ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -13

ராமனும் சீதையும் வனம் செல்வது உறுதியாகி விட்டது. தனக்கு உரிய செல்வங்கள் அனைத்தையும் சீதை தானம் செய்துவிட்டாள். அரச உடைகளை களைந்து தபஸ்விகளுகான உடைகளை அணிந்து கொண்டு கிளம்ப ஆயத்தமானார்கள். லட்சுமணன் ராமரின் முன்னிலையில் வந்தான். தங்களுடன் நானும் வருகிறேன். தங்களை விட்டு பிரிந்நிருப்பது என்னால் இயலாத காரியம். தங்களையும் அண்ணியாரையும் காவல் காத்துக்கொண்டு தங்களுக்கு காட்டில் கனிவகைகளை தேடிக்கொடுத்து பணிவிடைகளை செய்கிறேன். என்னையும் அழைத்து செல்லுங்கள் என்றான் லட்சுமணன்.

தந்தை கைகேயியிடம் வரங்களை கொடுத்து சிக்கிக் கொண்டிருக்கின்றார். பரதன் ஆட்சி செய்துகொண்டிருப்பான். மாயையில் சிக்கிக்கொண்டிருக்கும் கைகேயியின் பிடியில் கௌசலையும் சுமித்ரையும் இருப்பார்கள். கைகேயி இவர்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பில்லை. நீயும் என்னுடன் வந்துவிட்டால் கௌசலைக்கும் சுமித்ரைக்கும் பணிவிடைகள் செய்ய யாரும் இருக்கமாட்டார்கள் இங்கிருந்து அவர்களை பார்த்துக்கொள் என்றார். தாய் தந்தைக்கு செய்யும் சேவை மிகப்பெரிய தர்மமாகும் இந்த தர்மத்தை செய்து கொண்டு இங்கேயே இரு என்றார்.

அண்ணா கைகேயி மாயையால் மயங்கி இருக்கிறாள். ஆனால் தங்களின் தம்பி பரதன் தங்களுடைய மகிமையால் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுப்பதோடு கௌசலையையும் சுமித்ரையையும் கௌரவமாக பார்த்துக்கொள்வார். இதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம். மேலும் கௌசலையை சார்ந்து இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பார்த்துக்கொள்ளும் வல்லமை அன்னை கௌசலையிடம் இருக்கிறது. இதற்காகவே ஆயிரக்கணக்கான கிராமங்கள் அவரிடம் இருக்கிறது. உங்களை விட்டு என்னால் எப்படி பிரிந்து இருக்க முடியாதோ அது போலவே என்னைவிட்டும் தங்களால் பிரிந்து இருக்கமுடியாது. உங்களுடைய வெளியில் இருக்கும் உயிர் நான் என்று ஏற்கனவே சொல்லியிருக்கின்றீர்கள். அப்போதே என்னை தங்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் என்னையும் அழைத்துச்செல்வதற்கு தாங்கள் அனுமதி அளித்துவிட்டீர்கள். இப்போது என்னை தடுக்காதீர்கள் என்னையும் தங்களோடு வர அனுமதியுங்கள். தங்களுக்கு பின்னே கையில் வில் ஏந்தியவனாக நான் உங்களுடன் காட்டிற்கு வருவேன் என்றான் லட்சுமணன்.

ராமர் லட்சுமணனையும் காட்டிற்கு அழைத்து செல்ல சம்மதித்தார். லட்சுமணனிடம் அரச உடைகளை களைத்து தவஸ்விகளுகான உடைகளை அணிந்து கொள். ஜனகரின் வேள்விச்சாலையில் வருணபகவான் நமக்கு அளித்த இரண்டு விற்கள் எவ்வளவு அம்புகளை எடுத்தாலும் குறையாத அம்பாறத்தூணிகள் சூரியனைப்போல ஒளி வீசும் வாள் ஆகியவற்றை வசிஷ்டரிடம் கொடுத்து வைத்திருக்கின்றோம். வசிஷ்டர் இருப்பிடம் சென்று அவரிடம் கொடுத்து வைத்திருந்த அரிய அஸ்திரங்களை எடுத்துக்கொண்டு தன்னோடு வருமாறு கட்டளையிட்டார் ராமர். மூவரும் தசரதரிடம் விடை பெற்றுக்கொள்வதற்காக அவர் இருப்பிடம் சென்றார்கள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -12

ராமரின் பேச்சைக்கேட்ட சீதை பெரும் கோபத்துடன் தர்மம் அனைத்தும் அறிந்த தாங்கள் இவ்வாறு கூறுவது எனக்கு வியப்பை தருகிறது. கணவன் வேறு மனைவி வேறு என்று தங்கள் பிரித்து கூறிகின்றீர்கள். ராமர் வனவாசம் செல்ல வேண்டும் என்றால் அப்போது ராமரின் பாதியாக இருக்கும் சீதைக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அதுவே தர்மம் காட்டிற்கு வந்தால் துக்கப்படுவேன் என்று தாங்கள் எண்ண வேண்டாம் வனவாசத்தை மகிழ்ச்சியுடனேயே அனுபவிப்பேன். உங்களுடன் இருக்கும் போது வனவாசம் என்பது எனக்கு விளையாட்டாகவே இருக்கும். உங்களுடன் இருந்தால் சொர்க்கமும் எனக்கு வேண்டாம். என்னை விட்டு பிரிந்து செல்லாதீர்கள். நீங்கள் என்னை விட்டு பிரிந்தால் மரணித்துவிடுவேன். நீங்கள் செல்லும் காட்டுப்பகுதிக்கு நான் உங்களுக்கு முன்னே சென்று கல் முள் என்று அனைத்தையும் விலக்கி நல்ல பாதையை தங்களுக்கு அமைத்து தருவேன் என்னையும் தாங்கள் அழைத்துச்செல்லுங்கள் என்றாள்.

ராமர் சீதையிடம் காட்டிற்கு நீ என்னுடன் வந்தால் கொடூரமான விலங்குகள் இருக்கும். அரண்மனையில் சுகமாக வாழ்ந்துவிட்டு காட்டில் மண் தரையில் படுக்கவேண்டி இருக்கும். என்று காட்டில் வாழ்ந்தால் வரும் பிரச்சனைகளை சொல்லி வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

சீதையின் கண்களில் நீர் பெருகியது. புலி சிங்கம் போன்ற விலங்குகள் கூட தங்களை கண்டால் தூரமாக விலகிச்செல்லும். தாங்கள் என் அருகில் இருந்தால் நீங்கள் சொல்லும் மழை புயல் காற்று வெயில் என்று அனைத்தையும் என்னால் பொருத்துக்கொள்ள முடியும். நீங்கள் இல்லாமல் இந்த அரண்மணையில் உள்ள சுகங்கள் கூட எனக்கு துக்கமாக இருக்கும். நான் ஜனகரின் மகள். என் தாயும் தந்தையும் எனக்கு கணவன் மனைவிக்கான தர்மத்தை பற்றி சொல்லியிருக்கிறார்கள். கணவன் இருக்கும் இடத்திலேயே மனைவி இருக்க வேண்டும் இதுவே தர்மம். கணவன் செல்லும் பாதையை பின்பற்றி செல்ல வேண்டும் இதுவே என் தந்தை எனக்கு சொன்னது. நீங்கள் உங்கள் தந்தையின் வாக்கை நீங்கள் மீற மாட்டீர்கள். அது போல் என் தந்தை எனக்கு சொல்லிக்கொடுத்த தர்மத்தை நான் மீற மாட்டேன். மேலும் ஒரு செய்தியை சொல்கிறேன். நான் குழந்தையாக இருக்கும் காலத்தில் ஜோதிடர்களை வைத்து என் ஜாதகத்தை என் தந்தை கணித்தார். அப்போது அவர்கள் சில வருடங்கள் வனவாசத்தில் இப்பெண் இருப்பாள் என்று சொல்லியிருக்கின்றார்கள். நான் தனியாக வனவாசம் செய்ய முடியாது. அதற்கான சூழ்நிலையும் ஏற்படவில்லை. இப்போது சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அதனை நான் பயன் படுத்திக்கொள்கிறேன். என்னை தடுக்காதீர்கள். நானும் உங்களுடன் வருவேன் என்று தீர்க்கமாக சொன்னாள் சீதை.

சீதையின் வேண்டுதலை ராமரால் மறுக்க முடியவில்லை. உன்னை அழைத்துச்செல்கிறேன் இருவரும் செல்வோம். உன்னுடைய நகை மற்றும் உனக்கு உரிய பொருள்கள் அனைத்தையும் இல்லாதோர்க்கும் உனது பணியாட்களுக்கும் தானம் அளித்துவிட்டு சாதாராண உடைகளை அணிந்துகொள் இவை அனைத்தையும் விரைவாக செய்துவிடு நாம் விரைவில் அயோத்தியை விட்டு கானகம் செல்லவேண்டும் என்று சீதையிடம் கூறினார். சீதை மகிழ்ச்சியில் திளைத்து தனது உடைமைகளை தானம் கொடுக்க ஆரம்பித்தாள்.

தொடரும்……..

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -11

லட்சுமணன் பேசியது கௌசலைக்கு ஆறுதலாக இருந்தது. ராமர் கௌசலையிடம் பேசினார். தாயே காட்டிற்கு தாங்கள் என்னுடன் வருவது சரியாக இருக்காது. கணவனுடன் மனைவி இருப்பதே தர்மம். நான் சென்றதும் தந்தைக்கு உதவியாக தாங்கள் இருந்து தந்தையை பார்த்துக்கொள்ளுங்கள். தாங்களும் என்னுடன் வந்துவிட்டால் தந்தை மேலும் வருத்தப்படுவார். அது அவரின் உடல் நிலையை பாதிக்கும். நான் தனியாகவே செல்கிறேன். பதினான்கு வருடங்களில் திரும்பி வந்துவிடுவேன். நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள் வாழ்ந்திருப்போம். அதுவரை பொருத்திருங்கள் என்றார்.

லட்சுமணனைப் பார்த்து பேச ஆரம்பித்தார் ராமர். என் மீது நீ வைத்திருக்கும் அன்பை நான் அறிவேன். நீ சொல்லும் யோசனை முற்றிலும் தவறு. கோவம் மனிதனின் முதல் எதிரி. அதனை இப்பொழுதே நீ விட்டுவிடு. உன்சக்தியை நான் அறிவேன். அனைவரையும் தோற்கடித்து இந்த ராஜ்யத்தை நீ எனக்காக சம்பாதித்து கொடுப்பாய். எனக்கு உன் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் தந்தையின் உத்தரவு தர்மமாக இருந்தாலும் அதர்மமாக இருந்தாலும் அவராக கூறியிருந்தாலும் வேறு யாருடைய தூண்டுதலினால் கூறியிருந்தாலும் அதனை நிறைவேற்றுவது என் கடமை. தந்தை கைகேயிக்கு கொடுத்த வாக்கை மீறினால் இத்தனை ஆண்டு காலம் அவர் செய்த பூஜைகள் யாகங்கள் தானதர்மங்கள் அனைத்தும் பயனில்லாமல் போகும். தந்தையுன் வாக்கை காப்பாற்றுவது மிகப்பெரிய தர்மம். இந்த தர்மத்தை செய்யாமல் வேறு எதனை செய்தாலும் இதற்கு ஈடு ஆகாது என்று கௌசலையையும் லட்சுமணனையும் சமாதானப்படுத்தினார் ராமர். கௌசலையிடம் விடைபெற வணங்கினார் ராமர். மங்கள மந்திரங்களை சொல்லி தந்தையின் ஆணையை செய்து முடித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பி வரவேண்டும் என்று திலகமிட்டு வாழ்த்தி விடைகொடுத்தாள் கௌசலை. ராமர் சிரித்துக்கொண்டே பதினான்கு வருடங்களையும் சுலபமாக கழித்துவிட்டு வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு சீதையை பார்க்க தான் இருந்த மாளிகைக்கு கிளம்பினார்.

சீதையிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு காட்டிற்கு செல்லும் நெருக்கடியில் இப்போது ராமர் இருந்தார். ராமருடைய வருகையை பார்த்து ஆவலோடு காத்திருந்தாள் சீதை. ராமர் அரசனாக பட்டாபிஷேகம் செய்யும் எந்த அறிகுறியும் இல்லாமல் வருவதை கண்டு சிறிது குழப்பமடைந்தாள் சீதை. பட்டாபிஷேகம் செய்யும் இன்று தங்களுடன் இருக்கும் வெண்குடை சமாரம் எங்கே? பாடகர்கள் ஓதுவார்கள் எங்கே? தாங்களுடன் வரும் தங்களது சேவகர்கள் எங்கே? என்று கேள்விகளாக கேட்டுக்கொண்டே இருந்தாள் சீதை. ராமர் சீதையிடம் பொருமையாக சொல்ல ஆரம்பித்தார். எனது தந்தை கைகேயிக்கு கொடுத்த வரத்தை காப்பாற்ற பதினான்கு வருடங்கள் காட்டிற்கு சென்று தவம் செய்யப்போகிறேன். பரதன் அரசனாகப்போகின்றான். நீ அமைதியாக அரண்மணையில் வாழ்ந்திருந்து உனது மாமியார் மாமனாருக்கு பணிவிடைகள் செய்து பரதனை அரசனாக அங்கிகரித்து வந்தனை செய்வாயாக என்று சீதையிடம் சொல்லி முடித்தார் ராமர்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -10

ராமர் தன்னுடன் வந்த வெண்குடை சமாரம் என்று இளவரசனுக்கு உரிய அனைத்து சுகங்களும் தனக்கு வேண்டாம் யாரும் தன்னை பின் தொடர வேண்டாம் என்று சொல்லிவிட்டு தாய் கௌசலையின் மாளிகையை நோக்கி லட்சுமணனுடன் தனியாக செல்ல ஆரம்பித்தார். லட்சுமணன் கண்கள் சிவக்க கோபத்துடன் ராமரை பின் தொடர்ந்தார்.

கௌசலையின் மாளிகையில் அனைவரும் ராமரின் பட்டாபிஷேகத்தை காணச்செல்வதற்கு மகிழ்ச்சியுடன் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். ராமர் வந்ததை கண்ட கௌசலை ராமனை கட்டியணைத்து வரவேற்றாள். ராமருக்கு உரிய ஆசனத்தில் அமரச்சொன்னாள். ராமர் தாயே இந்த ஆசனத்தில் என்னால் அமர இயலாது. புல்லை பரப்பி உட்கார வேண்டிய தவஸ்வி தான். தங்களுக்கு வருத்தம் தரக்கூடிய செய்தியை கொண்டு வந்திருக்கின்றேன். தங்களையும் சீதையையும் லட்சுமணனையும் பிரிந்து காட்டிற்கு செல்லப்போகிறேன். தாங்கள் இச்செய்தியை பொருத்துக்கொண்டு என் செயலுக்கு ஆசி கூறி எனக்கு விடை கொடுக்கவேண்டும் என்று நடந்தவற்றை விரிவாக எடுத்துக்கூறி இன்றே நான் காட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லி முடித்தார்.

ராமர் சொன்னதை கேட்ட கௌசலை அம்பினால் தாக்கப்பட்ட பெண்மானைப்போல கீழே விழுந்தார். எனக்கு பிள்ளையாக பிறக்காவிட்டால் உனக்கு இந்த தூன்பம் வந்திருக்காது. தசரதர் ஆட்சியில் இருக்கும் போது மூத்த பட்டத்து அரசிக்கான எந்த சுகத்தையும் கண்டதில்லை. உன் சிற்றன்னைகளே அனைத்தையும் அனுபவித்தனர். அவர்களின் பணிப்பெண் போலவே நான் நடத்தப்பட்டேன். என் கணவர் என்னை சற்று தள்ளியே வைத்திருந்தார். நீ என்னுடன் இருந்த காரணத்தால் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது நீயும் என்னை விட்டு பிரிந்தால் என் கதி என்ன ஆகும் என்று எனக்கு தெரியவில்லை. நிச்சயமாக மரணித்து விடுவேன். கன்றின் மேல் உள்ள பாசத்தால் கன்றைத்தொடர்ந்து செல்லும் பசுவைப்போல் உன்னை தொடர்ந்து வருகிறேன் என்னையும் அழைத்துச்செல் என்று அழுதபடி சொன்னார்.

கௌசலையின் அழுகையினால் வருந்திய லட்சுமணன் பேச ஆரம்பித்தான். பெரியன்னையே சிற்றன்னையின் சொல்லிற்கான ராமர் காட்டிற்கு செல்வது எனக்கும் சம்மதமில்லை. நாட்டைவிட்டு காட்டிற்கு செல்லும் அளவிற்கு ராமர் குற்றம் ஒன்றும் சொல்லவில்லை. அவரிடம் மறைமுகமாக கூட யாரும் இதுவரை ஒர் குற்றத்தை கண்டதில்லை. வயோதிகரான தந்தையின் குணம் மாறிவிட்டது. கைகேயின் துர்செயலால் அவர் ஒன்றும் பேசாமல் இருக்கிறார். அவருடைய காலம் கடந்துவிட்டது. மக்கள் அனைவரும் ராமரை சிம்மாசனத்தில் பார்க்க ஆவலாக இருக்கின்றார்கள். அண்ணா உடனே அரச பட்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு உத்தரவு தாருங்கள். எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழித்துவிடுகிறேன் என்று கோபத்துடன் கூறினான் லட்சுமணன்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -9

ராமன் எந்த சலனமும் இல்லாமல் கைகேயியிடம் கம்பீரத்துடன் பேச ஆரம்பித்தார். பெற்றோர்களிடமிருந்து வரும் ஆணையை செயல்படுத்துவது மகனின் கடமை. என் தந்தை மட்டுமல்ல தாங்கள் எனக்கு ஆணையிட்டாலும் கொளுந்து விட்டு எரியும் தீயில் குதிப்பேன். ஆழ்கடலில் மூழ்குவேன். விஷத்தையும் அருந்துவேன். எனக்கு எந்த ஒரு வருந்தமும் இல்லை. தாங்கள் ஆணையிடுங்கள் அதற்கு அடிபணிந்து அச்செயலை இப்போதே செய்து முடிக்கிறேன் என்றார்.

ராமர் இவ்வாறு சொன்னதும் கைகேயி நமது காரியத்தை சுலபமாக சாதித்துவிடலாம். நாம் நினைத்த காரியம் இனிது முடியப்போகிறது என்று மகிழ்ச்சியுடன் மகா பயங்கரமான செய்தியை ராமரிடம் சொல்ல ஆரம்பித்தாள். முதல் வரமாக உனக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தில் பரதனுக்கு முடிசூட்டி அரசனாக்க வேண்டும். இரண்டாவது வரமாக நீ தவம் செய்யும் பொருட்டு காட்டிற்கு 14 வருடங்கள் வனவாசம் செல்லவேண்டும். இதுவே நான் உனது தந்தையிடம் கேட்ட வரம். இதனை கொடுக்க உனது தந்தை மறுத்தால் கொடுத்த சத்தியத்தில் இருந்து மீறியவர் ஆவார். இந்த இரண்டு வரங்களும் என்னால் மாற்ற முடியாத திட்டங்களாகும் என்று சொல்லி முடித்தாள். ஆனால் ராமரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.

என் தந்தையின் சத்தியத்தை காப்பாற்றும் பொருட்டு இப்போதே அரச உடைகளை களைந்து மரவுரி தரித்து காட்டுக்கு செல்கின்றேன். என் தந்தையின் வாக்கை எனது வாக்காக காப்பாற்றுவது எனக்கு கிடைத்த பாக்கியம். அதனை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவேன். பரதனுக்காக எதையும் விட்டுக்கொடுத்து பரமசந்தோசத்தை அடைவேன். இதனால் எனக்கு எள் அளவும் வருத்தம் இல்லை. பரதனை தூதுவர்கள் மூலம் அழைத்து வரச்செய்து குறித்த நேரத்தில் முடிசூட்டி விடுங்கள். பரதன் அரசாள்வது எனக்கு மகிழ்ச்சியே. எனது தந்தை தாயாரிடமும் சீதையிடமும் லட்சுமனனுடனும் விடைபெற்று செல்லவேண்டும். அதற்கான கால தாமதத்திற்கு மட்டும் சிறிது அனுமதி தாருங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டான். ராமருடைய முகத்தில் சிறிதளவும் வருத்தத்திற்கு உண்டான அறிகுறி கூட கைகேயிக்கு தெரியவில்லை. ராமரை பார்த்து திகைப்படைந்தாள். உடன் சென்ற லட்சுமனனுக்கு குடும்பத்தில் இருந்த குழப்பம் தெளிவாக புரிந்தது. தாய் தந்தையை எதிர்த்து பேச இயலாமல் மிகவும் துன்பத்தில் மூழ்கியவனாக தென்பட்டான். தசரதர் ராமர் நிலை என்ன ஆகுமோ என்று நடுநடுங்கிப்போய் பேச வார்த்தைகள் வராமல் அமர்ந்திருந்தார்.

ராமர் தசரதரையும் கைகேயியிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து லட்சுமனனுடன் தனது தாய் கௌசலையை பார்க்க சென்றார். கைகேயி தனக்கு பின்னால் வரும் வரப்போகும் துக்கத்தை அறியாமல் தன்னுடைய திட்டம் வெற்றி அடைந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -8

அதிகாலை விடிந்தது. பட்டாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வசிஷ்டர் செய்து முடித்தார். தசரத சக்ரவரத்தியை முடிசூட்டும் இடத்திற்கு அழைத்து வரச்சொல்லி சாரதி சுமந்தனிடம் வசிஷ்டர் தகவல் சொல்லி அனுப்பினார். கைகேயி இருக்கும் அந்தப்புரத்திற்கு வந்த சுமந்தன் தசரதரிடம் செய்தியை கூறினான். தசரதர் பேச இயலாமல் அமைதியாக இருந்தார். கைகேயி சுமந்தனிடம் ராமரை உடனே இங்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டார். தயங்கியபடியே தசரதரை பார்த்தான் சுமந்தன். ராமரை பார்க்க விரும்புகின்றேன் அவரை அழைத்து வா என்று வருத்தம் கலந்த குரலில் கூறினார் தசரதர். தசரதரின் முகவாட்டத்தை கண்ட சுமந்தன் ஏதோ விபரீதம் நடந்திருக்கின்றது என்று எண்ணி ராமருடைய மாளிகைக்கு ரதத்தை செலுத்தினான்.

பட்டாபிஷேகத்திற்கு சீதையுடன் தயாராக இருந்தார் ராமர். தங்கள் சிற்றன்னை கைகேயியின் மாளிகையில் தசரத சக்ரவர்த்தி தங்களை காணவேண்டும் என்று தங்களை அழைத்து வரச்சொன்னார் என்று சுமந்தன் ராமரிடம் கூறினான். அலங்காரத்துடன் இருந்த சீதையை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு ராமர் லட்சுமனனை அழைத்துக்கொண்டு சுமந்தனுடன் தசரதரை பார்க்க கிளம்பினார். செல்லும் வழி எங்கும் மக்கள் ராமரை பார்த்து போற்றினார்கள். ராமர் மாளிகைக்குள் நுழைந்ததும் ராமா என்று அலறிய தசரதர் கீழே விழுந்தார். மேற்கொண்டு அவரால் பேச இயலவில்லை. இக்காட்சி ராமரை திகிழடையச் செய்தது. தன் தந்தைக்கு மன வருத்தம் ஏற்படும் வகையில் ஏதேனும் செய்து விட்டேனோ என்று பயந்தார் ராமர். தன் தந்தையை சாந்தப்படுத்தி அவர் முன்னிலையில் வீழ்ந்து வணங்கினார். பின்பு கைகேயியின் முன்னிலையில் வீழ்ந்து வணங்கினார். வழக்கமாக கைகேயியின் முகத்தில் இருக்கும் தாயன்பு தற்போது இல்லாததை ராமர் கவனித்தார்.

அம்மா எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் தந்தை என்னிடம் அன்பாக பேசுவார். ஆனால் இப்போது வாடிய முகத்துடன் இருக்கிறார். நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா. தங்கள் கோபம் அடையும்படி நடந்துகொண்டேனா எதுவாக இருந்தாலும் தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள். இங்கு இருக்கும் சூழ்நிலைகளை பார்த்து எனக்கு அச்சமாக இருக்கிறது என்றார். ராமரின் பேச்சைக்கேட்ட கையேயி தன் காரியத்தை நிறைவேற்ற நல்ல சந்தர்ப்பம் அமைந்துவிட்டது என்று எண்ணி பேச ஆரம்பித்தாள். அரசருக்கு யார் மீதும் கோபம் இல்லை. அவர் மனதிலுள்ள செய்தியை உன்னிடம் சொல்ல பயப்படுகிறார். அதனால் பேசாமலிருக்கிறார். அதனை நானே சொல்லுகிறேன். உன் தந்தை பல வருடங்களுக்கு முன்பு எனக்கு இரண்டு வரங்கள் தந்தார். அதனை இப்போது நான் கேட்டுப்பெற்றுக் கொண்டேன். அந்த இரண்டு வரத்தில் ஒரு வரத்தோடு நீ தொடர்பு கொண்டிருக்கின்றாய். அதனை சொல்லவே உன் தந்தை தயங்குறார் என்றாள் கைகேயி.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -7

தசரதர் கொடுத்த உறுதிமொழியில் உற்சாகமடைந்த கைகேயி தனது வேண்டுதலை கேட்டாள். அரசே பஞ்ச பூதங்கள் சாட்சியாக கேட்கிறேன். சத்தியம் செய்திருக்கின்றீர்கள். எனக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுங்கள். ராமருக்கு பட்டாபிஷேகம் ஏற்பாடு செய்த அதே நேரத்தில் பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்து அரசனாக்குங்கள். ராமர் தவம் செய்யும் பொருட்டு பதினான்கு வருடங்கள் காட்டிற்கு இன்றே அனுப்புங்கள் என்றாள்.

கைகேயியின் வார்த்தையை கேட்ட தசரதன் தன் மேல் இடி இடித்ததை போல் உணர்ந்தார். தன் வலிமை அனைத்தும் அழிந்தவராக சோர்வுற்று கீழே விழுந்தார். புலி ஒன்று மானை பார்த்து நடுங்குவது போல் கைகேயியை பார்த்து தசரதர் நடுங்கினார். மன்னர்கள் அனைவரும் தசரதரின் காலில் விழுந்து வணங்குவார்கள் அத்தகைய சிறப்பு மிக்க தசரதர் கைகேயியின் காலில் விழுந்தார். ராமர் உனக்கு என்ன தீங்கு செய்தான் தன் தாயை விட உன் மீது மிகவும் அன்பாக இருந்து பணிவிடைகள் செய்கின்றான். ராமர் தன்னை அறியாமல் தவறு செய்திருந்தால் அவனை மன்னித்துவிடு.

பரதன் அரசனாக விரும்ப மாட்டான். அவன் விரும்பி ஏற்றுக்கொண்டாலும் இந்த உலகம் அதனை சரி என்று ஒப்புக்கொள்ளாது. மக்கள் இதனை கேட்டால் பொறுமை இழந்து உன்னை பழிப்பார்கள். இவ்வுலகில் மக்களால் பேசப்படும் புகழை நீ அடைய மாட்டாய். இந்த நிகழ்சியால் கொடிய பழி உன்னை வந்தடையும். இந்த பழியைக் கொண்டு என்ன பயனை அடையப்போகிறாய்.

ராமன் மூத்தவன் என்ற முறையில் அவனுக்கு அரச பட்டம் கொடுப்பதாக சொன்னதால் ராமன் அரசனாக முடிசூட்டிக்கொள்ள சம்மதித்தான். அவனிடம் நீ பரதனுக்கு இந்த பட்டத்தை கொடு என்று கேட்டால் ராமனே மனம் உகந்து பரதனை அரசனாக்கிவிடுவான். உன்னால் கேட்கப்பட்ட இரண்டாவது வரத்தை மட்டும் மறுபடியும் கேட்காதே. நீ கேட்ட முதல் வரத்தை இப்போதே தந்தேன். நீயும் பரதனும் இந்த உலகத்தை மகிழ்ச்சியுடன் ஆட்சி செய்யுங்கள். இனி அதனை மாற்ற மாட்டேன். என் உயிரான ராமன் எல்லா உயிர்களுக்கும் நல்லவனாக இருக்க கூடியவன். உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். என் உயிராக இருக்கும் ராமர் என்னை பிரிந்து காட்டிற்குள் சென்றால் உன் உயிர் என் உடலை விட்டு பிரிந்து விடும். நான் உன்னை யாசித்து கேட்கிறேன். ராமரை என்னிடம் இருந்து பிரித்து என்னை வருந்தும்படி செய்யும் இரண்டாவது வரத்தை கேட்காதே. ராமன் இந்த நாட்டை கடந்து செல்லாமல் இருக்க ஒரு நல்ல வார்த்தை சொல் உனது காலை பிடித்து கேட்கிறேன். அதர்மத்தை செய்ய என்னை தூண்டாதே என்றார்.

அனைத்தையும் கேட்ட கைகேயி கோபத்துடன் எனக்கு கொடுத்த வாக்கை நீங்கள் நிறைவேற்றா விட்டால் நீங்கள் சத்தியத்தை மீறியவர் ஆவீர்கள். கொடுத்த வாக்கை மீறியவர் தசரதர் என்ற பெயரை பெற்றுவிடுவீர்கள். நான் கேட்ட இரண்டு வரத்தை கொடுத்தால் கொடுங்கள் இல்லையேல் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். நான் இன்றே என் உயிரை விட்டுவிடுவேன் என்று தீர்க்கமாக கூறினாள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -6

தசரதர் அரண்மணையில் ராமனுடைய பட்டாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் கைகேயியின் அந்தபுரத்திற்குள் நுழைந்தார். அந்தபுரத்தில் இருக்கும் பணிப்பெண் தசரதரிடம் கைகேயி நகைகளை அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு பழைய உடை உடுத்திக்கொண்டு விகாரமாக தரையில் படுத்திருப்பாக கூறினாள். இதனைக்கேட்டு திடுக்கிட்ட தசரதர் விரைவாக அந்தப்புரத்திற்குள் நுழைந்து கைகேயியை தேடினார். கைகேயியின் அறையில் அவள் தலை கலைந்து அலங்கோலமாக தரையில் படுத்திருந்தாள் அழுக்குப்படிந்த ஆடைகளை அணிந்திருந்தாள். அவளது நகைகள் தரையில் சிதறிக்கிடந்ததை கண்ட தசரதர் அவளிடம் சென்று பேச ஆரம்பித்தார். என் அன்புக்குறியவளே எதைக்குறித்து நீ துன்பப்படுகிறாய். அரண்மணையில் யாராவது உன்னை ஏதேனும் சொல்லிவிட்டார்களா என்ன காரணமாக இருந்தாலும் என்னிடம் சொல் இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். உனக்கென்ன ஆயிற்று உடல்நிலை ஏதும் சரியில்லையா மருத்துவரை வரவழைக்கவா எதுவாக இருந்தாலும் பயப்படாமல் சொல் இப்போதே அதனை நிறைவேற்றுகின்றேன் என்றார்.

கைகேயி எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தாள். நோய் எதுவும் எனக்கு வரவில்லை. யாரும் என்னை எதுவும் சொல்லவுமில்லை. தீங்கு எதுவும் எனக்கு வரவில்லை. எனக்கு ஆசை ஒன்று உள்ளது. அதனை தாங்கள்தான் நிறைவேற்றி வைக்கவேண்டும். தங்களால் மட்டுமே அது முடியும் தாங்கள் நிறைவேற்றுவதாக உறுதி மொழி தந்தால் அதனை பற்றி சொல்கிறேன். இல்லை என்றால் இப்பேச்சை இப்போழுதே விட்டுவிடலாம் என்றாள்.

தசரதர் கைகேயியிடம் எனது மகன்களில் மூத்தவனான ராமன் எனக்கு எப்படி பிடித்தமானவனோ அது போல் எனது மனைவியரில் நீ என் அன்புக்கு பாத்திரமானவள் அது உனக்கும் நன்றாக தெரியும். ராமனை யாராலும் வெல்ல முடியாது. நால்வரில் தலைசிறந்தவன் அவன். எனது உயிராக இருப்பவன் அவன். என்னை விட்டு பிரிந்தால் என் உயிரும் உடனே சென்றுவிடும். அந்த ராமரின் மேல் ஆணையிட்டு சொல்கிறேன் உன்னுடைய ஆசைகளை நான் நிறைவேற்றி வைக்கிறேன் என்று கைகேயியிடம் உறுதியளித்தார் தசரதர்.

அரசரே உங்களுக்கு நினைவிருக்கின்றதா பல ஆண்டுகளுக்கு முன்பு அசுரர்களுடன் போர் புரிந்தபோது யுத்த களத்தில் தாங்கள் மயக்கமடைந்தீர்கள். அப்போது ரதத்தை வேகமாக வேறு இடத்திற்கு எடுத்துச்சென்று தங்களை தங்களை காப்பாற்றினேன். அப்போது நீங்கள் எனக்கு இரண்டு வரங்கள் அளிப்பதாக வாக்குறுதி அளித்தீர்கள். அந்த வரத்தை பிறகு பெற்றுக்கொள்வதாக தங்களிடம் கூறியிருந்தேன். அதனை இப்போது நான் கேட்கின்றேன். நீங்கள் உடனே எனக்கு அதனை தாருங்கள் என்றாள் கைகேயி. அந்த வரம் உனக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றாள் இப்போதே தருகிறேன் உனக்கு என்ன வேண்டுமோ கேட்டு பெற்றுக்கொள் என்று தசரதர் கைகேயியிடம் உறுதி அளித்தார்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -5

சத்தியம் தவறாத ராமரை மந்தரா சொல்லும் குணத்தில் கைகேயியால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. ராமரை தன் பிள்ளையாகவே பாவித்து வந்த கேகேயி இப்போது மந்தரையின் வலையில் சிக்கிவிட்டாள். மந்தரையின் கேள்விக்கு கைகேயி பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றாள். கைகேயின் மனதில் பரதனைப்பற்றிய பயம் குடிகொண்டது. பரதன் மீதிருந்த பாசம் அவளுக்கு மேலோங்கியது. மந்தரா சொல்வதில் உண்மை இருக்கிறது என்று எண்ணினாள். மனம் மாறிய கைகேயி என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமடைந்தாள். மந்தராவிடம் தஞ்சமடைந்து இதற்கு ஒரு வழி சொல் என்று ஆலோசனை கேட்டாள்

பல காலங்களுக்கு முன்பு தேவர்களுக்கும் சம்பரன் என்ற அசுரனுக்கும் போர் மூண்டது. தசரத சக்ரவர்த்தி தேவர்களுடன் இணைந்து போர் புரிந்தார். அப்போரில் சம்பரன் ஏய்த ஓர் அஸ்திரத்தில் தசரதர் சிறிது நேரம் மயக்கமடைந்தார். அப்போது நீ அவருக்கு பணிவிடைகள் செய்து உதவிகரமாக இருந்து அவர் அப்போரில் வெற்றி பெற உதவி புரிந்தாய். இதனால் மகிழ்ந்த தசரதர் உனக்கு இரண்டு வரங்கள் கொடுப்பதாக வாக்களித்தார். அப்போது அந்த வரத்தை தேவையான பொழுது பெற்றுக்கொள்வதாக நீ சொல்லிவிட்டாய். இப்போது அந்த வரத்தை உன் மகனுக்காகவும் உனக்காகவும் உபயோகப்படுத்திக்கொள்.

தசரதர் இங்கு வந்ததும் அவர் கொடுத்த வரத்தை அவருக்கு ஞாபகம் செய். தனக்கு இப்பொது அந்த வரம் வேண்டும் என்று கேள். அவர் சம்மதம் தெரிவித்த பிறகு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்று அவரிடம் உறுதிமொழி பெற்றுக்கொள், அவர் சம்மதித்த பிறகு முதல் வரத்தில் ராமர் ராஜ சுகத்தைவிட்டு பதினான்கு வருடங்கள் காட்டிற்கு செல்லவேண்டும். 2 வது வரத்தில் ராமனுக்காக செய்த பட்டாபிஷேக நிகழ்ச்சியில் அதை குறிப்பட்ட நேரத்தில் பரதனுக்கு முடிசூட்டி சிம்மாசனத்தில் அமர வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள். அவரால் மறுக்கமுடியாது அவர் மறுத்தால் தசரதர் சத்தியத்தில் இருந்து பிசகியவராவார். எனவே சத்தியத்தை காப்பாற்ற அவர் சம்மதிப்பார். உன் எண்ணம் முழுமையாக நிறைவேறும். பதினான்கு ஆண்டுகள் பரதன் ஆட்சி செய்தால் அவனது ஆட்சியில் பரதனை மக்கள் அன்புடன் நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பதினான்கு வருடங்கள் கழித்து ராமர் வரும் போது அவரை பலர் மறந்திருப்பார்கள். நிரந்தர அரசனாகி விடுவான் பரதன் என்றாள்.

இத்திட்டத்தில் மகிழ்ந்த கைகேயி மந்தராவுக்கு செல்வங்கள் பல கொடுத்தாள். என் மகன் பரதனுக்கு கடல் சூழ்ந்த இந்த உலகத்திற்கு அரசனாக்க நல்ல திட்டத்தை கொடுத்தாய். இத்திட்டத்தை அப்படியே செயல் படுத்துகிறேன் என்று மந்தராவை அனுப்பினாள். தன்னுடைய கூந்தலில் இருக்கும் பூவை தூக்கி எறிந்தாள். நகைகளை அனைத்தையும் கழற்றினாள். பழைய உடைகளை எடுத்து போட்டுக்கொண்டு தரையில் படுத்துவிட்டாள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -4

கைகேயி மந்தரையின் பேச்சை பொருட்படுத்தவில்லை. மந்தரா ஒரு வேலைக்காரி இவளால் அரச குடும்ப விசயங்களை இவளால் புரிந்து கொள்ளமுடியாது என்ற எண்ணி மந்தரையிடம் பேச ஆரம்பித்தாள். ராமன் தசரத சக்ரவர்த்திக்கு முத்த குமாரன் அவனே இளவரசனாக பதவி எற்க உரிமையுள்ளவன். ராமர் மக்களின் அன்புக்கு பாத்திரமானவன். ஞானிகள் ராமரை தெய்வம் என்று எண்ணி போற்றுகின்றனர். சத்தியத்தின் சொரூபமான ராமன் அறநெறி பிசகாதவன். தன்னை பெற்றடுத்த கௌசலையை விட என் மீது அதிகமாக அன்பு வைத்து எனக்கு பணிவிடை செய்கின்றான். அவன் ஆட்சிக்கு வரும் போது அவனால் எனக்கு எந்த இடைஞ்சலும் வராது. தன் சகோதரர்களை தன் சொரூபமாகவே நேசிக்கின்றான். ராமனுடைய ஆட்சிக்கு பிறகு பரதனும் ஒரு நாள் அரசனாகி இந்நாட்டை ஆட்சி செய்வான். உன் கற்பனைகளை ஒதுக்கு வைத்துவிட்டு நீயும் நாளை பட்டாபிஷேக விழாவில் கலந்து கொள்வாயாக என்று கைகேயி மந்தராவிடம் கூறினாள்.

முன்பு இருந்ததைவிட இப்போது மந்தராவுக்கு முகவாட்டம் அதிகமானது. கைகேயிடம் மேலும் பேச ஆரம்பித்தாள். இப்போது ராமன் அரசனானால் அவனுக்கு பிறகு ராமனின் பிள்ளைகள் அரசனாவார்கள். ராமனுடைய சகோதரனான பரதன் ஒரு போதும் அரசனாக மாட்டான். அரச குமாரர்கள் அனைவரும் ஆட்சி புரிய எண்ணினால் சமுதாயத்தில் குழப்பமே உருவாகும். ராஜதந்திரம் அறிந்த அரசன் ஒருவன் தன் பிள்ளைகளேயே அரசனாக்கவே விரும்புவான். தனக்கு நிகரான உடன் பிறந்தவர்களை உடன் வைத்திருக்கமாட்டார்கள். ஏதேனும் சொல்லி கண்ணுக்கேட்டாத தூரத்திலேயே வைத்திருப்பார்கள். அதுபோல் ராமன் தனது ராஜதந்திரத்தால் பரதனை தூரத்திலேயே வைத்திருப்பான். இப்போதும் பரதன் பல தூரம் தள்ளி தனது தாத்தாவுடன் பல வருடங்களாக இருக்கின்றான். இதனால் மக்கள் பலருக்கு பரதனின் முகமே மறந்துபோயிருக்கும். அனைவரும் ராமரை பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றார்கள். பரதனை அனைவரும் மறந்து விட்டார்கள்.

ராமன் அரசனானால் பரதனை விரோதி போலவே பார்ப்பான். விரோதிகளை அரசர்கள் எப்போதும் விட்டுவைக்கமாட்டார்கள். பயத்தினால் கொன்று விடுவார்கள். பரதனை ராமன் சந்தேகமாகவே பார்ப்பான் ஒரு நாள் பயத்தில் கொன்று விடுவான். பரதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அவன் உயிருடன் இருக்கவேண்டும் என்றால் அவனின் தாத்தாவுடனேயே தங்க வைத்துவிடு. கௌசலை தசரதரின் முதல் மனைவியாக இருந்து அவரின் அன்புக்கு பாத்திராமாக இருந்தாள். உன்னை திருமணம் செய்ததும் அவரின் அன்புக்கு நீ பாத்திரமானாய். இதனை கௌசலை மறந்திருக்கமாட்டாள். உன் மீது கோபத்துடனே இருப்பாள். நேரம் கிடைக்கும் போது உன்னை பழி வாங்க காத்திருப்பாள். அதற்கான நேரம் இப்போது கௌசலைக்கு வந்துவிட்டது. உன்னை இப்போது பழிவாங்குவாள். உன்னை சிறு வயதில் இருந்து நான் உன்னை பேணி வருகிறேன் உன் நலனில் எனக்கு மிகுந்த அக்கரை உள்ளது. வேறு எந்த குறிக்கோளும் என்னிடம் இல்லை ஆகவே என் சொல்படி நடந்துகொள் இல்லை என்றால் ராமர் பட்டாபிஷேகம் முடிந்ததும் நீயும் பரதனும் வேலைக்காரர்களை போல இங்கு இருப்பீர்கள் என்று சொல்லி முடித்தாள்.