்றியது. இதனால் நள மகாராஜா நாட்டு மக்களின் கண்களுக்கு தெரியாதவராக உருமாறி வேறு ரூபத்திற்கு மாறினார். நள மகாராஜா உருமாறியதால் அவரது மனைவி தமயந்திக்கு கூட நள மகாராஜாவை அடையாளம் தெரியவில்லை. இதனால் நள மகாராஜா நாட்டை இழந்து எங்கோ சென்று விட்டார் என்று கருதிய நள மகாராஜாவின் மாமனார் வீமராஜா தனது மகள் தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தார். அந்த சமயத்தில் தேர் ஓட்டுவதில் மிகுந்த திறமை படைத்த நள மகாராஜா வீமராஜாவிடம் தேரோட்டியாக வேலைக்கு சேர்ந்தார்.
நளன் வீமராஜாவிற்கு தேர் ஓட்டுவதை பார்த்த தமயந்தி உருவில் நளனை தெரியாவிட்டாலும் அவன் தேர் ஓட்டும் விதத்தை பார்த்து அவன் தான் தனது கணவன் என்பதை உறுதி செய்து கொண்டாள். பின்னர் நளனும் தமயந்தியும் ஒருவரையொருவர் பார்த்து சம்பாஷனை செய்து கொண்டனர். இதையறிந்த வீமராஜா நளனையும் தமயந்தியையும் மீண்டும் சேர்த்து வைத்தார். நளன் ஏழரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜாவாக பட்டம் சூட்டிக் கொண்ட பின்னர் கார்கோடகன் பாம்பு மீண்டும் நளனை தீண்டி பழைய உருவத்திற்கு மாற்றியது. பரிஷத் மகாராஜாவையும் நளனையும் தீண்டிய செயலுக்காக கார்கோடகன் பாம்பு பாப விமோசனம் பெற மகா விஷ்ணுவை நோக்கி தியானம் செய்தது. அப்போது கார்கோடகனின் முன் மகா விஷ்ணு தோன்றி தாமிரபரணிக்கரையில் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டு வந்தால் உனக்கு முக்தி கிடைக்கும் என்று கூறி அருள் புரிந்தார். அதன் படி கார்கோடகன் பாம்பு தாமிரபரணி கரைக்கு வந்து மண்ணையும் நீரையும் கலந்து பிசைந்து பிறகு தன் மூச்சுக் காற்றால் சிவலிங்கத்தை உருவாக்கி பூஜைகள் செய்து வழிபட்டு தவம் இருந்தது. அதன் தவத்தை மெச்சிய சிவபெருமான் அங்கு தோன்றி காட்சியளித்து கார்கோடகனுக்கு முக்தி அளித்தார்.
கேள்வி: ஐயனே நாங்கள் தினசரி செய்ய வேண்டிய கடமைகள் பூஜைகள் என்ன?
குறைந்தபட்சம் ஏதாவது ஒரு ஆலயம் சென்று மனமொன்றி வழிபடுவது நன்மையைத் தரும். அப்படியும் இல்லாதவர்கள் குறைந்தபட்சம் இரண்டு நாழிகையாவது (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) காலையிலாலோ மாலையிலோ இல்லத்தில் அமைதியாக நெய் தீபம் ஏற்றி உயர்வான முறையிலே வாசனாதி திரவியங்களையெல்லாம் இட்டு ஏதாவது இறை நாமாவளியை (சொல்லி) மனதிற்கு பிடித்த எந்த இறைவனின் வடிவத்தையாவது வணங்கி வருவது நன்மையைத் தரும். குறைந்த பட்சம் ஒரு மனிதருக்காவது அவனுக்கு வேண்டிய நியாயமான உதவிகளை செய்வது இறைவனின் அருளை விரைவில் பெற்றுத் தரும். அடுத்ததாக தன் கடமைகளை மறக்காமல் நேர்மையாக ஆற்றுவது என்ற உறுதியை எடுத்துக் கொண்டு அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். மனைவியாகப்பட்டவள் இல்லறக் கடமைகளை ஆற்றுவதும் கணவனாகப்பட்டவன் பணியில் உள்ள கடமைகளை ஆற்றுவதும் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டிய கடமைகள் ஆற்றுவதும் எதையும் ஒத்தி வைக்காமல் நேர்மையான முறையில் உடனுக்குடன் செய்கின்ற ஒரு பழக்கத்தை கடைபிடித்துக் கொண்டே இறை வழிபாடு தர்ம காரியங்கள் செய்வது கட்டாயம் இறைவனை நோக்கி செல்வதற்கு மிக எளிய வழியாகும்.
கேள்வி: கார்க்டோக நல்லூர் பற்றி:
தாமிரபரணி கரையில் உள்ள மண்ணையும் நீரையும் கலந்து பிசைந்து பிறகு தன் மூச்சுக் காற்றால் கார்க்கோடகன் என்னும் பாம்பு ஐயனை வடிவமைத்த இடம் இது. உடலிலே ஒவ்வாமை விஷத்தன்மை உடையவர்களுக்கு வழிபாடு செய்ய ஏற்ற இடம்.
காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் என்ற ஒரு வரி இலக்கிய பாடல்களில் உள்ளது இதற்கான விளக்கம்
காக்கை – இதனை பிரித்து படித்தால் கால் + கை. உள்ளங்கையில் கால் அளவு என்று பொருள். கறி சமைத்து – காய்கறி சமைத்து கருவாடு மென்று – இதனை பிரித்து படித்தால் கரு + வாடும் + என்று . கரு என்றால் உடலின் கருவாகிய உயிர் வாடும் என்று பொருள். உண்பர் சைவர் – சைவர்கள் உண்பார்கள்
பொருள்: உடலின் கருவாகிய உயிர் வாடும் முன்பாக உள்ளங்கையில் கால் அளவு காய்கறி சமைத்து சைவர்கள் உண்பார்கள்
கருத்து: சிவனை அடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்ட சைவர்கள் சிவனை தரிசிக்கும் வரை உடலில் உயிர் தங்க வேண்டுமென்பதற்காக உள்ளங்கையில் கால் அளவு காய்கறி சமைத்து உண்பார்கள். இவ்வாறு உண்பதால் உடலில் நோய்கள் பெருகாது பற்றுகள் குறையும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒல்லியான தேகத்துடன் இருப்பதினால் முக்திக்கு வழிகாட்டியான யோகப்பயிற்சிகள் தவங்கள் எளியாக செய்ய முடியும்.
அப்படி நாங்கள் எங்காவது உரைத்தோமா? மனிதன் ஆராய்ச்சி ரீதியாக இந்த கருத்தை உரைத்திருக்கிறான். குரங்கில் இருந்து மனிதன் வரவில்லை. இதை மனித விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளாது என்று எமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இதுதான் உண்மை.
அப்படியானால் மற்ற உயிர்கள் எதிலிருந்து வந்தன?
அனைத்து உயிர்களையும் நீ உயிர்களாகப் பார்க்கவில்லை. அதன் வெளித்தோற்றமான கூட்டை மட்டும்தான் பார்க்கிறாய். அந்தக் கூட்டுக்குள் இருப்பது எல்லாமே இறை சக்திதானப்பா. அவைகள் அங்கு சிறிய சிறிய பிழைகள் செய்யும் போது விலங்காக விருட்சமாக(மரமாக) முனிவராக தேவராக கந்தர்வனாக மனிதராக உருமாற்றம் அடைகிறது. மற்றபடி ஒரு சிங்கத்தின் உடலில் கூட ஒரு உயர்ந்த முனிவரின் ஆன்மா இருக்கலாம். ஒன்று சாபத்திற்காக அல்லது மனித தேகம் எடுத்தால் மாயையில் சிக்கி விடுவோம் என்பதற்காக சிங்கமாகவோ புலியாகவோ மானாகவோ இருக்கலாம் என்று அப்பிறவியை எடுக்கலாம். இன்னும் சில தேவர்கள் முனிவர்கள் தங்கள் கர்மாவை எப்படி கழிப்பார்கள் தெரியுமா? மெதுவாக கீழிறங்கி வந்து மானாக பிறவி எடுப்பார்கள். பல அசுரர்கள் புலிகளாக சபிக்கப்பட்டிருப்பார்கள். அந்த புலிகளின் முன்னால் திரிந்து ஆசை காட்டி தன்னைக் கொல்ல வைப்பார்கள். அப்படி அவர்கள் அழிய நேர்ந்தால் போதும் பல ஜென்ம தோஷங்கள் அந்த ஒரு பிறவியிலேயே கழிந்து விடும். இப்படியெல்லாம் பல்வேறு சூட்சுமங்கள் உள்ளன. மனித சரித்திரமோ சிந்தனையோ இதனை ஏற்றுக்கொள்ளாது. ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான், இறைவன் மனிதனுக்கு விசித்திரமான அறிவைக் கொடுத்திருக்கிறான்.
கேள்வி : ஜோதி ரூபமா? அரூபமா ?
காற்று – ரூபமா? அரூபமா?
வாக்கு – ரூபமா? அரூபமா?
இறை – ரூபமா? அரூபமா?
எண்ணங்கள் – ரூபமா? அரூபமா?
வார்த்தைகள் – ரூபமா? அரூபமா?
இதற்கு என்ன பதிலோ இந்த கேள்விக்கும் அதுதான் பதில்.
ஒரு ஊரில் ஒரு ஞானி இருந்தார் அவரிடம் இறந்தவர்களை உயிர்ப்பிக்க வைக்கும் மந்திரம் இருப்பதை தெரிந்து கொண்ட ஒருவன் அதனை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் வந்து சீடனாக சேர்ந்து அவருக்கு சேவை செய்தான். பல நாட்களுக்கு பிறகு ஞானி சீடனை அழைத்து உனது சேவையில் மகிழ்ச்சி அடைந்தேன் உனக்கு என்ன வேண்டும் சொர்க்கம் வேண்டுமா பிறவியில்லதா நிலை வேண்டுமா இறப்பில்லாத நிலை வேண்டுமா என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்றார். அதற்கு சீடன் எனக்கு சொர்க்கமும் வேண்டாம். இறப்பில்லா நிலையும் வேண்டாம். பிறவியில்லா நிலையும் வேண்டாம் தங்களுக்கு தெரிந்த இறந்தவரைப் பிழைக்க வைக்கும் மந்திரத்தை மட்டும் கற்றுத் தாருங்கள் என்று கேட்டான். அதற்கு ஞானி இந்த மந்திரத்தை உனக்கு சொல்லிக் கொடுத்தால் அந்த மந்திரத்தை வைத்து நீ என்ன செய்வாய். நீ இறந்தால் உன்னை நீயே உயிர்பித்துக் கொள்ள முடியாது. உனக்கு உபயோகப்படாது மேலும் உனக்கு ஆபத்தையும் விளைவிக்கலாம். மற்றவர்களை உயிர்ப்பிப்பதால் உனக்கு எந்த உபயோகமும் இல்லை. ஆகையால் உனக்கு உபயோகமாக வேறு எதேயாவது கேட்டு பெற்றுக் கொள் என்றார். அதற்கு சீடன் என்னுடைய மரணத்தைப் பற்றி நான் கவலைப் படவில்லை இறந்தவர்களை உயிர்ப்பிக்க வைக்கும் மந்திரத்தை அறிவதில்தான் எனக்கு ஆர்வம் உள்ளது. ஆகையால் அதனை எனக்கு சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.
ஞானி சீடனுக்கு எவ்வளவோ புத்திமதி கூறினார். சீடர்கள் கேட்பதாக இல்லை. மந்திரத்தை சொல்லிக் கொடுங்கள் இல்லை என்றால் எதுவும் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தான். இறுதியில் ஞானி அவனுக்கு அந்த மந்திரத்தை கற்றுக்கொடுத்தார். உடனே சீடன் அங்கிருந்து புறப்பட்டு அருகில் இருக்கும் கிராமத்திற்கு சென்றான். அன்றைய தினம் அந்த கிராமத்தில் இறந்தவர்கள் ஒருவரும் இல்லை. காட்டு வழியில் அடுத்த கிராமத்திற்கு சென்றான். காட்டுப் பகுதியில் செல்லும் போது ஒரு எழும்புக்கூடு கிடந்தது. மந்திரம் எவ்வாறு வேலை செய்யும் என்ற ஆர்வ மிகுதியில் இந்த எலும்புக் கூட்டிற்கு உயிரூட்டிப் பார்க்கலாம் என்று மந்திரத்தை உச்சரித்தான். அது ஒரு சிங்கத்தின் எழும்புக்கூடு மந்திரத்தின் வலிமையால் சிங்கம் உயிர் பெற்று சீடனை அடித்துக் கொன்றது.
கருத்து: ஏராளமான ஞானம் மறைத்துப் புதைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் அது தவறானவர் கையில் கிடைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான். அவை தகுதி படைத்தவர்களுக்கே கிடைக்கும்.
கேள்வி: கலி காலத்தில் தீயவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதே?
ஒரு வகையில் இதை ஏற்றுக் கொண்டாலும் இன்னொரு வகையில் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டு்ம். உதாரணமாக 1000 பேருக்கு 100 பேர் என்று தீயவர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதே சமயம் 10000 மனிதர்கள் இருந்தால் அங்கே 1000 தீயவர்கள் இருப்பார்கள். எனவே அன்று மனிதக் கூட்டம் குறைவு. அன்று நன்மை தீமை பாவம் புண்ணியம் போன்றவற்றில் மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. அரசனும் இறை நம்பிக்கையோடு இருந்தான். எனவே நீ கூறுவது போல் தற்போது உள்ளது போல் மோசம் இல்லையென்றாலும் எல்லாக் காலங்களிலும் தீயவர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அதனால் தான் காலம் காலமாக நீதி போதனைகளும் தரப்படுகின்றன. தற்போது தீயவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதென்றால் அதற்கு ஜனத்தொகைதான் காரணம். இந்த பெருங்கூட்டத்தில் மிக மிக மிக சிறிய அளவு மக்கள் தான் இங்கு(தடத்திற்கு) வருகிறார்கள். அதிலேயும் மிக மிக மிக சிறிய அளவிலேதான் எமது வாக்கை கேட்கிறார்கள் நம்புகிறார்கள். அதிலேயும் மிக மிக மிக சிறிய அளவிலே தான் எமது வாக்கை செயல்படுத்துகிறார்கள்.
கேள்வி: பால் சைவமா? அசைவமா?
இந்த உலகிலே சைவர்களே இல்லை தெரியுமா? பிறந்த குழந்தை தாய்ப் பாலை அருந்துகிறது. பின் அது எப்படி சைவமாகும்? ஒரு உயிரினத்தை துடிக்க துடிக்க கொன்று தின்னாதே என்றுதான் நாங்கள் கூறுகிறோம். பாலை நீ கறக்காவிட்டால் பசுவிற்கு துன்பம் ஏற்படும். நீ பாலை கறப்பதால் பசுவிற்கு எந்த வித துன்பமும் ஏற்படுவதில்லை.
பிரஹலாதனின் பக்தி ராவணின் பக்தி நாயன்மார்களின் பக்தி ஆழ்வார்களின் பக்தி மன உறுதி மன வலிமை சித்தர்களைப் போன்ற பற்றற்ற தன்மை வந்துவிட்டால் கட்டாயம் இறை காட்சி கிடைக்கும்.
கேள்வி: பக்குவம் பெறுவது பற்றி?
ஒரு மனிதனை பக்குவப்படுத்துவது என்பது இரசவாதத்தை விட கடினமானது. வெளியில் இருந்து வரும் விமர்சனங்களுக்கு கோபப்பட்டால் ஒருவனால் எப்படி ஆன்மீகத்தில் முன்னேற முடியும்?
கேள்வி: ஒரு மனிதன் செல்ல வேண்டிய படிநிலைகள் யாவை?
மிருக பதவி 2. மனித பதவி 3. மா மனித பதவி 4. மா மா மனித பதவி 5. கந்தர்வன் 6. தேவன் 7. மகான்.
கேள்வி: சக்தியும் சிவனும் வெவ்வேறா? அல்லது ஒன்றா?
தங்கமும் நகையும் வெவ்வேறா? இரண்டும் ஒன்றுதானே அதைபோல் தானப்பா.