ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 16

அனுமன் மயக்கமடைந்தது போல் பாசாங்கு செய்கிறார். அப்படியே விட்டால் இந்த வானரம் திடீரென்று எழுந்து நம்மை தாக்கக் கூடும். அவரை உடனே கயிற்றால் கட்டி விடலாம் என்று ஒரு ராட்சசன் கூறினான். அருகில் இருந்த ராட்சசர்கள் அனைவரும் அமோதித்து ஒரு பெரிய கயிற்றை கொண்டு வந்து அனுமனை கட்டினார்கள். மந்திர பிரம்மாஸ்திரத்தினால் கட்டப்பட்டு இருப்பவர்களை தூலப்பொருளான கயிறு கொண்டு கட்டினால் பிரம்மாஸ்திரம் செயலற்றுப் போகும் என்பதை அறிந்திருந்த இந்திரஜித் வானரத்தை கயிரால் கட்டாதீர்கள் என்று கத்தினான். ராட்சசர்கள் வெற்றி முழக்கத்தில் போட்ட கூச்சலில் தூரத்தில் நின்றிருந்த இந்திரஜித் சொன்னது யார் காதிலும் விழவில்லை. ராட்சசர்கள் அனுமனை கட்டியதை தடுக்க முடியாமல் தவித்த இந்திரஜித் நம்முடைய பிரம்மாஸ்திரம் வீணாகப் போய் விட்டதே விரைவில் இந்த வானரம் எழுந்து யுத்தம் செய்ய வந்து விடுவான். மீண்டும் வானரத்தின் மீது பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்க முடியாதே என்று மிகவும் வருத்தப்பட்டான்.

அனுமன் தன்னை கட்டிய பிரம்மாஸ்திரம் அவிழ்ந்து போனதை உணர்ந்தார். சாதாரண கயிற்றினால் கட்டப்பட்டிருப்பதை பார்த்த அனுமன் தன் வலிமையால் ஒரு கனத்தில் இந்த கயிற்றை அறுத்து விடலாம். ஆனால் கயிற்றை அறுக்காமல் நாம் இப்படியே இருப்போம். இவர்கள் நம்மை ராவணனிடம் அழைத்துச் செல்வார்கள். அவனிடம் பேசுவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இதனை பயன்படுத்திக் கொண்டு ராவணனை சந்தித்து அவனை பயமுறுத்தி வைக்கலாம் என்று அனுமன் அமைதியாக இருந்தார். ராட்சசர்கள் தனது கைகளினால் அனுமனை அடித்தும் திட்டியும் பரிகாசம் செய்து கொண்டே ராவணனின் அரண்மனை வரை இழுத்துச் சென்றார்கள். ராவணனை பயமுறுத்தியே ஆக வேண்டும் என்று அனைத்தையும் அனுமன் பொறுத்துக் கொண்டார்.

அனுமனை ராவணன் முன்பு கொண்டு போய் நிறுத்தினார்கள். ராவணன் பட்டுப் பீதாம்பரமும் கண் கூசும் ஆபரணங்களுடன் ரத்தின கீரீடத்துடனும் அரசவையில் கம்பீரமாக ஒரு மலை போல் அமர்ந்திருந்தான். ராட்சசர்களின் இவ்வளவு நேரம் செய்த கொடுமைகளில் அமைதியாக இருந்த அனுமன் ராவணனை பார்த்ததும் சீதைக்கு அவன் செய்த கொடுமைகள் ஞாபகம் வந்தது பெருங்கோபம் கொண்டு சித்திக்க ஆரம்பித்தார் அனுமன். எழிலுடனும் பராக்கிரம சாலியாக இருக்கும் இந்த ராவணன் தர்மத்தில் இருந்து விலகாமல் இருந்து சத்தியத்தை கடைபிடித்திருந்தால் தேவலோகத்தில் இருப்பவர்கள் கூட இவனுக்கு ஈடாக மாட்டார்கள். ராவணன் தான் பெற்ற வரங்களையும் மேன்மையையும் தவறான காரியங்கள் செய்து அனைத்தையும் இழந்து விட்டானே என்று அவன் மீது பரிதாப்பட்டார் அனுமன். ராவணன் தன் மந்திரிகளிடம் யார் இந்த வானரம் இலங்கைக்குள் எதற்காக வந்தான் என்று விசாரியுங்கள் என்று உத்தரவிட்டான். மத்திரிகளில் ஒருவரான பிரஹஸ்தன் என்பவன் அனுமனிடம் வந்து வானரனே யார் நீ? எதற்காக இங்கே வந்தாய்? வானர வேடம் அணிந்து வந்திருக்கின்றாயா? உன்னை அனுப்பியது யார்? இந்திரனா இல்லை குபேரனா வேறு யாராவது உன்னை ஏவினார்களா? உண்மையை சொல்லி விட்டால் இங்கிருந்து நீ உயிரோடு தப்பிக்கலாம் மறைக்காலம் சொல் இல்லையென்றால் இங்கிருந்து உயிருடன் செல்ல முடியாது என்றான்.

அனுமன் பேச ஆரம்பித்தார். இந்திரனாவது குபேரனாவது யாரும் என்னை அனுப்பவில்லை. வேடம் அணிந்து கொண்டும் நான் இங்கு வரவில்லை. வானர அரசனான சுக்ரீவனின் தூதுவனாக நான் இங்கே வந்தேன். ராட்சச அரசனான ராவணனை பார்க்க விரும்பினேன். அதற்கு சரியான அனுமதி எனக்கு கிடைக்காது என்பதை அறிந்தேன். அதற்காக வனத்தை அழித்தேன். என்னை கொல்ல வந்தவர்களை நான் அழித்தேன். இப்போது உங்கள் முன்பு நின்கின்றேன். உங்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வானர அரசன் சுக்ரீவன் ராவணனை தன் சகோதரனாக பாவித்து உங்களின் நலத்தை விசாரிக்கச் சொன்னார் என்ற செய்தியை முதலில் உங்களிடம் சொல்லி விடுகின்றேன் என்றார்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 15

அனுமன் அஷனை கொன்ற பிறகு வழக்கம் போல் அசோக வனத்தின் மதில் சுவற்றின் மீது அமர்ந்து கொண்டார். தேவர்களுக்கு நிகரான ராவணனின் புதல்வன் அஷன் கொல்லப்பட்ட செய்தி அறிந்த இந்திரன் அனுமனைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பல முனிவர்களும் தேவர்களும் ஆகய வழியாக வந்து அனுமனைப் பார்த்து வாழ்த்தி விட்டுச் சென்றார்கள். ராவணனால் அழைக்கப்பட்ட இந்திரஜித் தன் தம்பி அஷன் ஒரு வானரத்தால் கொல்லப்பட்டான் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தான். விரைவாக அரசவைக்குள் வந்து ராவணனின் முன் வந்து நின்று தனது வணக்கத்தை தெரிவித்தான். ராவணன் இந்திரஜித்திடம் பேச ஆரம்பித்தான். இந்திரனுக்கு சமமான வீரன் நீ. எல்லா அஸ்திரங்களையும் நன்றாக பயின்று அதனை அடைந்திருக்கிறாய். நம்மை எதிர்த்த தேவர்களையும் அசுரர்களையும் யுத்தத்தில் வென்று இருக்கின்றாய். பிரம்மாவை தவம் செய்து பூஜித்து அவரிடமிருந்து பிரம்மாஸ்திரம் பெற்று இருக்கின்றாய். உன்னை எதிர்த்து யுத்தம் செய்யக் கூடியவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. அறிவில் சிறந்த நீ காரியங்களை சரியாக யோசித்து செய்வதில் உனக்கு நிகர் யாருமில்லை. அசோக வனத்தில் ஒரு வானரம் நம்மை எதிர்த்துக் கொண்டு இருக்கிறது. தேவர்களின் சூழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் அனுப்பிய கிங்கரர்கள் ஜமாலி நம்முடைய சேனாதிபதிகள் 5 பேர் உனது அருமை தம்பி அஷன் அத்தனை பேரும் அந்த வானரத்தால் கொல்லப்பட்டார்கள். நீ தான் அந்த வானரத்தை வெல்லும் வல்லமை கொண்டவன். அந்த வானரத்தை நமது சேனைகளின் பலத்தால் வெல்ல முடியாது. அந்த வானரத்தின் அறிவாற்றலையும் வல்லமையையும் பராக்கிரமத்தையும் சிந்தித்து பார்த்து உன்னுடைய தவ பலத்தை உபயோகித்து சிறந்த அஸ்திரத்தை பயன்படுத்தி கைது செய்து இங்கே வெற்றியுடன் திரும்பி வா என்று சொல்லி இந்திரஜித்தை அனுப்பி வைத்தான் ராவணன். இந்திரஜித் தந்தையே வலம் வந்து ஆசி பெற்றுக்கொண்டு நான்கு சிங்கங்கள் பூட்டிய தேரில் நின்று வில்லின் நானை இழுத்து சப்தம் செய்து அசோக வனத்தை நோக்கிச் சென்றான். அவன் பின்னே ராட்சச சேனைகள் பெரும் கூட்டமாக வந்தார்கள்.

அனுமனுக்கு தூரத்தில் ஒரு கூட்டம் வருவது தெரிந்தது மீண்டும் யுத்தம் செய்வதற்கு தயாரானார். இந்திரஜித் தன்னுடைய வில்லில் அம்பு மழை பொழிந்தான். அனைத்து அம்புகளில் இருந்தும் அனுமன் லாவகமாக தப்பினார். சில அம்புகள் அனுமன் மீது பட்டாலும் அந்த அம்புகளால் அனுமனின் வஜ்ரம் போன்ற உடம்பை துளைக்க முடியவில்லை. இந்திரஜித் விட்ட அம்புகள் அனைத்தும் பயனற்றுப் போனது. ராட்சசர்கள் ஏற்படுத்திய பேரிகை நாணோசை சத்தங்களுக்கு எதிராக அனுமனின் கர்ஜனை சத்தம் பெரிதாக இருந்தது. இருவருக்கிடையிலும் நடந்த யுத்தம் இருவரின் சாமர்த்தியத்தையும் வலிமையையும் காட்டியது. யுத்தம் நீண்டு கொண்டே சென்றது. இந்திரஜித் சிந்திக்க தொடங்கினான். எத்தனை அம்புகள் விட்டாலும் இந்த வானரத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. தந்தை சொன்னது முற்றிலும் சரியே. நமது தவத்தினால் பெற்ற அஸ்திரத்தை உபயோகித்து இந்த வானரத்தை அடக்க வேண்டும் என்று முடிவு செயதான். பிரம்மாவிடம் இருந்து பெற்ற பிரம்மாஸ்திரத்தை அனுமன் மீது எய்தான் இந்திரஜித். பிரம்மாஸ்திரம் அனுமனை செயல் இழக்கச் செய்து கீழே தள்ளியது.

அனுமன் நம்மை கட்டியது பிரம்மாஸ்திரம் என்பதை தெரிந்து கொண்டார். பிரம்மா தனக்கு அளிந்த சிரஞ்சீவி பட்டத்தையும் அந்தநேரம் அவர் சொல்லிய செய்திகளையும் ஞாபகம் செய்து கொண்டார். ஒரு முகூர்த்த நேரம் மட்டுமே இந்த அஸ்திரம் நம்மை கட்டி வைக்கும் அதன் பிறகு செயலற்றுப் போகும் இதனால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்த ஒரு முகூர்த்த நேரத்தில் இந்த ராட்சசர்களால் என்ன செய்ய முடியும் பார்க்கலாம் என்று பிரம்மாவின் பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு தரையில் விழுந்து அமைதியாக இருந்தார். அனுமன் கீழே விழுந்து செயலற்றுப் போய் விட்டார் என்று அறிந்த ராட்சசர்கள் அனுமனுக்கு அருகில் வந்து சூழ்ந்து கொண்டு இந்திரஜித்தை புகழ்ந்தும் அனுமனை தின்று விடுவோம் என்றும் கோசம் போட ஆரம்பித்தார்கள்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 14

அனுமன் பிடிக்க வந்த ராட்சசர்களின் கூட்டத்தை ராவணனின் ஐந்து சேனாதிபதிகள் வழி நடத்திக் கொண்டு வந்தார்கள். அனுமனை பல வகையான ஆயுதங்கள் கொண்டு தாக்கினார்கள். ராட்சசர்களின் எந்த ஆயுதத்தாலும் வஜ்ராயுதம் போல் இருந்த அனுமனை கட்டுப்படுத்த முடியவில்லை. அனுமன் வழக்கம் போல் மரங்களை வேரோடு பிடுங்கி அவர்கள் மீது எறிந்தும் பெரிய பாறைகளை தூக்கி வீசியும் சிலரை கால்களால் மிதித்தும் கொன்றார். சேனாதிபதிகள் வந்த தேரின் மீது குதித்து தேரை பொடிப் பொடியாக்கினார். ஐந்து சேனாதிபதிகளும் இறந்தனர். அவர்களுடன் வந்திருந்த ராட்சசர்களில் உயிர் பிழைத்தவர்கள் பயந்து ஓடி வீட்டார்கள். அனுமன் மீண்டும் அசோகவனத்தின் மதில் சுவற்றின் மீது அமர்ந்து கொண்டார்.

அனுமனை பிடிக்கச் சென்ற ஐந்து சேனாதிபதிகளும் இறந்து விட்டனர் என்ற செய்தி ராவணனுக்கு சிறிது பயத்தை கொடுத்தது. ஒரு தனி வானரம் எப்படி இவ்வளவு பலமுடனும் பராக்கிரமத்துடனும் இருக்கின்றான். தலை சிறந்த சேனாதிபதிகளையும் வீரர்களையும் கொன்றது சாரணமான நிகழ்வு அல்ல. தேவர்கள் ஏதோ சூழ்ச்சி செய்திருக்கின்றார்கள் என்று ராவணன் கவலையுடன் இருந்தாலும் தன் கவலையை முகத்தில் காட்டாமல் சிரித்த முகத்துடன் அனுமனை பரிகாசம் செய்து சிரித்தான். தன் சபையில் இருப்பவர்களை சுற்றிப் பார்த்தான். ராவணனின் மகன் அஷன் மிக உற்சாகமாக எழுந்து நின்றான். அந்த வானரத்தை நான் தனியாக சென்று பிடித்து வருகின்றேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் என்று ராவணனிடம் கேட்டான். யுத்தத்திற்க்கு பயப்படாமல் தைரியமாக முன் நின்ற தன் வீர மகனைப் பார்த்து பெருமை கொண்ட ராவணன் அனுமனை பிடித்து வர அனுமதி கொடுத்தான். தேவர்களுக்கு சமமான வாலிப வீரனான அஷன் தான் தவம் செய்து பெற்ற தன்னுடைய எட்டு குதிரைகள் பூட்டிய தங்க ரதத்தில் ஏறி அசோக வனத்தை நோக்கி சென்றான். சாதாரண வானரத்துடனே போர் புரியப்போகின்றோம் சில கனத்தில் அந்த வானரத்தை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தான் அஷன். அவனுடன் மிகப்பெரிய ராட்சச படைகள் பின்னே சென்றது.

அனுமனின் பெரிய உருவத்தையும் இவ்வளவு பெரிய ராட்சச படைகளை கண்டும் பயமில்லாமல் நின்ற அனுமனின் கம்பீரத்தையும் கண்ட அஷன் தன்னுடைய வீரத்திற்கு சரி சமமான விரோதியுடனே யுத்தம் செய்ய போகின்றோம் என்று மகிழ்ந்த அஷன் அந்த வானரத்தை பிடிக்க சிறிது நேரமாகும் போலிருக்கிறதே என்று எண்ணினான். இருவருக்கும் இடையில் கடும் யுத்தம் நடந்தது. அஷன் அனுமனின் மீது எய்த அம்புகள் மேகங்களின் கூட்டம் போல் கிளம்பி மலை மேல் மழை பொழிவது போல இருந்தது. அனுமனுடைய வஜ்ரம் போன்ற உடம்பை அஷனின் அம்புகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆகாயத்தில் மேகங்களுக்கு நடுவில் பறப்பது போல் அம்புகளுக்கு இடையில் சென்ற அனுமன் அஷனை தாக்கினார். ராட்சச படைகளை பறந்து தாக்கி சிதறடித்தார். ராவணனின் குமாரனாகிய அஷனின் சாமர்த்தியம் வீரம் பொறுமை ஆகிவற்றை கண்ட அனுமன் இவ்வளவு சிறிய வயதில் பெரிய வீரனாக இருக்கின்றானே இவனை கொல்ல வேண்டுமா என்று வருத்தப்பட்டு விளையாட்டாக யுத்தம் செய்து நேரத்தை கடத்தினார். ராட்சசர்களுடைய பலம் பெருகிக் கொண்டே சென்றது. இறுதியில் அனுமன் அஷனை கொன்று விடலாம் என்று மனதை உறுதிப்படுத்திக் கொண்டு அஷனுடைய தேரின் மேல் குதித்தார். தேர் பொடிப்பொடியானது. குதிரைகள் இறந்தது. தனியாக தரையில் நின்ற அஷன் தன்னுடைய வில்லுடனும் கத்தியுடனும் ஆகாயத்தில் கிளம்பி அனுமனை தாக்கினான். இருவருக்கும் இடையிலான போர் ஆகாயத்தில் நடந்தது. அஷனுடைய எலும்புகளை உடைத்து உடலை நசுக்கி கொன்றார் அனுமன். அஷன் வானரத்தால் கொல்லப்பட்டான் என்ற செய்தி அறிந்ததும் ராவணன் இதயம் துடித்தது. கோபத்தில் கத்தினான் தன் உள்ளத்தை ஒரு நிலையில் வைத்துக்கொள்ள முடியாமல் இந்திரனுக்கு சமமான வீரனான இந்திரஜித்தை அழைத்தான்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 13

அனுமன் அசோகவனத்து மதில் சுவற்றின் மேல் அமர்ந்திருப்பதை கண்ட ராட்சசர்கள் அனுமனை தாக்க முற்பட்டார்கள். அனுமன் ராட்சசர்களை கண்டதும் அசோகவனத்தின் வாயில் கதவில் இருந்த பெரிய இரும்பு கட்டையை பிடுங்கி எதிர்கொண்ட ராட்சசர்கள் அத்தனை பேரையும் எதிர்த்து யுத்தம் செய்தார். மரங்களை வேரோடு பிடுங்கி அவர்களின் மீது எறிந்தார். வந்திருந்த ராட்சசர்களை ஒருவர் பின் ஒருவராக அழித்து விட்டு மீண்டும் அசோகவனத்தின் மதில் சுவற்றின் மேல் அமர்ந்து கொண்டு வாழ்க ராமர் வாழ்க லட்சுமணன் வாழ்க சுக்ரீவன் என்று கர்ஜனை செய்த அனுமன் ராட்சசர்களை உங்களுக்கு அழிவு காலம் வந்து விட்டது. எங்களது பகைவர்களான உங்களை அழிக்க வந்திருக்கின்றேன். ஆயிரம் ராவணன்கள் இருந்தாலும் இப்போது என்னிடம் யுத்தம் செய்ய வரலாம். என்னை எதிர்க்க வரும் அனைவரையும் அழிக்க நான் தயாராக நிற்கின்றேன். உங்கள் நகரத்தை இப்பொழுது அழிக்க போகின்றேன் என்று இலங்கை நடுங்கும்படி அனுமன் கர்ஜித்தார். வானரத்தை பிடிக்கச் சென்ற ராட்சசர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை கேட்ட ராவணன் மிகுந்த கோபத்துடன் கொதித்து எழுந்து கர்ஜனை செய்ய ஆரம்பித்தான். ராட்சசர்களின் நிகரற்ற வீரனான பிரகஸ்தனுடைய மகனான ஜம்புமாலி என்பவனை அழைத்து அந்த வானரத்தின் கொட்டத்தை அடக்கிவிட்டு வா என்று உத்தரவிட்டான் ராவணன். ஜம்புமாலி ராட்சசன் கவசம் அணிந்து கொண்டு தனது கொடூரமான ஆயுதங்களுடன் அசோகவனம் கிளம்பினான்.

அனுமன் அருகில் இருக்கும் பெரிய மண்டபத்தின் மேலே ஏறி நின்றார். பெரிய உருவத்தில் இருந்த அனுமன் நிற்பது இலங்கையின் மேல் ஆகாயத்தில் ஒரு பொன்மயமான மலைத்தொடர் இருப்பது போல் இருந்தது. இலங்கையை அழிக்க வந்திருக்கிறேன் என்று கர்ஜனை செய்த அனுமனின் சத்தம் நகரத்தின் எட்டு திசைகளிலும் எதிரொலித்தது. அனுமனின் சத்தத்தை கேட்ட பல ராட்சசர்களின் உள்ளம் நடுங்கியது. அந்த பெரிய மண்டபத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த ராட்சசர்கள் அனுமன் மீது பல பயங்கர ஆயுதங்களை தூக்கி எறிந்து தாக்கினார்கள். அனுமன் மண்டபத்தின் தூணாக இருந்த தங்கத்தினால் செய்யப்பட்டு வைரத்தினால் அலங்கரிக்கப்பட்ட தூணை பிடுங்கி எதிர்த்த ராட்சசர்களின் மீது எறிந்தான். தூணை எடுத்ததும் பெரிய மண்டபம் கீழே இடிந்து விழுந்தது. தாக்கிய ராட்சசர்கள் அனைவரும் அழிந்தனர். இஷ்வாகு குலத்தின் ராஜ குமாரன் ராமரின் பகையை ராவணன் சம்பாரித்துக் கொண்டான். அதன் விளைவாக என்னைக் காட்டிலும் வலிமையான வானரர்கள் சுக்ரீவன் தலைமையில் வரப் போகின்றார்கள் உங்களையும் உங்கள் நகரத்தையும் அழிக்கப் போகின்றார்கள் என்று அனுமன் கர்ஜனை செய்தார். அனுமனின் சத்தத்தில் பல ராட்சசர்கள் ஓடி ஒளிந்தனர்

அனுமன் இருக்கும் இடத்திற்கு ஜம்புமாலி தனது படைகளோடு வந்து சேர்ந்தான். பெரிய கோவேறு கழுதைகள் பூட்டிய தேரில் ஆயுதங்களுடன் வந்திருக்கும் ராட்சசனை பார்த்த அனுமன் தாக்குதலுக்கு தயாரானார். தேரிலிருந்த ஜம்புமாலி அனுமன் மீது அம்புகளை எய்தான். ஒரு அம்பு அனுமனின் உடம்பை தாக்கி லேசாக ரத்தம் வந்தது இதனால் கோபமடைந்த அனுமன் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து ஜம்புமாலி மீது எறிந்தார். அதிலிருந்த ஜம்புமாலி மீண்டு வருவதற்குள் ஒரு பெரிய ஆச்சா மரத்தை வேரோடு பிடுங்கி தேரின் மீது வீசினார். தேர் இருந்த இடம் தெரியாமல் பொடிப் பொடியாய் போனது. உடன் வந்த ராட்சச வீரர்கள் அனைவரையும் அழித்தார் அனுமன். ஜம்புமாலியின் பெரிய ராட்சச உடம்பு நசுங்கி கை கால் தலை என அடையாளம் தெரியாமல் அனைத்தும் தரையோடு தரையாக பிண்டமானது. யுத்தத்தின் முடிவில் ஜம்புமாலி இறந்த செய்தி ராவணனுக்கு தெரிவிக்கப்பட்டது. வலிமையான வீரன் ஜம்புமாலி இறந்த செய்தியை கேட்ட ராவணன் திகைத்தான். வந்திருக்கும் வானரம் ஒரு மிருகம் போல் தெரியவில்லை. ஏதோ புதிதாக தெரிகின்றது. என்னுடைய பழைய பகைவர்களான தேவர்களின் சதியாக இருக்க வேண்டும் ஒரு புது வகையான பிராணியை உருவாக்கி இங்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்த வானரத்தை கட்டாயம் பிடித்து என் முன் கொண்டு வர வேண்டும் என்று தனது வலிமையான ராட்சச வீரர்களையும் அவர்களுக்கு துணையாக பெரும் சேனையையும் அனுப்பினான் ராவணன். பெரிய ராட்சசர்களின் கூட்டம் பெரும் படைகளாக அசோக வனம் நோக்கி சென்றார்கள்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 12

அனுமன் அசோகவனத்தின் மதில் மேல் அமர்ந்து சிறிது நேரம் யோசித்தார். ராமனிடம் சென்று சீதை இருப்பிடம் பற்றிய செய்தியைச் சொல்லி அனைத்து வானர படைகளுடன் இலங்கைக்கு வரும் வரை சீதை சுகமாக இருக்க வேண்டும். சீதையை யாரும் துன்புறுத்தக் கூடாது இதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்தார். செல்வத்திலும் சுக போகத்திலும் இருக்கும் ராட்சசர்களிடம் சமாதான வழியில் பேசிக் கொண்டிருக்க முடியாது. ராவணன் எப்பொழுதும் போல் கர்வம் கொண்டவனாக தினந்தோறும் வந்து சீதையை துன்புறுத்துவான். ராவணனுக்கும் அவனுடைய ராட்சசர்கள் கூட்டத்திற்கும் பயத்தை உண்டாக்கி விட வேண்டும். அப்படி செய்தால் ராவணனும் ராட்சசிகளும் சீதையை எந்த விதத்திலும் துன்புறுத்த மாட்டார்கள். சீதையை கண்டு பயப்படுவார்கள். நான் இப்போது இங்கு வந்தது கூட ராவணனுக்கு தெரியாது. நாம் வந்து சென்ற அடையாளத்தை ஏற்படுத்தி விட்டு பயத்தை உண்டாக்கி விடலாம் என்று எண்ணினார். இந்த காரியத்தை சிறிது நேரத்தில் முடித்து விட்டு விரைவில் ராமரிருக்கும் இடம் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தார் அனுமன். உடனே தனது உருவத்தை பெரிய வடிவமாக்கி கொண்டார். அசோகவனத்தை நாசம் செய்ய ஆரம்பித்தார். மரங்களை வெட்டி வீசினார். கொடிகளை நாசம் செய்து குவியல் போன்று வைத்தார். அலங்காரங்கள் அனைத்தையும் உடைத்து எறிந்தார். மிக ரம்மியமான அழகுடன் இருந்த அசோகவனம் இப்போது தன் அழகை முற்றிலும் இழந்தது. அங்கே இருந்த மான்களும் பறவைகளும் பயந்து ஓடி அசோகவனத்தை விட்டு வெளியேறின. தூங்கிக் கொண்டிருந்த ராட்சசிகள் சத்தம் கேட்டு எழுந்தார்கள். என்ன நடக்கிறது என்று காரணம் தெரியாமல் திகைத்தார்கள். அனுமன் நந்தவனத்தை அழித்து விட்டு மதில் மேல் ஏறி அமர்ந்தார்.

அனுமன் தன் உடலை மேலும் பெரிதாக்கி ராட்சசிகளை நிலைகுலைய வைத்தார். அனுமனின் பெரிய உடலைக் கண்ட ராட்சசிகள் பயந்து நடுங்கினார்கள். ராவணனிடம் சொல்வதற்காக சில ராட்சசிகள் ஓடினார்கள். சீதையிடம் சென்ற சில ராட்சசிகள் அசோகவனத்தை அழித்து விட்டு கோட்டையின் மதில் சுவரில் ஒரு பெரிய வானரம் அமர்ந்திருக்கிறது. இந்த வானரம் இங்கு எப்படி வந்தது. உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்த வானரம் உன்னிடம் ஏதாவது பேசியதா மறைக்காமல் உள்ளபடி சொல் பயப்படாதே என்றார்கள். ராட்சசிகள் சொல்லும் பெரிய உருவம் அனுமனாக இருக்குமோ என்று யோசித்த சீதை பார்க்காமல் நாம் ஒன்றும் சொல்ல முடியாது இவர்கள் நம்மை ஏமாற்றுவதற்காக எதாவது சொன்னாலும் சொல்லலாம் என்று முடிவுக்கு வந்து ராட்சசிகளிடம் பேச ஆரம்பித்தாள். இந்த ராட்சசர்கள் உலகத்தில் நடப்பவைகள் எல்லாம் மாய ஜாலமாக இருக்கிறது. இங்கு இருக்கும் ராட்சசர்கள் எல்லாம் அவர்கள் விருப்பம் போல் தங்கள் உருவத்தை மாற்றிக் கொள்கிறார்கள். வந்திருப்பது உங்கள் ராட்சச இனத்தை சேர்ந்தவனாக இருக்கலாம் உங்கள் நகரத்தில் உள்ளவர்களை பற்றி உங்களுக்கு தான் தெரியும் எனக்கு ஒன்றும் தெரியாது என்றாள்.

அனுமன் ராட்சசர்கள் வரட்டும் அவர்களை ஒரு வழி செய்து விடலாம் என்று மதில் சுவற்றில் சுகமாக அமர்ந்திருந்தார். ராவணனிடம் சென்ற ராட்சசிகள் அசோகவனத்தை ஒரு பெரிய வானரம் அழித்து விட்டு ராட்சசிகளை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சீதையை சுற்றி இருக்கும் மரங்கள் கொடிகளை மட்டும் அந்த வானரம் ஒன்றும் செய்யவில்லை. சீதையிடம் அந்த வானரம் ஏதாவது தகவல் சொல்ல வந்திருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது. சீதையிடம் கேட்டுப் பார்த்தோம் அவர் எனக்கு தெரியது என்று சொல்லி விட்டார். அந்த வானரத்தை அழிக்க தக்க ஆட்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். தன் சுகபோகத்திற்காக உருவாக்கப்பட்ட அசோகவனம் அழிந்து விட்டது என்ற செய்தியை கேட்ட ராவணன் மிகவும் கோபம் கொண்டான். தனது ராட்சச வீரர்களிடம் அந்த வானரத்தை பிடித்துக் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான் ராவணன். இரும்பு உலக்கைகள் கத்தி மற்றும் பலவிதமான கொடுர ஆயுதங்களுடன் ராட்சச வீரர்கள் அனுமனை பிடிக்க அசோகவனத்திற்கு விரைந்து சென்றார்கள்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 11

அனுமன் சீதையிடம் பேச ஆரம்பித்தார். தாயே நான் ஒருவன் தான் இந்த கடலை தாண்டக் கூடியவன் என்று எண்ணி விடாதீர்கள். சுக்ரீவனின் வானரப் படையில் உள்ளவர்கள் அனைவரும் பல யோசனை தூரம் தாண்டி பறந்து செல்லும் சக்தியை பெற்றிருக்கிறார்கள். என்னை விட சாமர்த்தியசாலியாக இருப்பார்கள். இந்த கடலை தாண்டுவது வானரப் படைகளுக்கு ஒரு பெரிதான காரியமில்லை. என்னை விட பலசாலிகளும் சாமர்த்தியசாலிகள் ஆகாய மார்க்கமாக பறந்து செல்பவர்களும் ஆயிரக்கணக்கில் எங்களிடம் இருக்கிறார்கள் தங்களுக்கு ஒரு சந்தேகமும் வேண்டாம். எனது முதுகில் ராமர் லட்சுமணன் இருவரையும் அமர்த்திக் கொண்டு விரைவில் இங்கு தாவி வந்து விடுவேன். ராமரும் லட்சுமணனும் விரைவில் வில் அம்புடன் இலங்கையின் எல்லையில் நிற்பார்கள். இந்த செய்தி தங்களின் காதுகளுக்கு வந்து சேரும். ராவணனையும் அவனை சார்ந்தவர்களையும் அடியோடு ராமர் லட்சுமனணும் அழிப்பதை பார்ப்பீர்கள். வானர சேனைகள் குதித்து கூத்தாடி இந்த இலங்கை நகரத்தை அழிப்பதை பார்ப்பீர்கள். தைரியமாக இருங்கள் என்று சீதையை வணங்கி நான் செல்கிறேன் எனக்கு அனுமதி அளியுங்கள். அதற்கு முன்பாக எனக்கு ஒரு விண்ணப்பம் இருக்கிறது அதற்கும் அனுமதி கொடுங்கள் என்று கேட்டார் அனுமன். அதற்கு சீதை என்ன என்று கேட்டாள்.

அனுமன் சீதையிடம் இந்த அசோகவனத்தில் உங்களின் இந்த அவலநிலையே கண்ட பின்பு நான் அப்படியே செல்ல விரும்பவில்லை. தங்களை கொடுமைப்படுத்தும் ராட்சசிகளை அழிக்க என் கைகள் துடிக்கின்றன. தயவு செய்து தாங்கள் இதற்கு அனுமதி கொடுங்கள் என்றார். ஆனால் சீதையோ உனது கோபம் அர்த்தமில்லாதது. ராவணன் இட்ட கட்டளையை நிறைவேற்றுவது ராட்சசிகளின் கடமை. தங்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள். இவர்களை தண்டிப்பது முறையாகாது என்று கூறினாள். தாயே ராவணனின் கட்டளையாக இருந்தாலும் இவர்கள் செய்தது தவறு தானே அதற்காக அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டாமா என வாதிட்டார். அதற்கு சீதை அனுமனே நீ சொல்வது போல் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்றால் முதலில் ராமரையும் என்னையும் உன்னையும் கூட தண்டிக்க வேண்டும் என்றாள் சீதை. திடுக்கிட்ட அனுமன் ராமர் என்ன தவறு செய்தார் என கேட்டார். ராவணன் என்னும் கொடிய ராட்சசனிடம் பதிவிரதையான தன் மனைவி சிக்கியிருக்கிறாள். அவளுக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் காலம் தாழ்த்தாமல் ஓடிவந்து என்னை காப்பாற்றாமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு தன்னுடைய ஆட்களை அனுப்பி தேடிக்கொண்டு காலம் கடத்திக் கொண்டிருக்கிறாரே இது அவர் செய்த குற்றமல்லவா என சீதை பதிலளித்தாள்.

அனுமன் திகைத்து சீதையின் பதிலை அமோதித்துக் கொண்டு பதிவிரதையான தாங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று கேட்டார். எந்த பெண்ணும் தன் கணவரைப் பற்றி அடுத்தவரிடம் குறை கூறக்கூடாது. ஆனால் தற்போது உனக்கு புரிய வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ராமரைப் பற்றி உன்னிடம் நான் குறை சொல்கிறேன். இது நான் செய்த தவறு தானே என்றாள். மேலும் திகைத்த அனுமன் நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டார். அரசன் இட்ட பணியைச் செய்வது ராட்சசிகளின் கடமை. அதனைச் செய்து கொண்டிருக்கும் ராட்சசிகளை தண்டிக்க வேண்டும் என்று நீ நினைத்தது குற்றம். தவறு செய்யாதவர்களே இவ்வுலகில் இல்லை. தவறு செய்வது மனித இயல்பு. அதை உணர்ந்து மனம் வருந்தி அதை திருத்திக் கொள்வதே சிறந்த மனிதனின் அடையாளம் என்றாள் சீதை. இதைக் கேட்ட அனுமன் தனது கோபத்தை விட்டு ராட்சசிகளை துன்புறுத்தாமல் சீதையை வணங்கி அவளிடம் இருந்து விடைபெற்றான். நான் உயிரோடு இருக்கிறேன் என்ற செய்தியை ராமர் லட்சுமணனிடம் சொல்லி விரைவாக அவர்களை இங்கே அழைத்துவா உனக்கு ஜெயம் உண்டாகட்டும் என்று வாழ்த்தி அனுமனுக்கு அனுமதி கொடுத்தாள் சீதை. அங்கிருந்து கிளம்பினார் அனுமன்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 10

அனுமன் கூறியதை கேட்ட சீதை இவ்வளவு சிறிய வானரமாக இருக்கும் இந்த அனுமன் எப்படி நம்மை தூக்கிக் கொண்டு 100 யோசனை தூரம் இந்த கடலை தாவிச் செல்வார் என்று ஆச்சரியப்பட்டு சந்தேகித்தாள். சீதையின் சந்தேகத்தை உணர்ந்த அனுமன் தனது வலிமையை சீதைக்கு காண்பிப்பதற்காக தனது உருவத்தை மிகவும் பெரிதாக்கிக் காட்டினார். இதைக் கண்ட சீதை பெருமகிழ்ச்சி அடைந்தாள். அனுமனே உனது சக்தியை நான் உணர்ந்தேன். நான் உன்னுடன் வந்தால் கடலைத் தாண்டிக் கொண்டிருக்கும் போது வழியில் யாராவது ராட்சசர்கள் உன்னை தடுத்து யுத்தத்திற்கு அழைப்பார்கள். ஆயுதங்களை நம் மீது வீசி எறிவார்கள். நீ என்னையும் பாதுகாத்துக் கொண்டு யுத்தத்திலும் உனது கவனத்தை செலுத்துவது மிகவும் கடினமாகும். எவ்வளவாக வலிமை மிக்கவனாக இருந்தாலும் யுத்தத்தில் வெற்றி என்பது உறுதியானது அல்ல. உனக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்தால் நான் இங்கே இருக்கும் செய்தி ராமருக்கு தெரியாமலேயே போகும். ராட்சசர்கள் ஆயுதங்களை உன் மீது எறியும் போது உன் முதுகில் நான் எப்படி தைரியமாய் அமர்ந்திருப்பேன். கடலில் நான் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. அடுத்தது ராவணன் என்னை வஞ்சகமாக தூக்கிச் சென்றான். நீ என்னை யாருக்கும் தெரியாமல் தூக்கிச் சென்றால் நீயும் வஞ்சகமாக என்னை தூக்கி செல்வது போல் ஆகும். இது முறையானது அல்ல. இது ராமனுடைய வீரத்தை நாம் குறைவு படுத்துவது போலாகும். ராவணனை எதிர்த்து ராமர் போர் செய்து அவனை அழித்து விட்டு என்னை மீட்டால் தான் ராமரின் சத்ரிய குலத்திற்கு கௌரவமாக இருக்கும். நீ சென்று ராமரையும் லட்சுமணனையும் உங்களது வானர சேனைகளையும் இங்கே அழைத்துவா. நான் காத்திருக்கிறேன். ராமருடைய பானங்களால் இந்த இலங்கை அழிந்து ராவணன் எமன் உலகம் அனுப்பப்பட வேண்டும். விரைந்து சென்று வா என்று சீதை அனுமனிடம் கூறினாள்.

அனுமன் சீதையிடம் பேச ஆரம்பித்தார். ராமரிடம் நான் சென்றதும் என்ன சொல்ல வேண்டும் தங்களை கண்டு பேசியதற்கான அடையாளங்கள் என்று நான் எதை சொல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு சீதை ஒரு முறை தண்டகருண்ய காட்டில் ராமர் எனது மடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு காகம் என் முதுகில் கொத்திக் கொண்டே இருந்தது. நான் எவ்வளவு விரட்டியும் அது போகவில்லை கல்லைக் கொண்டு அதன் மீது எறிந்தும் போகவில்லை. என்னை மிகவும் துன்புறுத்தியது. முதுகில் காயத்துடன் இருந்த என்னை பார்த்த ராமர் முதலில் சிரித்தார். பின்பு காகம் பறவை அல்ல அது ஒரு ராட்சசன் என்பதை அறிந்து கோபம் கொண்ட ராமர் தனது அம்பை காகத்தின் மீது விட்டார். அம்பு காகத்தை விரட்டியது. ராட்சசன் அம்பிலிருந்து தப்பிக்க வழி இல்லாமல் தனது சுய ரூபத்தை எடுத்து ராமரின் காலில் விழுந்து சரணடைந்து பிழைத்துக் கொண்டான். இச் செய்தியை ராமரிடம் சொல் என்றாள். ராமரின் தம்பி லட்சுமணன் அவருக்கு துணையாக இருப்பதற்காகவே பிறந்தவன். ராமருக்கு நிகரான வலிமையும் சாமர்த்தியமும் உள்ளவன். தன் தந்தை இழந்த துக்கத்தை ராமரின் முகத்தை பார்த்து தீர்த்துக் கொண்டவன். வனத்தில் தன் தாயை மறந்து விட்டு என்னை தாயாக பாவித்து வந்தான். விரைவாக வந்து என் துயரத்தை போக்குவாய் என்று லட்சுமணனிடம் சொல் என்றாள். சிறிது யோசனை செய்த சீதை அனுமனிடம் தர்மத்தை அறிந்த ராமருக்கு என்னை நீ கண்ட அடையாளமாக ஒன்றும் சொல்ல வேண்டாம் அவருக்கே அனைத்தும் தெரியும் எனது வணக்கத்தை மட்டும் சொல் போதும் என்று தன் தந்தை தனக்கு கொடுத்திருந்த சூடாமணி ஆபரணத்தை அனுமனிடம் கொடுத்து அதனை ராமரிடம் கொடுத்துவிடு என்றாள்.

அனுமனிடம் சீதை கேள்வி கேட்டாள். நீ இங்கிருந்து சென்றதும் நான் மீண்டும் பழையபடி துக்கத்திற்கு சென்று விடுவேன். நீ உன் வலிமையால் இந்த கடலை தாண்டி வந்து விட்டாய். ராமரும் லட்சுமணனும் உங்களது வானர படைளும் எப்படி இந்த கடலை தாண்டி வருவார்கள். உனக்கு ஏதேனும் யோசனை இருந்தாள் சொல் நான் சிறிது ஆறுதலுடன் இருப்பேன் என்றாள்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 9

சீதை அனுமனிடம் பேச ஆரம்பித்தாள். வானர உருவத்தில் இருக்கும் உங்களை நான் சந்தேகப்பட்டேன் என்று நீங்கள் வருத்தப்படாதீர்கள். வஞ்சக ராட்சசனால் ஏமாற்றப்பட்டு தூக்கி வரப்பட்டேன். இதனால் எதையும் நம்ப முடியாமல் நான் பயப்படுகிறேன். நீங்கள் எப்படி ராமரை சந்தித்து நட்பு கொண்டீர்கள் விவரமாக சொல்லுங்கள் என்று சீதை அனுமனிடம் கேட்டுக் கொண்டாள். அனுமன் வாலிக்கும் சூக்ரீவனுக்கும் உள்ள பகைமை முதல் கடல் தாண்டி வந்து ராவணனின் அந்தப்புரத்தில் சீதையை தேடி இறுதியில் இந்த அசோக வனத்தில் சீதையை கண்டது வரை அனைத்தையும் சொல்லி முடித்தார். ராமரின் தூதுவன் நான் என்று தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று ராமர் தன்னுடைய மோதிரத்தை எனக்கு கொடுத்தார். அதனை தங்களிடம் அளிக்கிறேன் பாருங்கள் அப்போது என் மீது தங்களுக்கு நம்பிக்கை வரும் என்று ராமர் தன்னிடம் கொடுத்த மோதிரத்தை எடுத்து சீதையிடம் கொடுத்தார். சீதை மோதிரத்தை வாங்கி தனது கண்களில் ஒற்றிக் கொண்டாள். அனுமன் மீதிருந்த சந்தேகம் முற்றிலும் போய் அனுமன் மீது சீதைக்கு நம்பிக்கை வந்தது. உன் மீதா நான் சந்தேகம் கொண்டேன் என்று சீதை அனுமனிடம் வருந்தினாள். அனுமன் சீதையிடம் விரைவில் ராமர் விரைவில் இங்கு வந்து ராவணனை அழித்து தங்களை மீட்பார் கவலை வேண்டாம் என்று கூறினார்.

ராமரும் தன்னைப் பிரிந்த துக்கத்தில் இருக்கிறாரே என்று சீதை வருந்தினாள். நீங்கள் ராமரிடம் இருந்து கொண்டு வந்த செய்தி எனக்கு அமிர்தம் கலந்த விஷம் போல் உள்ளது. ராமர் விரைவில் இங்கு வந்து என்னை சந்திப்பார் நான் அவரை பார்க்கப் போகின்றேன் என்று மகிழ்வதா இல்லை ராமர் என்னை நினைத்து துக்கத்துடன் இருக்கிறார் என்று வருத்தப்படுவதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ராமர் என்னை மறக்காமல் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்னை தேடிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி எனக்கு ஆனந்தத்தை அளிக்கிறது. என்னுடைய செய்தியாக நான் சொல்வதை அப்படியே ராமரிடம் சென்று சொல்லுங்கள் என்று சீதை சொல்ல ஆரம்பித்தாள். இந்த இலங்கையில் ராவணனின் தம்பி விபிஷணன் என்பவன் சீதையை ராமரிடம் சென்று சேர்த்துவிடு இல்லை என்றால் ராட்சச குலம் அனைத்தும் ராமரால் அழியும் என்று ராவணனிடம் எவ்வளவோ அறிவுறை கூறினான். ஆனால் ராவணன் கேட்கவில்லை. எனக்கு பன்னிரண்டு மாத காலம் அவகாசம் அளித்திருக்கிறான். அதில் பத்து மாத காலம் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு மாத காலம் மட்டுமே உள்ளது. அதற்குள் வந்து ராமர் என்னை மீட்டுச் செல்ல வேண்டும் இல்லை என்றால் ராவணன் என்னை சமைத்து சாப்பிட்டு விடுவதாக சொல்லியிருக்கிறான் என்று சீதை பேசி முடித்தாள்.

அனுமன் சீதையிடம் பேச ஆரம்பித்தாள். இந்த கடலை சில கனத்தில் நான் தாண்டிச் சென்று தங்களின் செய்தியை ராமரிடம் சொல்லி விடுவேன். ராமர் விரைவில் பெரும் சேனையுடன் இலங்கைக்கு வந்து விடுவார் கவலைப்படாதீர்கள். ராவணனோடு சேர்த்து இந்த இலங்கை நகரத்தையே மொத்தமாக தூக்கிக் கொண்டு போய் ராமரிடம் சேர்க்கும் வல்லமை என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடைய முதுகில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். இப்போதே இந்த கடலைத் தாண்டிப் போய் ராமரிடம் உங்களை சென்று சேர்த்து விடுவேன். அதற்கான போதிய பலம் என்னிடம் இருக்கிறது. சிறிதும் தங்களுக்கு சந்தேகம் வேண்டாம். உத்தரவிடுங்கள் தாயே இப்பொழுதே இதனை செய்து முடிக்கிறேன். கடலை தாண்டும் போது என்னை தடுக்கும் பலம் இங்கு யாருக்கும் இல்லை. இன்றே தாங்கள் ராமரை சந்தித்து விடலாம் என்றார் அனுமன்.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 8

ராமரின் மனைவி சீதை இவர் தானா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மரத்தின் மீதிருந்து கீழே இறங்கி வந்த அனுமன் சீதையை வணங்கி சீதையிடம் கேள்வி கேட்டார். தாயே மானிடப் பெண்ணாக இருக்கும் உங்களின் முகம் கண்ணிருடன் இருக்கின்றது. நீங்கள் யார்? இந்த வனத்தில் ராட்சசிகளுக்கு நடுவில் ஏன் இருக்கின்றீர்கள் என்று தயவு செய்து சொல்லுங்கள். ராமரிடம் இருந்து ராவணனால் தூக்கி வரப்பட்ட சீதை தாங்கள் தானா என்று கேட்டார் அனுமன். அனுமனின் பேச்சில் மகிழ்ந்த சீதை நான் தான் சீதை விதேஹ ராஜனுடைய மகள் ராமரின் மனைவி. பன்னிரண்டு வருட காலம் சகல சுகங்களையும் ராமருடன் அயோத்தியில் அனுபவித்தேன். 13 ஆம் வருடம் தசரத சக்கரவர்த்தி ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். அப்போது கைகேயி தன் மகனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்றும் ராமரைக் காட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதன்படி நாங்கள் காட்டுக்குள் பன்னிரண்டு வருட காலம் வனவாசம் வந்தோம். அப்போது ராவணன் எங்களை வஞ்சகம் செய்து என்னை பலாத்காரமாக தூக்கி வந்து இங்கே சிறை வைத்திருக்கிறான். ராவணனின் சொல்படி நான் கேட்க வேண்டும் என்று எனக்கு பன்னிரண்டு மாத காலம் அவகாசம் கொடுத்திருக்கின்றான். இந்த காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கிறது அது முடிந்தவுடன் அவன் என்னை கொன்று விடுவான் என்று சொல்லி முடித்தாள் சீதை.

ராமர் வரும் வரையில் சீதையின் துயரத்தை போக்கி அவருக்கு தைரியம் கொடுக்க வேண்டும் என்று அனுமன் சீதையிடம் பேச ஆரம்பித்தார். தாயே வீரர்களுக்கு எல்லாம் வீரரான தசரத சக்கரவர்த்தியின் திருமகன் ராமர் உங்களுக்கு தன்னுடைய நலத்தை சொல்லி அனுப்பினார். அவருடைய அன்பு தம்பியான லட்சுமணன் உங்களை இடைவிடாது நினைத்து துயரப்பட்டு கொண்டிருக்கின்றார். தன்னுடைய வணக்கத்தை உங்களுக்கு சொல்லி என்னை அனுப்பினார். ராம லட்சுமணர்களின் பெயர்களை கேட்டதும் சீதையின் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கியது. அடுத்த கனம் சீதையின் மனதில் வந்திருப்பது ராவணனாக இருக்குமோ என்று பயம் வந்தது. அனுமனின் பேச்சில் நம்பிக்கை இழந்த சீதை நம்மை ஏமாற்றுவதற்காக ராவணன் உருவத்தை மாற்றிக் கொண்டு வந்திருக்கின்றானா என்று நினைத்து அவளது மனம் தடுமாறியது. வந்திருப்பது ராமரின் தூதுவனா இல்லை ராவணனா என்று கேள்விக்கு விடை தெரியாமல் குழப்பத்தில் அனுமனை பார்க்காமல் திரும்பி அமர்ந்து கொண்டாள். இதைக் கண்ட அனுமன் கைகூப்பியபடி சீதையின் அருகில் சென்றார். உடனே சீதை பேச ஆரம்பித்தாள். நான் ஏமாந்தேன். முன்பு தண்டகாருண்ய வனத்தில் ராமருடன் இருக்கும் போது சந்நியாசி வேடத்தில் வந்து என்னை ஏமாற்றி தூக்கிக் கொண்டு வந்தாய். இப்போது வானர வேடத்தில் வந்து ஏதேதோ பேசி என்னை வருத்துகிறாய் ராவணா இது உனக்கு நல்லதல்ல. துக்கத்தில் இருக்கும் என்னை மாயங்கள் செய்து தொந்தரவு செய்யாதே விலகிப்போ என்று மௌனமானாள் சீதை.

ராமனிடமிருந்து சீதையை ராவணன் ஏமாற்றி தூக்கி வந்ததால் சீதை பயத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்த அனுமன் அவளின் பயத்தையும் சந்தேகத்தையும் போக்க வேண்டும் யோசித்து மீண்டும் சீதையிடம் பேசினார். பூமியில் ஆளும் அரசர்கள் அனைவரும் தலைவனாக மதிக்கும் ராமர் அனுப்பிய தூதுவன் நான். எனது பெயர் அனுமன். வானரங்களின் அரசனான சுக்ரீவனுடைய ராஜ்யத்தில் மந்திரியாக இருக்கிறேன். ராமருடைய உத்தரவின் பேரில் பல மலைகள் குகைகளிலும் தங்களை தேடி இறுதியில் எனது பராக்கிரமத்தால் நூறு யோசனை தூரம் கடலைத் தாண்டி குதித்து இந்த இலங்கையில் இறங்கினேன். நான் ராம தூதுவன் தாயே என்னை சந்தேகிக்க வேண்டாம். எனது வார்த்தையே நம்புங்கள் என்று அனுமன் கண்களில் நீர் ததும்ப சீதையிடம் கூறினார். அனுமன் பேசிய பேச்சு சீதைக்கு தைரியமும் நம்பிக்கையும் தந்தது.

ராமாயணம் 5. சுந்தர காண்டம் பகுதி – 7

ராமர் சூரியனைப் போல் திவ்ய பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டு இலங்கைக்கு வந்து ராவணனை அழித்து அவனை எமலோகத்திற்கு அனுப்புவதையும் ராவணனை சார்ந்திருக்கும் அவனது ராட்சசர்கள் அனைவரும் அவலட்சணமான துணிகளை உடுத்திக்கொண்டு அவலட்சணமான நிலையில் எமனால் இழுத்துச் செல்வதையும் ராமர் ஒரு யானை மீது பட்டத்து மகாராணி போல் சீதையை அழைத்துச் செல்வதையும் கனவாக கண்டேன். இந்த சீதை மிகவும் புண்ணியவதி. இவளிடம் இப்படி நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் விரைவில் நாம் அழிந்து போவோம். அவளிடம் நல்ல விதமாக பேசி அவளுடைய அருளை கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினாள். பயந்த ராட்சசிகள் அனைவரும் சீதையை விட்டு விலகி நின்றார்கள். திரிஜடை ராட்சசி பேசியதை கேட்ட சீதை உடனடியாக மனம் மாறி தனது உயிரை விடும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தைரியமடைந்தாள்.

அனுமன் மரத்தின் மீதிருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டு பல வகையில் சிந்தனை செய்தார். சீதை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டோம். இது ராட்சசர்களுடைய நகரம் இங்கு காவல் மிகவும் பலமாக இருக்கிறது. இப்போது நாம் இங்கிருந்து ராமர் இருக்குமிடம் சென்று சீதை இருக்குமிடத்தை அவரிடம் சொல்லி அதன் பிறகு ராமர் லட்சுமணர்கள் இங்கு வருவதற்குள் சீதை துக்கம் தாளாமல் தன் உயிரையே விட்டு விட்டால் என்ன செய்வது எனவே சீதையிடம் ராமன் விரைவில் வருவார் அவரது உத்தரவின் படியே உங்களை தேடி அனுமனாகிய நான் வந்திருக்கிறேன் என்ற செய்தியைச் சொல்லிவிட்டு நாம் இங்கிருந்து செல்லலாம் என்று முடிவு செய்தார் அனுமன். யாருக்கும் தெரியாமல் சீதையிடம் சென்று எப்படி பேசுவது என்று சிந்தனை செய்தார் அனுமன். காவல் காக்கும் ராட்சசிகள் அனைவரும் தூங்க ஆரம்பித்தார்கள். இதுவே நல்ல சமயம் என்று சீதையின் அருகில் செல்லலாம் என்று நினைத்தார். ஆனால் சீதையின் முன்பாக திடீரென்று ஒரு வானரம் சென்று பேச ஆரம்பித்தால் ராவணன் ஏதோ ஏமாற்று வேலை செய்கின்றான் என்று நம்மை கண்டு பயத்தில் கத்தி கூச்சலிட்டால் ராமர் கொடுத்த மோதிரத்தை காண்பிக்க முடியாமலே போய்விடும். சீதையை சுற்றி தூங்கிக் கொண்டிருக்கும் ராட்சசிகள் அனைவரும் வந்து விடுவார்கள். அவர்களை யுத்தம் செய்து சமாளிக்கலாம். ஆனால் மேலும் பல ராட்சசர்கள் வருவார்கள் அனைவரையும் நமது வலிமையால் சமாளித்து விடலாம். ஆனால் இவ்வளவு ராட்சசர்களை எதிர்த்து யுத்தம் செய்து சோர்வு ஏற்பட்டாலோ உடலுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டாலோ மீண்டும் இங்கிருந்து நூறு யோசனை தூரம் தாண்ட முடியாமல் போய்விடும். இதனால் ராமருக்கு சீதை இருக்குமிடத்தை சொல்ல முடியாமல் போகும். எனவே ராமரின் தூதன் நான் என்பதை முதலில் சீதைக்கு புரிய வைத்துவிட வேண்டும் என்று எண்ணி ஒரு வழியை கண்டுபிடித்து அதனை செயல்படுத்த ஆரம்பித்தார். மரத்தின் மீது இருந்து ராம நாமத்தை சத்தமாக செபிக்க ஆரம்பித்தார். ராமருடைய சரித்திரத்தையும் குணங்களையும் சீதை கேட்கும்படி மெதுவான குரலில் தசரதருடைய குமாரர் ராமர் என்று ராமப்பற்றி சொல்ல ஆரம்பித்து சீதையை தேடி வந்திருப்பது அனுமன் என்று முடிக்கும் வரையில் கூறினார் அனுமன்.

அனுமனின் வார்த்தைகளில் மகிழ்ச்சி அடைந்த சீதை யாருடைய குரல் இது என்று சுற்றிலும் தேடினாள். ஒருவரும் அவளது கண்களுக்கு தெரியவில்லை. மரத்தின் மீது பார்த்தாள். ஓரு வானரம் மட்டும் மரத்தில் மறைந்திருப்பதை கண்டாள். காதில் விழுந்த வார்த்தைகளும் கண் முன்பே தெரியும் வானரமும் நமது கனவாக இருக்கும் என்று யூகித்தாள் சீதை. ஆனால் இப்போது விழித்து விட்டோமே இன்னும் இந்த வானரம் கண்ணுக்கு தெரிகிறதே என்று குழப்பமடைந்தாள். சில கனங்களில் தெளிவடைந்த சீதை இது கனவல்ல நிஜம் தான் என் காதில் விழுந்த சொற்கள் உண்மையாக இருக்கட்டும் என்று அனைத்து தெய்வங்களையும் வணங்கினாள். என் ராமரிடம் இருந்து தூதுவன் வந்திருக்கின்றான் இது உண்மையாக இருக்க வேண்டும் என்று அனுமனுக்கு தனது வணக்கத்தை தெரிவித்தாள் சீதை.