ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -25

பிரம்மாவிடம் வரம் பெற்றதும் மூன்று உலகத்தையும் நமது ராட்சச குலம் வென்று இந்த உலகத்தையே நாம் ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இத்தனை ஆண்டு காலம் யுத்தம் செய்தேன். உனது கணவன் என்னை எதிர்த்ததினால் கொன்றேன். யுத்தத்தில் இருக்கும் போது என்னை எதிர்த்தவர்கள் மட்டுமே எனது கண்களுக்கு தெரிந்தார்கள். அவர்களில் என்னைச் சார்ந்து இருப்பவனா உறவினனா மாற்றானா என்று நான் பார்க்கவில்லை. பாணங்களை மழையாக பொழிவதிலேயே கவனமாக இருந்த பொழுது இறந்தவர்கள் யார் விழுந்தவர்கள் யார் அடிபட்டவர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. அப்போது அது பற்றி விவாதிக்கவும் நேரமில்லை உன் கணவனை நான் வேண்டுமென்று கொல்லவில்லை. உனது கணவனுக்கு ஈடாக நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்ன வேண்டுமோ கேள் என்று சூர்ப்பனகைக்கு ஆறுதலாக பேசினான். சகோதரியே நான் இருக்கும் வரை நீ எதற்கும் பயப்படாதே. எதற்கும் வருந்தாதே. நான் உன்னை கௌரவமாக மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வேன். எப்பொழுதும் நீ வேண்டியதை என்னிடம் பெறலாம். இதோ கரன் இருக்கிறான். நம் தாயின் சகோதரி மகன் நமக்கும் சகோதரனே. இவனை நான் தண்டகாரண்யம் வனத்தை ஆட்சி செய்ய அனுப்புகிறேன். ஆயிரமாயிரம் ராட்சசர்களின் பலம் கொண்டவன் இவன். பதினான்காயிரம் ராட்சசர்கள் கொண்ட படை இவனுடையது. தூஷணன் இவன் படைத் தலைவனாக பதவி வகிப்பான். இருவரும் உன் கட்டளைப் படி நடப்பார்கள். கரனுடன் தண்டகாரண்ய வனத்திற்கு சென்று உன் விருப்பப்படி உருவத்தை எடுத்துக் கொண்டு நீ அசைப்பட்ட வாழ்வை வாழ்ந்துகொள். உனக்குக் கீழ் வேலை செய்யும் ராட்சசர்கள் பலர் இருப்பர்கள் என்று ஆறுதல் சொல்லி சூர்ப்பனகையை தண்டகாரண்ய வனத்திற்கு ராவணன் அனுப்பி வைத்தான். சூர்ப்பனகையை சமாதானப்படுத்திய மகிழ்ச்சியில் தன் அடியாட்கள் படை சூழ இலங்கைக்குள் இருக்கும் நிகும்பிளா என்ற இடத்திற்கு சென்றான் ராவணன்.

மகேஸ்வரருக்கு யாகம் செய்யும் இடம் இது. அழகிய நாற்கால் மண்டபத்தில் யாகம் செய்து கொண்டிருந்த தன் மகன் மேக நாதனை ராவணன் கண்டான். கருப்பு மான் தோல் உடுத்தி ஜடா முடியுமாக இருந்த தன் மகனைப் பார்த்து வியந்த ராவணன் ஏன் இந்த வேடம் மேகநாதா என்று கேட்டான். அதற்கு யாகம் நடந்து முடிந்தால் தானே அருளும் பொருளும் பெற முடியும் என்று அங்கிருந்த அசுர குருவான சுக்ராச்சாரியார் ராவணனிடம் பேச ஆரம்பித்தார். அக்னிஷ்டோமோ, அஸ்வமேதம், பஹு சுவர்ணக, ராஜசூயம், கோமேதோ, வைஷ்ணவம் என்ற மிகப் பெரிய ஏழு மகேஸ்வர யாகங்களை உன் மகன் செய்து விட்டான். மிக அரிதான இந்த யாகத்தை செய்யும் பொழுது மகேஸ்வரனே நேரடியாக தரிசனத்தை கொடுத்து உன் மகனுக்கு வரங்களைக் கொடுத்தார். இந்த வரங்களின் படி உன் மகன் அவன் விருப்பப்படி எங்கும் பறந்து செல்லக்கூடிய ரதத்தை பெற்றிருக்கிறான். பல மாயா சக்திகளை பெற்றிருக்கிறான். விரும்பும் நேரத்தில் இவனைச் சுற்றி இருட்டை இவனால் வர வழைத்துக் கொள்ள முடியும். எதிரிகள் புரிந்து கொள்ள முடியாத இந்த மாயா ஜாலங்களால் உன் மகன் செய்யும் யுத்தங்களில் வெற்றியை சுலபமாக அடைந்து விடுவான். மேலும் யாருக்கும் கிடைக்காத பல அரிய சக்திகளை பெற்று குறைவில்லாத அம்புகளை கொண்ட தூணியுடன் சுதுர்ஜயம் எனும் வில்லையும் பல வகையான அஸ்திரங்களையும் பெற்றிருக்கிறான். இந்த அஸ்திரங்கள் விரைவில் எதிரிகளை அழிக்கக் கூடியது. இவை அனைத்தையும் வரமாக பெற்ற உன் மகன் இன்று யாக முடிவில் இருக்கிறான் நீயும் வந்து சேர்ந்தாய் என்றார்.

மகேஸ்வரர் என் மகனுக்கு தரிசனம் கொடுத்து பல வரங்களை கொடுத்திருக்கிறாரா என்ற ராவணன் சுக்ராச்சாரியாரிடம் என்னை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறீர்கள் என்று கூறினான். தன் மகனிடம் நல்ல காரியம் செய்தாய் நாம் மாளிகைக்குப் போவோம் வா மகனே என்ற ராவணன் தன் மகனுடனும் அரண்மனைக்கு திரும்பினான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -24

பிரம்மாவிடம் பெற்ற வரத்தினால் எமராஜனை வென்ற களிப்புடன் எமபுரத்தில் இருந்து கிளம்பிய ராவணன் மேலும் யுத்தம் செய்யும் ஆவலுடன் இருந்தான். உடல் முழுவதும் காயத்துடன் இருந்த ராவணன் இந்த நிலையிலும் யுத்தம் செய்யும் ஆர்வத்துடன் இருப்பதைப் பார்த்த அவனது படை வீரர்களும் மந்திரிகளும் ஆச்சர்யமடைந்தார்கள். இது என்ன யுத்த வெறி இன்னும் யுத்தம் செய்ய வேண்டுமா என்று அவனை தயக்கத்துடன் பார்த்தார்கள். அனைவரின் தயக்கத்தையும் புரிந்து கொண்ட ராவணன் அவர்களை உற்சாகப் படுத்தினான் அனைவரும் அங்கிருந்து கிளம்பி வருணன் பாதுகாத்து வரும் வாசுகியின் ஆதிக்கத்தில் இருந்த போகவதியை அடைந்தான். அங்கிருந்த நாகர்களை வெற்றி பெற்ற பின் மணிமயம் என்ற நகரை அடைந்தார்கள். அந்நகரத்தில் காற்று கூட புக முடியாத கவசங்களுடன் பிரம்மாவிடம் வரம் பெற்ற நிவாதகவசர்கள் என்ற அசுரர்கள் சுகபோகத்துடன் வாழ்ந்து வந்தார்கள். ராவணன் தன்னிடம் உள்ள ஆற்றலாம் அந்த நகரத்தில் நுழைந்து அவர்களை சூழ்ந்து கொண்டு போருக்கு அழைத்தார். நிவாதகவச அசுரர்கள் நல்ல பலசாலிகள். பிரம்மாவிடம் வரமும் பெற்றிருக்கிறார்கள். பலவிதமான ஆயுதங்களையும் உபயோகிக்கத் தெரிந்தவர்கள். உடனே சம்மதித்து யுத்தத்திற்கு தயாரானார்கள். இருவரும் சூலம் திரிசூலம் குலிசங்கள் பட்டச கத்தி பரஸ்வதம் போன்ற ஆயுதங்களால் ஒருவரையொருவர் குத்தியும் அடித்தும் தள்ளியும் சண்டையிட்டார்கள். இரு தரப்பினரும் சளைக்காமல் தொடர்ந்து யுத்தம் செய்தார்கள். பெரும் போர் ஆரம்பித்து வெற்றி தோல்வி இன்றி ஒரு வருடம் சென்றது. யுத்தத்தில் வெற்றி பெருவதில் இரு தரப்பினரும் மும்முரமாக இருந்தனர். பிரம்மா அங்கு இருதரப்பினருக்கும் காட்சி கொடுத்தார். பிரம்மாவின் தரிசனத்தால் யுத்தம் நின்றது.

பிரம்மா நிவாதகவச அசுரர்களிடம் பேச ஆரம்பித்தார். தேவர்களும் நீங்களும் ஒன்று கூடி யுத்தம் செய்தாலும் ராவணனை உங்களால் வெல்ல முடியாது. அது போல் தேவர்களும் ராட்சசர்களும் ஒன்று சேர்ந்து யுத்தம் செய்தாலும் உங்களை வெல்ல முடியாது. இருவரும் தவங்கள் செய்து தெய்வ வரங்களைப் பெற்று தோல்வி இல்லாத சிறப்பு நிலையில் இருக்கிறீர்கள். யுத்தம் செய்து ஏன் வீணாக காலத்தை கடத்துகிறீர்கள். இருவரும் நட்பு கொள்ளுங்கள் அதுவே உங்களுக்கு நன்மை தரும். எல்லா விதமான செல்வங்களையும் பிரிக்காமல் சேர்த்து அனுபவியுங்கள். நட்பின் இலக்கணம் இது தான் என்று பிரம்மா பேசி முடித்தார். பிரம்மாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட இருவரும் அக்னியை சாட்சியாக வைத்து நட்புக் கொண்டார்கள். ராவணன் அவர்கள் செய்த உபசாரங்களை ஏற்றுக் கொண்டு ஒரு வருட காலம் அவர்களுடன் வசித்து மகிழ்ச்சியுடன் திருப்தியாக இருந்தான். தன் சொந்த நகரத்தில் இருப்பது போலவே அங்கு அனைத்து சுகங்களும் ராவணனுக்கு கிடைத்தது. இந்த ஒரு வருட காலத்தில் அசுரர்களிடம் இருந்து நூறு வகையான மாய வித்தைகளை தெரிந்து கொண்டான் ராவணன். பின்னர் கால கேயர்கள் வாழ்ந்து வந்த அச்ம நகரம் (கல்லால் ஆன ஊர்) என்ற இடத்தை அடைந்தான். மிகுந்த உடல் பலமும் கர்வமுமாக இருந்த காலகேயர்களை அழித்து வென்றான். அடுத்ததாக அங்கிருந்து தைத்யர்கள் இருப்பிடம் சென்றான். அச்சமயம் சூர்ப்பனகையின் கணவன் வித்யுத்ஜிஹ்வன் ராவணனை வஞ்சனை செய்து கொன்று அரசனாக திட்டமிட்டான். இதனை அறிந்த ராவணன் வித்யுத்ஜிஹ்வனை அடித்துக் கொன்றான். தைத்யர்களையும் வென்ற ராவணன் அங்கிருந்து வருண லோகம் சென்று வருணனையும் அவனது மகன்களையும் வெற்றி பெற்று மூன்று உலகத்தையும் வென்ற மகிழ்ச்சியில் இலங்கைக்கு திரும்பினான்.

பிரம்ம தேவரின் வரத்தால் மூன்று உலகத்தையும் நமது ராட்சச குலம் வென்று விட்டது என்று இலங்கை மக்களுக்கு அறிவித்தான் ராவணன். அவனை மக்கள் வாழ்த்தி ஆடிப்பாடி வரவேற்றார்கள். அரண்மனைக்கு திரும்பிய ராவணனின் முன்பு சூர்ப்பனகை அழுதபடி வந்து நின்றாள். தங்கையின் கணவர் என்று ஒரு முறையாவது யோசித்து செயல்பட்டிருக்கலாமே உன்னால் நான் இப்போது விதவையாகி விட்டேன். எனது கணவரை ஏன் கொன்றாய் என்று அழுது தீர்த்தாள் சூர்ப்பனகை. ராவணன் அவளுக்கு அறுதல் அளிக்கும் விதமாக பேச ஆரம்பித்தான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -23

நாரதருக்கும் எமதர்ம ராஜனுக்கும் ராட்சசர்களின் வெற்றி முழக்கம் கேட்டது. தனது படைகளை அழித்து ராவணன் வெற்றி பெற்று பெற்று விட்டான் என்பதை அறிந்த எமன் கோபத்துடன் தனது ரதத்தைக் கொண்டு வருமாறு தனது சாரதிக்கு உத்தரவிட்டான். மூவுலகத்தையும் தன் பாசக்கயிறால் கட்டி இழுத்துச் செல்லும் எமன் ராவணன் முன் நின்றான். எமனின் தாக்குதலில் தாக்குப் பிடிக்க முடியாமல் ராட்சச படைகள் ஓட்டம் பிடித்தனர். எமனைக் கண்டு ராவணன் பயப்படாமல் நின்றான். எமராஜன் ராவணனை தன் ஆயுதங்களால் அடித்தான். ராவணன் அசையாமல் மலை போல நின்று எதிர்த்து யுத்தம் செய்தான். ஏழு இரவுகள் தொடர்ந்து யுத்தம் நடந்தது. இருவருமே நல்ல பலசாலிகள். இருவருமே வெற்றி பெறத் துடித்தனர். இந்த யுத்தத்தைக் காண தேவர்களும் கந்தர்வர்களும் சித்தர்களும் ரிஷிகளும் இந்த யுத்தத்தைக் காண வந்தார்கள். இருவரும் சலிக்காமல் யுத்தம் செய்தார்கள். வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எமராஜன் தன்னுடைய கால தண்டத்தால் ராவணனை தாக்க முடிவு செய்தார். அப்போது பாவக அசனி போன்ற முக்கரம் என்ற ஆயுதமும் எமனின் கைகளில் வந்து நின்றது. இந்த ஆயுதங்களைக் கண்ணால் கண்டாலே பிராணிகள் உயிரை விட்டுவிடும். ராவணனின் மீது விழுந்தால் என்ன ஆகும் என்று பார்த்துக் கொண்டிருந்த மற்ற அனைவரும் அந்த இடத்தை விட்டே பயந்து அலறிக் கொண்டு ஓடினார்கள். எமராஜனால் கால தண்டம் உயர்த்தப் பட்டதைக் கண்டு தேவர்களும் நடுங்கினர். ராவணன் மீது கால தண்டம் விழப் போகிறது ராவணன் அழியப்போகிறான் என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது பிரம்மா வந்து எமராஜனை தடுத்தார்.

பிரம்மா எமதர்ம ராஜனிடம் பேச ஆரம்பித்தார். இந்த ராவணனை உன் கால தண்டத்தால் அடிக்காதே. இந்த கால தண்டம் முன் ஒரு சமயம் என்னால் உண்டாக்கப்பட்டது. நான் ராவணனுக்கு வரம் கொடுத்திருக்கிறேன். என் வாக்கை நீ பொய்யாக்கி விடாதே என் வாக்கு பொய்யானால் அது மூவுலகையும் பாதிக்கும். உலகில் சத்யமே இல்லை என்றாகும். தனக்கு பிடித்தவனோ பிடிக்காதவனோ நல்லவனோ கெட்டவனோ யாராக இருந்தாலும் பிராணிகளை சம்ஹாரம் செய்ய மூவுலகிற்கும் பயத்தை தரும் இந்த கால தண்டத்தை நான் சிருஷ்டி செய்தேன். இதைக் கொண்டு இந்த ராட்சசனை தற்சமயம் கொல்லாதே. கால தண்டம் ராவணன் மேல் விழுந்தால் அவன் உயிருடன் இருக்க மாட்டான். ராவணன் அழிந்தால் பிரம்மா கொடுத்த வரம் பொய்யாகும். நான் அவனுக்கு கொடுத்த வரத்தினால் அவன் ஏதேனும் ஒரு வகையில் அழியா விட்டால் காலதண்டம் பாரபட்சம் பார்க்காமல் உயிரை பறிக்கும் என்பது பொய்யாகும். இரண்டில் எது நடந்தாலும் சத்யத்திற்கு சோதனையே என்று பிரம்மா எமனிடம் கூறினார்.

பிரம்மா சொன்னதைக் கேட்டதும் எமன் தன் கையில் இருக்கும் கால தண்டத்தை கீழே இறக்கி பிரம்மாவிடம் பேச ஆரம்பித்தார். என் மரியாதைக் குரியவர்கள் நீங்கள். உங்கள் சொல்லை நான் மதிக்கிறேன். யுத்த பூமியில் வந்து நின்ற பின் வெற்றி பெறுவதற்காக நான் கால தண்டத்தை எடுத்தேன். தாங்கள் கொடுத்த வரத்தைச் சொல்லி நான் இவனை அடிக்கக் கூடாது என்று என்னை தடுத்து விட்டீர்கள். எனவே இந்த ராட்சசர்களின் கண்களுக்கு தெரியாமல் நான் மறைந்து கொள்கிறேன் என்று அங்கிருந்து தன்னை யார் கண்ணுக்கும் தெரியாமல் தன்னை எமராஜன் மறைத்துக் கொண்டார். அவரின் குதிரைகளும் ரதங்களும் மறைந்து போனது. இதனைக் கண்ட ராவணன் தான் வெற்றி பெற்றதாக உரத்த குரலில் அறிவித்துக் கொண்டான். ஓடிச் சென்ற ராட்சச படைகள் திரும்பவும் வந்து ராவணனை வாழ்த்தி கோசமிட்டார்கள். ராவணன் அங்கிருந்து வெளியேறினான்

நாயன்மார் – 13. ஏனாதிநாத நாயனார்

சோழவள நாட்டிலுள்ள சிற்றூரின் பெயர் எயினனூர். இத்தலத்தில் சான்றார் குல மரபில் தோன்றியவர் ஏனாதிநாதர் என்பவர். திருநீற்றுப் பக்தி மிக்கவர். மெய்ப்பொருள் நாயனாரைப் போலவே திருநீறு அணிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சிவமாகப் பார்த்து வணங்கி வழிபடுவார். பகைவர்களாக இருந்தாலும் அவர்களது நெற்றியில் திருநீற்றை கண்டுவிட்டால் உடனே பகைமையை மறந்து அவரை வணங்கி வழிபடுவார். இதனால் இவர் பகைவரும் போற்றும் படியாக நல்லொழுக்கத்தில் தலை சிறந்து விளங்கினார். இவர் சோழ மன்னரின் படையில் சேனாதிபதியாக இருந்தவர்களின் சந்ததியில் தோன்றியவர். ஏனாதிநாதர் வாள் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இவரிடம் நல்ல வீரமும் சிறப்பான வாள் பயிற்சி அளிக்கும் முறையும் இருந்ததால் வாள் பயிற்சி பெற மாணவர்கள் இவரிடம் நிறைய வந்து சேர்ந்தார்கள். வாள் பயிற்சி மூலம் கிடைத்த தனக்கு கிடைத்த வருமானத்தை சிவனடியார்களுக்கே செலவு செய்தார்.

ஏனாதிநாதர் வாழ்ந்த அதே ஊரில் அதிசூரன் என்று ஒருவன் இருந்தான். அவனும் வாள் பயிற்சி கூடம் ஒன்றை அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தான். தொழில் நுட்பத்தில் ஏனாதிநாதரைவிட மிகக் குறைந்து காணப்பட்டான். அதனால் அதிசூரனிடம் வந்து சேர்ந்த மாணவர்கள் விலகி ஏனாதிநாதரின் பள்ளியில் வந்து சேர்ந்தார்கள். இதனால் ஏனாதிநாதரிடம் ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற்றார்கள். அதிசூரனிடம் ஒன்றிரண்டு மாணவர்கள் கூட பயிற்சி பெற வருவதே கஷ்டமாகி விட்டது. இதனால் அதிசூரனது வருவாய் குறைந்தது. இதனால் அதிசூரன் ஏனாதிநாதரிடம் பொறாமை கொண்டு பகைமை கொண்டான். ஒருநாள் தன் சுற்றத்தாரையும் சில போர் வீரர்களையும் அழைத்துக்கொண்டு நாயனாரின் வீட்டை வந்தடைந்தான். ஏனாதிநாதரே ஒரே ஊரில் இரண்டு பயிற்சிக் கூடம் வேண்டாம். இரண்டு ஆசிரியர்களும் வேண்டாம். இந்த ஊரில் நாம் இருவரில் வாள் பயிற்சி ஆசிரியராக இருப்பதற்குரிய தகுதியும் திறமையும் யாருக்கு உண்டு என்பதை ஊரறியச் செய்ய நாம் இருவரும் வாள் சண்டை போடுவாம் என்றான். துணிவிருந்தால் என்னோடு சண்டை போடுங்கள் என்று கத்தினான். அதிசூரனின் சவாலைக் கேட்ட ஏனாதிநாதர் சிங்கம் போல் கிளர்த்தெழுந்தார். அதிசூரனின் ஆட்கள் ஒரு புறமும் ஏனாதிநாதரின் ஆட்கள் ஒரு புறமும் நின்று சண்டையிட்டார்கள். இரு தரப்பிலும் பலருக்கு காயம் ஏற்பட்டது. சிலர் உயிரிழந்தார்கள். இறுதியில் ஏனாதிநாதர் வெற்றி பெற்றார். அதிசூரன் தோல்வி அடைந்தான். இதனால் அதிசூரன் உள்ளத்தில் பகைமை உணர்ச்சி அதிகமானது. ஏனாதிநாதரை நேர் பாதையில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்து சூழ்ச்சியால் அவரை கொன்று விடலாம் என்று திட்டம் திட்டினான்.

ஏனாதிநாதரிடம் அதிசூரன் தனது வேலைக்காரன் ஒருவனை அனுப்பினான். தன்னோடு வேறோரிடத்திலே தனித்து நின்று போர் புரியலாம் என்றும் வீணாகப் பெரும் படை திரட்டிப் போர் புரிந்து எதற்குப் பல உயிர்ச் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தனது வஞ்சக முடிவைச் சொல்லி அனுப்பினான். அவனது அந்த முடிவிற்கும் ஏனாதிநாதர் சம்மதித்தார். அதன் பிறகு அதிசூரன் சண்டை போடுவதற்கான நாள் நேரம் குறித்து இடத்தைத் தேர்ந்தெடுத்து ஏனாதிநாதருக்குச் செய்தி சொல்லி அனுப்பினான். அதற்கும் அவர் சம்மதித்தார். குறித்த நாளும் வந்தது. அதிசூரன் வஞ்சனையால் வெல்லத்தக்க சூழ்ச்சி செய்தான். போருக்குப் புறப்படும் முன் நெற்றியிலும் உடம்பிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டான். வாளும் கேடயமும் எடுத்துக் கொண்டான். தனது நெற்றியும் உடம்பும் தெரியாதவாறு கவசத்தாலும் கேடயத்தாலும் மறைத்துக் கொண்டான். போர் புரிய வேண்டிய இடத்திற்குச் சென்றான். அங்கே ஏனாதிநாதர் அதிசூரனை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார். அதிசூரன் கேடயத்தால் தன் முகத்தை மறைத்த வண்ணமாகவே நாயனாருக்கு முன் சென்றான். இருவரும் போர் புரியத் தொடங்கினர். ஏனாதிநாதர் வாளைச் சுழற்றி பயங்கரமாகப் போர் புரிந்தார். ஏனாதிநாதர் கைகளிலே சுழன்று கொண்டிருந்த வாள் அதிசூரனின் உடலைக் கிழித்துக் கொல்ல நெருங்கி வருகின்ற தருணத்தில் அதிசூரன் தன் உடலை மறைத்துக் கொண்டிருந்த கவசத்தையும் கேடயத்தையும் விலக்கினான். திருநீறு அணிந்த அதிசூரனின் நெற்றியைப் பார்த்துத் திடுக்கிட்டார் நாயனார். அவர் கைகள் தளர்ந்தன. வீரம் பக்திக்கு அடிமையானது. பகைவன் என்று போரிட வந்தேனே சிவத்தொண்டராக அல்லவா இருக்கிறார் இவரோடு போரிடுவது தகாத செயல் ஆகும் என்று எண்ணிய ஏனாதிநாத நாயனார் வரும் ஆபத்தை பற்றி சிந்திக்காமல் தம் கையிலிருந்த வாளையும் கேடயத்தையும் கீழே போட எண்ணினார்.

ஏனாதிநாதருக்கு அத்தருணத்தில் வேறொரு எண்ணமும் பிறந்தது. நாம் ஆயுதங்களைக் கீழே போட்டால் நிராயுத பாணியயை சிவனடியார் கொன்றார் என்ற இழிவுப் பெயர் இவருக்கு வந்துவிடும். அத்தகைய கெட்ட பெயர் இவருக்கு ஏற்படாத வண்ணம் இறுதிவரை நான் ஆயுதத்துடனே இவரை எதிர்த்து நிற்பது போல் பாசாங்கு செய்வேன் என்று எண்ணியபடியே வாளையும் கேடயத்தையும் தாங்கி எதிர்த்துப் போர் செய்வது போல் பாவனை செய்து கொண்டிருந்தார். அவர் முன்னே நின்ற கொடிய பாதகனும் தன் கருத்தை நிறைவேற்றிக் கொண்டான். ஏனாதிநாதர் ஆவி பிரிந்தது. ஆகாயத்தில் பேரொளி தெரிந்தது. எம்பெருமான் உடையாளுடன் விடை மேல் எழுந்தருளினார். ஏனாதிநாதரை உயிர் பெற்றெழச் செய்தார். நாயனார் நிலமதில் வீழ்ந்து இறைவனை வணங்கி நின்றார். பகைவனது வாளால் உலகப் பற்று பாசம் பந்தம் ஆகிய எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக் கொண்ட ஏனாதிநாத நாயனாருக்கு பேரின்ப வாழ்வை அளிப்பதற்கென்றே இவ்வளவு பெரிய சோதனையை நடத்திய எம்பெருமான் நீ நம்மை விட்டுப் பிரியாதிருக்கும் பெரு வாழ்வினைப் பெறுவாயாக என்று திருவாய் மலர்ந்தார்.

குருபூஜை: ஏனாதி நாத நாயனாரின் குருபூஜை புரட்டாசி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -22

நாரதர் சொன்ன அனைத்தையும் கேட்ட ராவணன் தன் வலிமையின் மீது உள்ள கர்வத்தால் பெரிதாக சிரித்து அவரிடம் பேச ஆரம்பித்தான். மகரிஷியே அனைத்து லோகத்திற்கும் செல்லும் தாங்கள் சொல்வது சரியே. இதோ இப்போதே நான் கிளம்புகிறேன். யுத்தம் செய்து வெற்றியோடு வருவேன். மூவுலகையும் வெற்றி பெற்று தேவர்களையும் கந்தர்வர்களையும் நாகர்களையும் என் வசத்தில் கொண்டு வருகிறேன் என்றான். அதற்கு நாரதர் எம லோகம் செல்வது மிக கடினம். எமபுரி தகர்க்க முடியாத பாதுகாப்புகளை உடையது என்றார். இதைக் கேட்ட ராவணன் இடி இடிப்பது போல சிரித்து நான் எம புரியை வெற்றி பெற்றதாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போதே நான் எமனை வெற்றி பெற தென் திசை நோக்கி செல்கிறேன். எமபுரி சென்று ஜீவன்களை தன் பாசத்தால் கட்டி இழுத்து எமனுக்கும் எமனாகிறேன் என்று முழக்கமிட்ட ராவணன் நாரதரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு தன் படைகளுடன் மகிழ்ச்சியாக தென் திசை நோக்கிச் சென்றான்.

நாரதர் சிறிது யோசிக்க ஆரம்பித்தார். எமன் நற்காரியங்களுக்கும் தீய காரியங்களுக்கும் பயன் தரும் நீதிபதியாக இருக்கிறான். அவனிடம் மூவுலகும் சரணடைந்து இருக்கிறது. அந்த எமனிடம் ராவணன் எப்படி வெற்றி பெருவான். எமனும் ராட்சசர்களும் போர் புரிவதை நேரில் பார்க்க வேண்டும் என்று எமபுரிக்கு தெற்கு நோக்கி கிளம்பினார் நாரதர். அங்கு வந்த நாரதர் நடந்ததை எமனிடம் சொல்லி அவருக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று எமன் இருக்குமிடம் வந்தார். நாரதர் வருவதைப் பார்த்த எமன் அவருக்கு தகுந்த மரியாதை செய்த பின்பு அவரின் பேச ஆரம்பித்தான். எங்கும் நலம் தானே மகரிஷியே. தாங்கள் இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தர்மத்திற்கு கெடுதல் எதுவும் வந்து விடவில்லையே இவ்வளவு தூரம் தாங்கள் வரக் காரணம் என்ன என்று கேட்டான். அதற்கு நாரதர் ராவணனை கண்டது முதல் நடந்தவற்றை முழுமையாகக் கூறினார். யுத்தம் செய்ய ராவணன் இங்கு விரைவில் வந்து விடுவான். அதனால் என்ன செய்ய வேண்டுமோ அதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொள். இதைச் சொல்லத்தான் நான் ஓடி வந்தேன் என்றார்.

நாரதர் சொல்லி முடித்ததும் உதய சூரியன் போல பிரகாசமாக ராவணனின் புஷ்பக விமானம் எமபுரிக்குள் நுழைந்தது. ராவணன் எமபுரியை சுற்றிலும் பார்த்தான். நல்லவர்கள் தங்களின் செயல்களுக்கு ஏற்ப நற்கதியையும் தீமை செய்தவர்கள் தங்களுக்கு ஏற்ற துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். தண்டனை அனுபவிக்கும் ஜீவன்கள் அலறுவதும் காது கொண்டு கேட்க முடியாத பயங்கரமான கதறலும் ராவணனை திடுக்கிடச் செய்தது. ஒரு சிலர் மட்டும் நல்ல வீடுகளில் பாட்டும் வாத்ய இசையும் கேட்க மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக இருப்பதை ராவணன் கண்டான். தங்களின் நற்செயல்களின் பலனாக இந்த உயர்வை இவர்கள் அடைந்ததாக தெரிந்து கொண்டான். தங்கள் தீய செயல்களின் பலனாக துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த ஜீவன்களை ராவணன் தன் பலத்தால் விடுவித்தான். ராவணனால் விடுவிக்கப் பட்டவர்கள் சற்றும் எதிர்பார்க்காத நினைத்துக் கூட பார்க்காத சுகத்தை அனுபவித்தார்கள். ராவணன் தன் பலத்தால் இவர்களை விடுவித்தவுடன் எம தூதர்களும் காவல் வீரர்களும் தங்கள் ஆயுதங்களால் ராட்சச வீரர்களை அடித்தனர். ராவணனின் படை வீரர்களும் பதிலுக்கு தங்கள் சக்திக்கு ஏற்ப ஆயுதங்களால் தாக்கினார்கள். ராவணன் தன் புஷ்பக விமானத்தை விட்டு இறங்கி கோபத்துடன் சிவன் கொடுத்த உயர்ந்த அஸ்திரத்தை பிரயோகம் செய்தான். புகையில்லாத நெருப்புடன் அந்த அஸ்திரம் வனத்தை அழிக்கும் காட்டுத் தீ போல பரவிச் சென்றது. இந்த அஸ்திரத்தின் பலத்தால் எமனின் வீரர்கள் காட்டுத் தீயில் மடிந்து விழுந்த யானைகள் போல எரிந்து சாம்பலானார்கள். இதைக் கண்ட ராவணன் தன் மந்திரிகளுடன் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -21

அயோத்தி அரசன் அனரண்யன் கை கால்கள் முறிய ரதத்திலிருந்து கீழே விழுந்து ராவணனிடம் பேச ஆரம்பித்தான். என்னை வெற்றி பெற்றதாக எண்ணி பெருமைப்பட்டுக் கொள்ளாதே ராவணா. உன்னிடம் நான் புற முதுகு காட்டி ஓடவில்லை. நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்து உன்னால் தோற்கடிக்கப் பட்டேன். இங்கிருந்து ஓடிப்போய் எனது உயிரை என்னால் இப்போதும் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால் அதற்கு நான் விரும்பவில்லை. என் இக்ஷ்வாகு குலப் பெருமையை நிலை நிறுத்த விரும்புகிறேன். நான் செய்த தான தர்மங்கள் ஏதேனும் இருந்தால், பூஜைகள் யாகங்கள் செய்த பலன்கள் ஏதேனும் இருந்தால், என் மக்களை நான் நல்ல முறையில் பாதுகாத்து வந்தது உண்மையானால் என் குலத்தில் பிறந்து வரும் ஒருவன் உன்னை அழிப்பான் என்று சொல்லி அனரண்யன் தன் உடலை விட்டு சொர்கத்திற்கு சென்றான். அந்த சமயம் இடி இடிப்பது போல தேவ துந்துபிகள் முழங்கியது. ராவணன் இதனைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அங்கிருந்து சென்றான்.

அயோத்தியில் இருந்து கிளம்பிய ராவணன் பூமியில் இருந்த அரசர்கள் அனைவரையும் தேடித் தேடி சென்று துன்புறுத்தினான். ஒரு இடத்திற்கு புஷ்பக விமானத்தில் செல்லும் போது மேகக் கூட்டத்திற்கு இடையில் நாரதரை சந்தித்தான். அவரை வணங்கி அவருக்கேற்ற மரியாதை செய்தான் ராவணன். மரியாதையை எற்றுக் கொண்ட நாரதர் ராவணனிடம் பேச ஆரம்பித்தார். ராவணா நீ செல்லும் இடங்களிலெல்லாம் வெற்றி பெற்று உன் சுற்றத்தாரையும் உற்றாரையும் நல்ல நிலைமையில் காத்து வருவதாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி நான் உன்னிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டும். நீ அதனை கேட்க வேண்டும் என்று விரும்பினால் கவனமாக கேட்டுக்கொள் என்று பேச ஆரம்பித்தார்.

தேவர்கள் தானவர்கள் தைத்யர்கள் யட்சர்கள் கந்தர்வர்கள் ராட்சசர்கள் ஆகிய இவர்களின் கையால் மரணம் அடையாமல் இருக்க வரம் பெற்றிருக்கிறாய். அதனால் அவர்களை எதிர்த்து யுத்தம் செய்து வதைக்கிறாய் துன்புறுத்துகிறாய். இப்போது அவர்கள் மரணத்தின் பிடியில் இருப்பது போல இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் வருத்துகிறாய் உனது பார்வையில் சரி என்று வைத்துக் கொள்வோம். ஆனால் மனித குலம் அப்படி அல்ல எப்பொழுதும் செல்வத்தின் மீது பற்று வைத்து போகத்தில் கிடந்து பல கஷ்டங்களை தாங்களே வரழைத்து அனுபவித்து வருகிறார்கள். இது தவிர முதுமை மற்றும் உடலில் பல வியாதிகள் அவர்களை அரித்தெடுக்கின்றன. பசி மற்றும் தாகத்தால் வேறு துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் செயல்களால் துக்கத்தை வரவழைத்துக் கொண்டு பல விதங்களில் வருந்தும் இந்த மனிதர்களை மேலும் ஏன் துன்புறுத்துகிறாய் ராவணா? மனிதனுக்கு மகிழ்ச்சி அதிகமாகி விட்டால் வாத்யங்கள் வாசித்தும் நடனமாடியும் பொழுதைக் கழிப்பார்கள். மற்றவர்கள் ஏதோ சொல்லி விட்டால் அதற்கு காரணம் காட்டி கண்ணீர் விட்டபடி வருந்தியபடி அழுத முகமாகவே காணப்படுகிறார்கள். தாய் தந்தை மகன் என்று பற்று வைத்து என் மனைவி என் மக்கள் என்று மோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். தாங்கள் அனுபவிப்பது வெறும் துக்கமே என்பதைக் கூட அறியாமல் இருக்கிறார்கள். ஏற்கனவே தாங்க முடியாத சோக பாரத்தை சுமப்பவர்களை நீ மேலும் வருத்தாதே என்று ராவணனிடம் நாரதர் கேட்டுக் கொண்டார். இந்த உலகை துன்புறுத்தியது போதும். மனித குலத்தை நீ வெற்றி பெற்றதாகவே வைத்துக் கொள். நீ எதுவும் செய்யாவிட்டால் கூட இவர்கள் ஒரு நாள் யமலோகம் சென்று விடுவார்கள். உன் புஜபலம் வலிமை எப்படிப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். அதனை வலிமை இல்லாத மனிதர்களிடம் காண்பிக்காதே. வலிமையுள்ள எமனை நீ வெற்றி பெற்று விட்டால் மற்ற அனைவரும் அதனுள் அடங்கி விடுவார்கள். அதனால் எமனுடன் யுத்தம் செய்து உனது வலிமையைக் காண்பி என்று ராவணனிடம் நாரதர் சொல்லி முடித்தார்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -20

அரசனின் குருவான சம்வர்த்தன் என்ற மகரிஷி அவனை தடுத்து நிறுத்தி அவனுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தார். இந்த சமயம் நீ கோபப்படுவதும் ராவணனுடன் யுத்தம் செய்வதும் சரியல்ல. மாகேஸ்வர யாகம் செய்ய நீ அக்னி ஏற்றிவிட்டாய். யுத்தம் செய்து வெற்றி பெற்று பின் யாகத்தை தொடர்ந்து நடத்துவேன் என்று நீ சொல்லலாம் ஆனால் இந்த ராட்சசன் பல வரங்களைப் பெற்றவன். எளிதில் வெற்றி பெற முடியாதவன். இந்த ராட்சசனுடன் நீ யுத்தம் செய்தால் நிச்சயமாக உனக்கு வெற்றி கிடைக்குமா? வெற்றி கிடைக்காமல் போனால் உன்னால் யாகத்தை தொடர்ந்து செய்ய முடியாது. யாகத்தை ஆரம்பித்து விட்டு அதை முடிக்காமல் விட்டால் அது உனது குலத்திற்கு கேட்டை விளைவிக்கும். எனவே சந்தேகத்துக் கிடமான இந்த செயலில் இறங்குவதற்கு முன் யோசித்துச் செயல் படு என்றார். குருவின் சொல்லைக் கேட்டதும் அரசன் தன் ஆயுதங்களை வைத்து விட்டு அமைதியுடன் யாகத்தில் அமர்ந்தான். உடனே ராவணன் வெற்றி பெற்று விட்டார். அரசன் சரணடைந்து விட்டான் என்று ராவணனைச் சேர்ந்தவர்கள் ஆரவாரம் செய்து ஆர்ப்பரித்தார்கள். அங்கு இருந்த பல மகரிஷிகளை தின்று தீர்த்து விட்டு ராவணனின் கூட்டம் திரும்பிச் சென்றது. ராவணன் சென்றதும் தேவர்கள் தங்கள் சுய ரூபத்துக்கு மாறினார்கள். அரசன் யாகத்தை நிறைவு செய்தான். ராவணன் மருத்தன் அரசனை வென்ற திருப்தியோடு எங்கு யுத்தம் செய்யலாம் என்று ஊர் ஊராகச் சென்று அரசர்களுடன் மோதினான் ராவணன்.

இந்திரன் வருணன் இவர்களுக்கு சமமாக தர்மத்தின்படி அமைதியாக ஆட்சி செய்து வந்த அரசர்களிடம் வம்பிற்கு சென்றான் ராவணன். யுத்தம் செய்ய வாருங்கள் யுத்தம் செய்ய வரவில்லை என்றால் என்னை உங்கள் அரசனாக ஏற்றுக் கொள்ளுங்கள். இரண்டில் ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் இல்லை என்றால் உங்கள் அனைவரையும் அழித்து விடுவேன். எனது படைகள் உங்களை தின்றே தீர்த்து விடுவார்கள் இது எனது கொள்கை என்று அனைத்து இடங்களுக்கும் தனது படைகளுடன் சென்றான் ராவணன். துஷ்யந்தன் காதி சுரதன் கயன் புரூரவன் போன்ற பல வலிமையான அரசர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ராவணனைப் பற்றி ஆலோசனை செய்தார்கள். இறுதியில் ராவணனை யுத்தம் செய்து வெல்ல முடியாது என்று தாங்கள் தோற்றதாக ஒப்புக் கொண்டனர். அங்கிருந்து கிளம்பிய ராவணன் அயோத்திக்கு வந்து சேர்ந்தான்.

இந்திரன் அமராவதி நகரை அழகாக வைத்திருப்பது போல் இருந்தது அயோத்தி. இஷ்வாகு குலத்தில் வந்த அனரண்யன் என்ற அரசன் அயோத்தியை அப்போது ஆண்டு வந்தான். இவர் தசரத சக்ரவர்த்தியின் முதாதையர் ஆவார். இவரையும் ராவணன் யுத்தத்திற்கு அழைத்தான். ராவணன் வருவான் என்பதை முன்னரை அறிந்து வைத்திருந்த அனரண்யன் யுத்தத்திற்கு தனது படைகளுடன் தயாராக இருந்தார். ராவணா நீ செய்யும் பாப காரியங்களைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன். உன்னுடன் யுத்தம் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்று யுத்தத்திற்கு கிளம்பினார். பத்தாயிரம் யானைகள் அதைப் போல இரு மடங்கு குதிரைகளும் கணக்கில்லாத ரதங்கள் கால் நடை வீரர்கள் என்று அனரண்யனன் படைகள் பூமியை மறைத்தபடி போருக்கு வந்தனர். அரசனின் படைகளும் ராவணனின் படைகளும் யுத்தம் செய்ய தயாராக இருந்தனர். அனரண்யன் படை பலம் மிக அற்புதமாக பெரிதாக இருந்தது. கடுமையாக யுத்தம் நடந்தது. நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சிகள் போல ராவணனின் படைகளிடம் அரசனின் அந்த பெரும் படை சில மணி நேரத்தில் அழிந்தது. தன் வீரர்கள் மடிந்ததைக் கண்ட அனரண்யன் தானே ராவணனுடன் நேரடியாக மோதினான். மாரீசன் சுகன் சாரணன் பிரஹஸ்தன் ஆகிய ராவணனின் மந்திரிகள் தோற்று ஓடினர். பல விதமான அஸ்திர சஸ்திரங்களை பிரயோகித்தும் அனரண்யனால் ராவணனை எதுவும் செய்ய முடியவில்லை. ராவணன் அரசனை தன் கையால் ஓங்கி அடித்தான் அதை தாங்க முடியாமல் அரசன் ரதத்திலிருந்து கீழே விழுந்தான். அரசனை பார்த்த ராவணன் பலமாக சிரித்து என்னுடன் மோதி என் பலத்தை தெரிந்து கொண்டாயா? மூவுலகிலும் எனக்கு சமமாக யுத்தம் செய்ய யாராலும் முடியாது தெரிந்து கொள் என்றான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -19

வேதவதி கோபத்தில் எரிப்பதைப் போல பார்ப்பதைக் கண்ட ராவணன் ஒரு கணம் ஸ்தப்பித்து நின்றான். வேதவதி ராவணனிடம் பேச ஆரம்பித்தாள். பண்பற்றவனே வனத்தில் தனியாக இருக்கும் என்னை யார் என்பதை நீ அறிந்து கொள்ளாமல் அனாவசியமாக என்னை தொட்டு விட்டாய். பல வரங்கள் பெற்று வலிமையுடன் இருக்கும் உன்னை என்னால் அழிக்க முடியாது. ஆனால் உனக்கு சாபம் கொடுக்கலாம். நான் உனக்கு சாபம் கொடுத்தால் அது என் தவ வலிமையைக் குறைத்து விடும். உனது கைகள் பட்ட இந்த சாரீரத்துடன் இனி நான் இருக்க மாட்டேன். இங்கேயே அக்னியை வளர்த்து இந்த நெருப்பில் விழுந்து எனது உடலை விடப் போகிறேன். நான் இது வரை செய்த தவத்தின் பலன் சிறிதளவாவது இருக்குமானால் நான் ஒரு தர்மவானின் குலத்தில் பிறந்து நீ அழிவதற்கு ஏதெனும் ஒரு வகையில் காரணமாக இருப்பேன் என்று சொல்லிக் கொண்டே வேதவதி அக்னியில் குதித்து தன் உடலை விட்டாள். அப்போது வானத்தில் இருந்து பூக்கள் மழையாக பொழிந்தது.

ராமரிடம் ராவணனின் வரலாற்றை சொல்லிக் கொண்டிருந்த அகத்தியர் இடையில் நிறுத்தி சிலவற்றைச் சொன்னார். நாராயணனை அடைய வேண்டி தவமிருந்து வந்தவள் வேதவதி. அவளே ஜனகர் ஏர் கலப்பையால் உழும் பொழுது பெட்டிக்குள் இருந்து குழந்தையாக வந்தாள். கலப்பையில் (சீத) உண்டானவள் என்பதால் சீதை என்று பெயர் பெற்றாள். அவளே தன் தவப்பயனால் உனக்கு மனைவியாக வந்தாள். நீ தான் சனாதனனான நாராயணன். ராவணன் மீது கொண்ட கோபம் மேகவதியின் மனதில் வேரூன்றிப் போனதால் ராவணனின் அழிவுக்கும் அவளே காரணமானாள். பல வரங்கள் பெற்று யாராலும் வெல்ல முடியாத ராவணனை மானிடத்திற்கும் மேலான தங்களின் பேராற்றலால் வென்றீர்கள் என்று சொன்ன அகத்தியர் தொடர்ந்து ராவணனின் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார்.

வேதவதி நெருப்பில் குதித்தது ராவணனிடத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பழைய படி உலகை சுற்ற ஆரம்பித்தான். ஒரு நாள் யாகம் செய்து கொண்டிருந்த மருத்தன் என்ற அரசரைக் கண்டு அவரின் அருகில் சென்றான். இவர் சம்வர்த்தன் என்ற பிரம்ம ரிஷியின் சகோதரர். மற்ற தேவகணங்கள் சூழ யாகம் செய்து கொண்டிருந்தார். இவருடன் இருந்த தேவர்கள் ராவணனின் வரங்களின் பலத்தைப் பற்றி தெரிந்து வைத்திருந்தார்கள். ராவணனை கண்டதும் பயந்து தங்கள் உருவத்தை பறவை மற்றும் மிருகங்களின் உருவமாக மாற்றிக் கொண்டார்கள். ராவணன் யாகத்தை அசுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அசுத்தமான நாய் போல தன் உருவத்தை மாற்றிக் கொண்டு யாக சாலையினுள் நுழைந்தான். யாகம் செய்து கொண்டிருந்த அரசனிடம் என்னுடன் யுத்தத்திற்கு வா அல்லது என்னிடம் தோற்று விட்டேன் என்று என் முன் மண்டியிடு என்று அதட்டினான். அதற்கு அரசர் யாக சாலைக்குள் வந்து திடிரென்று யுத்தத்திற்கு வா என்று கூப்பிடுகிறாயே நீ யார் என்று கேட்டான். ராவணன் அந்த இடம் அதிர சிரித்து தன் பெருமை பேசினான். என்னைக் கண்டு பயப்படாமல் நிற்கிறாயே? நான் பெற்ற வரங்கள் ஆயுதங்கள் அஸ்திரங்கள் என் பலம் இவற்றை எல்லாம் உலகமே தெரிந்து வைத்திருக்கிறது. என்னை கண்டால் தேவர்களும் பயந்து ஓடி ஒளிந்து கொள்வார்கள். என்னைப் பற்றி நீ அறிந்ததில்லையா? குபேரன் சகோதரன் ராவணன் நான். என் சகோதரன் என்றும் பார்க்காமல் குபேரனை வெற்றி பெற்று அவன் விமானத்தை அபகரித்துக் கொண்டவன் நான் என்றான்.

மருத்தன் ராவணனிடம் பேச ஆரம்பித்தான். குபைரனையே எதிர்த்து யுத்தம் செய்து வெற்றி பெற்றிருக்கிறாய் அப்படி என்றால் நிச்சயமாக உனக்கு சமமாக யாரும் இருக்க முடியாது என்பதை ஒத்துக் கொள்கிறேன். நீ தர்ம வழியில் தவம் செய்து வரங்களைப் பெற்றதாக நான் இதுவரை அறியவில்லை. நீ சொல்லும் போது தான் தெரிந்து கொள்கிறேன். நீ வீணாக தற்பெருமை பேசுகிறாய். துஷ்டனே யாகத்தை அசுத்தப்படுத்திய நீ இங்கிருந்து நீ உயிருடன் தப்ப முடியாது. என் உயிருள்ள வரை உன்னை விட மாட்டேன். கூர்மையான என் பாணங்களால் உன்னை யம லோகத்துக்கே அனுப்புகிறேன் என்று கோபத்துடன் சொல்லிக் கொண்டே தன் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு யுத்தம் செய்ய தயாரானான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -18

குசத்வஜன் என்பவர் ஒரு பிரம்ம ரிஷி எனது தந்தை அவர். அளவில்லாத மகிமையும் பெருமையும் கொண்டவர். பிரம்மாவுக்கு சமமாக இருந்தவர். அவர் நித்ய வேத பாராயணம் செய்து கொண்டிருக்கும் போது அவரது வாக்கிலிருந்து உதித்தவள் நான். என் பெயர் வேதவதி. என்னை தேவர்கள் கந்தர்வர்கள் யட்சர்கள் என்று பலர் திருமணம் செய்து கொள்ள எனது தந்தையிடம் கேட்டார்கள். ஆனால் என் தந்தை நாராயணனுக்கு மட்டுமே என்னை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்து வைத்திருந்தார். அதனால் அவர்களில் யாருக்குமே என்னைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார். என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தம்பு என்ற தைத்ய அரசன் எனது தந்தை தூங்கும் பொழுது அவரைக் கொன்று விட்டான். திடுக்கிட்டுப் போன என் தாய் எனது தந்தையுடனேயே நெருப்பில் விழுந்து விட்டாள். எனது தந்தையின் விருப்பப்படி நான் மனதில் வைத்திருக்கும் நாராயணன் தான் என் கணவன் என்று சங்கல்பம் செய்து கொண்டு அவரின் நினைவாகவே இக்காட்டில் தவ வாழ்வை வாழ்ந்து வருகிறேன். வேறு யாரும் என்னை அடைய முடியாது. ராவணன் என்று பெயர் பெற்ற நீ யார் என்பது எனக்குத் தெரியும். மூவுலகிலும் நடப்பதை என் தவ வலிமையால் அறிந்து கொண்டு விடுகிறேன். இங்கிருந்து உனக்கு விடை தருகிறேன். நலமாக போய் வா என்றாள்.

வேதவதி பேசியதைக் கேட்ட ராவணன் தன்னுடைய புஷ்பக விமானத்திலிருந்து கீழே இறங்கி அவளிடம் பேச ஆரம்பித்தான். அழகிய பெண்ணே நாராயணன் உனக்கு கிடைக்க மாட்டான். அவன் வருவான் என்று நம்பி நீ மேலும் தவம் செய்து கொண்டிருந்தால் இறுதியில் ஏமாந்து போவாய். இது போன்ற தவ வாழ்க்கையே வயதான முதியவர்கள் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள செய்வார்கள். எல்லா விதமான நல்ல குணங்களும் அழகும் கொண்ட நீ இப்படி பேசுவது பொருத்தமாக இல்லை. இது நாள் வரை உன்னைப் போல் ஒரு அழகியை நான் சந்தித்தது இல்லை. உனது அழகினால் நீ சிறிது கர்வம் கொண்டவளாக இருப்பாய் என்று எண்ணுகிறேன். மூவுலகும் போற்றத் தகுந்த அழகியே உன் இளமையை வீணாக்காதே. நான் இலங்கையின் அதிபதி யாராலும் வெல்ல முடியாதவன் என்று பெயர் பெற்றவன். நீ கூறிய நாராயணன் என்பவன் வீர்யத்திலும் தவத்திலும் பலத்தாலும் எனக்கு சமமாக நிற்க முடியாது அவனைப் போய் நீ விரும்புவதாகச் சொல்கிறாய். என்னை திருமணம் செய்து கொண்டால் அரசி என்ற பட்டத்துடன் எல்லா சுகங்களையும் நன்றாக அனுபவிக்கலாம் இந்த தவ வாழ்க்கையை விட்டு விட்டு என்னோடு வந்து விடு என்றான்.

வேதவதி கோபத்துடன் பேச ஆரம்பித்தாள். நீ பேசுவது சரியல்ல. நாராயணன் மூன்று உலக மக்களாலும் வணங்கப்படுபவர். மூன்று உலகத்திற்கும் நாயகனான நாராயணனை நீ அவமதிக்கிறாய். அறிவுடையவர்கள் யாரும் அவரை இழிவாக பேச மாட்டார்கள். ராட்சசனான உன்னைத் தவிர வேறு யாரும் இதுவரை நாராயணனை அவதூறாக பேசியதில்லை என்றாள். இதனைக் கேட்ட ராவணன் மூன்று உலகத்திற்கும் நானே நாயகன் அந்த நாராயணன் அல்ல. இதனை முதலில் நீ தெரிந்து கொள். மூன்று உலகங்களையும் வெற்றி பெற்ற என்னை அவமதித்து விட்டு என்னை வேண்டாம் என்றும் சொல்கிறாயா உன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறேன் என்னை யார் தடுப்பார்கள் பார்க்கிறேன் என்று வேதவதியின் தலைக் கேசத்தை பிடித்து ராவணன் இழுத்தான். நெருப்பை போல் இருந்த வேதவதி தன் தலை கேசத்தை தனது கைகளால் தட்டினாள். அவளது கைகளே கத்தி போல் ராவணன் பற்றியிருந்த கேசத்தை அறுத்து அவளை ராவணனிடமிருந்து விடுவித்தது. எல்லையில்லாத கோபத்துடன் ராவணனை எரிப்பது போல் பார்த்து பேச ஆரம்பித்தாள்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -17

நந்திபகவான் சொன்னதைக் கேட்ட தசக்ரீவன் சற்றும் யோசிக்காமல் பேச ஆரம்பித்தான். மலை மேல் இந்த புஷ்பக விமானத்தில் நான் செல்வதை தடுத்து நிறுத்தி என்னை அவமதித்து விட்டாய். எனது வலிமை தெரியாமல் இருக்கிறாய். இந்த மலையை தூக்கி எனது வலிமையை காண்பிக்கிறேன் அப்போது எனது பலத்தை நீ தெரிந்து கொண்டு என் முன் மண்டியிடுவாய் என்ற தசக்ரீவன் மலையை தன் கைகளால் தூக்க முயன்றான். மலை அசைந்து ஆடியது. தேவ கணங்கள் நடுங்கினர். பார்வதியும் சிவனை அணைத்துக் கொண்டாள். அப்பொழுது சிவன் தன் கால் கட்டை விரலால் மலையை லேசாக அழுத்தினார். மலையின் அடியில் அகப்பட்டுக் கொண்ட தசக்ரீவனது கைகள் நசுங்கியது. தசக்ரீவனின் மந்திரிகள் செய்வதறியாமல் விழித்தார்கள். தன்னுடன் வந்தவர்கள் ஒன்றும் செய்யாமல் நிற்பதால் கோபமும் கைகள் நசுங்குவதால் ஏற்பட்ட உடல் வலியும் சேர தசக்ரீவன் மூவுலகும் நடுங்கும்படி உரத்த குரலில் அலறினான். தசக்ரீவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு பிரளய காலம் வந்து விட்டதோ என்று பலர் பயந்து நடுங்கினார்கள். தசக்ரீவனின் பரிதாபமான கதறலை கண்ட மந்திரிகள் சிவனை துதித்து பாடுங்கள். அவரைத் தவிர உங்களை காப்பாற்ற வேறு யாரலும் முடியாது வேறு வழி இல்லை. அவரை தோத்திரம் செய்து வணங்கி உங்கள் பிரார்த்தனையால் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள். சிவபெருமான் கருணையே வடிவானவர். உன் பிரார்த்தனையை கேட்டு நிச்சயம் அருள் புரிவார் என்று யோசனை சொன்னார்கள். இதற்கு சம்மதித்த தசகரீவன் சாமகானத்தில் பாடல்கள் பாடி சிவபெருமானை வணங்கி பிரார்த்தனை செய்து வழிபட்டான்.

சிவபெருமான் தசக்ரீவனின் சாமகானத்தில் மகிழ்ந்து அவனை விடுவித்தார். கைலாய மலையை தூக்கும் உனது பலத்தையும் தன்னம்பிக்கையும் பாராட்டுகின்றேன். உனது சாமகானத்தால் நான் மிகவும் மகிழ்ந்தேன். மலையின் அடியில் இருந்து நீ போட்ட கூக்குரலால் பிரளய காலம் வந்து விட்டதோ என்று பயப்படும் அளவிற்கு மூவுலகமும் நடுங்கியது. இதனால் இன்று முதல் நீ ராவணன் என்று அழைக்கப்படுவாய் என்று வாழ்த்தினார். (ராவண என்றால் உலகை நடுங்கச் செய்தவன் என்று பொருள்) மூன்று உலகங்களிலும் நீ எங்கு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று உனக்கு அனுமதி தருகிறேன் என்றார். அதற்கு ராவணன் நான் பாடிய சாம கானத்தில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தது உண்மையானால் எனக்கு ஒரு வரம் தாருங்கள். பிரம்மா எனக்கு தீர்காயுளையும் யட்சர்கள் கந்தர்கள் தேவர்களால் எனக்கு மரணம் இல்லையென்று வரம் அளித்திருக்கிறார். உங்கள் கையால் எனக்கு ஒரு அஸ்திர ஆயுதம் தாருங்கள் என்று சிவனிடம் கேட்டுக் கொண்டான். ராவணன் கேட்டதும் சிவபெருமான் சந்திர ஹாஸம் என்ற வாளைக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட ராவணனிடம் ஒரு எச்சரிக்கையும் செய்தார். இந்த ஆயுதத்தை அலட்சியமாக எண்ணாதே. நீ சற்று மதிப்பு குறைவாக நடந்து கொண்டாலும் இந்த ஆயுதம் என்னிடம் திரும்பி வந்து விடும் என்றார். சிவபெருமானை வணங்கி விடை பெற்றுக் கொண்டு புஷ்பகத்தில் ஏறிய ராவணன் இந்த பூமி முழுவதும் சுற்றினான். ஆங்காங்கு தென்பட்ட சத்திரிய அரசர்களை தனது பரிவாரங்களோடு சென்று துன்புறுத்திய வண்ணம் பலரை அழித்தான். ராவணன் வருகிறான் என்று தெரிந்ததும் பலர் பயந்து ஓடினார்கள். சிலர் இவனுடைய கர்வத்தையும் அட்டகாசத்தையும் தெரிந்து கொண்டு இவனைக் காணும் முன்னே தோற்றோம் என்று ஒப்புக் கொண்டு மண்டியிட்டு சரணடைந்தார்கள்.

சிவபெருமானிடம் வரம் பெற்றதும் உலகை சுற்றி வந்து அனைவரையும் வெற்றி பெற்ற ராவணன் ஒரு முறை இமய மலைச் சாரலுக்கு வந்தான். அங்கு மான் தோல் உடுத்தி ஜடை தரித்து தவம் செய்யும் ஒரு பெண்ணைக் கண்டான். இயல்பாகவே அழகான அந்த பெண் தன் தவத்தாலும் நியமங்களாலும் தேஜசுடன் பிரகாசமாக விளங்கினாள். அவளிடம் சென்று பேச ஆரம்பித்தான் ராவணன். அரசர்களையும் மோகத்தில் வீழ்த்தக் கூடிய அழகு உன்னுடையது. உன் அழகுக்கும் இளமைக்கும் சற்றும் பொருத்தமில்லாத தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாய். உன் அழகிற்கும் இள வயதிற்கும் தவம் செய்யும் செயல் ஏற்றது அல்ல. ஏன் உன்னை வருத்திக் கொண்டு தவம் செய்கிறாய். யார் நீ உன்னுடைய பூர்வீகம் என்ன என்று கேட்டான். விருந்தினருக்கு உரிய மரியாதை செய்த பின் அந்த பெண் பேச ஆரம்பித்தாள்.