திருலோக்கி

குருபகவானுக்கு ரிஷபவாகனத்தில் காட்சியளித்த உமாமகேஸ்வர வடிவம். அணைத் தெழுந்த பிரானின் அழகுத் திருமேனி நந்தியின் மேல் ஒரு பீடத்தில் சிவம் தழுவிய சக்தியாக அல்லது சக்தி தழுவிய சிவமாக காட்சியளிக்கும் அரிய திருமேனி. பின் இரு கரங்களில் சூலம் மான் ஏந்தியும் முன் வலது கரம் அபய முத்திரையுடனும் திகழ இடது கரம் அம்பிகையை அணைத்த அழகு வடிவம். பெருமான் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்துள்ளார். அம்பிகையின் வலது கரம் பெருமானது இடுப்பைப் பற்றிக் கொண்டும் இடது கரத்தில் மலர் ஏந்தியும் உலக நாயகனைப் பார்த்து ரசிக்கும் பூரிப்பில் அவர் முகம் பார்த்தபடி காட்சியளிக்கிறாள். இந்த உமாதேவியின் பெயர் பார்யா சௌக்யப்ரதாயினி என்பதாகும்.

அம்பிகை வலது காலை சாய்த்துத் தொங்கவிட்டுக் கொண்டு இடது காலை மடக்கி உடம்பை வளைத்துக் கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறாள். இருவரும் அமர்ந்திருக்கும் பீடத்தின் மேற்புறம் கந்தர்வர்கள் கானம் செய்கிறார்கள். கின்னரர் வாத்தியம் வாசிக்கிறார்கள் நடன மங்கையர் ஆடுகின்றனர். இவை அனைத்தையும் எந்த ஒரு ஆரவாரமின்றி அவர்களைத் தமது முதுகில் தாங்கிக் கொண்டு அமைதியாகக் காட்சியளிக்கும் நந்தியெம் பெருமானின் மிடுக்கான தோற்றம் மிக அருமை.

தமிழகத்தில் வேறு எங்கும் காண இயலாத மிகமிக அற்புதமான வடிவமாகும். இந்தத் திருக்கோலத்தைத் தரிசிக்கவே பல்லாண்டுகள் தவமிருந்ததுபோல் அருகில் கிழக்கு நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிக்கொண்டு நவகிரக குருபகவான் பக்திப் பரவசத்துடன் காட்சியளிக்கும் பாங்கே அலாதியானது. சாதாரணமாக எல்லா தலங்களிலும் அபய முத்திரையுடன் காட்சியளிப்பார் குரு. இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் வணங்கும் கோலத்தில் காட்சியளிப்பது மிகவும் சிறப்பானது. குரு பூஜித்து பேறு பெற்ற ஒப்பற்ற தலம் திருலோக்கி.

இடம் அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பகோணம் அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் திருலோக்கி கோவில் அமைந்துள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 494

கேள்வி: கோவில்களின் கும்பாபிஷேகம் நடக்க ஆசிகள் மற்றும் நீதிக்கதை ஒன்று:

இறைவனின் கருணையைக் கொண்டு நல்விதமாய் இதுபோல் பல்வேறு ஆலயங்கள் கலச விழா காண வேண்டும் என பல பக்தர்கள் எண்ணுகிறார்கள். கட்டாயம் நடக்கும். நல்விதமாய் பல நல்ல உள்ளங்கள் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தால் அதில் உள்ள எதிர்ப்புகள் குறைந்து நல்ல ஆத்மாக்களின் உதவியால் விரைவில் அதுபோல் திருப்பணி நடக்கும். இதுபோல் நடக்கின்ற நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டே இருந்தால் ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் நீதி இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் அற்புதமான கருத்தும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தக்க காலத்தில் மிக சிறந்த நீதிக்கதையை யாங்கள் போதிப்போம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 493

தீய பழக்கங்களால் சிறு பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர்:

அமாவாசை தோறும் அன்னை காளிக்கு வழிபாடு செய்தால் இது போன்ற தவறான பழக்கங்களுக்கு தத்தம் பிள்ளைகள் ஆட்படாமல் காத்துக் கொள்ளலாம். இது பக்தி மார்க்க வழி. அடுத்ததாக ஒரு சமுதாயம் தவறான ஒரு செயலை செய்வதாக மனிதன் எண்ணுகிறான். அதே சமுதாயம் பல நல்ல விஷயங்களையும் செய்து கொண்டு இருக்கிறது. அதற்கு எத்தனை மனிதர்கள் ஆதரவு காட்டுகிறார்கள்? ரத்த தானம் செய்யுங்கள் என்று கூறினால் அதைக்கண்டு மனிதன் இன்னும் அஞ்சுகிறான். உடலை தானம் தரலாம் என்று நாங்கள் கூறினாலும் அது குறித்து இன்னும் மூடப்பழக்கங்களில் மூழ்கிக் கொண்டு இன்னமும் மூடத்தனமாகவே வாழ்கிறான். விழி தானம் செய்யுங்கள் என்றால் எத்தனை பேர் முன் வருகிறார்கள்? எனவே நல்ல விஷயங்களை பார்க்க சிந்திக்க பின்பற்ற குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும். அடுத்ததாக கடுமையான பித்ரு தோஷங்கள்தான் குழந்தைகளுக்கு தீய பழக்க வழக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே மனம் தளராமல் நாங்கள் கூறிய வழிபாட்டை செய்வதோடு கால பைரவர் வழிபாட்டையும் செய்து வந்தால் நல்ல பலன் உண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 492

கேள்வி: ஊட்டத்தூர் பற்றி:

ஆன்மாவிற்கு அதிகம் புண்ணியத்தை ஊட்டும் ஊரப்பா. அன்னவன் கூறியதுபோல இவை சிறப்பான அபூர்வமான ஸ்தலங்கள். அதுபோல் அந்த நடராஜர் சிறப்பான நடராஜர். தன் பிள்ளைகள் கலைகளிலே தேர்ச்சி அடைய வேண்டும் விற்பன்னனாக வேண்டும் என்ற ஆசையிருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரத்திலோ அல்லது வாய்ப்பு இருக்கும் பொழுதோ சென்று உயர்வான முறையிலே வழிபாடு செய்து வந்தால் கட்டாயம் அந்த கலைஞானத்தை முக்கண்ணன் ஆடல்வல்லான் மூலம் வழங்குவார். எனவே அங்கும் முடிந்தவரை சிறப்பான முறையிலே கலப்படமில்லாத பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்வது தூய சந்தனக்காப்பு செய்வதும் இங்குள்ள அன்பர்களுக்கும், அங்கு வரக்கூடிய அன்பர்களுக்கும் சிறப்பைத் தரும். கலை என்றால் அனைத்தும் கலைதான். ஆன்மீகமும் இந்த கலையில் சேரும். ஆன்மீகத்திலிருந்து பிறவியற்ற நிலையை அடைவதும் ஒரு கலைதான். ஞானமும் ஒரு கலைதான். அதற்கும் அங்கு சென்று வழிபாடு செய்யலாம்.

இக்கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

ஸ்ரீசக்ராத்தில் அனுமான்

கர்நாடகாவின் ஹம்பியில் உள்ள யந்த்ரோதரகா அனுமான் கோவிலில் கிரானைட் பாறையில் கட்டப்பட்ட ஸ்ரீசக்ராவின் மையத்தில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அனுமான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 491

கேள்வி: ஆலய சிலாரூபங்களை தூய்மைப்படுத்தும் போது கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தினால் தெய்வங்களுக்கு வலிக்குமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதனால் எதைப் பயன்படுத்தி சிலாரூபங்களை தூய்மைப்படுத்துவது?

இறைவனின் கருணையால் யாங்கள் இயம்புகிறோம். இறைவனின் சிலாரூபங்களை சேதப்படுத்துவதாலோ அல்லது மனித பார்வையிலே அவமானப் படுத்துவதாலோ அல்லது அதனை கூரான ஆயுதங்களால் சுத்தப்படுத்துவதாலோ வலிக்கிறது என்பதை விட மனிதர்கள் நடந்து கொள்வதை பார்க்கும் பொழுதுதான் இறைவனுக்கு அதிகமாக வலிக்கிறது. எனவே மனிதர்கள் தன்னை திருத்திக் கொண்டு நல்லவனாக உயர்ந்த குணங்களைக் கொண்டவனாக வாழ்ந்துவிட்டு தன்னை தூற்றினாலும் கூட இறைவன் முழுமனதோடு ஏற்றுக் கொள்வார். இருந்த போதிலும் கூட அற்புதமான சிலாரூபங்கள் பல்வேறு பக்தர்களுக்கு இறைவனாகவே காட்சி தருவதால் அதனை கையாளும் போது கவனம் வேண்டும்.கூர்மையான ஆயுதங்களை தவிர்ப்பது நல்விதமான வேறு முறைகளை கையாள்வது நல்ல பலனை நல்கும். இதுபோல் நல்விதமாய் சாத்வீகமான பொருள்களை பயன்படுத்தி சுத்தி செய்கின்ற முறைகள் இருக்கின்றன. மூலிகை சாறினை பயன்படுத்தலாம். உயர்வான முறையிலே தயிரை எடுத்து அதோடு அரிசி மாவினையும் கடலை பருப்பை மாவாக்கி அதனையும் பச்சைப் பயிறை மாவாக்கி அதனையும் சேர்த்து நல்விதமாக சிலாரூபங்கள் முழுவதும் தேய்த்து தூய்மையான பருத்தி துணி கொண்டு அதனை மென்மையாக தேய்த்து சுத்தி செய்யலாம். அரசக்கனியின் சாற்றைக்கொண்டு சுத்தி செய்யலாம். இது போன்ற சில முறைகளை கையாள்வது சிறப்பு.

சங்கிலிப் பூதத்தான்

சங்கிலிப் பூவத்தான் என்ற பெயர் மருவி சங்கிலிப் பூதத்தான் ஆகியது. இதுவே பிற்காலத்தில் குழந்தைகள் பயப்படும் பூதம் என்று பெயர் வந்தது. இவர்கள் யார் என்றால் இறைவனின் அருகிலேயே இருக்கும் சிவ கணங்கள் ஆவார்கள். சிவ கணங்கள் தவறு செய்யும் போது அல்லது சாபத்தினால் பூமிக்கு அனுப்பப்படும்போது அவை பூதங்களாகி விடுகின்றன. இவர்களது வேலை தீயவர் கயவர் நயவஞ்சகர் ஏமாற்றுபவர் பித்தலாட்டம் செய்பவர் கொள்ளையர் திருடர் கொலைகாரர் காமக்கொடூரர் எத்தர் என தர்மத்தை கடைபிடிக்காத அடுத்தவர்களுக்கு துன்பத்தை கொடுப்பவர்களை விழுங்கி இந்த பூதங்கள் தங்களின் பசியாற்றிக் கொள்ள வேண்டும். இந்த படத்தில் இருக்கும் சங்கிலி பூதத்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் மரத்தேரில் உள்ளவர் ஆவார்.

அவதாரத்ரய அனுமான்

மந்திராலயத்தில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நவபிருந்தாவனத்தில் இந்த அனுமன் அருள் பாலிக்கிறார். மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த அனுமான் இவர். திரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவை செய்வதற்காக அனுமனாகவும் துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சேவை செய்வதற்காக பீமனாகவும் இக்கலியுகத்தில் ஸ்ரீ வியாச சேவை செய்ய மத்வராகவும் அவதாரம் செய்தார் இந்த மூன்று அவதாரங்களும் ஒன்றாக இணைந்தவர்தான் அவதாரத்ரய அனுமான். அனுமன் முகமும் பீமனை குறிக்கும் புஜங்களும் மத்வரை குறிக்கும் பகவத்கீதை சுவடியும் கொண்டு சேவை சாதிக்கின்றார். இவருக்குப் பின்னே சங்கு சக்ரங்களுடன் ஸ்ரீ நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இந்த அவதாரத்ரய அனுமனை வியாஸராஜர் பிரதிஷ்டை செய்தார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 490

கேள்வி: நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் பற்றி கூறுங்கள்:

இறைவனின் கருணையாலே நல்விதமாய் இறைவனை தாங்குகின்ற வாகனமாக தர்மமே நந்தியாக அவதாரம் செய்திருக்கிறது. எனவே அதுபோல் நந்தியின் திருக்கல்யாணம் என்பது மனிதர்களின் திருமண தோஷத்தை நீக்கக் கூடிய வகையிலே நடத்தப்படுவதாகும். இதற்குள் இன்னும் பல தத்துவார்த்த விளக்கங்கள் இருக்கின்றன. அங்கே தர்மம் வாழத் துவங்குகிறது. தர்மம் இறைவனை தாங்கி நிற்கிறது. இறைவனை தாங்குவது தர்மம்தான். எனவே அந்த இடத்திலே அதை நந்தியாக பாராமல் தர்மமாக பார்த்துவிட்டால் அந்த தர்மத்தை கடைபிடித்து எல்லோரும் வாழவேண்டும் என்பதின் உட்பொருள்தான் நந்தியெம்பெருமானின் திருமணம்.