ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 43

ராமரின் படை வீரர்கள் சிறுவர்களான லவ குசர்களிடம் எப்படி யுத்தம் செய்வது என்று ராமரின் பிரநிதியாக வந்த லட்சுமணனிடம் சென்று ராமரின் அசுவமேத யாக குதிரையை இரு சிறுவர்கள் பிடித்து வைத்திருக்கின்றார்கள். அவர்கள் பார்ப்பதற்கு முனிவரின் குழந்தைகள் போல் இருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்கள். இதைக் கேட்ட லட்சுமணன் குதிரையை கட்டி இருக்கும் இடத்திற்கு வந்தான். குதிரை அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம் லட்சுமணன் சென்று பேச ஆரம்பித்தான். உலகத்தை ஆட்சி செய்யும் ராமரின் அசுவமேத யாகக் குதிரை இது. இந்தக் குதிரையுடன் ராமரின் பிரதிநிதியாக லட்சுமணனாகிய நான் வந்திருக்கின்றேன். நீங்கள் விளையாடுவதற்கு வேறு குதிரையைத் தருகிறேன் இந்தக் குதிரையை விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு லவ குசர்கள் சீதையை கோழைத்தனமாக காட்டிற்கு கொண்டு வந்து விட்டது நீங்கள் தானே எங்களோடு போரிடும் தைரியம் உங்களுக்கு இருந்தால் எங்களோடு போரிட்டு வென்று இந்தக் குதிரையை நீங்கள் அழைத்துச் செல்லலாம் என்றார்கள். லவ குசர்களின் பேச்சைக் கேட்டு கோபம் அடைந்த லட்சுமணன் மிகவும் மன உளைச்சல் அடைந்து அவர்களைத் தாக்க முற்பட்டான். லட்சுமணன் வில்லை வளைத்து நானை ஏற்றுவதற்குள் சிறுவர்கள் இருவரும் அம்பு எய்து அவன் தலையிலிருந்த கிரீடத்தை தள்ளி விட்டார்கள். இதனால் மேலும் கோபம் அடைந்த லட்சுமணன் சிறுவர்கள் மீது அம்பெய்தான். லட்சுமணன் எய்த அனைத்து அம்புகளுக்கும் சிறுவர்கள் பதிலடி கொடுத்து அம்பு மழை பொழிந்தார்கள். இதில் காயமடைந்த லட்சுமணன் மயங்கிக் கீழே விழுந்தான். இதைக் கண்ட படை வீரர்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்பி அயோத்திக்கு சென்றார்கள்.

ராமரிடம் வந்த படை வீரர்கள் யாகக் குதிரையை பிடித்து வைத்துக் கொண்ட இரண்டு சிறுவர்கள் லட்சுமணனையும் காயப்படுத்தி விட்டார்கள் என்று நடந்தவைகள் அனைத்தையும் ராமரிடம் தெரிவித்தார்கள். லட்சுமணனை இரு சிறுவர்கள் தோற்கடித்து விட்டார்களா என்று ராமர் ஆச்சரியமடைந்தார். பரதனையும் சத்ருக்கனனையும் அழைத்தார் ராமர். சிறுவர்கள் யாகக் குதிரையை கட்டி இருக்கும் இடத்திற்கு சென்று குதிரையை மீட்டு வர நான் செல்கிறேன் ஆகையால் பரதன் நாட்டை பார்த்துக் கொள்ள வேண்டும் சத்ருக்கனன் அசுவமேத யாகத்தை பாதுகாக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். அப்போது பரதனும் சத்ருக்கணும் இதற்கு தாங்கள் ஏன் செல்ல வேண்டும் நாங்கள் போய் குதிரையை மீட்டு வருகிறோம் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு ராமர் ராவணனின் மகனான இந்திரஜித்தையே போரில் வென்ற லட்சுமணனையே இரு சிறுவர்கள் காயப்படுத்தி இருக்கின்றார்கள். ஆகையால் நானே சென்று குதிரையை மீட்டு வருகின்றேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். ராமருடன் அனுமனும் சென்றார்.

ராமருடன் அனுமனும் வருவதைக் கண்ட சிறுவர்கள் யுத்தத்திற்கு தயாரானார்கள். ராமர் நேராக லட்சுமணன் இருக்குமிடம் சென்றார். லட்சுமணனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றதும் சிறுவர்கள் இருக்குமிடம் வந்தார். ராமர் சிறுவர்களிடம் நீங்கள் அரண்மனையில் ராம கதையை பாடலாக பாடிய வால்மீகியின் சீடர்கள் தானே நீங்கள் எந்த குலத்தை சேர்ந்தவர்கள்? உங்களது தந்தை தாயின் பெயர் என்ன? இந்த குதிரையை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சிறுவர்கள் எங்களின் தாயின் பெயர் வனதேவி. எங்களின் தந்தையின் பெயரும் குலமும் தெரியாது. நாங்கள் எங்களின் ஞான குருவான வால்மீகி முனிவரின் பாதுகாப்பில் இந்த வனத்தில் வசிக்கிறோம். நீங்கள் வந்தது குதிரையை மீட்கத்தானே வந்தீர்கள். எங்களைப் பற்றி விசாரித்து வந்த வேலையை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு குதிரை வேண்டுமென்றால் எங்களுடன் யுத்தம் செய்யுங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்கள். சிறுவர்களின் தைரியத்தை நினைத்து ஆச்சரியப்பட்ட ராமர் லட்சுமணனையே காயப்படுத்திய நீங்கள் மிகவும் பலசாலிகள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சிறுவர்களான உங்களிடம் எப்படி யுத்தம் செய்ய முடியும் என்று கேட்டார்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -42

ராமர் வேறு என்ன தங்களுக்கு வேண்டும் சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு சிறுவர்கள் இந்த ராம கதையில் வரும் தங்களை பார்த்து விட்டோம். அதை போல் கதையில் உள்ள சீதையின் தரிசனத்தை பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறோம். தாங்கள் இருவரும் சேர்ந்து எங்களுக்கு தரிசனம் கொடுத்து ஆசிர்வதியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். சபையில் இருந்த அனைவரும் திடுக்கிட்டார்கள். ராமர் தலை கவிழ்ந்து மௌனமானார். சிறுவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள். அப்போது கௌசலை நடந்தவற்றை சிறுவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முயற்சி செய்தாள். சீதை ராமரால் காட்டுக்கு அனுப்பப்பட்டார் என்ற செய்தியை கேட்டதும் மிகவும் கோபம் கொண்ட சிறுவர்கள் ராமரை இது நாள் வரை தர்மவான் சத்தியம் தவறாதவர் என்று எண்ணியிருந்தோம். ஆனால் தன்னை நம்பி வந்த சீதையை காட்டுக்கு அனுப்பி தர்மம் தவறி விட்டார் என்று கோபத்துடன் கூறினார்கள். அதற்கு ராமர் நான் இந்நாட்டின் அரசன். ஒரு நாட்டின் அரசன் என்பவன் எந்த விதமான பழிச்சொல்லுக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பது தர்மம். என்னை நம்பி வந்த சீதையை கைவிடக்கூடாது என்பதும் தர்மம் தான். ஆனால் இரண்டில் ஒன்று என்று வரும் போது இரண்டில் பெரிய தர்மத்தையே காப்பாற்ற வேண்டும் என்ற நியதிப்படியே நடந்து கொண்டேன். அரச பதவியை துறந்து சீதையுடன் நான் சென்றிருந்தால் என்னை நம்பி இருந்த நாட்டு மக்களின் நம்பிக்கையை ஏமாற்றியது போலாகும். சீதையின் நம்பிக்கையா மக்களின் நம்பிக்கையா என்று ஆராய்ந்தால் இரண்டில் ஒன்று என்று வரும் போது மக்களின் நம்பிக்கையை காப்பதே ஒரு அரசனுக்கு பெரிய தர்மம். ஆகவே வேறு வழியில்லாமல் சீதையை காட்டிற்கு அனுப்பி விட்டேன் என்றார்.

ராமரின் சமாதானத்தை ஏற்காத சிறுவர்கள் இருவரும் இனி நாங்கள் ராம காவியத்தை பாட மாட்டோம் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி வால்மீகி முனிவரின் இருப்பிடம் சென்று நடந்தவற்றைச் கூறி வனத்திற்கு செல்ல அனுமதி கேட்டார்கள். அனைத்தையும் அறிந்த வால்மீகி முனிவர் அயோத்தியிலிருந்து சிறுவர்களுடன் தானும் வனத்திற்கு வந்து விட்டார். ஒரு நாள் சிறுவர்கள் இருவரும் வனத்திற்குள் சுற்றி விளையாடிக் கொண்டிருக்கும் போது ராமர் அனுப்பிய அஸ்வமேத யாகக் குதிரை அக்காட்டைக் கடந்து சென்றது. குதிரையின் அழகில் மயங்கிய சிறுவர்கள் இருவரும் அக்குதிரையை பிடித்து தினந்தோறும் விளையாடலாம் என்று குதிரையை பிடித்தார்கள். அப்போது குதிரையின் முகத்தில் கட்டி வைத்திருந்த தங்கத் தகட்டில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை சிறுவர்கள் படித்தார்கள். இந்த குதிரை ராமரின் அஸ்வமேத யாகத்திற்கான குதிரை. அக்குதிரை செல்லும் பகுதியை ஆட்சி செய்யும் அரசர்கள் இக்குதிரைக்கு மரியாதை செலுத்தி ராமரை அரசனுக்கு அரசனான சக்ரவர்த்தியாக ஏற்றுக் கொண்டு அயோத்திக்கு வரி செலுத்த வேண்டும். ராமரை சக்ரவர்த்தியாக ஏற்றுக் கொள்ள மறுத்து குதிரையை பிடித்து வைத்துக் கொண்டு எதிர்த்தால் அவர்களை ராமரின் பிரதிநிதியாக இருப்பவர் எதிர்த்து சண்டையிட்டு வெற்றி கொண்டு அந்த நகரத்தினை தனதாக்கிக் கொள்வார் என்று எழுதப்பட்டிருந்தது.

ராமரின் அஸ்வமேத யாகக் குதிரை என்றதும் சிறுவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். சிறிதும் பயப்படாமல் குதிரையை ஒரு மரத்தில் கட்டி வைத்துவிட்டு அருகில் விளையாட ஆரம்பித்தார்கள். குதிரையை தேடிக் கொண்டு வந்த வீரர்கள் குதிரை மரத்தில் கட்டிப் போடப்பட்டிருப்பதையும் அருகில் முனிவர்களைப் போல் இருந்த இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதையும் பார்த்து திடுக்கிட்டார்கள். இந்த குதிரையை யார் இங்கு கட்டி வைத்தது என்று வீரர்கள் அச்சிறுவர்களிடம் கேட்டார்கள். நாங்கள் தான் கட்டி வைத்திருக்கறோம் என்ற படி சிறுவர்கள் விளையாடிக் கொண்டே இருந்தார்கள். என்ன செய்வது என்று புரியாத வீரர்கள் சிறுவர்களிடம் இது ராமரின் அஸ்வமேத யாகக் குதிரை இதனை விட்டு விடுங்கள் என்று கெஞ்சுவது போல் கேட்டார்கள். இதனைப் பார்த்து சிரித்த சிறுவர்கள் குதிரையின் மீதுள்ள தங்கத் தகட்டில் என்ன எழுதியிருக்கிறது பாருங்கள் ராமரை சக்ரவர்த்தியாக ஏற்றுக் கொள்பவர்கள் குதிரைக்கு மரியாதை செலுத்த வேண்டும். இல்லை என்றால் யுத்தம் செய்யலாம் என்று எழுதியிருக்கிறது நாங்கள் ராமரை சக்ரவர்த்தியாக ஏற்றுக் கொள்ளவில்லை எனவே கட்டி வைத்திருக்கிறோம் உங்களால் முடிந்தால் எங்களுடன் யுத்தம் புரிந்து குதிரையை மீட்டுச் செல்லுங்கள். ராமரின் படை வீரர்களாக இருந்து கொண்டு எங்களிடம் கெஞ்சுகிறீர்களே என்று சொல்லிவிட்டு தங்களின் விளையாட்டில் கவனமாக இருந்தார்கள்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -41

ராமர் நடந்து கொண்டிருக்கும் அஸ்வமேத யாகத்தில் மிகவும் திருப்தி அடைந்தார். வெகு சிறப்பாக யாகம் நடந்து கொண்டிருக்கும் பொழுது வால்மீகி முனிவர் தன் சீடர்களுடன் அங்கு வந்தார். ராமர் அவருக்கான மரியாதைகளை செய்து அவருக்குரிய ஆசனத்தை கொடுத்து அமரச் செய்தார். வால்மீகி முனிவர் யாகத்தின் ஏற்பாடுகளைப் பார்த்து வியந்தார். யாக சாலைக்கு அருகில் தான் தங்குவதற்கு ஒரு குடிலை அமைத்துக் கொண்ட வால்மீகி முனிவர் அங்கேயே சில காலம் தங்கினார். தன் குடிலுக்கு தன் பிரதான சீடர்களாக இருந்த ராமரின் மகன்கள் லவ குசா இருவரையும் வரவழைத்த வால்மீகி முனிவர் உங்கள் இருவருக்கும் ராமர் கதை முழுவதும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன் அதனை இருவரும் சேர்ந்து நகரத்திற்குள் சென்று ஆனந்தமாக பாடுங்கள். ஒரு நாளைக்கு இருபது அத்தியாயம் என்ற கணக்கிற்கு பாடுங்கள். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள் ரிஷிகள் வசிக்கும் இடங்கள் வேதம் அறிந்தவர்கள் கூடும் இடங்களிலும் பாடுங்கள். அயோத்தியின் அரசர் ராமர் இக்கதையை கேட்க விரும்பி அழைத்தால் அங்கு சென்று சபையில் பாடுங்கள். பசித்த பொழுது சாப்பிட யாரிடமும் எதையும் யாசிக்காதீர்கள். உணவுக்கு தேவையானதை காலையில் கிளம்பும் போதே ஆசிரமத்தில் இருந்து கொண்டு செல்லுங்கள். தனம் செல்வம் இவற்றில் சற்றும் மோகம் கொள்ளாதீர்கள் எதற்கும் ஆசைப்பட வேண்டாம். யாரும் குறை சொல்ல முடியாதபடி ராகம் அமைத்து ராமரின் கதையை கவனமாக பாடுங்கள். நீங்கள் யார் என்று யாரேனும் கேட்டால் வால்மீகி முனிவரின் சீடர்கள் என்று மட்டும் சொல்லுங்கள் என்று அனுப்பி வைத்தார்.

ராமரின் கதையை வால்மீகி முனிவர் சொல்லிக் கொடுத்தபடி அயோத்தி நகருக்குள் இருவரும் பாடல்களாக படிக்கொண்டே சென்றார்கள். லவ குசாவின் ராம கானத்தை அயோத்தி மக்கள் மிகவும் ரசித்து கேட்டார்கள். நகரத்திற்குள் இரண்டு சிறுவர்கள் ராமரின் கதையை பாடலாகப் பாடுகின்றார்கள் என்று ராமருக்கு அரண்மனை பணியாளர்கள் செய்தியை கூறினார்கள். தன் கதையே இரண்டு சிறுவர்கள் பாடுகின்றார்களா என்று ஆச்சரியப்பட்ட ராமர் அவர்களை சபைக்கு வரவழைத்தார். சபையில் பல இசை மேதைகளையும் அறிஞர்களையும் ரிஷிகளையும் வரவழைத்து அவர்களின் முன்பு பாட வைத்தார் ராமர். சபையில் கலந்து கொண்டவர்கள் லவ குசாவைப் பார்த்தால் ராமரைப் போலவே இருக்கிறார்கள் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ஜடா முடியும் மரவுரி உடையுடன் இருவரும் பாடிக்கொண்டு வராமல் இருந்திருந்தால் நாம் இவர்களை ராமரின் வாரிசு என்றே நம்பியிருப்போம் என்று பேசிக் கொண்டார்கள். சபையில் இருவரும் பாடல்களை பாட ஆரம்பித்தார்கள். நாரதரைக் கண்டதிலிருந்து பாடலை ஆரம்பித்து ராமர் சீதையுடன் அயோத்திக்கு அரசனாக பதவி ஏற்ற வரை பாடி முடித்தார்கள்.

ராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். லட்சுமணனனிடம் பதினெட்டாயிரம் பொன்னை இந்த கலைஞர்களுக்குக் கொடுத்து மேலும் ஏதேனும் வேண்டுமா என்றும் கேட்டு அவர்கள் விரும்பியதைக் கொடுத்துவிடு என்று சொல்லி விட்டு சிறுவர்களிடம் பேச ஆரம்பித்தார். நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்? இக்கதையில் மொத்தம் எத்தனை அத்தியாயங்கள் உள்ளது இதனை இயற்றியவர் யார் என்று கேட்டார். அதற்கு சிறுவர்கள் நாங்கள் வால்மீகி முனிவரின் சீடர்கள். அவரின் உத்தரவுப்படி அவர் இயற்றிய கதையை பாடலாக பாடி வருகிறோம். இக்கதையில் மொத்தம் இருபத்து நாலாயிரம் ஸ்லோகங்கள் உள்ளது. ஐநூறு அத்தியாயங்கள் ஆறு காண்டங்கள் என்றும் மேலும் சற்று அதிகமாகவும் வரிசைப் படுத்தி தங்களின் சரித்திரம் முழுவதும் எழுதியிருக்கிறார் என்றார்கள். லட்சுமணன் அந்த சிறுவர்களுக்கு சன்மானங்களை தனித் தனியாக கொண்டு வந்து கொடுத்தான். வனத்தில் எங்களுக்குத் தேவையான பழம் கிழங்குகள் கிடைக்கின்றன. எங்களிடம் உள்ளதில் நாங்கள் திருப்தியாக இருக்கிறோம். இந்த தங்கத்தை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று இருவரும் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -40

ராமரின் உத்தரவிற்கேற்க முனிவர்களும் வேத விற்பன்னர்களும் அயோத்தி நகருக்கு வந்தார்கள். அவர்களை அரண்மணை வாயிலுக்கே சென்று ராமர் வரவேற்றார். அனைவருக்கும் அவரவர்களுக்கேற்ப மரியாதைகள் செய்து அவர்களுக்குறிய ஆசனத்தை அளித்த ராமர் அவர்களிடம் பேச ஆரம்பித்தார். மக்களின் நலனுக்காக அஸ்வமேத யாகம் செய்ய விரும்புகிறேன். எப்படி செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் அனைவரும் அருகில் இருந்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து யாகத்தை நிறைவு செய்து கொடுங்கள் என்று அனைவரையும் வணங்கிய படி பணிவுடன் கேட்டுக் கொண்டார். ராமரின் இச்செயலுக்கு மகிழ்ந்த முனிவர்கள் ராமரை ஆசிர்வதித்து யாகத்தை செய்து கொடுப்பதாக வாக்களித்தார்கள். உடனடியாக ருத்ரனை வணங்கி அஸ்வமேத யாகத்தை தொடங்க அதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கினார்கள். யாகம் செய்வதற்கான இடம் நாள் நேரம் எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்ற அனைத்தையும் தீவிர ஆலோசனைக்கு பின்பு முனிவர்கள் முடிவு செய்தார்கள். யாகத்தின் நியதிப்படி ராமர் தனது மனைவியுடன் அமர்ந்தால் மட்டுமே அதற்கான பலன் என்று கூறி சீதையைப் போலவே தங்கத்தில் ஒரு உருவம் செய்து ராமரின் அருகில் வைத்து யாகத்தை செய்யலாம் என்று தீர்மானித்தார்கள். யாக சம்பந்தமான விவரங்களை ராமர் அவர்களிடம் கேட்டு குறித்துக் கொண்டு அதற்கேற்றார் போல் தனது சகோதரர்களுக்கு கட்டளைகள் பிறப்பித்தார். யாகத்தில் கலந்து கொள்ள சுக்ரீவன் விபீஷணன் உட்பட தனது நண்பர்களுக்கும் அரசர்களுக்கும் அழைப்புகளை அனுப்பினார்.

ராமர் அஸ்வமேத யாகம் செய்வதை முன்னிட்டு தானங்கள் பல செய்தார். அசுவமேத யாகம் என்பது பல வருடங்கள் செய்யும் ஒரு பெரிய வேள்வியாகும். யாகம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை யார் என்ன தானம் கேட்டாலும் அதனை அந்நாட்டு அரசன் கொடுக்க வேண்டும். அரசன் தனது அரச குதிரையில் தனது வெற்றிக் கொடியை அதன் முதுகுப்பகுதியில் கட்டி உலகம் முழுவதும் திரிய விடுவான். அந்தக் குதிரையுடன் அரசரது பிரதிநிதி பெரும்படையுடன் செல்வார்கள். அதைப் பிடித்து மடக்கும் வேற்று நாட்டு அரசன் மேல் படையெடுப்பு நடத்தி அவனை வெற்றி கொண்ட பின் குதிரை மேலும் தொடர்ந்து அடுத்த நாட்டிற்கு செல்லும். அனைத்து அரசர்களும் அவனது ஆட்சியை ஏற்றுக் கொண்ட பிறகு குதிரை யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து சேரும். குதிரை வந்ததும் யாகம் செய்த அரசன் தன்னை சக்கரவர்த்தி என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்வான். யாகத்தின் பலனாக அதில் கலந்து கொண்டவர்களும் அந்நாட்டு மக்களும் பல விதமான தோசங்களில் இருந்து விடுபடுவார்கள். அயோத்திக்கு முனிவர்களும் வேதம் சொல்லும் அந்தணர்களும் பண்டிதர்களும் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தார்கள். சுக்ரீவன் மற்றும் விபீஷணன் தங்களது உறவினர்களுடன் வந்து சேர்ந்தார்கள்.

ராமர் எல்லா முன்னேற்பாடுகளையும் சிறப்பாக செய்து யாகத்திற்கான குதிரையை விட்டார். ராமரது பிரதிநிதியாக லட்சுமணனும் படை வீரர்களும் குதிரையை பாதுகாத்துக் கொண்டு உடன் சென்றார்கள். நல்ல முறையில் யாக சாலை தயாராவதைக் கண்டு ராமர் திருப்தியடைந்தார். யாகம் ஆரம்பித்தது யாகத்திற்கு வந்தவர்கள் லட்சுமணன் நடத்திச் சென்ற குதிரையைப் பற்றியும் லட்சுமணனது வலிமையைப் பற்றியும் பேசிக் கொண்டர்கள். யாகம் செய்யும் அந்தணர்கள் என்ன பொருள் வேண்டும் என்று கேட்டு முடிப்பதற்குள்ளாக அவர்களிடம் அப்பொருட்களை வானரங்களும் ராட்சசர்களும் கொண்டு வந்து கொடுத்தார்கள். சிரஞ்ஜீவிகளான சில முனிவர்கள் இது போல யாகத்தைக் கண்டதுமில்லை கேட்டதும் இல்லை என்று பாராட்டினார்கள். யாருக்கு என்னத் தேவையோ அது கிடைத்தது. தங்கம் விரும்பியவனுக்கு தங்கம் ரத்தினம் விரும்பியவனுக்கு ரத்தினம் என்று கிடைக்கப் பெற்றார்கள். தங்கமும் வெள்ளியும் ரத்தினமும் வஸ்திரங்களும் கொடுக்க கொடுக்க குறையாமல் இருந்தது. உணவும் உடைகளும் வேண்டிய அளவு தானம் செய்தபடி யாகம் ஒரு வருட காலத்தைத் தாண்டிச் சிறப்பாக சென்று கொண்டிருந்தது.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -39

ராமர் என்ற பெயர் மூவுலகிலும் பரவி வெகு காலம் சுகமாக சிறப்பாக இருப்பார். ஆனால் சாபத்தின் பலனை அனுபவித்தே தீர்வார். இவரைப் பின் பற்றிச் செல்பவர்கள் சுகமாகவும் நிறைந்த செல்வச் செழிப்போடும் இருப்பார்கள். யாராலும் வெற்றி பெற முடியாத படி தர்மத்தின் படி அரசாளவார். ராமர் அரசனாக பதவி ஏற்றக் கொண்ட சில காலத்தில் ராமரிடமிருந்து சீதை பிரிந்து விடுவாள். ராமருக்கும் அவரது மனைவி சீதைக்கும் பிறக்கும் குழந்தைகள் அயோத்திக்கு வெளியே பிறப்பார்கள். ராமர் நிறைய அஸ்வமேத யாகங்கள் செய்வார். பத்தாயிரம் ஆண்டுகள் ராமர் தனது ராஜ்யத்தை ஆள்வார். அதன் பிறகு அவரின் மகன்களிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு அவரது லோகத்திற்கு சென்று விடுவார் என்று துர்வாச மகரிஷி சொல்லியிருக்கிறார் என்று வால்மீகி முனிவர் தன்னிடம் கேள்வி கேட்டவர்களுக்கு பதிலாக சொன்னார். சில நாட்கள் கழித்து சீதைக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தார்கள். சீதையை பார்த்துக் கொண்ட பெண்கள் குழந்தை பிறந்த தகவலை வால்மீகி முனிவருக்கு தெரியப்படுத்தினார்கள். மகிழ்ச்சி அடைந்த வால்மீகி முனிவர் குச முஷ்டி மற்றும் லவம் என்ற இரண்டு மூலிகைகளைக் கொண்டு காப்புகள் செய்து குழந்தைகளுக்கு அணிவித்தார். காப்பாக பயன்பட்ட மூலிகைகளே பெயராக வைத்து முதலில் பிறந்தவனுக்கு குசன் என்ற பெயரையும் இரண்டாவது பிறந்தவனுக்கு லவன் என்ற பெயரையும் வைத்து வேத மந்திரங்களை ஓதினார் வால்மீகி முனிவர். மேலும் கோத்ர பெயரைச் சொல்லி தாலாட்டு பாடினர். ராமர் சீதையின் புதல்வர்களின் பிறப்பைக் கொண்டாடினர். லவ குசர்கள் இருவரும் வால்மீகி முனிவரின் மேற்பார்வையில் வேதங்களை கற்று வளர்ந்து வந்தார்கள்.

ராமர் அயோத்தியை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். தனது சகோதரர்கள் மூவரையும் அழைத்து சில தர்ம காரியங்களைச் செய்ய விரும்புகிறேன். ராஜ சூய யாகம் செய்யலாம் என்று எண்ணுகிறேன் தங்களின் கருத்தை சொல்லுங்கள் என்றார். பரதன் பேச ஆரம்பித்தான். தர்மம் உங்களிடத்தில் நிலைத்து இருக்கிறது. பூமியில் உள்ள அரசர்கள் அனைவரும் உங்களை மற்றொரு பிரம்மா போல புகழ்ந்து போற்றுகின்றனர். எங்களைப் போலவே உலகத்தார் அனைவரும் உங்களை மதிப்பும் மரியாதையுமாக தங்களின் தந்தையைப் போல நினைக்கிறார்கள். அப்படி இருக்க இந்த யாகம் எதற்கு செய்ய வேண்டும் இந்த யாகம் செய்யும் போது பல நாட்டு அரசர்களும் யாகத்தில் பங்கு கொள்வார்கள். நமக்கு தான் முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று பல ராஜ வம்ச அரசர்களும் எண்ணுவார்கள். இதனால் வீணாக கோபமும் அகங்காரமும் தலையெடுக்கும். தன்னிடம் உள்ள செல்வத்தை காட்டிக் கொள்வதற்காக அவர்களுக்குள் போட்டி வரும் பொறாமை சண்டை தொடரும். அதனால் இந்த யாகத்தைத் துவங்கி வீணாக கலவரம் ஏற்பட்டு மனிதர்கள் மடிவார்கள். நம்மிடம் ஏற்கனவே புகழும் அதிகாரமும் நிறைந்து இருக்கும் பொழுது இது தேவையில்லை என்று எண்ணுகிறேன் என்றான் பரதன். இதைக் கேட்ட ராமர் நீ சொல்வதும் சரியே. நீ கூறிய இந்த கருத்தால் உன்னிடத்தில் எனக்கு மதிப்பு கூடுகிறது. நீ சொல்வது மிகச்சரியானது. மக்களுக்கு துன்பம் தரும் செயலை நாம் செய்ய வேண்டாம். நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

ராமரிடம் லட்சுமணன் பேச ஆரம்பித்தான். அஸ்வமேத யாகம் யாராலும் அடக்க முடியாத பலமும் வீர்யமும் உள்ளவர்கள் செய்வது. இதை யோசித்துப் பாருங்கள். இந்திரனுக்கு விருத்திரனை வதம் செய்ததால் பிரம்ம ஹத்தி தோஷம் வந்தது. தன் தோஷத்திலிருந்து விடு பட அவன் அஸ்வமேத யாகம் செய்து தனது தோசத்தை போக்கிக் கொண்டான். நம் அயோத்தி மக்களுக்கும் உலக மக்களுக்கும் இருக்கும் பல விதமான தோசங்களை நீக்கி அனைவருக்கும் நன்மைகளை அளிக்கும் இந்த அஸ்வமேத யாகத்தை நாம் செய்வோம் என்றான். இந்திரனுக்கு சற்றும் குறைவில்லாத பலமும் வீரமும் உடைய ராமரும் சரி என்று ஏற்றுக் கொண்டார். அஸ்வமேத யாகம் எப்போது எப்படி செய்வது என்று ஆலோசனை சொல்வதற்காக வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஸ்யபர், மந்திரிகள், மற்றும் பிராமண சிரேஷ்டர்கள் கொண்ட சபையைக் கூட்டச் சொல்லி லட்சுமணனுக்கு உத்தரவிட்டார்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -38

ராமர் இல்லாமல் இனி நீங்கள் தனியா எப்படி இருக்கப் போகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. தற்போது தாய்மை வேறு அடைந்திருக்கிறீர்கள் உங்களை பார்த்துக் கொள்ள யாரும் அருகில் இல்லையே என்று தலையை தரையில் மோதிக் கொண்டு அழுதான் லட்சுமணன். சீதையை வணக்கி விட்டு அவளைக் காண சக்தியற்றவனாக கங்கை கரையை தாண்டி தனது ரதத்தில் கிளம்பினான் லட்சுமணன். வெகு தூரம் வரை ரதத்தை பார்த்துக் கொண்டிருந்த சீதைக்கு ரதம் கண்ணில் இருந்து மறைந்ததும் தாங்க முடியாத துக்கம் அவளை ஆட்கொண்டது. மயில் கூட்டங்கள் அவளை வினோதமாகப் பார்த்தன. தனக்கு புகலிடம் எதுவுமே இல்லை என்ற உண்மை அவளை சுட்டது. பாரம் மனதை அழுத்தியது. செய்வதறியாது கதறி அழ ஆரம்பித்தாள். காட்டில் அழுதபடி நிற்கும் சீதையைக் கண்ட சில சிறுவர்கள் வால்மீகி முனிவரிடம் ஓடிப் போய் தெரிவித்தனர். சிறுவர்கள் சொன்னதைக் கேட்டதும் வால்மீகி முனிவர் தன் ஞானக் கண்களால் நடந்ததை உணர்ந்தார். காட்டில் நிற்பது சீதை என்பதை அறிந்ததும் விரைவாக சீதை இருக்குமிடம் வந்தார். வால்மீகி முனிவர் வேகமாக செல்வதைப் பார்த்ததும் அவரின் சீடர்களும் உடன் ஓடினார்கள்.

ராமனுக்கு பிரியமானவளான சீதை அனாதை போல நிற்பதைக் கண்டார். அவளிடம் இதமாக பேச ஆரம்பித்தார். தசரதனின் மருமகளும் ஜனகரின் மகளான உன் வரவு நல்வரவாகுக உனக்கு என் ஆசீர்வாதம். இக்காட்டில் ஒரு பெண் நிற்கின்றாள் என்ற செய்தி கேட்டதும் என் தவ வலிமையால் நடந்தவற்றையும் அதற்கான காரணத்தையும் தெரிந்து கொண்டேன். என் தவப்பயனாக பெற்ற ஞானக் கண்கள் சொல்வது பொய்யாகாது. கவலையின்றி நீ என்னுடன் இருக்கலாம். நான் இருக்கும் வரை உனக்கு ஒரு குறையும் வராது. ஆசிரமத்தில் தவம் செய்யும் தாபஸ்விகளும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் உன்னை மகளாக பாவித்து கவனித்துக் கொள்வார்கள். பயமின்றி இந்த ஆசிரமத்தில் நீ வசிக்கலாம். இந்த இடத்தை உன் வீடு போல எண்ணிக் கொள் என்றார். இதைக் கேட்ட சீதை வால்மீகி முனிவரை கை கூப்பி வணங்கி முனிவரின் உபசாரத்தை ஏற்றுக் கொண்டு அவருடன் சென்றாள். சீதை ஆசிரமத்தினுள் நுழைவதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த லட்சுமணன் சிந்திக்க ஆரம்பித்தான். சீதையின் பிரிவைத் நம்மலே தாங்க முடியவில்லையே. ராமர் என்ன பாடு படப்போகிறாரோ. ரமருக்கு இதை விட வேறு என்ன துக்கம் வேண்டும் என்று எண்ணியவாறு அங்கிருந்து கிளம்பினான். வால்மீகி முனிவரிடம் முனிவர்கள் சிலர் வந்தார்கள். விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கே ஏன் இப்படி ஒரு சோதனை நடக்கிறது என்று கேட்டார்கள். வால்மீகி பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ராமரின் தந்தை தசரதர் ஒரு முறை இங்கு வந்திருந்தார். அப்போது துர்வாச மகரிஷியும் இங்கு வந்திருந்தார். அவரிடம் தசரதர் தனது குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் அதைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு துர்வாச மகரிஷி பதில் சொல்ல ஆரம்பித்தார். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்தது. அப்போது தேவர்களின் தாக்குதலைத் தாங்க முடியாத அசுரர்கள் பிருகு முனிவரின் மனைவியை சரணடைந்தார்கள். அவள் அவர்களுக்கு அபயம் அளித்தாள். இவர்களுக்கு அபயம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்ததைக் கண்ட இந்திரன் கோபம் கொண்டான். தன்னுடைய சக்ராயுதத்தால் பிருகு முனிவரின் மனைவியின் தலையைக் கொய்து விட்டான். தன் மனைவி சக்ராயுதத்தால் கொல்லப்பட்டதை அறிந்த முனிவர் யோசிக்காமல் சட்டென்று விஷ்ணுவை சபித்து விட்டார். உலகைக் காக்கும் நீ யார் என்பதை நீயே அறியாமல் இந்த பூலோகத்தில் மனிதனாக பிறப்பெடுப்பாய். நான் எனது மனைவியை பிரிந்து இருந்தது போல் நீயும் உன் மனைவியை பிரிந்து வாழ்வாய் அப்போது துக்கம் என்ன என்பதை நீ அறிவாய் என்று சபித்து விட்டார். பின்பு இந்திரனின் ஆயுதத்தால் தான் தன் மனைவி அழிந்தாள் என்பதை அறிந்த பிருகு முனிவரும் வருத்தப்பட்டு விஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டார். உலக நன்மைக்காக இந்த சாபத்தை ஏற்றுக் கொள்வதாக விஷ்ணுவும் அறிவித்தார். இந்த சாபத்தின் விளைவாக விஷ்ணு தான் யாரேன்று தெரியாமல் இந்த பூலோகத்தில் பிறந்திருக்கிறார் அவரே உனது மகனான ராமர்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -37

ராமர் சபையில் நகரத்தில் இருப்பவர்களைப் பற்றி விவாத்தித்துக் கொண்டிருந்த போது உங்களை பற்றிய செய்தி ஒன்று அவரின் காதில் விழுந்தது. இதனால் மனம் வருந்திய ராமன் நீண்ட யோசனைக்குப் பின் இந்த முடிவை எடுத்திருக்கிறார். என்ன செய்தி என்று அதை என் வாயால் நான் சொல்ல மாட்டேன். அச்செய்தியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம். இச்செய்தியால் எனக்கு மகாகோபம் வந்தாலும் ஏன் இத்தகைய முடிவை ராமர் எடுத்தார் என்றும் அவரின் மனதில் உள்ளவற்றையும் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. எந்த விதமான குறையோ குற்றமோ உங்களிடம் இல்லை. ஆனாலும் மாசற்ற உங்களை ராமர் தியாகம் செய்து விட்டார். இந்த ஆசிரமத்தில் உங்களை விட்டு வரும்படி எனக்கு உத்தரவிட்டார். நீங்களும் முனிவர்கள் இருக்கும் இந்த இடத்தில் வசிக்க விரும்பினீர்கள். உங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்து மகிழ்ச்சியுடன் இருங்கள். எங்கள் தந்தைக்குப் பிரியமான முனிவர் வால்மீகி இங்கு தான் இருக்கிறார். அவரது பாதுகாப்பில் உங்களை விட்டுச் செல்கிறேன். உபவாசங்கள் விரதங்கள் தவங்களில் உங்களின் மனதைச் செலுத்தி அமைதியாக இருங்கள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும் இப்போது இதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்று சொல்லி முடித்தான் லட்சுமணன். இடி விழுந்தது போன்ற இந்த செய்தியைக் கேட்ட சீதை சுயநினைவின்றி பிரம்மை பிடித்தவள் போல் நின்றாள். காதில் விழுந்த செய்தியை கிரகித்துக் கொள்ள முடியாமல் தவித்தாள்.

ராமரை நான் பிரிந்து இருக்க வேண்டுமா என்று கண்களில் நீர் பெருக கதறினாள். சிறிது நேரம் கழித்து சுய நினைவுக்கு வந்த சீதை லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தாள். என்னை இப்படி சித்ரவதை செய்வதற்காகத் தான் பிரம்மா இந்த பூமியில் பிறப்பெடுக்கச் செய்திருக்கிறார். என் சரீரம் துக்கத்தை அனுபவிக்கவே படைக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். முன் பிறவியில் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை. ராமர் என்னை கை விட்டுவிட்டார். முன்பு பல காலம் காடுகளில் உள்ள ஆசிரமத்தில் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் அப்போது ராமர் என்னுடன் இருந்தார். அதனால் வனவாசத்திலும் மகிழ்ச்சியுடன் இருந்தேன். இப்பொழுது அவரில்லாமல் தனியாக ஆசிரமத்தில் எப்படி இருப்பேன். என் கஷ்டங்களை யாரிடம் சொல்லி அழுவேன். இப்போதே அக்னியில் இறங்கி என் உயிரை விட்டுவிடலாம் என்று எண்ணுகிறேன் ஆனால் அப்படி உயிரை விட்டால் இக்ஷ்வாகு குலம் பரிகாசத்துக்கு ஆளாகும். அதனால் உயிரையும் விடமுடியாமல் ராமரில்லாமல் வாழவும் முடியாமல் இனி வரும் காலம் முழுவதும் தவிக்கப் போகிறேன் என்றாள் சீதை.

ராமரின் இந்த நாட்டின் அரசர் எனது அண்ணன். அவர் இட்ட கட்டளையை இதுவரை நான் மீறியதில்லை என்றான் லட்சுமணன். அதற்கு சீதை உன் கடமையை நீ செய் லட்சுமணா உன் மீது எனக்கு கோபமோ வருத்தமோ இல்லை. ராமர் உனக்க இட்ட கட்டளைப்படி இந்த காட்டுப் பிரதேசத்தில் என்னை தனியாக விட்டுவிட்டுத் திரும்பிச் செல். உங்களது தாயார் மூவரிடமும் என்னுடைய வணக்கத்தைச் சொல்லிவிடு. ஏனேய உறவினர்களின் நலத்தை விசாரித்ததாகச் சொல். தர்மம் தான் எனக்குப் பெரியது என்று சொல்லிக் கொள்ளும் ராமரிடம் நான் சொன்னதாக ஒரு செய்தியை மட்டும் சொல்லிவிடு. சீதை மாசற்றவள் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களிடத்தில் நிறைந்த பக்தியும் அன்புமுடையவள். உங்கள் நன்மையில் அக்கறையுள்ளவள். யாரோ ஏதோ பேசிய பேச்சால் தர்மத்தைக் காப்பற்றுகிறேன் என்ற பெயரில் என்னைத் தியாகம் செய்கிறீர்கள். பெண்களுக்கு கணவன் தான் தெய்வம் அதனால் உங்களது உத்தரவிற்கு நான் மரியாதை கொடுக்கிறேன். ருது காலம் தாண்டி நான் ராமனது கர்ப்பத்தை தாங்கி இருக்கிறேன். அவை அனைத்தையும் அப்படியே சொல்லிவிடு உனக்கு விடை தருகிறேன் நீ செல்லமாம் என்று சீதை லட்சுமணனிடம் பேசி முடித்தாள்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -36

ராமரின் கட்டளையை கேட்டு திடுக்கட்ட மூன்று சகோதரர்களும் பேச முடியாமல் சிலை போல் நின்றார்கள். ராமர் ஒன்றும் பேசாமல் தன் அறைக்கு சென்று விட்டார். மூவரும் கலந்து பேசி ராமரின் கட்டளையை நிறைவேற்ற முடிவு செய்தனர். இச்செயலை லட்சுமணன் செய்யுமாறு பரதனும் சத்ருக்கனனும் கேட்டுக் கொண்டார்கள். அந்த இரவு ராமருக்கும் சகோதரர்கள் மூவருக்கும் மன நிம்மதியின்றி கழிந்தது. விடிந்ததும் லட்சுமணன் சுமந்திரரை அழைத்து ரதத்தில் குதிரைகளைப் பூட்டி அதில் சீதை அமர வசதியாக ஆசனம் தயார் செய்யுங்கள். மகரிஷிகள் வசிக்கும் ஆசிரமங்களைக் காண சீதையை அழைத்துச் செல்ல அரசரின் உத்தரவு என்று வாடிய முகத்துடன் உத்தரவிட்டான். அரண்மனைக்குள் சென்ற லட்சுமணன் சீதையிடம் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வால்மீகி முனிவர் வாழும் ஆசிரமத்திற்கு தங்களை அழைத்துச் செல்ல ராமர் எனக்கு கட்டளையிட்டிருக்கிறார். அதன்படி தங்களை அழைத்துச் செல்ல வந்தேன் என்றான்.

ராமர் இட்ட கட்டளை என்றதும் சீதை உடனே தயாராகி கிளம்பி விட்டாள். சுமந்திரனை அனுப்பி விட்டு லட்சுமணன் தானே ரதத்தை ஓட்டினான். சீதை லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தாள். நாம் கிளம்பியதில் இருந்து அபசகுனங்களை நிறைய காண்கிறேன். என் கண் துடிக்கிறது. இதயம் ஏனோ நடுங்குகிறது. நான் ஆசைப்பட்ட இடத்திற்கு செல்கிறேன் ஆனாலும் எனக்கு உற்சாகம் வரவில்லை. இனம் புரியாத கவலை தானாகவே தோன்றுகிறது. அனைத்தும் நன்றாக நடக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன் நீயும் வேண்டிக் கொள் என்றாள். இதைக் கேட்ட லட்சுமணனின் மனம் துணுக்குற்றாலும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் கங்கை கரைக்கு வந்தடைந்தார்கள். கங்கை நதிக் கரையில் பாதி நாள் கழிந்தது. திடிரென லட்சுமணன் தன் கட்டுப் பாட்டை இழந்து அழ ஆரம்பித்தான். சீதை எதுவும் புரியாமல் என்ன இது? ஏன் அழுகிறாய் என்று கேட்டாள். வெகு நாட்களாக நான் வசிக்க விரும்பிய இடம் இது. இங்கு வந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சமயத்தில் ஏன் அழுகிறாய்? நீ எப்பொழுதும் ராமன் அருகிலேயே இருப்பவன். இரண்டு நாள் பிரிந்து இருக்க வேண்டுமே என்று அழுகிறாயா? லட்சுமணா எனக்கும் ராமனிடத்தில் அன்பு உண்டு. ராமரை என் உயிரை விடவும் அதிகமாக நேசிக்கிறேன். நானே சமாளித்துக் கொண்டு இருக்கிறேன். சிறு பிள்ளை போல அழுகிறாயே விவரம் அறியாதவனா நீ. அழுகையை நிறுத்தி விட்டு இந்த கங்கையைக் கடந்து அக்கரையில் இருக்கும் முனிவர்களை தரிசிக்க ஏற்பாடு செய். மகரிஷிகளை உரிய முறையில் வணங்கி ஆசீர்வாதம் பெற்று ஒரு இரவு அவர்களுடன் வசித்து விட்டு நகரம் திரும்புவோம் என்றாள். தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்ட லட்சுமணன் சீதையை படகில் ஏறச் செய்து கங்கைக் கரையே கடந்து முனிவர்கள் வாழும் பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

ராமர் எனக்கு ஒரு கட்டளையை பிறப்பித்திருக்கிறார் என்று சீதையிடம் பேச ஆரம்பித்தான் லட்சுமணன். கண்களில் நீருடன் பணிவாக தன் தன் நிலையை சொல்ல ஆரம்பித்தான். மதிப்புக்குரிய ராமர் இந்த கட்டளையை எதற்காக பிறப்பித்தார் என்று எனக்கு தெரியவில்லை. நேற்று இரவு முதல் ஒரு பெரும் பாரத்தை என் மனதில் சுமந்து வருகிறேன். இந்த செய்தியை தங்களிடம் சொல்லும் முன் என் உயிர் பிரிந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இச்செயலை செய்ய என்னை பணித்ததற்கு பதிலாக எனக்கு மரண தண்டனை விதித்திருக்கலாம். உலகமே நிந்திக்கப் போகும் இந்த செயலைச் செய்ய ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தாரோ என்று தெரியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். இதில் என் தவறு எதுவும் இல்லை என்று சொல்லியபடி லட்சுமணன் அவள் பாதங்களில் விழுந்து அழுதான். லட்சுமணனின் சொல்லையும் செயலையும் கண்ட சீதை கவலையால் துடித்துப் போனவளாக எனக்கு எதுவுமே புரியவில்லை விவரமாகச் சொல் லட்சுமணா என்று கேட்டு பதறினாள்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -35

ராமர் மூவரிடமும் பேச ஆரம்பித்தார். கவனமாக கேளுங்கள். யாரும் குறுக்கே பேச வேண்டாம். நமது அயோத்தி மக்கள் மத்தியில் என்னையும் சீதையையும் குறித்து எந்த விதமான பேச்சு நடமாடுகிறது என்று தெரிந்து கொண்டேன். மக்கள் மத்தியில் பெரும் தவறான ஒரு பேச்சு பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த பேச்சு மிகவும் அருவருக்கத் தக்கதாக என்னைக் குத்தி வாட்டுகிறது. நான் பெயர் பெற்ற இக்ஷ்வாகு குலத்தில் வந்தவன். சீதையும் ஜனகரின் உத்தமமான குலத்தில் தோன்றியவள் இது அனைவருக்கும் தெரியும். தண்டகாருண்ய வனத்தில் ராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு சென்றான். நான் ராவணனை வதம் செய்து அழித்தேன். ராவணனின் பிடியில் சீதை இருந்தாலும் அவள் மாசற்றவள் என்பதை நான் அறிவேன். சீதையை அயோத்திக்கு அழைத்து வருவதற்கு முன்பாக அவள் மாசற்றவள் என்பதையும் அவளின் புனிதத்தன்மையையும் இந்த உலகிற்கு காட்டுவதற்காக அவளை அக்னியிலும் இறங்கச் செய்தேன். சீதையும் அக்னியில் இறங்கி தனது புனிதத் தன்மையை நிருபித்து விட்டாள். அக்னியில் இறங்கியவளை அக்னி தேவனே அழைத்து வந்து அவளின் புனிதத் தன்மையை உலகிற்கு காட்டினான். தேவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் கண்டனர். சீதை மாசற்றவள் என்று அனைவருக்கும் உணர்த்திய பின்னரே அயோத்திக்கு அழைத்து வந்தேன். இத்தனை செயலும் மக்களிடம் நம்பிக்கை வருவதற்காகத் தானே செய்தேன். இப்போது மக்கள் மத்தியில் சீதையின் மீது ஒருவிதமான சந்தேகமும் தவறான எண்ணமும் நிலவி வருகிறது. மாற்றானுடன் இருந்த சீதையுடன் எப்படி ராமர் அழைத்து வந்தாரோ அது போலவே நமது வீட்டின் பெண்களுக்கும் இது போல் ஏதேனும் பிரச்சனை வந்தால் நாமும் அது போலவே பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தங்களுக்குள் பலவாறு பேசியிருக்கிறார்கள். அதன் உட்பொருள் சீதை புனிதமானவள் என்பதை மக்கள் நம்பவில்லை என்று தெரிகிறது. இதை அறிந்து என் மனம் மிகவும் வருந்துகிறது.

இக்ஷ்வாகு வம்சத்தில் நமது முன்னோர்கள் சத்தியத்தையும் தர்மத்தையும் காத்து தனக்குப் பின் வரும் வாரிசுகளுக்கு கொடுத்தார்கள். வழிவழியாக வந்த நமது குலத்தில் இப்போது நான் அரசனாக இருந்து உங்களின் உதவியால் சத்தியத்தையும் தர்மத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். இக்ஷ்வாகு வம்சத்தின் புகழையும் பெயரையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இப்போது ஏதோ ஒரு வகையில் அதற்கு ஒரு பழிச்சொல் வந்திருக்கிறது. இது போன்ற பழிச் சொல் நம்மை கீழே தள்ளி விட்டுவிடும். இஷ்வாகு வம்சத்தின் புகழை நான் குலைத்து விடுவேனோ என்று நடுங்குகிறேன். இந்த பயத்தினால் உயிரை விடலாமா என்றெல்லாம் யோசிக்கிறேன். எனக்கு இதை விட பெரிய துக்கம் என்று ஒன்று இருக்கும் என்று தோன்றவில்லை. நீங்கள் இந்த சோகக்கடலில் மூழ்கித் தத்தளிக்கும் எனக்கு கை கொடுக்க வேண்டும். நான் சொல்வது போல் செய்து விடுங்கள். இந்த பழிச்சொல் சீதையின் காதில் விழுந்தால் அவள் துடித்து விடுவாள். இச்செய்தியை அவள் கேட்டால் அந்த கனமே உயிரையும் விட்டு விடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் இச்செய்தி அவளின் காதில் விழுவதற்கு முன்பாக அவளை அயோத்தியில் இருந்து அனுப்பி விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். சீதைக்கு முனிவர்கள் வாழும் காட்டில் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக என்னிடம் நேற்று கூறினாள். ஆகையால் நாளைக் காலை தேரோட்டி சுமந்திரரை ரதத்தை பூட்டச் சொல்லுங்கள். அதில் சீதையை அழைத்துச் செல்லுங்கள். நகரத்தின் எல்லையில் இருக்கும் கங்கைக் கரையைத் தாண்டி வால்மீகி முனிவரின் அழகிய ஆசிரமம் இருக்கிறது. ஆசிரமத்திற்கு முன்பாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவளை விட்டுவிட்டு திரும்பி வந்து விடுங்கள். சீதை அவள் விருப்பப்பட்ட ஆசிரம வாழ்க்கையை வாழ்ந்து கொள்ளட்டும். என்னைப் பிரிந்து இருந்தாலும் பரவாயில்லை. இச்செய்தி அவளின் காதுகளில் விழாமல் இருக்க வேண்டும் அதுவே முக்கியம். இதற்கு மேல் சீதையைப் பற்றி யாரும் எதுவும் பேச வேண்டாம். இது எனது கட்டளை நான் சொன்னதைச் செய்து விடுங்கள். எனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆலோசனை சொல்ல யாரும் முயற்சி செய்யாதீர்கள். இது எனது கட்டளை. இந்த செயலை உடனே நிறைவேற்றுங்கள் என்று தன் கண்களில் நீர் வடிய ராமர் சொல்லி முடித்தார்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -34

ராமர் கேட்டவுடன் பத்ரன் என்ற ஒற்றன் வணக்கத்துடன் பதிலளித்தான். மக்கள் அனைவரும் நல்ல விதமாகத்தான் பேசிக் கொள்கிறார்கள். தாங்கள் ராவணனை அழித்ததைப் பாராட்டி பேசுகிறார்கள். இந்த யுத்தத்தைப் பற்றியும் அதன் வெற்றியைப் பற்றியும் நகரில் பல கதைகள் பரவியுள்ளன என்றான். அதற்கு ராமர் சுப செய்தியாக இருந்தாலும் அசுப செய்தியாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் மறைக்காமல் சொல். சுபமான செய்தி என்றால் தொடர்ந்து செய்வோம். அசுபமான செய்தி என்றால் நம்மை மாற்றிக் கொள்வோம் பயப்படாதே கவலையின்றி விவரமாகச் சொல் என்றார் ராமர். கடை வீதிகளிலும் வனங்கள் உபவனங்கள் என நமது நாட்டில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைச் சொல்கிறேன் என்று பத்ரன் மிக கவனமான சொற்களுடன் விவரமாகச் சொல்ல அரம்பித்தான்.

ராமர் செய்தது அரிய செயல். சமுத்திரத்தின் மேல் சேது பாலத்தைக் கட்டி விட்டார். தேவர்கள் தானவர்கள் கூட இப்படி கடலின் மேல் பாலம் கட்டியதாக அறிந்தது இல்லை. நெருங்கவே முடியாதவன் என்று பெயர் பெற்ற ராவணன் தன் படை பலங்களோடு ராமரால் அழிக்கப்பட்டான். வானர வீரர்கள் கரடிகள் அவர்களோடு இப்போது ராட்சசர்களும் ராமரின் வசத்திற்கு வந்து விட்டார்கள். ராவணனை வதம் செய்து தன் சீதையை மீட்டு வந்துவிட்டார். முன்பு ராவணன் அவளை அபகரித்துக் கொண்டு இலங்கையின் அசோக வனத்தில் வைத்தான். ராட்சசர்களின் கட்டுப்பாட்டில் சில காலம் இருந்தவளை குறை ஏதும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டார் ராமர். மாற்றான் கட்டுப் பாட்டில் இருந்த தன் மனைவியை ராமர் ஏற்றுக் கொண்டது பெரிய செயல். சீதையுடன் சேர்ந்ததில் தான் அவருக்கு எவ்வளவு ஆனந்தம். மாற்றானுடன் இருந்த சீதையை காணும் போதெல்லாம் ராமருக்கு எப்படி ஆனந்தம் ஏற்படுகிறதோ தெரியவில்லை? நமது வீட்டின் பெண்களுக்கும் இது போல் ஏதேனும் பிரச்சனை வந்தால் நாமும் அது போலவே பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தங்களுக்குள் பலவாறு பேசுகிறார்கள் என்று சொல்லி முடித்தான். இதைக் கேட்ட ராமரின் முகம் வருத்தத்தில் வாடியது. கூடியிருந்த நண்பர்களைப் பார்த்து இது என்ன புதிய குழப்பம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். அவர்களும் தலை குனிந்தபடி ராமரை வணங்கி இப்படித்தான் நாங்களும் கேள்விப் பட்டோம். இவன் சொல்வது சரிதான் என்றார்கள். அவர்கள் சொன்னதை மனதில் வாங்கிக் கொண்ட ராமர் அவர்களை அனுப்பி விட்டு யோசிக்கலானார்.

ராமர் நீண்ட யோசனைக்குப் பிறகு வாயில் காப்போனைக் கூப்பிட்டு சீக்கிரம் லட்சுமணன் பரதன் சத்ருக்னன் மூவரையும் அழைத்து வா என்று கட்டளையிட்டார். வாயில் காப்போன் ஜய கோஷம் செய்து வாழ்த்தி விட்டு ராஜா உங்களை அழைக்கிறார். என்று மூவருக்கும் செய்தியை கூறினான். மூவரும் உடனடியாக ராமர் இருக்குமிடம் வந்து சேர்ந்தார்கள். ராமரின் கவலையான முகத்தைப் பார்த்து ஏதோ குழப்பம் என்று ஊகித்துக் கொண்டார்கள். கண்களில் நீருடன் முகம் வாட்டாமாக இருந்த ராமரைப் பார்த்து செய்வதறியாமல் பேசாமல் நின்றனர். அவர்களை அமரச் செய்த ராமர் அவர்களிடம் பேச ஆரம்பித்தார். நீங்கள் மூவரும் தான் எனக்கு உயிர். நீங்கள் மூவரும் தான் எனக்கு எல்லாம். உங்கள் உதவியோடு தான் நான் ராஜ்ய பாலனம் செய்கிறேன். சாஸ்திரங்களை அறிந்தவர்கள் நீங்கள். நல்ல புத்தி உடையவர்கள். நான் சொல்வதைக் கேட்டு யோசித்து ஆராய்ந்து பதில் சொல்லுங்கள் என்றார். ராமர் என்ன சொல்லப் போகிறாரோ என்று மனம் கலங்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போன்ற குழப்பங்கள் மனதில் தோன்ற வாய் பேசாமல் அவர் முகத்தையே பார்த்தபடி மூவரும் அமர்ந்திருந்தனர்.