சுலோகம் -35

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #35

மதுசூதனா இவர்கள் என்னைக் கொல்வதற்கு விருப்பம் கொண்டாலும் எனக்கு இவர்களை கொல்ல விருப்பம் இல்லை. மூன்று உலகங்களை ஆளும் பதவியை கொடுத்தாலும் இவர்களை கொல்ல எனக்கு விருப்பம் இல்லை. இப்படி இருக்கும் போது இந்த ராஜ்யத்திற்காகவா இவர்களை நான் கொல்வேன்?

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: கிருஷ்ணரை மதுசூதனா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?

மது எனும் அரக்கனை கிருஷ்ணர் அழித்ததால் அவருக்கு மதுசூதனன் என்று பெயர் பெற்றார். விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைப் பட்டியலிட்டுத் தோத்திர உருவில் பீஷ்மரால் யுதிஷ்டிரனுக்கு சொல்லப்பட்ட விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் 73 வதாக மதுசூதனன் பெயர் வரும். தவறு செய்த அரக்கனை அழித்து மதுசூதனன் என்ற பெயர் பெற்ற கிருஷ்ணரிடம் தவறு செய்து கொண்டிருக்கும் கௌரவர்களை கொல்ல நான் விரும்பவில்லை என்று சொல்வதற்காக மதுசூததன் என்ற வார்த்தையை அர்ஜூனன் பயன்படுத்தினான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 58

கேள்வி: ராமாயண காலத்தில் இருந்த இலங்கைதான் தற்போதும் உள்ளதா? அப்போது இராமனால் அமைக்கப்பட்ட பாலம் இன்னும் கடலுக்கடியில் இருக்கிறதா? சேது பாலம் தற்போது இடிக்கப்பட்டால் ஆஞ்சிநேயர் ராம பக்தர்களால் மக்களுக்கு துன்பம் நேருமா? இந்த திட்டத்தால் வணிக ரீதியாக ஏதேனும் நன்மை கிடைக்குமா?

இறைவன் கருணைக் கொண்டு கூறும் பொழுது ராமன் சென்ற பாதை என்ற பொருளிலே மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமபிரான் வாழ்ந்த சரிதம் என்பது காலம் முன்னர் காலம் முன்னர் நடந்தது என்பது மெய்யிலும் மெய். அடுத்ததாக அப்பொழுது இருந்த இலங்கையின் அளவு இன்னும் இன்னும் பெரியதப்பா. அதன் ஒரு சிறிய பகுதிதான் இப்பொழுது எஞ்சியிருக்கிறது. இன்னொன்று இப்பொழுது கடல் கொண்ட பூம்புகார் போக எஞ்சியுள்ள பூம்புகார் இருப்பது போலதான் இப்பொழுது இருக்கின்ற இலங்கை தேசம். அடுத்ததாக பாலம் எல்லாம் இருப்பது உண்மையென்றாலும் கூட மனித கண்ணுக்கு இப்பொழுது அது புலப்படாது. இன்னொன்று இவற்றை சிதைப்பதால் ராமபிரானுக்கோ மால் தூதனுக்கோ (ஆஞ்சிநேயர்) சினம் வந்துவிடாதப்பா. மனிதன் மனிதனாக வாழாமல் பிறருக்கு சதாசர்வகாலம் தொல்லைகள் தந்து கொண்டே தான் நன்றாக வாழ்வதற்கு பலரை இடர்படுத்தி வாழ்கிறானே? அந்த செயல் ஒன்று தான் இறைவனுக்கு வருத்தத்தையும் சினத்தையும் ஏற்படுத்தும். வருத்தமும் சினமும் இறைவனுக்கு இல்லை. இவன் கேட்பதால் நாங்கள் கூறுகிறோம். மற்றபடி நடந்த காலத்து எச்சங்கள் இப்பொழுது ஆங்காங்கே இருப்பது உண்மை. அவற்றை மனிதன் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கவில்லை. அதில் ரணமண்டலம் என்கிற மலை ஒன்று இருக்கிறது. அது குறித்து முன்பே யாங்கள் கூறியிருக்கிறோம். இருந்தாலும் இன்னும் விஷயங்கள் பூமியில் புதையுண்டுதான் இருக்கிறது. அது தொடர்பாக சில கற்பனை கதைகள் கூறப்படுகின்றன. எப்படிக் கூறினாலும் எம்பிரான் ராமபிரானின் பெருமைகளைக் கூறுவதால் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

இறைவன் அருளால் இது போன்ற விஷயங்களுக்கு எத்தனை விளக்கங்கள் தந்தாலும் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு மனிதனுக்கு பக்குவம் இருக்க வேண்டும். அதற்கு அவன் கர்மவினை இடம் தர வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கூறுகின்ற விளக்கம் நாங்கள் கூறுகின்ற நோக்கிலே இல்லாமல் மனிதனால் வேறு விதமாக புரிந்து கொள்ளக்கூடிய நிலை வரும். இப்பொழுது ஒரு மனித உடலில் இருக்கின்ற ஆத்மாதான் ஏதாவது பாவத்தால் ஒரு விலங்கு தேகம் எடுக்கிறது அல்லது ஒரு சிறிய பூச்சியாகக்கூட பிறக்கிறது. இன்னொன்று தெரியுமா? ஒரே மனித ஆத்மா பல்வேறு பாவங்களின் காரணமாக பல கூறுகளாக பிரிக்கப்பட்டுகூட ஒரே சமயத்தில் பல்வேறு விதமான விலங்கு பட்சி இன்னும் புழு பூச்சி தேகத்தைக்கூட பெற வாய்ப்பு இருக்கிறது. ஆன்மாவை பிரிப்பதும் சேர்ப்பதும் இறைவனுக்கு மிகவும் கை வந்த கலையப்பா. ஆனால் அப்படியெல்லாம் பிளவுபட்டால் அது மிகப்பெரிய பாவ தோஷமுள்ள ஆத்மா எனலாம். அதே சமயம் மிகப்பெரிய புண்ணிய ஆத்மாக்களும் இறைவனின் அபரிமிதமான கருணையால் தன் ஆன்மாவை ஒரே சமயத்தில் பலநூறு கூறுகளாக பிரித்து பல்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் பிறவியெடுக்கின்ற நிலைமை ஏற்படும். இறைவன் அல்லது இறைவனுக்கு சமமான முனிவர்கள் இதனை செய்வார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள் செய்தும் இருக்கிறார்கள். பலராமர் பரசுராமர் கிருஷ்ணர் இவர்களைப் பார்த்தால் இந்த உண்மை புரியவரும்.

சுலோகம் -33 # 34

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #33

நாம் யாருக்காக ராஜ்யத்தையும் போகங்களையும் இன்பங்களையும் விரும்பினோமோ அவர்களே செல்வத்தையும் உயிர் மேல் உள்ள ஆசையையும் துறந்து யுத்தத்தில் நிற்கிறார்கள்.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #34

குருமார்கள் பெரியப்பா சித்தப்பாக்கள் மகன்கள் அவ்விதமே பாட்டனார்கள் தாய்மாமன்கள் மாமனார்கள் பேரன்கள் மைத்துனர்கள் ஆகியோர் இங்கு கூடியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு சுலோகத்திலும் அர்ஜூனன் சொல்ல வந்த கருத்து என்ன?

ராஜ்யம் போகம் இன்பம் செல்வம் அனைத்திலும் நிலையான ஆனந்தம் கிடையாது என்று அர்ஜூனனுக்குத் தெரியும். இருந்தாலும் சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்காகத்தான் அனைத்தையும் விரும்பி இருந்தான். ஆனால் அவர்களே போரில் தங்களின் உயிரைத் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் யுத்தத்தில் இறந்து விட்டால் அதன் பிறகு கிடைக்கும் ராஜ்யம் போகம் இன்பம் இதெல்லாம் யாருக்காக? ஆகவே யுத்தம் செய்வது சரியில்லை என்ற கருத்தில் அர்ஜூனன் அவ்வாறு கூறினான். சுலோகம் – 34 இல் சொல்லப்பட்ட உறவினர்கள் அனைவரும் யார் யார் என்று சுலோகம் – 26 இல் சொல்லப்பட்டுள்ளது.

சுலோகம் -32

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #32

கிருஷ்ணா நான் இந்த வெற்றியை விரும்பவில்லை ராஜ்யத்தையும் விரும்பவில்லை சுகங்களையும் விரும்பவில்லை கோவிந்தா நமக்கு இத்தகைய ராஜ்யங்களால் என்ன பயன்? இத்தனை சுகபோகங்களோடு உயிரோடு வாழ்வதில் என்ன பயன்?

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: அர்ஜூனன் உயிரோடு இருந்து பெறும் வெற்றியையும் ராஜ்யத்தையும் ஏன் விரும்பவில்லை?

வெற்றிக்குப் பிறகு கிடைக்கும் ராஜ்யத்தையும் சுகபோகங்களையும் உறவினர்களோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளாமல் தனியாக அனுபவிக்கும் போது இன்பம் இருக்காது துயரம் மட்டுமே இருக்கும். இந்த துயரம் இறுதிக் காலத்திற்கு பிறகு மேலுலகம் சென்றாலும் தொடரும் என்று அர்ஜூனன் நினைக்கின்றான். அதனால் உயிரோடு இருக்கும் போது இன்பத்தை பகிர்ந்து கொள்ள முடியாத வெற்றியும் ராஜ்யமும் சுகபோகங்களும் இருந்தும் பயனில்லாத காரணத்தினால் அர்ஜூனன் இவற்றை விரும்பவில்லை.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: இந்த சுலோகத்தில் கிருஷ்ணரை கோவிந்தா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?

கோவிந்தா என்ற சொல்லுக்கு இந்திரியங்களை அடக்கி ஆளுகின்றவன் என்று பொருள். அர்ஜூனன் மன குழப்பத்தில் இருக்கும் போது அவனது இந்திரியங்கள் அடங்காமல் இருக்கிறது. கிருஷ்ணர் குழப்பம் இல்லாமல் தன் இந்திரியங்களை அடக்கி அமைதியாக இருப்பதால் கிருஷ்ணரை கோவிந்தா என்று அர்ஜூனன் அழைக்கின்றான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 56

அகத்தியர் மாமுனிவர் பொது வாக்கு

வாய்ப்பும் வசதியும் இருக்கக் கூடியவர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதகாலம் தமிழ் மண் எங்கும் தலயாத்திரைகள் செய்து எல்லா தலங்களுக்கும் சென்று அவர்கள் அவர்கள் வசதிக்கேற்ப நெய் தீபங்களை ஏற்றி வணங்கி வரலாம். நவகிரங்கள் தம்பதியராக இருக்கக்கூடிய ஆலயங்களை தேர்ந்தெடுத்து வாரம் ஒரு முறையோ மாதம் ஒரு முறையோ உயர்வான வழிபாடுகள் செய்யலாம். எதுவும் இல்லாதவர்கள் சுக்ர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை தோறும் இல்லத்திலே மகாலட்சுமி பூஜையை செய்வதோடு நவகிரக வழிபாடும் குறிப்பாக சுக்ர வழிபாடும் செய்யலாம். இது எதுவும் செய்ய இயலாதவர்கள் சுக்ர வாரம் அரங்க தலமாகிய ஸ்ரீரங்கத்திலே அதிகாலை விஸ்வரூப தரிசனத்தை பார்க்கலாம். அதுவும் இயலாதவர்கள் அமைதியாக ஒரு இடத்திலே அமர்ந்து மானசீகமாக இறைவா என் தேவையை நிறைவேற்றிக் கொடு என்று பிராத்தனை செய்யலாம். கட்டாயம் நல்ல வெற்றி உண்டாகும்.

கேள்வி: திருவையாறு பஞ்சநதீஸ்வரர் ஆலயம் எப்போது உருவானது?

அந்த இடத்தில் சுயம்புவாக ஐயன் எப்பொழுதே தோன்றிவிட்டார். ஏறத்தாழ கரிகாலன் காலத்தில்தான் (சுமார் 1800 வருடங்களுக்கு முன்) அந்த ஆலயம் மெல்ல மெல்ல பிரசித்தி பெற ஆரம்பித்தது. இந்த காலம் முன்னர் சிறியதாக இருந்த ஆலயம் பின்னர் ஒவ்வொரு மன்னர் காலத்திலும் விரிவாக்கப்பட்டு இன்றைய தினம் இவ்வாறு இருந்து இன்று பல்வேறு அனாச்சாரங்களுக்கு காரணமாக சராசரியான மலிவான மனிதர்களால் இவ்வாறு இருக்கிறது. இருந்தும் நல்ல பக்தர்களின் உள்ளங்களால் ஐயாரப்பன் அருள்புரிந்து கொண்டுதான் இருக்கிறார்.

திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோவிலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 261 திருக்கழுகுன்றம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 261 வது தேவாரத்தலம் திருக்கழுகுன்றம். புராணபெயர் கழுகுன்றம், வேதாசலம், கதலிவனம். மூலவர் வேதகிரீஸ்வரர், பக்தவத்சலேஸ்வரர். இறைவன் வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்பு மூர்த்தியாக அருள்பாளிக்கிறார். அம்பாள் சொக்கநாயகி, திரிபுரசுந்தரி. தீர்த்தம் சங்குத் தீர்த்தம்.. தலவிருட்சம் வாழை. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப்பெற்ற திருமுறைத் தலங்கள் 44. அவற்றில் திருக்கழுக்குன்றம் தலமும் ஒன்றாகும். வேதமே மலையாய் இருப்பதால் இத்தலம் வேதகிரி எனப் பெயர் பெற்றது. மலைமேல் ஒரு கோயிலும் மலையின் கீழே ஊருக்குள் ஒரு கோயிலும் உள்ளது. மலை மேல் இருக்கும் கோவில் திருமலை என்றும் ஊருக்குள் இருக்கும் கோவில் தாழக்கோயில் என்றும் அழைக்கப்பபடுகிறது. மலைக்கோவிலில் இறைவன் வேதபுரீஸ்வரர் என்ற பெயரிலும் தாழக்கோவிலில் இறைவன் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயரிலும் குடி கொண்டுள்ளனர். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும் அவற்றுள் அதர்வணவேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் என்று தலபுராணம் விவரிக்கிறது.

சுரகுரு மகாராஜாவுக்கு சுவாமி இத்தலத்தில் காட்சி தந்தார். அவரே இத்திருத்தலம் அமையக் காரணமாக இருந்தவர் என்றும் வரலாறு கூறுகிறது. 565 படிக்கட்டுகளுடன் மலை மீது உள்ள மலைக்கோவில் சுமார் 4 கி.மி. சுற்றளவும் 500 அடி உயரமும் கொண்டு மலைமேல் இராஜகோபுரம் ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. மூலவர் வேதகிரீஸ்வரர் என்ற பெயருடனும் அம்மன் சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை என்ற பெயரிலும் எழுந்தருளி இருக்கின்றனர். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் நந்தி இல்லை. இறைவன் மட்டுமின்றி இறைவியும் சுயம்பு ஆகும். கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது.

பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாயுச்சியம் (இறைவனோடு இரண்டறக் கலத்தல்) பதவிக்காக தவம் இருந்தனர். தவத்தின் முடிவில் முடிவில் இறைவன் தோன்றி சாரூபம் (இறைவனின் உருவை ஒத்த நிலையடைதல்) பதவியாக வரம் தந்து இப்பதவியில் சில காலம் இருங்கள் பிறகு சாயுச்சியம் தருகிறோம் என்றார். அதை ஏற்க மறுத்து இறைவனுடன் வாதிட்ட புத்திரர்களை கழுகுருவம் அடைக என்று சாபமிட்டார். எனவே நான்கு யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். கழுகுகளுக்கு உணவு கொடுக்கும் செயல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. முதல் யுகத்தில் சாபம் பெற்ற சண்டன் பிரசண்டன் என்னும் கழுகுகளும் இரண்டாம் யுகத்தில் சம்பாதி ஜடாயு என்னும் கழுகுகளும் மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன் மாகுத்தன் என்னும் கழுகுகளும் நான்காம் யுகத்தில் சம்பு ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன. இறைவனின் வரத்திற்கு சாரூபம் (இறைவனின் உருவை ஒத்த நிலையடைதல்) ஏற்ப இந்த கழுகுகள் இறைவனாகவே பக்தர்களால் வழிபடப்பட்டன. கழுகுகள் இராமேஸ்வரத்தில் ஸ்னானம் செய்து கழுக்குன்றத்தில் ஆகாரம் உண்டு காசியில் அடைக்கலம் ஆவதாக ஐதீகம். 500 அடி உயரமுள்ள இம்மலையில் நாள் தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு பட்சி தீர்த்தம் என்றும் திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று. சில வருடங்கள் முன்பு வரை இக்கழுகுகள் மதியம் வந்து உணவு சாப்பிட்டு சென்று கொண்டிருந்தது. இப்போது அவைகள் வருவதில்லை.

மலைக்கோவிலுக்கு ஏறிச் செல்லும் படிகள் வழியாகவே கீழே இறங்கி வரலாம். ஆயினும் கீழே இறங்குவதற்கு மற்றொரு பாதையும் உள்ளது. அவ்வழியே இறங்கி வந்தால் பல்லவர் மகேந்திரவர்மன் காலத்திய கி.பி. 610 – கி.பி. 640 குடைவரைக் கோவில் ஒன்றுள்ளது. கோவிலினுள்ளே ஒரு சிவலிங்கம் உள்ளது. ஊருக்குள் இருக்கும் 2வது கோவில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரளவில் நான்கு புறமும் கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இவற்றில் 7 நிலையுள்ள கிழக்கிலுள்ள கோபுரமே இராஜகோபுரம் ஆகும். ஆலயம் மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்ட மிகப் பழமையான கோயில். கோயிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இக்கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேர் எதிரே ஒரு 4 கால் மண்டபம் உள்ளது, வலதுபுறம் அலுவலக மண்டபக் கற்சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது. இடதுபுறம் 16 கால் மண்டபம். இதிலுள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. 4 கால் மண்டபத்தையடுத்து 2 வது கோபுரம். கோபுரத்தின் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளிப் பிராகாரம் வலம் வரும் போது வடக்குச் சுற்றில் நந்தி தீர்த்தமும் கரையில் நந்தியும் உள்ளது.

மூலவர் சதுரபீட ஆவுடையாரில் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி எழுந்தரிளியுள்ளார். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் உள்ளார். உட்பிராகாரத்திலுள்ள சுமார் 7 அடி உயரமுள்ள அகோரவீரபத்திரர் உள்ளார். 2வது கோபுர வாயிலில் நுழைந்து பிராகாரம் வலம் வரும்போது சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. இப்பிராகாரத்தில் பீடம் மட்டுமே கொண்ட ஆத்மநாதர் சந்நிதி உள்ளது. பாணப்பகுதி இல்லை. எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் சந்நிதிகள் தனித் தனிக் கோயில்களாக அமைந்துள்ளன. ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் இப்பிராகாரத்திலுள்ளது. அழகான முன் மண்டபத்துடன் உள்ள அம்பாள் சந்நிதியும் இப்பிராகாரத்தில் அமைந்துள்ளது. அம்பிகைக்கு தினமும் பாதத்தில் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. ஆடிப்பூரம் 11ம் நாள், நவராத்திரி 9ம் நாள், பங்குனி உத்திரம் இரவு என வருடத்தில் மூன்று நாட்கள் மட்டும் திருவுருவம் முழுவதும் அபிஷேகம் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. நடராச சபை உள்ளது. உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர் அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து 63 நாயன்மார்களும் உள்ளனர். பைரவர் வாகனமின்றி உள்ளார்.

இத்தலத்தில் இந்திரன் பூஜித்தான். தொடர்ந்து இன்றும் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலை மீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுகிறது. தாங்கவே முடியாத வெப்பம் மறுநாள் கருவறை திறக்கும்போது இருக்கும். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடக்கிறது. 10.11.1930 நடந்த போது ஆராய்சியாளர்கள் ஆராய்ந்து இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இடி இறங்குவதைப் பார்த்த முதியவர்கள் பலர் இத்தலத்தில் இன்றும் உள்ளனர். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.

சங்கு தீர்த்தம் கிழக்கிலுள்ள இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள தெருவின் மறு கோடியில் உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இவ்வாறு கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயர் சிவபெருமான் அருளால் என்றும் பதினாறு வயது பெற்று காசி முதலிய தலங்களை வணங்கி இங்கு வந்தார். சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்த போது இறைவன் சங்கை உற்பத்தி செய்து கொடுத்தார் அதுமுதற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கிறது. 2011 ம் ஆண்டு இக்குளத்தில் சங்கு கிடைத்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கும்போது அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும். சங்கு கரை ஒதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். சாதாரணமாக உப்பு நீரில் கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுதோன்றும். 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.

நீராழி மண்டபமும் நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன. மலையை சுற்றி அமைந்த 12 தீர்த்தங்கள் உள்ளன. 1. இந்திர தீர்ததம். 2. சம்பு தீர்த்தம். 3. உருத்திர தீர்த்தம். 4. வசிட்ட தீர்த்தம். 5. மெய்ஞான தீர்த்தம். 6. அகத்திய தீர்த்தம். 7. மார்க்கண்ட தீர்த்தம். 8. கோசிக தீர்த்தம். 9. நந்தி தீர்த்தம். 10. வருண தீர்த்தம். 11. அகலிகை தீர்த்தம். 12. பட்சி தீர்த்தம். சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம். வேதமே மலையாக அமைந்த தலம். கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம். சித்தர்கள் பலர் இம்மலையில் வாழ்ந்துள்ளார்கள். இறைவன் காதலித்துறையும் இடம் கழுகுன்றம் என திருஞானசம்பந்தரால் மகிழ்ந்து போற்றி பாடிய தலம். மாணிக்கவாசகருக்கு இறைவன் காட்சி தந்த தலம். மாணிக்கவாசகர் இத்தலத்தைப்பற்றி திருவாசகத்தில் பாடியிருக்கிறார். என் உடல் வீழும்போதும் நீதான் எனக்கு துணை என்று ஈசனை பட்டினத்தார் உருக்கமாக வழிபட்ட தலம். உலகின் உச்சமான அமராவதி நகருக்கு நிகரான தலம் திருக்கழுக்குன்றம் என அருணகிரிநாதரால் பாடி புகழப்பெற்ற தலம். இத்தலத்திற்கு அந்தக்கவி வீரராகவப் புலவர் தலபுராணம் பாடியுள்ளார். சுமார் 1400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோயில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குடைக்கூளிக் கோயில். 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. கல்வெட்டுக்களில் இத்தலம் உலகளந்த சோழபுரம் என்று குறிப்பிடப்படுகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர். சுந்தரர், அருணகிரிநாதர், பட்டினத்தார், மாணிக்கவாசகர் பாடல்கள் பாடியுள்ளனர்.

சுலோகம் -31

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #31

கேசவா கெடுதல்களை விளைவிக்கக் கூடிய சகுனங்களை நான் பார்க்கிறேன். போரில் நம் உறவினர்களை கொல்வதால் எந்த நன்மையையும் நான் காணவில்லை.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: இந்த சுலோகத்தில் கிருஷ்ணரை கேசவா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?

கேசவன் என்றால் கறுத்துச் சுருண்டு சேர்ந்து சீராக இருக்கும் அழகிய கூந்தலை உடையவர் என்று பொருள். அர்ஜூனனுக்கு சுலோகம் # 29 இல் உள்ளபடி பயத்தில் அவனது ரோமங்கள் சிலிர்த்து அவனுடைய கூந்தல் சீரில்லாமல் விரிந்து கிடந்தது. கிருஷ்ணருடைய கூந்தல் கறுத்துச் சுருண்டு சேர்ந்து சீரான அழகுடன் இருந்ததால் கிருஷ்ணரை கேசவா என்று அர்ஜூனன் அழைக்கின்றான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: கெடுதலான சகுனங்கள் என்று அர்ஜூனன் எதனை குறிப்பிடுகின்றான்?

யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பே அர்ஜூனனுக்கு உடல் நடுக்கம் மற்றும் தன் உடலில் ஏற்பட்ட சில மாறுதல்களை கெடுதலான சகுனங்கள் என்று அர்ஜூனன் குறிப்பிடுகின்றான்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: உறவினர்களை கொல்வதால் நன்மை இல்லை என்று அர்ஜூனன் எதனை குறிப்பிடுகின்றான்?

உறவினர்களையும் நண்பர்களையும் கொன்ற பிறகு முதலில் தவறு செய்து விட்டோமோ என்று மனம் கலங்கும் பின்பு உறவினர்களும் நண்பர்களும் நம்முடன் இல்லையே என்ற கவலை வாழ்நாள் முழுவதும் தொடரும். மேலும் உயிர் கொலை செய்வதால் பாவம் உண்டாகும். ஆகவே இந்த யுத்தம் நடந்தால் துயரம் மட்டுமே இருக்கும். நன்மைகள் ஒன்றும் இருப்பதாக அர்ஜூனனுக்கு தெரியவில்லை. இதனையே அர்ஜூனன் இங்கு குறிப்பிடுகின்றான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 55

கேள்வி: சாப்பாட்டிற்கு அரை மணி முன்பும் பின்பும் நீர் அருந்தக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இது உண்மையா? ஒரு நாளுக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்? எப்போது அருந்த வேண்டும?

இதுவும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுமப்பா. இறைவனருளால் கூறுவது என்னவென்றால் தூய நீர் கட்டாயம் மனிதன் பருக வேண்டும். உடல் உழைப்பு செய்து அதிகமாக வியர்வை வெளியே வந்தால் அதிகமாக நீரை பருக வேண்டும். அதே சமயம் நீரின் அளவை அவன் நாவே அறிவிக்கும். நா வறண்டு போகும் பொழுதெல்லாம் அவன் தேவையான நீரை பருக வேண்டும். உணவு உண்ணும் பொழுது இடையிடையே நீர் பருகுவது கட்டாயம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் செயலாகும். இது செரிமான மண்டலத்தை கட்டாயம் பாதிக்கும். அதே போல் உணவிற்கு முன் அதிகமான நீர் பருகுவதும் தவறு. வேண்டுமானால் ஒரு நாழிகைக்கு (24 நிமிடங்கள்) முன்பாக நீரை பருகி பிறகு உணவு உண்ணலாம். உண்கின்ற உணவை வாயிலிட்டு நன்றாக பற்களால் மென்று கூழாக்கி அனுப்பிவிட்டால் இடையிடையே நீர் பருக வேண்டிய நிலை வராது. அடுத்ததாக உண்ணும் பொழுது ஏதேதோ வாழ்வியல் சிந்தனைகளை வேதனைகளை சிந்தித்துக் கொண்டு உண்ணுவதும் அந்த உணவு சரியாக உடலில் கலப்பதற்குரிய சூழலை ஏற்படுத்தாது. உணவை உண்டு முடித்த பிறகு சிறிது அவகாசம் இட்டு நீர் பருகுவது சிறப்பு. இல்லையென்றால் செரிமானத்திற்கென்று சுரக்கின்ற அமிலங்கள் பாதிக்கப்படும். ஆனால் இதை பின்பற்றுகிறேன் என்று நெஞ்சடக்கி யாரும் அவதிப்படவேண்டாம்.

கேள்வி: அகத்தியான் பள்ளியில்தான் தங்களுக்கு இறைவன் திருமண காட்சி (சிவபெருமான் – பார்வதிதேவி) கிடைத்ததா?

எல்லா இடங்களிலும் இறைவன் அந்த காட்சியை கொடுத்தார். அந்த இடத்திலும் பரிபரணமாக தந்தருளினார்.

அகத்தியான்பள்ளி கோவிலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 260 திருவடிசூலம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 260 வது தேவாரத்தலம் திருவடிசூலம். புராணபெயர் திருஇடைச்சுரம், திருவிடைச்சுரம். மூலவர் ஞானபுரீஸ்வரர், இடைசுரநாதர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாளிக்கிறார். இந்த சுயம்பு லிங்கம் ஒரு மரகதலிங்கம். சதுரபீட ஆவுடையார். சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது அவ்வொளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது. கருவறை அகழி அமைப்புடன் காணப்படுகிறது. அம்பாள் கோவர்த்தனாம்பிகை, இமயமடக்கொடி அம்மை. அம்பாள் பசு வடிவில் வந்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலம். ஆதலால் இறைவி கோவர்த்தனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். தீர்த்தம் மதுரா தீர்த்தம். தலவிருட்சம் வில்வம். பிரகாரத்தில் வில்வம், வேம்பு, ஆலமரம் ஆகிய மூன்று மரங்கள் இணைந்திருக்கிறது. பல குன்றுகளுக்கு நடுவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் திருவடிசூலம் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. தெற்கு நோக்கிய ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது.

கோவிலுக்கு வெளியே இடதுபுறம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால் விசாலமான தெற்கு வெளிப் பிரகாரத்தில் நேரே வலம்புரி விநாயகர் சந்நிதி உள்ளது. வெளிப் பிரகாரம் வலம் வரும் போது கிழக்குப் பிரகாரத்தில் பலிபீடமும் நந்தியும் உள்ளன. இப்பிரகாரத்தில் பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. கிழக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் உள்ள சந்நிதி உள்ளது. பிரகார வலம் முடிந்து மீண்டும் தெற்குப் பிரகாரம் வந்தால் தல விருட்சம் வில்வமரம் உள்ளது. இந்த வில்வ மரத்திற்கு அருகில் ஒரு பாம்புப் புற்று உள்ளது. இது விநாயகர் வடிவில் காட்சி தருகிறது. தெற்குப் பிரகாரத்திலுள்ள மற்றொரு நுழைவாயில் வழியே உள்ளே சென்றால் அநேக தூண்களுடன் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. சந்நிதிக்குள் நுழைந்தால் ஒரே இடத்தில் நின்றபடி இறைவன் இறைவி இருவரையும் தரிசிக்கலாம். மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும் முருகப்பெருமானும் காட்சியளிக்கின்றனர். வலமாகச் சுற்றி வந்தால் நால்வர் பிரதிஷ்டை உள்ளது. விநாயகர் சந்நிதியும் வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதியும் அடுத்து உள்ளன. அடுத்த தரிசனம் பைரவர். இத்தலத்தின் சிறப்பு மூலவர் லிங்கத் திருமேனி. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

திருஞானசம்பந்தர் தனது சிவஸ்தல யாத்திரையின் போது இவ்வழியே வந்து கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததாலும் வெயில் ஏறியதாலும் அவர் மிகவும் களைப்படைந்தார். அதோடு பசியும் அவரை வாட்ட ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது ஒரு இடையன் அங்கு வந்தான். பசியோடு உள்ள திருஞானசம்பந்தரைப் பார்த்த அவன் தன்னிடமிருந்த தயிரை பருகக் கொடுத்தான். தயிரைப் பருகி களைப்பு நீங்கிய திருஞானசம்பந்தரை பார்த்து இடையன் அவர் யார் என்று வினவினான். தனது சிவஸ்தல யாத்திரைப் பற்றிக் கூறிய திருஞானசம்பந்தரிடம் இடையன் அருகிலுள்ள வனத்தில் ஒரு சிவன் இருப்பதைப் பற்றிக் கூறினான். அவரிடம் இதே வனத்திலும் ஒரு சிவன் இருப்பதாக கூறிய இடையன் அங்கு வந்து பாடல் பாடி தரிசனம் செய்யும்படி கட்டாயப் படுத்தினான். இடையன் மூலமாக பசியாறிய திருஞானசம்பந்தர் அவனது அழைப்பைத் தட்ட முடியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன் திருஞானசம்பந்தரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மறைந்து விட்டான். திகைப்படைந்த திருஞானசம்பந்தர் சிவபெருமானை வேண்ட சிவன் அவருக்கு காட்சியளித்து தானே இடையன் வடிவில் வந்து அருள் புரிந்ததைக் கூறினார். இடையனாக வந்து இடையிலேயே விட்டுவிட்டுச் சென்றதால் இறைவனை இடைச்சுரநாதர் என்று அழைத்து பதிகம் பாடினார் திருஞானசம்பந்தர். சிவன் மறைந்த குளக்கரை காட்சிகுளம் என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது.

பல்லாண்டுகளுக்கு முன்பு வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று மட்டும் சரிவர பால் தரவில்லை. சந்தேகப்பட்ட இடையன் அப்பசுவை கண்காணித்தபோது ஒரு புதருக்குள் சென்று பால் சொரிவதை கண்டான். இவ்விஷயத்தை அவன் ஊர் மக்களிடம் சொல்ல அவர்கள் புதரை விலக்கி பார்த்தபோது சிவன் சுயம்பு மரகதலிங்கமாக இருந்ததைக் கண்டனர். பின் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டனர். பொதுவாக அம்பாள் தன் பாதங்களை நேராக ஒன்றோடு ஒன்று நேராக வைத்துத்தான் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்து அம்பாளோ தன் இடது காலை சற்று முன் வைத்து வலது காலை பின்னே வைத்தபடி நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில் காட்சி தருகிறாள். சிவன் இடையன் வடிவில் திருஞானசம்பந்தரின் களைப்பை போக்க கிளம்பியபோது அம்பாளும் அவருடன் கிளம்பினாள். அவரோ அம்பாளை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் காரணம் கேட்டாள். திருஞானசம்பந்தன் நீ கொடுத்த ஞானப்பாலை குடித்தவன். எந்த குழந்தையும் தன் தாயை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நீ வந்தால் திருஞானசம்பந்தன் எளிதில் நம்மை தெரிந்து கொண்டு விடுவான். அதனால் நீ இங்கேயே இரு என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதனால்தான் அம்பாள் தன் காலை முன்வைத்து கிளம்பிய கோலத்திலேயே இருக்கிறாள். சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் சுவாமியை அழகு மிகுந்தவர் என குறிப்பிட்டுள்ளார். இத்தலத்து தட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது பக்கம் திரும்பி படுத்த கோலத்தில் வித்தியாசமாக இருக்கிறான். தட்சிணாமூர்த்தியை அவரது சீடர் சனத்குமாரர் வழிபட்டுள்ளார். பழைமையான கருங்கல் கட்டமைப்புடைய திருக்கோயில் இடைச்சுரநாதரை கவுதமர், பிருங்கி மகரிஷி ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள பாடலில் இத்தல இறைவனின் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்து தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே என்று பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

சுலோகம் -29 # 30

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #29

என் உடல் அங்கங்கள் சோர்வடைகின்றன. என் நாக்கு உலர்கின்றது. என் உடலில் நடுக்கம் ஏற்படுகிறது. என் ரோமங்கள் சிலிர்க்கிறது.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #30

எனது கையிலிருந்து காண்டீபம் நழுவி விழுகிறது. என் உடல் முழுவதும் தீப்பற்றியது போல் உள்ளது. என்னால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை. எனது மனது அலைபாய்கிறது.

இந்த இரண்டு சுலோகத்திலிருந்தும் ஒரு கேள்வி: அர்ஜூனனின் உடலில் ஏன் இத்தனை மாற்றங்கள் ஏற்படுகிறது?

இந்தப் போர் நடந்தால் அதன் விளைவுகள் மிகவும் கொடுமையானதாக இருக்கும். அனைத்து உறவினர்களும் நண்பர்களும் மரணத்தின் நுழைவு வாயிலில் நிற்பதைப் போல் அர்ஜூனன் எண்ணுகிறான். இந்த எண்ணம் அர்ஜூனனின் மனதில் பயத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்தி அவனின் உடலில் இத்தனை மாற்றங்ளை உண்டாக்குகிறது.