வீணையுடன் அனுமன்

திரிலோக சஞ்சாரியான நாரதருக்கு வீணை இசைப்பதில் தனக்கு நிகர் எவரும் இல்லை என்ற கர்வம். தேவலோகத்தில் வீணை இசை வாசிப்பதில் சிறந்தவர்கள் நாரதர் மற்றும் தும்புரு. தும்புரு கைலாயத்திலும் நாரதர் வைகுண்டத்திலும் தம்முடைய திறமையை வெளிப்படுத்தி வந்தனர். ஒரு சமயம் இவர்களுக்குள் தம்முள் யார் சிறந்தவர் என்ற சர்ச்சை வந்தது. இருவரும் தீர்மானித்து கைலாயம் நோக்கி புறப்பட்டனர். அப்படி செல்லும் வழியில் ஓர் அடர்ந்த வனம் குறுக்கிட்டது. அந்த வனத்தில் இருந்து ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்ற ராம நாமம் ஒலித்தது. இது என்ன இந்த வனத்தில் ராமநாம ஜெபம் கேட்கிறதே? உள்ளே சென்று பார்ப்போம் என்று இருவரும் வனத்தினுள் நுழைந்தனர். அங்கே ஆஞ்சநேயர் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து ராமநாம ஜெபம் செய்து கொண்டிருந்தார். இருவரும் அனுமனை வணங்கினர். யாழிசை வல்லுனர்களே இருவரும் சேர்ந்து எங்கே பயணிக்கிறீர்கள்? என்று கேட்டார் அனுமன். உடனே நாரதரும் தும்புருவும் தங்களுக்குள் ஏற்பட்ட போட்டியையும் சிவனை தரிசித்து தீர்வு காண இருப்பதையும் கூறினர். யாழ் இசை வல்லுநர்களுக்குள் யார் இசை சிறந்தது என்ற போட்டியா? சரியான போட்டிதான் எனக்காக உங்கள் இசையை கொஞ்சம் வாசித்துக் காட்ட முடியுமா? என்று கேட்டார் அனுமன். இருவரும் தங்கள் யாழில் இசை மீட்டிக் காட்டினர். அருமையாக வாசிக்கிறீர்கள் நானும் கொஞ்சம் உங்கள் யாழை மீட்டட்டுமா? என்று அவர்களிடமிருந்த வீணையை வாங்கி வாசிக்கத் தொடங்கினார் அனுமன்.

அனுமன் வாசிக்க துவங்கியதும் அண்ட சராசரமும் அப்படியே உறைந்து நின்றுவிட்டது. நதிகளில் தண்ணீர் ஓடவில்லை. மரங்கள் கிளைகளை அசைக்கவில்லை. பறவைகள் அப்படியே பறந்தபடி நின்றன. உலகமே அந்த இசையில் மயங்கி அப்படியே நின்றுவிட்டது. அனுமன் அமர்ந்திருந்த அந்தப் பாறை அப்படியே உருகி வழிந்து ஓடத் துவங்கியது. நாரதரும் தும்புருவும் வெட்கம் அடைந்தனர். ஏதோ வாசித்து இதில் யார் சிறந்தவர் என்று போட்டியிட்டு கொள்கிறோமே? கல்லையும் கரைய வைக்கிறதே அனுமனின் இசை இவரல்லவோ சிறந்தவர். இவர் இசையல்லவோ சிறந்தது. இத்தனை திறமை இருந்தும் அடக்கமுடன் வாழும் இவரை பார்த்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். சிறிது நேரத்தில் அனுமன் இசைப்பதை நிறுத்தி யாழை பாறையில் வைத்தார். உறுகிய பாறைக்குழம்பு கெட்டிபட்டு அதில் யாழ் ஒட்டிக்கொண்டது. இப்போது அனுமன் சொன்னார். நாரத தும்புரு முனிவர்களே இதோ இந்த பாறையில் உங்கள் யாழ் ஒட்டிக் கொண்டு விட்டது. நீங்கள் மீண்டும் இசை வாசியுங்கள். உங்களில் யார் இசைக்கு இந்த பாறை உருகுகிறதோ அவரே சிறந்தவர். அவர் இந்த வீணையை எடுத்துக் கொள்ளலாம். இதற்குப் போய் எதற்கு சிவனை தொந்தரவு செய்ய வேண்டும் என்றார். இரு முனிவர்களும் அனுமனின் பாதம் பணிந்தனர். சுவாமி உங்கள் இசை எங்கள் கண்களை திறந்து விட்டது. கல்லையும் கரைய வைக்கும் திறமை எங்களுக்கு இல்லை. எல்லாம் இறைவன் அருள். இறைவனே எல்லாவற்றையும் தருகிறார். எங்கள் இருவருக்குள்ளும் இருப்பது இறைவனே. இனி எங்களுக்குள் போட்டி வராது. எங்கள் கர்வம் ஒழிந்தது என்று வணங்கி நின்றனர். அனுமன் மீண்டும் இசைக்க பாறை இளகி யாழ் கிடைத்தது. அதை இருவரிடம் கொடுத்த அனுமன் முனிவர்களே வித்யா கர்வம் கூடாது. கர்வம் நானே பெரியவன் என்ற பெருமையை கொடுப்பது போல் தெரியும். ஆனால் இறுதியில் அழித்து விடும். அடக்கமே சிறந்த குணம். இதை உணர்ந்து இறைவனை பாடி வாருங்கள் என்று கூறினார்.

அனுமன் வாசிப்பில் ஒவ்வொரு ஸ்வரமும் ராம் ராம் என்று சொல்லும். அவர் வீணையுடன் ஒன்றி வாசிக்க அந்த நாதத்தில் ஸ்ரீ ராமனும் ஒன்றி விடுவார்.  இவருக்குப் பிடித்த ராகத்தின் பெயர் ஹனுமத்தோடி என்று புராண வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இடம் குடந்தை ராமஸ்வாமி கோவிலில் ஸ்ரீ அனுமான் வீணையுடன் காட்சி தருகின்றார்.

கார்போதக கடல்

விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம் ஆகும். பிரம்மனிடம் இருந்து வரம் பெற்ற இரண்யாட்சன் பூமியில் பல்வேறு பாவச் செயல்களைச் செய்தான். இதனால் பூமி கீழ் நோக்கிச் செல்லத் தொடங்கியது. இதனை மீட்டு வெளிக் கொண்டு வருவதற்காக விஷ்ணு வராக அவதாரமாகத் தோன்றினார். விஷ்ணு கார்போதக கடலில் இருந்து இரண்யாட்சனுடன் பல ஆண்டுகள் போர் புரிந்து வென்றார்.

வராக அவதாரம் எடுத்த விஷ்ணுவின் கையில் தூக்கியுள்ள பூமிக்கு உள்ளேதான் கடல் உள்ளது. அப்படி என்றால் எந்த கடலில் இருந்து விஷ்ணு போர் புரிந்தார்?

அந்த கடலுக்கு கார்போதக கடல் என்று பெயர். கார்போதக என்றால் ஒளி உட்புக முடியாத என்று பொருள். கார்போதக கடல் என்பது விண்வெளியில் உள்ள கரும்பொருள் கடல். அறிவியலின் படி அதற்கு Ocean Of Dark Matter என்று சொல்வார்கள். அதாவது ஒளியை பிரதிபலிக்காத கண்களால் காணமுடியாத விண்வெளி பருப்பொருட்களின் கூட்டம் என்று பெயர்.

பூதப்ருத் நம

திருவரங்கத்தில் ஓர் ஏழை வைணவர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பதினாறு குழந்தைகள். திருவரங்கநாதன் கோயிலில் பிரசாதம் வழங்கப்படும் போதெல்லாம் அதைப் பெற்றுக்கொள்ள முதல் ஆளாக வந்து நின்றுவிடுவார். தான் ஒருவனுக்கு மட்டுமின்றித் தன் குடும்பம் முழுமைக்கும் பிரசாதம் வேண்டுமெனக் கேட்பார். அரங்கனுக்கு அன்றாடம் தொண்டுசெய்யும் அடியார்களெல்லாம் அரங்கனின் பிரசாதத்தில் ஒரு துளி கிட்டுவதே பேரருள் என எண்ணிப் பெற்றுச் செல்ல இவர் எந்தத் தொண்டும் செய்யாமல் பிரசாதம் மட்டும் நிறைய வேண்டுமெனக் கேட்பதைக் கோயில் பணியாளர்கள் விரும்பவில்லை. உரத்தகுரலில் அர்ச்சகர்கள் இவரை விரட்டுவதால் தினமும் கோயிலில் கூச்சல் குழப்பம் ஏற்ப்படும். ஒருநாள் பிரசாதம் பெற்றுக்கொள்ளத் தன் பதினாறு மெலிந்த குழந்தைகளுடன் வரிசையில் வந்து நின்று விட்டார் அந்த வைணவர். கோயில் பணியாளர்கள் அந்த வைணவரை விரட்டிக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் அங்கே வந்த ராமாநுஜர் அக்காட்சியைக் கண்டார். அந்த வைணவரை அழைத்து நீர் கோயிலில் ஏதாவது தொண்டு செய்துவிட்டுப் பிரசாதம் பெற்றுச் சென்றால் யாரும் உம்மைக் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் நீர் பிரசாதம் பெற வேண்டும் என்பதற்காகவே இரவு பகலாக இங்கே கோயிலில் வந்து நின்றிருப்பதால் தானே இத்தகைய கூச்சல் குழப்பம் ஏற்படுகிறது? என்றார் ராமானுஜர். அதற்கு வைணவர் அடியேன் வேதம் கற்கவில்லை திவ்யப் பிரபந்தங்களும் கற்கவில்லை. எனவே பாராயண கோஷ்டியில் இணைய இயலாது. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் தான் ஓரிரு வரிகள் தெரியும். இப்படிப்பட்ட நான் என் பதினாறு குழந்தைகளுக்கு உணவளிக்க வேறென்ன வழி? என்று ராமானுஜரிடம் கேட்டார்.

ராமானுஜர் வைணவரைப் பார்த்து உமக்குத் தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் தெரியும் என்று சொல்கிறீர்களே அதைச் சொல்லுங்கள் கேட்கிறேன் என்றார். உடனே வைணவர் விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ என்று சொல்லத் தொடங்கி பூதப்ருத் என்ற ஆறாவது திருநாமத்தைத் தாண்டி அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. மீண்டும் விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ எனத் தொடங்கி பூதப்ருத் என்ற திருநாமத்துடன் நிறுத்தி அடியேனை மன்னிக்க வேண்டும் என்று ராமானுஜரின் திருவடிகளில் விழுந்தார். அந்த ஏழையின் மேல் கருணைகொண்ட ராமானுஜர் பூதப்ருத் நம என்ற ஆறாவது திருநாமத்தை அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? அதுவே போதும். பூதப்ருதே நம என்று தொடர்ந்து ஜபம் செய்து வாருங்கள். உணவைத் தேடி நீங்கள் வரவேண்டாம். உணவு உங்களைத் தேடிவரும் என்றார். அடுத்தநாள் முதல் அரங்கனின் கோயிலில் அந்த ஏழை வைணவரைக் காணவில்லை. அவர் எங்கு சென்றார் எனக் கோயில் பணியாளர்களிடம் ராமானுஜர் விசாரித்த போது வேறு எங்காவது அன்னதானம் வழங்கியிருப்பார்கள். அங்கு சென்றிருப்பார் என கூறினார்கள். அன்று முதல் கோயிலில் ஒரு விசித்திரமான திருட்டு நிகழத் தொடங்கியது. அரங்கனுக்குச் சமர்ப்பிக்கப்படும் பிரசாதத்தில் ஒரு பகுதி மட்டும் தினமும் காணாமல் போக ஆரம்பித்தது. இத்தனைப் பணியாளர்கள் இருக்கையில் யாருக்கும் தெரியாமல் உணவைத் திருடிச் செல்லும் அந்த மாயத்திருடன் யார் என யாருக்கும் புரியவில்லை. இச்செய்தி ராமானுஜருக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ராமானுஜர் எவ்வளவு நாட்களாக இது நடக்கிறது? என கேட்டார். நீங்கள் அந்த ஏழையைக் கோயிலுக்கு வரவேண்டாம் என்று சொன்ன நாள் தொடங்கி இது நடக்கிறது. வைணவரையும் அன்று முதல் காணவில்லை. எனவே அந்த வைணவருக்கும் இதற்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என்றார்கள் கோயில் பணியாளர்கள். அந்த வைணவர் இப்போது எங்கிருக்கிறார் எனத் தேடிக் கண்டறியுங்கள் என உத்தரவிட்டார் ராமாநுஜர். கோயில் பணியாளர்களும் அவரைத் தேடத் தொடங்கினார்கள்.

சிலநாட்கள் கழித்துக் கொள்ளிடத்தின் வடக்குக் கரைக்கு ராமானுஜர் சென்ற போது அந்த வைணவரும் அவரது பதினாறு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் அங்கே ஒரு மரத்தடியில் குடியிருப்பதைக் கண்டார். ராமானுஜரைக் கண்டதும் அந்த வைணவர் ஓடி வந்து அவர் திருவடிகளை வணங்கி சுவாமி அந்தப் பையன் தினமும் இருமுறை என்னைத் தேடிவந்துப் பிரசாதம் வழங்கிக் கொண்டிருக்கிறான். நானும் பூதப்ருதே நம என தினமும் ஜபம் செய்து வருகிறேன் என்றார். எந்தப் பையன்? என்று வியப்புடன் கேட்டார் ராமானுஜர். அவன் பெயர் அழகிய மணவாள ராமானுஜதாசன் என்று சொன்னான் என்றார் அந்த ஏழை. கோயிலுக்கு அருகில் இருந்து இறைவனுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று இவ்வளவு தூரம் தள்ளி வந்து இந்த மரத்தடியில் தங்கினேன். ஆனால் உங்களது தெய்வீகப் பார்வை என் இருப்பிடத்தைக் கண்டறிந்து விட்டது. தினமும் பிரசாதம் என்னைத் தேடி தினமும் வருகிறது என்றார். அழகிய மணவாளன் எனப் பெயர் பெற்ற அரங்கன் தான் சிறுவன் வடிவில் சென்று பிரசாதம் வழங்கியுள்ளான் என உணர்ந்து கொண்டார் ராமானுஜர். நான் உங்களுக்கு உணவு கொடுத்து விடவில்லை. பூதப்ருத் என்ற திருநாமத்துக்கு எல்லா உயிர்களுக்கும் உணவளிப்பவன் என்று பொருள். பூதப்ருத் நம என ஜபம் செய்த உமக்கு பூதப்ருத் ஆன அரங்கன் தானே வந்து சத்துள்ள உணவளித்து மெலிந்திருந்த உங்களை இன்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வைத்திருக்கிறான் என்று அந்த ஏழையிடம் சொல்லி அரங்கனின் லீலையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் ராமானுஜர்.

விஸ்வம் – விஷ்ணு சகஸ்ரநாமம்

நர்மதை நதிக்கரையோரம் அமைந்த கிராமத்தில் சிறந்த பண்டிதராக விளங்கிய பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் இதரா என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஐத்ரேயா என்ற பிள்ளை பிறந்தது. அவனுக்கு ஐந்து வயது ஆனவுடன் அவனுடைய தந்தை உபநயனம் செய்து வைத்தார். பிராமணர் தன் பையனுக்கு வேதங்கள் கற்றுத் தருவதற்கு முன் விஷ்ணு சஹஸ்ர நாமத்தைக் கற்றுத் தர விரும்பினார். தன் பிள்ளைக்கு முதல் ஸ்லோகமான விஸ்வம் என்பதில் ஆரம்பித்தார். பிறகு 2 ஆவது ஸ்லோகமான விஷ்ணு என்று கூற பிள்ளையோ விஸ்வம் என்றே திரும்பக் கூறினான். பிராமணர் எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் பிள்ளையோ விஸ்வம் என்ற வார்த்தையையே மீண்டும் கூறினான். சரி மறுநாள் மீண்டும் சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைத்தார் பிராமணர். ஆனால் அடுத்த நாளும் அப்படியே தொடர்ந்தது. பல நாட்கள் அவர் முயன்றும் விஸ்வம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையும் பிள்ளைக்கு வரவில்லை. பல நாட்கள் ஓடின. பிள்ளையைச் சரி செய்ய முடியாததால் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார் இந்த பிராமணர். இந்த இரண்டாவது மனைவிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தன. இருவருமே வேதங்களை நன்றாக படித்து ஓதி வளர்ந்தார்கள்.

இந்த இரண்டு பிள்ளைகளுடைய வேதங்களைக் கேட்பதற்காகப் பலரும் திரண்டு வந்தனர். இதனால் பிராமண குடும்பத்திற்குப் பணம் புகழ் மேன்மை எல்லாம் வந்து சேர்ந்தது. முதல் பிள்ளையான ஐத்ரேயனோ யார் அவனிடம் என்ன கேள்வி கேட்டாலும் விஸ்வம் என்ற ஒரே வார்த்தையே கூறி வந்தான். அவனுடைய தாயான இதராவிற்கு மனம் மிகவும் வருத்தப்பட்டது. தன் வயிற்றில் பிறந்த பிள்ளை மன வளர்ச்சி குன்றியவன் போல் இருக்கிறான். ஆனால் இளையவளின் பிள்ளைகளோ நன்கு வேதம் படித்த பண்டிதர்களாக இருக்கிறார்களே என்று விரக்தியுற்று ஒரு நாள் தன் பிள்ளையிடம் கோபமாக நீ முட்டாள். நீ பிறந்தது எனக்கு வெட்கக்கேடு. முனிவர்கள் வம்சத்தில் பிறந்தும் உனக்கு விஸ்வத்தைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை என்று பேசிவிட்டாள். ஐத்ரேயன் தன் தாயைப் பார்த்து விஸ்வம் என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டான். அவன் வீட்டை விட்டே வெளியே சென்று விட்ட நிலையில் ஐத்ரேயனுடைய இரு சகோதரர்களும் வேதத்தைச் சொல்ல முற்படும்போது அவர்களால் வார்த்தைகளை உச்சரிக்க முடியவில்லை. பேசவே முடியாத ஊமைகளாகி விட்டனர். அந்நிலையில் அவர்கள் வீட்டிற்குச் சில திருடர்கள் வந்து பொருட்களைத் திருடிச் சென்று விட்டனர். அந்த வீட்டுப் பிராமணருக்கு அதிர்ச்சியாக இருந்தது. திடீரென்று ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று சிந்தித்து பார்த்தார் அவருக்கு விடை கிடைக்கவில்லை.

வசிஷ்ட முனிவரை அதிர்ஷ்டவசமாக அடுத்த நாள் சந்தித்தார். நடந்ததை எல்லாம் அவரிடம் கூறினார். அனைத்தையும் கேட்ட வசிஷ்டர் உனக்கும் உன் மனைவிக்கும் ஐத்ரேயனுடைய பெருமை தெரியவில்லை. அவன் முன் ஜென்மத்தில் ஒரு முனிவனாக இருந்தவன். அவனுடைய யோகத்தை முடிக்கவே உனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறான். ஐத்ரேயன் விஸ்வம் என்ற ஒரே வார்த்தையைக் கூறியதற்குக் காரணம் விஸ்வம் என்ற வார்த்தையின் முழு பொருளையும் அவன் உணர்ந்து விட்டான். மனதாலும் உடலாலும் ஆன்மாவாலும் மிகச் சிறந்த ஒன்றே விஸ்வம். வாசு தேவனை இந்த வார்த்தை குறிக்கும். விஸ்வத்தை முழுமையாகப் உணர்ந்து கொண்டால் பகவானே விஸ்வம் என்பதை நன்கு அறிந்து கொண்டால் வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. விஷ்ணு சகஸ்ர நாமத்தின் மொத்த ஸ்லோகத்தை படித்தால் உணர வேண்டியதை ஐத்ரேயன் முதல் ஸ்லோகமான விஸ்வத்திலேயே உணர்ந்து விட்டதினால் வேறு வார்த்தையை அவன் சொல்வதில்லை. அதிலேயே லயித்து இருந்தான்.

விஸ்வம் என்ற வார்த்தையில் பகவானை முழுமையாகப் புரிந்து கொண்ட உன் பிள்ளை அதையே அடிக்கடி கூறியதன் மூலம் அவனுடைய பக்தியால் உன் குடும்பத்தில் செல்வம் புகழ் எல்லாம் நிறைந்து இருந்தது. அவன் வீட்டை விட்டு வெளியேறிய உடன் உங்களுடைய நல்லவைகள் அனைத்தும் விலகி விட்டன. முதலில் அவனை வீட்டிற்கு அழைத்து வர முயற்சியுங்கள் என்றார். பிராமணரும் உடனடியாகத் தன் பிள்ளையைத் தேடிக் கண்டு பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்து அவனுடைய மகிமையை தன் மனைவியிடமும் கூறினார். ஐத்ரேயன் வீட்டிற்குள் நுழைந்து விஸ்வம் என்று கூறியதும் அவனுடைய இரு சகோதரர்களுக்கும் பேச்சு வந்துவிட்டது. மேலும் திருடு போன பொருட்களைத் திருடர்களே திருப்பிக் கொண்டு வந்து சேர்த்து விட்டனர். விஸ்வம் என்ற வார்த்தையின் மகிமையினால் எல்லாம் நடந்தது.

வசிஷ்டரிடம் விஸ்வம் என்ற வார்த்தையின் மகிமையை கேட்டுத் தெரிந்து கொண்ட வேத வியாசர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஆயிரம் நாமங்களில் விஸ்வத்தை முதலாக வைத்தார். இதனை யுத்தகளத்தில் பீஷ்மர் தருமருக்கு உரைத்தார். விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படும் பகுதி மகாபாரதத்தில் பீஷ்மர் போர்க்களத்தில் யுதிஷ்டிரருக்கு சொன்ன ஆயிரம் விஷ்ணுவின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் ஆகும். இது மகாபாரதம் ஆனுசாஸனிக பர்வத்தில் உள்ள 149 ஆவது அத்தியாயமாக அமைந்துள்ளது. சகஸ்ரம் என்றால் ஆயிரம். நாமம் என்றால் பெயர். சகஸ்ரநாமப் பகுதி மட்டும் ‘அனுஷ்டுப்’ என்ற வடமொழி யாப்பு வகையிலுள்ள 107 சுலோகங்களையும் அவைகளுக்கு முன்னும் பின்னும் ஏறக்குறைய 40 சுலோகங்களையும் கொண்டது.

ரங் மகால்

உத்திரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கு விருந்தாவன் என்ற வேறு பெயரும் உள்ளது. இந்த இடம் மகாபாரதத்தில் கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் ஆடி பாடி விளையாடிய இடம் ஆகும். இந்த இடத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கிருஷ்ணர் ராதை கோவில்கள் உள்ளன. இக்கோயில்களில் பங்கே பிகாரி கோயிலும் ரங் மகாலும் முக்கிய இடமாகும். புராண காலக் கோயிலான இக்கோயில் 1864 ஆம் ஆண்டில் மறுசீரமைத்து கட்டப்பட்டது. மூலவர் ராதா கிருஷ்ணன். கிருஷ்ணரால் உருவாக்கப்பட்ட லலிதா என்று அழைக்கப்படும் குளம் கோயிலில் உள்ளது.

துறவி ஹரிதாஸ் என்பவர் கிருஷ்ணர் கோபியர்களுடன் நடனமாடும் காட்சியை காண வேண்டும் என்று கடுமையான தவத்தை செய்தார். அவரது தவத்தின் பலனாக கிருஷ்ணர் ராதை கோபியர்களுடன் நடனமாடியபடி காட்சி கொடுத்தார். கிருஷ்ணரிடம் இங்கேயே இருந்து தங்களைக் காணவரும் அனைவருக்கும் இக்கட்சியை கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார் துறவி ஹரிதாஸ். அவரது வேண்டுகோலை ஏற்றுக் கொண்ட கிருஷ்ணர் ஆணவம் அகங்காரம் இல்லாமல் தன்னை காண வரும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பேன் என்று அவருக்கு அருளினார். அதன்படி இன்னும் தகுதி உடையவர்களுக்கு காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். பின்னாளில் அவரை வழிபட வேண்டி பக்கதர்ளுக்காக கிருஷ்ணரின் சிலை உருவாக்கப்பட்டடு ஒரு தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் உருவாக்கப்பட்டது. இக்கோயில் அரண்மனை போல் பிரம்மாண்டமாக உள்ளது.

இக்கோயில் உள்ள நிதிவன காட்டுப்பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இந்த வனத்தில் நீரை பார்ப்பதே மிகவும் அரிதாகும். நீர் இல்லாத நிலையில் இங்குள்ள மரங்கள் அனைத்தும் எப்பொழுதும் செழிப்பாகவே காணப்படுகிறது. பங்கே பிகாரி என்றால் வளைந்து மகிழ்பவர் என்று பொருள். பெயருக்கு ஏற்றார்போல் இந்த காட்டில் இருக்கும் அனைத்து மரங்களும் நேராக வளராமல் கிருஷ்ணருக்கும் ராதைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக தரையை நோக்கியபடி வளைந்தே காணப்படுகிறது. இந்த காட்டை சுற்றி துளசி செடிகள் மிகுந்து காணப்படுகிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் ஜோடி ஜோடியாகவே வளர்ந்து வருகிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் உயரம் குறைவாகவே வளர்கிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் கிருஷ்ணருடன் சிறுவயதில் வாழ்ந்த கோபியர்கள் என புராண வரலாறு சொல்கிறது. இந்த கோவிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட கட்டில் உள்ளது. கட்டிலுக்கு அருகில் இரவு உணவாக ஒரு கலசத்தில் நீரும் இனிப்பும் வைக்கப்படுகிறது. உணவிற்குப் பின் கிருஷ்ணர் போட்டுக் கொள்ள வெற்றிலை பாக்கும் ஒவ்வொரு இரவும் வைக்கப்படுகிறது. காலையில் எழுந்ததும் கிருஷ்ணர் பல் துலக்குவதற்காக வேப்பங்குச்சியும் வைக்கப்படுகிறது. அர்ச்சகர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பிறகு ரங் மஹால் மற்றும் நிதிவனின் பிரதான கதவுகள் வெளியில் இருந்து பூட்டப்பட்டு காலையில் மட்டுமே திறக்கப்படும். தினமும் காலையில் பார்க்கும் போது கட்டில் படுக்கையில் யாரோ தூங்கியது போல ஒழுங்கற்றதாக கலைந்து கிடக்கும். இனிப்புகள் மற்றும் வெற்றிலைகள் யாரோ ஓரளவு சாப்பிட்டது போலவும் வேப்ப மரக் குச்சிகள் பயன்படுத்தப்பட்டது போலவும் இருக்கும்.

கோயிலில் இரவு 7 மணி பூஜைக்கு பிறகு பக்தர்கள் பூஜை செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த காட்டுப் பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றனர். இப்பகுதியில் ஏராளமான குரங்குகள் மற்றும் மயில்கள் வசிக்கின்றன. பகலில் இந்த காட்டுப் பகுதியில் காணப்படும் விலங்குகளும் பறவைகளும் கூட இரவு வேளையில் மட்டும் இந்த காட்டுப் பகுதியை விட்டு வெளியேறி விடுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் இந்த கோயிலை திறந்து பார்க்கும் போது கட்டிலில் உள்ள துணிகள் கலைந்து காணப்படுகிறது. தண்ணீரும் உணவுகளும் உண்ணப்பட்டு காணப்படுவதும் இன்றுவரை நடந்து வருகிறது. இரவில் கிருஷ்ணரும் ராதையும் இந்த கோவிலுக்கு வருவதாகவும் அப்பொழுது இந்த கோவிலை சுற்றி வளர்ந்திருக்கும் துளசி செடிகள் கோபியர்களாக மாறி கிருஷ்ணருடன் ஆடி பாடுவதாகவும் கருதப்படுகிறது. பல காலங்களாக இந்த காட்டிற்குள் இரவு நேரங்களில் மக்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

இக்கோயிலுக்குள் இரவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அத்துமீறி நுழைய முயற்சித்த பலருக்கு கண் பார்வை போயிருக்கிறது. பலர் மன நிலை பாதித்திருக்கிறார்கள். இக்கோயில் இருக்கும் காட்டின் எல்லையில் சில வீடுகள் உள்ளது. இவர்கள் இரவில் தங்கள் வீட்டில் உள்ள ஜன்னல்களை மூடி விடுகிறார்கள். பலர் வீடுகளுக்கு ஜன்னலே இல்லாமல் கட்டிருக்கிறார்கள். இக்காட்டில் எல்லையில் வசிப்பவர்கள் இக்காட்டில் இருந்து இரவு நேரத்தில் நடனமாடும் சத்தம் கேட்பதாக கூறுகிறார்கள்.

சக்கர தீர்த்தம்

பத்மநாப முனிவர் என்பவர் தினமும் ஒரு குறிப்பிட்ட குளத்தில் குளித்து விட்டு திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசித்துவிட்டு தவம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார். 12 ஆண்டுகள் கடந்தன. அவரது தவத்தின் பயனாக ஒருநான் பிரகாசமான ஒளி அவர் முன் தோன்றியது. அங்கே வெங்கடாஜலபதி காட்சியளித்தார். பத்மநாபா இந்த குளக்கரையில் தங்கியிருந்து தினமும் என்னை வழிபட்டு வா. உரிய காலத்தில் என்னை வந்து சேரும் பாக்கியம் பெறுவாய் என்று வரம் அளித்துவிட்டு மறைந்தார். ஒரு நாள் அவர் குளக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த போது மனிதர்களை பிடித்து தின்னும் ஒரு அரக்கன் அவரை பிடிக்க வந்தான். வெங்கடேச என்னைக் காப்பாற்று என்று பெருமாளை சரணடைந்தார் முனிவர். பெருமான் தன் சக்கரத்தை ஏவினார். அது அரக்களின் தலையைப் பறித்தது. சக்கரத்தின் மகிமையை அறிந்த முனிவர் என் உயிர் காத்த சக்கரமே இன்று முதல் இந்த குளத்தில் எழுந்தருளி இதில் நீராடுவோரின் துன்பம் தீர்க்க வேண்டும் என்று வேண்டினார். அதன்படியே அந்த குளத்திற்கு சக்கர தீர்த்தம் என்று பெயர் வந்தது. திருப்பதி மலையில் இந்த தீர்த்தம் இருக்கிறது. பத்மனாப முனிவரின் வரலாற்றைப் படிப்போருக்கு திருப்பதி போகாமலேயே சக்கர தீர்த்தத்தில் தீர்த்தமாடிய புண்ணியம் கிடைக்கும் என்று சொல்கிறது இத்தல புராண வரலாறு.

திருமலா பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும் திருமலை திருப்பதி பாலாஜி கோயிலில் இருந்து 3 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது சக்ர தீர்த்தம். பிரம்மோத்ஸவ விழாவின் போது வெங்கடேஸ்வராவின் உற்சவர் சிலை இங்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெறும். வராஹ புராணத்தின் படி ஷேஷாசல மலைத் தொடரில் உள்ள ஏழு முக்கிய முக்தி பிரதா தீர்த்தங்களில் சக்ர தீர்த்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தீர்த்தத்தின் அருகில் சிறிய சிவ லிங்கம் வினாயகர் உள்ளார்கள்.

பிரபஞ்சத்தில் உள்ள மூன்றரை கோடி புண்ணிய நீரோடைகளும் இந்நாளில் சக்கர தீர்த்தத்தில் வந்து வசிப்பதாக ஆகமங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே தமிழ் சூரிய மாதத்தின்படி துலா மாசத்தில் நிகழும் மார்கசிர்ஷ சுக்ல துவாதசியில் சக்ர தீர்த்த முக்கொடி என்ற திருவிழா நடைபெறுகிறது திருப்பதி கோயிலில் இருந்து பூசாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் புனித மேளம் மற்றும் பாரம்பரிய இசை முழங்க சக்கர தீர்த்தத்தை அடைவார்கள். பின் சக்ர தீர்த்தத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுதர்ஷன சக்ரத்தாழ்வாருக்கு அபிேஷகம் மலர் அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெறும். ஸ்ரீவாரி ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் மலர் அலங்காரம் மற்றும் ஆராதனை செய்வார்கள்.

நாராயணபால் விஷ்ணு கோயில்

இந்திராவதி ஆற்றின் மறுகரையில் நாராயணபால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு புராதனமான அற்புதமான விஷ்ணு கோவில் உள்ளது. கோயில் நிறுவப்பட்ட பின்னர் நாராயண்பூர் என்று பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில் நாராயணபால் என்று இந்த ஊர் அழைக்கப்பட்டது. சுமார் 70 அடி உயரம் கொண்ட சிவப்புக் கல்லால் ஆன இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 11 ஆம்  நூற்றாண்டில் நாகவன்ஷி வம்சத்தின் ஆட்சியாளர் சிந்தக் நாக்வன்ஷ் மன்னர் ஜகதீஷ் பூஷனால் இக்கோயில் கட்டப்பட்டது.

இக்கோவிலுக்குள் சுமார் 8 அடி உயர கல்வெட்டு உள்ளது. கல்வெட்டுகள் தேவநாகரி எழுத்துக்களில் உள்ளன. இதில் கோயில் கட்டுவதற்கு அருகில் உள்ள கிராம மக்கள் மன்னருக்கு உதவியதாக பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலில் சிவலிங்கம் சூரியன் சந்திரன் பசு மற்றும் கன்று வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது.

பண்டரிபுரம் விட்டலன் ருக்மணி தாயார்

கிருஷ்ணர் இங்கு விட்டலர் விதோபர் பாண்டுரங்கன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். மஹராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் பந்தர்ப்பூர் என்று அழைக்கப்படும் பண்டரிபுரம் என்ற நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது

மகாராட்டிராவில் புண்டரீகபுரத்தில் வசித்து வந்த ஜானுதேவர் சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன். பெற்றோர்க்குச் சேவை செய்யும் புண்டரீகனை ருக்மணிக்கு காட்ட எண்ணிய கிருஷ்ணர் புண்டரீகனின் குடில் வாயிலில் நின்று தண்ணீர் கேட்டான். அங்கு மழை பெய்து சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளேயிருந்து புண்டரீகன் ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டான். சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள். என் பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்கிறேன் என்றான். அதன்படியே தனது பெற்றோர் சேவையை முடித்துக் கொண்டு புண்டரீகன் அவர்களை வரவேற்று தாங்கள் யார் என்று கேட்டான். அப்போது ருக்மிணி வந்திருப்பது கிருஷ்ணன் என்பதைக் கூறினாள்.

புண்டரீகன் பதறினான். மண்ணில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். கிருஷ்ணர் புன்னகைத்து உன் மாதா பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன். வேண்டும் வரம் கேள் என்றார். நீங்கள் எழுந்தருளியுள்ள இத்தலமான புண்டரீகபுரம் புண்ணியத் தலமாக விளங்க வேண்டும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீ இங்கே சாந்நித்தியம் கொள்ள வேண்டும் என்று வேண்டினான் புண்டரீகன். அவ்வாறே கிருஷ்ணன் இத்தலத்தில் செங்கல் மீது நின்று கொண்டு விட்டலராக காட்சி அளிக்கிறார். மராத்திய மொழியில் விட் என்றால் செங்கல் என்று பொருள். செங்கல் மீது நின்று அருளுகின்றபடியால் கிருஷ்ணருக்கு இத்தலத்தில் விட்டலர் எனப்பெயர் உண்டானது.

ஏகாதசி பற்றி பத்ம புராணத்தில்

திரேதாயுகத்தில் முரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தேவர்களையும் தவம் இயற்றும் முனிவர்களையும் மிகவும் கொடுமை படுத்தி வந்துள்ளான். அவனது தொல்லைகள் தாங்க முடியாத தேவர்களும் முனிவர்களும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். மகாவிஷ்ணு அரக்கனை அழிக்க தன் சுதர்சன சக்கரத்துடன் போருக்கு புறப்பட்டு சென்றார். திருமாலை எதிர்க்க வந்த அரக்கன் சுதர்சன சக்கரம் தன்னை நோக்கி வருவதை கண்டு ஓடி ஒளிந்து கொண்டான். பின்னர் மாயா வடிவில் வந்து போரிடுவான். இப்படி மாறி மாறி ஒழிவதும் போரிடுவதுமாக இருந்த அரக்கன் பகவான் முன்பு எதிர்க்க முடியாமல் சோர்ந்து போனான்.

வத்திகிரி ஆஸ்ரமத்தில் பகவான் விஷ்ணு உறங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த அரக்கன் திருமாலை திடீரென்று தாக்க முற்பட்டான். ஆனால் அந்த நொடியில் லோக மாயன் மகாமாயன் மாயவண்ணன் என்ற பல பெயர்களைக் கொண்ட மாயக்காரன் மகாவிஷ்ணுவின் திருமேனியில் இருந்து ஒரு பெண் வடிவம் தோன்றி அவ்வரக்கனை கொன்றது. அந்த பெண் வடிவம் திருமாலின் மாயா சக்தியாகும். இதை கண்ட பகவான் மிகவும் மகிழ்ந்து யோகமாயாவிற்கு ஏகாதசி என்று பெயர் சூட்டினார். மாயாசக்திக்கு ஏகாதசி என்ற பெயர் ஏற்பட்ட அன்றைய நாள் மார்கழி மாதம் பதினோராவது நாளாகும். முக்கோடி தேவர்களும் முனிவர்களும் மகிழ்ந்து திருமாலை துதித்து போற்றினர் கொண்டாடினர். இதனால் இழந்த தங்கள் சக்தியை மீண்டும் பெற்றனர்.

இந்த ஏகாதசிதான் முக்கோடி வைகுண்ட ஏகாதசி யாகும். இந்நாளில் தேவர்களுக்கும் வெற்றியும் மகிழ்வும் தந்த மகாவிஷ்ணு வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து பெருமாளை வணங்கி பூஜை செய்தால் இறைவனை அடையத் தடையாக இருக்கின்ற அனைத்து தீய அரக்கனையும் அழித்து வெற்றியை நல்குவார்.