எல்லாப் பக்கங்களிலும் நிறைந்த நீர் நிலையை அடைந்த பிறகு சிறிய நீர் நிலைகளினால் எவ்வள்ளவு பயன் இருக்கிறதோ பிரம்மத்தை தத்துவ ரீதியாக உணர்ந்த பிராமணனுக்கு அனைத்து வேதங்களினாலும் அவ்வளவு பயன் தான் கிடைக்கும்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
தண்ணீர் தாகம் கொண்ட ஒருவனுக்கு எவ்வளவு பெரிய நீர் நிலைகள் கிடைத்தாலும் தாகம் தீரும் அளவிற்கே தண்ணீர் தேவைப்படும். தண்ணீர் குடித்து தாகம் தீர்ந்ததும் அவனுக்கு பெரிய மற்றும் சிறிய கிணறு குளம் போன்றவைகள் தேவைப்படாது. அது போலவே மோட்சத்தை தேடும் ஒருவனுக்கு வேதங்களில் எவ்வளவு கருத்துக்கள் இருந்தாலும் மோட்சத்திற்கு செல்லத் தனக்கு தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்வான். மீதி உள்ளதை பற்றி நினைக்க மாட்டான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
காளி அம்பாள் எப்போதும் கையில் தமருகம் சூலம் கட்கம் கபாலம் கேடகம் முதலிய ஆயுதங்கள் கொண்டு கோப ரூபத்துடன் காட்சியளிப்பவள். ஆனால் இக்கோயிலில் குடிகொண்டுள்ள அன்னை காளிகாம்பாள் வடிவம் எழில் கொஞ்சும் திருமேனியுடன் ஆணவத்தை அடக்கும் அங்குசம் ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம் சுகபோகத்தினை நல்கும் நீலோத்பல மலர் மற்றும் வரத முத்திரை சோமன் சூரியன் அக்னி என்ற மூன்று கண்கள் நவரத்ன மணிமகுடத்துடன் வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலத்துடன் காணப்படுகிறாள். காளிகாம்பாள் மகாலட்சுமியையும் சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும். காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். திருவடியில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சக்கரம் அர்த்த மேருவாக அமைந்துள்ளது. காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம் காஞ்சிபுரத்து காமாட்சி அம்மனாகும். சிவபெருமான் கமடேஸ்வரர் என்ற பெயரில் காட்சி தருகிறார். இத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது. உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர் நவக்கிரகங்கள் வள்ளி தெய்வானையுடன் முருகர் ஸ்ரீவீரபகாமங்கர் அவர் சீடர் சித்தையா. கமடேஸ்வரர் துர்கா சண்டிமகேஸ்வரர் பைரவர் பிரம்மா சூரிய சந்திரர்கள் உள்ளனர். வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர் கொடி மரம் வடகதிர்காம முருகன் சித்தி புத்தி விநாயகர் காயத்ரி துர்கா யாகசாலை நடராசர் மகாமேரு வீரபத்திர மகா காளியம்மன் நாகேந்திரர் விஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன. மேற்கு நோக்கிய நிலையில் ஆஞ்சநேயர் உள்ளார். இத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல் குண வாயில் என்றும் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் குட வாயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தல விருட்சமாக மாமரம் உள்ளது. வடமேற்குப் பகுதியில் சித்திபுத்தி விநாயகரும் அகோர வீரபத்திரசாமியும் மாகாளியும் வடகதிர்காம முருகனும் உள்ளனர்.
காளிகாம்பாள் கோயில் ஆரம்பத்தில் கடற்கரைப் பகுதியில் இப்போதைய புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பே இருந்தது. காளிகாம்பாள் ஆலயம் சுமார் 3000 ஆண்டு பழமையானது. இதனால் கோட்டையம்மன் என்றும் செந்தூரம் சாத்தி வழிபட்டதால் சென்னியம்மன் என்றும் அம்பாள் அழைக்கப்பட்டாள். இதிலிருந்தே சென்னை என்கிற பெயர் வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கிறது. பின்னர் 1640ம் வருடம் புனித ஜார்ஜ் கோட்டை கட்டத் தொடங்கியதும் கோவிலை அகற்ற அப்போதைய ஆங்கிலேயர்கள் முடிவு செய்தார்கள். உடனே முத்துமாரி ஆச்சாரி என்பவர் இப்போதுள்ள தம்புச் செட்டித் தெருவில் காளிகாம்பாள் கோயிலை நிர்மாணித்தார். ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் 1952 ம் ஆண்டு இந்த வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து உள்ளம் உருகுதடா என்ற பாடலை பாடினார். இதுவே பின்னாளில் உள்ளம் உருகுதைய்யா என டி.எம்.எஸ் குரலில் தமிழகம் முழுவதும் ஒலித்தது. கோயில் கோபுரம் 1983ல் கட்டி முடிக்கப்பட்டது.
தெற்கு நோக்கி படையெடுத்து வந்த மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி 3 அக்டோபர் 1677ம் வருடம் இந்தக் கோயிலில் வழிபட்டுள்ளார். இதற்கான குறிப்பு இக்கோவில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் வேலை பார்த்த போது தினமும் காளிகாம்பாளை வந்து வணங்குவார். யாதுமாகி நின்றாய் காளி என்ற பாடலை அவர் காளிகாம்பாளை மனதில் நினைத்தே எழுதினார். மச்ச புராணம் வாமன புராணம் கூர்ம புராணம் லிங்க புராணம் பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் இந்த கோவில் பற்றி குறிப்புகள் உள்ளது. புராணங்களில் இத்தலம் சொர்ணபுரி பரதபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் பூந்தேர் கிண்ணித்தேர் வெள்ளித் தேர் என்று மூன்று வகையான தேர்கள் உள்ளன. இந்த கோவிலில் உள்ளது போன்று இந்தியாவில் வேறு எங்கும் எந்த தலத்திலும் கிண்ணித் தேர் இல்லை. பாரதியார் பன்றிமலை சுவாமிகள் காயத்ரி சுவாமிகள் தவத்திரு ராமதாசர் உள்பட பல மகான்கள் ஆன்மீகப் பெரியோர்கள் காளிகாம்பாளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். காளிகாம்பாள் அருள்புரியும் இத்தலத்தில் இந்திரன் குபேரன் விராட் புருஷனான ஸ்ரீ விஸ்வகர்மா ஆகியோர் போற்றி வழிபட்டுள்ளனர். நாகலோக கன்னிகளும் தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜென்ம புண்ணியங்களை அடைந்துள்ளனர்.
அப்பனே வாழ்த்துக்கள் ஆசிகள். ஆயினும் மனிதர்களைப் பற்றி யாங்கள் (சித்தர்கள்) அறிவோம். ஒன்று கூடி அறம் (நீதி வழுவாத நல்ல ஒழுக்கப் பழக்க செயல்கள்) செய்யலாம் என்று ஆரம்பிக்கப்பட்ட எத்தனையோ அமைப்புகள் சீர் கெட்டுத்தான் உள்ளன என்பதால் இது நல்ல நோக்கம் உந்தனுக்கு என்றாலும் நலமில்லாதுதான் போகும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு மனிதனும் மெய்யாக ஆன்ம சேவை அற சேவை செய்ய விரும்புங்கால் பாதகம் இல்லை. நவில்வோம் அதிலும் சுய விளம்பரத்தின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என விரும்புவான். நன்றில்லா பல குழப்பங்களை ஏற்படுத்துவான் என்பதால் தனி மனித ஈடுபாடு என்பது வேறு. பல மனிதர்களை ஒன்று திரட்டி ஒரு கருத்தை இயக்கச் செய்வது என்பது வேறு. இறையாலும் அது இயலாதப்பா. பல ஏளனங்கள் ஏச்சுக்கள் நீ ஏற்க வேண்டி வரும். தனத்தில் பல தடைகள் சிக்கல்கள் வரும் என்பதால் செய்வது எமக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் சில கழித்து நன்றாக நடக்கும் என்றாலும் ஆரம்ப நிலையில் நீ பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். எம் அருளாசி என்பது வேறு. காலம் அது உன் ஆத்மாவை கடைத்தேற்றும். உலகியலில் ஏற்படும் சில பல சிக்கல்களுக்கு எமது அருளாசி என்றால் அது நடைமுறை சாத்தியம் ஆகாது. நல்ல எண்ணம் நல்ல செயல் செய்வது எமக்கு திருப்தியே என்றாலும் மேல் கூறியதை கவனத்தில் வைத்து செயல்படு.
கேள்வி: திருப்பதி சென்று வர எனக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும்:
ஒன்றை புரிந்து கொள். சகலவித ஆதரவோடு மெய்யான மெய்ஞானத்தை நோக்கி வர முடியாதப்பா. எல்லோருக்கும் உலகியல் வாழ்க்கை வேண்டும். சித்தனை பார்த்தாயே நாடி பார்த்தாயே என்ன கிடைத்தது? இந்த ஆலயத்திற்கு சென்றால் பட்டம் பதவி உடல் ஆரோக்கியம் கிட்டுமா? என்றுதான் பார்க்கிறார்கள். எனவே சகல உறவுகளின் ஆதரவோடு எமது வழியில் யாரும் வர முடியாது. எதிர்ப்புகளில் தான் வாழ வேண்டும். எதை செய்தாலும் சுவையாக சுகமாக எமது வழியில் (சித்த மார்க்க வழியில்) செய்யலாம் என்று மட்டும் எண்ண வேண்டாம். பல போராட்டங்களும் உண்டு. அருமையான அற்புதமான சாலை அல்ல எமது சாலை. கற்களும் முற்களும் ஆணித் துண்டங்களும் நிறைந்தது எமது சாலை. பாதத்தில் ரணம் ஏற்படும். குருதி வழியும். வலிக்கும். அதோடுதான் வர வேண்டும். ஏனென்றால் எளிய மார்க்கம் (எளிய வழி) என்றால் அனைத்து மூர்க்கர்களும் இது வழியாக வருவார்கள்.
அர்ஜுனா வேதங்கள் மூன்று குணங்களின் செயல்களான போகங்களையும் அவற்றின் சாதனை முறைகளையும் தெளிவாக சொல்கின்றன. நீ இந்த மூன்று குணங்களையும் கடந்தவனாக இருப்பாயாக. போகங்களிலும் அவற்றின் சாதனங்களிலும் பற்று கொள்ளாதவனாக இரட்டைகளாக வரும் நன்மை தீமை இருள் வெளிச்சம் சுக துக்கம் போன்றவற்றிற்று ஆட்படாதவனாக நித்யப் பொருளான பரமாத்மாவிடம் நிலை பெற்று லோக சேமத்திற்காக பொருள் சேர்ப்பது அதனை காப்பாற்றுவது என்பதை விரும்பாதவனாக தனக்கு வசப்பட்ட மனமுடையவனாக ஆகக்கடவாய்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
சாத்விகம் இராஜசம் தாமசம் என்ற மூன்று குணங்களை வேதங்கள் சொல்கின்றன. மனிதனுக்கு மனிதன் குணம் மாறுபடும். இவை அனைத்தும் சாத்விகம் இராஜசம் தாமசம் குணங்கள் என்ற மூன்று வகைக்குள் அடங்கிவிடும்.
சாத்வீக குணம் – மனிதனுக்கு ஞான ஒளியையும் நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது.
ரஜோ குணம் – ஆசை பற்று முதலிய குணங்களை அளித்து கர்மங்களில் ஈடுபடத் தூண்டுகிறது.
தாமசகுணம் – மயக்கம் சோம்பல் உறக்கம் முதலியவற்றை ஏற்படச் செய்கிறது.
மனிதனாக பிறந்தவன் ஏதேனும் ஒரு காரியம் செய்து ஏதேனும் ஒரு வித அனுபவம் பெற்றிருப்பான். இந்த அனுபவத்தில் முக்குணங்களின் கலவை அல்லது ஒரு குணமாவது நிச்சயமாக இருக்கும். இதனை தவிர்க்க முடியாது. இந்த உடலினாலும் அல்லது அதன் மூலம் செய்யப்படும் எந்த ஒரு செயலினாலும் வரும் பயன்கள் நம்முடையது அது நமக்கு வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருக்க வேண்டும். இதன் பயனாக மனிதர்களுக்கு இரட்டையாக வரும் மகிழ்ச்சி துயரம் மற்றும் விருப்பு வெறுப்பு இவற்றிற்கு ஆட்படாமல் சரிசமமான மனதுடன் எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கலாம். இதன் பயனாக நித்யப் பொருளான பரம்பொருளை இடைவிடாமல் சிந்தனை செய்து கொண்டு அதிலேயே மனம் அசையாமல் நிலைத்து நிற்கலாம். அதன் பயனாக உலக பொருள்களின் மீது பற்றோ அதனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமோ இருக்காது.
மனம் புத்தி புலன்கள் இவை மூன்றும் நம் வசத்தில் இல்லாதவரை இவை நமக்கு எதிரிகளாக இருக்கின்றன. இவற்றை தன் வசப்படுத்தியவன் மட்டுமே தன்னை கட்டுப்படுத்தியவன் ஆவான். ஆகவே அர்ஜூனா உன் மனம் புத்தி புலன்களை கட்டுப்படுத்தி உனக்கு வசப்பட்ட மனமுடையவனாக மாறுவாய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
குரு பல சீடர்களை வைத்து குருகுலம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். அதிகாலையில் குரு தனது நித்ய கடமைகளை முடித்து விட்டு இறைவனுக்கு நைவேத்யம் படைத்து பூஜையை முடித்தார். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த ஒரு சீடன் குருவே நாம் படைக்கும் நைவேத்தியம் இறைவன் சாப்பிடுகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவனுக்கு நாம் படையல் இடும் நைவேத்யத்தை அவர் சாப்பிட்டு விட்டால் அதை நாம் பக்தர்களுக்கு எப்படி பிரசாதமாக தர முடியும்? என்று கேட்டான். சீடனின் கேள்வி குருவுக்கு புரிந்து விட்டது. கேள்விக்கு வெறுமனே பதில் சொல்லாமல் சீடனுக்கு புரியும்படி விளக்கம் தர முடிவு செய்தார். அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல் அவனை பார்த்து நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன் என்றார். சீடனுக்கு குரு தன் கேள்விக்கு பதில் சொல்லாதது ஏமாற்றம் தந்தாலும் குருவின் கட்டளைக்கு பணிந்து வகுப்பறையை தயார் செய்தான். அன்றைய வகுப்பில் அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட பூர்ணமிதம் எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.
குரு சொல்லிக் கொடுத்தபடி அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சீடனை தன்னருகில் அழைத்தார் குரு. குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான். மந்திரத்தை மனதில் ஏற்றிக் கொண்டாயா? என்றார். முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே என்றான் சீடன். எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம் என்றார் குரு. கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் மந்திரத்தை சொல்லி முடித்தான் சீடன். மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார். உனது சுவடியில் உள்ளதை நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே என்றார் குரு. பதட்டம் அடைந்த சீடன் தனது சுவடியை காண்பித்து குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன் என்றான். இந்த சுவடியில் உள்ளதைப் படித்துத்தான் மனதில் உள்வாங்கினாயா? இதிலிருந்து தான் உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் சுவடியில் இருக்க கூடாதல்லவா? என்றார்.
சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை குழப்பத்துடன் குருவைப் பார்த்தான். குரு தொடர்ந்தார் சுவடியில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். ஸ்தூல வடிவில் இருக்கும் மந்திர எழுத்துக்களை சூட்சும நிலையில் இருக்கும் மனமானது சூட்சுமமாகவே எடுத்துக் கொண்டு நினைவில் வைத்துக் கொள்கிறது. அது போலவே இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கும் நைவேத்யம் ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். சுவடியில் இருக்கும் எழுத்துக்களை நீ உள் வாங்கிய பின் சுவடியில் இருக்கும் மந்திரம் தனது அளவில் குறைந்து விட்டதா? அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும் சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்தியம் உட்கொள்கிறோம் என்று விளக்கினார்.
எமது (அகத்திய மாமுனிவர்) வாக்கிலே ஒருவனை உயர்த்திக் கூறுவதால் மட்டும் ஒருவன் உயர் ஆத்மா ஆகி விட முடியாது. மனிதனிடம் பல நல்ல உயர்வான குணங்களும் உயர்வில்லாத குணங்களும் இருக்கிறது. எம் முன்னே அமரும் மனிதனுக்கு உயர்வில்லாத குணங்களை சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தால் அவனுக்கு மனச்சோர்வு வந்து விடும். அவனை உற்சாகப்படுத்தி வேகத்தோடு பல நல்ல செயல்களை செய்யவே நாங்கள் அவ்வாறு கூறுகிறோம். மற்ற படி எல்லா மனிதர்களும் சராசரி குணங்கள் கொண்ட மனிதர்கள்தாம் இதில் உயர்வு தாழ்வு இல்லை. நாங்கள் கூறுகின்ற வழி முறைகளை எல்லாம் ஒரு மனிதன் எப்போது நூற்றுக்கு நூறு கடை பிடிக்கிறானோ அப்போதுதான் அவன் எம் சிஷ்யன் என்ற அன்புக்கு பாத்திரம் ஆவான். அதுவரை அவன் மனம் தளராத படிக்கு நாங்கள் சில வார்த்தைகளை கூறுகிறோமே தவிர எல்லா மனிதர்களிடமும் நல்ல குணமும் நல்லன அல்லாத குணமும் இருக்கிறது.
பூர்வீக தோஷத்தை குறைக்கவும் தன் முனைப்பில்லாமல் இறைவனை நோக்கி செல்லவும் எமை நாடும் மனிதர்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். யாங்கள் என்ன தான் உரைத்தாலும் அதை இந்த செவியிலே (காதிலே) வாங்கி அந்த செவியிலே விடுவதும் தேவையானால் எமது வாக்கை எடுத்துக் கொள்வதும் இல்லை என்றால் அதை தள்ளி விடுவதுமாகத்தான் எப்போதுமே மனிதர்கள் இருக்கிறார்கள். எனவே ஒரு மனிதனின் சேவையை மற்ற மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சில சமயம் நாங்கள் கோடிட்டுக் காட்டுகிறோமே தவிர அதற்காக அவன் மிகப் பெரிய மகான் என்றோ ஞானி என்றோ நாங்கள் யாரையும் கூறவில்லை. ஏன்? எமது வாக்கை ஓதுவதால் மட்டும் இந்த சுவடியை ஓதும் மூடனுக்கு மிகப் பெரிய தகுதியோ பராக்ரமோ ஞான நிலையோ வந்து விடவில்லை என்பதை தெரிந்து கொள். வெறும் வார்த்தைகளால் மட்டும் ஒருவனை உயர்த்துவது மட்டுமல்ல எமது நோக்கம். அப்படியாவது அவன் உற்சாகம் கொண்டு செயல் படட்டுமே நற்காரியம் செய்யட்டுமே என்பதுதான் எமது நோக்கம் ஆகும்.
இவர்கள் தங்களின் பேச்சு மற்றும் செயல்களினால் தங்கள் அறிவை இழந்து நிற்கிறார்கள். மேலும் மேலும் சொர்க்கத்தை அனுபவிப்பதிலேயே ஆவலுடன் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அறிவற்றவர்களின் மனம் ஒரு நிலைப்பட்டு அவர்களுக்கு கர்ம யோக புத்தி உண்டாக வாய்ப்பே இல்லை.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இவ்வாறான பேச்சு மற்றும் செயல்களினால் தங்களின் சுய சிந்தனையை விட்டு அறிவை இழந்து நிற்பார்கள். அனுபவிக்கும் சுகமே சொர்க்கம் என்று பந்தம் பாசம் ஆகியவற்றை அனுபவிப்பதிலேயே ஆர்வத்துடன் இருப்பார்கள். இவ்வாறு இருப்பவர்களுக்கு மனம் ஒரு நிலைப்படாது. இவர்களுக்கு கர்ம யோகத்தைப் பற்றிய அறிவும் புத்தியும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
ஒரு அன்பர் டிரைவர் தொழில் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு அகத்திய மாமுனிவர் அறிவுரை:
சாரதி (ஓட்டுநர்) தொழில் என்பது கிருஷ்ண பரமாத்மாவின் தொழில் தானப்பா. இதில் தாழ்வு என்பது ஒரு போதும் கிடையாது. இந்தத் தொழிலின் நுணுக்கத்தை அறியாமல் சிலர் மேம்போக்காக கற்றுக் கொள்கிறார்கள். இதை ஒரு மருத்துவ படிப்பு பொறியியல் படிப்பு எப்படி சில ஆண்டுகள் சொல்லித் தரப்படுகிறதோ அவ்வாறு முழுமையாக மொழி அறிவு போக்குவரத்து விதிமுறை அறிவு வாகனத்தின் நுணுக்கத் தன்மை இயக்கத் தன்மை என்று பிரித்து சில ஆண்டுகள் பயிற்சி தந்தால் ஒழிய திறம்பட செயல்பட முடியாது. அனுபவத்தால் பெறுவது என்பது வேறு. முதலில் அறிவால் பல விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். வாகனத்தின் உள்ளே இருக்கும் மனிதனுக்கு இவன் வாகனத்தை இயக்குகிறான் வேக நிலை மாற்றுகிறான். வலம் இடம் திரும்புகிறான். வாகனத்திலே பற்று பற்றா பாகத்தை இயக்குகிறான். வேக முடுக்கியை இயக்குகிறான் என்பதே தெரியக்கூடாது. அவை தெரியும் வண்ணம் எவன் ஒருவன் வாகனத்தை இயக்குகிறானோ அவன் நல்ல சாரதி (ஓட்டுநர்) அல்ல. வாகனம் நன்றாக இருக்கும் பட்சத்தில் இந்த கருத்து பொருந்தும்.
வாகனத்தை இயக்கும் போது இட வலமாக அலசல் இருந்தால் உடனடியாக சாரதியை (ஓட்டுநர்) நீக்கிவிட வேண்டும். நன்றாக பயிற்சி பெறு என்று கூற வேண்டும். சிந்தனையை வேறு பக்கம் செலுத்தி திடுப்பென்று (உடனடியாக) வேக தடுப்பானை (ஸ்பீடு பிரேக்) பயன்படுத்தினால் அந்த சாரதி (ஓட்டுநர்) ஏற்புடையவன் அல்ல. பயணிகளை ஏற்றி வைத்துக் கொண்டு எவன் ஒருவன் எரிபொருளை நிரப்புகிறானோ அவன் நல்ல சாரதி (ஓட்டுநர்) அல்ல. முன்னரே காற்று அழுத்தத்தையும் மின் கலனின் (பேட்டரி) திறனையும் எரிபொருளையும் சோதிக்கா விட்டால் அவன் கவனக் குறைவான சாரதி (ஓட்டுநர்) ஆகும். நெடுந்தூரம் எடுத்துச் செல்லும் முன்னர் அ முதல் ஃ வரை சோதித்து சிறு சிறு குறைகளை சரி செய்து கொள்ள வேண்டும். என்னென்ன பாகங்கள் நடுவழியில் கை கொடுக்காமல் விலகிவிடும் என்பதை முன்கூட்டியே யூகித்து சரியான மாற்று பாகத்தை வைத்திருக்க வேண்டும். வாகனத்தை பராமரிப்பதும் ஒரு சாரதிக்கு (ஓட்டுநர்) முக்கியம். வாகனத்தில் ஓடுகின்ற வாயு உருளைகள் எல்லாம் ஒரு பகுதியாகவே தேய்ந்து கொண்டு வரும் என்பதால்(சில சமயம் முறை மாற்றி ஓடுவதாக சூழல் இருக்கும்) அப்படி செய்யவில்லை என்றால் அந்த சாரதி (ஓட்டுநர்) கவனக்குறைவான சாரதி தான். எனவே சரியான வாகனம் சரியான சாரதி சரியான பயணிகள் சரியான பயணம் அப்பா.
வாகனத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் பிற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் வெப்பம் தணிக்கும் கருவி(ஏசி) பொருத்தப்பட்ட வாகனங்கள் இருக்கின்றன. அதை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக சாளரங்களை (சன்னல்) எல்லாம் அடைத்து வைக்கிறார்கள். இது எதிர்பாராத விபத்தை அதிகப்படுத்தும் என்பதால் சிறிதளவு குளிர் வெளியே சென்றாலும் பாதகமில்லை என்று வெளிக்காற்றை உள்ளே வரும்படி செய்து கொள்ள வேண்டும். அதேப் போல் வலப்புறம் இடப்புறம் என்று எப்புறம் சென்றாலும் அப்புறம் (பின்) பார்த்துக் கொள்ளலாம் என்று செல்லாமல் நிதானமாக அதற்குரிய குறியீடுகளை (காட்டிகளை) அவசியம் பயன்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாது வாகனத்திலே உள்ள ஔிரும் பொருள்கள் (மின் விளக்குகள்) எல்லாம் சரியான சாய் கோணத்தில் இருக்க வேண்டும். ஔிரும் பொருள்களை ஔிர விடுவதும் அணைப்பதுமாக திடீரென்று செய்யாமல் முன்னரே தீர்மானித்து துவக்க வேண்டும். உள்ளே இருக்கும் பொருள்கள் எந்த அளவுக்குத் தாக்குப் பிடிக்கும் என்பதை அவன் கற்றுக் கொள்ள வேண்டும். வாகனத்திலே கொடுக்க வேண்டிய அழுத்தமானது எந்த அளவுக்கு எந்த கோணத்தில் பிரயோகிக்கப் (உபயோகிக்க) படவேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலே உள்ள ஆழி சீசா (கண்ணாடி) போன்ற வண்ணங்கள் எல்லாம் கீழே விழுந்து விட்டால் உடனுக்குடன் எடுத்து விட வேண்டும். இல்லையென்றால் நிறுத்துவான் என்ற பகுதிக்கு அடியிலே சென்று விட்டால் அது இயங்காமல் போய் விபத்தை ஏற்படுத்தும்.
வேக நிலை மாற்றத்தை (கியர்) இயக்குவதில் ஒரு மனிதன் கவனமாக இருக்க வேண்டும். நிலை ஒன்று நிலை இரண்டு நிலை மூன்று என்று அதன் கோணத்தில் சென்று அதனை சரி செய்வது மிகவும் சிறப்பாகும். வாகனத்தில் இருந்து வெளிவரும் நச்சுப்புகை இந்த அண்டத்திற்கும் உயிர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இந்த தொடர்புடையவர்கள் எல்லாம் நறுமணமிக்க புகையை ஆலயங்களில் அதிகம் இட்டு இட்டு இந்தக் குறைக்கான பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ யாங்கள் (சித்தர்கள்) கூறலாம். இவற்றை மனதில் பதிய வைத்தால் நன்றாக இருக்கும்.
இவர்கள் உலகியல் இன்பத்தில் திளைத்தவர்களாகவும் சொர்க்கத்திற்கு செல்வதில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மீண்டும் மீண்டும் பிறவி அளிக்கவல்லதும் கர்மங்களில் தொடர்ந்து ஈடுபட வைப்பதும் ஆகிய பேச்சுக்களை மட்டுமே பேசுவார்கள். மேலும் தங்களுக்கு இன்பத்தையும் போகத்தையும் கொடுக்கும் செயல்களையே செய்து வருவார்கள்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இல்லறமே நல்லறம் என்ற வரிகளின் உள் விளக்கத்தை தெரிந்து கொள்ளாமல் வரிகளின் விளக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு இதுவே சிறந்தது இதனை அனுபவித்தால் சொர்க்கத்திற்கு சென்று விடுவோம் என்று நினைத்துக் கொண்டு பாசம் பந்தம் ஆகியவற்றிற்குள் சிக்கி அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி அளிக்கும் கர்மங்களிளேயே ஈடுபட்டுக் கொண்டு அதனைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.
கேள்வி: எனக்கு ஏன் சித்தர்களோடு தொடர்பு ஏற்பட்டது?
இறைவனின் கருணையைக் கொண்டு இந்த இன்னவன் ஒத்து பலரும் அறிய முயல்வது இத்தனை மனிதர்கள் இருக்க எனக்கு இவ்வாறு சித்தர்களோடு தொடர்பு ஏன் ஏற்பட்டது? அதிலும் குறிப்பிட்ட சித்தர்களோடு என்ன வகையான நிலையில் எனக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. யாம் யாது செய்ய வேண்டும்? என்றெல்லாம் கேட்கிறார்கள். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு சித்தனோடு ஒரு பிறவியில் தொடர்பு ஏற்பட்டால் அதே சித்தன்தான் மறுபடியும் வழிகாட்டப் போகிறார் என்று பொருள் அல்ல. எந்த சித்தர்களும் பெயர் தான் மாறுமே தவிர உயர்ந்த நிலையை அடைந்த அனைவரும் ஒரே சமநிலையில்தான் இருக்கிறார்கள். எனவே இந்த எமது திருவடியைத் தொட்டு எம்மோடு தொடர்புடைய சில மாணாக்கன் பின்னால் ப்ருகுவிடமோ (ப்ருகு மகரிஷி) வசிஷ்டரிமோ காகபுஜண்டரிடமோ கூட செல்வதுண்டு.
காகபுஜண்டரிடம் தொடர்ந்து பல்வேறு விதமான வாக்குகளை நாடிகள் மூலமும் மானசீகமாகவும் அறிந்து கொண்டவர்கள் எம்மிடம் வருவதும் உண்டு. பொதுவாக சித்தர்களோடு மனிதர்களுக்கு தொடர்பு ஏற்படுவது என்றால் ஏதாவது ஒரு பிறவியிலே அவர்கள் ஒரு குறிப்பிட்ட அந்த தினத்திலே இந்த சித்தர்களுக்குப் பிரியமான வழிபாட்டை செய்வது ஒருபுறம். அடுத்தது வழிபாட்டோடு சேர்ந்து தர்ம காரியங்களை செய்வது ஒருபுறம். இவ்வாறு செய்வதால் தொடர்ந்து ஒரு ஆத்மாவை சித்தர்கள் வழிகாட்டுதல் மூலம் கடைத்தேற்ற வேண்டும் என்று இறைவன் முடிவு எடுத்த பிறகு அந்த ஆத்மா எத்தனை ஜென்மங்கள் கடந்து பிறவி எடுத்தாலும் ஏதாவது ஒரு சித்தனை அனுப்பி வழிகாட்ட கட்டளை இடுகிறார். இப்படி கூறும் பொழுது நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் சித்தர்கள் ரிஷிகள் முனிவர்கள் ஆகிய இவர்களின் வழிகாட்டுதல் இல்லாமலேயே பல்வேறு மனிதர்கள் அல்லது ஆத்மாக்கள் இறைவனடி சேர்ந்து இருக்கிறார்கள் என்பது வேறு நிலை. எல்லோருக்கும் நாங்கள் வழிகாட்டுவதில்லை. இறைவன் எந்தெந்த ஆத்மாக்களைத் தேர்ந்தெடுத்து எங்களிடம் ஒப்படைக்கிறாரோ அந்த ஆத்மாக்களுக்கு மட்டுமே நாங்கள் வழிகாட்ட ஆணையிடப்படுகிறோம். அவ்வாறு நாங்கள் வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையிலே எவனொருவன் ஒரு பிறவியிலே அதிக அன்ன சேவை செய்திருக்கிறானோ அதிக அளவு பசுக்களை காக்கும் முயற்சியில் இருந்திருக்கிறானோ உயிர்க்கொலை புரிய மாட்டேன் என்று இருந்திருக்கிறானோ அவர்களுக்கெல்லாம் சித்தர்களின் கருணையும் கடாட்சமும் இறை அருளாலோ அல்லது யாமே விரும்பியோ செய்திடுவோம்.