ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -16

குபேரனுக்கும் தசக்ரீவனுக்கும் யுத்தம் கடுமையாக நடந்தது. தசக்ரீவன் தன் மாயத்தை காண்பித்து மறைந்து நின்று பல விதமான ரூபங்களை எடுத்து யுத்தம் செய்து குபேரனை அலைக்கழித்து இறுதியில் தனது பெரிய கதையால் ஓங்கி அடித்தான். குபேரன் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மரம் போல தரையில் விழுந்தான். குபேரனின் படைகள் அவனை நந்தன வனத்துக்கு கொண்டு சென்று குபேரனை மயக்கத்தில் இருந்து தெளிவித்தார்கள். தசக்ரீவன் குபேரனை வெற்றி பெற்று விட்டோம் என்று மகிழ்ந்தான். தன்னுடைய வெற்றியைக் கொண்டாட குபேரனுடைய புஷ்பக விமானத்தை அபகரித்து எடுத்துக் கொண்டான். அதன் தூண்கள் தங்கத்தில் இருந்தது. தோரணங்களில் வைடூரியம் இழைத்து கட்டப்பட்டு இருந்தது. முத்துக்களால் வலைகள் பின்னப்பட்ட ஜன்னல்கள் இருந்தது. மனோ வேகத்தில் செல்லக் கூடியது. நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்திற்கு கொண்டு செல்லும் வல்லமை உடையது. ஆகாயத்தில் பறக்கும் அது விரும்பிய ரூபத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதியுடன் இருந்தது. அதன் படிகள் மணிகள் இழைத்து பொன்னால் செய்யப்பட்டிருந்தன. மூன்று உலகையும் வெற்றி கொண்ட இறுமாப்புடன் குபேரன் இருந்த கைலாச மலையின் ஒரு பகுதியை தன் ஆற்றலால் வெற்றி பெற்றதாக மகிழ்ந்து கொண்டாடினான்.

குபேரனை வெற்றி பெற்ற தசக்ரீவன் அங்கிருந்து புஷ்பக விமானத்தில் கையிலை மலைக்கு மேலே செல்ல முயற்சித்தான். அங்கிருந்த மலை தங்கம் போல் ஜொலித்தது அழகிய வனங்களைக் கொண்ட அந்த மலையில் ஏறும் பொழுது புஷ்பக விமானம் நின்று விட்டது. ஏன் நின்று விட்டது என்று மந்திரிகளுடன் கலந்தாலோசித்தான். ஏன் நான் நினத்தபடி செல்லவில்லை இந்த மலையில் யாரவது என்னை தடுக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். அப்போது மாரீசன் பதில் சொன்னான். காரணம் இல்லாமல் இந்த புஷ்பகம் நிற்கவில்லை இது குபேரனைத் தவிர மற்றவர்களுக்கு வாகனமாகப் பயன்படாது என்ற விதி முறை ஏதாவது இருக்கலாம் என்று நினைக்கிறேன் என்றான். அப்போது சிவபெருமானுடைய வாகனமான நந்தி பகவான் கருப்பும் மஞ்சளும் ஆன நிறமும் புஜ பலத்துடன் கூடிய உருவத்துடன் வித்தியாசமான தலையுடனும் வித்தியாசமான உருவமாக தசக்ரீவன் அருகில் வந்து பேச ஆரம்பித்தார்.

சிவனுடைய கிங்கரன் நான். எனது பெயர் நந்திகேஸ்வரன். தசக்ரீவா திரும்பி போ. இந்த இடம் சிவனின் இருப்பிடம். இந்த இடத்தை யாராலும் நெருங்கி வர முடியாது. சிவனைக் காணும் பாக்கியம் பெற்ற தகுதியானவர்கள் மட்டுமே இங்கு நுழைய முடியும் என்பது நடைமுறை விதி. துர்புத்தியிடன் இருக்கும் நீ திரும்பி போ இல்லையெனில் நாசமடைவாய் என்று எச்சரிக்கை செய்தார். இதைக் கேட்ட தசக்ரீவன் நந்திபகவானின் உருவத்தை அலட்சியமாக பார்த்து இடி இடிப்பது போல சிரித்து அவரது உருவத்தைப் பார்த்து ஏளானம் செய்து சிரித்தான். இதனால் கோபம் கொண்ட நந்திபகவான் கடுமையான குரலில் தசக்ரீவா எனது உருவத்தைப் பார்த்து ஏளானம் செய்து சிரித்து விட்டாய். இப்பொழுதே நான் உன்னை வதம் செய்து அழித்து விடுவேன் அது என்னால் முடியும். பிரம்மா உனக்கு அளித்த வரத்திற்கு மரியாதை செய்யும் விதமாக உன்னை நான் விடுகிறேன். இரண்டாவதாக உனது தீய செயல்களால் நீ ஏற்கனவே அழிந்து விட்டாய் இப்போது இருப்பது வெறும் சதைப்பிண்டம் மட்டுமே. வெறும் சதைப்பிண்டத்தை கொல்வதால் பயன் ஒன்றும் இல்லை. நீ என்னை ஏளானம் செய்ததின் விளைவாக எனது பலமும் வீர்யமும் தேஜசும் உள்ள வானரங்கள் உனது குலத்தை நாசம் செய்ய வருவார்கள். நகமும் பற்களுமே ஆயுதங்களாகவும் மனோ வேகத்தில் செயல் படுபவர்களாகவும் வெறி கொண்டு யுத்தம் செய்பவர்களாகவும் பெரிய மலை போன்ற உருவத்துடன் வருவார்கள். அவர்கள் உன் கர்வம் அகங்காரம் இவற்றை அடக்கி விடுவார்கள். உன்னை சார்ந்திருக்கும் மந்திரிகள் புத்திரர்கள் உற்றார் உறவினரோடு நாசம் அடைவாய் என்றார். நந்தி பகவான் இப்படிச் சொன்னதும் தேவர்கள் நந்திபகவானின் மீது மலர்களை தூவினார்கள். தேவ துந்துபிகள் முழங்கின.

மாணிக்கவாசகர்

சிவ பக்தையான மண்டோதரி சிவபிரானை குழந்தை வடிவில் தரிசிக்க விரும்பி அதற்காக கடும் தவம் புரிந்தாள். அதேசமயம் உக்கிரகோசமங்கை எனும் திருத்தலத்தில் ஆயிரம் முனிவர்கள் ஒன்று கூடி சிவபிரானை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக் காட்சியளித்த சிவன் தன் கையிலிருந்த சிவ ஆகமங்களை அவர்களிடம் தந்தார். ராவணனின் மனைவியான மண்டோதரிக்கு தான் குழந்தை வடிவில் காட்சியளிக்கச் செல்வதாகவும் திரும்பி வரும் வரை ஆகமங்களைப் பாதுகாக்கும் படியும் கூறினார். அதோடு குழந்தை வடிவில் செல்லும் தன்னை ராவணன் தொடும் சமயத்தில் அங்கிருந்து மறைந்து ஜோதி வடிவாக இக்கோயில் குளத்தினில் தோன்றி மீண்டும் ஒரு முறை காட்சியருள்வதாகக் கூறி மறைந்தார். அழகே உருவான குழந்தை வடிவில் மண்டோதரிக்குக் காட்சியளித்தார் சிவன். குழந்தை வடிவில் வந்தவர் யார் என உணர்ந்து கொண்ட மண்டோதரி தன் தவம் நிறைவேறியதால் மகிழ்ந்தாள். குழந்தையாய் இருந்த சிவனை வாரியணைத்து எடுத்து சீராட்டினாள். அப்போது அங்கு வந்த ராவணன் அக்குழந்தையின் அழகால் கவரப்பட்டான். அவன் மனதில் எல்லையில்லா ஆனந்தம் ஏற்பட்டது. யாருடைய குழந்தை இது என்று மண்டோதரியிடம் ராவணன் கேட்டான். அதற்கு மண்டோதரி நடந்தவற்றை கூறினாள். சிவனின் பக்தனான ராவணன் மகிழ்வோடு அந்த குழந்தையை தூக்க முயற்சிக்கும் போது சிவன் அங்கிருந்து மறைந்து உத்தர கோச மங்கை தலத்தின் திருக்குளத்தில் அக்னிப் பிழம்பாய் தோன்றினார். அவரைக் கண்ட அங்கிருந்த முனிவர்கள் பரவசமடைந்து ஜோதியில் பாய்ந்து நீரில் மூழ்கினர். ஒரே ஒரு முனிவர் மட்டும் இறைவன் கொடுத்த ஆகமங்களைக் காப்பதே தன் கடமை என சிவனின் கட்டளைக்கு பணிந்து அங்கேயே ஆகமங்களை காத்து நின்றார். அவருக்கு சிவன் தன் உமையவளுடன் விடைமேலமர்ந்து காட்சியருளினார். மூழ்கிய முனிவர்கள் ஒவ்வொருவரும் லிங்க வடிவில் இறைவனோடு ஒன்ற இறைவன் நடுவில் வீற்று சகஸ்ரலிங்கமாக அமர்ந்தார்.

எஞ்சியிருந்த முனிவர் தன் உயிரினும் பெரிதாய் சிவாகமங்களைக் காத்ததால் அவரை பாண்டிய நாட்டில் மீண்டும் பிறந்து சைவமும் தமிழும் தழைத்தோங்க தொண்டு செய்யுமாறு அருளி மறைந்தார் எம்பெருமான். அந்த எஞ்சிய தொண்டரே மாணிக்கவாசகராய் அவதரித்தார். மகேசனின் புகழ்பாடி மண் சிறக்க வகை செய்தார். மாணிக்கவாசகப் பெருமானின் அவதாரத்திற்கு மண்டோதரியின் பக்தியும் ஒரு காரணமாயிற்று.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -15

குபேரனின் தூதுவன் சொன்னதைக் கேட்ட ராவணனின் கோபம் கட்டுக் கடங்காமல் போனது. அதனால் தூதுவனின் அமர்ந்திருந்த ஆசனத்தில் தனது காலை வைத்து அவனை அவமரியாதை செய்தான் தசக்ரீவன். தூதுவனே நீ சொல்வது எனக்கு நன்மை தருவதாக இல்லை. நீ சொல்வதை என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இது வரை குபேரன் எனக்கு மூத்தவன் என்பதால் அவனை எதுவும் செய்யாமல் விட்டு வைத்தேன். இப்பொழுது எனக்கு உபதேசம் சொல்லி அனுப்பும் அளவிற்கு வந்துவிட்டான். இனி அவனை விட்டு வைக்க மாட்டேன். எனது பலத்தால் மூவுலகையும் வெற்றி பெறுவேன். எதிர்ப்பவர்களை யம லோகம் அனுப்புவேன் என்று சொல்லிக் கொண்டே தனது வாளால் தூதுவனின் தலையை வெட்டிய தசக்ரீவன் அவனது உடலையும் தலையையும் ராட்சசர்களுக்கு உணவாக கொடுத்தான். தசக்ரீவனின் இச்செயலைக் கண்டதும் அரசவையில் இருந்தவர்கள் தசக்ரீவனை வாழ்த்தி புகழ்ந்து பேசினார்கள். இதனால் தற்பெருமை கொண்ட தசக்ரீவன் மூன்று உலகையும் வெற்றி கொள்ள முடிவெடுத்தான்.

குபேரனை முதலில் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணிய தசக்ரீவன் மகோதரன் பிரஹஸ்தன் மாரீசன் சுகன் சாரணன் தூம்ராக்ஷன் என்ற ஆறு மந்திரிகளுடன் முதலில் குபேரனின் இருக்கும் கையிலை நோக்கிப் புறப்பட்டான். தங்கள் பலத்தில் எல்லையில்லா கர்வம் உடைய இவர்கள் யுத்தம் செய்ய ஆவலுடன் கைலாச மலையை சென்றடைந்தார்கள். இவர்களை காவலர்களால் தடுக்க முடியவில்லை. காவலர்கள் குபேரனிடம் சென்று முறையிட்டனர். தசக்ரீவன் யுத்தம் செய்ய வந்திருக்கிறான் என்பதை தெரிந்து கொண்ட குபேரன் யுத்தம் செய்ய தனது படைகளுக்கு அனுமதி கொடுத்தான். கோரமான பெரும் யுத்தம் தொடர்ந்து நடந்தது. ராட்சசர்கள் தொடர்ந்து நடந்த யுத்தத்தினால் களைத்து விட்டனர். தசக்ரீவன் குபேரனின் படைகளை எதிர்த்து நிற்க முடியாமல் திணறினான். மூச்சு முட்டுவது போல உணர்ந்தான். மழை பொழிவது போல அம்புகள் அவனை தடுத்தன. அம்புகள் பட்டதினால் ஏற்பட்ட காயம் அவனை வருத்தியது. இதனால் கோபமடைந்த தசக்ரீவன் தன் படைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதத்தில் கோசம் எழுப்பி கத்திக் கொண்டே ஓடி தனது கதையை சுழற்றி யுத்தம் செய்தான். இதனால் புத்துணர்ச்சி அடைந்த ராட்சச படைகள் குபேரனின் படைகளை கொன்று குவித்தார்கள். இறுதியில் ராட்சச படைகளின் முன் நிற்க முடியாமல் குபேரனின் படைகள் தோற்றார்கள். குபேரனின் படைகளில் இறந்தவர்கள் சொர்க்கம் செல்வதைக் கண்ட ரிஷிகள் ஆகாயத்தில் கூடி நின்று வாழ்த்தினார்கள். யுத்த களத்தில் நடந்தவற்றை குபேரனிடம் சென்ற படைவீரர்கள் கூறினார்கள்.

குபேரன் யுத்த களத்திற்கு வந்து தசக்ரீவனுடன் பேச ஆரம்பித்தான். துஷ்டனே நான் கூறிய அறிவுறையைக் கேட்காமல் எனது தூதுவனையும் கொன்று தவறு செய்து கொண்டே போகிறாய். நீ செய்த தவறுக்கான பலன் உனக்குத் தெரிய வரும் பொழுது நீ முற்றிலும் அழிந்திருப்பாய். தெரியாமல் விஷத்தை அருந்தி விட்டு தெரியாமல் செய்த தவறு தானே என்று கூறி விட்டால் விஷம் வேலை செய்யாமல் போய் விடுமா? தாய் தந்தையரையும் குருவையும் யார் அவமதிக்கிறானோ அதன் பலனை அவன் அனுபவித்தே ஆக வேண்டும். அவர்கள் யம லோகம் செல்லும் பொழுது இதனை அறிவார்கள். நிலையில்லாத இந்த சரீரத்தில் தவம் செய்து தன்னை செம்மை படுத்திக் கொள்ளாதவன் தனது முடிவு காலம் வரும் பொழுது மிகவும் சிரமப்படுவான். நீ உன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாய் என்ற குபேரன் தசக்ரீவனுடன் யுத்தம் செய்தான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -14

சக்தி என்ற அளவிட முடியாத பெருமை வாய்ந்த ஆயுதத்தை மயன் தசக்ரீவனுக்கு கொடுத்தான். இலங்கைக்கு மனைவியுடன் வந்த தசக்ரீவன் விரோசனனுடைய பேத்தியான வஜ்ர ஜ்வாலா என்ற பெண்ணை தன் சகோதரன் கும்பகர்ணனுக்கு திருமணம் செய்து வைத்தான். சைலூஷன் என்ற கந்தர்வனின் மகள் சரமா என்பவளை விபீஷணனுக்கு திருமணம் செய்து வைத்தான். திருமணம் செய்து கொண்ட மனைவியர்களுடன் ராட்சசர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். மந்தோதரி மேகனாதன் என்ற மகனைப் பெற்றாள். பிறந்த உடனே மேகம் இடி இடிப்பது போல உரத்த குரலில் குழந்தை அழுதது. அந்த ஓசையில் இலங்கை நகரமே ஸ்தம்பித்து விட்டது. அதனால் தசக்ரீவன் தன் மகனுக்கு மேகநாதன் என்று பெயரிட்டான். மேகநாதன் தாய் தந்தையருக்கு எல்லையில்லாத ஆனந்தத்தை தருபவனாக வளர்ந்தான்.

பிரம்மாவின் வரம் காரணமாக கும்பகர்ணனுக்கு அளவில்லாத தூக்கம் வர ஆரம்பித்தது. அரசனான தனது சகோதரனிடம் உறக்கம் என்னை வாட்டுகிறது. எனக்கு தகுந்தாற் போல் வீட்டைக் கட்டித் தா என்று கேட்டுக் கொண்டான் கும்பகர்ணன். தசக்ரீவனும் விஸ்வகர்மாவுக்கு இணையான சிற்பிகளை வைத்து கும்பகர்ணனின் உடல் பருமனுக்கு ஏற்றார் போல் அழகிய ஒரு மாளிகையை கட்ட உத்தரவிட்டான். ஒரு யோஜனை தூரம் நீளமும் இரண்டு மடங்கு அகலமுமாக மாளிகை உருவாகியது. கும்பகர்ணன் உறக்கத்தில் ஆழ்ந்தான். ஆறு மாதங்கள் தூங்கியும் ஆறு மாதங்கள் உணவு சாப்பிட்டும் சாப்பிட்ட களைப்பில் ஓய்வு எடுப்பதுமாக கும்பகர்ணனின் வாழ்க்கையில் பல வருடங்கள் கழிந்தது. கும்பகர்ணன் இவ்வாறு காலத்தை கழித்த பொழுது தசக்ரீவன் தேவர்கள் யட்சர்கள் கந்தர்வர்களை போரில் வென்றான். பூஜைகள் யாகங்கள் நடக்கும் இடங்கள் மற்றும் தேவலோகத்து நந்தவனம் போன்ற இடங்களை தசக்ரீவன் அழித்தான். தேவர்களின் இருப்பிடத்தை அழிப்பதையே காரியமாகக் கொண்ட தசக்ரீவனை திருத்த எண்ணிய குபேரன் ஒரு தூதுவனை அனுப்ப எண்ணினான். தசக்ரீவன் கேட்டதும் இலங்கையை திருப்பிக் கொடுத்ததை சுட்டிக் காட்டி அறிவுரை சொல்லி தூதுவன் ஒருவனை தசக்ரீவனிடம் அனுப்பினான் குபேரன். அந்த தூதன் முதலில் விபீஷணனிடம் சென்றான். அவனை நன்றாக உபசரித்த விபீஷணன் உறவினர்களின் நலம் விசாரித்த பின் தூதுவனை சபைக்கு அழைத்துச் சென்று தசக்ரீவனுக்கு அறிமுகப் படுத்தினான்.

குபேரனிடம் இருந்து வந்த தூதுவன் தான் கொண்டு வந்த செய்தியை கூறினான். உங்களுக்கும் உங்கள் சகோதரர் குபேரன் இருவருக்குமே சமமான குல மரியாதையும் செல்வங்களும் உள்ளது. உங்களுக்கு இலங்கையை கொடுத்து விட்ட குபேரன் கயிலையை தனது இருப்பிடமாகக் கொண்டு தவங்கள் பல செய்து வருகிறார். இதனால் சிவனின் அருளையும் பார்வதியின் அருளையும் பெற்றிருக்கிறார். உங்களால் பல முறை குபேரன் உதாசினப்படுத்தப் பட்டிருக்கிறார். ஆனாலும் தனது சகோதரனான நீங்கள் தர்மத்தை கடைபிடித்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் குபேரன் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார். அரசனான நீங்கள் தர்மத்தின் படி நடந்து கொள்வது நல்லது. தேவர்களின் நந்தன வனத்தை அழித்ததாகவும் ரிஷிகளையும் தேவர்களையும் வதைத்ததாகவும் கேள்விப்பட்டோம். பலரை அழித்து நாசமாக்கியதாகத் தெரிகிறது. உனது செயல்கள் நமது குலத்திற்கு தலை குனிவை ஏற்படுத்துகிறது. குலத்தின் பெருமையை கெடுக்கும் அதர்ம செயல்களை செய்து கொண்டிருக்கிறாய். நீங்கள் தேவகணங்களை அடித்தது போலவே அவர்களும் உங்களை வதம் செய்ய என்ன வழி என்று யோசித்து வருகிறார்கள். எனவே இனி மேல் இது போல் அதர்மமான செயல்களை செய்யாதே என்று தூதுவன் சொல்லி முடித்தான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -13

குபேரனிடம் விஸ்ரவஸ் பேச ஆரம்பித்தார். தசக்ரீவனுக்கு நானும் நிறைய அறிவுரை சொல்லியும் பயமுறுத்தியும் பார்த்து விட்டேன் பயனில்லை. பலசாலியாக துர்புத்தியுடன் யார் சொல்லையும் கேட்க மறுக்கிறான். அவனுக்கு கிடைத்துள்ள வரங்களைப் பற்றி உனக்குத் தெரியும். பிரம்மாவிடமிருந்து கிடைத்த வரங்களால் கர்வம் தலைக்கேற துர்புத்தி படைத்தவனாகி விட்டான். யாரை மதிக்க வேண்டும் யாரை வணங்க வேண்டும் என்ற சாதாரண எண்ணம் கூட இல்லாதவனாக இருக்கிறான். என்னிடம் சாபம் பெற்று பயங்கரமான உருவை அடைந்தும் அவன் கர்வம் குறையவில்லை. தசக்ரீவனுடன் விரோதத்தை வளர்த்துக் கொண்டு அவனுடன் மோதாதே. அது உனக்கு வீண் சிரமத்தைத் தான் கொடுக்கும். இலங்கையை காலி செய்து கொண்டு உன் பரிவாரங்களுடன் கைலாச மலைக்கு நீ சென்று விடு. அங்கு அழகிய மந்தாகினி நதி இருக்கிறது. நதிகளுள் சிறந்த நதி. சூரிய ஒளிக்கு இணையான பொன் நிற தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் நீர் நிலைகளை உடையது. வாசனை மிகுந்த குமுத மலர்களும் உத்பல மலர்களும் நிறைந்தது. அங்கு தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மகிழ்வார்கள். மிகவும் சிறப்பான அந்த இடம் உனக்கு ஏற்றதாக இருக்கும் என்று குபேரனிடம் சொல்லி முடித்தார் விஸ்ரவஸ்.

குபேரன் தன் தந்தை விஸ்ரவஸ் சொன்னதைக் கேட்டதும் அவரின் வார்த்தைக்கு மரியாதை செய்யும் பொருட்டு தனது பரிவாரங்களுடன் இலங்கையை காலி செய்து கொண்டு கைலாச மலைக்கு சென்றான். இந்திரனின் அமராவதியைப் போல் குபேரன் தன் நகரையும் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்தான். இலங்கை நகரம் இப்போது சூன்யமாக இருந்தது. இலங்கை நகரை குபேரன் காலி செய்து விட்டான் என்பதை அறிந்த பிரஹஸ்தன் தசக்ரீவனிடம் நடந்தவைகள் அனைத்தையும் விவரமாக சொன்னான். குபேரன் இலங்கை நகரை காலி செய்து விட்டான். நீ உன் மந்திரிகள் சகோதரர்களுடன் இலங்கையை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்து வரலாம். எந்த வித தடையுமில்லை என்றான். தசக்ரீவனுக்கு இலங்கை நகரம் எந்த வித எதிர்ப்புமின்றி கிடைத்து விட்டது. தசக்ரீவனுக்கு அவனது சகோதரர்களும் சுமாலியின் மந்திரிகளும் சேர்ந்து இலங்கையின் அரசனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள். அரசனானதும் தசக்ரீவன் தன் சகோதரி சூர்ப்பனகைக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானித்தான். காலக குலத்தில் வந்த வித்யுத்ஜிஹ்வன் என்பவனுக்கு சூர்ப்பனகையை திருமணம் செய்து கொடுத்தான். இலங்கையில் ஒரு காட்டுப் பாதையில் தசக்ரீவன் சென்று கொண்டிருந்த போது ஒரு பெண்ணுடன் ஒருவர் இருப்பதைப் பார்த்தான். அவரின் அருகில் சென்ற தசக்ரீவன் யார் என்று விசாரித்தான்.

கஸ்யபர் முனிவருக்கும் திதி என்பவளுக்கும் பிறந்த ராட்சசர்களில் நானும் ஒருவன். எனது பெயர் மயன். தேவலோக சிற்பி விஸ்வகர்மாவைக் போல் நானும் ஒரு சிற்பி. நான் ஹேமா என்ற தேவலோக பெண்ணை மணந்து பத்தாயிர வருடம் அவளுடன் இனிமையாக காலம் கழித்தேன். ஏதோ தேவ காரியம் என்று தேவலோகம் சென்றாள். பதினான்கு வருடம் சென்று விட்டது இன்னும் வரவில்லை. அவளுக்காக தங்க மயமாக ஊரை அலங்கரித்து வைத்திருக்கிறேன். எனக்கு இரண்டு மகன்களும் உண்டு. ஒருவன் மாயாவி மற்றோருவன் பெயர் துந்துபி. மனைவியின் பிரிவால் தனிமையில் தவித்த நான் மன ஆறுதலுக்காக மகளையும் அழைத்துக் கொண்டு இந்த வனம் வந்தேன். இவள் எனது மகள் இவளது பெயர் மந்தோதரி. என் கதையை சொல்லி விட்டேன். நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா என்று மயன் கேட்டார். அதற்கு தசக்ரீவன் நான் புலஸ்தியனுடைய பேரன் விஸ்வரஸின் மகன் எனது பெயர் தசக்ரீவன் என்றான். இதனைக் கேட்ட மயன் இவளுக்கு சரியான வரன் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். மகரிஷி புத்திரன் என்பதால் நீ இவளுக்கு சரியான கணவனாக இருப்பாய் என்று எண்ணுகிறேன். இவளை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டார். தசக்ரீவனும் சம்மதிக்க அந்த இடத்திலேயே மயன் அக்னியை மூட்டி மந்தோதரியை தசக்ரீவனுக்கு திருமணம் செய்து வைத்தான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -12

பிரம்மாவிடம் வரங்கள் பெற்று யாராலும் வெற்றி பெற முடியாத பலசாலியாய் வலிமையுடன் இப்போது இருக்கிறாய். பலசாலிகளாக இருப்பவர்கள் உடன் பிறந்தவர்கள் என்று பார்ப்பது சரியில்லை. நான் சொல்வதை முழுவதுமாகக் கேள். திதி அதிதி என்ற சகோதரிகள் இருவரும் கஸ்யபர் என்பவரின் மனைவிகளாக இருந்தார்கள். அதிதி தேவர்களைப் பெற்றாள். திதி ராட்சசர்களை பிள்ளைகளைப் பெற்றாள். திதியின் மகன்களான ராட்சசர்கள் தேவர்களை கட்டுப்படுத்தி உலகம் முழுவதையும் ஆட்சி செய்தார்கள். இவர்கள் மிகுந்த ஆற்றலுடனும் சக்தியுடனும் இந்த பூமியில் வசித்து வந்தனர். அப்போது விஷ்ணு தேவர்களுடன் சேர்ந்து இவர்களைப் போரில் தோற்கடித்து இந்த தேசம் முழுவதையும் தேவர்கள் வசமாக்கினார். இரு பக்கத்தில் இருப்பவர்களும் சகோதரர்களே ஆனாலும் ராட்சசர்கள் தேவர்களை சகோதரர்கள் என்றும் பார்க்காமல் யுத்தம் செய்து வெற்றி பெற்று இந்த உலகத்தை ஆட்சி செய்தார்கள். பின்பு தேவர்களும் ராட்சர்ககளை சகோரர்கள் என்று பார்க்காமல் யுத்தம் செய்து வெற்றி பெற்று இந்த உலகத்தை ஆட்சி செய்தார்கள். பலசாலிகளாக இருப்பவர்கள் உடன் பிறந்தவர்கள் என்று பார்ப்பதில்லை. இந்த உலகம் முழுவதும் நீ ஆட்சி செய்யும் வலிமை உன்னிடம் உள்ளது. நான் சொல்வதைக் கேள். குபேரனே சகோதரன் என்று பார்க்காதே. நீ உலகத்தை ஆட்சி செய்ய விரும்புகிறேன் என்று குபேரனிடம் சொன்னால் நீ சகோதரன் தானே என்று உனக்கு விட்டுக் கொடுத்து விட மாட்டான். சகோதரன் என்றும் பார்க்காமல் உன் மீது யுத்தம் செய்யவே வருவான். அது போல் நீயும் குபேரனை சகோதரன் என்று பார்க்காதே. ஏதேனும் ஒரு வகையில் குபேரனை சமாதானப் படுத்தியோ அல்லது யுத்தம் செய்து வெற்றி பெற்றோ நீ இந்த உலகத்தை ஆளலாம் என்றான்.

பிரம்மா கொடுத்த வரத்தினால் வலிமையுள்ளவனாக இருக்கிறோம். ஆகையால் உலகத்தை ஆட்சி செய்யும் தகுதி தன்னிடம் உள்ளது என்ற எண்ணம் ராவணனின் மனதில் அதிகமானது. பிரஹஸ்தன் கூறிய யோசனையை ராவணன் ஏற்றுக் கொண்டான். பிரஹஸ்தன் அழகாக பேசக் கூடியவன். தேவையான காரியத்தை சரியாக முடித்துக் கொண்டு வரக் கூடியவன் என்ற நம்பிக்கை ராவணனுக்கு இருந்தது. முதலில் சமாதானமாக பேசுவதற்காக சில ராட்சசர்களுடன் பிரஹஸ்தனை தூதனாக குபேரனிடம் அனுப்பி வைத்தான் ராவணன். பிரஹஸ்தன் ராவணனின் சார்பாக குபேரனிடம் பேச ஆரம்பித்தான். உனது சகோதரனான தசக்ரீவன் என்னை தூதுவனாக உன்னிடம் அனுப்பி இருக்கிறான். இலங்கை ராட்சசர்கள் வசிப்பதற்காக கட்டப்பட்டது. சில காலம் சூழ்நிலை காரணமாக ராட்சசர்கள் பாதாள லோகத்திற்கு சென்று விட்டார்கள். அதனால் இலங்கையில் இத்தனை ஆண்டு காலம் நீ இருந்தாய். இதனை தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது ராட்சசர்கள் இழந்த வலிமையை பிரம்மாவின் வரத்தினால் திரும்பப்பெற்று மீண்டும் வந்து விட்டார்கள். எனவே ராட்சசர்களுக்கு சொந்தமான இலங்கையை அவர்களுக்கு தானாகவே குபேரன் திருப்பித் தர வேண்டும். அப்படித் தந்தால் ராட்சசர்களுக்கு திருப்தியாக இருக்கும். எனவே தர்மத்தை எண்ணி எங்களிடம் ஒப்படைத்து விடு என்று கேட்டுக் கொண்டான்

குபேரன் பிரஹஸ்தனிடம் பேச ஆரம்பித்தான். இந்த நகரம் யாரும் இல்லாத சூன்யமாக எனக்குத் தரப்பட்டது. இந்த நகரை செம்மைப்படுத்தி யட்சர்களையும் தானவர்களையும் குடியேற்றி வைத்திருக்கிறேன். தசக்ரீவனிடம் போய் சொல்லுங்கள். என்னுடைய ராஜ்யமும் நகரமும் எனக்கு உள்ளதைப் போலவே தசக்ரீவனுக்கும் உரிமை உள்ளது. எந்த வித இடையூறும் இன்றி ராஜ்யத்தை பிரிக்காமல் முழுவதுமாக சேர்ந்தே அனுபவிக்கலாம். அனைவருடன் இங்கு வந்து அனுபவித்து மகிழ்ச்சியுடன் இருக்கச் சொல்லுங்கள் என்று சொல்லி பிரஹஸ்தனை அனுப்பி விட்டான். பிறகு குபேரன் தன் தந்தையான விஸ்ரவஸிடம் சென்று ராவணன் பிரஹஸ்தன் மூலம் சொல்லி அனுப்பிய செய்தியைச் சொல்லி நான் செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள் அதன்படி நடந்து கொள்கிறேன் என்றான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -11

பிரம்மா கும்பகர்ணனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். இந்திரனைப் போல் சுகவாசியாக வாழ ஆசைப்பட்ட கும்பகர்ணன் இந்திரனின் ஆசனம் வேண்டும் என்று கேட்பதற்காக இந்திராசனா வேண்டும் என்று கேட்க வாயைத் திறந்தான். சரஸ்வதி கும்பகர்ணனின் வாக்கில் இருந்து அவனது வாக்கு குழரும்படி செய்தாள். இதனால் இந்திராசனா (இந்திரனின் ஆசனம்) என்று கேட்பதற்கு பதில் நித்திராசனா (தூங்கிக் கொண்டே இருத்தல்) வேண்டும் என்று கேட்டான் கும்பகர்ணன். அப்படியே ஆகட்டும் என்றார் பிரம்மா. உடனே கும்பகர்ணன் சுய நினைவுக்கு வந்தவனாய் யோசித்தான். என் வாயிலிருந்து எதனால் இப்படி ஒரு சொல் வெளி வந்தது. பிரம்மா கொடுத்த வரத்தினால் ஆயுள் முழுவதும் தூங்கிக் கொண்டே இருப்போமே பின்பு எப்படி சுகமாக வாழ்வது என்று சிந்தனை செய்தவனாக பிரம்மாவிடம் பேச ஆரம்பித்தான். ஆயுள் முழுவதும் தூங்கிக் கொண்டே இருந்தால் நான் எப்படி உணவு உண்பது வேறு காரியங்களை எப்படி செய்வது ஆகையால் வரத்தை மாற்றிக் கொடுங்கள் என்று முறையிட்டான்.

பிரம்மா இதனைக் கேட்டு கும்பகர்ணனிடம் பேச ஆரம்பித்தார். நீ இத்தனை ஆண்டு காலம் செய்த கடுமையான தவத்தின் பலனாக வரத்தை நீயே கேட்டுப் பெற்றுவிட்டாய். உனது தவத்திற்கான பலனைக் கொடுத்தாகி விட்டது. உனக்கு கொடுத்த வரத்தை இனி மாற்ற முடியாது. நீ கேட்டுக் கொண்டதால் இனி உனது வாழ்நாள் முழுவதும் வருடத்தில் ஆறு மாதம் தூங்கிக் கொண்டே இருப்பாய். அதன் பின் ஆறு மாதம் விழித்திருந்து உனது காரியங்களை செய்து கொள்வாய் என்று சொல்லி அங்கிருந்து மறைந்தார். என் சகோதரர்கள் நல்ல வரங்கள் பெற்று சுகவாசிகளாக இருப்பார்கள். தேவர்கள் தான் ஏதோ சதி செய்து என்னை மோகத்தில் ஆழ்த்தி என்னை இப்படி வீழ்த்தி விட்டார்கள் என்று உணர்ந்தான். இனி மீண்டும் தவம் செய்து தான் வரங்களைப் பெற வேண்டும். ஆனால் இனி பெற்ற வரத்தினால் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும். தூங்கினால் எப்படி தவம் செய்ய முடியும் என்று யோசித்த கும்பகர்ணன் வேறு வழியில்லாமல் ராவணனுடனும் விபீஷணனுடம் அங்கிருந்து கிளம்பினான். மூவரும் ஸ்லேஷ்மாதக வனம் என்ற இடத்திற்குச் சென்று சுகமாக வசித்தனர். கும்பகர்ணன் பெற்ற வரத்தின் படி ஆறு மாதம் தூங்கி ஆறு மாதம் விழித்திருந்தான்.

பிரம்மாவிடம் தசக்ரீவன் கும்பகர்ணன் விபீஷணன் மூவரும் வரங்கள் பெற்று ஆற்றல் மிகுந்தவர்களாகி விட்டார்கள் என்பதை அறிந்த சுமாலியின் பயம் விலகியது. அதனால் தன் பரிவாரங்கள் சூழ பாதாள லோகத்திலிருந்து வெளியே வந்தான். சுமாலி தன்னுடைய மந்திரிகளான மாரீசன் விரூபாக்ஷன் மகோதரனோடு தசக்ரீவன் கும்பகர்ணன் விபீஷணன் மூவரையும் வந்து சந்தித்து அவர்களை அணைத்து ஆசிர்வதித்துக் கொண்டாடினான். நமது ராட்சச குலத்திற்கு விஷ்ணுவின் மீதிருந்த பயம் உங்களால் விலகியது. இனி விஷ்ணுவைக் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை. பயந்து ஒளிந்து கிடந்த ராட்சசர்களின் குலம் உங்களால் தூக்கி நிறுத்தப்பட்டு சிறப்புப் பெற்றது. நாம் வசிப்பதற்கு ஏற்ற இடம் இலங்கை. அங்கிருந்த நாம் விஷ்ணுவைக் கண்டு பயந்து ஓடினோம். இப்போது உனது சகோதரனான குபேரனின் கட்டுப்பாட்டில் இலங்கை இருக்கினது. சாம தான பேத தண்டம் என்ற உபாயங்களே பயன்படுத்தி இலங்கையை நாம் திரும்பி பெற முயற்சிக்கலாம். தசக்ரீவா மகாபலசாலியான நீயே எங்கள் அனைருக்கும் தலைவனாக இருந்து இலங்கையை ஆட்சி செய்து இலங்கேஸ்வரன் என்று பெயர் பெறுவாய் என்றார். இதனைக் கேட்ட தசக்ரீவன் எனது மூத்த சகோதரானான குபேரனை நான் எப்படி எதிர்ப்பேன் நீங்கள் சொல்வது சரியில்லை என்று தனது கருத்தை சுமாலியிடம் தெரிவித்தான். இதற்கு சுமாலி பதில் பேசாமல் மௌனமாக இருந்தார். சில காலங்கள் சென்றது. ஒரு நாள் சுமாலியின் மந்திரியான பிரஹஸ்தன் தசக்ரீவனிடம் வந்து குபேரனை எதிர்க்க வேண்டும் என்றும் அதற்கான காரணங்களோடு விவரமாக பேச ஆரம்பித்தான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -10

பிரம்மா தசக்ரீவனிடம் பேச ஆரம்பித்தார். உங்கள் மூவரின் தவத்தால் மகிழ்ந்தேன் உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். இதைக் கேட்ட தசக்ரீவன் மிகவும் மகிழ்ந்து பேச ஆரம்பித்தான். பிறக்கும் அனைத்து உயிர்களுக்கும் மரணத்தை கண்டால் மட்டுமே பயம். அதனால் எப்போதும் மரணம் இல்லாத வாழ்வு வேண்டும் எனக்கு மரணமே வரக் கூடாது என்று கேட்டான். இதைக் கேட்ட பிரம்மா மனிதனாக பிறக்கும் அனைவரும் ஒரு நாள் உடலை விட்டே தீர வேண்டும். வரங்களால் மரணத்தின் காலத்தை மட்டுமே தள்ளிப் போட முடியும். அதனால் வேறு ஏதாவது கேள் என்றார். இதைக் கேட்ட ராவணன் சிறு பிராணிகளின் மீது எனக்கு பயமும் இல்லை கவலையும் இல்லை. மனிதர்கள் எனக்கு அற்ப பதருக்கு சமமானவர்கள். அவர்களைப் போன்ற மற்ற பிராணிகளிடமும் எனக்கு பயம் இல்லை. அதனால் சுபர்ணர்கள் நாகர்கள் யட்சர்கள் தைத்யர்கள் தேவர்கள் தேவதைகள் எனது குலத்தை சார்ந்த ராட்சசர்களாளோ எனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று கேட்டுக் கொண்டான். பிரம்மாவும் அப்படியே நடக்கட்டும் என்று வரம் அளித்தார். இதைத் தவிர ராவணனின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மா தாமாகவே முன்வந்து இரண்டு வரங்கள் அளித்தார். நீ தவம் செய்யும் போது அக்னியில் நீ போட்ட உனது ஒன்பது தலைகளும் உனக்கு வந்து சேரும் என்றும் விரும்பியபடி உருவம் எடுத்துக் கொள்ளும் சக்தியையும் கொடுத்து மகிழ்ச்சியுடன் இரு என்று சொல்லி வாழ்த்தினார். இழந்த தனது ஒன்பது தலைகளையும் எளிதில் பெற முடியாத மற்ற வரங்களையும் பெற்றதால் ராவணன் மகிழ்ந்தான்.

பிரம்மா விபீஷணனிடம் பேச ஆரம்பித்தார். விபீஷணா நீ தர்மத்தின் வழி நிற்பவன். இத்தனை காலம் செய்த தவத்தினால் நீ உடல் வலிமை கூடியவனாக ஆகி விட்டாய். உனது தவத்தில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு வீபீஷணன் பிரம்மாவை வணங்கியபடி உங்களது தரிசனத்தால் நான் மிகவும் பாக்கியமடைந்தேன். எப்படிப்பட்ட கடுமையான ஆபத்து வந்தாலும் என் மனம் புத்தி தர்மத்தை விட்டு விலகக் கூடாது. நான் இதுவரை கற்றுக் கொள்ளாத பிரம்மாஸ்திரம் எனக்கு கிடைக்க வேண்டும். என் மனம் செல்லும் இடமெல்லாம் தர்மம் நிலவ வேண்டும். அந்த பகுதியில் உள்ளவர்கள் தர்மத்தில் ஈடுபாட்டு திகழ வேண்டும் என்று கேட்டான். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த பிரம்மா ராட்சச குலத்தில் பிறந்தும் உன் புத்தி அதர்மத்தின் பக்கம் செல்லவில்லை. உனது நல்ல குணம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது உன் விருப்பப்படியே ஆகட்டும். உனக்கு அமரத்துவம் தருகிறேன் என்று தாமாகவே முன்வந்து ஒரு வரம் அளித்தார்.

பிரம்மா கும்பகர்ணன் பக்கம் திரும்பினார். உடனே தேவர்கள் பிரம்மாவிடம் வந்து கும்பகர்ணனுக்கு வரம் எதுவும் தராதீர்கள். அவன் மிகவும் துஷ்டன் இவன் இப்பொழுதே மூவுலகையும் துன்புறுத்தி வருகிறான். ஒரே நேரத்தில் நந்தவனத்தில் பூஜை செய்து கொண்டிருந்த பத்து ரிஷிகள் மற்றும் கணக்கில்லாத மனிதர்களை இவன் விழுங்கி விட்டான். யாகம் மற்றும் பூஜைகள் யார் செய்து கொண்டிருந்தாலும் அவர்களை துன்புறுத்தி தின்று விடுகிறான். எந்த விதமான வரமோ பலமோ உதவியோ இல்லாமலேயே இவன் இப்படி செய்து வருகிறான். வரமும் கிடைத்து விட்டால் மூவுலகையும் இவன் துன்புறுத்தி அழித்து விடுவான். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பழக்கமோ அவர்களை வணங்கும் வழக்கமோ இவனுக்கு கிடையாது. உலக நன்மைக்காக இவனை சற்று அடக்கி வையுங்கள். இவன் இத்தனை காலம் செய்த தவத்திற்கு வரம் தருவதாக இருந்தால் இவன் செயல்படாமல் இருப்பது போல் ஏதேனும் வரத்தை கொடுத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். பிரம்மா தனது அருகில் இருக்கும் சரஸ்வதியை பார்த்தார். பிரம்மாவின் சிந்தனையை புரிந்து கொண்ட சரஸ்வதி தேவி என்னால் செய்ய முடிந்ததை செய்கிறேன் என்றாள். பிரம்மா சரஸ்வதியிடம் நீ ராட்சசனான கும்பகர்ணனின் வாக்கில் சிறிது நேரம் இருந்து தேவர்களுக்கு உதவி செய் என்றார். சரஸ்வதி தேவியும் சம்மதம் தெரிவித்து தன் காரியத்தை தொடங்கினாள்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -9

நான்கு குழந்தைகளுக்கும் விஸ்ரவஸ் பெயர் வைத்தார். முதல் குழந்தை பத்து தலைகளுடன் பிறந்ததால் தசக்ரீவன் என்று பெயர் வைத்தார். அடுத்த குழந்தை மலை போல் பெரிய உருவத்துடன் இருந்ததால் அவனுக்கு கும்பகர்ணன் என்று பெயர் வைத்தார். மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு சூர்ப்பணகை என்று பெயர் வைத்தார். நான்காவது குழந்தைக்குக்கு விபீஷணன் என்று பெயர் வைத்தார் விஸ்ரவஸ். தசக்ரீவன் கொடூரமான சுபாவத்துடன் வளர்ந்தான். கும்பகர்ணன் மதம் பிடித்தவன் போல திரிந்து தர்ம வழியில் சென்ற மகரிஷிகளை தின்று வளர்ந்தான். விபீஷணன் தர்மாத்மாவாக தினமும் தர்மத்தை அனுசரித்து வளர்ந்தான்.

குபேரன் ஒரு முறை புஷ்பக விமானத்தில் தனது தந்தையைக் காண வந்தான். அவனுடைய தேஜஸைப் பார்த்த கைகயி தசக்ரீவனிடம் பேச ஆரம்பித்தாள். உனது தந்தையின் சகோதரனான அந்த குபேரனைப் பார். மூன்று உலகத்திற்கும் தனாதிபதியாக இருக்கிறார். அவரின் தேஜஸ் எப்படி இருக்கிறது என்று பார். அவரின் சகோதரனான உனது தந்தையைப் பார். இருவரும் ஒளிச் சுடராக இருக்கிறார்கள். தசக்ரீவா இவர்களைப் போலவே நீயும் மேன்மையடைய வேண்டும். நீ அளவில்லாத பலம் உடையவன். உன்னால் முடியாதது ஒன்றும் இல்லை. முயற்சி செய்து குபேரனுக்கு சமமானவன் என்றும் அனைவரும் பெருமைப்படும்படி செய் என்று கட்டளையிட்டாள். தாயின் இந்த வார்த்தையைக் கேட்ட தசக்ரீவன் குபேரன் மீது பொறாமை கொண்டு தாயே நான் உங்களுக்கு சத்யம் செய்து தருகிறேன். என் சகோதரன் குபேரனை விட மேன்மையானவன் ஆவேன். என் ஆற்றலினால் குபேரனையும் மிஞ்சுவேன். கவலையை விடுங்கள் இனி இந்த வருத்தம் உங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிய தசக்ரீவன் தன் உடன் பிறந்த கும்பகர்ணன் விபீஷணனுடன் கடுமையாக தவம் செய்ய முடிவு செய்தான். தவத்தினால் நாம் விரும்பிய வரங்களைப் பெற்று தாயின் ஆசையை நிறைவேற்றி சுகமாக வாழலாம் என்று முடிவு செய்த மூவரும் கடும் விரதங்களோடு கோகர்ண ஆசிரமத்தை வந்து சேர்ந்தார்கள்.

தர்ம மார்கத்தை நன்றாக தெரிந்து கொண்டும் விதி முறைகளை கேட்டறிந்தும் மூவரும் தங்களது தவத்தை ஆரம்பித்தார்கள். அதன் படி கும்பகர்ணன் வெயில் காலத்தில் வெயிலின் மத்தியிலும் மழை நாட்களில் வீரஆசனம் போட்டு அமர்ந்து கொட்டும் மழையில் அசையாமல் மனதை ஒரு நிலைப்படுத்தி நின்றான். குளிர் காலத்தில் நீருக்குள் நின்று தவம் செய்தான். இது போல பத்தாயிரம் வருடங்கள் தவம் செய்தான். தர்மாத்மாவான விபீஷணன் ஐயாயிரம் ஆண்டுகள் ஒரு காலில் நின்று தவம் செய்தான். இவன் விரதம் முடியும் காலத்தில் அப்சரப் பெண்கள் நடனமாடினார்கள். தேவர்கள் மகிழ்ந்து பூமாரி பொழிந்தார்கள். இதன் பின் ஐயாயிரம் வருடங்கள் சூரியனை உபாவாசித்து தலைக்கு மேல் கைகளைத் தூக்கியபடி நின்று தன் கொள்கையில் திடமாக இருந்து தவம் செய்தான். இவ்வாறு விபீஷணன் தவம் செய்து சொர்க்கத்தில் இருந்த தேவர்களை மகிழ்வித்தான். தசக்ரீவன் பத்தாயிரம் வருடங்களும் ஆகாரம் இன்றி தன் தலையிலேயே அக்னி வளர்த்து ஹோமம் செய்தான். ஒவ்வோரு ஆயிரம் வருடங்கள் முடிவில் தன்னுனைய பத்து தலைகளில் ஒவ்வொன்றாக வெட்டி ஹோம அக்னியில் போட்டு தவம் செய்தான். ஒன்பதாயிரம் வருடங்களில் அவனது ஒன்பது தலைகளையும் அக்னியில் சேர்ந்து விட்டான். பத்தாயிரம் வருடங்கள் ஓடி விட்டன. பத்தாயிரம் வருட முடிவில் மீதியிருந்த ஒரு தலையையும் வெட்டி அக்னி ஹோமத்தில் போட முற்பட்ட பொழுது பிரம்மா தேவர்கள் கூட்டத்தோடு அவர்கள் மூவருக்கும் காட்சி கொடுத்தார்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -8

ராமரிடம் அகத்தியர் தொடர்ந்து பேசினார். இது தான் ராமா ராட்சசர்கள் வளர்ந்த கதை அடுத்து ராவணன் பிறந்தது பற்றிச் சொல்கிறேன். அவன் மகன் இந்திரஜித்தின் சிறப்பையும் சொல்கிறேன் கேள். வெகு காலம் பாதாளத்தில் ஒளிந்து வாழ்ந்த சுமாலியும் மால்யவனும் விஷ்ணுவின் மேல் கொண்ட பயத்தால் அங்கேயே இருந்து விட்டார்கள். இலங்கை நகரத்தை தன் வசப்படுத்திக் கொண்ட குபேரன் தன் உறவினர்களுடன் அங்கு வசிக்கலானான். சில காலம் சென்றது. சுமாலி லட்சுமிக்கு இணையான அழகுடைய தனது மகளுடன் மெதுவாக இந்த பூலோகத்தை சுற்றிப் பார்க்க வந்தான். அப்போது குபேரன் புஷ்பக விமானத்தில் தன் தந்தையான விஸ்வராஸைக் காண்பதற்காக செல்வதைக் கண்டான். அமரர்களுக்கு இணையான தேஜசுடன் சுதந்திரமாக செல்லும் குபரனை நினைத்தபடியே தன் இருப்பிடத்திற்கு வந்தான் சுமாலி. இந்த கஷ்டத்திலிருந்து நாம் மீண்டு எப்படி குபேரனேப் போல நல்ல கதியை அடைவது என்று யோசிக்கலானான். தன் மகள் கைகயியை பார்த்து உனக்கு திருமணம் செய்து கொடுக்கும் வசதி எனக்கு இல்லை. என்னிடம் பயந்து கொண்டு யாருமே உன்னை வரன் கேட்டு வரவில்லை. லட்சுமி தேவி போல குணமும் அழகும் உனக்கு இருந்தும் உன்னை தகுந்த இடத்தில் திருமணம் முடித்துக் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன். பெண் மகவைப் பெற்ற எல்லோருக்கும் உள்ள கவலை தான் இது. நீ புலஸ்தியன் குலத்தில் பிறந்த குபேரனின் தந்தையான விஸ்ரவஸ் என்பவரிடம் நீயாகச் சென்று கேட்டு திருமணம் செய்து கொள். உனக்கு பிறக்கும் குழந்தைகள் மகா தேஜசுடன் வலிமையாக கம்பீரத்துடன் இந்த குபேரனுக்கு சற்றும் குறைவில்லாமல் புகழுடன் விளங்குவார்கள் என்றான். இதைக் கேட்ட பெண் தன் தந்தையிடம் உள்ள மரியாதை காரணமாக தானே விஸ்ரவஸ் இருக்கும் இடம் நாடிச் சென்றாள்.

விஸ்ரவஸ் தவம் செய்து கொண்டிருந்தார். புலஸ்தியரின் குமரனான விஸ்ரவஸ் யாகம் செய்து மூன்று அக்னிகளுக்கு மேலாக நான்காவது அக்னி போல தைஜசுடன் இருப்பதைக் கண்டாள். நேரம் காலம் எதுவும் யோசிக்காமல் பயங்கரமான அந்த வேளையில் தந்தை சொன்னது ஒன்றே மனதில் மேலோங்கி இருக்க அவரருகில் சென்று நின்றாள். பூர்ண சந்திரன் போன்ற அழகிய முகம் உடைய பெண் கால் கட்டை விரலால் பூமியில் கோலம் போட்டபடி நின்றவளைப் பார்த்த விஸ்ரவஸ் அவள் வந்த நோக்கத்தை அறிந்து கொண்டு அவளை யார் என்று விசாரித்தார். பெண்ணே நீ யாருடைய மகள்? இங்கு ஏன் வந்தாய்? என்ன காரியம்? விவரமாக சொல் என்றார். கை கூப்பியபடி அவள் பதில் சொன்னாள். பிரம்ம ரிஷியே நான் எனது தந்தையின் கட்டளைப்படி இங்கு வந்திருக்கிறேன். எனது பெயர் கைகயி. உங்கள் தவ வலிமையால் மற்றவைகளை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் என்றாள். விஸ்ரவஸ் சிறிது நேரம் தியானம் செய்து அனைத்தையும் தெரிந்து கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தார். நீ இங்கு வந்ததும் உனது குல விருந்திக்காகத் தான் வந்திருக்கிறாய் என்பதை அப்போதே புரிந்து கொண்டேன். இப்போது எனது தியானத்தில் மீதி அனைத்தையும் தெரிந்து கொண்டேன். இன்றைய நாள் மற்றும் நேரத்தை கணக்கிட்டுப் பார்த்தால் உனக்கு பிறக்கும் குழந்தைகள் பயங்கரமான வடிவமும் பயங்கர குணமும் செயலும் கொண்ட ராட்சசர்கள் பிறப்பார்கள் உனக்கு சம்மதமா என்று கேட்டார். அதற்கு அவள் இது போன்ற புத்திரர்கள் எனக்கு வேண்டாம். உங்களைப் போன்ற பிரம்ம ரிஷி போல் புத்திரர்கள் வேண்டும் என்று வேண்டினாள். இதைக் கேட்டு விஸ்ரவஸ் உனக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள் அவர்களில் கடைசி மகன் மட்டுமே எனது குலம் விளங்கச் செய்யும் தர்மாத்மாவாக இருப்பான் என்று அருளி அவளை ஏற்றுக் கொண்டார்.

விஸ்வரஸ் கைகதி தம்பதிகளுக்கு சிறிது காலத்திற்கு பிறகு தாமிர நிறம் உடைய உதடுகளும் பெரிய வாயுடனும் பத்து தலைகளுடனும் இருபது கைகளுடனும் தலை மயிர் நெருப்பு போல பிரகாசிக்க முதல் மகன் பிறந்தான். அவன் பிறந்த சமயம் நெருப்பை உமிழும் குள்ள நரிகள் அங்கு திரிந்தன. சூரியன் பிரகாசம் இன்றி காணப்பட்டது. கர்ண கொடூரமாக மேகம் இடித்தது. 2 வதாக பெரிய பற்களுடன் நீல மலை போன்ற உருவத்துடன் ஒரு ராட்சசன் பிறந்தான். மூன்றாவதாக விகாரமான முகத்துடன் ஒரு ராட்சசி பிறந்தாள். நான்காவதாக ஒரு குழந்தை அழகுடன் பிறந்தது. அப்போது ஆகாயத்தில் தேவர்கள் துந்துபி முழங்கி கொண்டாடினார்கள்.