ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 537

கேள்வி: மனிதன் செய்யும் சிறு தவறுக்கு கூட பெரிய அளவில் தண்டனை கிடைக்கும் எனும் பொழுது ஒருவன் செய்யும் சிறு புண்ணியமும் பன்மடங்காக பெருகுமா?

இறைவன் அருளால் தெரியாமல் பாவம் செய்தாலும் தெரிந்து பாவம் செய்தாலும் விளைவு ஒன்றுதான். சிறு பாவமும் பெரிய விளைவை ஏற்படுத்தும். அதற்காக சிறு புண்ணியம் பெரிய அளவில் நன்மையை தரும் என்று நாங்கள் கூறுவதற்கில்லை. ஒருவேளை அப்படி கூறுவதாக கொண்டால் மனிதன் என்ன செய்வான்? எப்பொழுதுமே சிறிய புண்ணியங்களை தான் செய்ய துவங்குவான். இன்னொன்று புண்ணியம் என்பது செய்கின்ற மனிதனின் மனதை பொறுத்துதான். அளவை பொருத்ததில்லை. ஒரு கோடி தனத்தை ஒருவனிடம் தந்து விட்டு உள்ளத்திலே வேறு வழியில்லாமல் கொடுக்க வேண்டியிருக்கிறது. இவனுக்கு எல்லாம் செய்ய வேண்டிய ஒரு நிர்பந்தம் வந்துவிட்டதே? இவனுக்கெல்லாம் ஏன் செய்ய வேண்டும்? இவன் என் கண்ணில் படாமல் இருந்திருக்கக் கூடாதா? இவன் இல்லாமல் ஒழிந்து போகக்கூடாதா? இந்த தனத்தை எதற்காக தரவேண்டும்? என்று உள்ளத்தில் எண்ணிக்கொண்டு ஒரு கோடி தனம் தந்தாலும் பலனில்லை. ஆனால் உளமாற ஒரு சிறு தனத்தை தந்தாலும் அது மலை போன்ற புண்ணியமாக பெருகும். அடுத்தது செய்கின்ற அந்த நாழிகை. தக்க காலத்தில் தக்க சூழலில் தக்க நேரத்தில் செய்யப்படுகின்ற உதவியை மிகப்பெரிய உதவியாகும். இதைத்தான் வள்ளுவன் காலத்தினால் செய்த உதவி என்று கூறி இருக்கிறான். இதுபோல் உதவி அல்லது புண்ணியம் என்பது செய்கின்ற அளவைவிட செய்கின்ற உள்ளத்தை பொறுத்தது. பெறக்கூடிய மனிதனின் தேவையையும் மனதையும் வாழ்வியல் சூழலையும் பொறுத்ததாகும்.

அக்கா மகாதேவி

அக்கா மகாதேவி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கன்னடப் பெண் துறவி மற்றும் கவிஞர். 1150 ஆம் ஆண்டு முதல் 1175 வரை வாழ்ந்த அவர் ஷிமகோடா மாவட்டத்தில் உள்ள பானவாசி நகரின் அருகில் இருந்த உடுதாடி எனும் கிராமத்தில் அன்னம்மா பிரபு மற்றும் கின்னாரி பொம்மையா என்பவர்களுக்கு மகளாகப் பிறந்தவர். இருவரும் சிவநெறிப்படி மகளை வளர்த்தனர். சிவவழிபாடு இவர் வாழ்க்கைநெறி ஆகியது. அவர் தனது இளமைப் பருவத்தை வழிபாட்டில் கழித்தார். விளையாட்டுக்களில் அதிக கவனம் செலுத்தியது இல்லை. மாறாக ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பார். இளம் வயதிலேயே அவர் ஆன்மீக நாட்டம் கொண்டவராகவே இருந்தார். சிவகாமாச்சாரியார் என்பவரிடம் கல்வி பயின்ற அக்கா மகாதேவி சிறு வயதிலேயே கவிதைகளை எழுதுவார். சிவலிங்கத்தை வணங்கித் துதிப்பார். ஸ்ரீ சைலம் என்னும் ஊரைப் பற்றியும் அங்கு உறையும் இறைவன் சென்ன மல்லிகார்ச்சுனனைப் பற்றி கேள்விப்பட்டார். பின்பு சென்ன மல்லிகார்ஜுனாவை அதிகம் ஆராதித்துக் கொண்டே இருப்பார். பிறந்ததில் இருந்து இவரின் வளர்ப்பு பற்றி அதிக செய்திகள் கிடைக்கவில்லை என்றாலும் அவர் தன்னுடைய தாயாரின் அரவணைப்பில்தான் பெரிய பெண்ணாகும் வரை வளர்ந்ததாக தெரிகின்றது. அக்கா மகாதேவி சில கன்னட புராணக் கதைகளில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் பார்வதியின் ஒரு ரூபமே எனக் கூறி இருந்தாலும் அவரது சன்யாச வாழ்க்கைக்கு முன்னர் வாழ்ந்த வாழ்கை வரலாறு குறித்த செய்திகள் எதுவும் எழுத்து வடிவில் எழுதி வைக்கப்படவில்லை. அவர் சன்யாசி ஆகி வீர சைவர்கள் குழுவில் சேர்ந்த அவரைப் பற்றிய செய்திகள் அனைத்துமே வாய் மொழிக் கதைகளாகவே இருந்து உள்ளன.

அக்கா மகாதேவி பெரிய பெண்ணானதும் அவருடைய பெற்றோர்கள் அவளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால் அதை அவள் ஏற்கவில்லை. அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கவே விரும்பினாள். அந்த ஊரில் இருந்த தனவந்தர் ஒருவர் அவள் மீது ஆசை கொண்டு அவளை மணக்க விரும்பினார். அவளுடைய பெற்றோர்களும் அவருடன் அவளை திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால் அக்க மகாதேவி அதை ஏற்கவில்லை. தன்னுடைய மானசீகக் கணவர் சென்ன மல்லிகார்ஜுனாதான் என்றே உறுதியாகக் கூறினாள். தன்னுடைய பெற்றோர்களிடம் மீரா எப்படி கிருஷ்ணரையே தன்னுடையக் கணவராக ஏற்று இருந்தாரோ அப்படித்தான் தனது கணவர் சென்னமல்லிகார்ஜுனாதான் என்றே அவர் கூறி வந்துள்ளார்.

அந்நாளில் அவ்வூரையாண்ட கெளசிகன் என்ற மன்னன் உலாப் போகும்போது அக்கா மகாதேவியைக் கண்டு அவள் அழகில் மயங்கி மணம் செய்து கொள்ள விரும்பினான். அரசனிடம் இந்த உடம்பு மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பாத்திரம். எலும்புகளினால் செய்யப்பட்ட ஒரு பெட்டி. இது சீழ் மற்றும் துர்நாற்றம் கொண்டது. இதை ஏன் விரும்புகிறீர்கள் இறைவனை நினையுங்கள் என்று அறிவுறை கூறினாள். இதனை கண்டு கொள்ளாத அரசன் அவள் மணத்துக்கு ஒப்புக் கொள்ளாவிடில் பெற்றோர் உயிரிழக்க நேரிடும் என்று மிரட்டினான். அதனால் சில நிபந்ததனைகளுடன் அக்கா மகாதேவி அரசனை மணக்க ஒப்புக் கொண்டார். தம் வழிபட்டுக்குத் தடை விதிக்கக் கூடாதென்றும் தடை ஏற்படுமானால் மூன்று முறை பொறுத்துக் கொள்வேன். அதன் பின் உங்களை விட்டு பிரிந்து விடுவேன் என்று நிபந்தனை விதித்தாள். அரசன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள திருமணம் நிறைவேறியது. ஆனால் அக்கட்டுப்பாட்டின்படி அரசனால் நடக்க முடியவில்லை. எனவே அக்கா மகாதேவி அரண்மனையை விட்டு வெளியேறினார். கெளசிகன் தொட்ட ஆடைகளையும் களைந்துவிட்டு கூந்தல் உடலினை மறைக்கக் கலியாண நகரம் சேர்ந்தார். வீட்டை விட்டு வெளியேறும் முன்னர் தான் ஒரு சன்யாசினியாக போக விரும்புவதாக தன்னுடைய பெற்றோர்களிடம் கூறினார். அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் அவளை அவர்களால் தடுக்க முடியவில்லை. இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியவர் பல இடங்களிலும் சுற்றித் திரிந்தபடி சிவபெருமானின் பெருமைகளை பரப்பி வந்தார். பசவண்ணர் முதலிய வீரசைவ அடியார்கள் உள்ள அனுபவ மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

மகாதேவி நிர்வாணமாக வந்தபோது ​​​​அவளை மனநலம் பாதிக்கப்பட்டவரோ என்று மிகவும் சந்தேகத்துடன் வரவேற்றார்கள். அப்போதைய வீரசைவத்தின் தலைவரான அல்லாமா பிரபு இளமை மலரும் பெண்ணே ஏன் இங்கு வந்தாய்? உங்கள் பெற்றோரைப்பற்றி அல்லது கணவரைப்பற்றி சொல். இல்லையென்றால் இங்கு அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு போய்விடுங்கள் என்றார். மகாதேவி பதிலளித்தாள். இந்த உலகில் உள்ள அனைவருமே என்னுடைய பெற்றோர்கள்தான். ஒருவருக்கு ஒருவர் என்று எனக்கு கணவனாக சேர்ந்தவர் சென்ன மல்லிகார்ஜுனாவுடன்தான். அனைத்து நட்சத்திரங்களும் கோள்களும் பார்த்துக் கொண்டே இருக்க என்னுடைய குருநாதர் வந்து என் கையைப் பற்றிக் கொண்டார். லிங்கமான சிவனே மணமகனாகியது. நானோ அங்கு மணமகள் ஆனேன். ஆகவே என் கணவர் சென்ன மல்லிகார்ஜுனா. அவரை தவிர எனக்கு இந்த உலகில் வேறு எந்த உறவும் இல்லை என்றார். அல்லாமா பிரபு அவளை நீண்ட நேரம் விசாரித்து பின்பு சன்யாசி என்று ஒப்புக் கொண்டார். உடல் தோற்றத்தில் இவள் பெண் ஆனால் இவளின் மனம் கடவுளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அனைத்து வீரசைவர்களும் மகாதேவியின் பெருமையை அறிவித்தார். அல்லாமா பிரபுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்கா மகாதேவி தனது தவங்களை தொடர்ந்தார். அங்கு உள்ள சன்யாசிகளுடன் தம் இறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அக்கா மகாதேவியின் பக்தியைக் கண்ட வீர சைவ துறவிகளான பசவண்ணா சென்ன பசவண்ணா அல்லமா பிரபு கென்னாரி பொம்மையா போன்றவர்கள் அவளை புகழ்ந்து எழுதி உள்ளார்கள். அக்கா மகாதேவி தன்னைப் பற்றிக் கூறிக் கொள்கையில் தன்னுடைய வெளித் தோற்றம் மட்டுமே பெண் இனத்தை சேர்ந்தது. ஆனால் தன்னுடைய ஆத்மாவும் தானும் சிவனை சேர்ந்தவள் என்றே கூறிக் கொண்டார். ஒரு முறை அக்கா மகாதேவி ஒரு கூட்டத்தில் அல்லமா பிரபுவின் ஆன்மீகக் கேள்விகளுக்கு எல்லாம் சற்றும் தாமதிக்காமல் சரியான பதில் தந்ததைக் கண்டவர்கள் அவரை அக்கா என அழைக்கலாயினர். மகாதேவி என்ற பெயர் பின்பு அக்கா மகாதேவி என்று அழைக்கப்பட்டார். வீர சைவ நெறியைக் கடைப்பிடித்த அக்கா மகாதேவியின் பாசுரங்கள் கன்னட மொழியில் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தன. வசனா எனப்படும் முறையில் எழுதப்பட்ட அக்கா மகாதேவியின் பாசுரங்கள் கன்னட பெரும் கவிகளான பசவன்னா சென்னா பசவன்னா கின்னாரி பொம்மையா சித்தாராமைய்யா அல்லமாபிரபு தாசிமைய்யா ஆகியோரின் பாசுரங்களை ஒத்தவையாக இருந்தன. இவர் மொத்தம் 430 வசனா பாசுரங்களை இயற்றினார். சிவனின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட அக்கா மகாதேவி அவரையே தனது உளமார்ந்த கணவனாகப் பாவித்துக் கொண்டார்.

அக்கா மகாதேவி சன்யாசினியாக மாறிய அவர் ஆடைகள் அணியாத நிர்வாண நிலையிலேயே இருந்தார். கடவுளின் அருளினால் அவளுடைய உடம்பு முழுவதையுமே நீண்டு வளர்ந்து இருந்த அடத்தியான தலைமுடி ஒரு உடுப்பு போல மறைத்து வைத்தே இருந்தது என்பதே அவர் எந்த அளவுக்கு தெய்வீக சக்தி பெற்று இருந்தார் என்பதை விளக்கும். அக்கா மகாதேவி பார்வதியின் ஒரு அவதாரம் என்றும் சாப விமோசனம் அவர் பூமியில் வந்து பிறந்து இருந்தார் எனவும் ஒரு கிராமிய கதையும் உள்ளது.

அக்கா மகாதேவி 12 ஆம் நூற்றாண்டில் பெண்களின் விடுதலையில் பெரும் பங்காற்றினார். அங்கும் இங்கும் நடந்த ஆன்மீக விவாதங்களில் கலந்து கொண்டு தன தரப்பு வாதங்களை ஆன்மீகத்தின் பக்கம் எடுத்து உரைத்து ஆன்மீகப் பாதைக்கு வலு சேர்த்தார். பல இடங்களிலும் சுற்றிக் கொண்டு இருந்தவர் சென்ன மல்லிகார்ஜுனாவை போற்றித் துதித்த வண்ணமே இருந்தார். ஸ்ரீசைலம் பகுதியில் சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சென்னமல்லிகார்ஜுனா ஆலயம் இருந்த காட்டுக்குள் சென்று அங்கிருந்த குகையில் தங்கி தவம் செய்தவாறு தனிமையிலேயே இருந்தார். அங்கு சில காலம் இருந்தப் பின் அவர் பானவாசிக்கே வந்து தங்கினார். அவர் புகழ் கன்னட நாடெங்கும் பரவியது. அந்த குகை தற்போது அக்கா மகாதேவி குகை எனப்படுகின்றது. அவருடைய முக்கியமான பணிகளில் ஒன்றாக ஜாதி பேதங்களை உடைப்பது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதத்தை ஒழிப்பதுமாக இருந்தது. ஒரு பெண்ணாக இருந்து அவர் அவற்றை பெருமையுடன் அனைத்து எதிர்ப்புக்களையும் தாண்டி செய்துள்ளார். அவர் 400 க்கும் மேற்பட்ட கவிதைகளை இறைவன் மீது இயற்றி உள்ளார்.

சென்ன மல்லிகார்ஜுனா பற்றிய அவரின் கவிதை:

அம்மா கேள் நான் அவரை நேசிக்கின்றேன்
அவர் இந்த உலகில் உள்ளவர்களில் ஒருவர் மட்டுமே அவர்
அவருக்கு இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை
அவருக்கு ஜாதியோ பேதமோ ஒன்றும் இல்லை
அவர் எங்கும் நிறைந்தவர் உருவமற்றவர் மாறாதவர்
நம் எண்ணத்திற்கும் அப்பாற்பட்ட அழகைக் கொண்டவர்
இந்த உலகில் உள்ள அனைத்துமே முடிவாக அழிந்து விடுபவை
எனக்கு அவர்களில் ஒருவரும் வேண்டாம்
என்னுடைய நாயகனாக என்றுமே இருக்க உள்ளவர்
ஒன்றே ஒருவரான சென்ன மல்லிகார்ஜுனா மட்டுமே.

பிச்சைப் பாத்திரத்தில் உணவு போட கிராமங்களே உள்ளன
தாகம் எடுத்தால் குடிப்பதற்கு கிணறுகளும் குளங்களும் உள்ளன
படுத்து உறங்கவோ பாழடைந்த ஆலயங்களும் உள்ளன
ஆனால் என்னுடைய இதயத்துக்கு துணை இருக்க
சென்னமல்லிகார்ஜுனா மட்டுமே இருக்கின்றார்.

தன்னுடைய நிர்வாண நிலையைப் பற்றி எழுதிய ஒரு கவிதை இது

இந்த உலகமே ஆண்டவனின் கண்களாக உள்ள போது
அவர் இந்த உலகில் உள்ள அனைத்தையும் பார்த்துக் கொண்டே உள்ள போது
நீ உன்னிடம் உள்ள எதை நீ அவரிடம் மறைக்க நினைக்கின்றாய்.

பட்டு மற்றும் நகைகளின் மினுமினுப்பின் கீழ் என்னை என்ன மறைக்க விரும்புகிறீர்கள்?
முட்டாள்கள் நான் மல்லிகைப் பெருமானின் காலை ஒளியை உடையாக உடுத்தும் போது ​என்னால் வெட்கப்பட முடியாது.

இறைவனை அடைய எண்ணம் கொண்டவர்களுக்கு இவரின் அறிவுரைகள்:

அகந்தை கூடாது. பசிக்கும் போது பிச்சை எடுத்து உண்ண வேண்டும். ஏரி குளங்களில் உள்ள நீரைக் குடித்துக் கோயில்களில் படுத்து உறங்க வேண்டும். மாயை உலகம் என்ற வடிவத்தில் எல்லோரையும் மயக்குகிறது. இதிலிருந்து விடுபட ஒரு குருவை அணுக வேண்டும். குருவே உய்யும் நெறி காட்டுவார்.

வீரசைவர்களால் 20000 க்கும் மேற்பட்ட கவிததைகள் இயற்றப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 300 அக்கா மகாதேவி இயற்றியுள்ளார். இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சைலத்தில் இறைப் பேரொளியுடன் கலந்து மகாசமாதியாகிவிட்டதாக நம்பப்படுகின்றது.

ஏகாதசி பற்றி பத்ம புராணத்தில்

திரேதாயுகத்தில் முரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தேவர்களையும் தவம் இயற்றும் முனிவர்களையும் மிகவும் கொடுமை படுத்தி வந்துள்ளான். அவனது தொல்லைகள் தாங்க முடியாத தேவர்களும் முனிவர்களும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். மகாவிஷ்ணு அரக்கனை அழிக்க தன் சுதர்சன சக்கரத்துடன் போருக்கு புறப்பட்டு சென்றார். திருமாலை எதிர்க்க வந்த அரக்கன் சுதர்சன சக்கரம் தன்னை நோக்கி வருவதை கண்டு ஓடி ஒளிந்து கொண்டான். பின்னர் மாயா வடிவில் வந்து போரிடுவான். இப்படி மாறி மாறி ஒழிவதும் போரிடுவதுமாக இருந்த அரக்கன் பகவான் முன்பு எதிர்க்க முடியாமல் சோர்ந்து போனான்.

வத்திகிரி ஆஸ்ரமத்தில் பகவான் விஷ்ணு உறங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த அரக்கன் திருமாலை திடீரென்று தாக்க முற்பட்டான். ஆனால் அந்த நொடியில் லோக மாயன் மகாமாயன் மாயவண்ணன் என்ற பல பெயர்களைக் கொண்ட மாயக்காரன் மகாவிஷ்ணுவின் திருமேனியில் இருந்து ஒரு பெண் வடிவம் தோன்றி அவ்வரக்கனை கொன்றது. அந்த பெண் வடிவம் திருமாலின் மாயா சக்தியாகும். இதை கண்ட பகவான் மிகவும் மகிழ்ந்து யோகமாயாவிற்கு ஏகாதசி என்று பெயர் சூட்டினார். மாயாசக்திக்கு ஏகாதசி என்ற பெயர் ஏற்பட்ட அன்றைய நாள் மார்கழி மாதம் பதினோராவது நாளாகும். முக்கோடி தேவர்களும் முனிவர்களும் மகிழ்ந்து திருமாலை துதித்து போற்றினர் கொண்டாடினர். இதனால் இழந்த தங்கள் சக்தியை மீண்டும் பெற்றனர்.

இந்த ஏகாதசிதான் முக்கோடி வைகுண்ட ஏகாதசி யாகும். இந்நாளில் தேவர்களுக்கும் வெற்றியும் மகிழ்வும் தந்த மகாவிஷ்ணு வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து பெருமாளை வணங்கி பூஜை செய்தால் இறைவனை அடையத் தடையாக இருக்கின்ற அனைத்து தீய அரக்கனையும் அழித்து வெற்றியை நல்குவார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 536

கேள்வி: விரைய ஸ்தானம் வலுவாக இருக்கும் ஜாதகர் இறைவனிடம் தன்னுடைய பூர்வ ஜென்ம பாவங்களை விரயம் செய்துவிடு என்று பிரார்த்தனை வைக்கலாமா?

இறைவனை நோக்கி இதுவரை சேர்த்த பாவங்களை எல்லாம் தீர்ப்பதற்கு ஒரு வரத்தை கொடு என்று கேட்டால் கட்டாயம் தருவார். ஆனால் அந்த வரத்தை தாங்குகின்ற மனோபலத்தை மனிதன் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். பாவம் சும்மா எளிமையாக ஒரு மனிதனை விட்டுச் சென்று விடாது. பல துன்ப அனுபவங்களை தந்துதான் பாவம் அவனை விட்டுச் செல்லும். என்னை விட்டு பாவம் போக வேண்டும் என்று ஒருவன் இறைவன் நோக்கி வேண்டினால் நிறைய துன்பங்களை எதிர்கொள்ள அவன் ஆயத்தமாக இருக்க வேண்டும். அப்படி நீ ஆயத்தமாக இருந்தால் தாராளமாக உன் பிரார்த்தனையை இறைவனை நோக்கி வைக்கலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 535

கேள்வி: சத்தி முற்றத்தில் அமைந்திருக்கும் த்வார விநாயகர் முருகன் பைரவர் மற்றும் சிவலிங்கம் ஆகியவற்றின் சிறப்புகள் பற்றி:

இறைவன் அருளால் முன்னார் கூறியது போல் திருமண தோஷ நிவர்த்தி ஸ்தலம் மட்டுமல்லாமல் ராகு திசை நடப்பவர்கள் ஜாதகத்தில் ராகு கெடு பலனை தருவதாக நம்ப கூடியவர்கள் திருமணமாகி பிரிந்திருப்பவர்கள் சென்று வணங்க வேண்டிய தலங்களுள் இன்னவன் கூறிய தெய்வ சன்னதியையும் ஒன்று அங்கே அன்றாடம் முடிந்த நெய் தீபம் ஏற்றி நறுமணமிக்க மலர் மாலைகளை சாற்றி வழிபாடு செய்து வந்தால் வழக்கு மன்றம் வரை சென்றவர்கள் எல்லாம் மீண்டும் சேரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பட்டீஸ்வரம் சென்று துர்கையை வணங்கக்கூடிய மனிதர்களுக்கு வினைப் பயன் காரணமாக இந்த தலம் இருப்பது தெரியாமல் போய்விடுகிறது. எனவே பட்டீஸ்வரம் சென்று வணங்க கூடியவர்கள் திருச்சத்தி முற்றமும் சென்று வணங்குவது சிறப்பு அப்பா.

இத்தத்தலத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 273 கேதார்நாத்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 273 வது தேவாரத்தலம் கேதார்நாத். மூலவர் கேதாரீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். அம்பாள் கேதாரகவுரி. தீர்த்தம் உதககுண்ட தீர்த்தம், கவுரி குண்டம், மந்தாகினி தீர்த்தம். இமயமலை அருகே மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கேதார்நாத் சிவன் கோயில். இத்தலம் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. அம்பாள் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம். இத்தலத்தில் சிவலிங்கம் ஒரு முக்கோண வடிவில் உள்ள பாறையாக சுயம்புவாகத் தோன்றியது. கேதம் என்றால் வடமொழியில் துன்பம் என்று பொருள். கேத + ஹர + ஈஸ்வரர் என்றால் துன்பங்களை நீக்குவதில் தலைவர் என்பது பொருள். கேதார முனிவர் வழிபட்டதால் கேதாரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். மூன்று பக்கமும் பனி மூடிய மலைகள் நரநாராயண சிகரங்கள் பின்புறம் எழிலாக விளங்க இமய மலைப்பகுதியில் ஓங்கி உயர்ந்த ஒரு விமானத்துடன் கற்றளியாக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவில் வடகோடி இமயமலையில் நந்ததேவி சிகரத்தில் சுமார் 3583 மீட்டர் (11750 அடி) உயரத்தில் உள்ளது. பரிவார மூர்த்திகள் பைரவர், பிள்ளையார், நந்தி, பாண்டவர்கள், கண்ணன், ஆதிசங்கரர், மாருதி, ஈசாணிஸ்வரர், விஷ்ணு, கார்த்திகேயன், அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர்.

ஆதிசங்கரர் பிரசிஷ்டை செய்த ஸ்ரீ சக்கிரத்தில் திருக்கேதார ஜோதிர் லிங்கத்தின் மேற்குப்பகுதி சிவபெருமான், வடக்கு நோக்கி தும்பிக்கையுடன் கணேசர் மற்றும் ஸ்ரீசக்ர வடிவில் கௌரியன்னை ஆகிய மூவரும் ஒன்றாக காட்சி தருகின்றனர். இந்த ஸ்ரீ சக்கரத்தின் மேல் தலை வைத்து வணங்கலாம். இக்கோயில் வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது பொது ஜன தரிசனத்திற்காக திறப்பார்கள். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கோயில் திறந்திருக்கும். அதன் பின்னரே தீபாவளியை ஒட்டி கோயில் நடை அடைக்கப்படுகின்றது. பின்னர் ஆறு மாத காலம் இமயமலையின் கடும் குளிர் காரணமாக இக்கோயில் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுவிடும். கேதார்நாத் திருக்கோயில் தீபாவளியை ஒட்டி கோயில் மூடப்படும் முன்னர் கோயிலுக்குள் மிகப்பெரிய நெய் விளக்கு ஏற்றப்படும். பின்னர் நடை மூடப்படும். அதன் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து ஏப்ரல் மாதத்தில் பனிக்கட்டிகளை அகற்றி கோயிலை திறக்கும் பொழுது கோயிலில் உள்ள விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். இக்கோயில் இறைவனை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மனிதர்களும் பனி மூடியிருக்கும் காலத்தில் தேவர்கள் வழிபடுகின்றார்கள். கேதார்நாத்தில் சிறு ஓடையாக உருவாகும் மந்தாகினி என்ற நதியும் பத்ரிநாத்தில் உருவாகும் அலக்நந்தா என்ற நதியும் ருத்ர பிரயாக் என்ற இடத்தில் கலந்து பல்வேறு நதிகளை இணைத்து ஹரித்துவாரில் கங்கையாக ஓடுகின்றது.

சிவ அஷ்டோத்திரம், சிவநாமாவளி, சிவசகஸ்ர நாமம் ஆகியவை நடத்தலாம். பக்தர்கள் மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்து கேதார்லிங்க வடிவில் உள்ள சிவனை வணங்கி தழுவிக்கொள்ளலாம். யாத்திரீகர்கள் கங்கோத்ரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்ரியில் இருந்து யமுனை தீர்த்ததையும் கொண்டு சென்று கேதாரநாதருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். பிரம்ம கமலம் எனும் அபூர்வ தாமரைப் பூக்களைக் கொண்டு இவருக்கு அர்ச்சனை செய்கின்றனர். ஸ்ரீஆதிசங்கரர் 8ம் நூற்றாண்டில் இக்கோயிலை திருப்பணி செய்து உலகறியச் செய்தார். ஆதிசங்கரர் கேதார்நாத் தரிசனம் செய்து முடித்த பின்னர் தான் வாழ்ந்தது போதும் என்று முடிவு செய்து இங்கு சிவபெருமானை வேண்டிக்கொண்ட பின்னர் தன்னை இனிமேல் யாரும் பின்தொடர வேண்டாம் என்று இக்கோயிலின் பின் வழியாக உள்ள இமயமலையின் சிகரம் வழியாக இறைவனடி அடைந்தார். தற்போது உள்ள கோவில் 8 ம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால் கட்டப்பட்டது. இவ்வாலயத்தில் ஆதி சங்கரர், சுக்ராச்சாரியார் மற்றும் அனுமன் சிலைகளும் உள்ளன. விஜய கொடியுடன் ஆதிசங்கரரின் தண்டம் இங்கு உள்ளது. ஆதி சங்கரர் திருக்கயிலையில் கொண்டு வந்து ஸ்தாபிதம் செய்த ஸ்படிக லிங்கம் இங்கு உள்ளது. திருக்கோவிலின் பின்புறம் ஈசானேஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு பூஜை முறையை ஆதி சங்கரர் வகுத்தார். இங்கு மலபாரை சார்ந்த லிங்காயத் பிராம்மணர்களே பூஜை செய்கின்றனர். ஆதிசங்கரர் ஸ்தாபித்த சக்திபீடம் இங்கே உள்ளது.

பண்டைய காலத்தில் நரநாரயணர்கள் இருவர் செம்மையான ஜீவகாருண்ய ஆட்சி புரிந்தனர். அவர்கள் மீது பொறாமை கொண்ட மாற்று நாட்டரசன் படையெடுத்து வந்த போது அவனுடன் போர் புரியாது தங்கள் நாட்டை ஒப்படைத்து விட்டு புனித யாத்திரை மேற்கொண்டு கேதாரீஸ்வரரை வழிபட்டு தவம் செய்தனர். அவர்களின் தவத்தின் கடுமையைக் கண்ட இந்திரன் எங்கே தனது ஆட்சிக்கு பங்கம் வந்து விடுமோ என்று அவர்கள் தவத்தை கலைக்க தேவ கன்னியை அனுப்பினான். அவர்கள் தங்கள் தொடையிலிருந்து அவளை விட அழகான ஊர்வசியைப் படைத்து தேவ கன்னிக்கு நல்லுரை கூறி சிவனடியார்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்த்தினர். பின் இருவரும் இறைவனுடன் கலந்தனர். கேதார மலையை பின் பக்கம் மலைச் சிகரமாக இருவரும் இன்றும் விளங்குகின்றனர். பைரவர் காவல் தெய்வம் என்பதால் இங்கு அவருக்கு சன்னதி கிடையாது. வெட்ட வெளியில் இருந்து கேதார்நாத் கோவிலை பைரவர் காத்துக்கொண்டிருக்கிறார். ஒரு சமயம் கோவில் மூடப்படும் போது கோவிலை பூட்ட மறந்த போது பைரவர் வந்து பூசாரிகளை நடக்க விடாமல் செய்து பின்னர் கோவிலை பூட்டிவிட்டு சென்றார்கள். இக்கோவிலில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் பைரவர் கோவில் உள்ளது.

திருக்கேதாரத்தை சுற்றிலும் எட்டு திசைகளிலும் எட்டு ஆலயங்கள் உள்ளன. இங்கு உள்ள ரேதஸ் குண்டத்தின் தீர்த்தத்தை உட்கொள்பவர்களின் இருதயத்தில் நான் அமிர்தமாக அமர்வேன் என்று பார்வதி தேவியிடம் சிவபெருமான் இந்த தீர்த்தத்தின் மஹிமையை விளக்கியதாகவும் இங்கிருந்து தான் இறைவன் ஜோதிர்லிங்கமாக எழுந்தருளியதாகவும் புராணவரலாறு உள்ளது. இராவணன் தவம் செய்து கயிலாய மலையை தூக்க முயன்று முடியாமல் உயிர் பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும். இத்தலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓர் இடத்தில் பரசுராமருடைய கோடாலி உள்ளது. கௌதமர் அகலிகைக்கு சாபம் கொடுத்தபின் இமயமலை வந்து கேதாரீஸ்வரரை வழிபட்டு தவம் செய்தார். துர்வாச முனிவரின் சாபம் பெற்ற விஷ்ணு பூமிக்கு வந்து இமயமலையில் கேதாரநாதரை நோக்கி தவம் செய்த போது மஹாலக்ஷ்மி துணையாக பத்ராட்சை மரமாக காவல் இருந்தாள். எனவே அத்தலம் பத்ரிநாத் எனப்பட்டது. இத்தலம் கேதாரீஸ்வரரின் தலத்திற்கு எதிரே உள்ளது.

இங்கு பாண்டவர்கள் பிறந்து வளர்ந்து சில காலம் வாழ்ந்ததாகவும் கேதார்நாத் கோயிலின் பின்புறம் உள்ள வழியில் பாண்டவர்கள் திரௌபதியுடன் சொர்க்கம் சென்றதாகவும் வரலாறு உள்ளது. இத்தலத்தில் அர்ஜூனன் தவம் செய்து சிவபெருமானிடம் பாசுபதாஸ்வரம் பெற்றான். இங்குள்ள கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டது. வைணவர்களான பாண்டவர்கள் சிவன் கோயில் கட்டி சிவபெருமானை வழிபட்டுள்ளனர். மகாபாரத போரில் பல்வேறு வீரர்களைக்கொன்று குவித்து வெற்றி பெற்ற பாண்டவர்கள் பாப விமோசனம் பெறுவதற்காக சிவபெருமானை வேண்டி வாரணாசி செல்கின்றனர். பின்னர் இமயமலையை நோக்கி வருகின்றனர். அப்போது இமயமலை காடுகளில் சிவபெருமானை தேடி பாண்டவர்கள் அலைகின்றனர். பின்னர் இளைப்பாறும் போது சிவபெருமான் அசரீரி வாயிலாக தான் மனித உருவிலோ அல்லது தெய்வமாகவோ காட்சிதர முடியாது என்றும் முடிந்தால் தன்னை கண்டுபிடிங்கள் என்றும் சிவபெருமான் கூறி மறைந்தார். அந்த இடம் தற்போது குப்தகாசி என்ற பெயரில் வழங்கப்படுகிறது. பின்னர் மிக உயரமான கேதார் சிகரத்தின் காடுகளில் திரிந்தபோது காட்டில் நகுலனும் சகாதேவனும் ஒரு வித்தியாசமான ஆண் காட்டெருமையைக் கண்டனர். பீமன் தனது கதாயுதத்தைக் கொண்டு அக்காட்டெருமையைத் தாக்க முயன்றான். ஆனால் அது சாதுரியமாகப் பீமனின் பிடியில் இருந்து தப்பிவிட்டது. ஆனால் பீமனின் கதாயுதம் அதன் முகத்தில் தாக்கியது. அக்காட்டெருமை தனது முகத்தை நிலத்தில் இருந்த பிளவு ஒன்றில் மறைத்துக் கொண்டது.

பீமன் அதன் வாலை பிடித்து இழுக்க முயன்றான். காட்டெருமையின் உடற்பகுதி இருந்த இடத்தில் ஒரு ஜோதிர்லிங்கம் உண்டானது. அதன் ஒளியில் இருந்து சிவபெருமான் பாண்டவர்களுக்குக் காட்சியளித்து அவர்களின் பாவத்தைப் போக்கினார். அந்த முக்கோண வடிவ ஜோதிர்லிங்கம் கேதார்நாத் கோயிலின் கருவறையில் உள்ளது. கோயிலை சுற்றி பாண்டவர்களின் பல அடையாளங்கள் உள்ளன. பின்னர் அசரீரி மூலம் பஞ்ச பாண்டவர்கள் மோட்சம் பெற நேபாளில் உள்ள பசுபதி நாத்தில் பஞ்சமுகங்களுடன் காட்சியளிப்பதாகவும் கூறி மறைந்தார். பின்னர் பாண்டவர்கள் பசுபதிநாத்தில் சிவபெருமானை தரிசித்த பின்னர் கேதார்நாத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு கோயிலாக கட்டி உலகிற்கு அர்ப்பணித்தனர். தற்போதுள்ள கேதார்நாத் கோயில் முதல் முதலாக பாண்டவர்களால் கட்டப்பட்டது. அதன் பின்னர் ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது. பின்னர் திரௌபதியுடன் பாண்டவர்கள் கேதார் தரிசனத்திற்கு பின்னர் இமயமலை வழியாக சொர்க்கம் நோக்கி சென்றனர் என்று வரலாறு கூறுகின்றது. பாண்டவர்கள் சுவர்க்கத்திற்கு சென்ற இடமான சுவர்க்கரோகினி என்ற மலையுச்சி பத்ரிநாத்திற்கு சற்று தொலைவில் உள்ளது. பீமன் காட்டெருமை உருவத்திலிருந்த சிவபெருமானோடு சண்டையிட்டபோது சண்டையின் முடிவில் காட்சியளித்த சிவபெருமானுக்கு பீமன் நெய்யால் அபிஷேகம் செய்தான். அதன் நினைவாக இன்றும் கேதார்நாத்தில் இருக்கும் ஜோதிர்லிங்கத்திற்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மஹாபாரதப் போருக்குப் பின் கண்ணபிரான் வந்து வழிபட்டதாகவும் புராண வரலாறு உள்ளது.

பிரம்மா, விஷ்ணு, முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று அனைவரும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வலம் வந்து வணங்கிச் செல்வார்கள். ஆனால் பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கிச் செல்வார். கோபம் கொண்ட பார்வதி தேவி சிவபெருமானுக்கும் தனக்கும் இடைவெளி இருந்தால் தானே பிருங்கி சிவனை மட்டும் சுற்றிச் செல்வார் என்று நினைத்து சிவபெருமானுக்கு நெருக்கமாக அமர்ந்தாள். ஆனால் பிருங்கி முனிவர் வண்டு உருவம் கொண்டு கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி சிவபெருமானைச் சுற்றி வந்து வழக்கம் போல வணங்கிச் சென்று விட்டார். இதனால் வருத்தம் கொண்ட உமையவள் கௌதம மகரிஷியின் ஆசிரமத்துக்கு வந்து பிரிக்க முடியாதபடி சிவபெருமானோடு ஐக்கியமாகி விட வேண்டும் என்று அம்பிகை கௌதம முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். அவர் அளித்த ஆலோசனையின்படி உமையவள் 21 நாள்கள் இமயமலையில் அமைந்திருக்கும் கேதார்நாத் புனிதத் தலத்தில் அன்னை உமையவள் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் செய்து அவரது திருமேனியில் சரிபாதி பெற்றாள். அப்படி அம்பிகை மேற்கொண்ட விரதத்துக்கு கேதாரீஸ்வரர் விரதம் என்று பெயர்.

21- ம் நாள் முடிவில் ஐப்பசி மாத அமாவாசை தினத்தின்போது சக்தி தேவியை தனது உடலுடன் ஐக்கியமாக்கி அர்த்தநாரீஸ்வரராகத் திருவுருவம் கொண்டார் சிவபெருமான். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தான் கேதார்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் பூசைகளை தலைமை அர்ச்சகர் செய்வதில்லை. அவரின் வழிகாட்டலின்படி அவரது உதவியாளர்களே பூசைகளை செய்கின்றனர். கேதார்நாத் கோயிலில் ஐந்து முக்கிய அர்ச்சகர்கள் உள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரும் ஓராண்டுக்கு தலைமை அர்ச்சகராக இருப்பார்கள். பூசைகளின் போது கன்னட மொழியிலேயே மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. இவ்வழக்கம் பல நூறாண்டுகளாகத் தொடர்கிறது. திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்றே கேதார்நாத்தை வழிபாடு செய்ததாக அவர்களின் பாடல்கள் கூறுகின்றன. இத்திருத்தலத்துக்கு 2 பதிகங்கள் இருக்கின்றன. கேதாரிஸ்வரரைப்பற்றி பாடிய தேவாரப் பாடல்கள் அனைத்தும் கேதார்நாத் கோயிலில் நம்மூர் கல்வெட்டுகளைப் போலவே தமிழில் கல்வெட்டுகளாக செதுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

கர்ணனின் வில்வித்தை

கர்ணன் தனக்கு வில் வித்தை கற்றுக் கொடுக்கும்படி துரோணாச்சாரியார் கேட்டுக் கொண்டான். துரோணாச்சாரியார் மறுத்துவிட கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலையில் செல்கிறான் கர்ணன். கர்ணனின் திறமையை சோதிக்க வானில் பறக்கும் ஒரு பறவையை குறி பார்த்து வீழ்த்தச் சொன்னர் கிருபாச்சார்யார்.

கர்ணன் அம்பை நாணில் பூட்டினான். ஒரு கணம் வானில் பறவையை குறி பார்த்தவன் அம்பை விடாமல் வில்லையும் அம்பையும் கீழே வைத்துவிட்டான். அதற்கான காரணத்தை கர்ணனிடம் கேட்டார் கிருபாச்சார்யார். அதற்கு கர்ணன் குருவே இது அதிகாலை நேரம் இந்நேரம் ஒரு பறவை வானில் பறக்கிறது என்றால் அது தன் குஞ்சுகளுக்கு உணவு கொண்டு செல்கிறது என அர்த்தம். இப்போது எனது திறமையை காண்பிக்க அதை கொன்றுவிட்டால் நான் வீரனாவேன் ஆனால் அதன் குஞ்சுகள் அனாதையாகிவிடும் எனவே நான் அதை கொல்லமாட்டேன் என்றான். இதனைக் கேட்ட கிருபாச்சார்யார் கர்ணா நீ கற்றது வித்தையல்ல வேதம் என்றார்.

பணத்தாலும் பதவியாலும் பலத்தாலும் உயர்ந்தவர்கள் தன் பலத்தை பலம் குறைந்தவர்களிடம் காட்டுவது வீரமும் அல்ல. சத்ரிய தர்மமும் அல்ல.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 534

கேள்வி: எந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்?

இறைவன் அருளால் எந்த மந்திரத்தை கூறினாலும் மனிதநேயம் இல்லாமல் மனித பண்பாடு இல்லாமல் நல்ல எண்ணங்கள் இல்லாமல் சத்திய வாழ்க்கை இல்லாமல் தர்மம் இல்லாமல் மந்திரங்களை கூறினால் அதனால் பலனேதும் இல்லை. பஞ்சாட்சரத்தை கூறு என்று நாங்கள் கூறுவதாக கொள்வோம். ஏன்? அட்டாட்சரம் மந்திரத்தை கூறக்கூடாதா? என்ற ஒருவன் கேட்பான். அட்டாட்சரத்தை கூறு என்றால் ஏன் பிரம்மதேவர் மந்திரத்தை கூறக்கூடாதா? என்று கேட்கப்பான். சரி பிரம்மதேவர் மந்திரத்தை கூறு என்றால் என் சடாட்சரத்தை கூறக்கூடாதா? என்பான். தெய்வத்தை எந்த மந்திரத்தை கொண்டு வேண்டுமானாலும் வணங்கலாம் தவறில்லை. அதோடு நாங்கள் கூறுகின்ற தர்ம வழியையும் கடைபிடித்தால் கட்டாயம் நூற்றுக்கு நூறு விழுக்காடு இறைவன் அருள் உண்டு. பாவங்களில் இருந்து விடுபடலாம். முன்பே கூறியிருக்கிறோம் ஏதாவது இறை நாமத்தை முன் அதிகாலையில் வடகிழக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து குறைந்தபட்சம் இரண்டரை நாழிகை அன்றாடம் உருவேற்றி வந்தால் கட்டாயம் நீ கூறிய நன்மை அனைவருக்கும் சித்திக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 533

கேள்வி: சனி லக்னாதிபதியாக இருந்து அந்த சனிபகவான் ஏழாம் பாவத்திலிருந்து எழுக்குரிய கிரகம் ஆறாம் பாவத்தில் வலிமை பெற்று புதனோடும் உச்சம் பெற்று இருக்கிற குருவோடும் இணைந்திருக்கும் பொழுது அந்தப் பெண்ணுக்கு யோகம் வருமா? அல்லது அந்த பெண்ணை மணந்த கணவனுக்கு யோகம் வருமா? அல்லது இருவருக்குமே யோகம் வருமா?

இறைவன் அருளால் உச்சமே பெற்றிருந்தாலும் கூட சில நன்மைகளை தந்தாலும் கூட ஏழு ஆறோடு கூடி விடுகிறது. லக்னத்திற்குரிய பாவம் அங்கே கெட்டுப்போய் விடுவதால் கட்டாயம் இருவருக்கும் கெடு பலன்தான் அதிகமாக இருக்கும். சுக பலன் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் சற்றே விழிப்புணர்வு பெற்று இறை வழியில் வந்துவிட்டால் கெடு பலனை குறைத்து நல்ல பலனை அதிகரித்துக் கொள்ளலாம். இதை வேறு வகையில் கூறினால் ஆன்ம வழியை நோக்கி வாழ்க்கையை திருப்பி கொண்டால் வாழ்க்கை ஒரளவு நன்றாக இருக்கும். லோகாய சுகத்திற்காக வெற்றிக்காக பாடுபட்டால் வேதனைகள் தான் மிஞ்சும். உடல் நலிவு தான் ஏற்படும்.

அச்சன் கோவில் மணிகண்டன்

அச்சன் கோவில் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் அலுவலர் ஸ்ரீ கார்யம் ஆவார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அச்சன் கோயிலில் ஸ்ரீ காரியம் தர்ம சாஸ்தா மீது அளவற்ற பக்தியோடு அவரை நினைத்தவாறே பணி செய்வார். அச்சன்கோவில் வனப்பகுதியில் இருந்து அதீதமான மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு காணாமல் போய்க்கொண்டே இருந்தது. ஆங்கிலேய அதிகாரிகள் காணாமல் போன மரங்களின் விபரங்களை ஸ்ரீ கார்யத்திடம் கேட்டார்கள். கோவிலேயே அதிக நேரம் தினம் இருந்து இறைவனையே நினைத்துக் கொண்டே இருந்தார். அதனால் வேலையில் கவனமின்மை ஆனதால் யார் வெட்டினர் என தெரியாமல் போனது. என்ன விபரம் கொடுப்பது என்று புரியாது அவர் திகைத்தார். சரியான பதில் தராத காரணத்தால் நீதிமன்றதுக்கு வந்து வழக்கை சந்திக்குமாறு அதிகாரி உத்தரவிட்டு கடிதம் அனுப்பினார். ஒரு தவறும் செய்யாத தன் மேல் வீண் பழி வந்ததே என்று மன வருத்தத்துடன் இருந்தார்.

தர்ம சாஸ்தா கோவிலின் திருவிழா நடைபெற்று வந்த காலம் அது. உன்னை நினைத்து நினைத்து வாழ்ந்த நான் கஷ்டத்தோடு இங்கே இருக்கிறேன். உனக்கு விழாவா என்று எண்ணிக் கொண்டே இரவு படுக்க சென்றார். அன்றிரவு தர்ம சாஸ்தா அவர் கனவில் வந்து நாளை நீதிமன்றத்தில் நீதிபதி மரங்கள் வெட்டியது யார்? என்று கேட்டால் எல்லாம் மணிகண்டனுக்கு தெரியும் என்று மட்டும் சொல் என்றார். மறுநாள் கோர்ட்டில் ஆங்கிலேய நீதிபதி இவரிடம் கேள்விகள் கேட்க இவரும் எல்லாம் தெரிந்தவன் மணிகண்டன் தான் அவன் வந்து சாட்சி சொல்லுவான்’ என்றார். அதை கேட்ட நீதிபதி மணிகண்டனை அழைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற ஊழியர் மணிகண்டன் மணிகண்டன் மணிகண்டன் என மும்முறை அழைத்தார். பின்னர் நீதிபதி சாட்சிக் கூண்டில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் யாரோடு பேசுகிறார் என அங்கே இருந்த அனைவரின் கண்களுக்கு புலப்படவில்லை. நீதிபதி தொடர்ந்து சாட்சி கூண்டில் இருந்தவரிடம் பேசிக்கொண்டே இருந்தார். பின்னர் ஸ்ரீகார்யத்தை நோக்கி மணிகண்டன் அளித்த கணக்குகளின்படி நீ நிரபராதி. உன் மேல் தவறில்லை’ என தீர்ப்பளித்தார்.

இந்த நிகழ்வைக் கண்டு நீதிமன்றத்திலிருந்த அனைவரும் ஆங்கிலேய நீதிபதிக்கு என்ன ஆனது என பேசிக்கொண்டனர். என்ன நடந்தது யாரிடம் பேசினார் இந்த நீதிபதி. ஸ்ரீ கார்யம் நிரபராதி என ஏன் நீதிபதி கூறினார். புரியாத புதிராக இருந்தது அங்கிருந்தவர்களுக்கு. தீர்ப்பு வந்தவுடன் ஸ்ரீ கார்யம் சாஸ்தா மீது கொண்ட பக்தியின் மேலீட்டால் மயங்கி விழுந்தார். தீர்ப்பு முடிந்து நீதிபதி தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்தார். வழக்கறிஞர்கள் சிலர் நடந்தது குறித்து நீதிபதியிடம் கேள்வி எழுப்பினர். எங்கள் கண்களுக்கு தெரியாத மனிதரிடம் பேசினீர்கள் என்றனர். நீதிபதி சாட்சி சொல்ல மணிகண்டன் என்பவர் வந்தார். அவர் கூறிய சாட்சிகளின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்கப்பட்டது என்றார். வந்தவர் சாதாரண மனிதன் அல்ல, அச்சன் கோவில் அரசன் அந்த தர்ம சாஸ்தா என்று பலரும் பதில் கூறினார்கள். அச்சன் கோவில் வந்தார் ஆங்கிலேய நீதிபதி. மூலஸ்தானத்தை பார்த்தார் நீதிபதி. அவருக்கு கோர்ட்டிற்கு வந்த கோலத்தில் சாஸ்தா காட்சி கொடுத்தார். உடனே வந்தது இவர் தான். இவர் தான் என உணர்ச்சி பூர்வமாக கத்தினார். சாஸ்தாவிடம் சரண் புகுந்தார் அந்த ஆங்கிலேய நீதிபதி.

இந்த ஆலயம் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் தாலுகாவில் அச்சன் கோவில் உள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற பஞ்ச சாஸ்தா கோவில்களில் இதுவும் ஒன்றாகும். மற்ற நான்கு கோவில்கள் குளத்துப்புழா ஆரியங்காவு சபரிமலை மற்றும் கந்தமாலா கோவில்கள் ஆகும். அச்சன் கோவில் என்ற ஊரின் பெயரால் அழைக்கப்படும் ஒரு ஆறு கோயிலுக்கு அருகில் உருவாகிறது. சபரிமலை கோயிலைப் போலவே அச்சன்கோவில் கோயிலிலும் பதினெட்டு படிகள் உள்ளன. அச்சன் சிலை கிழக்கு நோக்கி உள்ளது. இந்த பரசுராமரால் நிறுவப்பட்டது. இங்குள்ள ஐயப்பனின் பிரதிஷ்டை கேரளாவில் உள்ள மற்ற சாஸ்தா ஆலயங்களில் இருந்து மிகவும் தனித்துவமானது. இந்த சிலை ருத்ராட்ச சிலை என்று அழைக்கப்படுகிறது. அச்சன் தனது இரண்டு மனைவிகளான பூர்ணா மற்றும் புஷ்கலாவுடன் கிரிஹஸ்தாஷ்ரமியாக திருமண வாழ்க்கையை நடத்துபவராக சித்தரிக்கப்படுகிறார். விஷமுள்ள பாம்புக் கடிகளைக் குணப்படுத்துவதில் இந்த ஆலயம் புகழ் பெற்றது. இதனால் அய்யப்பன் பெரும்பாலும் மகாவைத்தியராக அருள் பாலிக்கிறார். சிலையின் வலது உள்ளங்கையில் எப்போதும் சந்தனம் மற்றும் தீர்த்தம் ஆகியவை இருக்கிறது. இவை மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கிறது. இக்கோயிலில் மாளிகைப்புறத்தம்மா துர்க்கை நாகராஜா நாகயக்ஷி கணபதி முருகர் கருப்பசுவாமி கருப்பாயி அம்மா செப்பனிமுண்டன் சப்பாணிமாடன் மாடத்தேவன் காளமாடன் கொச்சட்டிநாராயணன் ஷிங்காலி பூதத்தன் அருக்கோலத்தன் போன்ற உப தெய்வங்கள் உள்ளன. கோயிலின் பின்புறம் நாகர் உள்ளார்.