மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -15

கந்தர்வர்கள் கௌரவர்களின் கையை கட்டி கைது செய்து காம்யக வனத்திற்குள் பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். கௌரவர்களின் கதியை பார்த்து பீமன் அகமகிழ்வு எய்தி மிக நன்று மிக நன்று என்று கத்தினான். எங்களை ஏளானம் செய்ய திட்டம் போட்டவர்களின் வினைப்பயன் அவர்களையே சூழ்ந்து கொண்டது என்று கத்தினான். பழிக்குப்பழி வாங்கும் செயலை நாங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் எங்களின் பிரதிநிதிகளாக கந்தர்வர்கள் இச்செயலை செய்து விட்டார்கள் என்று உரக்க கூறினான். பீமனுடைய பேச்சை யுதிஷ்டிரன் ஆமோதிக்கவில்லை. நம்முடைய குடும்ப தகராறுகள் நம்முடனே இருக்கட்டும். எக்காரணத்தை முன்னிட்டும் வேற்றார் வந்து நம்முடைய உறவினர்களை தாக்குவதற்கு நாம் ஒரு போதும் அனுமதி தரக்கூடாது. அது மட்டுமில்லாமல் குடும்ப பெண்களையும் அவர்கள் சிறைபிடித்துச் செல்கின்றார்கள். குருவம்சத்துக்கு ஆபத்து என்று ஏதேனும் ஒன்று வந்தால் பாண்டவர்களாகிய நாமும் கௌரவர்களும் ஒன்று சேர்ந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று பீமனிடம் யுதிஷ்டிரன் கூறினான்.

துரியோதனன் தங்களை காப்பாற்றுமாறு தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டிருந்தது பாண்டவர்களுக்கு கேட்டது. யுதிஷ்டிரன் தனது சகோதரர்களிடம் யாரேனும் ஒருவர் ஆபத்தில் அகப்பட்டு இருந்தால் அவர்களை காப்பாற்றுவது என்பது ஒரு பொது விதி. இப்போது ஆபத்தில் நமது உறவினர்கள் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை காப்பற்ற நாம் அதிவிரைவாக ஒட நாம் கடமைப் பட்டிருக்கின்றோம். மேலும் துரியோதனன் காப்பாற்றுமாறு நம்மிடம் உதவி கேட்கிறான். இப்போது நான் யாக்ஞத்தில் ஈடுபட்டிருப்பதால் ஆயுதம் எதையும் கையாளலாகாது. ஆகையால் நீங்கள் நால்வரும் நமது உறவினர்களை காப்பாற்ற விரைந்து செல்லுங்கள் என்று உத்தரவிட்டார்.

யுதிஷ்டிரரின் ஆணைக்கு உட்பட்டு பாண்டவ சகோதரர்கள் நால்வரும் தங்களுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கந்தர்வர்களோடு வீராவேசத்தோடு போர்புரிந்தார்கள். இந்தப்போராட்டம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது கந்தர்வர்களின் தலைவன் சித்தரசேனன் தான் இன்னானென்று காட்டிக்கொண்டு அர்ஜூனன் முன் வந்து நின்றான். இவ்வளவு நேரம் பயங்கரமாக போரிட்டு வந்த அர்ஜூனன் இந்திரலோகத்தில் தனக்கு குருவாக இருந்த சித்திரசேனனை பார்த்ததும் அவர் முன்பு வீழ்ந்து வணங்கினான். யுத்தம் நிறுத்தப்பட்டது. கௌரவர்களை ஏன் கைது செய்து அழைத்துச் செல்கின்றீர்கள் என்று இந்திர லோகத்து குருவான சித்திரசேனனிடம் மிகுந்த வணக்கத்துடன் அர்ஜூனன் கேட்டான்.

அதற்கு சித்திரசேனன் கஷ்டதிசையில் இருக்கும் பாண்டவர்களை பரிகாசம் செய்யும் பொருட்டு கௌரவர்கள் ராஜரீதியில் உடை அணிந்து ஆடம்பரமாக வனத்திற்குள் வந்தார்கள். அவனது நோக்கத்தை அறிந்து வந்த நாங்கள் அவனை தண்டித்தல் பொருட்டு கைது செய்து அழைத்துச் செல்கின்றோம் என்றார்.

தொடரும்………

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -14

ரிஷிகள் முனிவர்கள் யோகிகள் ஆகியோர் யுதிஷ்டிரன் இருக்கும் இடத்திற்கு வந்து கொண்டே இருக்கின்றனர். கிருஷ்ணனும் அடிக்கடி பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களுக்கு தக்க ஆதரவு கொடுக்கின்றான். அங்கு ஓயாது வந்து கொண்டிருக்கும் விருந்தினர்களுக்கு திரௌபதி அறுசுவை உணவை திருப்திகரமாக கொடுத்துக் கொண்டிருக்கிறாள். யுதிஷ்டிரன் இருக்குமிடம் கைலாசத்துக்கு வைகுண்டத்திற்கும் நிகரானது போல் தென்படுகிறது. போர்க்கலையில் அவர்கள் உச்ச ஸ்தானம் பெற்றிருக்கின்றார்கள். என்று பிராமணன் திருதராஷ்டிரன் தெரிவித்தார்.

பிராமணன் கூறிய அனைத்தையும் கேட்ட திருதரஷ்டிரருடைய மனதில் பெரும் தடுமாற்றம் ஏற்பட்டது. அவருடைய மனதில் போராட்டம் பன்மடங்கு அதிகரித்தது. துரியோதனன் மீது அவர் வைத்திருந்த பாசம் அவனுடைய உள்ளத்தில் பன்மடங்கு இருந்ததாலும் பாண்டுவின் பிள்ளைகள் மீது அவர் வைத்திருந்த பாசம் வெறும் பெயரிலேயே இருந்ததும் அவரின் வேதனைக்கு காரணமாய் இருந்தது. அனைத்தையும் கேட்ட துரியோதனன் பாண்டவர்களிடம் ராணுவ பலம் இல்லை என்றும் தன்னுடைய ராணுவத்தை அசைக்க முடியாத படி தாம் பலப்படுத்தியிருப்பதாவும் எண்ணி உள்ளம் பூரிப்படைந்ததான். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தன்னுடைய ராணுவத்தை பற்றியும் அதனுடைய பலத்தை பற்றியும் திருதரஷ்டிரரிடம் விளக்கி கூறினான்.

கர்ணனும் சகுனியும் துரியோதனனும் சதியாலோசனை ஒன்று செய்தார்கள். காம்யக வனத்திற்கு அருகில் அஸ்தினாபுரத்திற்கு சொந்தமான மாட்டுப்பண்ணை ஒன்று இருந்தது. அதை தாங்கள் பார்வையிட போவதாக திருதராஷ்டிரனிடம் சொல்லி அவருடைய அனுமதியைப் பெறவேண்டும். பின் அத்திட்டத்தின் படி பாண்டவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பது அவர்களுடைய திட்டமாக இருந்தது. திருதராஷ்டிரரின் அனுமதியுடன் பெண்களை தங்களோடு அழைத்துக்கொண்டு பெருங்கூட்டமாக அவர்கள் புறப்பட்டு வனத்துக்குச் சென்றார்கள். அரச குடும்பத்து பெண்கள் ஆடம்பரத்துடன் பட்டாடைகள் நகைகள் அணிந்து இருப்பதை பார்த்து திரௌபதி தன் விதியை எண்ணி வருந்த வேண்டும். தாங்கள் ராஜபோகத்துடன் இருப்பதை பார்த்து பாண்டவர்களை வருத்தப்பட்டு துன்புறுதல் வேண்டும் என்றும் பல வகைகளில் அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு காம்யக வனத்திற்கு கிளம்பினார்கள்.

காம்யக வனத்திற்குள் வந்த கௌரவர் கூட்டத்தினர் அங்கு தூய நீர் நிறைந்திருந்த தடகம் ஒன்றை பார்த்தார்கள். முதலில் அதில் நீராடி தங்களை தெளிவுபடுத்திக்கொள்ள அவர்கள் விரும்பினார்கள். ஆனால் அங்கு ஏற்கனவே விண்ணுலகில் இருந்து வந்த கந்தர்வர்கள் நீராடிக் கொண்டிருந்தார்கள். கந்தர்வர்கள் நீராடிக்கொண்டிருந்தது கௌரவர்களுக்கு இடைஞ்சலாய் இருந்தது. ஆகவே அத்தடாகத்தை உடனே காலி பண்ணவேண்டும் என்று அவர்களுக்கு துரியோதனன் உத்தரவிட்டான். ஆனால் கந்தர்வர்கள் அந்த உத்தரவை முற்றிலும் நிராகரித்து துரியோதனனை பொருட்படுத்தவில்லை. அங்கு தகராறு ஒன்று ஏற்பட்டது. அதி விரைவில் தகராறு ஒரு பெரிய போராட்டமாக வடிவெடுத்தது. கௌரவர்கள் விரைவில் தோற்கடிக்கப்பட்டனர். கர்ணன் தன்னுடைய ரதத்தை இழந்து அவமானத்துக்கு ஆளானான். மேலும் தான் ஆபத்துக்கு ஆளாகாத வண்ணம் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். கந்தர்வர்கள் பெண்கள் உட்பட கௌரவர்கள் அனைவரையும் அவர்களது கைகளை கட்டி காட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -13

பாண்டவர்கள் காம்யக வனத்திற்கு திரும்பி வந்ததை அறிந்த கிருஷ்ணன் தன்னுடைய துணைவியான சத்தியபாமாவையும் அழைத்துக்கொண்டு பாண்டவர்களை பார்க்க வந்தான். இந்த சந்திப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. வனவாசத்தில் நடந்த அனுபவங்களை பாண்டவர்கள் கிருஷ்ணனிடம் தெரிவித்தார்கள். நகரில் இருக்கும் உப பாண்டவர்கள் அபிமன்யூ சுபத்திரை ஆகியோருடைய நலனை கிருஷ்ணர் பாண்டவர்களிடமும் தெரிவித்தார். அர்ஜூனன் தனக்கு இறைவனிடம் இருந்து கிடைத்த ஆயுதங்கள் தேவலோகத்து அனுபவங்கள் அனைத்தையும் கிருஷ்ணனிடம் தெரிவித்தான்.

சிரஞ்சிவியாகிய மார்கண்டேய மகரிஷி காம்யக வனத்தில் பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார். அவரை தொடர்ந்து நாரதமகரிஷியும் அங்கு வந்தார். மகாபுருஷர்களின் வருகையால் அந்த இடத்தில் தெய்வீகம் மேலோங்கியது. பக்தியை வளர்க்கும் கதைகள் கருத்துக்களை மார்க்கண்டேய மகரிஷி சிறப்பாக கூறினார். அவரிடம் இருந்த தெய்வீக ஆற்றலை பாண்டவர்கள் வேண்டியவாறு பயன்படுத்திக்கொண்டார்கள். அவர்கள் அங்கு இருந்ததில் காலம் வெகு விரைவாக சென்றது. கிருஷ்ணனும் மார்கண்டேய மகரிஷியும் விரைவில் உங்களுக்கு நல்லகாலம் வரும் என்றும் ஆசிர்வதித்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

வேதங்களை கற்றறிந்த தவத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்த யாத்திரை செய்யும் பிராமணன் ஒருவன் திருதராஷ்டிரரை அவருடைய மண்டபத்தில் சந்தித்தான். பாண்டவர்களை காம்யக வனத்தில் சந்தித்ததையும் அவர்களுடைய விவரங்களையும் திருதராஷ்டிரருக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தான். கௌரவர்கள் அனைவரும் அவர் சொல்வதை கேட்க ஆர்வமாக இருந்தார்கள். ஏனெனில் வஞ்சகமாக சூதாடி வனத்துக்கு விரட்டப்பட்ட பாண்டவர்களின் நிலைமையை அறிந்து கொண்டால் மேலும் தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படும். திருதராஷ்டிரர் பாண்டவர்களின் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருந்தான்.

பாண்டவர்களில் முத்தவனான யுதிஷ்டிரன் இப்போது மண்ணுலகிற்கு மட்டும் அல்லாமல் விண்ணுலகிற்கும் பயன்படுகின்ற ஏராளமான தபோபலன்களை பெற்றிருக்கின்றான். பீமன் அனுமனிடம் இருந்து புதிய உடல் திட்பத்தையும் வல்லமையையும் பெற்றிருக்கின்றான். அர்ஜுனன் தன்னுடைய தவத்தின் விளைவாக மகாதேவனிடமிருந்து பாசுபத அஸ்திரத்தை சிவ பிரசாதமாகப் பெற்று இருக்கின்றான். இந்திரன் அர்ஜுனனை இந்திர லோகத்திற்கு அழைத்துச் சென்று ஒப்புயர்வற்ற அஸ்திரங்களை வழங்கியிருக்கின்றான். நகுலன் சகாதேவன் திரௌபதி ஆகியோர்கள் தங்களுடைய தவத்தின் விளைவாக திண்ணிய மனப்பான்மை படைத்தவர்களாக மேலோங்கி இருக்கின்றார்கள்.

தொடரும்………..

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -12

யுதிஷ்டிரனிடம் பாம்பு கேள்வி கேட்க ஆரம்பித்தது. பிராமணன் என்பவன் யார்? அவனுடைய இலட்சணம் என்ன?

உண்மை, கொடை, பொறுமை, நல்லொழுக்கம், இரக்கம், தவம், கருணை ஆகிய குணங்களுடன் தவமும் தெய்வ சம்பத்தும் வாய்க்கப்பெற்று இருப்பவனே பிராமணன். பொறி புலன்களை அவன் வென்றவன். சத்திய விரதத்திலிருந்து அவன் மாறுவதில்லை. பரஞானத்தை நாடியிருப்பதும் அந்த பரஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் அவனுடைய தர்மமாகும். இதுவே பிராமணனுக்குரிய இலட்சணமாகும் என்று யுதிஷ்டிரர் சொல்லி முடித்தார்.

பாம்பு – எதை அறிந்தால் மனிதன் அனைத்தையும் அறிந்தவனாகின்றான்?

யுதிஷ்டிரன் – மாய பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருப்பது பிரம்மம். அந்த பிரம்மத்தை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான்.

பாம்பு – அறியத்தக்கது எது?

யுதிஷ்டிரன் – தேசம் காலம் வஸ்து ஆகிய எவற்றாலும் அளவிடமுடியாத எந்த இறைவனிடம் சென்று அடைந்து உயிர்கள் மீண்டும் பிறப்பெடுப்பதில்லையோ அந்த இறைவனே அறியத்தக்கவன்.

பாம்பு – சாதி பிறப்பை அடிப்படையாகக் கொண்டதா?

யுதிஷ்டிரன் – பிறப்பில் சாதி அடிப்படையாக கொண்டது இல்லை. அனைவரும் மனிதர்களாகவே பிறக்கின்றார்கள். பிறகு அவர்கள் அடைந்து வருகின்ற மனப்பரிபாகத்தை முன்னிட்டு மானுடன் ஒருவன் சாதியில் மேலோங்குகின்றான். இவ்வுலக இன்பங்கள் அனைத்தையும் அறவே துறந்து இறைவன் எண்ணத்திலேயே நிலைத்திருந்து மக்கள் எல்லோரையும் உயர்நிலைக்கு அழைத்துச் செல்பவன் பிராமணன் ஆகிறான். சமுதாய ஒழுக்க கட்டுப்பாட்டை முறையாக காப்பாற்றி வருபவன் க்ஷத்திரன் ஆகின்றான். சமுதாயத்தின் செல்வத்தை வளர்ப்பவன் வைசியனாகின்றான். தன்னுடைய சுயநலத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பவன் சூத்திரன் ஆகின்றான்.

பாம்பு – பிரம்மஞானி யார்? பிரம்ம ஞானத்தின் பயன் என்ன?

யுதிஷ்டிரன் – ஞானத்தின் சிகரமாகிய பிரம்மஞானத்தை பெறுவது வாழ்வின் முடிவான குறிக்கோள் ஆகும். பிரம்மஞானி ஒருவன் நான் உடல் அல்ல தான் ஆத்ம சொரூபம் என்பதை அனுபூதியில் அறிய வருகின்றான். அவன் இறப்பிற்கும் பிறப்பிற்கும் அப்பாற்பட்டவன். இவ்வுலகத்தின் இன்ப துன்பங்கள் அவனை தாக்காது. அவனே பிரம்மஞானி. பிரம்மஞானிகளிடம் தொடர்பு கொள்கின்ற மக்கள் அனைவரும் ஒழுக்கத்திலும் பரஞானவளர்ச்சியிலும் முன்னேற்றமும் அடைகின்றனர்.

பாம்பு கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் யுதிஷ்டிரன் சரியான பதில் கூறியதும் அகத்தியர் இட்ட சாபம் முடிவுற்றது. மலைப்பாம்பு உயிர் அற்றதாக நழுவி கீழே விழுந்தது. பாம்பின் உடலில் இருந்த நகுஷன் ஜோதிமயமாக கிளம்பினான். சொர்க்கத்திலிருந்து ரதம் கீழே இறங்கி வந்து அவனை விண்ணுலகு அழைத்துச் சென்றாது. ரதம் மேல் நோக்கி செல்வதற்கு முன் யுதிஷ்டிரனை நகுஷன் ஆசிர்வதித்தான். பீமன் பழையபடி வலிமையான மனிதன் ஆனான். மானுட வாழ்க்கையில் அமையக்கூடிய அதிசயங்களையெல்லாம் வியந்து கொண்டே அண்ணனும் தம்பியும் தங்களுடைய காம்யக வனத்திற்கு திரும்பிச் சென்றனர்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -11

காம்யக வனத்தில் பாண்டவர்கள் தங்கிய போது ஒருநாள் பீமன் அருகில் இருந்த வனத்திற்குள் வேட்டைக்கு சென்றான். காட்டுக்குள் வெகு தூரம் சென்று விட்டான். அடர்ந்த அந்த பகுதிக்குள் கந்தர்வர்கள் சித்தர்கள் தேவ ரிஷிகள் அப்சரஸ்கள் மட்டுமே உலாவும் இடம் அது. காட்டிற்குள் மிகவும் ரம்யமாக இருந்ததால் பீமன் உற்சாகத்தோடு அங்கே சென்று விட்டான். அப்போது அவன் கண்ணில் ஒரு மிகப் பெரிய பாம்பு ஒன்று தென்பட்டது. பாம்பு பீமனை பார்த்ததும் கண் இமைக்கும் நேரத்தில் அது பீமனை தனது உடலால் சுற்றி இறுக்கியது. பலம் மிக்க பீமனால் அதனிடமிருந்து விடுபட முடியவில்லை. பீமன் அதிர்ச்சி அடைந்தான். அப்பாம்பு அவனைப் பிடித்துக் கொண்டதும் அவனிடத்தில் இருந்த வலிமை அனைத்தும் அவனை விட்டு போய் விட்ட அனுபவம் அவனுக்கு உண்டாகியது. நொடிப்பொழுதில் விவேகம் ஒன்று அவன் உள்ளத்தில் உதயமானது. உடல் வலிமை நிலையற்றது. உடல் வலிமையை சார்ந்திருக்க கூடாது என்று எண்ணினான். வலிமையை இழந்தாலும் தைரியத்தை பீமன் இழந்து விடவில்லை.

பாம்பின் வடிவில் இருக்கும் நீ யார் என்னை சுற்றி பிடித்துக் கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய். யுதிஷ்டிரனுடைய தம்பி பீமன் நான் என்று பாம்பிடம் கூறினான். அதற்கு மலைப்பாம்பு நான் மிகவும் பசியோடு இருக்கிறேன் உன்னை சாப்பிட விரும்பி உன்னை பிடித்தேன். ஆனால் உன்னை யாரென்று நீ அறிமுகப்படுத்தியதன் விளைவாக உன்னை சாப்பிட நான் தயங்குகிறேன். நான் நகுஷ மன்னன். இந்திர லோகத்தில் இந்திரனாக பதவி ஏற்றேன். அப்போது சொர்க்க வாசத்தில் மண்ணுலகில் நான் பெற்ற செல்வத்தை முன்னிட்டு எனக்கு கர்வம் உண்டாயிற்று. ஆகையால் அகத்திய மகரிஷி எனக்கு சாபமிட்டார். அவரிட்ட சாபத்தின்படி நான் மண்ணுலகில் நெடுங்காலம் மலைப் பாம்பாக வாழ்ந்திருக்க வேண்டும். அப்பொழுது யுதிஷ்டிரன் என்முன் வந்து என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளித்து சம்வாதம் செய்து வெற்றி பெறுவான். அதன் விளைவாக எனக்கு விமோசனம் கிடைக்கும். உன்னை நீ அறிமுகப்படுத்தியதன் வாயிலாக என்னுடைய பழைய சம்பவங்கள் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது என்று பாம்பு கூறியது.

பீமனை காணாமல் காட்டிற்குள் தேடி பாண்டவ சகோதரர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் சென்றார்கள். அப்பொழுது யுதிஷ்டிரன் பீமனை தேடிக்கொண்டு அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான். பீமன் மலைப்பாம்பிடம் அகப்பட்டு இருந்த காட்சியை பார்த்து அவன் திகைத்துப் போனான். எனினும் அதிவிரைவில் அவன் தன் மனதை தேற்றிக்கொண்டு அங்கு நிகழ்ந்தவற்றை விசாரித்தான். பாம்பு தன் வரலாற்றை முழுவதுமாக விளக்கியது. மலைப் பாம்பாக இருந்தது தன்னுடைய மூதாதையர் நகுஷன் என்பதையும் ஒரு சாபத்தின் விளைவாக இந்த நிலைக்கு அவன் வந்திருப்பதை அறிந்த யுதிஷ்டிரன் தன்னுடைய மூதாதையராகிய பாம்பின் முன்னிலையில் வீழ்ந்து வணங்கினான். பிறகு இருவருக்கும் இடையிலான சம்பாஷணை தொடர்ந்தது.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -10

யுதிஷ்டிரனுக்கு அர்ஜுனன் கற்றுக்கொண்ட ஆற்றல் வாய்ந்த தெய்வீக அஸ்திர சாஸ்திரங்களையும் அவற்றை உபயோகிக்கும் முறையையும் தெரிந்து கொள்ளும் ஆவல் உண்டாயிற்று. ஆகவே அர்ஜுனனிடம் அதைப் பற்றி விளக்கமாக கூறுமாறு கேட்டுக் கொண்டான். அர்ஜுனன் தான் கற்றுக்கொண்ட தெய்வீக அஸ்திர சஸ்திர வித்தைகளையும் அதை உபயோகிக்கும் முறையையும் அதன் சக்திகளையும் விளக்க ஆயத்தமானான். அப்பொழுது அங்கு நாரத மகரிஷி பிரசன்னமாகி ஓர் எச்சரிக்கை செய்தார்.

இயற்கையின் வல்லமைகள் அனைத்தையும் மண்ணுலகவாசிகள் அறிந்தவர்கள் அல்லர். அப்படி அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. வலிமையற்ற மனிதன் ஒருவனிடம் இந்த அஸ்திர சாஸ்திரங்களின் வல்லமை விளக்கப்பட்டால் அவன் அவைகளை முறையாக கையாள இயலாமால் தவிப்பான். அல்லது அந்த சக்திகளை துஷ்பிரயோகம் செய்வான். தெய்வீக ஆயுதங்கள் மன சக்தியை அடிப்படையாகக் கொண்டவை. அவை மண்ணுலக்கு உரியவைகள் அல்ல. அந்த அஸ்திரத்தில் அமைந்திருக்கும் சக்தி அளப்பரியதாகும்.
அந்த ஆயுதங்களின் வேகத்தை தங்குவதற்கு ஏற்ற வலிமை மண்ணுலகில் இல்லை. வெறும் பயிற்சி முறையில் அவைகளை கையாண்டு பார்த்தாலும் மண்ணுலகம் தாங்காது. ஆகையால் தான் அவைகளின் பயிற்சி பெறுவதற்கு என்று அர்ஜுனன் மண்ணுலகில் இருந்து பிரித்தெடுத்து தேவேந்திரன் விண்ணுலகிற்கு அழைத்துச் சென்றான். இத்தகைய தெய்வீக அஸ்திரங்களுக்கு உரியவனாக அர்ஜுனன் ஒருவன் மட்டுமே உள்ளான். முற்றிலும் அவசியம் ஏற்பட்டாலொழிய அந்த அஸ்திரங்களை அவன் கையாளலாகாது. முற்றிலும் சுதாரிக்கக்கூடிய சாதாரண சந்தர்ப்பங்களில் அவைகளை பிரயோகிக்கும் எண்ணமே அர்ஜுனனின் உள்ளத்தில் உதயம் ஆகாது. அத்தகைய மன உறுதி படைத்தவன் அர்ஜுனன். ஆகையால் இந்த தெய்வீக அஸ்திரங்களை பற்றி பேச வேண்டாம் என்று அவர் நாரதர் எச்சரிக்கை செய்தார்.

பாண்டவர்கள் வனவாசத்தில் பிரவேசித்து பத்து ஆண்டுகள் ஆகியது. கஷ்ட நேரம் என கருதப்பட்ட இந்த பத்து ஆண்டு வனவாசத்தை பாண்டவர்கள் ஆத்ம பலத்தை பெருக்குவதற்கு நன்கு பயன்படுத்தி கொண்டார்கள். அதன் அறிகுறியாக பத்து ஆண்டுகள் விரைவாக சென்றது. பத்ரிகாஸ்ரமத்தின் மகிமையும் எழிலும் அவர்களின் உள்ளத்தை கவர்ந்தது. ஆகையால் அந்த இடத்தை விட்டு காலி செய்துவிட்டு வேறு இடம் செல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை. ஆயினும் செய்து முடிக்க வேண்டிய ஏனைய முக்கியமான காரியங்கள் பாக்கி இருந்ததால் எஞ்சி இருக்கும் இரண்டு வருடங்களை போக்குவதற்கு அவர்கள் காம்யக வனத்திற்கு திரும்பிப் வந்தார்கள்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -9

பீமன் குரங்கிடம் நீங்கள் சாதாரண குரங்கு அல்ல. நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன், உங்கள் முன் நான் மண்டியிடுகிறேன் என கூறி குரங்கின் முன் வீழ்ந்து வணங்கினான். பாண்டவ சகோதரர்களில் ஒருவன் நான். நீங்கள் யாரென்று தயவு செய்து கூறுங்கள் என்று கேட்டான். அதற்கு குரங்கு வாயு பகவானுடைய அனுக்கிரகத்தால் அஞ்சனா தேவிக்கு மகனாகப் பிறந்தவன் நான். சிறிது நேரத்திற்கு முன் அனுமனைப் பற்றி கூறினாயே அந்த அனுமன் நான் தான். நான் ராமதாசன். நீ எனக்கு தம்பி என்று கூறி தன் சுய ரூபத்தை அடைந்த அனுமன் பீமனுக்கு ஆசி வழங்கி பீமனை கட்டித் தழுவினார். அதன் விளைவாக தன்னிடத்தில் புதிய ஆற்றல் வந்ததை போல் பீமன் உணர்ந்தான். பீமனுக்கு அனுமான் வரம் ஒன்று கொடுத்தார்.

வரத்தின் படி போர் களத்தில் பீமன் சிங்கமாக உறுமும் போது அனுமானின் குரலும் சேர்ந்து கொள்ளும். அதனால் பாண்டவர்களின் சேனையில் பலமும் கௌரவர்கள் சேனையில் குழப்பமும் உண்டாகும். நான் அர்ஜுனனின் ரதத்தில் உள்ள கொடியில் இருப்பேன். நீ ஜெயம் கொள்வாய் என அனுமான் ஆசி அளித்தார். இப்போது கௌரவ சகோதரர்களுடன் இனி நிகழும் போராட்டத்தில் வென்று விடக்கூடிய வல்லமை பீமனுக்கு வந்தது. சௌகந்திகா மலரை பறிக்க தான் நீ வந்திருக்கிறாய் என எனக்கு தெரியும். நீ மலர்களை எடுக்க போகும் பாதையில் ஆபத்து இருக்கிறது. இது ஆண்டவர்களுக்கான பாதையாகும். மானிடர்களுக்கு இது பாதுகாப்பானது அல்ல. ஆதனால் உன்னை எச்சரிக்கவே நான் வந்தேன். இந்த மலர் இருக்கும் குளத்தை நான் உனக்கு காண்பிக்கிறேன். உனக்கு வேண்டிய பூக்களை எடுத்து கொண்டு செல் என கூறினார். பீமனும் பூக்களை எடுத்து வந்து திரௌபதியிடம் அளித்தான். அர்ஜூனன் சென்று நீண்ட நாட்கள் ஆகிவிட்ட படியால் அர்ஜூனனுடைய வரவிற்காக பாண்டவ சகோதரர்கள் பத்ரிகாஸ்ரமத்தில் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் வானத்தில் மிகவும் பிரகாசத்துடன் இந்திரனுடைய மேன்மை தாங்கிய ரதம் நிலவுலகை நோக்கி வந்தது. அது பூமியில் வந்து இறங்கிய உடன் அர்ஜுனன் அதிலிருந்து குதித்து இறங்கினான். தேவலோகத்து தந்தை கொடுத்திருந்த ஆயுதங்களையும் கீரிடத்தையும் அவன் அணிந்திருந்தான். வந்தவன் தனது மூத்த சகோதரர்களான யுதிஷ்டிரனையும் பீமனையும் வணங்கினான். அந்த சந்திப்பில் பூரிப்பு நிறைந்திருந்தது. அர்ஜுனன் சிவனோடு கொண்ட இணக்கம் இந்திரலோகத்தில் வாழ்ந்த வாழ்வு அங்கு பெற்ற பயிற்சிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கினான் அவன் வாழ்ந்து வந்த வாழ்வின் விவரங்கள் அனைத்தையும் விரிவாக அறிந்து கொள்ள சகோதரர்கள் விரும்பினார்கள் அவர்கள் விரும்பியபடி அனைத்தையும் அர்ஜுனன் சளைக்காது அவர்களுக்கு எடுத்துக் கூறினான்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -8

பாண்டவர்கள் தெய்வீகம் நிறைந்த பல இடங்களைப் பார்த்த பிறகு கைலாச கிரியை அடைந்தனர். சாந்திக்கு உறைவிடமாக அந்த இடம் திகழ்ந்து கொண்டிருந்தது. பத்ரிகாஸ்ரமம் என்னும் புண்ணிய ஸ்தலம் அந்த வட்டாரத்தில் இருந்தது. அந்த இடம் நரன் நாராயணன் என்னும் ரிஷிகள் பண்டைய காலத்தில் தவம் செய்த இடம். அங்கு சில காலம் தங்கினார்கள்.

பத்ரிகாஸ்ரமம் இருக்கும் காட்டில் இயற்கை எழிலுடன் இருந்தது. ஒரு நாள் காலையில் தரையில் முளைத்திருந்த செடிகளில் மலர்ந்திருந்த விதவிதமான நிறங்களை உடைய மலர்களை பார்த்து திரௌவுபதி மகிழ்வுற்று இருந்தாள். அப்பொழுது வடகிழக்கு திசையிலிருந்து அடித்த காற்றானது ஓர் அற்புதமான மலரை அங்கு கொண்டுவந்து போட்டது. அந்த மலர் மிக்க அழகுடனும் நறுமணத்துடனும் இருந்தது. திரௌபதி அதை எடுத்து பீமனிடம் காட்டி இந்த மலர் வளர்ந்து இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து சில மலர்களை கொண்டு வந்து கொடுக்கும்படி அவள் அவனிடம் வேண்டிக் கொண்டாள். அவளுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைக்க பீமனும் உற்சாகமாய் காட்டிற்குள் புறப்பட்டுப் போனான். யானை ஒன்று புதர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு சஞ்சரிப்பது போன்று இருந்தது பீமனுடைய நடை. அவன் போன போக்கை முன்னிட்டு பறவைகளும் விலங்குகளும் நாலா பக்கமும் பரந்து ஓடின.

பருத்த மேனியுடன் குரங்கு ஒன்று காட்டு வாழை மரங்கள் நிறைந்திருந்த இடத்தில் படுத்திருப்பதை பீமன் பார்த்தான். பெரிய அந்த குரங்கை தூங்கத்தில் இருந்து எழுப்ப இடி இடித்தார் போல் பீமன் கத்தினான். உறக்கத்திலிருந்த குரங்கு ஒரு கண்ணை சிறிது திறந்து பார்த்தது பண்புள்ள ஒரு பெருமகன் போன்று நீ தோன்றுகின்றாய். ஆனால் ஒரு பாமரன் போன்று வனத்தில் வசித்து வரும் உயிரினங்களை நீ உபத்திரவப் படுத்துகிறாய். அனைத்து உயிர்களிடத்திலும் ஒழுங்காக நடந்து நடந்து கொள்வதே அறச்செயல் என்று குரங்கு கூறியது. அதற்கு பீமன் நீ சொல்வது எனக்கு புரிகிறது. ஆனால் நான் அவசரமாக போய்க் கொண்டிருக்கிறேன். தயவு செய்து நான் செல்வதற்கு எனக்கு வழி விடு என்று கூறினான். அதற்கு குரங்கு நான் மிகவும் களைத்துப் போய் அரைத்தூக்கத்தில் இருக்கிறேன். என்னால் எழுந்து கொள்ள இயலாது. என்னை குதித்து தாண்டி கொண்டு நீ போகலாம் என்று அனுமதி கொடுத்தது.

என்னை விட நீ வயதில் முதிர்ந்தவனாக இருக்கின்றாய். உன்னை தாண்டி செல்வது மரியாதை ஆகாது. நீ என்னை விட இளையவனாக இருந்தால் அனுமன் கடலைத் தாண்டியது போன்று நான் உன்னை தாண்டி இருப்பேன். ஆனால் என்னால் இப்பொழுது அப்படி செய்ய இயலாது என்று கூறினான். அப்படியானால் ஒரு பக்கம் எனது வாலை ஒதுக்கி தள்ளி வைத்துவிட்டு உனக்கு தேவையான பாதையை அமைத்துக் கொண்டு செல் என்று குரங்கு கூறியது. ஒரு வயது முதிர்ந்த குரங்குக்கு வரம்பு கடந்த மரியாதை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று பீமன் எண்ணிக்கொண்டு அந்த குரங்கின் வாலை தன் இடக்கையால் தூக்கி வைக்க அவன் முயன்றான். ஆனால் குரங்கின் வாலை தூக்க அவனால் இயலவில்லை. பிறகு இரண்டு கைகளாலும் தூக்க முயன்றான். தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தினான். வால் அசையவில்லை. பீமனுக்கு தன்னுடைய வாழ்நாளில் ஏற்பட்ட முதல் தோல்வி இது.

தொடரும்……….

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -7

பாண்டவர்கள் நால்வரும் திரௌபதியும் தீர்த்த யாத்திரையை கிழக்குப் பகுதியிலும் தெற்குப் பகுதியில் முடித்துக்கொண்டு மேற்கு கடற்கரை மார்க்கமாக விருஷ்ணிகள் வாழும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் பிரபாஸை என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தார்கள் அவர்களுடைய வருகை பற்றிய செய்தி விருஷ்ணிகளுக்கு எட்டியது. பலராமனையும் கிருஷ்ணனையும் தலைமையாகக் கொண்டு விருஷ்ணிகள் தீர்த்த யாத்திரை செய்து கொண்டிருந்த தங்களுடைய உறவினர்களை சந்திக்க விரைந்து சென்றனர். சந்திப்பு இருதரப்பினருக்கும் பெரும் மகிழ்வை ஊட்டியது. தன்னுடைய தோழன் அர்ஜுனன் இந்திரலோகத்தில் தெய்வீக அஸ்திர சாஸ்திரங்களையும் இன்னிசை பயிற்சியும் பெற்று வருவதை கேட்டு கிருஷ்ணன் பெருமகிழ்வுற்றான்.

அப்போது பலராமன் துரியோதனன் திருட்டுத்தனமாக பாண்டவர்களின் ராஜ்யத்தை அபகரித்து அதை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றான். இந்த ராஜ்யத்துக்கு சொந்தக்காரர்கள் காட்டில் எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கும் பொழுது துரியோதனன் பட்டாடை அணிந்து கொண்டு சுகவாசியாக இருக்கின்றான். பாண்டவர்கள் போதாத உணவு அருந்தி தவித்துக் கொண்டிருக்கும் பொழுது துரியோதனன் ராஜபோகத்தில் மூழ்கி இருக்கின்றான். தர்மம் கஷ்டதிசையில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது அதர்மம் தலைதூக்கி வருகிறது. பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டவளின் உறவினர்களாகிய நாம் வலிமையற்றவர்களாக இருந்து இந்த அக்கிரமங்களை சகித்துக் கொண்டு வருகின்றோம் என்றும் இந்த சூழ்நிலை தமக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினான்.

பலராமன் கூறியதை கேட்ட சாத்யகி கோபத்துடன் கௌரவர்கள் செய்யும் அனைத்து செயலுக்கும் நாம் அனுமதி தருவது சரியாகாது. கொடுமை வாய்ந்த கௌரவர்களை அறவே தோற்கடிக்கும் வல்லமை விருஷ்ணிகளிடத்தில் இருக்கிறது. நாம் படையெடுத்துச் சென்று அபகரிக்கப்பட்ட ராஜ்யத்தை மீட்டெடுத்து அபிமன்யுவை அதற்கு தற்காலிக மன்னனாக நியமித்து வைப்போம். தான் கொடுத்துள்ள வாக்குகள் அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு யுதிஷ்டிரன் திரும்பி வரும் வரையில் அவனுக்கு வாரிசாக இருக்கின்ற அபிமன்யு மன்னன் ஸ்தானத்தில் இருக்கட்டும் என்றாள்.

கிருஷ்ணர் புன்னகையுடன் பாண்டவர்களுக்கும் நமக்கும் உள்ள உறவு யாராலும் அழிக்க முடியாது. இது யுதிஷ்டிரன் பொறுமையோடு காத்திருக்கும் பொழுது அவனுடைய திட்டத்தில் நாம் அவசரப்பட்டு நுழைந்து அதற்கு கேடு ஏதும் செய்யலாகாது. அவருக்கு நாடாள்வதை விட மேலானது சத்தியவிரதம். இப்பொழுது அவர் வலிமையற்று இருப்பவர் போன்று தென்படுகிறார். தக்க காலம் வருகிற பொழுது அவர் திறமையை வெளிப்படுத்துவார். அப்போது நாம் அனைவரும் அவரோடு சேர்ந்து கொள்வோம் என்றார். யுதிஷ்டிரனுக்கு பெருமகிழ்வு உண்டாயிற்று. ஏனென்றால் அவன் எண்ணத்தை கிருஷ்ணன் சரியாக அறிந்து கொண்டிருந்தான். விருஷ்ணிகளோடு சிறிதுகாலம் உறவாடிய பிறகு பாண்டவர்கள் பிரபாஸை விட்டு புறப்பட்டு வடதிசை நோக்கிச் சென்றனர்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -6

பிருஹதஸ்வரர் என்னும் மாமுனிவர் வனவாசத்தில் இருந்த யுதிஷ்டிரனை பார்க்க காம்யக வனத்திற்கு வந்தார். யுதிஷ்டிரன் அவருக்குத் தக்க மரியாதையுடன் வழிபாடுகள் செய்து வரவேற்றான். சூதாட்டத்தில் இறங்கி தனக்குத் தானே கேடுகளை வரவழைத்துக் கொண்ட மன்னர்களில் மிகவும் கடைபட்டவன் நான் தான் என்று முனிவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அதற்கு முனிவர் சூதாட்ட செயலில் இறங்கி தனக்குத் தானே கேடுகளை வரவழைத்துக்கொண்ட நளனுடைய நிலைமை இதைவிட பரிதாபகரமானது என்றார். பிருஹதஸ்வரர் முனிவர் கெட்டுப்போன நளமகாராஜன் பற்றியும் தமயந்தி மகாராணியை பற்றியும் அவர்களின் வரலாற்றை விரிவாக எடுத்து விளக்கி சொன்னார். பிறகு தன் சொந்த முயற்சியாலேயே நளன் ராஜ்யத்தை மீட்டெடுத்த வரலாற்றைப் பற்றியும் அவர் விளக்கினார். நளனுடைய வீழ்ச்சி கொடியதிலும் கொடியது. அத்தகைய நளனுக்கு விமோசனம் கிடைத்தது என்றால் தனக்கு ஏன் விமோசனம் கிடைக்காது என்று யுதிஷ்டிரன் யோசித்தான். பிருஹதஸ்வரர் நளனைப்பற்றி கூறிய கருத்துக்கள் யுதிஷ்டிரனுக்கு மிகவும் ஊக்கம் தந்தது. தனக்கும் தன் சகோதரர்களுக்கும் நல்ல காலம் வரும் காலத்தை ஆவலோடு எதிர்பார்த்தான். பிருஹதஸ்வரர் யுதிஷ்டிரனிடம் இருந்து விடைபெற்றார்.

அர்ஜுனன் தங்களை விட்டு பிரிந்து போய் நெடு நாட்கள் ஆயிற்று என்று பாண்டவ சகோதரர்கள் அவனைக் குறித்து ஏக்கம் கொண்டனர். அவன் எங்கே போயிருக்க கூடும் என்று அவர்கள் எண்ணிக்கொண்டு இருந்த போது இந்திரனால் அனுப்பப்பட்ட ரோமச மஹரிஷி பாண்டவர்கள் முன் தோன்றினார். தான் இந்திரலோகத்தில் சென்றிருந்த வரலாற்றை விளக்கினார் விண்ணுலகில் அர்ஜுனன் அடைந்து வந்த முன்னேற்றங்கள் அனைத்தையும் தெளிவாக விளக்கினார். அதைக்கேட்ட பாண்டவ சகோதரர்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சி உண்டாயிற்று. புதிய ஊக்கம் அவர்களிடத்தில் உருவெடுத்தது. நெடுநாள் தங்களை விட்டுப் பிரிந்து போயிருந்த சகோதரனைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ள அவர்கள் ஆவலுடன் ரோமச மஹரிஷியிடம் கேள்விகள் கேட்டனர். கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் விடை கொடுத்தார் ரோமச மஹரிஷி. இந்திரலோகத்தில் அர்ஜுனன் அடைந்து வந்த பயிற்சிகள் யாவும் பூர்த்தியானவுடன் அவன் திரும்பி தங்களுடன் வந்து சேர்வான். அதற்குள்ளாக நிலவுலகில் பாண்டவ சகோதரர்கள் தீர்த்த யாத்திரை செய்வது நன்மை பயக்கும் என்று விண்ணுலக வேந்தன் இந்திரன் சொல்லி அனுப்பிய செய்தியும் அவர்களுக்கு ரோமச மஹரிஷி கூறினார். தலயாத்திரை போகின்ற அவர்களுக்கு அரிய பெரிய மேலான கருத்துக்கள் உள்ளத்தில் இடம் பெறும் நல்ல எண்ணங்கள் உள்ளத்தை விட்டு அகன்று போவதில்லை. ஆகவே புண்ணிய ஷேத்திரங்கள் தீர்த்த யாத்திரை போகின்ற கருத்தை யுதிஷ்டிரன் மிகவும் வரவேற்றான்.

புண்ணிய பூமியாகிய பாரதத்தில் புண்ணிய க்ஷேத்திரங்கள் ஏராளமாக அமைந்திருக்கின்றன. முனிவர்கள் தவம் செய்த இடம். யோகம் செய்வதற்கு ஏதுவாக இருந்த தபோவனங்கள். ஆத்ம சாதனைகள் பல புரிந்து இறைவனை அடைவதற்கு பயன்பட்ட ஆசிரமங்கள் புண்ணிய நதிக்கரைகள் மலைகள் கோவில் ஆகிய இடங்களுக்கு பாண்டவ சகோதரர்கள் கடினமான விரதம் இருந்து பக்திபூர்வமாக தீர்த்த யாத்திரை செய்தார்கள்.