ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 19

மாரீசனின் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்த ராவணனை தவ வாழ்க்கை வாழும் மாரீசன் முறைப்படி வரவேற்றான். இப்போது சில நாட்கள் முன்பு தானே வந்தீர்கள். மீண்டும் வந்திருக்கின்றீர்கள் என்றால் முக்கியமான செய்தியோடு வந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் என்ன செய்தி சொல்லுங்கள் என்று மாரீசன் ராவணனிடம் கேட்டான். ராவணன் மாரீசனிடம் பேச ஆரம்பித்தான். என் சகோதரர்கள் கரனும் தூஷனனும் என் ஆளுகைக்கு உட்பட்ட தண்டகாருண்ய காட்டில் ஆட்சி செய்து கொண்டு வந்தார்கள். இது உனக்கு தெரியும். எனது சகோதரர்களையும் பதினான்காயிரம் படை வீர்களையும் ராமன் என்ற ஒருவன் தேர் இல்லாமல் பயங்கரமான ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் கீழே நின்று கொண்டே வெறும் வில்லையும் அம்பையும் மட்டும் வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக அனைவரையும் கொன்று விட்டான். இப்போது தண்டகாருண்ய காட்டில் ராட்சசர்கள் யாரும் இல்லை. ராட்சர்கள் என்கின்ற பயம் என்பதும் துளியும் இல்லை.

ரிஷிகளும் முனிவர்களும் பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள். ராமன் என்பவன் தந்தையால் காட்டிற்கு விரட்டப்பட்ட ஒரு நாடோடி. தன் மனைவி சீதையுடன் காடு காடாக சுற்றிக்கொண்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றான். தவஸ்வியைப் போல் வேடம் அணிந்து கொண்டு இந்திரனைப் போல் தன்னை எண்ணிக் கொண்டிருக்கின்றான். எந்த காரணமும் இல்லாமல் தன் பலத்தால் என் சகோதரியின் காதுகளையும் மூக்கையும் அறுத்து என் குலத்திற்கு அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றான். என் தங்கை என்னிடம் அழுது புலம்புகின்றாள். அரசன் என்கின்ற முறையிலும் தங்கைக்கு அண்ணன் என்ற முறையிலும் நான் ஏதாவது செய்தாக வேண்டும். நான் ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருந்தால் நான் ராட்சசர்களின் அரசன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயன் ஒன்றும் இல்லை. இதனால் நான் பெரும் துயரத்தில் சிக்கி துயரப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இத்துயரத்தை உன்னால் தான் போக்க முடியும் அதனால் உன்னை தஞ்சமடைந்திருக்கிறேன்.

ராமனின் மனைவி சீதையை தூக்கிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ராமனை தண்டித்து அவமானப்படுத்துவது எனது குலத்திற்கு செய்யும் கடமையாக நினைக்கின்றேன். நீயும் எனது சகோதரர்கள் விபிஷணன் கும்பகர்ணன் இருக்க எனக்கு என்ன பயம். ஆகவே துணிந்து முடிவெடுத்து விட்டேன். அதற்கு உனது உதவி வேண்டும். உன்னுடைய யுக்தியும் உருவம் மாறும் திறமையும் உலகத்தில் வேறு யாரிடமும் இல்லை. அதனால் உன்னிடம் வந்திருக்கின்றேன். நான் சொல்லும் தந்திரத்தை நீ ஆமோதித்து செய்ய வேண்டும் மறுக்க கூடாது. நான் சொல்வதை கேள். தங்க புள்ளிகளும் வெள்ளி புள்ளிகளும் கலந்த பொன் மானாக உருவம் எடுத்து ராமர் வாழும் காட்டிற்கு சென்று சீதையின் முன்பாக நிற்க வேண்டும். பெண்களின் சுபாப்படி அழகானவற்றை பார்த்ததும் அதனை அடைய வேண்டும் என்று எண்ணம் கொள்வார்கள். ராமரிடமும் லட்சுமணனிடமும் அந்த மானை பிடித்து கொடுக்கச் சொல்லி வற்புறுத்துவாள். உன்னை பிடிக்க அவர்கள் வரும் போது மான் உருவத்தில் இருக்கும் நீ காட்டிற்குள் ஓட வேண்டும். உன்னை பின் தொடர்ந்து வருவார்கள். அப்போது சீதை தனியாக இருப்பாள். அவளை சுலபமாக நான் தூக்கிச் சென்று விடுவேன். சீதையை இழந்த ராமன் மனம் உடைந்து பலவீனமடைவான். அப்போது ராமனை தாக்கி பழிவாங்கி திருப்தி அடைவேன் என்று மாரீசனிடம் ராவணன் சொல்லி முடித்தான்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 18

ராமன் தண்டகாருண்ய காட்டின் அரசனான கரனையும் சேனாதிபதியான தூஷணனையும் சில கணங்களில் கொன்றுவிட்டான் என்று கோபத்தில் பேசிக் கொண்டிருந்த சூர்ப்பனகை இப்போது ராவணனிடம் சாந்தமாக பேச ஆரம்பித்தாள். ராமனுக்கு சீதை என்ற மனைவி இருக்கிறாள். ராமனோடு தனியாக இருக்கிறாள். அவளின் அழகை என்னவென்று சொல்வேன். தேவர்கள் கந்தர்வர்கள் உலகங்கள் உட்பட ஈரேழு பதினான்கு உலகங்கள் முழுவதும் தேடினாலும் அவளைப் போன்ற அழகியை நீ பார்க்க முடியாது. அவளைக் கண்டதும் அவள் உனக்குரியவள் உன்னிடம் இருக்க வேண்டியவள் என்று நினைத்தேன் அதற்கான செயலிலும் இறங்கி உனக்காக அவளை தூக்கி வர முயற்சி செய்தேன். அப்போது ராமனின் தம்பி லட்சுமணன் தடுத்து ராட்சசியாக இருந்தாலும் பெண் என்பதால் உன்னை உயிரோடு விடுகின்றேன் என்று சொல்லி என் காது மூக்கை அறுத்து அவமானப்படுத்தி விட்டான். உனக்காக செயல்படப் போய் நான் இந்த கோரமான முகத்தையும் அவமானத்தையும் பெற்றுவிட்டேன். இதற்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும். இப்பழியை தீர்த்து உன் குலத்தின் மானத்தைக் காப்பாற்ற உனக்கு ஆசையிருந்தால் உடனே தண்டகாருண்ய காட்டிற்கு புறப்படு.

சீதை போன்ற பேரழகி ராட்சச குலத்தின் அரசனான உன் அருகில் தான் இருக்க வேண்டும். சாதரண மானிதனுடன் காட்டில் இருக்கக் கூடாது. அவளை தூக்கி வந்து உனக்கு அருகில் வைத்துக்கொள். உன் சகோதரியாகிய எனக்கு கிடைத்த அவமானம் உனக்கு கிடைத்த அவமானம் ஆகும். ராமனை வெற்றி கொண்டோ அல்லது தந்திரமாகவோ சீதையை நீ தூக்கி வந்து ராமனை நீ அவமானப்படுத்தினால் போர்க்களத்தில் ராமனால் இறந்த உனது வீரர்கள் திருப்தி அடைவார்கள். நமது குலத்திற்கு ஏற்பட்ட அவமானம் தீர்க்கப்படும். இதனை மனதில் வைத்து சீக்கிரம் உனது குலத்தின் கௌரவத்தை காப்பாற்றிக்கொள் என்று ராவணனுக்கு சீதை மீது ஆசை ஏற்படும்படியும் ராமரின் மேல் கோபம் வரும் படியும் தூண்டிவிட்டு தனது பேச்சை முடித்தாள் சூர்ப்பனகை.

சீதையின் அழகை பற்றிய பேச்சில் மயங்கிய ராவணன் மந்திரிகளிடம் சபை முடிந்தது அனைவரும் செல்லலாம் என்று சபையை முடித்து அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு யோசிக்க ஆரம்பித்தான். சீதையை தூக்கிவர வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் மாரீசன் ராமரைப்பற்றி சொல்லிய எச்சரிக்கை அவனது மனதில் தோன்றியது. சூர்ப்பனகையிடம் ராமன் என்பவன் யார்? அவன் எதற்காக தண்டகாருண்ய காட்டிற்கு வந்திருக்கின்றான்? அவனது உருவம் எப்படிப்பட்டது? ராமன் வைத்திருக்கும் ஆயுதங்கள் என்ன? அவன் தனியாக என்னென்ன போர் தந்திரங்களை கையாண்டு நமது குலத்தவர்களை அழித்தான் என்று ராமரைப்பற்றிய அனைத்தையும் சொல் என்று கேட்டுக்கொண்டான். சூர்ப்பனகை ராமர் அயோத்தியை சேர்ந்த ராஜகுமரன் என்று ஆரம்பித்து காட்டில் யுத்தம் முடிந்தது வரை ராமரைப் பற்றி தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள். அனைத்தையும் கேட்ட ராவணன் நீண்ட யோசனைக்குப் பிறகு ஓர் முடிவுக்கு வந்தான். தனது பறக்கும் ரதத்தில் ஏறி மாரீசனை காணச் சென்றான்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 17

மாரீசன் ராவணனிடம் பேச ஆரம்பித்தான். ராமர் யுத்தத்தில் மத யானைக்கு ஒப்பானவர். சீதையை அபகரிக்கும் இந்த யோசனையை எனக்கு யார் சொன்னது ராவணா? இதனை செயல்படுத்துவது என்பது கொடிய விஷ பாம்பின் வாயில் கைவிட்டு அதன் பல்லை பிடுங்கி மரணிப்பது போல் ஆகும். எவனோ உன் பகைவன் உனக்கும் உனது ராட்சச குலத்திற்கும் சர்வநாசம் உண்டாக வேண்டும் என்று உன்னுடைய நண்பன் போல் பாசாங்கு செய்து இந்த திட்டத்தை உனக்கு சொல்லியிருக்கிறான். ஏமாந்து அழிந்து போகாதே. ராமருடைய கோபத்தை தூண்டினால் உன் குலம் அழிந்து போகும். ராமர் யுத்தம் செய்யும் போது பாதாளத்தை அடித்தளமாக கொண்ட கடல் போன்று காட்சி அளிப்பார். அவரின் வில்லில் இருந்து வரும் அம்புகள் கடல் அலைகள் போல் நிற்காமல் வந்து கொண்டே இருக்கும். அக்காட்சியை கண் கொண்டு பார்க்க இயலாது அப்படி இருக்கும் போது யுத்தம் செய்வது எப்படி சாத்தியமாகும். அரக்கர்களின் தலைவனான ராவணா நீங்கள் சீதையை ராமருக்கு தெரியாமல் நீங்கள் கவர்ந்து செல்வது உங்களுக்கு நன்மையானது அல்ல. நான் சொல்வதை கேளுங்கள். மனம் அமைதி அடைந்து இலங்கைக்கு திரும்பி சென்று உங்களது மனைவிமார்களுடன் மகிழ்ச்சியுடன்
இன்பத்தை அனுபவியுங்கள். ராமர் தன் மனைவியுடன் காட்டில் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று மாரீசன் ராவணனிடம் புத்தி கூறினார். இதனைக்கேட்ட ராவணன் அனுபவசாலியான மாரீசன் கூறினாள் சரியாக இருக்கும் என்று தன் திட்டத்தை கைவிட்டு இலங்கைக்கு திரும்பிச்சென்றான்.

இலங்கையில் ராவணன் தனது அரசவையில் இந்திரன் போல் ஜொலித்துக்கொண்டு மந்திரிகள் சூழ அமர்ந்திருந்தான். அப்போது சபையில் அதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் ராவணனின் உடன் பிறந்த சகோதரி சூர்ப்பனகை காது மூக்கு அறுந்த நிலையில் மிகவும் கொடூரமான உருவத்துடன் அரசவைக்குள் நுழைந்து ராவணனிடம் கடுமையான வார்த்தைகளை கூறி பேச ஆரம்பித்தாள். ராட்சச அரசனை நீ அரச சுகங்களை அனுபவிப்பதில் மதிமயங்கி கிடக்கின்றாய். மிக பெரிய ஆபத்து ஒன்று பின்னாளில் வரப்போகிறது என்று நான் சொல்வதற்கு முன்பாகவே ஒற்றர்கள் வழியாக உனக்கு செய்தி வந்திருக்கும். அதனை தெரிந்தும் தெரியாதது போல் சிறுபிள்ளைதனமாக சுகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றாய்.

உன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட உனது இடத்தை ஒருவன் ஆக்ரமிப்பு செய்து உன் குலத்தை சேர்ந்த உன்னை நம்பி தண்டகாருண்ய காட்டை ஆட்சி செய்தவர்கள் அழிந்து விட்டார்கள். பதினான்காயிரம் வீரர்களையும் அரசன் சேனாதிபதி என அனைவரையும் முனிவர்களின் சார்பாக ஒருவன் அழித்திருக்கிறான். உன்னுடைய படைகளை கண்டு நடுநடுங்கிய எதிரிகள் இதனைப்பார்த்து இப்போது சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனை அறிந்தும் அறியாதவன் போல் அறிவிழந்து கிடக்கிறாய். மரண பயமில்லாமல் நீ இருந்தால் மட்டும் போதுமா அரசன் செய்ய வேண்டிய காரியத்தை நீ செய்ய வேண்டாமா? நீ எப்போது அழிவாய் என்று உனது பகைவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். நீ இங்கு சுகமாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றாய். உனக்கு அவமானமாக இல்லையா? உன்னை கண்டு நடுங்கிய முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ராமர் இப்போது அபயம் அளித்து விட்டான். உன்னை பாராட்டி கொண்டிருப்பவர்களின் வார்த்தைகளில் திருப்திப்பட்டு கிடக்கும் உனக்கு ஆபத்து நெருங்கி விட்டது. இலங்கைக்கு இந்த நிலை வந்தால் உன் குடி மக்கள் கூட உன்னை மதிக்க மாட்டார்கள். உனக்கு கோவம் வரவில்லையா கோபம் இல்லாத அரசன் எதற்கும் உதவ மாட்டான் என்று சூர்ப்பனகை ராவணனின் கோபத்தை தூண்டி விட்டாள்.

சுப்ரமண்ய புஜங்கம்

ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம் என்ற பாடல் ஆதிசங்கரரால் முருகனைப் போற்றி வடமொழியில் இயற்றப்பட்டது. இது முப்பத்தியிரண்டு பாடல்களால் ஆனது. முடிவில் முப்பத்தி மூன்றாவது பாடலாக நூலின் பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதிசங்கரர் அத்வைதக் கொள்கையை நாடெங்கிலும் பரப்புவதற்காக வடக்கே அபிநவகுப்தர் என்ற ஒரு வேதாந்த வித்வானுடன் தர்க்கம் செய்தார். ஆதிசங்கரரின் வேத ஞானத்தைக் கண்டு அபிநவகுப்தர் பொறாமை கொண்டார். அதனால் அவர் ஆதிசங்கரர் மீது தீய ஏவல் செய்தார். ஏவலுக்கு உட்பட்ட ஆதிசங்கரர் காசநோயால் பீடிக்கப்பட்டு அவதியுற்றார். உடல் நலிவுற்ற நிலையில் ஒரு நாள் காலையில் திருகோகர்ணம் என்ற தலத்தில் தங்கியிருந்த போது அவருடைய கனவில் சிவபெருமான் தனது விடை மீது காட்சியளித்தார். சூரபத்மன் முதலிய அசுரர்களை வதம் செய்தபின் அந்த உக்கிரம் தணிய ஜெயந்திபுரத்தில் (திருச்செந்தூருக்கு ஜெயந்திபுரம் என்ற பெயரும் உண்டு) என் குமாரன் சண்முகன் இருக்கிறான். அவனை தரிசித்தால் உன் பிணி நீங்கும் என்று சொல்லி ஆதிசங்கரரின் கையில் திருநீறும் வழங்கினார். தூக்கத்திலிருந்து விழித்த ஆதிசங்கரர் தன் கையில் திருநீறு இருப்பதைக் கண்டு அதைத் தன் நெற்றியிலும் கைகளிலும் அணிந்து கொண்டார். உடனே தன் சித்தியினால் தன் உடலை விட்டு சூட்சுமமாக பிரிந்து ஜெயந்திபுரம் அடைந்து சண்முகப் பெருமானை தரிசித்தார். அந்தக் கணமே தன் உடல் சுகமடையத் தொடங்குவதை உணர்ந்தார். அச்சமயம் சண்முகநாதனின் கமல பாதங்களை ஒரு பெரிய நாகபாம்பு பூஜை செய்து கொண்டிருப்பதையும் கண்டார். நாகபாம்புக்கு வடமொழியில் புஜங்கம் என்று பெயர். நெளிந்து வளைந்து பயமின்றிச் செல்லும் நாகப்பாம்பின் கம்பீரமான நடையையே தன் மனதில் நிறுத்தி சுப்பிரமணிய புஜங்கம் எனற பாடல்களை ஆதிசங்கரர் பாடினார்.

ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம் வட மொழி இசை வடிவில்

ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம் தமிழாக்கம்

  1. தீராத இடர் தீர

என்றும் இளமை எழிலன் எனினும் இடர்மா மலைக்கே இடராவன்
துன்றும் கரிமா முகத்தோன் எனினும் சிம்ம முகச்சிவன் மகிழ்நேயன்
நன்றே நாடி இந்திரன் பிரமன் நாடித் தேடும் கணேசனெனும்
ஒன்றே எனக்கு சுபம் திருவும் உதவும் மங்கள மூர்த்தமதே.

  1. புலமை ஏற்படும்

சொல்லு மறியேன்சுதி அறியேன் சொற்கள் சுமக்கும் பொருளரியேன்
சொல்லைச் சொல்லும்விதி யறிதேன் தோய்ந்து சொல்ல நானறியேன்
எல்லை யிலாதோர் ஞான வொளி இதயத் தமர்ந்து அறுமுகமாய்
சொல்லை வெள்ள மெனப் பெருக்கும் தோற்றம் கண்டேன் சுடர்கண்டேன்.

  1. திருவடி தரிசனம் கிட்டும்

மயில்மீது ஆர்த்து உயர்வாக்கிற் பொதிந்து மனதை கவரும் உடலான்
பயில்வோர்கள் உள்ளக் குகைக் ஆகாயில் தங்கி பார்ப்பவர் தெய்வ மானான்
உயிராகும் மறையின் பொருளாகி நின்று உலகைப் புரக்கும் பெருமான்
கயிலாய மேவும் அரனாரின் செல்வக் கந்தன் பதம் பணிகுவாம்.

  1. பிறவிப் பிணி தீரும்

என்றன் சந்நிதி யடையும் மனிதர் எப்போ தெனினு மப்போதே
இந்தப் பிறவியின் சாகரக் கரையை எய்திக் களித்தோ ராகின்றார்
மந்தரு மறிய மறையை விளக்கிச் செந்தில் சாகரக் கரையதனில்
சுந்தரன் சக்தி பாலன் அமர்ந்தான் தூயன் பாதம் துதிக்கின்றேன்.

  1. போகாத துன்பம் போகும்

கடலில் தோன்றும் அலையும் அழிந்து காட்சி மறைவது போல்
திடமாய்ச் சந்நிதி சேவித் திடுவார் தீமை யழிந்து படும்
படமாய் மனதில் பதியச் செய்ய பரவைக் கரையில் குகன்
இடமே யமர்ந்தான் இதயமலர் மேல் ஏற்றித் தியானம் செய்கின்றேன்.

  1. கயிலை தரிசன பலன் கிட்டும்

என்றன் இருக்கை யறிந்தே யெவரும் இம்மலை ஏறி வரின்
எந்தைக் கயிலை மலை மீதேறும் இனிய பலன் கொள்வார்
கந்தன் இதனைச் சுட்டிக் காட்டிக் கந்த மான கிரிமேல்
சிந்தை மகிழ மூவிரு முகமாய்த் திருக்கொலு வமர்ந்தே யிருக்கட்டும்.

  1. கரையாத பாவம் கரையும்

கொடிதாம் பாவக் குறை நீக்கிடவே பெரிதாம் கடற் கரையில்
அடியார் தவமே நிறைவே தருமோர் கந்த மான கிரிமேல்
குடியாம் குகையில் ஒளியின் வடிவாய் குலவி விளங்கு குகன்
அடியார் மிடிமை கெடவே செய்வான் அவனைச் சரண மடைகின்றேன்.

  1. மனம் சாந்தியுறும்

மன்னும் இளமை யாயிரம் ஆதவர் மலரும் காந்தி யுடன்
நன்மலர்க் கொத்துச் சூழ்ந்து மறைக்கும் இரத்தின மஞ்சமதில்
கன்னிய ரறுவர் போற்றி வளர்த்த கந்தன் கொலு காணப்
பொன்மயக் குகையில் புகுந்த மாந்தர் சித்தம் சாந்தி யுறும்.

  1. புகலிடம் கிட்டும்

மென்மை மிகுந்த கமலத் திருவடி மேலும் அசையச் சிவப்பாகும்
மன்னும் அழகு மனதைக் கவர்ந்து மலரின் மேலே குடியேற்றும்
சின்னம் சிறிய வண்டாம் மனது சிக்கல் பலவும் விட்டேகி
பொன்னால் பாதத் தாமரைச் சார்ந்து பொலிவு பெற்றே வாழட்டும்.

  1. அக இருள் நீங்கும்

பொன்னெனத் திகழும் பூந்துகி லாடை பொலிவுடன் இடையில் ஒளி துள்ள
மின்னென மணிகள் மெல்லிசை ஒலிக்க மேகலை இடையைப் பொன்னாத்த
தன்னிக ரில்லா இடையதன் காந்தித் தன்னொளி ஒன்றை ஏவிவிடும்
நின்னெழில் இடையின் அணியா அழகை நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

  1. ஆபத்து விலகும்

வேடவேந்தன் திருமகள் வள்ளி விரிந்த நகில்கள் மீதயர்ந்த
சேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து திகழும் நின்றன் தடமார்பு
நாடும் அடியர் துன்பம் துடைத்து நலமே பொங்கச் சிவந்துவிடும்
கோடிய தாரகன் தன்னைக் கடிந்த குமரன் மார்பைப் போற்றுகிறேன்.

  1. பிரம்ம ஞானம் கிட்டும்

வேதன் தலையில் குட்டிய கை விண்ணவர் கோனை வாழ்த்தும் கை
வாதனை போக்கும் யமதண்ட மதாய் வையம் தாங்கும் விளையாட்டாய்
சாதனைக் கரியின் கைபற்றி தன்மத மடக்கும் நின்னுடைய
காதல் கரங்கள் பன்னி ரெண்டும் கந்தா என்னைக் காத்திடுக.

  1. தாபங்கள் நீங்கும்

சந்திரர் அறுவர் வான் வெளியில் சற்றும் களங்க மில்லாமல்
சுந்தரச் சுடர்தான் வீசி யெங்கும் தோற்றக் குறைவு யேதின்றி
யந்திர மென்னச் சுழன் றாங்கு என்றும் உதயத் தோற்றமொடு
கந்தா அவைதான் விளங்கினும் நின் கருணை முகத்திற் கெதிராமோ.

  1. அமுத லாபம் ஏற்படும்

அன்னம் அசைதல் போல் நின் புன்னகை அழகின் அதரம் அமுதூர
சின்னஞ்சிறிய கொவ்வைப் பழமாய்ச் சிவந்த உதடும் அழகூர
பன்னிரு கண்கள் வண்டாய் ஊர்ந்து பவனி கடைசி ஒளியாக
நின்திரு முகங்கள் ஆறும் தாமரை நிகர்த்தே நிங்கக் காண்கிறேன்.

  1. கிருபா கடக்ஷம் கிட்டும்

விண்ணிலும் விரிந்த கருணை யதால் வியத்தகு தயவை அருளுகின்ற
பன்னிரு விழிகள் செவி வரைக்கும் படர்ந்து இடையீ டேதின்றி
மின்னென அருளைப் பெய் வனவாய விளங்கு குகனே மனதிறங்கி
என்மீது கடைக் கண் வைத்தால் ஏது குறைதாந் உனக்கெய்தும்.

  1. இஷ்டசித்தி ஏற்படும்

மறைகள் ஆறு முறை யோதி வாழ்க மகனே என மகிழும்
இறைவன் உடலில் இருந்தே பின் எழுந்த கந்தா முத்தாடும்
துறையாய் விளங்கும் நின் சிரங்கள் திகழும் மகுடத் தோ டுவகை
நிறைவாய்க் காக்கும், சிரங்களையே நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

  1. சத்ருபயம் போகும்

இரத்தினத் தோள் வளை ஒளிகதுவ நல்முத்து மாலை யசைந்தாட
வரத்தில் உயர்ந்த நின் குண்டலங்கள் வளைந்த கன்னத்தே முத்தாட
திரிபுரத்தை எரித்த சிவக் குமரா செந்தில் தலைவா வேல்தாங்கி
மரகதப் பட்டை இடை யுடுத்தி வருக என்றன் கண்முன்னே.

  1. ஆனந்தம் ஏற்படும்

வருக குமரா அரு கெனவே மகிழ்ந்தே இறைவன் கர மேந்த
பெருகும் சக்திமடி யிருந்தே பெம்மான் சிவனின் கரம் தாவும்
முருகே பரமன் மகிழ்ந் தணைக்கும் முத்தே இளமை வடிவுடைய
ஒரு சேவகனே கந்தா நின் உபய மலர்த்தாள் தொழுகின்றேன்.

  1. கர்மவினை தீரும்

குமரா பரமன் மகிழ் பாலா குகனே கந்தா சேனாபதியே
சமரில் சக்தி வேல் கரத்தில் தாங்கி மயில் மீதூர்பவனே
குமரி வள்ளிக் காதலா எம் குறைகள் தீர்க்கும் வேலவனே
அமரில் தாரகன் தனை யழித்தாய் அடியன் என்னைக் காத்திடுக.

  1. திவ்ய தரிசனம் கிட்டும்

தயவே காட்டும் தன்மை யனே தங்கக் குகையில் வாழ்பவனே
மயங்கி ஐந்து புலன் ஒடுங்கி வாயில் கபமே கக்கிடவும்
பயந்து நடுங்கிப் பயண மெனப் பாரை விட்டுப் புறப்படவே
அயர்ந்து கிடக்கும் போதென் முன் ஆறுமுகா நீ தோன்றுகவே.

  1. எமபயம் தீரும்

காலப் படர்கள் சினம்கொண்டு கட்டு வெட்டு குத்தென்று
ஓலமிட்டே அதட்டி என்முன் உயிரைக் கவர வரும்போது
கோல மயில் மேல் புறப்பட்டு குமரா சக்தி வேலோடு
பாலன் என்முன் நீ வந்து பயமேன் என்னத் தோன்றுகவே.

22 அபயம் கிட்டும்

கருணை மிகுமோர் பெருங் கடலே கந்தா நின்னைத் தொழுகின்றேன்
அருமைமிகு நின் பொன்னொளி சேர் அடியில் நானும் விழுகின்றேன்
எருமைக் காலன் வரும் போதென் எந்தப் புலனும் பேசாது
அருகே வந்து காத்திட நீ அசட்டை செய்ய லாகாது.

  1. கவலை தீரும்

அண்ட மனைத்தும் வென் நங்கே ஆண்ட சூர பதுமனையும்
மண்ணுள் மண்ணாய்த் தாரகனை மாயன் சிம்ம முகத்தனையும்
தண்டித் தவனும் நீ யான்றோ தமியேன் மனதில் புகந்திங்கே
ஒண்டிக் கிடக்கும் கவலையெனும் ஒருவனக் கொல்லுத லாகாதோ?

24.25. மனநோய் போகும்

துன்பச் சுமையால் தவிக்கிறேன் சொல்ல முடியா தழுகின்றேன்
அன்பைச் சொரியும் தீனருக் கிங்கருளும் கருணைப் பெருவாழ்வே
உன்னை நாடித் தொழு வதால் ஊமை நானோர் மாற்றறியேன்
நின்னைத் தொழவுடு தடை செய்யும் நெஞ்சின் நோவைப் போக்கிடுவாய்.

  1. நோய்கள் தீர

கொடிய பிணிகள் அபஸ் மாரம் குஷ்டம் க்ஷயமும் மூலமொடு
விடியா மேகம் சுரம் பைத்யம் வியாதி குன்மமென நோய்கள்
கொடிய பிசாசைப் போன்ற வைகள் குமரா உன்நன் திருநீறு
மடித்த இலையை பார்த்த வுடன் மாயம் போலப் பறந்திடுமே.

  1. சராணாகதி பலன் கிட்டும்

கண்கள் முருகன் தனைக் காணக் காதும் புகழைக் கேட்கட்டும்
பண்ணை வாயிங் கார்க் கட்டும் பாதத்தை கரமும் பற்றட்டும்
எண்சாண் உடலும் குற்றேவல் எல்லாம் செய்து வாழட்டும்
கண்ணாம் முருகைப் புலன்க ளெலாம் கலந்து மகிழ்ந்து குலவட்டும்.

  1. வரம் தரும் வள்ளல்

முனிவர் பக்தர் மனிதர்கட்கே முன்னே வந்து வரமளிக்கும்
தனித் தனி தேவர் பற் பலர்கள் தாரணி யெங்கும் இருக்கின்றார்
மனிதரில் ஈன மனி தருக்கும் மனம்போல் வரமே நல்கிடவே
கனிவுடைக் கடவுள் கந்த னன்று கருணை வடிவைக் காண்கிலனே.

  1. குடும்பம் இன்புறும்

மக்கள் மனைவி சுற்றம் பசு மற்ற உறவினர் அனை வோரும்
இக்கணத் தென்னுடன் வசித்திடு வோர் யாவரும் ஒன்றே லட்சியமாய்
சிக்கெனப் பற்றி நின் திருவடியைச் சேவிக்கும் தன்மை தருவாய் நீ
குக்குடக் கொடி யோய் செந்தில் வாழ் குமரா எமக்குக் கதிநீயே.

  1. விஷம் நோய் போகும்

கொடிய மிருகம் கடும் பறவை கொட்டும் பூச்சி போலென்றன்
கடிய உடலில் தோன்றி வுடன் கட்டி வருத்தும் நோயினையே
நெடிய உன்றன் வேல் கொண்டு நேராய் பிளந்து தூளாக்கு
முடியாம் க்ரெளஞ்ச கிரி பிளந்த முருகா வருக முன் வருக.

  1. குற்றம் குறை தீரும்

பெற்ற குழந்தை பிழை பொறுக்கும் பெற்றோர் உலகில் உண்டன்றோ
உற்ற தேவர் தம் தலைவா ஒப்பில் சக்தி யுடையானே
நற்ற வத்தின் தந்தாய் நீ நாயேன் நாளும் செய் கின்ற
குற்றம் யாவும் பொறுத் தென்னைக் குறை யில்லாமல் காத்தருள்க.

  1. ஆனந்தப் பெருமிதம்

இனிமை காட்டும் மயிலுக்கும் இறைவன் ஊர்ந்த ஆட்டிற்கும்
தனி மெய் ஒளிகொள் வேலுக்கும் தாங்கும் சேவற் கொடியுடனே
இனிதாம் கடலின் கரையினிலே இலங்குச் செந்தில் நகருக்கும்
கனியும் நின்றன் அடிகட்கும் கந்தா வணக்கம் வணக்கமதே.

  1. வெற்றி கூறுவோம்

ஆனந்த மூர்த்திக்கு வெற்றி கூறுவோம் அளவற்ற சோதிக்கு வெற்றி கூறுவோம்
வான்புகழ் மூர்த்திக்கு வெற்றி கூறுவோம் வையக நாயகர்க்கு வெற்றி கூறுவோம்
தீனரின் காவலர்க்கு வெற்றி கூறுவோம் திகழ்முத்தி தருபவர்க்கு வெற்றி கூறுவோம்
மோ னசிவன் புதல் வர்க்கு வெற்றி கூறுவோம் முருகனுக்கு என்றென்றும் வெற்றி கூறுவோம்

  1. வாழ்த்து

எந்த மனிதன் பக்தி யுடன் எழிலார் புஜங்க விருத்த மதை
சிந்தை கனிந்து படித் திடிலோ செல்வம் கீர்த்தி ஆயுளுடன்
சுந்தர மனைவி புத்தி ரர்கள் சூழ ஆண்டு பல வாழ்ந்து
கந்தன் பதத்தை அடைந் திடுவார்.

விளக்கம்

எப்போதும் குழந்தையென இருந்தாலும் மலை போல் விக்னங்கள் வந்தாலும் வேரோடு அழிப்பான். எத்திக்கும் சிங்கமும் பூஜிக்கும் வேதம் தும்பிக்கை முகத்தான் தொழுதிடக் காப்பான். இந்த்ராதி தேவரும் எண்ணியது நடக்க வந்திங்கு தேடும் வல்லபை கணேசன் மங்கள மூர்த்தி மகிமை பிரதாபன் என்றென்றும் சுபமே தந்திடத் துதித்தேன். வெல்லும் சொல் அறியேன் விழி பொருள் அறியேன். உள்ளிடும் சந்தம் தொடுக்கவும் அறியேன். நல்லதோர் கவிதை நயங்களும் அறியேன். உள்ளம் தோய்ந்தே உருகிடவும் அறியேன். எல்லையில்லாததோர் ஒளி வந்து நெஞ்சின் உள்ளே புகுந்தது ஒராறு முகமும் சொல் என்று சொல்ல தொடுக்கின்றேன். பாட்டு வெள்ளமாய் பொங்கி பெருகிட மயிலேறி வந்தான் மகாபாக்யப் பொருளாய் உயிரில் கலந்தான். உள்ளம் கவர்ந்தான். அழகுக்கு இவன் தான் அணியாக நின்றான். முனிவர்கள் நெஞ்சில் குடிகொண்ட பெருமான்யாருக்கும் எளியன் வேதப் பொருளாய் பாரெல்லாம் காப்பான். ஈசன் குமாரன் ஈடேற்றி அக்கரை சேர்ப்பேனே என்று கூறுவான் போல கடலோரம் நின்றான் செந்தில் வேலன். சிவசக்தி பாலன் கும்பிடும் மலைபோல் வந்திடும் துயரை வந்தது போலவே திரும்பிடச் செய்வான். கண்கண்ட தெய்வம் என் நெஞ்சுக்குள் வந்தான். கந்தமாகெனமெனும் விந்தையூரிலே வந்து கால் வைப்பர் கைலாயம் காண்பரே என்று நீ சொல்வதாய் சொல்வதோர் சண்முகம் சந்தோஷம் பொங்கவே தந்திடு நின்னருள் செந்தூர் கடற்கரை வந்துற்ற போதே பஞ்சமா பாதகம் பறந்திடும் கந்தனை.

சிந்தையில் வந்தனை செய்திடும் மங்கள கந்த மாமலைக் குகை வந்தன காணவே விழியெலாம் போற்றிடும் அறுமுகன் குகையிலே கதிரவன் ஆயிரம் செவ்வொளி குவிந்ததோர் மலர்ச்சரம் சூழ்ந்ததோர் மாணிக்கக் கட்டிலில் கிருத்திகைப் பெண்டிரால் வளர்ந்தவன் தோன்றுவான் கந்தமா கோயிலில் அன்னங்கள் குலவிடும் சண்முகன் சேவடி சதங்கைகள் கொஞ்சிடும் அமிர்தம் வழிந்திடும் அரவிந்த மலர்ப்பதம் நெஞ்சமாம் அதில் தோய்ந் திளைப்பாடுக பொன் வண்ணப்பட்டாடை இடையிலே கட்டி கிண்கிணி சலங்கையோடு மேகலை பொருத்தி தங்கமயப் பட்டமும் அணிந்துன்னைப் பார்த்தால் கண் கொள்ளாக் காட்சி தான். செந்தில் குமாரா எந்தவொரு அலங்காரம் இல்லாத போதும் இடையழகு பேரழகு எங்குமில்லா அழகு எங்கும் நிறைந்தோர் ஆகாயம் போல் கந்தா உன் இடை தோன்றும் வேண்டியதை நல்கும் வனக்குறத்தி வள்ளி அவள் கரங்களிலே தோய்ந்து உனது திருமார்பில் குங்கும மாமுருகா மனம் சிவந்து அடியவர்க்கு வழங்க வரும் அழகா எது என விளக்கிடுக.

தாரகனின் பகைவா ஒருகரம் நான்முகனைச் சிறை வைத்து அடக்கும் ஒருகரம் விளையாட்டாய் உலகங்கள் படைக்கும். ஒரு கரம் போரிலே யானைகளை வீழ்த்தும். ஒரு கரம் இந்திரனின் பகைவர்களை வாட்டும். எஞ்சிய கரங்களெல்லாம் எங்களைக் காக்கும் அஞ்சதே என்று சொல்லி ஆறுதல் வழங்கும் செந்திலான் கரங்களுக்கு சிரந்தாழ்ந்த வணக்கம். சிங்கார வேலனுக்கு நெஞ்சார்ந்த வணக்கம். மழை பொழியும் சரத்கால நிலவொளியில் களங்கம் பிறை முதலில் வைத்ததொரு திலகமாய் விளங்கும் திலகமில்லை அழிவதெனும் கரையில்லா நிலவே கருநிலவு கூடுகின்ற அதிசயமாம் அழகு அன்னங்கள் அசைவது போல் புன்னகையைக் கண்டேன். அமுதூறும் அதரங்கள் கனிகோவை என்றேன் கண்கள் பனிரெண்டும் பொன்வண்டு கூட்டம். கமலமலர் வரிசைகளும் கந்தர் முகத் தோற்றம் காதுவரை நீண்டிருக்கும் கண் சுழலும் கோலம் ஆகாயம் என விரிந்து அழகு மழை பொழியும். ஏதேனும் ஓர் விழியால் ஏழை எனைப் பார்த்தால் என்ன குறை வந்து விடும் செந்தில் வடிவேலோய். நான் அளித்த பிள்ளை நீ எனைப் போல உள்ளாய் வாழ்க என மந்திரங்கள் ஆறுமுறை சொல்லி ஆறுதலை முகந்து சிவன் அகம் மகிழ்த குமராராஜன் என மணிமுடிகள் ஒளிவிடும் அழகா ஏழ் உலகமும் காப்பதற்கு ஆறுமுகம் தோன்ற காது நிறை குண்டலங்கள் கன்னங்கள் கொஞ்ச போர் வலை மணிமாலை ஆரங்கள் சூழ ஏகாம்பரம் இடையில் பேரொளியை வீச பார்வதித்தாய் தந்த ஆயுதத்தை ஏந்தி பவழ இதழ் முத்து நகை அழகு முகம் காக்க நீலமயில் ஏறிடும் கோல எழில் குமரா தேரினிலே நீ வருக சீர் அலைவாய் முருகா தாயாரின் மடியினிலே நீயிருக்கப் பார்த்து வாவாவா இங்கே வா என ஈசன் அழைக்க வேகமாய் நீ எழுந்து ஓடிவரக் கண்டு ஆலிங்கனம் செய்யும் அரன் மகனே சரணம்.

கோலாகலக் குமரா சிவன் புதல்வா கந்தா வேலாயுதா தலைவா மயில் ஏறும் மைந்தா சேனாபதி வள்ளி நாயகனே குகனே தாரகனே அழித்தவனே சரணம் தாள் சரணம் கதி கலங்கி கண் கலங்கி பொறிகளெல்லாம் ஒடுங்கிப்பற்றி எனையிழந்து உயிர் பிரியும் நேரம் நடுநடுங்கி கிடக்கின்ற என்முன்னே வந்து நானிருக்க பயமில்லை எனக்கூறும் முருகா வெட்டு இவனை கூறுக்கு வெந்தணலில் பொசுக்கு கட்டிவா என்றெல்லாம் எமதூதர் கூறும் துட்ட மொழி கேட்பதற்குள் தோன்றுக நீ மயில் மேல் வெற்றி வேல் காட்டி எந்தன் வேதனைகள் நீக்கு வாய் பேச முடியாது வருந்துகிற நேரம் தாய் போல் நீ வந்து தழுவிட வேண்டும் ஏது பிழை என்றாலும் மன்னிக்க வேண்டும். என்னருகே நீ இருந்து காப்பாற்ற வேண்டும். சூரபத்மன் தாரகன் சிங்கமுகன் இவரை கூர் வேலால் பிளந்தெரிந்த குமரா நீ வருக தீராத கவலைகள் தீர்த்திடவே வருக. யாரிடத்தில் போய் சொல்வேன் உனையன்றி துணை யார்? மனக் கவலையெனும் ரோகம் சுமையாக அழுத்தும் உனைப்பாடும் பணியினையும் இடைபுகுந்து தடுக்கும்.

அருட்பிச்சை கேட்கின்றேன் தருக உன்கையால் எழியோரின் புகலிடமே வருக நீ வள்ளாய் காக்கை வலி நீரிழிவு சயம் குஷ்டம் மூலம் ஓயாத வயிற்றுவலி உன்மத்தம் காய்ச்சல் தீராதரோகங்கள் பிசாசு பூதங்கள் உந்தன் நீரணிந்த உடனே காதவழி ஓடும் கண்ணிரண்டும் கந்தா உன் வடிவழகு காண்க காதிரண்டும் முருகா உன் பேர் சொல்லக் கேட்க எண்ணமெலாம் உன்நினைவு இவ்வுடலாம் உனக்கே எந்நாளும் உன் பணியில் உன் புகழை பேச பண்பாடும் பக்தருக்கே பலனளிப்பார் தேவர் கொண்டாடும் முனிவருக்கும் கொடுப்பதற்கு வருவாய் அண்டி நின்று முருகா என்றழுகின்றவர் யார் சண்டாழ அவரனெனும் சண்முகனே தருவாய் மனைவி மக்கள் உற்றார் உயிரினங்கள் மற்றோர் அனைவருமே உனக்காக சேவை செய்ய வேண்டும் எனை வருத்தும் புள் விலங்கு ஜந்துக்கள் நோய்கள் எது எனினும் உன் வேலால் பொடி படவே வேண்டும் குற்றமெல்லாம் பொருத்தென்னை மன்னிப்பாய். பெற்றோர் உற்றவனே நீயும் இவ்வுலகிற்கே தந்தை முற்றுமெனை மன்னித்து முழுமையாய் ஏற்க முருகா. உன்முகம் கொண்டு கருணையால் பார்க்க கந்தனை சார்ந்திருக்கும் கடலுக்கும் வணக்கம். செந்தூர்க்கு வணக்கம் சேவலுக்கு வணக்கம் முந்தி வரும் வேலுக்கும் மயிலுக்கும் வணக்கம் முருகா உன் வாகனமாம் மாட்டுக்கும் வணக்கம் எல்லா உயிர்களுக்கும் நீ தானே உறவு எல்லையிலா மொழி அதனின் பேர் தானே முருகு சொல்லிலே முடியாத புகழுடையோய் சரணம் சுகமான முத்தி நிலை அருள்வாயே சரணம் ஆனந்த கடலாக அமைந்தாயே சரணம் ஆனந்த வடிவாக திகழ்வாயே சரணம் ஆனந்த மயமான அற்புதனே சரணம் ஆனந்த மயமாக்கி ஆட்கொள்வாய் சரணம் நல்மனை நல்ல மக்கள் செல்வங்கள் நீண்ட ஆயுள் இல்லறச் செழிப்பு பெற்று எதிலுமே வெற்றி கொள்வார் சொல்லுக சுப்ரமண்யன் புஜங்கத்தை நாளும் நாளும்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 16

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 16

ராமர் மிகவும் பராக்கிரமசாலி. உலகில் உள்ள வில்லாளிகளில் தலை சிறந்தவற் போல் காணப்படுகிறார். தெய்வீக அஸ்திரங்களை செலுத்தும் திறமை பெற்றிருக்கிறார். அவரது வில்லில் இருந்து கிளம்பிய அம்புகள் ஐந்து தலை பாம்புகள் போல் ராட்சசர்களை ஓட ஓட துரத்தியது. ராட்சசர்கள் எங்கே ஒளிந்தாலும் தேடிப்போய் அவர்களை கொன்றது என்று ராமர் தனது வில்லில் இருந்து செலுத்திய அம்பின் வேகத்தையும் அபார திறமையையும் விவரித்துச் சொன்னான். அனைத்தையும் கேட்ட ராவணன் அந்த இரண்டு மனித பூச்சிகளை இப்போதே கொன்று விட்டு திரும்புகின்றேன் என்று கர்ஜனையுடன் ராவணன் எழுந்தான். அகம்பனன் ராவணனை தடுத்து நிறுத்தினான்.

ராமரின் பாராக்ரமத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கின்றேன் கேளுங்கள் என்று அகம்பனன் ராவணனிடம் பேச ஆரம்பித்தான். நான் சொல்வதை கேளுங்கள். ராமர் சர்வ வல்லமை படைத்தவராக இருக்கின்றார். இந்த உலகத்தில் உள்ள ராட்சசர்கள் அனைவரும் ஒன்று சேர்த்து ராமரை எதிர்த்து யுத்தம் செய்தாலும் அவரை வெற்றி பெற முடியாது. அவரை கொல்ல எனக்கு தெரிந்த ஓர் உபாயத்தை சொல்கின்றேன். தங்களுக்கு விருப்பம் இருந்தால் செயல் படுத்துங்கள் என்றான் அகம்பனன். உனது உபாயத்தை கூறு என்று ராவணன் அகம்பனனுக்கு கட்டளையிட்டான்.

ராமருடைய மனைவி சீதை இருக்கிறாள். பெண்களில் ரத்தினம் போன்ற பேரழகுடையவள். மூவுலகத்தில் தேடினாலும் அவளின் அழகுக்கு இணையாக யாரையும் பார்க்க முடியாது. அந்த பெரிய காட்டில் ராமரின் பாதுகாப்பில் இருக்கும் சீதையை யாருக்கும் தெரியாமல் வஞ்சகமான உபாயத்தை கையாண்டு கவர்ந்து கொண்டு வந்துவிடுங்கள். மனைவியின் மேல் பேரன்பு வைத்திருக்கும் ராமர் அவளின் பிரிவைத் தாங்காமல் உயிரை விட்டுவிடுவார் என்று சொல்லி முடித்தான். ராவணன் நீண்ட நேரம் யோசித்து அகம்பனனுடைய யோசனை சரியானதாக இருக்கின்றது என்று அத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தான். அடுத்த நாள் காலையில் தனது தேரோட்டியுடன் தான் மட்டும் தனியாக பறக்கும் தேரில் கிளம்பி தாடகையின் புதல்வனான மாரீசனின் ஆசிரமம் சென்று சேர்ந்தான் ராவணன்.

மாரீசன் பல வகையான உபசரணைகள் செய்து ராவணனை வரவேற்று பின்பு பேச ஆரம்பித்தான். ராட்சசர்களின் தலைவரே தங்கள் நாட்டில் அனைவரும் நலமாக இருக்கின்றார்களா நீங்கள் விரைவாக வந்திருப்பதை பார்த்தால் மனம் வருந்தும்படி ஏதோ தங்களுக்கு நடந்திருக்கின்றது என்று எண்ணுகின்றேன். என்ன செய்தி சொல்லுங்கள் என்று மாரீசன் ராவணனிடம் கேட்டான். எனது ராஜ்யத்திற்கு உட்பட்ட காட்டில் உள்ள எனது அழிக்க முடியாத படைகள் அனைத்தையும் தசரதரின் புதல்வன் ராமன் அழித்து எனக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டான். இந்த அவமானம் போக அவனது மனைவி சீதையை கவர்ந்து செல்லவேண்டும் என்று முடிவு செய்து திட்டம் திட்டி இருக்கின்றேன். அதற்கு நீ எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று ராவணன் மாரீசனிடம் சொன்னான்.

நவபாஷாணம்

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவபாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும். எனவே இதனை முறைப்படி புடம் போட்டு கட்டவேண்டும். வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட பாஷாணத்தின் அணுக்களை சேர்ப்பது மற்றும் பிரிப்பதன் மூலம் புதிய மேம்படுத்தப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக்கட்டமைப்பை உருவாக்கி சித்தர்கள் இதனை செய்கின்றார்கள். அதன்படி நவ பாஷாணம் என்பது ஒன்பது வகை கடுமையான விஷங்களைக் கொண்டது. அவை

  1. சாதிலிங்கம்.
  2. மனோசிலை
  3. காந்தம்
  4. காரம்
  5. கந்தகம்
  6. பூரம்
  7. வெள்ளை பாஷாணம்
  8. கௌரி பாஷாணம்
  9. தொட்டி பாஷாணம்

மேற்கண்ட ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதமான தனி வேதியல் இயல்புகளைக் கொண்டதாகும். இந்த ஒன்பது பாஷாணங்களை திரவமாக்கி மீண்டும் திடமாக்க ஒன்பது வகை விறகுகளும் (எரிபொருட்களும்) ஒன்பது தடவை வடிகட்ட ஏதுவாக ஒன்பது வடிகட்டிகளும் கையாளப்பட்டன. சித்தர்கள் பாஷானங்களைக் கட்டும்போது அரைத்து வேகவைத்து எரித்து நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவார்கள். வறட்டிகளைக் கொண்டு எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பிடுவது புடத்தின் வகையாகும். வறட்டியின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெயர் குறிப்பிடப்படும். புடம் ஒன்றுக்கு ஒன்று முதல் ஆயிரம் வறட்டி வரை பயன்படுத்தப்படும். இதற்கு தங்கவாறு பெயர்களும் உள்ளது. அவை

  1. காடைபுடம் 1 வறட்டி
  2. கவுதாரிப் புடம் 3 வறட்டி
  3. குக்குடப் புடம் 8 முதல் 10 வறட்டி வரை
  4. வராக புடம் 50 வறட்டி
  5. யானை புடம் 500 வறட்டி முதல் ஆயிரம் வறட்டி வரை
  6. கன புடம் 700 முதல் 800 வரை
  7. மணல் மறைவுப் புடம் 800 வறட்டி
  8. கோபுடம் 1000 வறட்டி

இது தவிர நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம் தரும் புட வகைகளும் சித்தர்களால் பயன்படுத்தப்பட்டன. அவை

  1. கோபுர புடம் – மணல்
  2. பாணிடப் புடம் – தண்ணீர்
  3. உமிப் புடம் – உமி
  4. தானியப் புடம் -நெல்
  5. சூரியப் புடம் – வெயில்
  6. சந்திரப் புடம் – நிலவொளி
  7. பருவப் புடம் – பௌர்ணமி நிலவு
  8. இருள் புடம் – அமாவாசை இரவு
  9. பனிப்புடம் – பனி
  10. பட்டைப் புடம் – மரத்தூள்
  11. நிழற்புடம் – சூரிய ஒளி படாத அறை

நவபாஷாணம் சிலைகளை உருவாக்கியவர் போகர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர். சர்வ சாத்திரங்களையும் கற்ற போகியாவார். இவர் சித்தத்தை அடக்கி இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து இயற்கையை முற்றிலும் அறிந்து இந்த உலக இயக்கத்தையும், பிரபஞ்சத்தையும், இறைஆற்றலையும், உயிர் தத்துவத்தையும், பிரபஞ்ச ரகசியத்தையும் ஆராய்ந்து அறிந்தவர். இவர் காலாங்கி முனிவரின் சிறந்த மாணவர் ஆவார். இவரது மருத்துவ ஞானம் அளவற்றது. இவருடைய வைத்திய நூல்களில் நிகண்டு, வைத்தியம், துவாத காண்டம், சப்ப காண்டம், வைத்திய சூத்திரம், ஆகியவையும் ஆன்மீகத்தில் ஞான் சூத்திரம், அட்டாங்க யோகம், ஞான சாராம்சம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கது. நவ பாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை நாம் அருந்தினால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும். நவ பாஷாணங்களின் சேர்க்கையில் போகர் மூன்று முருகர் நவ பாஷாண சிலைகள் உருவாக்கினார். அதில் 1. பழனி மலைக்கோவில் 2. கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். 3 வது சிலை கலியுகத்தின் இறுதியில் வெளிப்படும் என்று புராண வரலாறுகளில் உள்ளது.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 15

ராமரின் மேல் தேவர்கள் பூ மாரி பொழிந்தனர். சீதையும் லட்சுமணனும் மலை குகையில் இருந்து திரும்பி வந்தார்கள். பகைவர்களை கொன்று அழித்து முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் நன்மையை செய்த ராமரை பார்த்து மகிழ்ந்த சீதை அவருடைய நெற்றியில் இருந்த வியர்வையை துடைத்து இவ்வளவு பெரிய யுத்தத்தில் ராமருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று ஆனந்தப்பட்டாள். ஒற்றை ஆளாக இருந்து அனைவரையும் அழித்த ராமரை பெருமையுடன் பார்த்த லட்சுமணன் அவரை அணைத்துக்கொண்டான். முனிவர்களும் ரிஷிகளும் ராமருக்கு தங்களது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்கள்.

ராமருடன் நடந்த இந்த யுத்தத்தில் அகம்பனன் என்ற ஒரு ராட்சசன் மட்டும் பெண் உருவத்திற்கு மாறி ராமரின் அம்பிலிருந்து தப்பி நடந்தவற்றை ராவணனிடம் சொல்வதற்கு இலங்கைக்கு சென்றான். அரசவைக்குள் நடுநடுங்கியபடியே சென்ற அவன் ராவணனின் அருகில் சென்று பேச ஆரம்பித்தான். அரசரே தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட காட்டின் அரசனான கரனும் சேனாதிபதி தூஷணன் உட்பட நமது ராட்சச குலத்தவர்கள் அனைவரும் அழிந்து விட்டார்கள். நான் ஒருவன் மட்டும் தப்பி தங்களிடம் இந்த செய்தியைச் சொல்ல வந்திருக்கின்றேன் என்றான். கண்கள் சிவக்க கோபத்தில் பேச ஆரம்பித்தான் ராவணன். என் அழகான காட்டை அழித்தவன் எனக்கு பயந்து இந்த உலகத்தின் எந்த பகுதியிலும் தங்க இடம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருப்பான். அவனை இந்த உலகத்தின் எந்த மூலையில் ஒளிந்திருந்தாலும் அவனை விட்டு வைக்க மாட்டேன். எனக்கு கெடுதலைச் செய்தவன் இந்திரன் குபேரன் யமன் விஷ்ணு என்று யாராக இருந்தாலும் நிம்மதியாக இருக்க முடியாது. நான் யமனுக்கு யமன். சூரியனின் அக்னியையும் எரிப்பேன். நடந்தவற்றை முழுமையாக சொல் என்று கர்ஜனையுடன் கத்திக்கொண்டே அகம்பனனை நோக்கி வந்தான் ராவணன். அருகில் வரும் ராவணனை பார்த்து பயந்த அகம்பன் நடுங்கியபடியே தாங்கள் எனக்கு அபயம் அளித்தால் சொல்கின்றேன் என்றான். அபயம் அளிக்கின்றேன் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் நடந்தவற்றை அப்படியே சொல் என்றான் ராவணன். அகம்பனன் பேச ஆரம்பித்தான்.

தசரதரின் புத்திரர் ராமர். அவர் தனது மனைவியுடனும் தனது சகோதரன் லட்சுமணனுடனும் அக்காட்டில் தவஸ்விகளை போல் வேடம் தரித்து வாழ்ந்து வருகின்றார்கள். ராமர் சிங்கம் போன்ற உடலமைப்பும் காளையைப் போன்ற தோள்களையும் உருண்டு திரண்ட அழகான கைகளையும் ஒப்பில்லாத உடல் பலத்துடன் இருக்கிறார். அவரது சகோதரன் லட்சுமணன் சூர்ப்பனகையின் காதுகளையும் மூக்கையும் வெட்டி விட்டான். சூர்ப்பனகை கரனிடம் தெரிவித்தாள். கரன் உத்தரவின் பேரில் ராமரை அழிக்க தூஷணன் தலைமையில் சென்ற பதினான்காயிரம் ராட்சசர்களையும் கரனையும் கொன்று விட்டார் ராமர். அவரால் அங்கிருந்த நமது குலத்தவர்கள் அனைவரும் அழிந்து விட்டனர் என்றான் அகம்பனன். அகம்பனுடைய பேச்சை கேட்ட ராவணன் இந்த ராமர் என்பவன் தேவேந்திரனோடும் அனைத்து தேவர்களோடும் காட்டிற்குள் வந்து யுத்தம் செய்தானா வேறு யார் யார் ராமனுக்கு இந்த யுத்தத்தில் உதவி செய்தார்கள் அனைவரையும் அழித்து விடுகின்றேன் என்று கர்ஜித்தான் ராவணன். ராமருடைய பேராற்றலை மேலும் சொல்ல ஆரம்பித்தான் அகம்பன்.

தொடரும்………

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 14

ராமர் தனது வில்லில் இருந்து அம்புகளை அனுப்ப ஆரம்பித்தார். ராமரை சுற்றி இருக்கும் பல ஆயிரம் ராட்சசர்களை பார்த்த தேவர்கள் ஒற்றை ஆளாக இருந்து ராமர் எப்படி அனைவரையும் அழிக்க போகிறார் என்று இந்த யுத்தத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராமர் வில்லில் அம்பு பூட்டுவதோ அம்பு வில்லில் இருந்து செல்வதோ மின்னல் வேகத்தில் இருந்தது. சூரியனில் இருந்து அனைத்து பக்கமும் வெளிச்சம் பரவுவதைப் போல ராமர் தன்னை சுற்றி அம்பை அனுப்பிக்கொண்டே இருந்தார். எட்டு திசைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான வீரர்கள் அழிந்தனர். யானைகளும் குதிரைகளும் பூமியில் வீழ்ந்து மடிந்தது. பெரிய உருவத்திற்கு மாறிய பல ராட்சசர்கள் ஆகாயத்தில் பறந்து வந்து ராமரை தாக்க முற்பட்டனர். ராமரின் வில்லில் இருந்து வந்த அம்புகள் அந்த ராட்சசர்களை ஆகாயத்திலேயே அழித்தது. தனது தேர் குதிரைகளை இழந்த தூஷணன் தனது கதையால் ராமரை தாக்க ஓடி வந்தான். ராமர் அனுப்பிய அம்பு அவனது இரு கைகளையும் வெட்டி தள்ளி அவனை அழித்தது. தூஷணன் இறந்ததை பார்த்த ராட்சச படைகள் பயந்து ஓட ஆரம்பித்தனர். அனைவரையும் உற்சாக மூட்டி மீண்டும் அழைத்து வந்தான் கரன்.

ராமரின் அம்பினால் அனைத்து ராட்சசர்களும் அழிந்தனர். ராமர் ருத்திர மூர்த்தியை போல் காணப்பட்டார். இவ்வளவு நாட்கள் சிரித்த முகத்துடன் அன்புடன் இருக்கும் ராமரை பார்த்திருந்த காட்டில் வசிப்பவர்கள் இப்போது ராமரை ருத்ரமூர்த்தியாக பார்க்கும் போது பயந்து நடுங்கினார்கள். அந்த காட்டுப் பகுதி முழுவதும் இறந்த ராட்சசர்களின் உடல்கள் மலை போல் குவிந்து கிடந்தது.

ராமர் கரனின் தேர் குதிரைகளை அழித்து அவனை நிர்மூலமாக்கினார். ஒற்றை ஆளாக நின்று கொண்டிருந்த கரனிடம் ராமர் பேச ஆரம்பித்தார். இக்காட்டில் யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்களையும் ரிஷிகளையும் ஏன் துன்புறுத்தியும் கொன்றும் வந்திருக்கிறாய். உன்னை போன்ற அரக்கர்களை அழிப்பதற்காகவே இக்காட்டிற்கு வந்திருக்கின்றேன். என்னுடைய அம்புகள் உன்னுடன் வந்த உன் ராட்சச குலத்தவர்கள் அனைவரையும் அழித்துவிட்டது. உலகத்தருக்கு துன்பம் விளைவித்து மக்களை கொல்பவன் எவ்வளவு பலசாலியாக இருந்தலும் ஒரு நாள் இறந்து போவான். இவ்வளவு நாள் இந்த பாவ காரியங்களை செய்து கொண்டிருந்த நீயும் இப்போது எனது அம்பினால் அழியப்போகிறாய் என்று தனது அம்பை வில்லில் பூட்டினார். கரன் தனது கதை ஆயுதத்தை ராமரின் மேல் எறிந்தான். ராமரின் அம்பு கரனின் கதையை இரண்டாக பிளந்தது. பெரிய மரத்தை வேரோடு பிய்த்து எறிந்தான் கரன். மரமும் ராமரின் அம்பினால் துண்டாகி தூரத்தில் போய் விழுந்தது. அம்புகள் பலவற்றை கரனின் மேல் எய்தார் ராமர். உடல் முழுவதும் காயமடைந்த கரன் ராமரை தனது கைகளினால் தாக்க ஓடி வந்தான். இனியும் தாமதிக்க வேண்டாம் என்று நினைத்த ராமர் இந்திர பாணத்தை கரனின் மேல் பிரயோகித்தார். அடுத்த நொடி கரனும் வீழ்ந்தான். காட்டில் முனிவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்திய ராட்சசர்களை அனைவரையும் அழித்து விட்டார் ராமர். இனி இக்காட்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்று முனிவர்களும் ரிஷிகளும் மகிழ்ச்சியுடன் ராமரை வணங்கினார்கள்.

நம்பிக்கை

ஒர் ஊரில் ஒரு கூலி தொழிலாளியும் ஒரு செல்வந்தரும் வாழ்ந்து இருந்தனர். கூலி தொழிலாளி தினமும் தன் வீட்டின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தார். செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோஷத்துடனும் மன அமைதியுடனும் இருந்தார். பல தலைமுறைக்கு செல்வம் சேர்த்து வைத்திருந்த செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். ஆனாலும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார். தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ ஏதாவது செய்யலாமே என்றார். விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்து அவரின் நம்பிக்கைக்கு ஏற்ப நீங்களே உங்களுக்கு விருப்பப்பட்டதை செய்யுங்கள். நீங்கள் கீழே சென்று நான் நாரயணனிடமிருந்து வருகிறேன் என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள். அவர் தற்பொழுது நாராயணன் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று கேள்வி கேட்பார். அதற்கு நீங்கள் நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார் என்று பதில் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அப்படியே அந்த தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள் என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதர் முதலில் செல்வந்தர் வீட்டுக்கு சென்றார். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வெளியே வந்த செல்வந்தர் நாரதரிடம் நீங்கள் யார் என்று கேட்டார் நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொன்னார். அதற்கு அந்தச் செல்வந்தர் தற்போது நாராயணன் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று கேட்டார். நாரதர் நாராயணன் ஒர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார் என்றார். அதற்கு அந்த செல்வந்தர் அது எப்படி முடியும் இது என்ன நடக்கிற காரியமா என்று கேட்டு விட்டு இவர் ஏதோ உளருகிறார் என்று எண்ணி மேலும் ஏதும் பேசாமல் வீட்டிற்குள் சென்று விட்டார்.

நாரதர் அடுத்தது அந்த தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே உரையாடல் நடைபெற்றது. இறுதி பதில் அளித்த தொழிலாளி இதில் என்ன விந்தை இருக்கிறது ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர் பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர் அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா நாராயணனால் செய்ய முடியாத செயல் என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்று பதில் சொன்னார். நாரதர் தொழிலாளிக்கு தனது ஆசிகளை அளித்து விட்டு அங்கிருந்து கிளம்பி நாராயணனிடம் வந்து நடந்தத்தை சொன்னார்.

நாராயணன் நாரதரிடம் கடவுள் பக்தி என்பது மணிக்கணக்கில் பூஜை புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன் நீயே சரணம் என்று பற்றுவதே உண்மையான பக்தி. உண்மையான பக்திக்கு ஏற்ப ஆசிகள் சென்று கொண்டே இருக்கிறது அதுவே அந்த ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.