மலையடிப்பட்டி பள்ளிகொண்ட பெருமாள்

மலையடிப்பட்டி குகைக் கோயிலானது புதுக்கோட்டையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் மலையடிப்பட்டி என்ற இடத்தில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று சிவனுக்கு உரிய மலையாகவும் மற்றொன்று திருமாலுக்கு உரிய மலையாகவும் உள்ளது. சிவன் கோயிலானது வைசுவரமுடையார் கோயில் என அழைக்கப்படுகிறது. சிவன் குகைக்கு மேற்குப் பகுதியில் உள்ள விஷ்ணு குகையில் உள்ள கோவில் திருமாலுக்குரிய கோயில் ஆகும். இவர் பள்ளிகொண்ட பெருமாள் எனவும் கண்திறந்த பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். இக்கோயில்கள் இரண்டும் குடவரைக் கோயிலாகும்.

சயன நிலையில் உள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் தாயார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி. மலையைக் குடைந்து பாறையிலே பள்ளிகொண்ட பெருமாள் ஆதிசேஷ சயனப்படுக்கையில் இருப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. குகைக்குள் ஐந்து கோலங்களில் பெருமாளையும் எட்டுக் கோலங்களில் லட்சுமியையும் தரிசனம் செய்யலாம். நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும் அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர் நரசிம்மர் மற்றும் பரமபதனாத வடிவிலும் கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகவும் பெருமாள் காட்சி தருகிறார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளும் அரங்கனின் திருவடி அருகே பூதேவி நாபிக்கமலத்தில் பிரம்மா சுற்றிலும் அஸ்வினி தேவர்கள் கின்னரர் கிம்புருடர் அப்ஸரஸ்கள் சூழ இருக்கிறார். பெருமாளுக்கு அருகிலேயே திவாகர முனி அமர்ந்து அருளுகிறார். அரங்கர் திருமார்பில் ஒரு லட்சுமியும் புண்டரீகப் பெருமாள் மற்றும் வைகுண்ட நாதருக்கு அருகே ஸ்ரீதேவி பூதேவி என்னும் உபயதேவிகளாக இரண்டிரண்டு லட்சுமிகளும் லட்சுமி நாராயணர் மடியில் ஒரு லட்சுமியும் தனிக்கோயில் கமலவள்ளித் தாயாரும் தீப ஸ்தம்பத்துக்கு அருகில் ஒரு தீப லட்சுமியுமாக எட்டு லட்சுமிகள் ஒரே இடத்தில் தரிசனம் கொடுக்கிறார்கள்.

திவாகர முனிவருக்கு அரங்கன் திருக்கோலத்தின் மீது அபார அன்பு. நாளும் ஒரு அரங்கன் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் எந்த உணவையும் உண்ண மாட்டார். ஒரு நாள் கால் போன போக்கில் அரங்கனைத் தேடிப் போனார். பசி கண்ணை மறைக்கவே தள்ளாடித் தள்ளாடி நடந்தபோது ஒரு அழிஞ்சில் மரமும் அதன் அடியில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனையும் கண்டார். அவனிடம் அருகில் இருக்கும் அரங்கன் கோயில் பற்றிய தகவல் கேட்டார். இதற்கு அந்த சிறுவன் பேர் தெரியாது சாமி அதோ அந்த மலைக்குக் கீழ ஒரு குகையில ஒரு சாமி படுத்துக் கெடக்குது. நாங்க அவரைப் போய் கும்புடுவோம். எங்க ஆடு மாடுகளைக் காப்பாத்தறதனால பட்டிசாமின்னு கும்புடுவோம். மலைக்குக் கீழ இருக்கறதனால மலையடிபட்டிசாமின்னு சொல்லுவோம். அதனால இந்த இடத்துக்கு மலையடிப்பட்டின்னு பேரு என்று வெகுளித்தனமாகச் சொல்லிவிட்டு ஆடு விரட்ட மலையைப் பார்த்து நகர்ந்தான்.

திவாகர முனிவர் சுட்டெரிக்கும் வெயிலில் அந்தக் குகைக்குச் சென்று உள்ளே பார்க்க அவருக்கு ஒன்றுமே புலப்படவில்லை. சிறிது சிறிதாக பாம்பணை மேல் அரங்கன் படுத்துக் கிடப்பதும் பூதேவி இருப்பதும் கின்னரர் கிம்புருடர் வானவர் வணங்குவதும் தெரியத் தொடங்கியது. ஆனந்தக் கூத்தாடி எதிர்ச் சுனையில் குளித்துவிட்டு வந்து காட்டுப் பூக்களைத் தொடுத்து மாலையாக்கி காய்கனிகளைப் பறித்து படைப்பதற்காக எடுத்து வந்தார். ஆனால் குகையில் சற்று முன் தான் கண்ட உருவங்கள் எதுவும் தெரியவில்லை. நீண்ட படுக்கைக் கல்லும் பாறையுமே தெரிந்தன. வெளியே இருந்த அந்த ஆடு மேய்க்கும் சிறுவனை அழைத்து இங்கே சாமியெல்லாம் இருந்துச்சே எங்கே என்றார்? இதுதான் நாங்க கும்படற சாமி என பாறையைக் காட்டினான் சிறுவன். பயந்து போய் அரங்கா இது என்ன சோதனை என அரற்றினார். எதிரில் நின்ற இடைச் சிறுவன் சிரித்தான். அவன் யார் என உணர்ந்த திவாகர முனிவர் மாலையையும் பழங்களையும் அவன் முன் சமர்ப்பித்து காலில் விழுந்தார். சிறுவனாக இருந்த பெருமாள் திவாகர முனிவரை எழுப்பி நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும் அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர் நரசிம்மர் மற்றும் பரமபதநாத கோலத்தையும் காட்டி கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகக் காட்சி தந்தார். பின்னர் பெரிய மலை உருவில் காட்சி தந்தார். பின்னர் திவாகர முனி வேண்டிக்கொண்டபடி அனைவர் கண்ணுக்கும் தொலைவில் இருந்தே தெரியும் வகையில் கண்ணிறைந்த பெருமாளாக மலை உருவில் காட்சி தரலானார்.

கோயிலின் முன்புறம் சற்று தள்ளி நின்று பார்க்கும் போதே பெருமாள் மலையாகப் படுத்து இருப்பது போன்ற தோற்றம் தெரியும். கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கூட கண்ணிறைந்த பெருமாள் என்றே குறிப்பிடுகின்றன. தொடக்கத்தில் மலையையே பெருமாளாக நினைத்து வணங்கிய நிலை மாறி மலையில் திவாகர முனிக்குக் காட்சி கொடுத்தது போலவே திருவுருவங்களும் அமைக்கப்பட்டு குடைவறைக் கோவிலாக்கப்பட்டு வழிபடப்பட்டுள்ளது. நுழைவாயிலருகே விநாயகர் மாடத்தில் உள்ளார். திருமங்கை ஆழ்வார் உடையவர் நாதமுனிகள் விஸ்வக்ஷேனர் ஆகியோர் தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர். இக்கோவில் கல்வெட்டுகள் மூலமாக கிபி 7 – 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

கனகாம்பரம் கறிவேப்பிலை

மகாமுனிவரான துர்வாசர் ஒருமுறை வைகுண்டத்துக்குச் சென்ற போது திருமாலின் திருமார்பில் எட்டி உதைத்துவிட்டார். திருமாலின் திருமார்பில் நித்திய வாசம் செய்யும் திருமகள் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்துவிட்டாள். திருமகளை இழந்த திருமகளை மீண்டும் அடைய ஸ்ரீநிவாஸமூர்த்தியாக பூமிக்கு வந்தார். வகுளாதேவியின் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் வேளையில் பத்மாவதி தேவியை ஸ்ரீநிவாஸர் சந்தித்தார். அவளையே மணந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார். ராமாவதாரத்தில் தோன்றி சீதாதேவியின் இன்னல்களையெல்லாம் தாங்கிக் கொண்ட வேதவதியின் தியாகத்தைப் போற்றும் வகையில் கலியுகத்தில் தாம் ஶ்ரீநிவாஸனாக அவதரிக்கும் போது திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார் ராமபிரான். அந்த வேதவதிதான் ஆகாசராஜனின் மகளாக பத்மாவதி என்ற பெயரில் பிறந்திருந்தாள். தாம் முன்னர் அவளை மணந்து கொள்வதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே ஶ்ரீநிவாஸர் பத்மாவதியை மணந்து கொள்ள விரும்பினார்.

மன்னரின் மகளை தான் மணந்துகொள்ள வேண்டும் என்பதால் திருமணத்தை விமர்சையாகச் செய்ய விரும்பிய ஶ்ரீநிவாஸர் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் பொன் வராகன்களைக் கடனாகப் பெற்றார். தான் பெற்ற கடனுக்குக் கலியுகம் முடியும்வரை வட்டி செலுத்துவதாகவும் வாக்களித்தார். குபேரனிடம் பெற்ற நிதியைக் கொண்டு நாரதரும் வகுளாதேவியும் ஶ்ரீநிவாஸர் பத்மாவதி திருக்கல்யாணத்தை மிகவும் விமர்சையாக நடத்தினர். தேவர்களும் முனிவர்களும் சித்த புருஷர்களும் கலந்து கொண்ட திருமண விழாவில் மாப்பிளை வீட்டார் சார்பாகச் செய்யப்பட்டிருந்த அற்புதமான அலங்காரமும் அருமையான அறுசுவை விருந்தும் எல்லோரும் போற்றும்படி இருந்தன. எந்தக் குறையுமில்லாமல் ஶ்ரீநிவாஸர் பத்மாவதி திருமணம் நடைபெற்றாலும் கலகம் ஏற்படுத்தும் நாரதர் தன் பணியை ஆரம்பித்தார்.

தன் மகனுக்கு நடத்திய திருமணத்தில் எந்தக் குறையுமே இல்லை என்ற கர்வத்தில் இருந்த வகுளாதேவியாரின் கர்வத்தைப் போக்க நினைத்த நாரதர் பத்மாவதித் தாயாரிடம் சென்று திருமணத்தில் கறிவேப்பிலையும் கனகாம்பரப் பூவும் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். அவ்வளவுதான் திருமணத்துக்குப் பின்னர் இது தொடர்பாகப் பெருமாளுக்கும் பத்மாவதி அன்னைக்கும் ஊடல் உண்டானது. இந்த ஊடலே பெரிதாகி பத்மாவதி தாயார் பிரிந்து சென்று திருச்சானூரை அடைந்து தனிக்கோயிலில் வீற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால்தான் திருமலை ஆலயத்தில் இன்றும் எந்த விதத்திலும் கனகாம்பர மலரையும் கறிவேப்பிலையையும் சேர்ப்பதில்லை என்கிறார்கள்.

இரு தேவியர்களை ஸ்ரீநிவாஸ பெருமாள் கொண்டிருந்தாலும் திருமலையில் மூலவராகத் தனித்தே நின்றிருக்கிறார். இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற ஊடலில் திருமகள் கரவீரபுரத்திலும் பெருமாளே தன்னை வந்து பார்க்கட்டும் என்ற ஊடலில் திருச்சானூரில் பத்மாவதியும் தனித்தனியே கோயில் கொண்டிருக்கிறார்கள்.

நெய்யாற்றங்கரை கிருஷ்ணன்

கேரளாவில் நெய்யாற்றின் கரையில் கேரளக் கட்டுமான முறையில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோவிலில் சதுர வடிவக் கருவறையில் பஞ்சலோகத்தால் செய்யப் பெற்ற சடைமுடியுடன் சிறுவன் வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். மேற்கு நோக்கிப் பார்த்தபடி நின்ற கோலத்தில் இருக்கும் இறைவன் தன்னுடைய இரு கரங்களிலும் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு இருக்கிறார். பால கிருஷ்ணனாக கையில் வெண்ணெய்யுடன் இருப்பதால் இந்த கிருஷ்ணர் நவநீதகிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறார். கோவிலின் வளாகத்தில் கணபதி தர்மசாஸ்தா மற்றும் நாகராஜா ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. கோயில் கிபி 1750 – கிபி 1755 க்கு இடையில் அப்போதைய சுதேச நாடான திருவிதாங்கூரின்  மன்னரான அனிஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மரால்  கட்டபட்டது.

இளவரசர் அனுசம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவர் திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராகப் பதவியேற்க இருந்தார். அவர் மன்னராவதை விரும்பாத சிலரும் தாங்கள்தான் மன்னர் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பிய சிலரும் ஒன்றாகச் சேர்ந்து மார்த்தாண்ட வர்மாவைக் கொல்வதற்குப் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து வந்தனர். எதிரிகளின் அந்த சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டிருந்த இளவரசர் ஒரு நாள் அவர்களிடம் சிக்கிக் கொள்ள நேரிட்டது. பகைவர்களிடம் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இளவரசர் மார்த்தாண்ட வர்மா அங்கிருந்து தப்பியோடினார். அவரைக் கொல்வதற்கு முயன்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய இளவரசர் நெய்யாற்றின் கரையை வந்தடைந்தார். அங்கிருந்து அவருக்குத் தப்பிச் செல்ல வேறு வழி தெரியவில்லை. உடனே அவர் தான் மறைந்து கொள்வதற்கு நல்லதொரு இடத்தைத் தேடினார். அப்போது அங்கு புல்லாங்குழலுடன் வந்த ஒரு சிறுவன் அங்கிருந்த பலா மரப்பொந்து ஒன்றைக் காட்டி அதனுள் சென்று மறைந்து கொள்ளும்படிச் சொன்னான். பயத்துடன் இருந்த இளவரசரும் அந்தச் சிறுவன் சொன்ன பலாமரப் பொந்திற்குள் சென்று மறைந்து உயிர் தப்பினார். சிறிது காலம் பகைவர்களுக்குத் தெரியாமல் மறைந்து வாழ்ந்த இளவரசர் பின்னாளில் பகைவர்களை வென்று மன்னராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ஒருநாள் அவர் கனவில் தோன்றிய கிருஷ்ணர் தானே நெய்யாற்றின் கரையில் சிறுவனாக வந்து பலா மரப்பொந்தில் மறைந்து கொள்ளச் செய்து காப்பாற்றியதாகவும் தனக்கு அங்கே கோவில் ஒன்றைக் கட்டி வழிபடும்படியும் சொல்லி மறைந்தார். மன்னரும் தன் உயிரைக் காப்பாற்றிய கிருஷ்ணனுக்கு, தான் கண்ட சிறுவன் வடிவிலேயேச் சிலை அமைத்து நெய்யாற்றின் கரையில் கிருஷ்ணருக்கு ஒரு கோவிலைக் கட்டினார்.

கோவிலின் ஒரு பகுதியில் மன்னர் மார்த்தாண்ட வர்மா மறைந்திருந்ததாகச் சொல்லப்படும் பலா மரம் வேலியிட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மரத்தை அங்கிருப்பவர்கள் மலையாள மொழியில் அம்மாச்சி பிலாவு (தாய் மரம்) என்று அழைக்கின்றனர். இந்த ஆலயத்தில் சித்திரை விசு கிருஷ்ண ஜெயந்தி ஓணம் பண்டிகை நவராத்திரி மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான மண்டல பூஜை நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட் காட்டியின்படி மீனம் (பங்குனி) மாதம் பத்து நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் நெய்யாற்றில் இறைவனுக்கு ஆறாட்டு விழா நடத்தப்படுகிறது. கோவிலின் பூஜைகள் நிறைவடைந்தவுடன் கிருஷ்ணரின் கைகளில் சிறு சிறு வெண்ணெய் உருண்டைகளை வைத்து வழிபட்டுப் பக்தர்களுக்குத் தருகின்றனர். இந்த வெண்ணெய் உருண்டைகள் பல்வேறு நோய்களுக்கு அருமையான மருந்தாக உள்ளது. கோவிலின் வடக்குத் திசையின் கீழ்ப் பகுதியில் நெய்யாறு ஓடுகிறது.

இக்கோவிலில் நிறுவுவதற்காக முதலில் மரத்தால் ஆன சிலை ஒன்றுதான் செய்யப் பட்டிருக்கிறது. அந்தச் சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக நெய்யாற்றின் வழியாக ஒரு படகு மூலம் கொண்டு வரப்பட்டது. அப்போது அந்தப் படகு ஆற்றுக்குள் ஓரிடத்தில் நகராமல் நின்று விட்டது. அங்கிருந்தவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் படகை சிறிது கூட நகர்த்த முடியாமல் போனது. குறிப்பிட்ட நாளில் கோவிலில் இறைவன் சிலையை நிறுவ விரும்பிய மன்னர் தற்போது ஆலயத்தில் இருக்கும் பஞ்சலோகத்தாலான கிருஷ்ணர் சிலையை உருவாக்கி அதை பிரதிஷ்டை செய்தார்.

அகத்திய முனிவர் மலை உச்சியில் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அகத்தியக் கூடம் என்றழைக்கப்படும் அந்த இடத்தில் அகத்திய முனிவர் பல வேள்விகளைச் செய்து கொண்டிருந்தார். அவருடைய வேள்விக்காகக் கொண்டு வரப்பெற்ற நெய் அங்கிருந்த பெரிய பானைகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அந்தப் பானைகளில் இருந்த நெய் நிரம்பி வழிந்து பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. நெய்யே ஆறாக ஓடியதால் இந்த ஆற்றுக்கு நெய்யாறு என்று பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அப்பகுதியில் ஏற்பட்டக் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இறைவன் கிருஷ்ணரை வேண்ட அவர் அகத்தியக் கூடத்தில் இருந்து வெளியேறி ஓடிக் கொண்டிருந்த நெய் ஆற்றினைத் தெளிந்த நீராக மாற்றி ஓடச் செய்தார்.

பால கோபால கிருஷ்ணர்

கிருஷ்ணரின் வளர்ப்புத் தாயான யசோதா தேவி பால கோபால கிருஷ்ணரின் சிலையை வைத்திருந்தார். இந்த சிலையை கிருஷ்ணர் கன்வ முனிவரிடம் ஒப்படைத்தார். பால கோபால கிருஷ்ணருக்கு கன்வ முனிவர் கேரள மாநிலம் காசர்கோட்டில் கோவில் எழுப்பினார்.

திருவேங்கடமுடையான்

தொண்டைமான் என்ற மன்னன் நாட்டு நன்மைக்காக ஒரு யாகம் செய்ய ஆசைப்பட்டான். தனது விருப்பத்தைத் தன் புரோகிதரான ஜடாதாரியிடம் சொன்னான். அவரும் சம்மதித்தார். ஜடாதாரியோ தீய எண்ணத்துடன் ஒரு துர்தேவதையைக் குறித்து யாகம் செய்து நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கத் திட்டமிட்டார். அந்த யாகத்துக்கு அனைத்து ரிஷிகளையும் வரவேற்கும்படி ஜடாதாரியிடம் மன்னன் கூறினான். அவரும் நாராயண ரிஷி உட்பட அனைத்து ரிஷிகளையும் நேரில் சென்று வரவேற்றார். ஆனால் நாராயண ரிஷி மட்டும் திருவேங்கடமுடையான் அருளால் இவர் ஏதோ தீய எண்ணத்தில் யாகம் செய்கிறார் என உணர்ந்து கொண்டார். அதனால் யாகத்துக்கு வர மறுத்து விட்டார். மேலும் இந்த யாகத்தால் நாட்டுக்குத் தீங்கு ஏற்படாமல் காக்குமாறு திருவேங்கடமுடையானை வேண்டினார். நாராயண ரிஷியால் தனது திட்டத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என உணர்ந்த ஜடாதாரி அவரைப் பற்றி அவதூறாக மன்னனிடம் பலவாறு கூறினார். தொண்டைமான் என்ன பெரிய மன்னனா? அவன் செய்யும் யாகத்துக்கு நான் வர வேண்டுமா? மன்னன் என் காலில் வந்து விழுந்து வரவேற்றால் தான் வருவேன் என்றெல்லாம் கர்வத்துடன் நாராயண ரிஷி பேசுவதாகக் கூறிய ஜடாதாரி மன்னா அவருக்கு நீங்கள் தான் சரியான தண்டனை அளித்துத் தாங்கள் யாரென்று காட்டவேண்டும் என்றார். கோபம் கொண்ட மன்னன் தனது வீரர்களை அனுப்பி நாராயண ரிஷியை இழுத்து வரச் சொன்னான். அவர்களும் ரிஷியை மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். இந்த நாட்டை ஆளும் மன்னன் நான் எனக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? மரியாதையாக இந்த யாகத்தில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள் என்றான் மன்னன். இந்த யாகம் செய்வது நாட்டுக்கு நல்லதல்ல. ஏதோ துர்தேவதையைக் குறித்து ஜடாதாரி யாகம் செய்கிறார். நான் இதில் பங்கேற்க மாட்டேன் என்றார் ரிஷி. அவரது விளக்கத்தை ஏற்காத தொண்டைமான் இறுதியாகச் சொல்கிறேன். மன்னனின் ஆணைக்கு அடிபணிவீரா? மாட்டீரா? என்றான். நீ இந்த ஒரு தேசத்துக்குத் தான் அரசன். மன்னா என் ஏழுமலையானோ அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகன். அந்த மன்னாதி மன்னனைத் தவிர வேறு எந்த மன்னனுக்கும் அடிபணிய மாட்டேன் என்றார் ரிஷி. அவரைச் சிறையிலடைத்தான் தொண்டைமான்.

சிரித்துக் கொண்டே திருவேங்கடமுடையானின் அடியார்களுக்குச் சிறைச்சாலை கூட தங்க மாளிகை போல மின்னும். மூங்கில் கழிகள் கூட அவர்களுக்குக் கரும்பு போல் இனிக்கும் என்றார் நாராயண ரிஷி. அப்படியா? அப்படியானால் உங்கள் அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகனிடம் சொல்லி இந்தச் சிறையைத் தங்கமாக மாற்றச் சொல்லுங்கள். மூங்கில் கழிகளைத் தருகிறேன் நீங்கள் அதைக் கரும்பாய்க் கருதிச் சாப்பிடுங்கள். இவை இரண்டும் நாளை காலைக்குள் நடக்காவிட்டால் உங்கள் தெய்வத்தை இனி அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகன் என்று அழைக்கக் கூடாது என்றான். மூங்கில் கழிகளை அவரது சிறைக்குள் கொண்டு வந்து போடச் சொல்லி உத்தரவிட்டு விட்டுத் தன் அந்தப்புரத்துக்குச் சென்றான் மன்னன் அன்றிரவு திருவேங்கடமுடையான் கஜேந்திரன் யானையை சிறைச் சாலைக்கு அனுப்பினார். கஜேந்திரன் வந்து அனைத்து மூங்கில்களையும் எளிதில் தின்று தீர்த்தார். தன் திருமார்பில் உள்ள மகாலட்சுமியிடம் அந்தச் சிறைச் சாலையைக் கடாட்சிக்கும்படி கூறினார் திருமலையப்பன். மகாலட்சுமியின் பார்வை பட்டதும் சிறைச்சாலை பொன் மயமானது. அடுத்த நாள் காலை வந்து பார்த்த மன்னன் மூங்கில் கழிகள் அனைத்தும் காணாமல் போனதையும் சிறைச்சாலை முழுவதும் தங்கமயமாக இருப்பதையும் கண்டு வியந்து திருமலையப்பனின் மேன்மையையும் நாராயண ரிஷியின் பக்தியின் பெருமையையும் உணர்ந்தான். ஜடாதாரி செய்ய நினைத்த யாகத்தை நிறுத்தினான். அன்று முதல் தொண்டைமான் திருமலையப்பனின் பக்தனாக மாறினான்.

திருப்பதி கோவிலில் உள்ள கடப்பாரை

திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும் போது பிரதான வாசலின் நுழைவாயிலில் வலப் புறத்தில் ஒரு கடப்பாரை உள்ளது. திருப்பதி திருமலையின் தண்ணீர்த் தேவையைத் தீர்த்து வைக்கும் குளமான கோகர்ப்ப ஜலபாகம் என்னும் குளத்தைத் தோண்ட பல நூறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கடப்பாரைதான் அது. இக்கடப்பாற்றை பெருமாளின் திருமேனியை ஸ்பரிசித்து இருக்கிறது.

திருமலையில் இன்றைக்கும் மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனத்தை முதலில் அமைத்தது அனந்தாழ்வான். அதன் நீர் தேவைக்கான குளத்தையும் ஏற்படுத்தியவர் இவர். ஏழுமலை ஆண்டவனுக்கு சேவை செய்யும் பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் திருமலைக்கு வந்து சேர்ந்து திருமலையில் நந்தவனம் அமைக்க ஆரம்பித்தார். மண் வெட்டியால் வெட்டி நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார். அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயர் நிலைக்கும்படி ராமாநுஜ நந்தவனம் என்று பெயர் வைத்தார். (இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.) கோடைக் காலத்தின் தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவு செய்தார். இச்சமயம் அவரது மனைவி கர்ப்பம் தரித்திருந்தார். நந்தவனம் அருகே இருந்த பள்ளத்தில் ஒரு பகுதியை மேடாக்கினார். குளத்தின் ஒரு பக்கத்தை மட்டும் மண்ணை உயரமாக இட்டு குளத்தை ஆழப்படுத்தினார். குளம் வெட்டும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார். மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டி விட்டு வந்தார். ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன் அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான். ஆனால் அனந்தாழ்வானோ நம்மால் ஊரார் பிள்ளை எதற்கு சிரமப்பட வேண்டும் என்று நினைத்தவராக மறுத்து விட்டார். கர்ப்பிணிப் பெண் கஷ்டப்பட்டு மண் சுமப்பதைப் பார்த்து அந்தச் சிறுவன் தாயே நான் மண் சுமந்தால்தானே அவர் கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப் பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள் என்றான் சிறுவன். சிறுவனின் கெஞ்சல் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை. கூடையை மாற்றிக் கொடுத்தாள். இப்படியே வேலை நடந்தது. திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் தோன்றியது. மண்ணைக் கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே என்று மனைவியைக் கேட்க சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் என்று பதில் சொல்லி சமாளித்தாள். சிறிது நேரம் சென்றதும் அனந்தாழ்வான் கரையைப் பார்க்க வந்தார்.

சிறுவன் சிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக் கொண்டிருந்தான். இதனால் கோபம் தலைக்கேற கையில் இருந்த கடப்பாரையால் சிறுவனை அடிக்க முற்பட்டார். கடப்பாறை சிறுவனின் கீழ்த்தாடையில் பட்டு ரத்தம் கொட்டியது. கடப்பாரையால் அடிபட்டு ரத்தம் பெருகிய நிலையில் அந்தச் சிறுவன் ஓடிப் போய் விட்டான். மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்ய வந்த அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர். பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அர்ச்சகரே பயப்பட வேண்டாம் அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள் என ஒரு அசரீரி கேட்டது. உடனே அவரை அழைத்து வந்தனர். பெருமாள் தாடையில் ரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார். அவருக்கு மட்டும் தான் மண் சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள். சுவாமி என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் தொண்டுக்கு அடுத்தவர் உதவியை நாடக்கூடாது என்ற சுயநலத்தில் சிறுவனை விரட்டினேன் என்னை மன்னித்தருள்க என்று விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான். பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கத்தான் நான் இங்கு இருக்கிறேன். என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும் என்று அசரீரியாகக் கேட்டார். சரி ரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது? என்று அர்ச்சகர்கள் குழம்பினர். சுவாமியின் தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் ரத்தம் வழிவது நின்று விடும் என்றார். அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க ரத்தம் வழிந்தது நின்று போனது. இதை நினைவுபடுத்தும் விதமாகவே திருப்பதிப் பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது.

குருவாயூரப்பன்

கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணர் கோவில். மூலவர் உன்னி கிருஷ்ணன். சிறுவனானக இருக்கும் இவருக்கு கண்ணன் உண்ணிக் கண்ணன் (குழந்தை கிருஷ்ணன்) உண்ணிக் கிருஷ்ணன் பாலகிருஷ்ணன் மற்றும் குருவாயூரப்பன் என்று இவருக்கு பல பெயர்கள் உள்ளது. நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார் கிருஷ்ணர். மேலிரண்டு கரங்களில் சங்கு சக்கரமும் கீழிரண்டு கரங்களில் கதையும் தாமரையும் கொண்டு துளசி முத்து மாலைகள் கழுத்தில் தவழ கிரீடம் மகர குண்டலம் கேயூரம் கங்கணம் உதர பந்தனம் பூண்டு வலப்பக்க மார்பில் ஸ்ரீவத்ஸம் எனும் சந்தனமும் வைஜயந்தி மாலையும் கௌஸ்துப மணியும் அணிந்து திருக்காட்சி தருகிறார். கருவறைக்கு வடகிழக்கே வருண பகவானால் ஏற்படுத்தப்பட்ட கிணறு அமைந்துள்ளது. இந்த நீர்தான் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. பரிவார தேவதைகளுக்கு பூஜை நடப்பது போல் தினமும் இந்த கிணற்றுக்கும் பூஜை நடக்கிறது. இந்தக் கிணற்றில் எந்நாளும் தீர்த்தம் குறைந்ததில்லை. இந்தப் புண்ணிய தீர்த்தத்துக்குள் எண்ணற்ற சாளக்கிராம கற்களும் சிலைகளும் உள்ளன. கோவிலில் ஆதி சங்கராச்சாரியார் அவர்களால் வரையறுக்கப்பட்ட பூசை முறைகள் மற்றும் தாந்தரிக வடிவில் சென்னாஸ் நாராயணன் நம்பூதிரி காலம் 1427 ம் ஆண்டு அவர்களால் எழுதி குறிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றியும் இந்த கோவிலில் இறை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கோயிலுக்கு எதிரில் கிருஷ்ண பகவான் மஞ்சுளால் என்ற அரசமர வடிவில் அருள்பாலிக்கிறார்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்ய தேசக் கோவில்களில் இக்கோவில் இல்லை என்றாலும் திருமாலை வணங்குபவர்களால் மிகவும் புனிதமானதாக போற்றப்பட்டு வருகிறது இத்திருக்கோயில். கிருஷ்ண அவதாரத்திற்கு சற்று முன் அன்னை தேவகி மற்றும் தந்தையார் வாசுதேவருக்கு குருவாயூர் கோயிலில் உள்ளவாறே தரிசனம் கொடுத்துள்ளார் கிருஷ்ணர். இதனால் இந்த இடம் தென் இந்தியாவின் துவாரகா என்றும் அழைக்கப்படுகிறது. குரு பகவானும் வாயுபகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் குருவாயூர். குரு + வாயு = குருவாயூர். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் மையால் செய்யப்பட்டது இந்த கிருஷ்ணரின் சிலை. இந்த சிலையை கிருஷ்ணரே செய்ததாகவும் ஒரு வரலாறு உள்ளது. கோவிலில் கிழக்கு வாசல் மேற்கு வாசல் என்று இரண்டு பிரதான வழிகள் இருந்தாலும் கிழக்கு நோக்கிய வாசல்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் தங்கத் தகடுகள் வேயப்பட்ட 33.5 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பத்தின் இருபுறமும் 13 அடுக்குகளுடன் 7 மீட்டர் உயரமுள்ள தீபஸ்தம்பம் உள்ளது. இதன் வட்ட அடுக்குகளில் விளக்குகள் ஏற்றப்படும். கருவறையைச் சுற்றி வெளிச்சுவர்களில் மரச் சட்டங்களில் சுமார் 3000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும். கொடிக்கம்பத்துக்கு வடமேற்கே கிருஷ்ணனை துவாரகையில் இருந்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்த குரு பகவான் மற்றும் வாயு பகவானின் பலிபீடங்கள் உள்ளன.

கிருஷ்ணர் அவதார காரியம் முடிந்ததும் வைகுந்தம் ஏகுவதற்கு ஆயத்தமானார். அப்போது அவருடைய நண்பரும் சீடருமான உத்தவர் கிருஷ்ணா நீங்கள் இல்லாத உலகைக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லையே என்றார். அதற்கு கிருஷ்ணர் உத்தவா அவதார காரியம் பூர்த்தியானது என் இருப்பிடம் திரும்புவதுதானே முறை? என்றார். உடனே உத்தவர் இருந்தாலும் நீங்கள் இல்லாமல் எங்களால் எப்படி இருக்க முடியும்? நாங்கள் என்ன செய்வோம்? என்று கவலையுடன் கிருஷ்ணரிடம் வேண்டினார். கவலையை விடு உத்தவா நான் இல்லாத குறையை இதோ இந்த விக்கிரகம் தீர்த்து வைக்கும் என்று தன்னைத் தானே சிலையாக வடித்த கிருஷ்ணர் இந்த சிலையை தனது பக்தரான உத்தவரிடம் கொடுத்தார். எனது அவதார முடிவில் ஏழு நாட்களுள் துவாரகையைக் கடலில் மூழ்கி விடும். அப்போது இந்த விக்கிரகம் கடலில் மிதந்து உன்னிடம் வந்து சேரும். அதனை தேவ குரு பிரகஸ்பதியான குருபகவானிடம் ஒப்படைத்து அவர் விரும்பும் இடத்தில் பிரதிஷ்டை செய்ய சொல்ல வேண்டும் என்று கிருஷ்ணர் உத்தவரிடம் கூறினார். கிருஷ்ணர் சொன்னது போலவே அனைத்தும் நடந்தது. வாயு பகவான் புயலாய் மாறினார் மழை கொட்டினார். கடல் துவாரகைக்குள் புகுந்தது. உத்தவரிடம் இருந்த சிலை கடலில் மிதந்து உத்தவரிடம் வந்து சேர்ந்தது. அவர் அதனை குரு பகவானிடம் ஒப்படைக்க குரு பகவான் அதை எடுத்துச் சென்று பூலோக சொர்க்கமான குருவாயூரில் பிரதிஷ்டை செய்தார். குருவும் வாயுவும் இவ்விதம் கிருஷ்ணரின் சிலையை பிரதிஷ்டை செய்தனர். குருவுக்கும் வாயுவுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த ஊர் குருவாயூர் என பெயர் பெற்றது.

மகாபாரதப் போருக்குப் பின் நீண்ட காலம் ஆட்சி புரிந்த பரீட்சித்து மன்னன் தட்சகன் என்ற பாம்பால் கடிபட்டு மரணமடைந்தார். அதனால் அவரது மகனான ஜனமேஜயன் சர்ப்பங்கள் அனைத்தின் மீதும் கோபமுற்று சர்ப்ப யாகம் செய்து உலகத்தில் உள்ள அனைத்து நாகமும் யாகத் தீயில் விழுமாறு செய்தான். அதனைக் கண்ட அஸ்தீகம் என்ற முனிவர் ஜனமேஜயனிடம் மன்னா இந்தக் கொடிய யாகத்தை நிறுத்து. ஒரு பாவமும் அறியாத ஆயிரக்கணக்கான சர்ப்பங்களைக் கொல்லாதே என்றார். உடனே முனிவரின் வார்த்தையை மன்னர் ஏற்க யாகம் நிறுத்தப்பட்டது. ஆனால் பாம்புகளைக் கொன்ற பாவத்தால் ஜனமேஜயன் தொழு நோயால் பீடிக்கப்பட்டான். சில காலம் கழிந்து கேரள தேசத்தில் தமது ஆசிரமத்தில் பரசுராமர் ஜனமேஜயனுடன் உரையாடினார். ஜனமேஜயா உனது இக்கொடிய நோய் விரைவில் குணமடைய ஆசி கூறுகிறேன் என்றார். அந்த சமயத்தில் உத்தவர் கேட்டுக் கொண்டபடி தேவகுரு பிருஹஸ்பதியும் வாயு பகவானும் சேர்ந்து கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்யத் தகுந்த இடத்தைத் தேடியவாறு கேரள நாட்டிற்கு வந்தார்கள். தற்போது குருவாயூர் கோவில் இருக்கும் இடத்தை பார்த்த இருவரும் இந்த இடம் இவ்வளவு ரம்மியமாக இருக்கிறதே என்று பிரமித்து கூறினர். நம் சுவாமியை இங்கேயே பிரதிஷ்டை செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள். இருவரும் பரசுராமரின் ஆசிரமத்திற்கு வந்தார்கள். பரசுராமர் அவர்களை வரவேற்று உபசரித்தார். பரசுராமரே இந்த கிருஷ்ணரின் விக்கிரகத்தை இங்கு பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்திருக்கிறோம். இங்கு பிரதிஷ்டை செய்ய தக்க இடத்தைக் காட்டுங்கள் என்று கேட்டார்கள். மூவரும் சரியான இடத்தை பார்த்துக் கொண்டிருந்த போது ருத்ர தீர்த்தத்தின் அருகே சிவபெருமான் உமையுடன் வீற்றிருந்தார். மூவரும் அவரைப் பணிந்து வணங்கி நின்றார்கள். அப்போது சிவபெருமான் இங்கேயே விஸ்வகர்மா உதவியுடன் ஒரு கோவில் எழுப்பி இந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள். அனைவருக்கும் சேமம் உண்டாகட்டும் என்று ஆசி வழங்கினார். அதன்படி கோவில் எழுப்பப்பட்டது. கிருஷ்ணரின் விக்கிரகத்தை குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்தார்கள். கிருஷ்ணரின் விக்கிரகத்திற்கு சிவபெருமானே அபிஷேகம் செய்தார். சிவபெருமான் அதனருகில் உள்ள ஓர் இடத்தில் எழுந்தருளி மம்மியூர் மகாதேவர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஆரம்பித்தார்.

பரசுராமர் ஜனமேஜயனை அழைத்து ஜனமேஜயா உன் நோய் நீங்க பக்தியுடன் நீ தினமும் இந்த புஷ்கரணியில் நீராடு. கிருஷ்ணரைக் குறித்து தவமியற்று. குருவாயூரப்பனின் திருவருளால் நீ விரைவில் குணமடைவாய் என்று கூறினார். கிருஷ்ணனரையும் மம்மியூர் மகாதேவரையும் அன்னை பார்வதியையும் தினமும் ஜனமேஜயன் வழிபட்டு வந்தார். சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் கிருஷ்ணன் குருவாயூரப்பனாக அவர் முன் தோன்றி ஜனமேஜயா உனது தவம் பலித்தது. இனி உன் நோய் குணமாகி விடும் என்று கூறினார். நோய் முற்றிலும் நீங்கிய ஜனமேஜயன் சிறந்த முறையில் ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து குருவாயூரப்பனுக்குச் சிறந்த கோயில் ஒன்றைக் கட்டி முடித்தார். பின்பு மக்களிடம் உடல் நலம் குன்றியவர்கள் இந்த புஷ்கரணியில் நீராடிப் பக்தியுடன் குருவாயூரப்பனை வழிபட்டு வந்தால் அவர்களது நோய் நீங்கிவிடும் என்று அறிவித்தார்.

மேப்பத்தூர் ஸ்ரீநாராயண பட்டத்திரிக்கு வந்திருந்த கடுமையான வாத நோயைக் குணப்படுத்தினார் குருவாயூரப்பன். பட்டத்திரி குருவாயூரப்பனைப் பற்றி எழுதிய 1036 பாடல்கள் கொண்ட ஸ்ரீநாராயணீயம் கிருஷ்ணரின் லீலைகளை மிகச் சிறப்பாக விளக்குகிறது. ஒவ்வொரு பாடலையும் எழுதி முடிந்தவுடன் பட்டத்திரி குருவாயூரப்பனிடம் இப்படி லீலை செய்தாயா? என்று கேட்பார். அதற்கு குருவாயூரப்பன் தலை அசைத்துச் சம்மதம் தெரிவிப்பார். ஆலயத்தில் உள்ள நமஸ்கார மண்டபத்தில் அமர்ந்து நாராயணீயம் எழுதினார் நாராயண பட்டத்ரி. அவர் அமர்ந்து எழுதிய இடத்தைப் புனிதமாகக் கருதி அங்கு எவரும் அமர்வதில்லை. நாராயண பட்டத்ரியுடன் குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல்.

பட்டத்ரி: நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனப் பொருள் எது?
குருவாயூரப்பன்: நெய்ப் பாயசம்.
பட்டத்ரி: ஒருவேளை நெய்ப்பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால்?
குருவாயூரப்பன்: அவலும் வெல்லமும் போதுமே.
பட்டத்ரி: அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால் என்ன செய்வது?
குருவாயூரப்பன்: வெண்ணெய் வாழைப்பழம் பால் தயிர் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு.
பட்டத்ரி: மன்னிக்க வேண்டும் பகவானே இப்போது நீ சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?
குருவாயூரப்பன்: துளசி இலைகள் அல்லது உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்.
பட்டத்ரி: அதுவும் என்னிடம் இல்லை என்றால்?
குருவாயூரப்பன்: எனக்கு நைவேத்தியம் செய்விக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும். வேறு ஒன்றும் வேண்டாம்.

குருவாயூரப்பன் கோயிலில் ஒருமுறை தீ விபத்து ஏற்பட்ட போது அங்குள்ள மரச்சுவர்கள் தூண்கள் ஆகியன சேதமடைந்தன. பிறகு பிரஸன்னம் மூலம் கிடைத்த உத்தரவுப்படி மறுபடியும் தூண்கள் மற்றும் சுவர்களைக் கருங்கற்களால் நிர்மாணிக்கத் தீர்மானித்தனர். அதற்காக தமிழ்நாட்டில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். விஷ்ணுவின் தசாவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்களுடன் கூடிய பத்து தூண்கள் தயாராயின. அதில் கிருஷ்ணாவதாரத்தை குறிக்க ஒரு தூணில் கம்ச வத காட்சியை வடித்திருந்தார் சிற்பி. அந்த தூணை வைக்க தீர்மானித்திருந்து இடத்தில் ஒரு நாள் சிறுவன் ஒருவன் தலைமைச் சிற்பியிடம் வந்து கிருஷ்ணனை வேணுகோபாலனாகச் செதுக்கியிருக்கும் தூணை இங்கு வையுங்கள் என்றான். அப்படி ஒரு சிற்பத்தை நாங்கள் இது வரை வடிக்கவில்லையே என்றார். உடனே சிறுவன் சிற்ப வேலை நடக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று கிருஷ்ணர் வேணுகோபாலனாக விளங்கும் தூணைக் காட்டினான். வியப்படைந்த சிற்பி திரும்பிப் பார்த்த போது சிறுவனைக் காணவில்லை. வந்தது குருவாயூரப்பனே என்பதை உணர்ந்த தலைமைச் சிற்பி அந்தத் தூணையே அங்கு நிறுவினார்.

மேல்சாந்தி என்றால் தலைமை குருக்கள் என்று பொருள். முக்கியமான பூஜைகள் அலங்காரங்கள் அர்ச்சனை மற்றும் அபிஷேகங்களை செய்பவர் மேல்சாந்தி. இவரைத் தவிர மற்றவர்களுக்கு மூல விக்கிரகத்தைத் தொடும் உரிமை கிடையாது. கோயிலின் மேல்சாந்தி விடியற்காலை இரண்டரை மணிக்கே ஸ்ரீகோயிலின் கருவறைக்குள் நுழைந்து விடுவார். மேலும் உச்சி பூஜை முடியும் 12.30 மணி வரை பொட்டுத் தண்ணீர்கூட அருந்த மாட்டார். அப்படி ஒரு ஆசார முறை இங்கே கடைப் பிடிக்கப்படுகிறது. ஒரு மேல்சாந்தி தொடர்ந்து ஆறு மாத காலமே பணி புரிய வேண்டும். இந்த ஆறு மாத காலமும் குருவாயூர் கோயிலை விட்டு அவர் வெளியே எங்கும் செல்லக்கூடாது. கோவிலின் உள்ளே தங்குவதற்குத் தனி இடம் வழங்கப்படும். இந்த ஆறு மாத காலமும் பிரம்மச்சர்ய விரதம் அவசியம். கீழ்சாந்தி எனப்படுபவர் உதவி அர்ச்சகர். விளக்கு ஏற்றுவது அபிஷேகத்துக்குப் புனித நீர் எடுத்துத் தருவது மலர் மாலைகளை எடுத்துத் தருவது நைவேத்தியம் தயாரிப்பது இவை கீழ்சாந்தியின் வேலை. தந்திரி எனப்படுபவர்கள் வேத மந்திரம் கற்றவர்கள். பூஜைகளைத் தந்திர முறையில் செய்வதால் இவர்கள் தந்திரிகள் ஆனார்கள். பல முக்கியமான நிகழ்வுகளுக்கு ப்ரஸ்னம் பார்த்துத் தீர்மானிப்பது தந்திரிகள்தான்.

குருவாயூரை கிபி 1766 ஆண்டில் மைசூரை சார்ந்த ஹைதர் அலி கோவிலை கைப்பற்றினார். கோவிலை விடுவிக்க அவர் 10000 பானம்ஸ் பணம் அபராதமாக கேட்டார். இந்த அபராதத் தொகை கட்டப்பட்டு மீட்கப்பட்டது. ஆனால் அப்பொழுது நிலவிய சூழ்நிலை காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் வருவது குறைந்தது மேலும் கோவிலுக்கு வழங்கப்பட்ட அரிசியும் நிறுத்தப்பட்டது. மீண்டும் கிபி 1789 ஆண்டில் திப்பு சுல்தான் சமோரின் நாட்டின் மேல் படையெடுத்தான். கோவிலை அழிவிலிருந்து காப்பாற்ற மூலவர் கிருஷ்ணர் விக்ரஹம் பூமியின் அடியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டது. கோவிலின் உற்சவர் விக்ரஹம் மல்லிச்சேரி நம்பூதிரி மற்றும் கக்காத் ஒத்திகன் ஆகியோர்களால் அம்பலப்புழை என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. திப்பு சுல்தான் சிறிய கோவில்களை யாவும் அழித்தான் மேலும் பெரிய கோவிலுக்கும் தீ வைத்தான். ஆனால் இறைவன் அருளால் சரியான வேளையில் மழை பொழிந்து தீ அணைக்கப்பட்டு கோவில் காப்பாற்றப்பட்டது. திப்பு சுல்தான் கிபி 1792 ஆம் ஆண்டில் நடந்த ஆங்கிலேயர்கள் மற்றும் சமொரினுக்கு எதிரான போரில் தோல்வி அடைந்தான். ஆகையால் செப்டம்பர் 17 ம் தேதி 1792 அன்று உற்சவ மூர்த்தி திரும்பவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. உள்ளநாடு பணிக்கர்மார்கள் 1825 முதல் 1900 வரை சுமார் 75 வருடங்களுக்கு கோவிலை பாதுகாத்து வந்தார்கள். செம்பகேசரி நம்பூதிரி மற்றும் தேஷவர்மன் நம்பூதிரி போலவே பணிக்கர்மார்களும் தமது அனைத்து உடமைகளையும் சொத்து மற்றும் சேவைகள் புரிவது அனைத்தையும் கோவிலுக்கே அற்பணித்தார்கள். அப்படியாக அவர்களுடைய உதவியுடன் நித்ய பூஜைகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் நிகழ்ச்சிகள் உற்சவங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 1859 முதல் 1892 வரை சிற்றம்பலம் விளக்குமடம் கூத்தம்பலம் மற்றும் சாஸ்தா ஆலயம் போன்றவை புதுப்பிக்கப்பட்டு அதன் கூரைகளை செம்பு தகடுகளால் மாற்றியமைக்கப்பெற்றன. 1900 ஆம் ஆண்டில் கொந்தி மேனன் என்ற அதிகாரி கோவிலில் சடங்குகள் மற்றும் வணங்குவதற்கான புராண நியம நிஷ்டைகளை ஏற்பாடு செய்து அதை நன்கு செய்வதற்கும் கோவிலின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கைகளை எடுத்தார். அவர் கோவிலுக்கான பெரிய மணியை கட்ட ஏற்பாடுகள் செய்தார் மேலும் கூலக் களஞ்சியம் என அறியப்படும் சேமிப்பு கிடங்கை புதுப்பித்தார். 1928 ஆம் ஆண்டில் குருவாயூர் கோவிலின் நிர்வாகம் மீண்டும் சமோரின் குடும்பத்தினரிடம் மாற்றப்பட்டது. கொடிக்கம்பம் 1952 ஆம் ஆண்டில் தங்கத்தால் போர்த்தப்பட்டது.

ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு குருவாயூரப்பன் மிகவும் விருப்பமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை கோவிலுக்கு அழைத்துச் செல்ல யாருமில்லை. பண வசதியும் இல்லை. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும் அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் ஆசை இருந்தது. அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து நன்கு கழுவி துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள். ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் நடை பயணமாகவே புறப்பட்டாள். கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயணம் செய்தாள். ஒரு மண்டல காலம் பயணம் செய்து கோவிலை அடைந்தாள்.

கோவிலை அடைந்த சமயம் கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன் தன் பக்தியை வெளிப்படுத்த கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அந்த நாளிலே இந்த வயதான பெண்மணியும் வந்திருந்தாள். கூட்டம் அதிகமாக இருந்த படியால் தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. வயதான பெண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது. அதே சமயம் கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் என்ன ஆயிற்று? என்று பதறினர். கோவில் பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் குருவாயூரப்பனிடமே ப்ரஸன்னம் கேட்டான். அப்பொழுது கர்ப்பக்கிரகத்தில் இருந்து நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும் என்று அசரீரி கேட்டது. உடனே அங்கிருந்த அனைவரும் கீழே சிதறிக் கிடந்த குண்டு மணிகளை பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயதான பெண்மணியிடம் கொடுத்த அரசர் அவளிடம் மன்னிப்பும் கேட்டான். அவளை சகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவள் ஆசையுடன் குண்டு மணிகளை அப்பனிடம் சமர்ப்பித்ததும் யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.

பட்டத்திரி குருவாயூரப்பனைப் பற்றி எழுதிய 1036 பாடல்கள் கொண்ட ஸ்ரீநாராயணீயம் கிருஷ்ணரின் லீலைகளை மிகச் சிறப்பாக விளக்குகிறது. பூந்தானம் என்ற மகான் மலையாளத்தில் எழுதிய ஞானப்பானை நூல் குருவாயூரப்பனது மகிமைகளை விவரிக்கின்றன. நாரத புராணத்தின் குருபாவன புர மகாத்மியம் என்ற பகுதியில் குருவாயூரின் மகிமைகளை விவரிக்கிறது. ஞானிகளான மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி பக்த சிரோன்மணி வாசுதேவன் நம்பூதிரி போன்றோர் குருவாயூரப்பனை மகா விஷ்ணுவாக வழிபட்டனர். பூந்தானம் வில்வமங்களன் மானதேவன் குரூர் அம்மையார் ஆகியோர் பாலகிருஷ்ணனாக வழிபட்டனர். 14 ஆம் நூற்றாண்டின் கோகசந்தேசம் என்ற தமிழ் வரலாற்று படைப்பில் குருவாயூரைப் பற்றிய வரலாற்று செய்திகள் உள்ளது.

சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில்.

சோளிங்கர் சோளிங்கபுரம் என்று தற்போது வழங்கப் பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. இதனை பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம். புராண நூலின் படி இம்மலையின் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பதும் கால அளவின் ஒரு கூறு. அசலம் என்றால் மாலை. நரசிம்ம பெருமாள் இரண்ய வதத்தை முடித்துக் கொண்டு பாற்கடலுக்கு செல்லும் வழியில் அகத்தியருக்கு கடிகை மாத்திரைப் பொழுது காட்சியளித்ததால் கடிகாசலம் எனப் பெயர் பெற்றது. நரசிம்மர் குடிகொண்டுள்ளதால் சிம்மபுரம் எனவும் சோழர்கள் நாட்டின் எல்லையாக ஒரு காலத்தில் இது இருந்ததால் சோழ சிம்மபுரம் என அழைக்கப்பட்டது.

சோளிங்கர் மலையில் 750 அடி உயரத்தில் 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் மலை குன்றின் மீது 200 அடி நீளம் 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இக்கோயில் அமைந்துள்ளது. யோக நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மாலை அணிந்து கொண்டு சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன் இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப் பட்டையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு அக்காரக்கனி என்ற பெயரும் உள்ளது. நாச்சியார் அம்ருதவல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு அழைக்கப் படுகிறாள். உலக உயிர்களைக் காப்பதற்கு உரிய முறையில் பெருமாளுக்கு உதவுவதால் அம்ருதவல்லி என வழங்கப்படுகிறாள். ஆரம்பத்தில் மலை ஏறும் வழியில் தாயாருக்கு தனிச் சன்னதி இருந்தது. சில காலத்திற்கு முன் அந்த சன்னதி சிதிலமடைந்த போது தாயார் மலை மீது கொண்டு தனி சன்னதியில் வைக்கப்பட்டாள். அக்கார அடிசல் எனும் விசேஷப் பாயசம் நரசிம்மருக்கு படைக்கப் படுகிறது. வெள்ளிக் கிழமைகளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் பால் தயிர் தேன் சர்க்கரை நெய் ஆகியவற்றைச் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டின் 11 மாதங்கள் யோக நிலையில் தரிசனம் தரும் நரசிம்மர் கார்த்திகை மாதம் முழுவதும் கண் திறந்த நிலையில் அருள் பாலிக்கிறார்.

இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய குன்றில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 406 ஏறிக் கடக்க வேண்டும். இந்த ஆஞ்சநேயர் நரசிம்மரைப் போலவே யோக நிலையில் நான்கு திருக்கரங்களுடன் ஒரு கையில் சங்கு ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெப மாலையுடன் அமர்ந்திருக்கிறார். ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை அம்ருதவல்லித் தாயாரிடம் கூறினால் அவர் நரசிம்மரிடம் அதை பரிந்துரைப்பார். நரசிம்மர் அக்கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி ஆஞ்சநேயரிடம் கூறுவார். எனவே இங்கு தாயார் பெருமாள் பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும். தீர்த்தம் தாயார் பெயரால் அம்ருத தீர்த்தம் என்றும் பெருமாள் பெயரால் தக்கான் குளம் மற்றும் பாண்டவ தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. கோவிலில் வைகாசை ஆகமம் முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது. யோகநரசிம்மருக்கும் தாயாருக்கும் வெள்ளிக் கிழமை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். யோக ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

பொதுவாக பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வார்கள். ஆனால் இங்கு கருவரையில் மூலவர் மட்டுமே அருள் பாலிக்கிறார். உற்சவர் பக்தோசித பெருமாள் சுதாவல்லி அமிர்தவல்லி எனும் தனது இரு தேவியருடன் மலை அடிவாரத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் தனிக் கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் மற்றும் சுதாவல்லி தாயார் தனித்தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்கள். அமிர்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன. உற்சவர் பக்தவத்ஸல பெருமாள் பக்தர்களை அன்போடு அரவணைத்துச் செல்வதால் பக்தவத்ஸலன் எனப்படுகிறார். உசிதம் என்றால் விருப்பம் எனப்படும். பக்தர்கள் விருப்பப்படி அருளவல்லவர் ஆகையால் பக்தோசிதப் பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். அருளுவதில் தக்கவராக இருப்பதால் தக்கான் எனவும் அழைக்கப்படுகிறார். நாயக்கர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.

ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம் இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து ராமரை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார். இதனை கண்ட ராமர் அனுமனிடம் நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக என அருளினார். அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

வட மதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த இந்திரத்துய்மன் என்ற அரசர் கடுமையான கோபம் கொண்டவர். எதற்கு எடுத்தாலும் இவருடைய வாய் பேசாது. அவர் கையில் இருக்கும் போர்வாள் தான் பேசும். இப்படி சினம் கொண்ட அரசர் ஸ்ரீ நரசிம்மரின் தீவிர பக்தர். அரசர் இந்திரத்துய்மன் நரசிம்மரை வணங்குவதால் நரசிம்மரை போல் கோபம் அதிகம் ஏற்படுகிறது. அதனால் அரசரை ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க சொல்லலாம் என்று அமைச்சர்களுக்குள் பேசி அதை பக்குவமாக அரசருக்கு எடுத்து சொல்ல ஒரு அமைச்சர் மன்னரிடம் சென்றார். அரசரிடம் சென்ற அமைச்சர் நரசிம்மரை வணங்கினால் வீரம் கிடைக்கும். அது போலவே ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கினால் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையானது முக்கியமானது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை தரக் கூடியவர் ஸ்ரீயோக நரசிம்மர் என்ற அமைச்சரின் பேச்சு அரசருக்கு ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க வேண்டும் என்ற மன மாற்றத்தை தந்தது. ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க தொடங்கினார் இந்திரத்துய்மன். ஒரு நாள் அரசர் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றார். மான் ஒன்று பொன்னை போன்று ஜொலித்தது. அதை கண்ட அரசர் அந்த மானை தன் அரண்மனைக்கு அழைத்து செல்ல விரும்பி மானை பிடிக்க நினைத்தார். ஆனால் அந்த மானை பிடிக்க முடியவில்லை. பொன் மான் மன்னருக்கு விளையாட்டு காட்டியது. இதனால் சோர்வடைந்த மன்னர் ஒர் இடத்தில் களைப்பாக அமர்ந்தார். அப்போது அந்த பொன் மான் மன்னர் கண் முன்னே ஒரு ஜோதியாக மாறி ஆஞ்சநேயனாக காட்சி கொடுத்து நான் என்றும் உனக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கூறி மறைந்தார். யோக நரசிம்மரின் அருளால்தான் தமக்கு அஞ்சனேயர் ஆசி கிடைத்திருக்கிறது என்று ஆனந்தம் கொண்ட அரசர் மகிழ்ந்து அனுமனுக்கு அதே இடத்தில் கோயில் கட்டினார். பிற்காலத்தில் வந்த சோழர்கள் அங்கு கற்கோவிலாகக் கட்டனார்கள்.

இங்கு பிறந்த தொட்டாச்சார்யர் ஆண்டு தோறும் காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாத இவரால் காஞ்சி செல்ல முடியவில்லை. இங்கு உள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்கு உள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். இன்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளி தொட்டாச்சார்யருக்கு அருள் பாலிக்கிறார். இந்தக் குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது. முன்பு இத்தலத்தில் பெருமாளுடன் சிவனும் கோவில் கொண்டிருந்தார். தொட்டாச்சாரியார் என்பவரே பின்பு சிவனை தனிக்கோவிலில் எழுந்தருளச் செய்ததாக வரலாறு சொல்லப் படுகிறது.

நாரயணன் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண் கூடாக வெளிப்படுத்திய அவதாரம் அது மட்டுமில்லாமல் சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க உதவிய அவதாரமும் ஆகும். பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர் வசிஷ்டர் கஸ்யபர் அத்திரி மகரிஷி ஜமத்கனி கவுதமர் பரத்வாஜர் ஆகிய சப்த ரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். விஸ்வாமித்திரர் இம்மலையில் ஒரு நாழிகை (24 நிமிடம்) நேரம் நரசிம்மரை துதித்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். இந்த ஆலயத்தில் ஒரு நாழிகை நேரம் இருந்தாலே அனைத்து துன்பமும் விலகும். இங்கு ஒரு நாழிகை நேரம் (24 நிமிடம்) தங்கியிருந்து நரசிம்மனை தரிசித்தால் அனைத்தும் கிடைக்கும் என புராண நூல்கள் சொல்லுகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து நரசிம்மரைச் சிந்தித்தாலே பலன் உண்டு என்கிறார் அஷ்டப் பிரபந்தம் பாடிய பிள்ளைப் பெருமாளையங்கார். இங்கு தானம் தர்மம் செய்வது கயிலையில் தானம் தர்மம் செய்வதற்கு சமமானது. இந்தக்குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது. பராங்குச சோழனால் இக்கோவில் கட்டப்பட்டது. வடமொழியில் பிரம்மகைவர்த்த புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய வரலாறுகள் உள்ளது. நம்மாழ்வார் பேயாழ்வார் திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் பெற்றத் தலம் இது. ஸ்ரீமந்நாத முனிகளும் மணவாள மாமுணியும் ராமானுஜரும் திருக்கச்சி நம்பிகளும் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.

ஸ்ரீ பிரசன்ன வரதராஜப் பெருமாள்

ஸ்ரீ பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரியில் அமைந்துள்ளது. இக்கோயில் பழமையான புகழ் பெற்ற விஷ்ணு கோவில் ஆகும். இக்கோவில் சூளகிரி மலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது. மூலவர் ஸ்ரீ பிரசன்ன வரதராஜப் பெருமாள். ஏழு அடி உயரத்தில் மேற்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். உத்ராயண காலத்தில் (ஜனவரி நடுப்பகுதி முதல் ஜூலை நடுப்பகுதி வரை) சூரியன் அஸ்தமனம் ஆகும் போது சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படுகிறது. இதனால் இக்கோவில் அஸ்தகிரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தாயார் பெருந்தேவி மகாலட்சுமி. தனி சன்னதியில் மேற்கு பார்த்த வரதராஜப் பெருமாளை பார்த்தபடி கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மகா மண்டபத்தின் வலது பக்கத்தில் பெருமாளின் காவலனாக அனுமன் இருக்கிறார்.

ஏழு மலை ஏழு கோட்டை ஏழு மகா துவாரங்கள் ஏழு அடி உயர பெருமாள். இந்த ஏழுமலை வாசனுக்கு இப்படி எல்லாமே ஏழு ஏழாக அமைந்திருக்கிறது. சூளகிரி மலையின் மொத்த உயரம் 3000 அடி. மலையின் ஆரம்பத்திலேயே வரதராஜப் பெருமாள் கோயில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. கோயிலின் கருவறை மற்ற கோயில்களை விட உயரம் மிகவும் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் பெருமாளும் ஆரம்பகாலத்தில் கற்பகிரக நிலை வாசலுக்கு உள் அடங்கி இருந்ததாகவும் காலப்போக்கில் வளர்ந்து மகா மண்டபத்தில் இருந்து பார்த்தால் பெருமாள் பாதி அளவே தெரியும் அளவிற்கு வளர்ந்திருப்பதாகவும் வரலாறு உள்ளது. மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் துவாபர யுகத்தைச் சேர்ந்தது. பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் சென்ற போது பல இடங்களுக்கு சென்று விட்டு இந்த சூளகிரி மலைப் பகுதிக்கு வந்தனர். அப்போது அர்ஜூனன் பெருமாளை வழிபடுவதற்காக அங்கிருந்த மலையில் கல்லெடுத்து கோயில் அமைத்து வழிபாடு செய்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூனன் பிரதிஷ்டை செய்ததற்கு அடையாளமாக இன்றும் இந்த மலையில் ஐந்து குண்டு என்ற ஐந்து குன்றுகள் உள்ளன. இது பஞ்ச பாண்டவர்கள் ஐவரைக் கூறிக்கிறது. மேலும் இந்த மலையைப் பார்த்தால் சூலம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனாலேயே இப்பகுதி சூளகிரி என அழைக்கப்படுகிறது. அர்ஜூனனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு சோழ மன்னர்கள் கருவறை கட்டியுள்ளார்கள். விஜயநகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த கிருஷ்ண தேவராயரால் முன் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் பின் கர்நாடகத்தை ஆண்ட ஹோய்சாலர்கள் மற்றும் பாளையக்காரர்கள் விஜய நகர சிற்றரசர்கள் படிப்படியாக இந்த கோயிலை விரிவுபடுத்தி வழிபட்டு வந்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசி மார்கழி தனுர் பூஜை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தப்பகுதியிலேயே இங்கு தான் மிகப்பெரிய கருடாழ்வார் வாகனம் அமைந்துள்ளது. திருவிழா காலங்களில் கருட சேவை இத்தலத்தின் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருமால்

ஒரு நாள் அக்பர் அரசவையில் அக்பரும் பீர்பாலும் பேசி கொண்டிருக்கும் போது அக்பர் பீர்பாலிடம் இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா? என்று கேட்டார். அதற்கு பீர்பால் அவருக்கு ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு அக்பர் ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததற்கு உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டுமா? நீர் கூறியது போல் ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே? அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும்? இதற்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார். பீர்பால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று அக்பர் மகிழ்ந்தார். ஒரிரு நாட்கள் சென்றன.

அக்பரும் அவர் குடும்பத்தாரும் பீர்பாலும் சில மெய் காப்பாளர்களும் கங்கை கரையை கடப்பதற்கு படகில் சென்று கொண்டிருந்தனர். அக்பரின் மூன்று வயது பேர குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த பீர்பால் படகு ஆழமான பகுதிக்கு வந்ததும் பீர்பால் பட கோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும் சைகை காட்டி விட்டு அக்பரின் பேரனை கங்கையில் தூக்கிப் போட்டு விட்டார். பதறிய அக்பர் உடனே நீரில் குதித்து தன பேரனை காப்பாற்ற துணிந்தார். அவரோடு சேர்ந்து பீர்பால் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து அக்பரையும் குழந்தையும் தூக்கி வந்து படகில் சேர்த்தான். படகில் பேரனுடன் ஏறிய அக்பர் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு பீர்பால் என்ன இது நீயா இப்படி என் பேரனை கொல்ல துணிந்தாய் என்னால் நம்ப முடிலவில்லை. சொல் என்ன காரணத்துக்காக என் பேரனை தண்ணீரில் தூக்கி போட்டீர் சொல்லும்? என்றார் கோபமாக. அதற்கு பீர்பால் அமைதியாக உங்களுக்கு திருமாலை பத்தி தெரிய வேண்டும் என்ற காரணத்திற்காக அப்படி செய்தேன் அரசே என்றார். அதற்கு அக்பர் நீ என் பேரனை தூக்கி தண்ணீரில் போட்டதுக்கும் உமது திருமாலை நான் தெரிந்து கொள்வதற்கும் என்ன சம்மந்தம்? என்று கத்தினார்.

அரசே என்னை மன்னித்து விடுங்கள். அன்று ஒரு நாள் திருமாலுக்கு சேவகர்களே இல்லையா அவர்தான் வந்து யானையை காப்பாற்ற வேண்டுமா என்று கேட்டீர்கள். அரசே சிறிது யோசித்து பாருங்கள் என்னையும் சேர்த்து இந்த படகில் உங்களுக்கு 10 சேவகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிறப்பிக்காமல் நீங்களே உங்கள் பேரனை காப்பற்ற தண்ணீரில் குதித்து விட்டீர்கள் ஏன் அரசே? உங்களை சுற்றி இருக்கும் சேவர்களான எங்களை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டார். அதற்கு என் பேரன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன். நீ திடீரென்று தண்ணீரில் அவனை தூக்கி போட்டதால் எனக்கு அவனை காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்ததே தவிர உங்களுக்கு உத்தரவிட்டு அவனை காப்பாற்ற சொல்லும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லமால் நானே குதித்து அவனை காப்பாற்றினேன் என்றார். பீர்பால் புன்னகையுடன் அரசே இந்த நாட்டை ஆளும் உங்களுக்கே இவ்வளவு அன்பு இருக்கும் போது அண்ட சாரசரங்களையும் ஆளும் எங்கள் திருமாலுக்கு எவ்வளவு அன்பு உயிர்கள் மீது இருக்கும்? அதனால்தான் எத்தனை சேவகர்கள் இருந்தாலும் தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான். அரசே இப்பொழுது தங்களுக்கு புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையை காப்பாற்றினார் என்று? என்று புன்னகைத்தார். நான் நீரில் வீசிய உங்கள் பேரனை காப்பற்ற இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன் தவறு இருந்தால் மன்னியுங்கள் அரசே என்றார். அதற்கு அக்பர் பீர்பால் நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். திருமாலைப் பற்றி தவறாக எண்ணி இருந்தேன். திருமால் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.