வாசுகி பாம்பின் மத்தியில் பால கிருஷ்ணன்

இந்த பாம்பு 1800 ஆண்டுகள் பழமையான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய தூணில் செதுக்கப்பட்டுள்ளது. முப்பரிமாண முறையில் இச்சிலை செதுக்கப்பட்டுள்ளது. சிலையின் மத்தியில் மிக சிறு உருவத்தில் பால கிருஷ்ணனை படுத்திருக்கிறார். இடம்: ஜம்புகேஸ்வரர் கோவில். திருவானைக்காவல் திருச்சி.

போகாசன மூர்த்தி

விஷ்ணு ஐந்து தலை அனந்தசேஷ நாகத்தின் மேல் மகாராஜ லீலாசனத்தில் அமர்ந்துள்ளார். விஷ்ணுவின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படமெடுத்துக் குடையமைத்துள்ளது. விஷ்ணு நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மேல் இடக்கை சக்கரத்தையும் மேல் வலக்கை சங்கையும் ஏந்தியுள்ளன. கீழ் இடக்கை இனம் காண முடியாத ஒரு பொருளைப் பற்றியுள்ளது. கீழ் வலக்கை தொடையில் வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் இருபுறமும் இரண்டு நாகினிகள் ஒயிலாக நின்றவாறு காட்சி தருகிறார்கள். சிற்பத்தின் இடது மூலையில் கருடன் நாகத்தின் மீது சாய்ந்தவாறு காட்சி தருகிறார். பூமாதேவி விஷ்ணுவின் இடது புறத்தில் வலது காலை மடக்கி அமர்ந்த நிலையில் நாகத்தின் மீது சாய்ந்தவாறு காட்சி தருகிறார். இடம்: பாதாமி குடைவரை கோவில். குகை எண் 3.

உக்ரநரசிம்மர்

இந்தத் தூணில் இருக்கிறானா உன் நாராயணன்? என்று இரணியன் தனது கதையால் தூணை அடித்த உடனே தூணைப் பிளந்து கொண்டு வந்த நாராயணனின் அவதாரம் உக்ரநரசிம்மர். இடம் ஸ்ரீபிரஹலாதன் கோவில் அஹோபிலம்.

நரசிம்மர்

விஷ்ணு பகவானின் அவதாரமான யோக நரசிம்மரின் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. நரசிம்மர் நான்கு கைகளுடன் உட்குடியாசனத்தில் அமர்ந்துள்ளார். நரசிம்மருக்கு 4 கைகள் உள்ளன. மேல் வலது கையில் சக்கரம் மற்றும் மேல் இடது கையில் சங்கு உள்ளது. மீதமுள்ள 2 கைகளும் கால்களும் யோகப்பட்டையுடன் உட்குடிகாசனத்தில் உள்ளது. டெரகோட்டா என்று அழைக்கப்படும் சுட்ட மண்ணினால் செய்யப்பட்டது. இடம் ஓடிசா மாநிலம். காலம் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுக்கு இடைபட்டது.

சிவனை மீன் வடிவில் வழிபட்ட திருமால்

சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று கடலுக்கடியில் ஒளிந்து கொண்டபோது திருமால் பெரிய மீனாக உருவம் தாங்கி கடலுக்கடியில் சென்று அவனை சம்ஹாரம் செய்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பின் அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் அழித்து தின்றது. ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி பெரிய கொக்கு வடிவமெடுத்து மீனின் கண்களை பிடுங்கி மீனின் செருக்கை அடக்கினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும் அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காணலாம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

நந்தியும் அனுமனும்

சைவத்தில் போற்றப்படும் நந்தி பகவானும் வைணவத்தில் போற்றப்படும் அனுமனும் ஆரத்தழுவி கொள்ளும் சுதை சிற்பம். இடம் நவ திருப்பதிகளுள் ஒன்றான திருவரகுணமங்கை கோயில்.

வாமனன்

சங்ககால ஏடுகளில் விஷ்ணு பகவானின் பிறந்த நாளும் வாமணன் அவதரித்த நாளும் ஒன்றுதான் என குறிப்புகள் கூறுகின்றன. மகாபலி என்ற அசுர குலத்தில் தோன்றிய மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும் போது திருமால் வாமனனாக (குள்ளமான உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் மகாபலி. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.

தன் நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினான் மகாபலி. அதன்படி ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள். இதனை நினைவு கூர்ந்து மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த சிற்பம் அமைந்துள்ள இடம் பாதாமி குடைவரை கோவில் கர்நாடக மாநிலம்.

கேசி வதம்

கேசி என்பவர் ஒரு அரக்கனாவார். பல்வேறு வடிவங்கள் எடுக்கும் திறன் பெற்ற கேசி கம்சனின் தூண்டுதலின் பேரில் கண்ணனைக் கொல்வதற்கு கோகுலத்திற்கு குதிரை வடிவத்தில் சென்றார். இவர் அரக்கன் என்பதை அறிந்த கண்ணன் குதிரையில் வடிவத்தில் இருந்த கேசியிடம் சண்டையிட்டு குதிரையின் வாயைப் பிளந்து கேசியைக் கொன்றான். இது கேசிவதம் ஆகும். கேசியை வதம் செய்த இடம் தற்போது கேசிகாட் என்று அழைக்கப்படுகிறது. கேசியை வென்றதினால் கண்ணன் கேசவன் என்று பெயர் பெற்றார். இந்த சிதிலமடைந்த சிற்பம் தற்போது இருக்கும் இடம்: மெட்ரோபாலிட்டன் அருங்காட்சியகம் நியூயார்க் நகரம்.