சீதை ஆகாயத்தில் சென்று கொண்டிருக்கும் போது தைரியமாக ராவணனிடம் பேச ஆரம்பித்தாள். உன் குலத்தின் பெருமைகளையும் உன்னுடைய வீரப்பரதாபங்களையும் கம்பீரமாக என்னிடம் சொல்லி பெரிய சூரனைப் போல் நடந்து கொண்டாய். ஆனால் ராமருடன் யுத்தம் செய்ய தைரியம் இல்லாமல் ஒரு கோழையைப் போல் தன் துணைவன் இல்லாத நேரத்தில் ஒரு பெண்ணை மாறுவேடம் தரித்து ஏமாற்றி தூக்கிச் செல்கிறாய். இது தான் உனது வீரமா? உனக்கு வெட்கமாக இல்லையா? என்னை காப்பாற்ற வந்த வயதான ஒரு பறவையை கொன்ற கோழை நீ. உன்னுடைய இந்த கீழ்தரமான செயலினால் உன் குலத்திற்கே நீ அவமானத்தை தேடிக் கொடுத்திருக்கிறாய். என்னை தூக்கிச் சென்று உன்னால் நிம்மதியாக இருக்க முடியும் என்று எண்ணுகிறாயா? உன்னுடைய பதினான்காயிரம் ராட்சசர் படைகளையும் என் ராமர் ஒருவராக நின்று அனைவரையும் அழித்திருக்கிறார் ஞாபகம் வைத்துக்கொள். என் ராமரின் கண்ணில் பட்ட அடுத்த கனம் அவருடைய வில்லில் இருந்து வரும் அம்புகள் உன்னை கொன்று விடும். தந்திரங்கள் மூலமாகவும் மாயா ஜாலங்கள் மூலமாகவும் தப்பிப் பிழைப்போம் என்று கனவு காணாதே. நிச்சயமாக நீ அழிந்து போவாய் என்று ராவணனை திட்டிக்கொண்டே இருந்தாள்.
சீதை பேசிய எதையும் ராவணன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சீதையை அடைந்து விட்டோம் என்று தன் நினைத்து வந்த செயலை நிறைவெற்றி விட்ட மகிழ்ச்சியில் இருந்தான் ராவணன். ரதம் வில்லில் இருந்து சென்ற அம்பு போல் இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில் கீழே மலை மீது வேடர்கள் சிலரையும் வானரங்கள் சிலரைக் கண்டாள் சீதை. ராமர் தன்னை தேடி வந்தால் அவருக்கு வழி தெரிய வேண்டும் என்று தன்னுடைய ஆபரம் ஒன்றை எடுத்து வானரங்கள் இருக்கும் மலையை நோக்கி வீசினாள் சீதை. வானத்தில் ராட்சசன் பிடியில் இருக்கும் பெண் தங்களை நோக்கி எதோ ஒன்றை தூக்கி எறிவதை வானரங்கள் பார்த்து அதனை எடுக்க ஓடினார்கள்.
ரதம் பல காடுகளையும் மலைகளையும் கடலையும் தாண்டி இலங்கையை சென்றடைந்தது. துயரத்தில் இருந்த சீதையுடன் தன் அந்தப்புரத்தை அடைந்தான் ராவணன். அங்கிருக்கும் ராட்சச பணிப்பெண்களை அழைத்தான். இவளிடம் மிகவும் மரியாதையாகவும் பணிவுடனும் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இவளை மிகவும் ஜாக்கிரதையாகவும் ஆண்கள் யாரும் இவளிடம் பேசாமலும் இவள் அருகில் நெருங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இவள் கேட்கும் வைர வைடூரியங்கள் முத்து என்று எது கேட்டாலும் கொடுத்து அவளை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும். இவள் வருத்தப்படும்படி யாரேனும் நீங்கள் நடந்து கொண்டால் உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் அனைத்து மரியாதைகளும் இவளுக்கும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சீதை கிடைத்து விட்ட பெருமிதத்தில் அங்கிருந்து கிளம்பினான். அரண்மனைக்கு வந்த ராவணன் சாமர்த்தியமான இரண்டு ஒற்றர்களை அழைத்தான். நீங்கள் இருவரும் ராமர் வாழும் காட்டிற்கு செல்லுங்கள். ராமர் எனக்கு எதிரி எப்படியாவது அவன் அழிய வேண்டும். ராமன் இருக்கும் வரையில் எனக்கு நிம்மதியான தூக்கம் இல்லை. ராமன் என்ன செய்கிறான் என்று மறைந்திருந்து பார்த்து தினந்தோறும் தகவல் தெரிவிக்கவேண்டும். உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது தைரியமாக செல்லுங்கள் என்று உத்திரவிட்டான்.
சீதையின் குரலைக் கேட்ட கழுகு அரசனான ஜடாயு சீதையை யாரோ தூக்கிச் செல்கின்றார்கள் என்று உணர்ந்து கொண்டான். வேகமாக பறந்து சென்று ரதத்தின் முன்பாக நின்று ராவணனை தடுத்தான் ஜாடாயு. இதனை கண்ட சீதை ஜடாயுவை பார்த்து இவன் ராட்சசர்களுக்கு தலைவன் இலங்கை அரசன் ராவணன் ஆயுதங்கள் பல வைத்திருக்கின்றான். நீங்கள் எதிர்த்தால் உங்களை கொன்று விடுவான். உங்களால் என்னை மீட்க முடியாது. ராமர் இங்கு வந்ததும் அவரிடம் இந்த செய்தியை சொல்லி விடுங்கள் என்று கதறியபடியே கூறினாள். ராவணன் ஜடாயுவை பார்த்து யார் நீ சிறிய பறவையான நீ என்னை தடுக்கின்றாய் தூரமாக விலகிப்போ என்று விரட்டினான்.
ஜடாயு ராவணனிடம் எனது பெயர் ஜடாயு கழுகு ராஜன். நீண்ட நாள் உன்னைப் போல் ஒரு நாட்டின் அரசனாக வாழ்ந்தவன். பெண்களை காப்பது அரசனுடைய கடமை. அதற்கு மாறாக அரசனாகிய நீ இத்தகைய கீழ்தரமான காரியங்களை செய்யக்கூடாது. சீதை யார் உன்று உனக்கு தெரியுமா? ஒரு ராஜ குமாரியை அவளது துணைவன் இல்லாத போது இப்படி தூக்கிச் செல்லக்கூடாது. உடனே அவளை விட்டுவிட்டுப் போ இல்லை என்றால் அழிந்து போவாய். ராமர் மீது உனக்கு பகை இருந்தால் அவருடன் யுத்தம் செய். அதை விட்டு ராமர் இல்லாத சமயத்தில் வந்து சீதையை தூக்கிச் செல்கிறாய். இது தான் உன்னுடைய வீரமா? ராமருடன் யுத்தம் செய்ய உனக்கு தைரியம் இல்லை என்று எனக்கு தெரிந்து விட்டது. ராமருடன் நீ யுத்தம் செய்தால் ஏற்கனவே ராமரின் கைகளால் அழிந்த உனது சேனைப் படைகளாக இருந்த ராட்சசர்களுக்கு நிகழ்ந்த கொடுரமான மரணம் தான் உனக்கு நிகழும். யமனுடைய பாசக்கயிறு உன் கழுத்தின் மேல் விழுந்து உன்னை இழுத்துச் செல்ல தயாராக இருப்பதை நீ அறியாமல் இருக்கிறாய். நான் மிகவும் வயதான முதியவன். ஆயுதம் எதும் இன்றி இருக்கிறேன். நீயோ சிறுவன் கவசம் பூண்டு வில் அம்பு ஆயுதங்களுடன் இருக்கிறாய். சீதையுடன் நீ இங்கிருந்து செல்ல நான் உன்னை விட மாட்டேன். என்னை மீறி சீதையை தூக்கிச் செல்ல உன்னால் முடியாது. கோழையே இதோ உன் முன் நிற்கின்றேன். தைரியம் இருந்தால் என்னுடன் யுத்தம் செய். நான் உயிரோடு இருக்கும் வரையில் உன்னால் சீதையை தூக்கிச்செல்ல முடியாது. எனக்கு பயந்து ஓடாதே நில் என்று கர்ஜித்தான் ஜடாயு.
ஜடாயுவின் பேச்சைக் கேட்ட ராவணன் கோபத்தில் ஜடாயுவை தாக்க ஆரம்பித்தான். கூரிய அஸ்திரங்களை ஜடாயு மீது விடுத்தான் ராவணன். சிறகால் செய்யப்பட்ட மலை போல் நின்ற ஜடாயு தனது கூரிய நகங்களால் அனைத்தையும் தடுத்து ராவணனின் வில்லை உடைத்து ராவணனை தாக்க ஆரம்பித்தான். மிகவும் முதியவனான ஜடாயு ராவணனின் எதிர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் விரைவில் சோர்ந்து போனான். அழுத முகத்துடன் இருந்த சீதையை கண்டதும் மீண்டும் புத்துயிர் பெற்றது போல் எழுந்த ஜடாயு மீண்டும் ராவணனை ஆக்ரோசமாக தாக்க ஆரம்பித்தான். ராவணனின் கைகளை ஒவ்வொன்றாக தனது அழகால் கொத்தி துண்டாக்கி வீசி எறிந்தான் ஜடாயு. ராவணனுக்கு புதிது புதிதாக கைகள் முளைத்துக் கொண்டே இருந்தது. வெகு நேரம் நடந்த யுத்தத்தில் ராவணனின் கை ஓங்கியது. மிகவும் சோர்வடைந்திருந்த ஜடாயுவின் இறகுகளையும் கால்களையும் வெட்டி எறிந்தான் ராவணன். இறகுகளும் கால்களும் இழந்த ஜடாயு ராவணனை எதிர்க்க இயலாமல் கீழே விழுந்தான். ஜடாயுவை கண்ட சீதை என் கணவருக்கு இன்னோரு தந்தையாக வந்தீர்களே. தசரதர் மீண்டும் உயிர் பெற்று வந்ததை போல் யுத்தம் செய்து இப்போது எனக்காக உயிரை விடப் போகின்றீர்களே ராமா எங்கிருக்கின்றார்கள். லட்சுமணா எங்கிருக்கிறாய் காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே இருந்தாள். ஜடாயு பறவை நிற்க கூட முடியாமல் விழுந்து கிடப்பதை கண்டு திருப்தி அடைந்த ராவணன் சீதையுடன் ஆகாய மார்க்கமாக சென்றான்.
ராமர் லட்சுமணனுடன் வந்து விடுவார் என்று காத்திருந்த சீதை தனது குடிலில் முன் வந்திருக்கும் தபஸ்வி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பத்துடன் யோசித்தாள். பதில் ஏதும் சொல்லவில்லை என்றால் கோபத்தில் அவர் சாபம் ஏதும் விட்டு விடுவாரோ என்ற பயத்தில் அழுத முகத்தை துடைத்துக்கொண்டு முறைப்படி வரவேற்று உபசாரம் செய்தாள். ராவணன் கேட்ட கேள்விகளுக்கு நடந்தவற்றை பதிலாக சொல்லிக்கொண்டே ராமர் வந்து விட்டாரா என்று வாசலை பார்த்துக் கொண்டே இருந்தாள். ராவணன் ராட்சச குலத்தின் பெருமைகளை சொல்லியும் ராமனை இகழ்ந்தும் பேசினான். இலங்கையின் பெருமைகளை சொல்லியும் தனது அரண்மனையின் பெருமைகளையும் சொன்னான். நான் ஆகாயத்தில் நின்று இந்த மண்ணுலகை இரு கைகளாலும் தூக்குவேன். யமனுடன் யுத்தம் செய்து யமனையும் கொல்வேன். கூரிய அம்புகளை விட்டு சூரியனின் கதிர்கள் இங்கு வருவதையும் தடுப்பேன். விருப்பப்படி எனது உருவத்தை என்னால் மாற்றிக்கொள்ளும் சக்தி படைத்தவன் நான். காட்டில் சுற்றி திரியும் ராமனை விட்டு என்னுடன் வந்து விடு. உன்னை என்னுடைய அரண்மனைக்கு பட்டத்து அரசியாக்கி விடுகிறேன். தேவலோகத்தில் உள்ள தேவர்களும் தேவதைகளும் உனக்கு அடிமையாக இருப்பார்கள். ஈரேழு பதினான்கு உலகத்திற்கும் நீ அரசியாக இருப்பாய் என்று ஆசை காட்டினான் ராவணன்.
சீதை கோபத்தில் கத்த ஆரம்பித்தாள். மாமலையைப் போல அசைக்க முடியாதவர் என் கணவர். அனைவராலும் விரும்பப்படும் சத்தியம் தவறாதவர். ஐந்து புலன்களையும் வென்ற கருணை உள்ளம் கொண்டவர். ஆண் சிங்கம் போன்ற அவரிடம் பெண் சிங்கம் போன்று இருக்கும் என்னை அடைய முயலும் குள்ள நரியே சூரியனின் கதிர்களை எவராலும் தொட முடியாது. அது போல் உன்னால் என்னை தொட கூட முடியாது. உனது ஆயுளை சீக்கிரமாக முடித்துக்கொள்ள முடிவெடுத்து விட்டாய் என்று நினைக்கிறேன். எனது கணவர் இங்கு வருவதற்குள் ஓடிவிடு. இல்லையேல் அவரின் அம்புக்கு நீ இரையாவாய். இந்த குடிலை விட்டு வெளியே போ என்று கத்தினாள்.
சீதையின் பேச்சைக் கேட்ட ராவணன் தனது ராட்சச உருவத்தை அடைந்தான். எனது பெருமைகளையும் வீரப்பிராதபங்களை கூறினேன். அனைத்தையும் கேட்ட நீ நான் சொல்வதற்கு உடன் படவில்லை என்றால் நீ மிகவும் கர்வம் கொண்டவள் என்று நினைக்கிறேன். உன்னை நான் இங்கிருந்து தூக்கிச் செல்கிறேன். உன் ராமன் உன்னை எப்படி வந்து காப்பாற்றுகிறான் என்று நான் பார்க்கிறேன் என்றான். சீதை இருக்கும் குடிலை சுற்றி லட்சுமணன் வரைந்த கோடு மீறி சீதை வெளியே வந்தால் தான் அவளை தூக்கிசெல்ல முடியும். விருப்பமில்லாத பெண்ணை தொட்டால் தன் தலை வெடித்து விடும் என்ற தன் முன்வினையால் பெற்ற சாபத்தினால் சீதையை தொடாமல் தூக்க வேண்டும் என்பதால் அந்த குடில் இருக்கும் பூமியை அப்படியே தன் மந்திர சக்தியால் தூக்கி தனது ரதத்தில் வைத்து ரதத்தை செலுத்த கட்டளையிட்டான் ராவணன்.
சீதை கதற ஆரம்பித்தாள். ராமா எங்கு சென்றீர்கள்? என்னை காப்பாற்ற வாருங்கள். லட்சுமணா அண்ணனின் தலை சிறந்த பக்தனே உன்னை தகாத வார்த்தைகளின் திட்டி உன் பேச்சை கேட்காமல் உன்னை துரத்தினேனே. மரங்களே செடிகளே என்னை இந்த ராட்சசன் தூக்கிச் செல்வதை ராமர் வந்ததும் சொல்லுங்கள் என்று சத்தமாக கதறிக்கொண்டே இருந்தாள்.
ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் முன்பு சுகப்பிரம்மர் வணங்கி நின்றிருந்தார். பாரத பூமியில் பக்தி குறைந்திருந்த அந்த சமயத்தில் நாராயணன் சுகப்பிரம்மரை பூமியில் அவதரிக்க ஆணையிட்டார். மறுபடியும் ஒரு கருவறைக்குள் புக விரும்பாத சுகப்பிரம்மர் சுயம்புவாக பூமியில் காசியில் உள்ள கங்கை கரையில் தோன்றினார்.
புண்ய சேத்ரங்களிலேயே சிறந்த காசி மாநகரில் தமால் எனும் பெரியார் ஒருவர் தன் மனைவியுடன் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். இருவரும் நாள் தோறும் ஒருவருக்காவது அன்னதானம் செய்தும் தான் நெய்த துணிகளை தானமாக வழங்கி விட்டு தான் உணவு அருந்துவார்கள். இருவருமே தங்களுக்கென ஒரு குழந்தை இல்லை என பெரிதும் வருந்தினார்கள். ஒருநாள் விருந்தினராக வந்த பெரியவர் ஒருவர் அவர்களது சேவையை கண்டு வியந்து நீங்கள் செய்யும் இந்த விருந்தோம்பல் உங்களோடு நின்று விட இறைவன் விடமாட்டார். இந்த மாபெரும் கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களுக்கு ஒரு மகனை அளிப்பார் என்று வாழ்த்திவிட்டு சென்றார். தமால் ஒரு நாள் குழந்தை இல்லையே என மனம் நொந்தவராக துணி நெய்வதற்கான நூல் சுருள்களை அலசுவதற்காக கங்கைக்கு கரைக்கு சென்றார். அங்கும் பலர் பகட்டான வழிபாடுகளைச் செய்வதைக் கண்டு காசிக்கு வந்தும் உலக ஆசைகளில் உழல்கிறார்களே என வருந்தி நினைக்கையில் அவரின் கையில் இருந்த நூல் சுருள் கங்கை நதியோடு சென்றது. இந்த நூல் இருந்தால் துணி நெய்து ஐம்பது பேருக்கு கொடுக்கலாமே என வருந்தியவராக அதைத் தொடர்ந்து கரை ஓரமாகவே ஓடினார். அந்த நூல் சுருள் கங்கையின் வேகத்தில் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் சென்று மறைந்தது. அவர் நின்ற இடத்துக்கு அருகே ஒரு பர்ணசாலை இருந்தது. வருத்ததுடன் இருந்த தமால் இறைவனை தியானிப்போம் என்று அங்கே அமர்ந்தார்.
கங்கைக் கரையில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார் தமால். நாராயணனின் ஆணைக்கினங்க சுயம்புவாக தோன்றிய சுகப்பிரம்மர் குழந்தையாக அழும் குரல் கேட்டுக் கண் விழித்தார் தியானத்தில் இருந்த தமால். வேறு யாரும் அருகில் இல்லாத நிலையில் தனியாக அழுது கொண்டிருந்த குழந்தையைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். அவரால் எடுத்துவரப்பட்ட குழந்தையைக் கண்டு அவரது மனைவியும் மனம் மகிழ்ந்தார். அக்குழந்தைக்கு கபீர் எனப் பெயரிட்டனர். கபீர் என்றால் பெரிய என்று பொருள். குழந்தை கபீரின் விளையாட்டுகள் கூட தெய்விக மணம் கமழ்ந்த வண்ணம் இருந்தன. தளர்நடை போட்ட பருவத்திலேயே தந்தையிடம் நெசவும் கற்றான். எந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் சிறுவன் தெய்வத்தின் பெயரையே உச்சரித்துக் கொண்டே செய்தான். நல்ல குரல் வளமும் பாடும் திறமையும் பெற்று இறைவனைப் பாடி வளர்ந்து வந்தார். சிறுவயதிலேயே கபீருக்கு அவனது பெற்றோர் மணமுடிக்க விரும்பினர்.
முன்பொரு காலத்தில் சுகப்பிரம்மரை மணக்க முயன்று தோற்ற ரம்பை அவர் பூவுலகில் பிறந்திருப்பது அறிந்து அவரைப் பின்பற்றி அவரது உறவினருக்கே சீந்தரா எனும் மகளாகப் பிறந்திருந்தாள். அவளின் அழகைக் கண்டு கபீரின் பெற்றோர் அவளை கபீருக்கு திருமணம் பேசி முடித்தனர். திருமணத்துக்கு முன் தங்களது மத வழக்கப்படி சுன்னத்து செய்ய அவரது உறவினர்கள் முயன்றனர். சுன்னத் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர்களுடன் வாதிட்டுக் கபீர் வென்றார். இதனால் கோபமடைந்த உறவினர்கள் மதச்சடங்குகளை அவமதிக்கும் கபீரை வீட்டை விட்டுத் துரத்த வேண்டுமெனக் கூறினர். கபீரும் வீட்டைத் துறந்து ஓட முயன்றார். கபீரை இழக்க மனமின்றி அவரது பெற்றோர் அவரைத் தடுத்து வீட்டிலேயே தங்கித் தறி நெய்யும்படி கூறினார்கள்.
நல்ல குரல் வளமும் பாடும் திறமையும் பெற்ற கபீர்தாஸர் ராமரின் வரலாற்றுப் பெருமையை பஜனை வடிவமாக பாடலாக பாடி வளர்ந்து வந்தார். பாடுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்ததால் நெசவு செய்வதில் சற்றும் விருப்பமின்றி இருந்தார். கபீருக்கு குருவென்று ஒருவரும் இல்லை. இதனால் இவருக்கு எழுதவும் படிக்கவும் தெரியாமல் போனது. ஆனாலும் ஞானம் வளர்ந்தபடியே இருந்தது. திருமணப் பேச்சு மீண்டும் ஆரம்பித்தது. சுன்னத்து செய்து கொள்ளாதவனுக்கு பெண் கொடுக்கமாட்டோம் எனப் பெண் வீட்டார் கூறிவிட்டார்கள். கபீரின் தாய் தந்தையர் மனம் வெதும்பினர். சீந்தராவின் தந்தையின் கனவில் தோன்றிய இறைவன் உன் மகளைக் கபீருக்கே மணம்முடி எனக்கூறினார். இதனால் தந்தை குழப்பமடைந்த நிலையில் இருந்தார். சீந்தராவும் கபீரையே மணப்பேன் இல்லை என்றால் வேறு ஒருவரை மனதாலும் நினைக்க மாட்டேன் எனக்கு திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தாள். இறுதியில் இறைவனே ஒரு முதியவர் வேடத்தில் வந்து ஒவ்வொருவரிடமும் சமாதானமாகப் பேசி திருமணத்தை செய்து வைத்தார்.
குடும்ப வாழ்வில் ஈடுபட்டாலும் இவருடைய மனம் ஆன்ம ஞானத்தைத் தேடியபடி இருந்தது. அந்தத் தேடல் அவர் இயற்றிய பாடல்களிலும் பிரதிபலித்தது. இஸ்லாமிய முறைப்படி வளர்ந்தாலும் ராமரின் மீது பக்தி கொண்டு வாழ்ந்தார். தமாலின் வீட்டில் இரவும் பகலும் தறியின் இசையும் கபீரது இசையும் இறைவனது புகழைப் பாடியபடி இருந்தன. ஒருநாள் மெய்மறந்து கபீர் பாடும் போது அவரது கை நெசவு செய்வதை நிறுத்தி விட்டது. பக்தனின் பணியில் இறைவனே அமர்ந்து தறியை இழுத்தார். தறி தானாகவே நகர்ந்து துணிகளை நெய்தது. ஒரு முழம் துணி நெய்து விட்டு பின்பு கபீர் தியானத்தில் அமர இறைவன் இன்னொரு முழம் நெய்தார். காலையில் வந்து கண்ட அவரது தாயார் சோம்பேறி இரவெல்லாம் நெய்தது இரண்டே முழம்தானா இதை விற்றுப் பணம் வந்தால் தான் உனக்கு இன்று உணவு எனக் கடிந்தார்.
கபீரும் தறியிலிருந்து துணியை எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்குச் சென்றார். அந்த அழகிய துண்டை எவரும் வாங்கவில்லை. மனம் தளர்ந்த கபீர் வீட்டிற்கு திரும்பி வரும் போது ஓர் அந்தணர் அந்தத் துணியைப் பிடுங்கிக் கொண்டு ஓடினார். கபீர் ஓடி அவரை வழி மறித்துத் துணியைப் பிடித்து இழுத்தார். அந்த இழுபறியில் துணி இரண்டாகக் கிழிந்து விட்டது. தான் கிழித்த துணியைத் தானே எடுத்துக் கொள்வதாகக் கூறிய அந்தணர் சில சோழிகளை அதற்கு விலையாகத் தந்தார். கோபம் கொண்ட கபீர் அந்த சோழிகளை வீசி எறிந்தார். அந்தணரோ என்னிடம் வேறு ஒன்றுமில்லை. அந்தத் துண்டை இலவசமாக தந்தால் நான் பிருந்தாவனம் செல்வதால் அதைக் கண்ணனுக்கு சாத்தி மகிழ்வேன் என்றார். அதை விற்றுப் பணம் எடுத்துச் செல்லாவிட்டால் தான் பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக நேரும் என்பதால் கபீர் தர மறுத்தார். ஆனால் அந்தணரோ ராமரின் திருநாமத்தின் பெருமையையும் அதை காசி விஸ்வநாதரே காசியில் இறப்பவர்கள் அனைவருக்கும் ராம நாமத்தை உபதேசித்து முக்தியளிக்கிறார் என்பதையும் கூறி தானத்தின் பயனைப் பற்றி எடுத்துக்கூறி நீண்டதொரு பிரசங்கம் செய்து அவரது தயக்கத்தைப் போக்கினார். இடைவிடாது ராம நாமத்தை ஜபித்து பக்தி மார்க்கத்தின் வழியாக இறைவனை அடைந்து கொள். அதற்கு சற்குரு ஒருவரைத் தேடி அடைந்து கொள் என்று சொல்லி ஒரு துண்டுத் துணியுடன் மறைந்து விட்டார்.
கபீர் அந்தணர் கூறியபடி ராம நாமத்தினையே துணையாகக் வைத்துக் கொள்வோம் என எண்ணியவராக மீதியிருந்த ஒரு முழத்துண்டை மடித்து எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தார். கபீரின் எதிரே ஒரு முஸ்லீம் முதியவர் வந்தார். கபீரை நெருங்கி ஐயா குளிர் அதிகமாக இருக்கிறது. நீங்கள் சாதுக்களுக்கு தான தருமங்கள் அளிப்பவர் என்று கேள்விப்பட்டேன். இந்த ஒரு முழம் துணியைத் தந்தால் தலையில் கட்டிக் கொண்டு பனியிலிருந்து காத்துக் கொள்வேன் என்றார். சற்று முன் அந்தணர் கூறியவற்றை மனத்தில் நினைத்தவராக கபீர் ஜெய் ஸ்ரீராம் எனக்கூறி அந்தத் துண்டை முதியவரிடம் தந்தார். அதற்கு அந்த முதியவர் அல்லாவின் பெயரை சொல்லாமல் ஏதோ ஒரு மனிதனின் பெயரைச் சொல்கிறாயே. உன்னிடம் வாங்க மாட்டேன் எனக்கூறி கபீரின் பெற்றோரிடம் இதனை சொல்வதற்கு கபீரின் வீட்டிற்கு விரைந்தார். தாய் அடிப்பாள் என்று பயந்த கபீர் ஒரு பாழடைந்த வீட்டில் ஒளிந்து கொண்டார். உன் மகன் குலத்தைக் கெடுக்க வந்திருக்கிறான். இன்று காலையில் யாரோ ஓர் அந்தணருக்கு ஓர் அழகான துணியை கொடுத்தான். நான் எனக்குக் கொடுக்கச் சொன்னேன். இரண்டாகக் கிழித்து ஆளுக்குப் பாதி என்கிறான். நான் இத்தனை சின்னத் துண்டு வேண்டாம் என்றேன். என் தாயாரிடம் போய்க் கேள் பெரிய துணியாகக் கிடைக்கும். ஆனால் நான் தானம் செய்ததைச் சொல்லாதே என்று பாழடைந்த இந்த வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று கபீரை பற்றி குற்றம் சொல்லி விட்டு சென்றார்.
துணியை விற்ற பணத்துடன் கபீரை எதிர்பார்த்த அவரது தாயார் இதனை கேட்டதும் கபீரை பிரம்பினால் இரண்டு அடி அடித்தார். கபீர் ஹரே ராம் ஹரே ராம் எனக் கதறினார். அந்த அடிகள் இறைவனது முதுகிலும் பட்டன. இருவருக்கும் காட்சி கொடுத்த இறைவன் அம்மா நீ பாக்யவதி கபீர் பரம ஞானி எனது மெய்த்தொண்டன். நீ அவனை அடித்தது எனது முதுகிலும் பட்டிருக்கிறது பார் என்று காட்டினார். இறைவனைக் கண்டு மூர்ச்சையுற்ற தாயாரை தெளிவித்து விட்டு தகுந்த குருவை அடைந்து பக்தி மார்க்கத்தைப் பின்பற்றும்படி கூறிவிட்டு மறைந்தார்.
வாரணாசியில் ராமானந்தர் என்ற பெரும் ஞானி பலரைப் பக்திமார்க்கத்தில் வழி நடத்தி வந்தார். கபீர் அவரிடம் உபதேசம் பெற சென்றார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரென அவரை ராமானந்தரின் சீடர்கள் மடத்துக்குள்ளேயே விடாமல் கபீரை தடிகளால் அடித்துத் துரத்தினார்கள். அடிகளையும் பொறுத்துக் கொண்டு கபீர் அங்கேயே உட்கார்ந்து விட்டார். ராமானந்தரை சந்திக்க விடாமல் கபீர் ஒரு திருடன் எனக் கூறி அங்கிருந்து அடித்து விரட்டி விட்டனர். ராமானந்தரிடம் தீட்சை பெற கபீருக்கு ஒரு நல்ல யோசனை உதித்தது. ராமானந்தரோ விடியற்காலையில் கங்கையில் நீராட வருகிறார். அந்தப் படியிலே நாம் படுத்திருந்தால் இருளிலே மிதித்து விடுவார். பெரியோர்கள் தவறு செய்தாலும் நன்மை செய்தாலும் இறைவனுடைய திரு நாமத்தையே சொல்லுவார்கள். அதையே நாம் உபதேசமாகவும் திருவடி தீட்சையாகவும் கொள்வோம் என்று திட்டமிட்டு அன்று இரவே கங்கை படிக்கட்டிலே சென்று படுத்துக் கொண்டார். அன்றிரவு ஸ்ரீராம லட்சுமணர்கள் அந்த மடத்தை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறுவதைப் போல ராமானந்தர் கனவு கண்டார். உடனே அலறிக்கொண்டு எழுந்து கங்கைக்கரை நோக்கி சென்றார். கபீரை இருட்டில் மிதித்துவிட்ட ராமானந்தர் வழக்கப்படி ராம் ராம் என உச்சரித்த வண்ணம் கங்கையில் இறங்கி நீராட சென்று விட்டார். அப்போது ராமனந்தர் செபித்த ராம ராம என்ற திருநாமமே கபீருக்கு முதல் வேத பாடமானது.
ராம மந்திரத்தை தனது குருவின் பாத தீட்சையாக ஏற்றுக் கொண்ட கபீர் வீட்டுக்குத் திரும்பி நெற்றித் திலகமிட்டு துளசி மாலையணிந்து ராம நாமத்தை ஜபம் செய்ய ஆரம்பித்தார். சிறு வயதிலேயே பகவானைப் பற்றி உரையாடல்கள் நிகழ்த்தினார். இதனால் ஊரில் இருக்கும் தன் குல மக்களால் தண்டிக்கப்பட்டார். இருந்தும் தன் நிலையிலிருந்து மாறவே இல்லை. கபீரின் ராமநாம ஜபம் செய்வதினால் அவருக்கு எதிராக முஸ்லீம்கள் நமது மதத்திற்கு எதிரானது என்று அவருடன் வாதிட்டனர். அவர்களுடன் வாதிட்ட கபீர் அவர்களை ராமனும் ரஹீமும் ஒன்றே என்பதையும் இறைவன் ஒருவனே என்றும் வாதிட்டு ஒப்புக்கொள்ள வைத்தார்.
அக்காலத்தில் மச்சேந்திரநாதர் என்ற ஒரு மகான் இருந்தார். அவருடைய சீடர் கோரக்நாதர் என்பவர் சில சித்திகள் கைவரப்பெற்றார். அதனாலேயே கர்வம் கொண்டவராக ஊர் ஊராகச் சென்று அனைவரையும் வாதத்தில் வென்றார். ராமானந்தரையும் வெல்ல விரும்பி காசி மாநகரில் அவரது மடத்துக்கு வந்து அவரை வாதத்தற்கு அழைத்தார். ராமானந்தரின் சீடர்கள் கோரக்நாதரை கண்டு ஓடி ஒளிந்தனர். சாந்த சீலரான ராமானந்தர் செய்வதறியாது திகைத்தவராகத் தியானத்தில் ஆழ்ந்தார். இவை யாவற்றையும் கேள்வியுற்ற கபீர் கோரக்கருடன் வாதம் புரிய ராமானந்தரின் அனுமதியைக் கோரினார். ஆனால் ராமானந்தர் இது சிறுபிள்ளைத்தனம் எனக் கருதி கபீர் வாதத்தில் தோற்றால் அது தன்னைப் பாதிக்கும் என அனுமதி கொடுக்கவில்லை. கபீரோ குருவின் ஆசிகள் மட்டுமே போதும் கோரக்நாதர் உடனான வாதில் நிச்சயம் வெற்றி பேறுவேன் எனக்கூறி ராமானந்தரின் அனுமதியை பெற்றார்.
கோரக்நாதரின் எதிரில் சென்ற கபீர் என் குருவின் வல்லமை தெரியாமல் இருக்கின்றீர்கள். வாதிலும் பிரம்ம ஞானத்திலும் அவர் முன் நிற்கக்கூட உங்களுக்குத் தகுதி இல்லை. மரியாதையாகச் சென்று விடுங்கள் என்று கர்ஜித்தார். சிறுவனே உன்னை என்ன செய்கிறேன் பார் என கோரக்நாதர் எழுந்தார். தனக்கு உதவ வந்த ராமானந்தரை தடுத்த கபீர் தன் கையிலிருந்த பட்டுநூல் கண்டை ஆகாயத்தில் வீசினார். அது பூமியிலிருந்து ஆகாயம் வரை ஒரு மரம் போல் வளர்ந்து நின்றது. அதன் மேலேறி உச்சியில் அமர்ந்த கபீர் கோரக்நாதரை வானவெளியில் அமர்ந்து வாதம் புரிய அழைத்தார். கோரக்ராதர் திகைத்தார் எனினும் நொடியில் ராமானந்தரின் உருவத்திற்கு மாறி அவரைக் கீழே அழைத்தார். உண்மையான ராமானந்தர் தன் சீடனைக் காப்பாற்ற இறைவனை வேண்ட கபீர் உற்சாகமடைந்தவராக கோரக்நாதரின் குருவான மச்சேந்திரரின் உருவை அடைந்து நின்றார். உடனே கோரக்கர் மஹாவிஷ்ணு உருவத்திற்கு மாறினார். கபீரும் சரபமூர்த்தியானார். கோரக்நாதர் மாறும் உருவத்திற்கு ஏற்ப ஒருபடி மேலாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கபீரது திறமை கண்டு தனது கர்வத்தை விட்டார் கோரக்நாதர். ராமானந்தரிடன் சென்ற கோரக்நாதர் சிறந்த சீடனை அடைந்த நீங்கள் மிகவும் பாக்யசாலி எனக்கூறி வணங்கி அங்கிருந்து சென்றார். தனது பாதத்தில் பணிந்த கபீரைக் கண்டு மகிழ்ந்த ராமானந்தர் இந்த இளம் வயதிலேயே இறைவனை அடையும் பிரம்ம ஞானத்தை அடைந்து விட்ட நீ நீடூழி வாழ வேண்டும் என ஆசி கூறினார். காசி நகர் முழுவதும் ராமானந்தரையும் கபீர்தாசரையும் புகழ்ந்தது. குருநாதர் மெச்சும் சீடனாக கபீர் விளங்கினார்.
ஒருநாள் நூறு சாதுக்கள் படைசூழ இறைவன் கபீர்தாசரின் இல்லத்துக்குப் பசியாற வந்தார். வீட்டில் ஒரு மணி அரிசி கூட இல்லை. கபீரும் அவர் மனைவியுமே பட்டினி. இந்நிலையில் அடகு வைக்கவும் ஏதுமில்லாத நிலையில் சீந்தரா ஒரு யோசனை கூறினாள். கடைத்தெருவில் ஒரு சௌகார் நெடுநாளாக என்மேல் கண் வைத்திருக்கிறான். ஒருமுறை அவனது விருப்பத்துக்கு நான் இணங்கினால் பணத்தை கொட்டித் தருவதாகக் கூறுகிறான். இந்த சாதுக்களின் பசி தீர்க்க உதவுமானால் அப்படிச் செய்தால் என்ன என்றாள். கபீரும் அவளுடன் கிளம்பி சௌகாரின் வீட்டுக்குச் சென்று நூறு சாதுக்களுக்கு உணவளிக்கப் பொருள் வேண்டும். விருந்தோம்பல் முடிந்த பின் பொருளுக்கு விலையாக இவளை இங்கு விட்டுச் செல்கிறேன் என்றார். மதிமயங்கி அவனும் பொருள் அளித்தான். சாதுக்களுக்கு வயிறார விருந்து சாப்பிட்டனர். பிறகு கபீர்தாசர் வாக்களித்தபடி சீந்தராவை வியாபாரியின் வீட்டுக்குக் கொட்டும் மழையில் சேறுபடாமல் சுமந்து சென்று சௌகாரின் வீட்டில் விட்டார். அப்போது அந்த ஊர் அரசு அதிகாரி வீட்டினுள் புகுந்து திருட்டுச் சொத்து அங்கிருப்பதாகக் கூறி வீட்டைச் சோதனையிட ஆரம்பித்தார். உள்ளே சீந்தராவைக் கண்டு இவள் கபீரின் மனைவி. இந்த உத்தமியையா கடத்தி வந்தாய் எனக்கூறி சீந்தராவை அழைத்துச் சென்று அவளது வீட்டிலேயே விட்டுச் சென்றார்.
வீட்டுக்குத் திரும்பிய அவள் கூறியதைக் கேட்டு வெகுண்ட கபீர் என் விஷயத்தில் தலையிட நீங்கள் யார் என அரசு அதிகாரியின் வீட்டுக்குச் சென்று திட்டி அடிக்க கை ஓங்கினார். அப்போது அங்கே அந்த அதிகாரி காணவில்லை. மாறாக ஶ்ரீராமர் காட்சி அளித்து அதிகாரியாக சென்று உன் மனைவியை மீட்டது நான்தான் உனக்கு அடிக்க வேண்டுமென்று தோன்றினால் என்னை அடி என்றார். இறைவனின் தரிசனம் கண்ட கபீர் கலங்கிப் போய் ராமனைத் தொழுது பாடல்கள் புனைந்தார். இது போல் கபீரின் வாழ்வில் ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் இறையருளால் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. இதனால் பழுத்த ஆன்ம ஞானியாக விளங்கினார் கபீர்தாசர்.
கபீர்தாசருக்கு இரண்டு குழந்தைகள் தோன்றினர். மகன் பெயர் கமால். மகனாக மட்டுமல்லாமல் கமால் மகானாகவும் விளங்கினான். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய கமால் ஏழு வயதிலேயே தீர்த்த யாத்திரை செல்ல விரும்பினான். அவனைப் பிரிய மனமின்றி கபீர் முதலில் மறுத்தாலும் பின்னர் அனுமதி அளித்தார். செல்லும் இடமெல்லாம் இறைவனது நாமத்தின் பெருமைகளைக் கமால் பரப்பினான். கூட்டம் கூட்டமாக வந்து அவரைத் தரிசித்த மக்கள் அவரை கிருஷ்ணரின் உருவமாகவே கண்டனர். அந்த ஊரில் இருந்த ஒரு ரத்ன வியாபாரியின் இல்லத்தில் சிலர் கமாலைப்பற்றி இகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தீராத வயிற்று நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்த வியாபாரி இந்த நோயை கமால் தீர்த்தால் அவரை ஒரு மகான் என நம்பலாம் என்றார். மறுநாள் காலையில் வலியினால் துடித்த போது முன் தினம் கமாலைப் பற்றிப் பேசியது நினைவுக்கு வந்தது. உடனே கமாலை நினைத்து வணங்கினார். உடனே அவரது வயிற்றுவலி மறைந்தது.
ரத்ன வியாபாரி கமாலைத் தனது வீட்டுக்கு அழைத்து வணங்கி பொற்காசுகள் நிறைந்த ஒரு பையை அளித்தார். கமால் இதைக் கட்டிக் காத்து வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் திறமை சிறுவனான எனக்கில்லை என ஏற்க மறுத்தார். வியாபாரி கமாலுக்கு தெரியாமல் அவரது துணியில் விலையுயர்ந்த மரகதம் ஒன்றை முடித்து வைத்தார். வீடு திரும்பி கமால் பெற்றோரை வணங்கும் போது மரகதகல் அவர்கள் கண்ணில் பட்டது. அதே சமயம் பக்தனுடன் விளையாட விரும்பிய இறைவன் ஓர் அந்தணராக அங்கு தோன்றி கமால் அந்தப் மரகதக் கல்லைத் தன்னிடமிருந்து திருடிவிட்டதாகக் கூறினார். கபீர்தாசர் தன் மகனை அடிக்கக் கை ஓங்கிவிட்டார். அதே சமயத்தில் நடக்க விருப்பதை முன்பே அறிந்து அங்கு வந்து சேர்ந்தா ராமானந்தர். இறைவன் சீதா, லக்ஷ்மண, பரத, சத்ருக்ன, அனும சமேதராக அங்கு தோன்றி அனைவருக்கும் திவ்ய தரிசனம் தந்தார்.
ஒரு நாள் இரவு களைத்தவர்களாகவும், பசித்தவர்களாகவும் நூற்றுக்கணக்கான சாதுக்கள் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றிருந்த கபீர்தாசரின் இல்லத்தைத் தேடி வந்தனர். வீட்டிலோ வறுமை. வேறு வழியின்று தந்தையும் மகனுமாக மளிகைக் கடையில் திருடவும் துணிந்தனர். சிறுவன் கமால் சுவரிலுள்ள பிளவு மூலம் சென்று பொருட்களை கபீரிடம் தந்து விட்டு அந்தப் பிளவு மூலமாகவே வெளியேறி விடுவது என திட்டமிட்டுப் பொருள்களை எடுத்துத் தந்தையிடம் தந்துவிட்டுக் கமால் வெளியேறுவதற்கு முன் கடைக்காரன் வந்துவிட்டான். பாதி வெளியேறிய நிலையில் கமாலின் கால்கள் கடைக்காரனின் கைப்பிடியில் சிக்கிக் கொண்டன.
சற்றும் தயங்காது கமால் தந்தையின் இடையில் இருந்த தறிவேலை செய்யும் கூரிய கத்தியை அவர் கையில் தந்து என் தலையை வெட்டி எடுத்துச் சென்று விடுங்கள். தலையின்றி அவர்களால் என்னை அடையாளம் காண முடியாது என வற்புறுத்தினான். தயக்கத்துடன் கபீரும் அவ்வாறே செய்யக் கடைக்காரர் உடலை மட்டும் காவலர்களிடம் ஒப்படைத்தான். மற்ற திருடர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கட்டும் என நாற்சந்தியில் அந்த உடல் தொங்க விடப்பட்டது. விருந்து முடிந்த நிலையில் மறுநாள் சாதுக்கள் பஜனை செய்தவாறே அவ்வழியாக வந்தார்கள். தலையற்ற அந்த உடல் இரு கைகளையும் கூப்பி அவர்களை வணங்கியது. இதனைக் கண்ட சாதுக்களும் ஊர்மக்களும் திகைக்க இறைவன் அசரீரியாக கபீர் உலகிலே மனைவி மக்களிடம் கொண்ட பாசம் தான் வெல்ல முடியாதது. அவ்விரண்டையும் சாதுக்களுக்குச் செய்யும் சேவைக்காகத் துறந்த உன் பக்தியே உயர்ந்தது. அன்பனே கமால் எழுந்திரு எனக்கூற அடுத்த கனம் கபீரிடம் இருந்த கமாலின் தலையானது வந்து உடலில் சேரக் கமால் சிரித்த முகத்துடன் நாராயண நாமத்தை சொல்லி சாதுக்களையும் பெற்றோரையும் வணங்கினார்.
சீரடி சாயிபாபா மகா பக்த விஜயத்திலே கபீர்தாஸரின் வரலாறு விரிவாகக் கூறப்படுகிறது. ராமனை தன்னுள் உணர்ந்த கபீர்தாஸர் இந்து முஸ்லிம் சமய ஒற்றுமைக்குப் பெரிதும் பாடுபட்டவர். கபீர்தாஸரின் குரு ராமாநந்தரின் தாக்கம் இவரிடம் அதிகம் காணப்பட்டது. கபீர் தன்னுடைய குருவான ராமானந்துக்கு சிலை எழுப்பினார். இந்து சமயம் இசுலாம் ஆகிய இரு சமயங்களிலும் தவறு இருந்தால் அதனை கபீர் கடுமையாக விமர்சித்தார். வேதங்களை தவறான முறையில் மொழி பெயர்த்து சொல்லிக் கொடுக்கப்பட்டு இந்து சமயம் தவறான வழியில் செல்லப் படுவதாகவும் உபநயனம் போன்ற சடங்குகள் அர்த்தமற்றவை எனவும் கூறினர். அவரது கருத்துகளுக்காக இந்து மற்றும் இசுலாமியர் இருவரின் கோபத்துக்கும் ஆளானார். எல்லா உயிரிலும் ஆண்டவன் உறைகிறான். அவன் எந்த ஆலயத்திலும் இல்லை என்று உபதேசித்தார். கபீர் படிக்காதவராக இருந்தாலும் பல நூல்களை இயற்றினார். ஆதிகிரந்தம், பிரம்ம நிருபன், ஷப்தாவளி போன்ற புகழ் பெற்ற நூல்களை இயற்றியுள்ளார்.
ஜபமாலையை உருட்டுகிறாய் நெற்றி நிறைய விபூதியைப் பூசிக்கொள்கிறாய் கற்றைச் சடாமுடியைக் கட்டிக்கொள்கிறாய் என்ன செய்தால் என்ன? உன் நெஞ்சில் ஈரம் இல்லை அன்பு இல்லை நீ எப்படி இறைவனை அடைவாய்.
என்று போலியான மதவாதிகளைக் கண்டித்து பாடினார். எழுதப் படிக்கத் தெரியாத கபீரின் பாடல்கள் மக்களின் மனங்களில் ஆழப் பதிந்து விட்டது. வாரணாசியில் ஏழை எளிய மக்கள் இவருடைய பாடல்களை மனப்பாடம் செய்து கொண்டார்கள். அதுவே பின்னாளில் நூலாக வெளிவர உதவியது. 500 ஆண்டுகளுக்கு முன்னரே பல புரட்சிகரக் கருத்துகளைக் கூறிய கபீர்தாசர் ராமர் சீதாவின் திவ்ய தரிசனத்தைப் பலமுறை கண்டார். கபீரின் போதனைகள் இந்து இசுலாமிய மதங்களைக் கடந்து சீக்கிய மதத்திலும் இடம் பெற்றன. சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப் பில் கபீரின் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவரின் பிரபலமான பாடல் ஒன்று
நீர்த்துளி கடலில் அடங்கும் என்பதை யாரும் அறிவார்கள். நீர்த்துளிக்குள் கடல் அடங்கும் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.
இதற்கு அர்த்தம் உலகம் இறைவனின் படைப்பு என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த இறைவனின் படைப்பாகிய தொண்டர்களின் உள்ளத்துக்குள்ளே இறைவனே அடக்கம் என்பதை யாரும் அறிய மாட்டார்கள் என்று பாடுகிறார். 1518 ஆம் ஆண்டில் காசியில் கபீர் இறைவனைத் துதித்தவாறே மோட்ச பிராப்தி அடைந்தார். அவர் இறந்த பொழுது அவரால் ஈர்க்கப்பட்ட இந்து முஸ்லீம் சமயத்தை சேர்ந்தவர்களால் அவரவர் சமயத்தைச் சேர்ந்தவர் என உரிமை கொண்டாடப்பட்டார். கபீரின் இறந்த உடல் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடினர். அவரது உடலை எரிப்பதா அல்லது புதைப்பதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு பெரியவர் ஏன் வீணாகச் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள்? நீங்கள் இருவரும் தலா ஒரு போர்வையைக் கொண்டு உடலைப் போர்த்தி விட்டு செல்லுங்கள். நாளை இறுதி ஊர்வலத்தின் போது முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டு சென்றார். அதன்படி இரு தரப்பினரும் உடலின் வலப் பகுதியையும் இடப் பகுதியையும் போர்வை கொண்டு போர்த்தி விட்டுச் சென்றனர். அடுத்த நாள் அவரது திருவுடலை எடுத்துச் செல்ல வந்தனர். போர்வையை எடுத்ததும் ஆச்சர்யத்தில் மூழ்கினார்கள். கபீரின் உடல் மறைந்து அங்கே புத்தம் புது மலர்கள் இருந்தன. இறைவனுக்காகப் பாமாலைகள் பாடிப் பாடிப் பரவசமடைந்த அவரது திருமேனி பூக்களாக உருமாறி இருந்தன. இரு தரப்பினரும் சச்சரவு இல்லாமல் சரிபாதியாக பூக்களைக் கொண்டு சென்று இந்துக்கள் ஒரு பாதி பூக்களை காசியில் சாஸ்திரங்கள் முறைப்படி ஈமக்கடன்களைச் செய்தார்கள். அதுபோல முஸ்லிம்கள் பாதி பூக்களைப் புதைத்தார்கள்.
சீதை லட்சுமணனிடம் பேசினாள். அண்ணனின் ஆணை என்று சமாதானம் சொல்லி அண்ணன் கதறினாலும் போக மறுக்கிறாய். அவரும் நானும் உன்னை நம்பி மோசம் போனோம். ராமருக்கு பகைவனாய் வந்த துஷ்டனே இது பரதனின் சூழ்ச்சியா? பரதன் சொல்லிக் கொடுத்து இது போல் செய்கிறாயா? ராமரின் உடன் பிறந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை அழித்து ராஜ்யத்தை அடைய நினைக்கின்றார்களா? ராஜ்யத்தையும் என்னையும் நீ அடைய நினைத்து இது போல் செய்கிறாய் என்பதை தெரிந்து கொண்டேன். உன் எண்ணம் நிறைவேறாது. உன் அண்ணன் இல்லை என்று தெரிந்த அடுத்த கனம் நானும் இறந்து விடுவேன். இப்பொது நீ சென்று அவருக்கு உதவி செய்து அவரை காப்பாற்றா விட்டால் அதோ பார் உலர்ந்த கட்டைகள் இருக்கின்றன. இப்போது இங்கேயே அதில் தீ மூட்டி குதித்து என் உயிரை விடுவேன். மலையின் உச்சிக்கு சென்று குதித்து விடுவேன். விஷத்தை அருந்தி விடுவேன். இல்லையென்றால் இதோ பார் உன் முன்பே இப்போதே இந்த ஆற்றில் குதித்து உயிர் துறப்பேன் என்று சிங்கம் போல் கர்ஜித்துக்கொண்டே சீதை ஆற்றை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.
லட்சுமணன் சீதையை பார்த்து நீங்கள் சொன்ன இந்த வார்த்தைகள் என் காதுகளில் இரும்பை காய்ச்சி ஊற்றுவது போல் இருக்கிறது. உங்களின் சொல்லையும் செயலையும் பார்த்து நான் பயப்படுகிறேன். உங்களுடைய வார்த்தைகளால் உங்களுக்கு வரும் கேட்டிற்கு நீங்களே வழி வகுத்து கொடுத்து விட்டீர்கள். தேவர்களின் சாட்சியாக சொல்கிறேன். நான் உங்களை கண்டு இரக்கப்படுகின்றேன். இன்று உங்களிடம் குணக் குறைவை காண்கிறேன். எனக்கு பாப எண்ணம் இருப்பது போல் பேசிவிட்டீர்கள். இது என்னுடைய கெட்ட காலம் என்று எண்ணுகிறேன். எந்த விதியாக இருந்தாலும் என்னுடைய வில்லால் வென்று விடலாம் என்று கர்வம் கொண்டிருந்தேன். இன்று அந்த கர்வம் அடங்கி விதி என்னை வென்று விட்டது.
நீங்கள் சொல்வது போல் அண்ணனின் ஆணையை மீறி உங்களை தனியாக விட்டு செல்கிறேன். நீங்கள் இங்கிருந்து காணாமல் போகப் போகின்றீர்கள். அதற்குண்டான கெட்ட அபசகுனங்களை இங்கு காண்கிறேன். அண்ணனுடன் சேர்ந்து வந்து உங்களை மீண்டும் சந்திப்பேனா என்று தெரியவில்லை சந்தேகமாக இருக்கிறது. ஆயினும் இதோ தங்களுடைய கடுமையான வார்த்தைக்காக போகிறேன் என்று குடிலை சுற்றி ஒரு கோடு வரைந்தான் லட்சுமணன். தயவு செய்து குடிலை சுற்றி இருக்கும் இந்த கோட்டை தாண்டி மட்டும் வெளியே வந்து விடாதீர்கள். உங்களை இங்கிருக்கும் வன தேவதைகள் காப்பார்களாக என்று சொல்லிவிட்டு திரும்பி திரும்பி பார்த்தபடி ராமர் சென்ற காட்டிற்குள் ஓடினான் லட்சுமணன். சீதை சொன்ன கோரமான வார்த்தைகள் அண்ணனுக்கு தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார். கோபம் வராத அண்ணனுக்கு கோபம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதே என்று கோபமும் துயரமும் சேர்ந்து லட்சுமணனை மிகவும் வாட்டியது.
லட்சுமணன் செல்லும் நேரத்திற்காக காத்திருந்த ராவணன் தனது உருவத்தை மாற்றிக்கொண்டு காவி உடை அணிந்து தண்டமும் கமண்டலமும் தரித்து தபஸ்வி போல் சீதை இருக்கும் குடிலை நோக்கி சென்றான். அழுத முகத்துடன் இருந்த சீதையை பார்த்து யாரம்மா நீ? இந்த ராட்சசர்கள் வாழும் காட்டில் தனியாக இருக்கிறாய் எதற்காக அழுது கொண்டிருக்கிறாய்? என்று சீதையிடம் கேட்டான் ராவணன்.
ராமர் விட்ட அம்பு மாரீசனை கொன்று விட்டது. மாரீசன் தன் குரலைப்போலவே எழுப்பிய சத்தத்தில் சீதை பயந்துவிடுவாளே என்று எண்ணிய ராமர் லட்சுமணன் அருகில் இருக்கின்றானே என்று தன்னை சமாதானம் செய்து கொண்டு அங்கிருந்து தன் குடிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
ராமரின் குரலைக் கேட்ட சீதை ராமருக்கு ஏதோ ஆபத்து நிகழ்ந்து விட்டது. ராமருக்கு உதவி தேவைப்படுகிறது என்று பதைபதைத்தாள். லட்சுமணனிடம் உனது அண்ணனின் அபயக் குரல் கேட்கிறது. உனக்கு கேட்கவில்லையா? நிற்காதே போ போ சீக்கிரம் ஓடிச் சென்று அண்ணனுக்கு உதவி செய் என்று கதற ஆரம்பித்தாள். ராமர் சீதைக்கு துணையாக இங்கேயே இரு. எச்சரிக்கையுடன் சீதையை பார்த்துக்கொள் என்ற அண்ணனின் ஆணையை ஏற்று லட்சுமணன் அசையாமல் நின்றான். சீதை மீண்டும் லட்சுமணனை பார்த்து கத்த ஆரம்பித்தாள். ராட்சசனிடம் உன் அண்ணன் அகப்பட்டு அபயக் குரலில் கதறுகிறார். ஒரே பாய்ச்சலில் சென்று அவரை நீ காப்பாற்ற வேண்டாமா? மரம் போல் அசையாமல் நின்கின்றாயே ஓடு ஓடு என்று விரட்டினாள். அப்போதும் அசையாமல் நின்றான் லட்சுமணன். சீதைக்கு லட்சுமணனின் மேல் கோபம் அதிகரித்தது. ராமரின் மேல் உள்ள அன்பும் ஆபத்தில் இருக்கும் ராமருக்கு உதவி செய்ய செல்லாமல் அசையாமல் நின்ற லட்சுமணனின் மேல் உள்ள கோபமும் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் தன் சுய புத்தியை இழந்த சீதை கோபத்தில் கத்த ஆரம்பித்தாள்.
சுமத்ரையின் மகனே நீ இப்போது ராமருக்கு எதிரியாகி விட்டாய். இவ்வளவு நாளும் நல்லவன் போல் வேடமணிந்து எங்களுடன் இருந்திருக்கிறாய். ராமரின் மரணத்திற்கான இவ்வளவு நாள் காத்திருந்தாயா? அவர் இறந்தால் அதன் பிறகு என்னை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தாயா? துஷ்டனே ராமர் அபயக் குரலில் கதறி அழைத்தும் போகாமல் இங்கேயே நிற்கின்றாயே அண்ணனிடம் நீ காட்டிய அன்பெல்லாம் வெறும் நடிப்பா சூழ்ச்சிக்காரனே நயவஞ்சகனே என்று திட்டிக்கொண்டே தன் இரு கைகளாலும் தன்னையே அடித்துக் கொண்டு கதறி அழுதாள். லட்சுமணன் தன் கண்ணில் நீர் தனது வழிய காதுகளை மூடிக்கொண்டான்.
லட்சுமணன் மெதுவாக சீதையிடம் பேச ஆரம்பித்தான். சிறு வயதில் இருந்து அண்ணனுடன் பல யுத்தங்களை பார்த்திருக்கின்றேன். அண்ணனின் பலம் எனக்கு தெரியும். அவரை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது. காட்டில் நம்மை எதிர்த்த ஆயிரக்கணக்கான ராட்சசர்களை அண்ணன் தனி ஒருவராக நின்று யுத்தம் செய்து அனைவரையும் அழித்தார். அவரின் பராக்ரமத்தை தாங்களும் பார்த்தீர்கள். தேவர்கள் கந்தர்வர்கள் அசுரர்கள் ராட்சசர்கள் அரசர்கள் மானுடர்கள் மிருகங்கள் என அண்ணனை எவர் எதிர்த்தாலும் அவர்களை அண்ணன் தனி ஒருவராக நின்று அனைவரையும் அழித்து விடுவார். அந்த வல்லமை அவருக்கு உண்டு. இது நிச்சயமான உண்மை பயப்படாதீர்கள். உங்கள் மனைதை சாந்தப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த மான் உருவில் வந்த ராட்சசனை அழித்து விட்டு தாங்கள் விரும்பிய மான் உடலுடன் அண்ணன் சிறிது நேரத்தில் வந்து விடுவார். அதனை நீங்கள் பார்ப்பீர்கள் என்று உங்களுக்கு நான் உறுதி அளிக்கின்றேன். உங்கள் புத்தியை நிலையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சீதையிடம் லட்சுமணன் கூறினான்.
ராமரும் லட்சுமணனும் சீதையின் குரலைக் கேட்டு விரைந்து வந்து பொன் மானைப் பார்த்து வியந்தார்கள். லட்சுமணன் மானின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகமடைந்தான். மான் வடிவில் வந்திருப்பது ராட்சசன் மாரீசன் என்பதை லட்சுமணன் புரிந்து கொண்டான். ராமரை பார்த்து இந்த அழகிய கற்கள் பதிக்கப்பட்ட பொன் மான் வடிவில் இருப்பது மாரீசன் என்ற ராட்சசன் ஆவான். இயற்கையில் இப்படி ஒரு மிருகம் கிடையாது. நம்மை ஏமாற்ற ஏதோ தந்திரம் செய்து நம்மை தாக்க இங்கே வந்திருக்கிறான் என்று எண்ணுகிறேன் என்றான். லட்சுமணன் சொன்னதை கேட்டதும் மானின் அழகில் மயங்கிய சீதை ராமரிடம் இந்த மான் தங்க நிறத்தில் நவரத்ன கற்களும் ஜொலிக்க அழகாக இருக்கிறது. இதனுடன் நான் விளையாட ஆசைப்படுகின்றேன். நாம் இக்காட்டை விட்டு அரண்மனைக்கு செல்லும் காலம் நெருங்கி விட்டது. இங்கிருந்து செல்லும் போது இந்த மானையும் தூக்கிச்சென்று விடலாம். நமது அரண்மனை தோட்டத்தில் இதனுடன் ஆனந்தமாக பொழுதை கழிக்க ஆசைப்படுகின்றேன். இந்த மானைப் பார்த்தால் பரதன் மிகவும் மகிழ்ச்சி அடைவான். இந்த மானை பரதனுக்கு பரிசாக கொடுக்கலாம். இந்த மானை பிடித்து எனக்கு தாருங்கள். நமது குடிலில் இந்த மானை கட்டி வளர்க்கலாம் என்று விடாமல் ராமரிடம் மானை பிடித்து கொடுக்க சொல்லி பேசிக்கொண்டே இருந்தாள்.
ராமர் லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தார். சீதையின் பேச்சைப் பார் லட்சுமணா. அவளின் பேச்சில் இருந்து அந்த மான் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று நமக்கு தெரிகிறது. அவளுடைய ஆசையை நிறைவேற்றுவது எனது கடமை. அந்த மான் ராட்சசனாக இருந்தால் இக்காட்டில் இருக்கும் முனிவர்களுக்கு நாம் கொடுத்த வாக்கின்படி அதனை அழிப்பது நமது கடமை. வந்திருப்பது ராட்சசனா என்று நமக்கு தெரியாது. ஆகையால் நீ வில் அம்புடன் கவனத்துடன் சீதைக்கு பாதுகாப்பாக இரு. எந்த சமயத்தில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். எச்சரைக்கையுடன் இரு. நான் அந்த மானை உயிருடனோ அல்லது ராட்சசனாக இருக்கும் பட்சத்தில் கொன்றோ கொண்டு வருகிறேன் என்று வில் அம்புடன் கிளம்பினார். லட்சுமணன் யுத்தத்திற்கு தயாராக இருப்பது போல் வில் அம்புடன் சீதைக்கு காவலாக இருந்தான்.
ராமர் மானை பின் தொடருந்து ஓடினார். ராமர் தன்னை பின் தொடர்ந்து வருகின்றாரா என்று மான் திரும்பி திரும்பி பார்த்து காட்டிற்குள் ஓடியது. மானை ராமரால் பிடிக்க முடியவில்லை. ராமரை காட்டில் இருந்து நீண்ட தூரத்திற்கு இழுந்து வந்தது மான். ராமர் தனது வில்லை எடுத்தார். இதனை கண்ட மான் உருவில் இருந்த மாரீசனுக்கு தான் ராமரின் கையால் இறக்கப் போகின்றோம் என்று தெரிந்துவிட்டது. ராமரின் கண்ணில் படாமல் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டது. ராமர் தனது வில்லில் அம்பை பூட்டி மான் இருக்கும் திசையை நோக்கி செலுத்தினார். அம்பு மானை குத்தியது. மான் உருவத்தில் இருந்த மாரீசன் தனது சுய உருவத்தை அடைந்தான். ராவணன் சொன்னபடி சீதை லட்சுமணா காப்பாற்று என்று ராமரின் குரலில் கத்தியபடி கீழே விழுந்து இறந்தான் மாரீசன்.
ராமரைப்பற்றி மாரீசன் நீண்ட நேரம் பேசி ராவணனுக்கு புத்தி கூறினான். மாரீசன் பேசியது எதுவும் ராவணனுக்கு பிடிக்கவில்லை. ராவணன் பேச ஆரம்பித்தான். மாரீசா நீ சொல்வது எதுவும் சரியில்லை. நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ராட்சச அரசன் நான். இதனை நீ மனதில் வைத்துக் கொள். உன்னிடம் சீதை தூக்கிச் செல்லலாமா வேண்டாமா என்று உனது கருத்தை கேட்க நான் இங்கு வரவில்லை. நீண்ட யோசனைக்கு பிறகு சீதை தூக்கிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டே இங்கு வந்திருக்கின்றேன். என் முடிவில் இனி மாற்றம் இல்லை. ஒரு பெண்ணின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டு ராஜ்யத்தை இழந்து ஊரில் இருந்து துரத்தப்பட்டவன் அந்த ராமன். ராட்சச அரசனன நான் இந்த சாதாரண மனிதனுடன் சமமாக நின்று யுத்தம் செய்ய மாட்டேன். சீதையை தூக்கி சென்று ராமனை அவமானப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். இதற்கு நான் கேட்கும் உதவியை நீ செய்ய வேண்டும் என்று அரசனாக உனக்கு உத்தரவிடுகின்றேன். நீ என்னுடைய உத்தரவை செயல்படுத்த வேண்டும் இல்லை என்றால் உன்னை நான் இங்கு இப்போதே கொன்று விடுவேன் என்று ராவணன் சொல்லி முடித்தான்.
ராமனின் பகையை சம்பாதித்து விரைவில் நீ யமனிடம் செல்ல ஆசைப்படுகின்றாய். இலங்கை எரிந்து அழிந்து போவது. நீயும் உனது சகோதரர்கள் உட்பட உனது ராட்சச படைகள் அனைத்தும் ராமனால் அழிக்கப்படுவது இப்பொதே என் கண்களுக்கு தெரிகிறது. உன் உத்தரவை செயல் படுத்தாமல் உனது கையால் மரணிப்பதை விட ராமரின் கையால் நான் மரணமடைவது மேல் என்று எண்ணுகின்றேன். தண்டகாருண்யம் காட்டிற்கு செல்லலாம் வா என்று கிளம்பினான் மாரீசன். பழைய மாரீசனை கண்டுவிட்டேன் என்று ராவணன் மாரீசனை கட்டி அணைத்து செய்ய வேண்டிய காரியத்தை சொல்ல ஆரம்பித்தான் ராவணன். ஏற்கனவே சொன்னபடி மான் உருவம் எடுத்து நீ ராமரை தூரமான இடத்திற்கு அழைத்துச் செல். பின்பு லட்சுமணா காப்பாற்று என்று ராமரின் குரலில் கத்து. லட்சுமணன் சீதையை தனியாக விட்டு வருவான் அந்த நேரம் நான் சீதையை தூக்கிச்சென்று விடுவேன் என்று ராவணன் சொல்லி முடித்தான்.
தண்டகாரண்ய காட்டில் ராமனுடைய குடிலுக்கு அருகில் இருவரும் வந்து சேர்ந்தார்கள். குடிலின் தூரத்தில் நின்ற மாரீசனின் கையை பிடித்த ராவணன் அதோ பார் ராமனின் குடில் உள்ளது. என் திட்டப்படி அனைத்தையும் சிறப்பாக செய்து முடி என்று அனுப்பினான் ராவணன். மாரீசன் அழகிய பொன் மான் வேடத்திற்கு உருமாறினான். மானின் உடலில் ஒவ்வொரு அங்கமும் விசித்திர அழகில் வைர வைடூரியங்கள் ரத்ன கற்கள் பதித்த தங்க மான் போல் ஒளி வீசியது. மான் குடிலை சுற்றி சுற்றி வந்தது. மற்ற மான்கள் இதன் அருகில் வந்ததும் தன் இனம் இல்லை என்று சந்தேகத்துடன் விலகி சென்றது.
சீதை குடிலுக்கு அருகே பூக்களை பறித்துக்கொண்டிருந்தாள். மான் சீதைக்கு முன்பாக ஓடி துள்ளிக் குதித்தது. சீதை மானின் அழகை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த பூக்களுக்கு நடுவில் ஓடிய மான் காட்டிற்கே புது அழகு தந்தது. ராமரும் லட்சுமணனும் இந்த அழகை காண வேண்டும் என்று எண்ணிய சீதை ஓடி வாருங்கள் ஓடி வாருங்கள் இந்த அழகிய மானை பாருங்கள் என்று கத்த ஆரம்பித்தாள்.
ராமருடைய பராக்ரமத்தை அறிந்திருந்த மாரீசன் ராவணனுடைய தீர்மானத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தான். சீதையை தூக்கிச் செல்வதிலேயே ராவணன் குறியாக இருக்கின்றான் என்பதை புரிந்து கொண்டான். விதி ராவணனை கயிறு கட்டி இழுக்கின்றது. ராவணன் தன் புத்தியை இழந்து விட்டான். இனி ராவணனின் அழிவை தடுக்க முடியாது என்று உணர ஆரம்பித்து ராவணனிடம் பேச ஆரம்பித்தான் மாரீசன். ராட்சச அரசரே நீங்கள் சொல்வதை கேட்டதும் எனக்கு எல்லையற்ற துக்கம் உண்டாகிவிட்டது. ஒருவரின் கருத்துக்கு ஆதரவான கருத்தை மற்றவர் சொல்லும் போது அதனை கேட்பவருக்கு இனிமையாக இருக்கும். ஆனால் எதிரான கருத்தை சொல்லும் போது அதனை கேட்க முன் வர மாட்டார்கள். ஆனாலும் உங்கள் கருத்துக்கு எதிரான கருத்துக்களை சொல்லி உங்களுக்கு நன்மையை சொல்ல விரும்புகின்றேன். உங்கள் கருத்துக்கு ஏற்ப இனிமையாக பேசி உங்களை திருப்தி செய்து உங்களை அபாயத்தில் தள்ளி விடுவதில் எனக்கு விருப்பம் இல்லை.
ராமரை பற்றி ஏற்கனவே நான் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். உங்களிடம் சொல்லியவர்கள் ராமரை பற்றிய உண்மையை சரியாக சொல்லவில்லை. ராமரை பற்றி அறியாத அவர்களின் பேச்சை கேட்டு ஏமாந்து போகாதீர்கள். ராமர் உத்தம குணங்கள் நிறைந்த மாவீரன். அவருடைய கோபத்தை சம்பாதித்து இலங்கையின் அழிவுக்கு நீயே காரணமாகி விடாதே. நீ ராமரை பற்றி சொன்னதில் உண்மை எதுவும் இல்லை. தசரதர் ராமரிடம் குற்றம் கண்டு தண்டனை கொடுப்பதற்காக அவரை காட்டிற்கு அனுப்பவில்லை. ராமர் தனது தந்தை தாயிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக காட்டிற்கு வனவாசம் செய்ய வந்திருக்கிறார். தனது ராஜ்யத்தையும் அதிலுள்ள சுகங்கள் அனைத்தையும் துறந்து காட்டில் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் தவஸ்வியை போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தேவர்களில் முதன்மையானவன் இந்திரன் அது போல் இந்த மானிட உலகத்தில் முதன்மையானவர் ராமர். அவரின் மனைவியை நீ அபகரிக்க நினைக்கிறாய். சூரியனைப் போன்ற ராமரை ஏமாற்றி சூரியனுடைய ஒளியை போல் இருக்கும் சீதையை நீ திருட முடியாது. தந்திரமாக ஏதேனும் செய்து சீதையை நீ அபகரித்து சென்று அவளை தீண்டினால் நீ எரிந்து போவாய். ஒன்று ராமனின் அம்பால் அழிந்து போவாய். இல்லையென்றால் சீதையின் தொட்ட அடுத்த கணம் அழிந்து போவாய். உன்னுடைய சர்வ நாசத்துக்கும் நீயே வழி தேடிக்கொள்ளாதே.
ராமர் சிறு வயதில் யுத்தம் செய்யும் போதே நான் பார்த்திருக்கின்றேன். பல காலங்களுக்கு முன்பு என்னுடைய உடல் பலத்தின் மீது இருந்த அகங்காரத்தினால் முனிவர்கள் ரிஷிகள் செய்த வேள்விகளை தடுத்து அவர்களை கொன்று தின்று அழித்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை விஸ்வாமித்ரர் செய்த வேள்வியை தடுத்து அழிக்க சென்றிருந்தேன். விஸ்வாமித்ரர் தன் வேள்வியை காக்க தசரதரிடம் அனுமதி பெற்று ராமரை அழைத்து வந்திருந்தார். நான் வேள்வியை அழிக்க அங்கு சென்ற போது ராமர் விட்ட அம்பு என்னை அங்கிருந்து பல காததூரம் தள்ளி கொண்டு போய் கடற்கரையில் போட்டது. நீண்ட நேரம் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். மீண்டும் எழுந்து ராமரை கொல்லும் நோக்கத்தில் சென்றேன். ராமர் என்னை நோக்கி மூன்று அம்புகளை ஒரே நேரத்தில் விடுத்தார். அந்த மூன்று மகா பயங்கராமான அம்புகளிடமும் நான் பெரும் துன்பத்தை அனுபவித்தேன். எப்படியோ தப்பித்து நல்லொழுக்கம் கொண்டவனாக தவம் செய்து தவஸ்விகளை போல் தவவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று மாரீசன் ராவணனிடம் தொடர்ந்து பேசினான்.