பட்டீஸ்வரம் திருச்சத்தி முற்றம் ஆலய திருவிழாவை பற்றி:
இறைவனின் அருளை கொண்டு அதுபோல் அங்கே எமது ரூபத்தை பல நாட்களாக பலரும் காணாத நிலையிலேயே இத்தருணம் அங்கே இந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தை வைத்து பூஜை நடப்பதை நாங்கள் வரவேற்றாலும் கூட பொதுவாக சித்தர்களை வணங்கு என்று ஒருபோதும் யாமோ வேறு சித்தர்களோ கூற மாட்டோம். அங்கே இறைவனுக்கே முன்னுரிமை. இருந்தாலும் அன்போடு செய்கின்ற அனைத்தையும் எமக்கு செய்தாலும் அதை இறைக்கு செய்ததாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மற்றபடி குறிப்பிட்ட நட்சத்திரம் தான் என் போன்ற மகான்களுக்கு உரியது என்ற கருத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்பதில்லை. ஆண் பெண் கலப்பிலே பிறக்கக் கூடிய குழந்தைகளுக்குத்தான் நட்சத்திரம். அக்னியில் உருவாகக் கூடிய ரிஷிகளுக்கு ஏதடா நட்சத்திரம்? இருந்தாலும் ஏதாவது ஒரு தினத்தை தேர்ந்தெடுத்துச் செய்ய வேண்டும் என்பதற்காக செய்யப்படும் இதுபோன்ற நிகழ்வை நாங்கள் குறை கூறவில்லை. தொடர்ந்து ஒன்றுபட்ட உள்ளத்தோடு வேறு எந்த விதமான பங்கங்கள் இல்லாமல் பூஜைகள் செய்வதோடு இன்னும் புண்ணிய காரியங்களை அதிகரித்தால் எப்பொழுதுமே இறைவழிபாடு என்பது தர்ம சிந்தனையோடு இருக்கும் பொழுது தான் இறைவனின் பரிபூரண அருளை பெறத்தக்கதாகும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செய்ய நல்லாசிகள்.
இமாச்சல் பிரதேஷ் மாநிலம் காங்ரா மாவட்டம் பைஜ்நாத்தில் உள்ள அருள்மிகு வைத்தியநாதர் ஆலயத்தில் உள்ள ஆன்ம நந்தியின் சிலையில் நந்தியம்பெருமானின் வாலைப் பிடித்து ஒருவர் தொங்கிக் கொண்டுள்ளார்.
மனிதன் மரணம் அடைந்த பின்னர் செய்யும் 11 நாள் கிரியை செய்த பலனானது சிவனருள் மூலம் ஆத்மாவை எம தர்மனிடமிருந்து மீட்டு ரிஷப உத்ஸ்ஜர்னம் மூலமாக பித்ரு தேவதையாக்கப்பட்டு மூதாதையார்கள் இருக்கும் பித்ரு லோகம் செல்கிறது. அப்போது ரிஷபத்தின் வாலை பிடித்து கொண்டு பல நரககங்கள் கடந்து ஆத்மா பித்ரு லோகம் சென்றடைகிறது. இது வேதத்தில் உள்ள அந்தியேஷ்டியில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனை எடுத்துக்காட்ட சிலையாக வடித்துள்ளார்கள்.
பல ஆலயங்களுக்கும் சென்று அபிஷேகம் அர்ச்சனை செய்தும் மோட்ச தீபம் ஏற்றியும் இப்பிறவியல் தர்ம சிந்தனையோடு வாழும் ஒரு குடும்பத்தில் ஒரே குழந்தையை கொடுத்து அது வாய் சரியாக சரளமாக பேச முடியாமல் அனுதினமும் அனைவரும் மனவேதனையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வழி காட்டுங்கள்:
இறைவனை இறைவனின் கருணையை கொண்டு இதுபோல் பிரச்சனைகளுக்கு தீர்வு என்று எமை நாடுகின்ற மாந்தர்களுக்கு யாம் மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால் இதுபோல் ஊழ்வினை வந்து உறுத்தூட்டும் என்பது போல பாவ வினைகளை அத்தனை எளிதாக ஒரு மனிதனால் நீக்கி கொள்ள முடியாது. அதனால்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறோம். ஒரு பாவத்தை செய்வது எளிது. நீக்கிக் கொள்வது கடினம் இருந்தாலும் மனதை தளர விடாமல் தொடர்ந்து இறை வழிபாட்டில் இருந்தால் நல்ல பலன் ஏற்படும் என்பது உறுதி. ஒருவேளை நிறைய பரிகாரங்களை செய்து விட்டோம். நிறைய தர்மங்களை செய்து விட்டோம். எந்த பிரச்சனையும் தீரவில்லை என்றால் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் பரிகாரங்களை செய்த மனிதனுக்கு வேண்டுமானால் அதிகமாக செய்தது போல் தோன்றும். விதிக்கோ எமக்கோ தோன்றவில்லை என்பதுதான் உண்மை.
இதை வேறு விதமாக நாங்கள் அடிக்கடி கூறுவோம். ஒரு வங்கியிலே ஒருவன் பல லகரம் ருணம் (கடன்) பெறுகிறான். மாதாமாதம் ஒரு தொகையை அடைத்துக் கொண்டே வருகிறான். சில ஆண்டுகள் ஆகிறது. உழைத்த ஊதியத்தில் பெரும் பகுதியை அடைத்துக் கொண்டே வருகிறோம் இன்னுமா கடன் தீரவில்லை? என்று வங்கியின் சென்று பார்த்தால் அப்பனே நீ வாங்கியது இந்த அளவு. இதற்கு வாசி (வட்டி) விகிதம் இந்த அளவு. நீ இதுவரை செலுத்தியது இந்த அளவு. இன்னும் செலுத்த வேண்டியது இந்த அளவு என்று கூறுவார்கள். ஆனால் அடைத்த அவனுக்கு தான் வழியும் வேதனையும் தெரியும். நான் எந்த சுகத்தையும் காணாமல் ஊதியத்தையெல்லாம் கொண்டு கடனை அடைத்து வருகிறேன். இன்னுமா ருணம் (கடன்) தீரவில்லை என்று அவன் வேதனைப்படுவான். எனவே எமை நாடுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கூறுகிறோம். எத்தனையோ பரிகாரங்களை செய்து விட்டோம். இவையெல்லாம் வீண் வேலை. ஏமாற்று வேலை. பரிகாரம் செய்து எந்த பலனும் இல்லை என்று சோர்ந்து போகின்ற உள்ளங்கள் சோர்ந்து போகாமல் தொடர்ந்து இறை வழியில் வந்தால் வெற்றி கட்டாயம் கிட்டும். தெய்வம் தோன்றாததோ தெய்வம் அருளாததோ தெய்வத்தின் குற்றமல்ல. மனிதரிடம் தான் குற்றம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட பிரச்சினைகள் வேண்டாம் என்றாலும் கூட மனித வேதனை அதனை தாண்டி கேட்க வைக்கிறது. இருந்தாலும் அண்மையிலே இதழ் ஓதும் மூடனை அவனறியாமல் ஒரு ஆலயத்திற்கு அழைத்துச் சென்றோம். அந்த ஆலயம் பெருமாள் ஆலயம். பேசுகின்ற பெருமாள் என்று காஞ்சி மாநகரத்தை ஒட்டி இருக்கக் கூடிய ஒரு சிறிய ஆலயம். இதுபோன்று வார்த்தைகளில் தடுமாற்றம் பெற்றவர்கள் வாக்கு வராத குழந்தைகள் அந்த ஆலயத்திற்கு சென்று முடிந்த பொழுதெல்லாம் வழிபாடு செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் உண்டு. திருசீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் சென்று முறையாக அமைதியாக பிரார்த்தனை செய்து கொண்டு வந்தால் பலன் உண்டு. ஏற்கனவே இவ்வாறு குறைகள் உள்ள குழந்தைகளை கொண்ட அமைப்புக்கு முடிந்த உதவிகளை செய்தாலே நல்ல பலன் உண்டு. இந்த குற்றம் குறை எதனால் வருகிறது? என்றெல்லாம் பார்க்கும்பொழுது ஒரு மனிதன் ஒரு பிறவியிலே எந்த துன்பத்தை தீர்க்க முடியாமல் துன்பத்தில் ஆழ்கிறானோ அந்த துன்பத்தை அவன் பிறருக்கு செய்திருக்கிறான் என்பது பொருள். எனவே இந்த ஜென்மத்தில் கூடுமானவரை இது போன்ற பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்து கொண்டு மனதை தளரவிடாமல் இறை பிரார்த்தனை செய்து கொண்டு வந்தால் கட்டாயம் இறைவன் அருளால் நன்மைகள் நடக்கும். இறைவனை வேண்டி எமக்கு இதுவரை எந்த பலனும் இல்லை என்று எண்ணக் கூடியவர்கள் இரண்டு முடிவுகள் எடுக்கலாம். ஒன்று இறை மறுப்பு நிலைக்கு சென்று விடலாம் அல்லது மீண்டும் மனம் தளராமல் இறை வழியில் செல்லலாம். மரணம் தளராமல் பிரார்த்தனை செய்தால் நன்மை உண்டு நன்மை உண்டு நன்மை உண்டு.
சிவபெருமான் வசிக்கும் கயிலாய மலையை காவல் காப்பவராக இருப்பவர். நந்தியம்பெருமான். ஆலயங்களில் சிவபெருமானின் முன்பாக வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர் இவர். நந்தியில் 5 வகைகள் இருக்கின்றன. இவர்களுக்கு பஞ்ச நந்திகள் என்று பெயர்.
போகநந்தி:
ஒரு சமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன் நந்தி வாகனமாகி அவர்களை பூவுலகம் அழைத்துச் சென்றான். இவர் போகநந்தி ஆவார். போகநந்தி அல்லது அபூர்வநந்தி என்று அழைக்கப்படும் இந்த நந்தியானது கோவிலுக்கு வெளியே அமைந்திருக்கும்.
பிரம்மநந்தி:
பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும் முன் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். சிவன் உயிர்களைப் பாதுகாக்க அடிக்கடி உலாப் போவதால் ஓரிடத்தில் இருந்து உபதேசம் பெற பிரம்மனால் இயலவில்லை. எனவே நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். இவருக்கு பிரம்மநந்தி என்று பெயர். இந்த நந்திக்கு வேத நந்தி வேத வெள்விடை பிரம்ம நந்தி என்று பல பெயர்கள் உள்ளது. இந்த நந்தி சுதைச் சிற்பமாக பிரகார மண்டபத்தில் காணப்படும்.
ஆன்மநந்தி:
பிரதோஷ கால பூஜையை ஏற்கும் நந்திக்கு ஆன்ம நந்தி என்று பெயர். இந்த நந்தி கொடிமரம் அருகே இருக்கும். எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறார். உயிர்களுக்குள் இருக்கும் ஆன்மாக்களின் வடிவாக ஆன்மநந்தி உள்ளது.
மால்விடை:
மால் என்றால் மகாவிஷ்ணு விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும் போது மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இந்த நந்தியானது கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.
தருமநந்தி:
இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழிகாலத்தின் முடிவில் உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைபெற்று இடபடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கும். இவ்வாறு தன்னைத் தாங்கும் இடபத்தை பெருமான் ஆரத்தழுவிக்கொண்டார். இவ்வகையில் தரும நந்தியானது இறைவனைப் பிரியாது அவருடனேயே இருப்பார். இதை உணர்த்தும் வகையில் இந்த நந்தி இறைவனுக்கு அருகில் மகாமண்டபத்திலேயே எழுந்தருளியிருப்பார். பெரிய ஆலயங்களில் இத்தகைய ஐந்து நந்திகள் இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலை காஞ்சிபுரம் முதலான தலங்களில் பஞ்ச நந்திகள் சிறப்புடன் போற்றப்படுகின்றன.
ஆலயங்களுக்குத்தான் பசுக்களை தானம் செய்ய வேண்டுமா? அல்லது வேறு அமைப்புகளுக்கு தானம் செய்யலாமா?
இறைவனின் கருணையால் கோ ஆ எனப்படும் பசு தானங்களை யாருக்கு வேண்டுமானாலும் மனம் உவந்து செய்யலாம். எந்த அமைப்புக்கும் தரலாம். எந்த ஆலயத்திற்கும் தரலாம். கூடுமானவரை நல்ல முறையில் பாரமரிக்க கூடிய அமைப்பிற்கு தருவது சிறப்பு. ஆனால் ஒவ்வொன்றையும் ஆய்ந்து ஆய்ந்து பார்த்தால் இந்தக் காலத்தில் தர்மம் செய்வதே அரிதாகிவிடும். எனவே எந்த நிலையிலும் யாருக்கும் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் பல ஆலயங்களில் பசுக்களை பராமரிக்க முடியாமல் அதனை வேறு எங்காவது சென்று விற்று விடுகிறார்கள். பசுக்களை தானம் செய்வது ஒரு நிலை. ஏற்கனவே பசுக்கள் இருக்கக் கூடிய ஆலயத்திற்கு முடிந்த உதவிகளை செய்வதும் பசு தானத்திற்கு சமம்தான். இயன்ற அன்பர்கள் ஒன்றுகூடி தக்கதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு பசுக்களை பராமரிப்பதும் குறிப்பாக கொலை களத்திற்கு அனுப்பப்படும் பசுக்களையெல்லாம் நிறுத்தி அவைகளை பராமரிப்பதும் மிகப்பெரிய புண்ணியமாகும். பசுக்களை காப்பாற்று என்று நாங்கள் கூறினால் ஆடுகளை பாம்புகளை காப்பாற்ற வேண்டாம் என்று பொருளல்ல. பசுக்கள் என்பது ஒரு குறியீடு. எல்லா உயிர்களையும் அன்போடு பராமரிக்க வேண்டும் என்பது அதன் பொருளாகும். எனவே எந்த நிலையிலும் எந்த அமைப்பிற்கும் எந்த ஆலயத்திற்கும் எப்பொழுது வேண்டுமானாலும் பசு தானம் செய்யலாம்.
1008 சிவாலயம் சுற்றி வர வேண்டும் என்பதற்கு சிறப்பான காரணம் உள்ளதா?
லட்சத்து எட்டு என்று சொன்னால் மனிதன் எழுந்து போய்விடுவான். 108 என்று சொன்னால் ஒரு மாதத்திற்குள் சுற்றி வந்துவிட்டு சுற்றிவிட்டேன் என்பான். சில காலம் இங்கு (அகத்தியர் குடில்) வரவேண்டாம் என்பதற்காக தான் அவ்வாறு கூறுகிறோம். அனைவரும் இறைவனை எண்ணி ஐயர்வு காண நல்லாசிகள்.
காக்கும் கடவுளான மகாவிஷ்ணு மகாபலியின் ஆணவத்தை அடக்க வாமன (குள்ள) ரூபமாக அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக காலைத்தூக்கி மூவுலகத்தையும் அளந்து காட்டிய கோலம் இது. இந்த அவதாரத்தில் திரிவிக்ரமன் அஷ்டபுஜ விஷ்ணுவாக சித்தரிக்கப்படுகிறார். அவரது கூடுதல் நான்கு கைகளில் வில் அம்பு வாள் மற்றும் கேடயம் உள்ளன. உலகளந்தபெருமாளுக்குக் கீழே மகாபலி தானம் அளிக்கும் காட்சி உள்ளது. இடம்: இராமசுவாமி கோவில் கும்பகோணம்.
இறைவனின் கருணையைக் கொண்டு எத்தனையோ மரபுகள் வழக்கொழிந்து போயிருக்கின்றன. எத்தனையோ பூஜைகள் வழக்கொழிந்து போயிருக்கின்றன. இதுபோல் பாவனா பக்தி மார்க்கத்தில் எத்ததனையோ விஷயங்கள் இருக்கின்றன. தத்துவார்த்த பக்திக்கும் பாவனா பக்திக்கும் வெகுதூரம். சித்த நிலைக்கும் பக்த நிலைக்கும் வெகுதூரம். இருந்தாலும் சித்தனாக இருந்தாலும் ஒரு பக்தனை அல்லது பக்தி வழியை ஏன் ஆதரிக்கிறோம் என்றால் ஏதாவது ஒரு வழிமுறையை பிடித்துக் கொண்டு அவன் இறையை நோக்கி செல்ல வேண்டும் என்றுதான். குழந்தை நடக்க வேண்டும் என்பதே தாய்க்கும் தந்தைக்கும் விருப்பம். அதற்குத்தான் நடைபழக ஒரு வண்டி நடை வண்டி ஆனால் கடை (இறுதி காலம்) வரையிலும் ஒரு குழந்தை நடை வண்டியை பிடித்துக் கொண்டு நடந்தால் தாய் தந்தை அதை ஆதரிக்க மாட்டார்கள். எனவே பக்தியில் இருக்கக்கூடிய அத்தனை மரபுகளும் ஏற்புடையதே. ஒரு குழந்தையின் நடைவண்டி போல ஒரு நிலை தாண்டத் தாண்ட அந்த மரபுகளெல்லாம் அடுத்த குழந்தைக்கு பொருந்தும் என்று கூறிவிட்டு இந்த குழந்தை வளர வேண்டும்.
சிறுகுழந்தையாக இருக்கும் பொழுது அட்சரம் அட்சரமாக கூட்டி வாசிக்கும் பொழுது ஆஹா என் குழந்தை நன்றாக கல்வி கற்கிறான் என்று அனைவரும் பெருமிதம் கொள்வார்கள். 20 வருடம் கடந்த பிறகு எங்கே நீ என்ன கற்றிருக்கிறாய் கூறு எனும் பொழுது முன்பு போலவே அட்சரம் அட்சரமாக எழுத்தை கூட்டி வாசித்தால் யாரும் பாராட்ட மாட்டார்கள். எனவே பக்தி வழியில் சம்பிரதாயங்கள் அனைத்தும் ஏற்புடையதே உயர்ந்ததே. ஆனாலும் அதே இறைவனிடம் கரைவரையும் அழைத்துச் செல்லாது.
அதுபோலவே புத்தி வளர வளர எப்படி உலகியல் முறைகள் எல்லாம் மாறிக் கொண்டு வருகிறதோ பக்தியில் மேலே ஏற ஏற பல்வேறு மரபுகளை தாண்டி ஒரு மனிதன் அமைதியாக அமர்ந்து உள்ளத்திற்குள் இறைவனை தேடுகின்ற நிலைக்கு வந்துவிட வேண்டும். இருந்த போதிலும் இதுபோல் சேயவள் கேட்டிட்ட வழிபாடெல்லாம் ஒரு வளர்ச்சியை நன்றாக கவனிக்க வேண்டும். இப்பொழுது கூட திருமண சடங்குகளில் இது பயன்பட்டு வருகிறது. இது போல் அடுத்தடுத்து வாழையடி வாழையாக ஒரு வளர்ச்சி வேண்டும் என்று மனதிலேயே வளர்த்துக் கொண்டு முற்காலத்தில் இதுபோன்ற பழக்க வழக்கங்களை ஏற்படுத்தினார்கள். இன்னும் இதைத் தாண்டி இன்னும் பல்வேறு விதமான மங்கலம் என்கிற பொருள் பட பல்வேறு பழக்க வழக்கங்கள் ஆலயங்களில் ஏற்படுத்தப்பட்டது. அனைத்தும் சுபத்தை சுட்டிக் காட்டுவதாகா இனியாவது வாழ்க்கை சுபமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பாவங்கள் ஒரு மனிதனை எந்த அளவிற்கு வாட்டினாலும் இனி இது போல் வழிபாட்டிற்கு பிறகு அந்த குறிப்பிட்ட பாவம் அவனை விட்டு விலக வேண்டும் என்பதற்காகவும் எல்லாவற்றையும் தாண்டி கடும் களத்திர தோஷம் நீங்க வேண்டியும் வழிபாட்டு முறை முற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.
இதைத் தாண்டி இன்னவளுக்கு போதிக்கப்பட்ட விஷயமும் இதில் அடங்கும். பத்திரம் என்ற சொல்லுக்கு எத்தனை பொருள் இருக்கிறது? கவனம் என்று சொல்லும் வருகிறது. அதி முக்கியம் என்ற சொல்லும் வருகிறது. ஆஸ்தி குறித்து ஒரு சாசனம் எழுதி வைத்தால் அதற்கும் இந்த பெயர் வருகிறது. இதே போல் இறைவனுக்கு சாற்றுகின்ற வில்வத்திற்கு பின்னால் இந்த சொல் பொருந்தி வருகிறது. இன்று சாளக்கிராம மூர்த்தி திருவடியை வணங்கினீர்களே? அதுபோல் ராமருக்கு பிரியமான பக்தன் ராமதாசன் என்ன செய்தான்? அந்த பத்ராசனத்திலே ராமருக்கு அற்புதமான ஆலயம் ஒன்றை எழுப்பியிருக்கிறான் கோதாவரி நதிக்கரையிலே. இவற்றை சரியாக சொல் ஆய்ந்து பார்த்தால் மிக அதி முக்கியம் என்று சொல்லானது வருகிறது. ஆனால் தெய்வ சந்தித்தியம் என்று வரும்பொழுது அதி அதி அதி அதி கூர்மையான அதி அதி தேவையான என்ற பொருள் வருகிறது வேற்றையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது அது தெய்வத்தை சார்ந்த, தெய்வத்தை தொழ, தெய்வ அருளை பெற உதவியாக தேவையாக இருக்கக் கூடிய ஒரு சூழலை தருவதால் இன்னவள் கூறிய இந்த விஷயம் அந்த பொருள்படும்படி அதற்கு சூட்டப்படுகின்றது. இருந்தாலும் இந்த தத்துவார்த்த விளக்கத்தை சார்ந்து இதுபோல் கூறும் பொழுது இது போன்ற நல்ல விதமான விஷயங்கள் எல்லாம் பொதுவாக எதற்காக தெய்வத்தோடு இணைக்கப்பட்டது? என்றால் ஒரு மனிதன் சராசரி நிலையிலிருந்து எடுத்த எடுப்பிலேயே தத்துவார்த்தமாக தெய்வத்தை புரிந்து கொள்ள முடியாது என்பதற்காகத்தான் தல விருட்சமோ நதி தொடர்பான விசயமோ மற்ற விஷயங்களோ ஏற்படுத்தப்பட்டது. இவைகளை எல்லாம் தாண்டி பக்தியில் எத்தனையோ விஷயங்கள் வழக்கொழிந்து இருக்கின்றன. அவையெல்லாம் கால ஓட்டத்தில் மெல்ல மெல்ல மேலே மேலே வரும்.
அதுபோல் பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் எல்லாம் சில ஜாதக நிலைக்கு ஏற்புடையதாக இருக்கும். பல ஜாதக நிலைக்கு அமையாமல் விதி தடுத்து விடும். இறைவனின் கருணையை கொண்டு இருக்கின்ற பரம்பொருள் ஒன்று வடிவங்கள் வேறு. இந்த வடிவங்களில் ஆண் தன்மை பெண் தன்மை என்று இரு பகுதியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. எப்பொழுதுமே ஒரே ஒரு சக்தி அது எந்த ஆற்றலாக இருந்தாலும் அந்த ஆற்றலில் கட்டாயம் இரு துருவங்கள் இருக்கத்தான் செய்யும். அது இயல்பு. அது போல் ஒரே சக்தியின் இரு நேர் வடிவங்கள் தான் ஆண் சக்தி பெண் சக்தி. ஆண் பெண்ணை தாண்டியது தான் பரம்பொருள் தான் என்பது உண்மையான தத்துவார்த்த விளக்கம். இதனையும் தாண்டி சிறு சிறு வடிவங்கள் கூட பரம்பொருளுக்கு சுட்டப்பட்டு விட்டது. இன்னொன்று இருக்கிறது. நன்றாக வாழ்ந்து பாவங்களையே சேர்க்காமல் பாவங்களை எல்லாம் அனுபவித்து பரிகாரம் செய்து பல புண்ணியக்காரன் காரியங்கள் செய்து முழுக்க முழுக்க புண்ணிய ஆத்மாவாக ஒரு பிறவியை அல்லது எத்தனையோ பிறவிகள் எடுத்து முடித்துக் கொண்ட ஆத்மாக்கள் எல்லாம் பதிவு உயர்வு என்று மனிதனால் கொடுக்கப்படுவது போல இறைவனால் சிறு சிறு தேவதை வர்க்கங்களாகவும் அல்லது காவல் தெய்வங்கள் ஆகவும் பதவி உயர்வு தரப்படுகிறது. அப்படியெல்லாம் கூட பல தெய்வ வழிபாடுகள் தோன்றி இருக்கின்றன.
இவைகள் ஒரு புறம். அதே சமயம் பைரவர் மூர்த்தங்களை 64 என்று மனிதர்கள் கருதுகிறார்கள். அல்ல 108 பைரவ மூர்த்தங்கள் அதற்கு மேலும் உண்டு. இதில் மனித லோகத்திற்கு என்று சில பைரவ வழிபாடுகள் கூறப்பட்டிருக்கின்றன. பாதாள லோக பைரவ வழிபாடு என்று இருக்கிறது. அதே சமயம் பல்வேறு மலினங்களையும் தவறுகளையும் செய்தாலும் மனித பக்தியில் மட்டும் எங்காவது எள்ளளவு கடுகளவு பக்தி இருந்தாலும் இறைவன் ஏற்றுக் கொண்டு விடுகிறார். ஆனால் பாதாள லோகம் மேலுலகம் தேவருலகம் யட்சர் உலகம் அசுர உலகத்தில் எல்லாம் கடுகளவு பிழை என்றாலும் இறைவன் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் தான் எப்பொழுதுமே இறைவனுக்கு மனிதர்கள் செல்லப் பிள்ளைகள் என்கிற கோபம் அனைத்து மேல் உலக வர்க்கத்தினர் இடமும் இருக்கிறது. அதனால் தான் சிறு சிறு தேவர்கள் கூட பல்வேறு தருணங்களில் எத்தனை தவறுகள் செய்யும் மனிதர்களுக்கு ஏன் இறைவன் இத்தனை சலுகைகள் காட்டுகிறார் என்றெல்லாம் கூட இறைவனை பார்க்கும் பொழுது எதிர்வாதம் செய்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்கட்டும். அதைப்போல விநாயக மூர்த்தங்கள் என்று எடுத்துக் கொண்டால் அதையும் 108 என்று வகை வகையாக பிரிக்கலாம். இதை அறிவு பூர்வமாக எப்படி புரிந்து கொள்வது? ஒரு மனிதன் இருக்கிறான் ஒரு அலுவலகத்தில் குறிப்பிட்ட பணி அவனுக்கு தரப்படுகிறது. இன்ன பதவி என்று நாமும் இடப்பட்டு அவனுக்கு என்று ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. பிறகு வேறு சில காரணங்களுக்காக அதைத் தாண்டி அந்த பணி இருக்க வேறொரு வேலை கொடுக்கப்படுகிறது. அப்பொழுது அதே மனிதன் வேறு சில வேலைகளை செய்ய வேண்டி இருக்கிறது. அப்பொழுது அவனுக்கு வேறு நாமம் கொடுக்கப்படுகிறது. பிறகு இன்னும் சில காலங்கள் கழித்து வேறொரு பணி கொடுக்கப்படுகிறது. இப்பொழுது அவன் முதலில் செய்த பணி தொடர்பாக ஒருவன் வந்தால் நீ கூறுவது உண்மைதானப்பா. அந்த பணியும் எனக்குத்தான் ஆனால் அதைத் தாண்டி இப்பொழுது வேறு சில பணிகள் வந்து விட்டதால் அதை செய்ய வேண்டி இருக்கிறது. எனவே எனக்கு பதிலாக அந்த இடத்தில் வேறு ஒருவனை நிறுவனம் அமர்த்தி இருக்கிறது. அவனை சென்று பார் என்று கூறுவானே அதைப்போல அதே பரம்பொருள் ஒரு மனிதனை என்ன வேண்டும்? எதற்கு இறைவனை நாட வேண்டும்? என்ன விஷயமாக நாட வேண்டும்? என்றெல்லாம் தோன்றும் பொழுது சராசரி பக்தி நிலையிலேயே கல்வி வேண்டுமென்றால் அந்த பரம்பொருளை நீ கலைவாணியாக பாரப்பா கல்வியோடு ஞானம் வேண்டும் என்றால் ஹயக்ரீவராக பாரப்பா இல்லை எனக்கு பொருள் வேண்டுமென்றால் அந்த பரம்பொருளை லட்சுமியாக பாரப்பா என்று புரிவதற்காக குறிக்கப்பட்டது. அதிலும் உப விஷயங்களாக சில வழிபாடுகள் கால ஓட்டத்தில் மகான்களாலும் மனிதர்களாலும் வகுக்கப்பட்டது.
இப்படி பிரித்து பிரித்து பரம்பொருளை வணங்கினாலும் அல்லது ஏதாவது ஒரு வடிவத்திற்குள் வணங்கினாலும் அல்லது வடிவமே இல்லாத பேராற்றல் ஆக எண்ணி வணங்கினாலும் வழிபாடு என்பது முக்கியம். மனதிலேயே சுத்தத் தன்மை எந்தவிதமான எதிர்பார்ப்பு இல்லாத பக்தி முக்கியம். அந்த வகையில் நீ கூறியதை தாண்டியும் அன்னை கலைவாணிக்கு வடிவங்கள் உண்டு. வடிவம் எடுக்க வேண்டும் என்று பரம்பொருள் எண்ணிவிட்ட பிறகு அது எப்படி எண்ணிக்கைக்குள் அடங்கும் 64 தான் என்று ஒரு மனிதன் கூறினால் ஏன் 108 ஆக தாயே நீ வடிவம் எடுக்க கூடாதா? என்று ஒரு பக்தன் கேட்பான். இன்னொரு பக்தன் 1008 ஆக எடுக்கக் கூடாதா? என்று கேட்பான். எனவே அது இத்தனை என்ற எண்ணிக்கைக்குள் அடங்காத வடிவம் எனவே எப்படி நீ வழிபட்டாலும் அது வழிபடும் மனிதனின் கர்ம வினையை பொருத்தி பரம்பொருளின் அனுகிரகம் இருக்கும். அதே தருணம் 64 தான் என்று முடிவெடுத்து அதற்குள் வழிபாட்டினை சுருக்கிக் கொண்டாலும் தவறு ஒன்றும் இல்லை. இருந்தாலும் ஒட்டுமொத்த ஞானமும் கல்வியும் பரம்பொருளிடம் இருந்து ஒரு வித்தையை கற்க வேண்டிய முறைகளை ஒரு மனிதன் புரிந்து கொள்ள தெரிந்து கொள்ள தெரிந்து கொள்ள அறிவுப்பூர்வமாக கேட்பவர்களுக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம். இறைவன் நேரடியாக ஒரு மனிதனுக்குள் புகுந்து கொண்டோ அல்லது தன் ஆற்றலை பாய்ச்சியோ எவ்வாறு இதை செய்ய முடியும்? என்று கேட்பவர்களுக்கு அந்தந்த தெய்வங்களுக்கு உரிய நாம வழியை அல்லது தெரிந்த மந்திரத்தை உள்ளன்போடு உருவேற்ற உருவேற்ற எதை எண்ணி மனிதன் உருகுகின்றானோ சிந்தனையில் அந்த பகுதி ஜொலிக்க துவங்கும். அது அவனுக்குள் இன்னும் மெருகேற துவங்கும். இன்னுமொரு வகையில் கூறப்போனால் அது அவனுக்குள்ளேயே இருக்கிறது. அது எங்கே? என்பதை அவனுக்கு இறைவன் சுட்டிக்காட்டுகிறார்.