ஸ்ரீ பிரசன்ன வரதராஜப் பெருமாள்

ஸ்ரீ பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரியில் அமைந்துள்ளது. இக்கோயில் பழமையான புகழ் பெற்ற விஷ்ணு கோவில் ஆகும். இக்கோவில் சூளகிரி மலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது. மூலவர் ஸ்ரீ பிரசன்ன வரதராஜப் பெருமாள். ஏழு அடி உயரத்தில் மேற்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். உத்ராயண காலத்தில் (ஜனவரி நடுப்பகுதி முதல் ஜூலை நடுப்பகுதி வரை) சூரியன் அஸ்தமனம் ஆகும் போது சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படுகிறது. இதனால் இக்கோவில் அஸ்தகிரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தாயார் பெருந்தேவி மகாலட்சுமி. தனி சன்னதியில் மேற்கு பார்த்த வரதராஜப் பெருமாளை பார்த்தபடி கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மகா மண்டபத்தின் வலது பக்கத்தில் பெருமாளின் காவலனாக அனுமன் இருக்கிறார்.

ஏழு மலை ஏழு கோட்டை ஏழு மகா துவாரங்கள் ஏழு அடி உயர பெருமாள். இந்த ஏழுமலை வாசனுக்கு இப்படி எல்லாமே ஏழு ஏழாக அமைந்திருக்கிறது. சூளகிரி மலையின் மொத்த உயரம் 3000 அடி. மலையின் ஆரம்பத்திலேயே வரதராஜப் பெருமாள் கோயில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. கோயிலின் கருவறை மற்ற கோயில்களை விட உயரம் மிகவும் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் பெருமாளும் ஆரம்பகாலத்தில் கற்பகிரக நிலை வாசலுக்கு உள் அடங்கி இருந்ததாகவும் காலப்போக்கில் வளர்ந்து மகா மண்டபத்தில் இருந்து பார்த்தால் பெருமாள் பாதி அளவே தெரியும் அளவிற்கு வளர்ந்திருப்பதாகவும் வரலாறு உள்ளது. மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் துவாபர யுகத்தைச் சேர்ந்தது. பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் சென்ற போது பல இடங்களுக்கு சென்று விட்டு இந்த சூளகிரி மலைப் பகுதிக்கு வந்தனர். அப்போது அர்ஜூனன் பெருமாளை வழிபடுவதற்காக அங்கிருந்த மலையில் கல்லெடுத்து கோயில் அமைத்து வழிபாடு செய்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூனன் பிரதிஷ்டை செய்ததற்கு அடையாளமாக இன்றும் இந்த மலையில் ஐந்து குண்டு என்ற ஐந்து குன்றுகள் உள்ளன. இது பஞ்ச பாண்டவர்கள் ஐவரைக் கூறிக்கிறது. மேலும் இந்த மலையைப் பார்த்தால் சூலம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனாலேயே இப்பகுதி சூளகிரி என அழைக்கப்படுகிறது. அர்ஜூனனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு சோழ மன்னர்கள் கருவறை கட்டியுள்ளார்கள். விஜயநகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த கிருஷ்ண தேவராயரால் முன் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் பின் கர்நாடகத்தை ஆண்ட ஹோய்சாலர்கள் மற்றும் பாளையக்காரர்கள் விஜய நகர சிற்றரசர்கள் படிப்படியாக இந்த கோயிலை விரிவுபடுத்தி வழிபட்டு வந்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசி மார்கழி தனுர் பூஜை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தப்பகுதியிலேயே இங்கு தான் மிகப்பெரிய கருடாழ்வார் வாகனம் அமைந்துள்ளது. திருவிழா காலங்களில் கருட சேவை இத்தலத்தின் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருமால்

ஒரு நாள் அக்பர் அரசவையில் அக்பரும் பீர்பாலும் பேசி கொண்டிருக்கும் போது அக்பர் பீர்பாலிடம் இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா? என்று கேட்டார். அதற்கு பீர்பால் அவருக்கு ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு அக்பர் ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததற்கு உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டுமா? நீர் கூறியது போல் ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே? அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும்? இதற்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார். பீர்பால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று அக்பர் மகிழ்ந்தார். ஒரிரு நாட்கள் சென்றன.

அக்பரும் அவர் குடும்பத்தாரும் பீர்பாலும் சில மெய் காப்பாளர்களும் கங்கை கரையை கடப்பதற்கு படகில் சென்று கொண்டிருந்தனர். அக்பரின் மூன்று வயது பேர குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த பீர்பால் படகு ஆழமான பகுதிக்கு வந்ததும் பீர்பால் பட கோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும் சைகை காட்டி விட்டு அக்பரின் பேரனை கங்கையில் தூக்கிப் போட்டு விட்டார். பதறிய அக்பர் உடனே நீரில் குதித்து தன பேரனை காப்பாற்ற துணிந்தார். அவரோடு சேர்ந்து பீர்பால் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து அக்பரையும் குழந்தையும் தூக்கி வந்து படகில் சேர்த்தான். படகில் பேரனுடன் ஏறிய அக்பர் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு பீர்பால் என்ன இது நீயா இப்படி என் பேரனை கொல்ல துணிந்தாய் என்னால் நம்ப முடிலவில்லை. சொல் என்ன காரணத்துக்காக என் பேரனை தண்ணீரில் தூக்கி போட்டீர் சொல்லும்? என்றார் கோபமாக. அதற்கு பீர்பால் அமைதியாக உங்களுக்கு திருமாலை பத்தி தெரிய வேண்டும் என்ற காரணத்திற்காக அப்படி செய்தேன் அரசே என்றார். அதற்கு அக்பர் நீ என் பேரனை தூக்கி தண்ணீரில் போட்டதுக்கும் உமது திருமாலை நான் தெரிந்து கொள்வதற்கும் என்ன சம்மந்தம்? என்று கத்தினார்.

அரசே என்னை மன்னித்து விடுங்கள். அன்று ஒரு நாள் திருமாலுக்கு சேவகர்களே இல்லையா அவர்தான் வந்து யானையை காப்பாற்ற வேண்டுமா என்று கேட்டீர்கள். அரசே சிறிது யோசித்து பாருங்கள் என்னையும் சேர்த்து இந்த படகில் உங்களுக்கு 10 சேவகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிறப்பிக்காமல் நீங்களே உங்கள் பேரனை காப்பற்ற தண்ணீரில் குதித்து விட்டீர்கள் ஏன் அரசே? உங்களை சுற்றி இருக்கும் சேவர்களான எங்களை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டார். அதற்கு என் பேரன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன். நீ திடீரென்று தண்ணீரில் அவனை தூக்கி போட்டதால் எனக்கு அவனை காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்ததே தவிர உங்களுக்கு உத்தரவிட்டு அவனை காப்பாற்ற சொல்லும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லமால் நானே குதித்து அவனை காப்பாற்றினேன் என்றார். பீர்பால் புன்னகையுடன் அரசே இந்த நாட்டை ஆளும் உங்களுக்கே இவ்வளவு அன்பு இருக்கும் போது அண்ட சாரசரங்களையும் ஆளும் எங்கள் திருமாலுக்கு எவ்வளவு அன்பு உயிர்கள் மீது இருக்கும்? அதனால்தான் எத்தனை சேவகர்கள் இருந்தாலும் தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான். அரசே இப்பொழுது தங்களுக்கு புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையை காப்பாற்றினார் என்று? என்று புன்னகைத்தார். நான் நீரில் வீசிய உங்கள் பேரனை காப்பற்ற இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன் தவறு இருந்தால் மன்னியுங்கள் அரசே என்றார். அதற்கு அக்பர் பீர்பால் நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். திருமாலைப் பற்றி தவறாக எண்ணி இருந்தேன். திருமால் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.

அனந்த பத்மநாபசாமி குடைவரைக் கோவில்

உண்டவல்லி என்பது இந்தியாவில் ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இங்கு ஒரே பாறையில் செதுக்கப்பட்ட 20 அடி நீளத்தில் விக்கிரகமாக அனந்த பத்மநாபசாமி காட்சி கொடுக்கிறார். இவர் கிரனைட் கல்லால் செதுக்கப்ட்டுள்ளார். இக் குடைவரை கோவில் கி.பி 4 முதல் 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை ஆகும். இக்குடைவரைக் கோயில் 4 தளங்களை உடையது. அடித்தளம் முற்றுப்பெறாத நிலையில் காணப்படுகிறது. கூரைகளைத் தூண்கள் தாங்குமாறு குடையப்பட்டுள்ளன. அடித்தளத்தின் மண்டபம் ஏழு தலைவாயில்களைக் கொண்டுள்ளது. அடித்தளத்திற்கும் மேல் உள்ள முதல்தளம் அடித்தளத்தைவிட பெரியது. இங்கு காணப்படும் சிற்பங்கள் விஷ்ணுவின் வரலாற்றைப் பற்றி உள்ளது. இரண்டாம் தளம் 9 மீட்டர் அகலமும் ஏறக்குறைய 17 மீட்டர் நீளமும் உள்ள மண்டபத்தையும் தென்முனையில் 4 மீட்டர் சதுரமான சிறிய அறையையும் வட கோடியில் ஒரு நீண்ட சதுரமான கருவறையையும் கொண்டு விளங்குகிறது. இங்கு மூலவரான அனந்த பத்மநாபசாமி காட்சி கொடுக்கிறார்.

மூன்றாம் தளம் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. முற்றம் ஒன்று கூரையற்று காணப்படுகிறது. இந்த குன்றிலேயே வேறு சில குடைவரைகளும் காணப்படுகின்றன. அவை அனைத்தும் முற்றுப் பெறாத நிலையில் உள்ளன. இந்த குடைவரை கோயில்களிலிருந்து தக்காணத்தை ஆண்ட கொண்டவீடு அரசர்களின் கோட்டைக்கும் மங்களகிரி மலைக்கும் விஜயவாடா கனகதுர்கா கோவிலுக்கும் ரகசிய பாதைகள் இருந்ததற்கான சுவடுகள் தெரிகிறது. இந்த பாதைகளைப் பயன்படுத்தி அரசர்கள் எதிரிகள் அறியாவண்ணம் தமது படை வீரர்களை போர்க்களங்களுக்கு அனுப்பினார்கள். தற்போது இந்தச் சுரங்கப் பாதைகள் பாழடைந்து மூடப்பட்டுள்ளன. முதல் தளத்தின் அமைப்பிலிருந்து இத்தளம் பல்லவ அரசர் மகேந்திரவர்மன் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கிருஷ்ணார்ப்பணம்

ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில் அர்ச்சகரும் அவரிடம் வேலை பார்த்து வரும் சிறுவன் துளசிராமனும் காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள். துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி. கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசி ராமனுக்கு அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான். கிருஷ்ணார்ப்பணம் என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் பறித்து தொடுப்பான். பத்து பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன் ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான். கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்டப் போனால் ஏற்கனவே ஒரு புது மாலையுடன் கிருஷ்ணர் சிலை பொலிவு பெற்று இருக்கும். அதைப் பார்த்த அர்ச்சகருக்கு இது துளசிராமனின் குறும்பாக இருக்குமோ என்று சந்தேகம். அவனைக் கூப்பிட்டு துளசிராமா இதெல்லாம் அதிகப் பிரசங்கித்தனம். நீ மாலை கட்டவேண்டுமே தவிர சூட்டக் கூடாது என்று கண்டித்தார். சுவாமி நான் சூட்டவில்லை கட்டிய மாலைகள் மொத்தம் 15. அத்தனையும் உங்களிடம் கொடுத்து விட்டேன் என்ற அவன் சொற்கள் அவர் காதில் விழவேயில்லை. நாளையிலிருந்து அண்டாக்களில் தண்ணீர் நிரப்பும் பணியைச் செய் பூ கட்டவேண்டாம் கட்டளையிட்டார்.

இறைவன் செயல் என்று துளசிராமன் நீரிறைக்கும் போதும் தொட்டிகளில் ஊற்றும் போதும் கிருஷ்ணார்ப்பணம் என்று மனம் நிறைய சொல்லிக் கொள்வான். மனமும் நிறைந்தது. இப்போதெல்லாம் சிலைக்கு அபிஷேகம் செய்ய அர்ச்சகர் வரும்முன்பே அபிஷேகம் நடந்து முடிந்து கருவறை ஈரமாகி இருக்கும். நனைந்து நீர் சொட்டச் சொட்ட கிருஷ்ணர் சிலை சிரிக்கும். அர்ச்சகருக்கு கடும் கோபம் துளசிராமா நீ அபிஷேகம் செய்யுமளவுக்கு துணிந்து விட்டாயா உன்னோடு பெரிய தொல்லையாகிவிட்டதே திட்ட ஆரம்பித்தார். துளசிராமன் கண்களில் கண்ணீர். சுவாமி நான் அண்டாக்களை மட்டும்தான் நிரப்பினேன் உண்மையிலேயே கிருஷ்ணனுக்கு எப்படி அபிஷேகம் ஆனது என்று எனக்கு தெரியாது என்றான். அர்ச்சகர் மறுநாளே மடப்பள்ளிக்கு மாற்றிவிட்டார். பிரசாதம் தயாரிப்பு பணிகளில் காய் நறுக்கும் போதும் அவன் கிருஷ்ணார்ப்பணம் என்றே தன்னுடைய செய்கைகளை கடவுளுக்கே காணிக்கையாக்கினான். அன்று அர்ச்சகர் முன்னெச்சரிக் கையாக சன்னிதானத்தை பூட்டிச் சாவியை எடுத்துச் சென்று விட்டார். மறுநாள் அதிகாலையில் சந்நிதிக் கதவைத் திறக்கும் போதே கண்ணன் வாயில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் மடப்பள்ளியில் அப்போதுதான் தயாராகி நெய்விட்டு இறக்கி வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் எப்படி இங்கு வந்தது? நானும் கதவைப் பூட்டித் தானே சென்றேன் பூனை எலி கொண்டு வந்திருக்குமோ? துளசிராமனுக்கு எந்த வேலை தந்தாலும் அந்தப் பொருள் எப்படியோ எனக்கு முன்பே இங்கு வந்துவிடுகிறதே அவன் என்ன மந்திரவாதியா? என்று குழம்பினார் அர்ச்சகர். இன்று அர்ச்சகர் துளசிராமனை எதுவும் கண்ணடிக்காமல் துளசிராமா நாளை முதல் நீ வாசலில் பக்தர்களின் செருப்பை பாதுக்காக்கும் வேலையைச் செய் நீ என்று கூறினார்.

பூ நீர் பிரசாதம் என எல்லா பொருட்களும் இறைவன் சந்நிதிக்கு வந்துவிட்டன. இனி என்ன ஆகிறதென்று பார்ப்போம் என்று எண்ணியபடி இருந்தார் அர்ச்சகர். இதையும் கடவுள் விருப்பம் என்று ஏற்றுக் கொண்ட துளசிராமன். அன்று முதல் வாசலில் நின்றிருந்தான். அதே கிருஷ்ணார்ப்பணம் என்றே அந்த வேலையையும் செய்து கொண்டு இருந்தான். இன்றும் அர்ச்சகர் பூட்டி சாவி கொண்டு சென்றார். மறுநாள் காலை சந்நிதிக் கதவு திறந்ததும் அர்ச்சகர் கண்ட காட்சி உடலெல்லாம் அவருக்கு நடுங்கத் தொடங்கியது.
இதென்ன கிருஷ்ணா உன் பாதங்களில் ஒரு ஜோடி செருப்பு பாத கமலங்களின் பாதுகையின் பீடத்தில் சாதாரண தோல் செருப்பு எப்படி வந்தது? துளசிராமன் எப்படிப் பட்டவனானாலும் சந்நிதிப் பூட்டைத் திறந்து இப்படி செருப்பை வைக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆச்சரியம் அச்சம் அர்ச்சகருக்கு வேர்த்துக் கொட்டியது. அப்போது எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அர்ச்சகரே பயப்பட வேண்டாம் அந்த துளசிராமனுக்கு நீ எந்த வேலை தந்தாலும் அவன் கிருஷ்ணார்ப்பணம் என்று எனக்குக் காணிக்கையாக்கி விடுகிறான். அப்படி அன்போடு அவன் தரும் காணிக்கையை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன். நினைவெல்லாம் எங்கோ இருக்க செய்யும் பூஜையை விட எதை செய்தாலும் எனக்குக் காணிக்கையாக்குபவனின் அன்பை நான் ஏற்றுக்கொண்டேன். துளசிராமன் ஒரு யோகி அவன் அன்பு எனக்குப் பிரியமானது என்றார் பகவான். கிருஷ்ண பகவானின் இந்தக் குரல் கேட்டு வாசல் பக்கம் ஓடிவந்து அந்த யோகி துளசிராமனின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் அர்ச்சகர்

இந்தக் கதை கேரளா குருவாயூரப்பன் கோவிலில் நடந்த உண்மை சம்பவம்.

விஷ்ணு சிலை

பாந்தவ்கர் தேசிய பூங்காவில் உள்ள விஷ்ணு சிலை

மத்திய பிரதேசத்தின் உமாரியா பகுதியில் உள்ள பாந்தவ்கர் தேசிய பூங்கா புராண மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தேசிய பூங்காவின் காட்டுப்பகுதியில் விஷ்ணு கிழக்குப்பக்கம் தலை வைத்து மிகவும் அமைதியான முறையில் படுத்துக் கொண்டிருக்கிறார். விஷ்ணுவின் சிலை 12 மீட்டர் நீளத்துடன் ஒற்றை பாறையில் செதுக்கப்பட்டது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த விஷ்ணு படுத்த நிலையில் ஒரு காலை நீட்டிய படியும் ஒரு காலை மடக்கி வைத்தபடியும் இருக்கிறார். விஷ்ணுவின் தலைக்கு பின்புறம் சிவலிங்கம் ஒன்று உள்ளது.

ராமாயண இதிகாசத்தில் இந்தப் பகுதியைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. இலங்கை போருக்குப் பிறகு இந்த இடம் ராமரால் லட்சுமணனுக்கு பரிசளிக்கப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளது. புராண நூல்களின் படி திரேதா யுகம் காலத்திலிருந்தே இந்த இடத்தில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மேலும் அந்தக் காலங்களில் உள்ள நாகரிகங்களின் எடுத்துக்காட்டுகளாக நிறைய குகை ஓவியங்கள் மற்றும் பிற அடையாளங்கள் உள்ளன. பூங்காவின் உள்ளே உள்ள கோவில் கட்டமைப்புகள் அக்காலத்தில் விஷ்ணு வழிபாடுகளும் சிவலிங்க வழிபாடுகளும் ஒன்றாகவே இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ராமாயண கதைகளின் சிற்பங்கள் மற்றும் பந்தாவதீஷ் கோவில் கருவூலம் விஷ்ணுவின் அவதாரமான வராக அவராதம் மீன் அவதாரம் ஆமை அவதாரம் ஆகிய மூர்த்திகள் உள்ளது. பூங்கா மற்றும் பூங்காவைச் சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலும் ராமாயண காலத்திலிருக்கும் சிற்பங்களாக உள்ளது.