சுலோகம் -92

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-45

அர்ஜுனா வேதங்கள் மூன்று குணங்களின் செயல்களான போகங்களையும் அவற்றின் சாதனை முறைகளையும் தெளிவாக சொல்கின்றன. நீ இந்த மூன்று குணங்களையும் கடந்தவனாக இருப்பாயாக. போகங்களிலும் அவற்றின் சாதனங்களிலும் பற்று கொள்ளாதவனாக இரட்டைகளாக வரும் நன்மை தீமை இருள் வெளிச்சம் சுக துக்கம் போன்றவற்றிற்று ஆட்படாதவனாக நித்யப் பொருளான பரமாத்மாவிடம் நிலை பெற்று லோக சேமத்திற்காக பொருள் சேர்ப்பது அதனை காப்பாற்றுவது என்பதை விரும்பாதவனாக தனக்கு வசப்பட்ட மனமுடையவனாக ஆகக்கடவாய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சாத்விகம் இராஜசம் தாமசம் என்ற மூன்று குணங்களை வேதங்கள் சொல்கின்றன. மனிதனுக்கு மனிதன் குணம் மாறுபடும். இவை அனைத்தும் சாத்விகம் இராஜசம் தாமசம் குணங்கள் என்ற மூன்று வகைக்குள் அடங்கிவிடும்.

  1. சாத்வீக குணம் – மனிதனுக்கு ஞான ஒளியையும் நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது.
  2. ரஜோ குணம் – ஆசை பற்று முதலிய குணங்களை அளித்து கர்மங்களில் ஈடுபடத் தூண்டுகிறது.
  3. தாமசகுணம் – மயக்கம் சோம்பல் உறக்கம் முதலியவற்றை ஏற்படச் செய்கிறது.

மனிதனாக பிறந்தவன் ஏதேனும் ஒரு காரியம் செய்து ஏதேனும் ஒரு வித அனுபவம் பெற்றிருப்பான். இந்த அனுபவத்தில் முக்குணங்களின் கலவை அல்லது ஒரு குணமாவது நிச்சயமாக இருக்கும். இதனை தவிர்க்க முடியாது. இந்த உடலினாலும் அல்லது அதன் மூலம் செய்யப்படும் எந்த ஒரு செயலினாலும் வரும் பயன்கள் நம்முடையது அது நமக்கு வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருக்க வேண்டும். இதன் பயனாக மனிதர்களுக்கு இரட்டையாக வரும் மகிழ்ச்சி துயரம் மற்றும் விருப்பு வெறுப்பு இவற்றிற்கு ஆட்படாமல் சரிசமமான மனதுடன் எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கலாம். இதன் பயனாக நித்யப் பொருளான பரம்பொருளை இடைவிடாமல் சிந்தனை செய்து கொண்டு அதிலேயே மனம் அசையாமல் நிலைத்து நிற்கலாம். அதன் பயனாக உலக பொருள்களின் மீது பற்றோ அதனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமோ இருக்காது.

மனம் புத்தி புலன்கள் இவை மூன்றும் நம் வசத்தில் இல்லாதவரை இவை நமக்கு எதிரிகளாக இருக்கின்றன. இவற்றை தன் வசப்படுத்தியவன் மட்டுமே தன்னை கட்டுப்படுத்தியவன் ஆவான். ஆகவே அர்ஜூனா உன் மனம் புத்தி புலன்களை கட்டுப்படுத்தி உனக்கு வசப்பட்ட மனமுடையவனாக மாறுவாய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.