நவகிரகங்களை மனிதன் சுற்றுகிறானோ இல்லையோ நவகிரகங்கள் மனிதனை சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. நவகிரகங்களை ஏன் சுற்றவேண்டும்? என்று யாராவது சிந்தித்திருக்கிறார்களா? நவகிரகங்களை சுற்றினால் நவகிரகங்கள் நம்மை சுற்றுவதை விட்டுவிடுமா என்ன? குடம் குடமாய் பாலை கொட்டினாலும் சந்தனத்தை கொட்டினாலும் 1000 சுற்று சுற்றினாலும் கூட நவகிரகங்கள் தன் கடமையிலிருந்து ஒருபொழுதும் தவற மாட்டார்கள். பின் எதற்கு நவகிரகங்களை சுற்றவேண்டும்? பக்தி நம்பிக்கை நல்லது நடக்க வேண்டும் என்பதெல்லாம் ஒருபுறம். இன்னொரு அறிவு சார்ந்த உண்மை என்னவென்றால் பெரும்பாலும் ஆகம விதிப்படி வடகிழக்கு மூலையில்தான் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும். சில ஆலயங்களில் மாறாக இருக்கலாம். அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் வடகிழக்கிலே நவகிரகங்களை எப்படி வைக்கவேண்டும்? என்றால் அந்த வடகிழக்கு பகுதி ஒட்டு மொத்த ஆலயத்தின் பகுதியைவிட சற்று தாழ்வாக இருக்க வேண்டும். முன்னும் பின்னுமாக இல்லாமல் முறையாக நேர்கிழக்காக சுவாமி இருக்குமாறு கட்டப்பட்ட ஆலயத்திலே சற்றும் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு வடமேற்கு வடகிழக்கு தென்மேற்கு தென்கிழக்கு என்று எந்த திசையும் சிறிதளவு கூட கோணங்கள் மாறாமல் கட்டப்பட்ட ஆலயத்திலே வடகிழக்கிலே தாழ்வான பகுதியிலே அதுபோல் நவகிரகங்களை முறையாக பிரதிஷ்டை செய்து மந்திர உச்சாடனம் செய்து கலச விழா செய்தபிறகு அங்கு சென்று மனிதன் குறைந்த பட்சம் ஒன்பது அல்லது ஒன்பதின் மடங்கு என்று எத்தனை சுற்று வேண்டுமானாலும் சுற்றலாம்.
கேள்வி: ஸ்ரீராம் என்பதற்கும் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம் என்று சொல்வதற்கும் உள்ள அதிர்வலைகள் வேறுபாடு என்ன?
எப்படி கூறுகிறோம் என்பதை விட என்ன சிந்தனையில் கூறுகிறோம் என்பதில்தான் கவனம் வேண்டும். தாய் அம்மா அன்னை என்று அழைத்தால் வார்த்தைகள் மாறினாலும் பொருள் ஒன்றுதான். உள்ளார்ந்த ஆத்மார்த்தமான அன்போடு அழைத்தால் அந்த தாய்க்கு திருப்தியாக இருக்கிறது. என் குழந்தை இப்படியெல்லாம் என்னை அழைக்கிறதே? என்று. அதைப்போல இறைவனை என்ன வார்த்தை வேண்டுமானாலும் (உச்சரிப்பில் பிழைகூட இருக்கலாம்) சொல்லி வணங்கலாம். உள்ளார்ந்த அன்பிலே பிழையில்லாமல் இருந்தால் போதும். அதைதான் இறைவன் எதிர்பார்க்கிறார்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் விருத்த குமார பாலாரன படலம் நூலின் இருபத்தி மூன்றாதாவது படலமாகும்.
விக்கிரம பாண்டியனின் ஆட்சியில் மதுரையில் விருபாக்கன் சுபவிரதை என்ற அந்தண தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் போற்றி சிவனை வழிபாடு செய்து வந்தார்கள். அவ்விருவருக்கும் குழந்தைப் பேறு நீண்ட நாட்கள் கிடைக்கவில்லை. ஒரு குழந்தை வேண்டி சிவனைக் குறித்துக் கடும் நோன்பு இருந்தார்கள். சொக்கநாதரின் திருவருளால் பெண் குழந்தை அவர்களுக்கு பிறந்தது. அவளுக்கு கௌரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். குழந்தை கௌரி சிறுவயதிலேயே சொக்கநாதரிடமும் மீனாட்சி அம்மனிடமும் அன்பு பூண்டு இறைபக்தி மிக்கவளாய் விளங்கினாள். கௌரி தனது ஐந்தாவது வயதில் தனது தந்தையிடம் அப்பா பிறவித் துன்பங்களைத் தீர்க்கும் அறவழி எது என்று கேட்டாள். அதற்கு விருபாக்கன் பராசக்தியின் மந்திரம் வீடு பேற்றை அளிக்கும் என்று பராசக்தியின் மந்திரத்தை தனது மகளுக்கு உபதேசித்தார். கௌரியும் இடைவிடாது பராசக்தியின் மந்திரத்தை உச்சரித்து வந்தாள். அவளுக்கு மணப்பருவம் எட்டியது.
கௌரிக்கு விருபாக்கன் திருமணம் செய்ய முடிவு செய்து அவளுக்கு ஏற்ற வரனைத் தேடத் துவங்கினார். அப்பொழுது ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு வைணவ சமயத்தைச் சார்ந்த இளைஞன் ஒருவன் பிச்சை கேட்டு வந்தான். அவனைப் பார்த்ததும் விருபாக்கன் இவனே தனது மகளுக்கு ஏற்ற வரன் என்று முடிவு செய்து கௌரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுத்தார் விருபாக்கன். வீடுபேற்றினை விருப்பிய கௌரி தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு ஏற்ப தந்தையின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டாள். இதனைக் கண்ட விருபாக்கனின் மனைவியும் அவனுடைய சுற்றத்தாரும் இவன் யார்? ஊரும் பேரும் தெரியாத இவனுக்கு இப்பெண்ணை திருமணம் செய்து விட்டாரே. விதியின் வழியில் மதி செல்லும் என்பது இதுதானோ என்று எண்ணிக் கலங்கினர். பின் கௌரியை அவளது கணவனுடன் சீர்கொடுத்து அனுப்பி வைத்தனர். வைணவ இளைஞன் தன் மனைவியோடு தன் இல்லத்தை அடைந்தான். சிவநெறியைப் பின்பற்றி வாழும் கௌரியை அவளுடைய மாமனாருக்கும் மாமியாருக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் அவளை பெரிதும் துன்பப்படுத்தினர். ஒருநாள் கௌரியின் வீட்டார் உறவினர் திருமணத்திற்கு செல்வதற்காக கௌரியை வீட்டிற்கு வெளியே திண்ணையில் தனியாக விட்டுவிட்டு வீட்டினைப் பூட்டிவிட்டு சென்று விட்டனர்.
கௌரி வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி தனியாக இருந்தாள். அப்போது ஒரு சிவனடியாரையும் காணவில்லையே சிவனடியாரை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாள். அப்பொழுது சொக்கநாதர் முதிய சிவனடியாராக கௌரியின் முன் தோன்றினார். பல நாட்கள் உணவின்றி வருந்துபவர் போல் காணப்பட்டார். கௌரியும் அவரிடம் மிக்க அன்பு கொண்டு அவரை வரவேற்றாள். சிவனடியார் தான் பசியோடு வந்திருப்பதாக கௌரியிடம் தெரிவித்தார். அதனைக் கேட்ட கௌரி வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டார்கள் நான் என்ன செய்வேன்? உங்களுக்கு ஒன்றும் சாப்பிட கொடுக்க முடியாமல் இருக்கிறேன் என்று கூறினாள். அதற்கு சிவனடியார் நீ உன் கையினை கதவின் பூட்டில் வை. கதவு திறந்து கொள்ளும் என்று கூறினார். அதனைக் கேட்ட கௌரி கதவின் பூட்டில் கைவைத்து கதவினைத் திறந்து உள்ளே சென்று சமைக்கத் தொடங்கினாள்.
சிறிது நேரத்தில் சமையலை முடித்து சிவனடியாரிடம் வந்து ஐயா திருவமுது செய்ய வாருங்கள் என்று கூறினாள். கௌரியின் வேண்டுகோளை ஏற்ற முதிய சினவடியாரும் கௌரி அளித்த உணவினை தேவாமிர்தம் போல் உண்டு மகிழ்ந்தார். பின் முதிய சிவனடியார் இளமையான காளைப் பருவத்தினரைப் போல் மாறி கௌரி முன் காட்சி அளித்தார். அதனைக் கண்ட கௌரி திகைத்து நின்றாள். அப்போது திருமணத்திற்கு சென்ற கௌரியின் வீட்டார் வந்தனர். எது நடந்தாலும் அது இறைவன் செயலே என்று உறுதியுடன் பிரார்த்தனை செய்தாள் கௌரி. உடனே இறைவனார் சிறுகுழந்தையாக மாறி தரையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் அழுது கொண்டு கிடந்தார். குழந்தையின் நெற்றியில் திருநீறு பூசப்பட்டிருந்தது. வீட்டிற்குள் வந்த கௌரியின் மாமியார் இக்குழந்தை யார்? என்று கௌரியிடம் கேட்டாள். அதற்கு கௌரி தோழி தன்குழந்தையை சிறிது நேரம் பார்த்துக் கொள் என்று கூறிச் சென்றான் என இறைவனின் அருளினால் கூறினாள். இதனைக் கேட்ட கௌரியின் மாமனும் மாமியும் கோபம் கொண்டு சிவபெருமானிடம் அன்பு பூண்ட நீங்கள் இருவரும் வீட்டை விட்டுச் செல்லுங்கள் என்று கூறி வீட்டை விட்டு விரட்டி விட்டனர். வீட்டைவிட்டு குழந்தையுடன் வெளியேறிய கௌரி குழந்தையின் திருமுகத்தைப் பார்த்தவாறு சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் மனதில் வைத்து பராசக்தியின் திருமந்திரத்தை உச்சரித்தாள். உடனே குழந்தை மறைந்தது. சிவபெருமான் அவளுக்கு இடப வாகனத்தில் காட்சியளித்தார். அக்காட்சியைக் கண்ட கௌரி சிவானந்த கடலில் ஆழ்ந்தாள். சிவபெருமான் கௌரிக்கு வீடுபேற்றினை வழங்கினார்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
கௌரியை அவளது புகுந்த வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு துன்பத்தை கொடுத்த போதிலும் அவள் இறைவன் மீது செலுத்திய பக்தியும் அனைத்தும் நன்மைக்கே என்ற கௌரியின் எண்ணமும் வீடுபேற்றினை அடைய வேண்டும் என்ற அவளின் மன உறுதியும் நம்பிக்கையும் அவளுக்கு வீடுபேற்றை கிடைக்கச் செய்தது. அனைத்தும் இறைவன் செயல் என்ற நம்பிக்கையுடன் கடவுளை சரணடைந்தவர்களை இறைவன் கைவிட மாட்டார். என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் யானை எய்த படலம் நூலின் இருபத்தியிரண்டாவது படலமாகும்.
அபிடேகப்பாண்டியனின் மகனான விக்கிரமபாண்டியன் பாண்டிய நாட்டினை நல்வழியில் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய ஆட்சியில் சைவம் செழித்தோங்கி இருந்தது. அவன் சொக்கநாதரின் சந்நிதிக்கு வடக்கே சித்தரின் திருவுருவத்தை நிறுத்தி நள்தோறும் வழிபட்டு வந்தான். இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் சொக்கநாதருக்கு அருகே எல்லாம் வல்ல சித்தரை நாம் தரிசிக்கலாம்.
விக்கிரமபாண்டியனிடம் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ அரசன் ஒருவன் நீண்ட நாள் பகைமை கொண்டிருந்தான். அவனுக்குப் பாண்டியன் பேரில் ஏகப்பட்ட பொறாமை. அவனை எப்படி வெல்வது என்பதே அவன் மூளையைக் குழப்பியது. சமண சமயத்தை தழுவிய அவ்வரசன் விக்ரமபாண்டியனை நேரடியாக போரிட்டு வெல்ல இயலாததால் விக்கிரமபாண்டியனை சூழ்ச்சியால் வெல்ல எண்ணினான். அதன்படி சக்கியம் கோவர்த்தனம் கிரௌஞ்சம் திரிகூடம் அஞ்சனம் விந்தியம் ஹேமகூடம் காஞ்சி குஞ்சரம் என்ற எட்டு மலைகளிலுமுள்ள எட்டாயிரம் சமணர்களுக்கும் தன்னை வந்து சந்திக்குமாறு தனித்தனியாக கடிதம் அனுப்பினார். அவர்கள் காஞ்சிபுரம் வந்து மன்னன் தலையை மயில் தோகையால் தொட்டு வாழ்த்தினர். பாண்டிய நாட்டை வெற்றி பெற விரும்புகிறேன். விக்கிரம பாண்டியனைப் போரில் வெல்லமுடியாது. அபிசார வேள்வியை (மரண வேள்வி) செய்து விக்கிரமனை வீழ்த்த வேண்டும். அவனை அழித்தால் உங்களுக்கு பாதி இராஜ்ஜியம் தருகிறேன் எனவும் ஆசை காட்டினான். சோழனின் உடன்படிக்கு ஒத்துக் கொண்ட சமணர்கள் பாலியாற்றங்கரையில் பெரிய யாக குண்டத்தை அமைத்தனர். அதில் எட்டி உள்ளிட்ட தீய மரத்தின் விறகுகளையும் நச்சு உயிரிகளின் உடம்பு மிளகுப்பொடி கலந்த எண்ணெயையும் ஊற்றி அபிசார வேள்வியைத் தொடங்கினர். அவ்வேள்வித் தீயினால் உண்டான நச்சானது அருகில் இருந்த காடுகள் சோலைகள் நந்தவனம் ஆகியவற்றை கருக்கி விட்டன.
சமணர்களின் அபிசார வேள்வித் தீயிலிருந்து ஒரு கொடிய யானை ஒன்று தோன்றியது. சமணர்கள் கொடிய யானையிடம் நீ விரைந்து சென்று விக்கிரம பாண்டியனையும் மதுரையையும் அழித்து விட்டு வா என்று கட்டளையிட்டனர். யானையின் உடலானது பெருத்தும் அதனுடைய கால்கள் மண்ணில் பதிந்தும் உடலானது விண்ணைத் தொட்டும் இருந்தது. அது தன்னுடைய பெரிய காதுகளினால் சூறாவளியை உருவாக்கியும் கண்களில் நெருப்புப் பொறி சிந்தவும் உலகத்தினை உலுக்கும் இடிபோல் பிளிறிக் கொண்டு மதுரையை நோக்கிப் புறப்பட்டது. சமணர்களும் சோழனுடைய படைகளும் யானையைப் பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் மதுரையின் எல்லையை அடைந்த கொடிய யானை அங்கிருந்த காடுகள் வயல் வெளிகள் உயிரினங்கள் உள்ளிட்ட கண்ணில் பட்டவற்றை எல்லாம் அடித்து நாசமாக்கியது. யானையின் செயலை மதுரை மக்கள் விக்கிர பாண்டியனுக்குத் தெரிவித்தனர். கொடிய யானையின் செயல்களை அறிந்த விக்கிரம பாண்டியன் சொக்கநாதரைத் தவிர்த்து இவ்வுலகத்தில் இருந்து நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்கள். ஆதலால் வாருங்கள் நாம் அனைவரும் சென்று அவரை வழிபாடு செய்வோம் என்று கூறி மதுரை மக்களுடன் சொக்கநாதரை தரிசிக்கச் சென்றான்.
சொக்கநாதரின் சந்நிதியை அடைந்த விக்கிரபாண்டியன் கொடிய யானை மதுரையின் எல்லையில் நின்று கண்ணில் பட்டவற்றை நாசம் செய்தவாறே மதுரையை நோக்கி வருகிறது. இறைவா எங்களை இத்துன்பத்தில் இருந்து காப்பாற்றுங்கள் என்று மனமுருகி வழிபட்டான். அப்போது வானத்தில் இருந்து பாண்டியனே கவலைப்பட வேண்டாம். யாம் வேடுவர் வேடம் பூண்டு வில் ஏந்திய சேவகனாய் மதுரையை அழிக்க வந்த கொடிய யானையை அழிப்போம். நீ அதற்கு முன்பு மதுரைக்கு கிழக்கே ஓர் அட்டாலை மண்டபத்தை உண்டாக்கு என்ற திருவாக்கு கேட்டது. இறைவனின் திருவாக்கினைக் கேட்ட விக்கிரமபாண்டியன் மனதில் மகிழ்ச்சி கொண்டு மதுரையின் கீழ்திசை நோக்கி ஓடினான். கற்களையும் சாந்தினையும் கொண்டு பதினாறு கால் தூண்களுடன் கூடிய பெரிய அட்டாலை மண்டபத்தை உண்டாக்கினான். அதன் மேல் இரத்தினத்தினால் இழைத்த தங்க பீடத்தை நிறுவினான். பீடத்தின் மேல் சொக்கநாதர் சிவப்பு ஆடையைக் கட்டிக் கொண்டு தலையில் மயில் தோகை அணிந்து அம்புக்கூட்டினை முகிலே கட்டி பச்சை நிற மேனியராய் தோன்றினார். சிறிது நேரத்தில் கொடிய யானையானது அவ்விடத்திற்கு வந்தது. தமது வில்லை எடுத்து நாணினைப் பூட்டி வளைத்தார். பின் வில்லில் நரசிங்கக் கணையை வைத்து நாணினை இழுத்து விட்டார். அக்கணையானது யானையின் மத்தகத்தைக் கிழித்தது. கொடிய யானை நரசிங்க கணையின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. யானை மடிந்ததைக் கண்ட சமணர்கள் மிகுந்த மனவருத்தம் கொண்டனர்.
இறைவனின் திருக்கையால் யானை மடிந்ததைக் கண்ட விக்கிரமபாண்டியன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். யானையின் பின்னால் வந்த சமணர்களையும் சோழனின் படைகளையும் பாண்டியனின் படைகள் அடித்து துரத்தினர். வேடுவ வடிவம் கொண்டு வந்த சொக்கநாதரின் திருவடிகளில் வீழ்ந்த விக்கிரமபாண்டியன் எங்களைக் காத்த இறைவரே தாங்கள் இத்திருக்கோலத்திலேயே இங்கேயே தங்கி இருக்க வேண்டும் என்று விண்ணபித்தான். இறைவனாரும் அவனுடைய வேண்டுகோளை ஏற்று அருளினார். மேலும் புத்திரப்பேறு கிடைக்கவும் அருளினார். சொக்கநாதரின் அருளால் விக்கிரமபாண்டியன் இராஜசேகரன் என்னும் புதல்வனைப் பெற்று பாண்டிய நாட்டில் நல்லாட்சி நடத்தினான். மதுரையை அழிக்க வந்த யானையானது சொக்கநாதரின் பாணம் பட்டு தரையில் வீழ்ந்த இடத்தில் மலையாக மாறியது. இதுவே யானை மலை ஆகும். இது பார்ப்பதற்கு யானை படுத்திருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். இது மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பார்த்தாலே தெரியும். சொக்கநாநர் யானையின் மீது விடுத்த நரசிங்கக்கணையானது உக்கிர நரசிங்க மூர்த்தியாக மலையின் அடிவாரத்தில் தோன்றினார். இந்த நரசிங்கமூர்த்தியை உரோமச முனிவர் வழிபாடு நடத்தி தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். பிரகலாதனும் இவ்விடத்திற்கு வந்து தவம் செய்து சித்தி பெற்றான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
மதுரையில் இருக்கும் நரசிங்க மூர்த்தி கோயிலை உலக நன்மைக்காக கொடுத்ததும் யானை மலை உருவாகிய விதமும் வஞ்சகர்களின் சூழ்ச்சி இறுதியில் இறைவனின் கருணையால் வீழ்த்தப்படும் என்பதேயும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: நாங்கள் எங்கள் பெற்றோருக்கு செய்யும் கடமையைப் போல் எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு செய்வதில்லையே? இதற்கு காரணம் எங்கள் வளர்ப்பின் குறையா? அல்லது எங்கள் பாவமா?
இறைவனின் கருணையால் யாங்கள் கூறவருவது யாதென்றால் ஒரு மனிதனுக்கு நடக்கக் கூடிய துன்பமோ அல்லது அவன் பார்வையில் இன்பமோ அனைத்தும் கர்ம வினைகளின் எதிரொலிதான். அது ஒருபுறமிருக்கட்டும். எம் வழியில் வரவேண்டிய மனிதன் மனதிலே உறுதியாக தெளிவாக ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். நல்லதை எல்லோருக்கும் எப்பொழுதும் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும். தாய் தந்தையருக்கு செய்ய வேண்டிய கடமைகளை கடுகளவும் தவறாமல் செய்ய வேண்டும். உற்றாருக்கும் உடன் பிறந்தாருக்கும் நட்பு கொண்டோருக்கும் செய்ய வேண்டும். ஆனால் இதை பிறர் பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கக் கூடாது. பிறர் நமக்கு அதைப் போல செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர் பார்த்து செய்யும் பொழுது மலையளவு புண்ணியம் கடுகளவாக மாறிவிடுகிறது. மற்றவர்கள் செய்யவில்லையே? என ஆதங்கம் வரலாம். ஆனால் கட்டாயம் இறைவன் கைவிட மாட்டார் என்ற சிந்தனையை வளர்த்துக் கொண்டால் எதிர்பார்ப்பு குறைந்துவிடும். பிள்ளைகளுக்கு நல்ல விஷயத்தை சொல்லித் தரலாம். நடந்து கொண்டும் காட்டலாம். ஆனால் அந்த பிள்ளைகள் அதனை கட்டாயம் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்த்தால் சமயத்தில் ஏமாற்றமாகப் போகும். பிள்ளைகள் நல்லவற்றை பின்பற்ற வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்துக் கொண்டால் போதுமானது.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கல் யானைக்கு கரும்பு தந்த படலம் நூலின் இருபத்திவொன்றாதாவது படலமாகும்.
சிவபெருமானின் அருளைப் பெற்று இவ்வுலக ஆசையைத் துறந்தவர்கள் யாரிடம் ஏதேனும் பொருட்களை விரும்பி அவர்களை நாடி செல்ல மாட்டார்கள் ஆகவே அந்த சித்தர் என்னை நாடிவர எந்த ஒரு காரணமும் இருக்கவில்லை. ஆகையால் நானே அவரைப் பார்க்க வருகிறேன் என்று சொல்லி சொக்கநாதரை வழிபட வேண்டி மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றான். அரசனின் வருகையை அறிந்த சித்தர் அவர் செல்லும் வழியாகிய கோவிலின் வடமேற்கு திசையில் சென்று அமர்ந்திருந்தார். அபிடேகபாண்டியன் சொக்கநாதரை வழிபட்டு கோவிலை வலம் வந்த போது பாண்டியனின் மெய்காவலன் முன்னதாகச் சென்று சித்தரிடம் அரசர் வரும் நேரம் ஆகையால் நீங்கள் இந்த இடத்தை விட்டுச் செல்லுங்கள் என்று கூறினான். அவர் அசையாமல் அமர்ந்திருந்தார். அங்கு வந்த அபிடேகபாண்டியன் சித்தரிடம் சித்தரே தாங்கள் யார்? தங்களது ஊரும் நாடும் எது? நீங்கள் எதனை எதிர்பார்த்து இங்கு வந்து உங்களின் சித்து வேலைகளை மதுரை மக்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? என்னால் உங்களுக்கு ஆகவேண்டியது ஏதும் உள்ளதா? என்று கேட்டான்.
சித்தர் சிரித்துக் கொண்டே அப்பா எல்லா நாட்டிலும் எல்லா ஊரிலும் நாம் திரிவோம். நான் தற்போது காசியை சொந்த ஊராகக் கொண்டுள்ளேன். எதிலும் பற்று இல்லாமல் பிச்சை எடுத்து வாழும் அடியவர்களே என்னுடைய உறவினர்கள். நாம் எந்நாளும் வித்தைகள் செய்கின்ற சித்தராவோம். தில்லைவனம் உள்ளிட்ட சிவதலங்களை வணங்க வந்தோம். இம்மையில் வளமான வாழ்கையையும் மறுமையில் வீடுபேற்றினை அளிக்கும் மதுரையம்பதியில் தற்போது தங்கியுள்ளேன். உன்நாட்டு மக்கள் என்னிடம் என்ன கேட்கிறார்களோ அதை தருவது போல் உனக்கும் நீ வேண்டியதைக் கொடுக்கிறேன். அறுபத்திநான்கு கலைகளிலும் நாம் நன்கு தேர்ச்சியுடையோம். விண்ணுலகத்தில் உள்ளவற்றை மண்ணுலகத்திற்கு கொண்டு வரும் ஆற்றலை உடையவன். பாண்டியனே உன்னிடத்தில் நாம் பெறத்தக்கது ஒன்றும் இல்லை என்று கூறி புன்னகைத்தார்.
சித்தரின் வார்த்தைகளைக் கேட்ட அபிடேகபாண்டியன் அதிர்ச்சி அடைந்து இவருடைய செருக்கு பெருமிதம் இறுமாப்பு உள்ளது போல் இருக்கிறது. ஆகவே இவரை கண்டிப்பாக சோதித்து அறிய வேண்டும் என்று எண்ணினான். அப்போது அங்கே ஒரு உழவன் செங்கரும்பினைக் கொண்டு வந்து அரசனை வணங்கினான். அபிடேகபாண்டியன் அக்கரும்பினைப் பெற்றுக் கொண்டு இந்த உலகத்தில் உங்களால் இயலாதது ஒன்றும் இல்லை என்று சொன்னீர்கள். இங்கு நிற்கும் இந்த கல்யானைக்கு இந்த கரும்பினைக் கொடுத்து அதனை சாப்பிடச் செய்தால் வல்லமை பெற்ற சித்தர் நீங்களே என்றும் இங்கு குடிகொண்டிருக்கும் சொக்கநாதரும் நீங்களே என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன் நீங்கள் விரும்பிதை அளிப்பேன் என்று கூறினான்.
சித்தர் சிரித்துக் கொண்டே பாண்டியனே எமக்கு உன்னால் வரும் பயன் ஒன்றும் இல்லை. இருப்பினும் நீ கூறியபடி இந்த கல்யானை இப்பொழுதே இக்கருப்பினை கடித்து உண்பதைப் பார் என்று கூறி கல்யானையைப் பார்த்தார். சித்தரின் கண் அசைவினால் கல்யானை உயிர் பெற்று தன்னுடைய கண்களை உருட்டியது. வாயினைத் திறந்து கோவில் அதிரும்படி பிளிறியது. அபிடேகபாண்டியனின் கையிலிருந்த கரும்பினைப் பிடுங்கி கரும்புச்சாறு ஒழுகுமாறு கரும்பினை மென்று தின்றது. பின்னர் சித்தர் கல்யானையை மீண்டும் பார்த்தார். உடனே கல்யானை தன்னுடைய துதிக்கையால் பாண்டியன் அணிந்திருந்த முத்து மாலையை பிடுங்கியது. இதனைக் கண்ட மெய்காவலர்கள் யானை அடிக்க கம்பினை உயர்த்தினர். சித்தர் கோபம் கொண்டு மெய்க் காவலர்களைப் பார்த்தார். அதற்குள் கல்யானை முத்துமாலையை விழுங்கி விட்டது. இதனைக் கண்ட பாண்டியன் மிக்க கோபம் கொண்டான். உடனே மெய்க் காவலர்கள் சித்தரை அடிக்க நெருங்கினர். உடனே சித்தர் புன்னகையுடன் தன் கையை அங்கேயே நில்லுங்கள் என்பது போல் அவர்கள் முன் தன் கையை நீட்டினார். உடனே வீரர்கள் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் அப்படியே அசைவின்றி நின்றனர். இதனைக் கண்ட பாண்டியனுக்கு கோபம் மாறி பயம் உண்டாகியது. சித்தரின் காலில் விழுந்து வணங்கி அடியேனின் பிழையைப் பொறுத்தருளுங்கள் என்று கூறினான். அதற்கு சித்தர் பாண்டியனே உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கேட்டான். அதற்கு அபிடேகபாண்டியன் புத்திரப் பேறு அருளுங்கள் என்று வேண்டினான். சித்தரும் அவ்வாறே ஆகட்டும் என்று அருள்புரிந்து கல்யானையின் மீது தன்னுடைய கடைக்கண் பார்வையைச் செலுத்தினார். உடனே யானை தனது துதிக்கையை நீட்டி பாண்டியனின் முத்துமாலையை திருப்பிக் கொடுத்தது.
பாண்டியனும் அதனை வாங்கி அணிந்து கொண்டான். அப்போது சித்தர் மறைந்து அருளினார். யானையும் மீண்டும் கல்யானையாகி அசைவற்று நின்றது. இறைவனின் திருவிளையாடலை எண்ணிய அபிடேகபாண்டியன் மீண்டும் சொக்கநாதரை வணங்கி அரண்மனை திரும்பினான். சித்தரின் திருவருளால் அபிடேகபாண்டியனுக்கு விக்ரமன் என்ற புதல்வன் பிறந்தான். விக்ரமன் வளர்ந்து பெரியவனானதும் அபிடேகபாண்டியன் விக்ரமனுக்கு அரசாட்சியை அளித்து இறைவனின் திருவடியை அடைந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
இறைவனை தவறாக எண்ணி சோதித்தாலும் இறைவன் இறுதியில் தன் பக்கதர்களைக் காப்பான் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் எல்லாம் வல்ல சித்தரான படலம் நூலின் இருபதாவது படலமாகும்.
வருணன் ஏவிய மேகங்களைத் தடுத்து மதுரையை நான் மாடக்கூடலாக்கிய இறைவனார் அபிடேகப்பாண்டியனுக்கு வீடுபேற்றினை அளிக்க திருஉள்ளம் கொண்டார். இதனால் அவர் சித்தம் வடிவம் தாங்கி மதுரையில் தோன்றினார். அவர் ஜடாமுடி காதுகளில் வெள்ளிக் குண்டலங்கள் ஸ்படிகம் ருத்ராட்சமாலைகள் அணிந்த மார்புடன் உடலெங்கும் திருநீறு கையில் தங்கப்பிரம்பு மழு என்னும் ஆயுதம் புலித்தோலாகிய கோவணம் ஆகியவற்றை அணிந்து இருந்தார். முகத்தில் யாவரையும் மயக்கும் புன்முறுவலும் கொண்டு திருக்கோவிலில் வீற்றிருந்தார். அவர் அவ்வப்போது மதுரையின் கடைவீதிகளிலும் நாற்சந்தி கூடும் இடங்களிலும் வீதியிலும் மாளிகைகளின் வாயிலிலும் திண்ணைகளிலும் தோன்றி பல சித்து வேலைகளை செய்தருளினார். மதுரை மக்கள் அவரின் சித்து வேலைகளைக் காண்பதற்காக அவர் இருக்கும் இடத்தில் கூட்டமாகத் திரண்டனர். அவர் ஓரிடத்தில் சித்து வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போதே திடீரென அந்த இடத்தில் இருந்து மறைந்து விடுவார். மக்கள் அவரைத் தேடிக் கொண்டிருக்கும் போதே வேறு ஒரு இடத்திற்குச் சென்று ஏதாவது செய்து கொண்டிருப்பார். மக்கள் சித்தர் இருக்கும் இடத்திற்கு ஓடி சித்தரின் சித்து வேலைகளைக் காண முயல்வர். சித்தரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை முதியவராக்குவார். முதியவர்களை இளைஞர்களாக்குவார். ஆண்களைப் பெண்களாக மாற்றுவார். பெண்களை ஆண்களாக்குவார். பிறவியிலேயே பார்வையற்றவர் காது கேளாதோர் பேச முடியாதோர் ஆகியோர்களை பார்க்க கேட்க பேச வைத்து அதிசயம் செய்தார். ஊனமுற்றவர்களை குணமாக்கினார். ஏழைகளை பணக்காராக்கியும் பணக்காரர்களை ஏழையாக்கியும் காட்டினார். கடல் நீரை நன்னீராக்கியும் நன்னீரை உப்பு நீராக்கியும் அதிசயங்கள் செய்து காட்டினார். கசப்பு சுவையினை உடைய எட்டி மரத்தில் இனிப்புச் சுவையுடைய பழங்களை உண்டாக்கினார். திடீரென வைகையில் வெள்ளத்தைப் பெருக்கச் செய்தும் பின் அவ்வெள்ளத்தை வற்றச் செய்தும் காட்டினார். பட்டமரத்தில் இலையையும் பூவையும் உண்டாக்கி பசுமையாக்கினார். இவ்வாறாக சித்தர் பல சித்து வேலைகளைச் செய்து மக்களின் மனதினைக் கொள்ளை அடித்தார்.
சித்தரின் சித்து வேலைகளால் மதுரை மக்கள் தன்னிலை மறந்து தங்களின் வேலைகளையும் மறந்து கூட்டம் கூட்டமாக சித்தரிடமே இருந்தனர். சித்தரின் சித்து விளையாடல்களையும் மதுரை மக்கள் மனம் மயங்கிய நிலையினையும் கேட்ட அபிடேகப்பாண்டியன் தனது அமைச்சர்களை அழைத்தான். அமைச்சர்களிடம் மதுரை மாநகருக்கு வந்து சித்து வேலைகளைச் செய்யும் சித்தரைப் பற்றி கேள்விப்பட்டீர்களா? மதுரை மக்கள் எப்போதும் அவரைச் சுற்றியே நின்று கொண்டிருக்கிறார்களாமே? நீங்கள் விரைந்து சென்று அவரை அரண்மனைக்கு அழைத்து என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான். அமைச்சர்களும் சித்தர் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றனர். சித்தரின் சித்து விளையாட்டுகளில் மெய் மறந்து நின்றனர். சிறிது நேரத்தில் சுயநினைவு திரும்பியவர்களாய் சித்தரை அணுகி தங்களின் திருவிளையாடல்களை கேட்டறிந்த எங்கள் மன்னர் தங்களை அரண்மனைக்கு அழைத்து வரச் சொன்னார் என்று கூறினர். அதற்கு சித்தர் உங்களின் மன்னவனால் எனக்கு ஆக வேண்டிய காரியம் ஒன்றுமில்லை. உங்கள் மன்னவனுக்கு என்னால் ஆகவேண்டியது ஏதாவது இருந்தால் அவரை வந்து என்னைக் பார்க்க சொல்லுங்கள் என்று கூறினார். சித்தரின் பதிலைக் கேட்ட அமைச்சர்கள் வருத்தத்துடன் அரண்மனைக்குத் திரும்பினர். அபிடேகப்பாண்டியனிடம் சித்தர் வரமறுத்து அவர் கூறிய காரணத்தையும் கூறினர். அபிடேகப்பாண்டியனும் முதல்வனாகிய சிவபெருமானின் திருவருளைப் பெற்ற சித்தர்கள் இந்திரன் திருமால் பிரம்மா முதலிய தேவர்களையே மதிக்க மாட்டர்கள். இந்த நாட்டை ஆளும் மன்னரையா மதிப்பர்கள் என்று கூறினான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
இறைவன் தன்னை அடைய தகுதி பெற்று தன்னை சரணடைந்த அடியவர்களுக்கு வீடுபேறினை அளிக்க எண்ணினால் தானே உடல் வடிவம் எடுத்து வருவதையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இறைவனை உணர்ந்தவர்களையும் இறைவனை சரணடைந்தவர்களையும் கட்டாயப்படுத்த முடியாது என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: இறைவன் பெரியவரா? இல்லை நாங்கள் செய்யும் தர்மம் பெரியதா? ஏனென்றால் திருமந்திரத்தில் திருமூலர் கூறும்போது இறை காப்பாற்றா விட்டாலும் தர்மம் காப்பாற்றும் என்று சொல்லியிருக்கிறார்:
தர்மம் செய்யக் கூடிய சிந்தனையை மனிதனுக்கு தரக் கூடிய இறைவன் பெரியவர்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் நான்மாடக்கூடல் ஆன படலம் நூலின் பத்தொன்பதாவது படலமாகும்.
சொக்கநாதரை சோதிக்க எண்ணிய வருணன் மதுரையின் மீது கடலினை ஏவி அழிக்க நினைத்தான். மதுரை மக்களின் வேண்டுதலால் இறைவனார் தன் சடையில் சூடியிருந்த மேகங்களை விடுத்து வருணன் விட்ட கடலை வற்றச் செய்து மதுரையைக் காத்தார். இதனைக் கண்டதும் கடல்களின் அரசனான வருணன் இது சொக்கநாதரின் திருவிளையாடல் என்று உணராமல் அதிகம் கோபம் கொண்டான். வருணன் தன் கட்டுப்பாட்டில் உள்ள ஏழு மேகங்களை அழைத்து நீங்கள் மதுரையின் மீது அதிகமான இடி மின்னலுடன் கூடிய மழையினை பொழிந்து மதுரையை அழியுங்கள் என்று கட்டளையிட்டான். தங்கள் அரசனின் கட்டளையை ஏற்ற ஏழு மேகங்களும் அதிகளவு கடல் நீரினை உறிஞ்சி கருமை நிறத்துடன் மதுரை நகரினை அடைந்தன. ஊழிக்காலத்தில் ஏற்படும் கரிய இருள் போல் மதுரை நகரினை அவை சூழ்ந்து கொண்டன. பெரும் காற்று இடி மின்னலுடன் மழையைப் பொழிவிக்கத் தொடங்கின. பெரும் மழையைக் கண்டதும் மதுரை மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்தனர். அபிடேகப்பாண்டியன் தம் மக்களுடன் சொக்கநாதரின் சந்நதிக்குச் சென்று தம்மையும் தம்மக்களையும் பெரும் மழையிலிருந்து காப்பாற்ற வேண்டினான். மதுரை மக்களின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய சொக்கநாதர் தம்முடைய திருமுடியிலிருந்து நான்கு மேகங்களை விடுவித்து நீங்கள் மதுரை மாநகரின் நான்கு எல்லைகளிலும் சென்று மாடங்களாக மாறி ஒன்றுகூடி வருணன் விடுவித்த மேகங்கள் பெய்கின்ற பெரும் மழையிலிருந்து மதுரையை காப்பீர்களாக என்று கட்டளை விடுத்தார்.
இறைவனாரின் கட்டளையின்படி நான்கு மேகங்களும் மதுரையின் நான்கு எல்லைகளையும் சூழ்ந்து மலைபோல் உயர்ந்து ஒன்று கூடி உயர்ந்த கட்டிடங்கள் போல் நின்றன. கோபுரங்களும் குன்றுகளும் அம்மாடங்களைத் தாங்கி நிற்கும் தூண்களாகின. உயர்ந்த மாடங்களான மேகங்கள் வருணன் விடுத்த பெரும் மழையானது மதுரையில் விழாதவாறு கூரையாக நின்று மதுரை மக்களைக் காப்பாற்றின. நான்கு திக்கிலும் மேகங்கள் மலைபோல் உயர்ந்து ஒன்று கூடி மாடங்களாகி மதுரையை காத்தமையால் மதுரையானது நான் மாடக்கூடல் என்று அழைக்கப்படுகிறது. தான் ஏவிய மேகங்களின் மழையிலிருந்து மதுரை காப்பாற்றப்பட்டதைக் கண்ட வருணன் உடல் நடுங்கினான். தன் செயலால் வெட்கி தலை குனிந்தான். பின் பொற்றாமரைக் குளத்தின் அருகே வருணன் வந்தான். அவ்வாறு பொற்றாமரைக் குளத்தருகே வரும்போதே வருணனின் வயிற்று வலியானது நீங்கியது. வயிற்று வலி நீங்கியதும் வருணனின் மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. பொற்றாமரைக் குளத்தில் இறங்கி நீராடினான். பின் சொக்கநாதரையும் மீனாட்சி அம்மையையும் முறைப்படி வழிபாடு நடத்தினான். வருணனின் வழிபாட்டில் மகிழ்ச்சி அடைந்த சொக்கநாதர் வருணனின் முன்தோன்றி வருணனே உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். வருணன் சொக்கநாதரிடம் இறைவா யாராலும் நீக்க முடியாத வயிற்று வலியானது இந்த பொற்றாமரைக் குளத்தில் நீராடுவதற்கு முன்னே என்னை விட்டு நீங்கியது. நான் அறிவிலியாக உம்மை சோதிக்க நினைத்தது என்னுடைய தவறுதான். ஆனால் தாங்கள் என்னுடைய குற்றங்களிலிருந்து மதுரை மக்களையும் காத்து என்னிடம் இருந்த பெரிய பிணியாகிய வயிற்று வலியையும் ஆணவத்தையும் நீக்கி விட்டீர்கள். அடியேன் செய்த குற்றங்கள் இரண்டினையும் தாங்கள் பொருத்து அருள வேண்டும். என்று கூறி பலவாறு வழிபட்டு பலவரங்களைப் பெற்று மேற்கு திசையின் அதிபனான வருணன் தன் இருப்பிடத்தை அடைந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
மதுரை மாநகருக்கு நான் மாடக்கூடல் என்ற பெயர் ஏற்பட்ட காரணத்தையும் ஆணவத்தால் ஒருவன் செய்யும் செயலானது அவனுக்கு இழிவையே தரும் என்பதையும் வலிமையுடன் இருப்பவர்கள் ஆணவத்தினால் எளியோர்களுக்கு துன்பம் விளைவித்தால் இறைவன் வலியவனின் செயல்களைத் தடுத்து எளியோர்களைக் காப்பாற்றுவார் என்பதேயும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.