ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -11

லட்சுமணன் பேசியது கௌசலைக்கு ஆறுதலாக இருந்தது. ராமர் கௌசலையிடம் பேசினார். தாயே காட்டிற்கு தாங்கள் என்னுடன் வருவது சரியாக இருக்காது. கணவனுடன் மனைவி இருப்பதே தர்மம். நான் சென்றதும் தந்தைக்கு உதவியாக தாங்கள் இருந்து தந்தையை பார்த்துக்கொள்ளுங்கள். தாங்களும் என்னுடன் வந்துவிட்டால் தந்தை மேலும் வருத்தப்படுவார். அது அவரின் உடல் நிலையை பாதிக்கும். நான் தனியாகவே செல்கிறேன். பதினான்கு வருடங்களில் திரும்பி வந்துவிடுவேன். நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள் வாழ்ந்திருப்போம். அதுவரை பொருத்திருங்கள் என்றார்.

லட்சுமணனைப் பார்த்து பேச ஆரம்பித்தார் ராமர். என் மீது நீ வைத்திருக்கும் அன்பை நான் அறிவேன். நீ சொல்லும் யோசனை முற்றிலும் தவறு. கோவம் மனிதனின் முதல் எதிரி. அதனை இப்பொழுதே நீ விட்டுவிடு. உன்சக்தியை நான் அறிவேன். அனைவரையும் தோற்கடித்து இந்த ராஜ்யத்தை நீ எனக்காக சம்பாதித்து கொடுப்பாய். எனக்கு உன் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் தந்தையின் உத்தரவு தர்மமாக இருந்தாலும் அதர்மமாக இருந்தாலும் அவராக கூறியிருந்தாலும் வேறு யாருடைய தூண்டுதலினால் கூறியிருந்தாலும் அதனை நிறைவேற்றுவது என் கடமை. தந்தை கைகேயிக்கு கொடுத்த வாக்கை மீறினால் இத்தனை ஆண்டு காலம் அவர் செய்த பூஜைகள் யாகங்கள் தானதர்மங்கள் அனைத்தும் பயனில்லாமல் போகும். தந்தையுன் வாக்கை காப்பாற்றுவது மிகப்பெரிய தர்மம். இந்த தர்மத்தை செய்யாமல் வேறு எதனை செய்தாலும் இதற்கு ஈடு ஆகாது என்று கௌசலையையும் லட்சுமணனையும் சமாதானப்படுத்தினார் ராமர். கௌசலையிடம் விடைபெற வணங்கினார் ராமர். மங்கள மந்திரங்களை சொல்லி தந்தையின் ஆணையை செய்து முடித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பி வரவேண்டும் என்று திலகமிட்டு வாழ்த்தி விடைகொடுத்தாள் கௌசலை. ராமர் சிரித்துக்கொண்டே பதினான்கு வருடங்களையும் சுலபமாக கழித்துவிட்டு வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு சீதையை பார்க்க தான் இருந்த மாளிகைக்கு கிளம்பினார்.

சீதையிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு காட்டிற்கு செல்லும் நெருக்கடியில் இப்போது ராமர் இருந்தார். ராமருடைய வருகையை பார்த்து ஆவலோடு காத்திருந்தாள் சீதை. ராமர் அரசனாக பட்டாபிஷேகம் செய்யும் எந்த அறிகுறியும் இல்லாமல் வருவதை கண்டு சிறிது குழப்பமடைந்தாள் சீதை. பட்டாபிஷேகம் செய்யும் இன்று தங்களுடன் இருக்கும் வெண்குடை சமாரம் எங்கே? பாடகர்கள் ஓதுவார்கள் எங்கே? தாங்களுடன் வரும் தங்களது சேவகர்கள் எங்கே? என்று கேள்விகளாக கேட்டுக்கொண்டே இருந்தாள் சீதை. ராமர் சீதையிடம் பொருமையாக சொல்ல ஆரம்பித்தார். எனது தந்தை கைகேயிக்கு கொடுத்த வரத்தை காப்பாற்ற பதினான்கு வருடங்கள் காட்டிற்கு சென்று தவம் செய்யப்போகிறேன். பரதன் அரசனாகப்போகின்றான். நீ அமைதியாக அரண்மணையில் வாழ்ந்திருந்து உனது மாமியார் மாமனாருக்கு பணிவிடைகள் செய்து பரதனை அரசனாக அங்கிகரித்து வந்தனை செய்வாயாக என்று சீதையிடம் சொல்லி முடித்தார் ராமர்.

புத்தர்

புத்தர் இறக்கும் காலம் நெருங்கியதும் அவருடைய சீடர்கள் அழுது அரற்றிக் கொண்டிருந்தார்கள். புத்தர் அவர்களிடம் அழுவதை நிறுத்துங்கள். நீங்கள் அழுவதை பார்த்தால் நான் இதுவரை சொல்லிக் கொடுத்ததை எல்லாம் நீங்கள் சரியாகக் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன் என்றார்.

தலைமைச் சீடரான ஆனந்தா புத்தரிடம் நீங்கள் எங்களை விட்டு போகப் போகிறீர்கள். அதை நினைத்து வருத்தப்படாமல் எப்படி இருக்க முடியும் என்றார். அதற்கு புத்தர் நான் சொன்னதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டிருந்தால் உங்களுக்குள் இருக்கும் ஒளியே உணர்ந்து இருந்தீர்களேயானால் அழுவதற்கு எந்த தேவையும் இருக்காது. அமைதியாக இருக்கும் அந்த சீடரைப் பாருங்கள். அவரால் எப்படி அழாமல் உட்கார்ந்து இருக்க முடிகிறது என்று கேளுங்கள் என்றார்.

அமைதியாக இருந்த சீடர் கூறினார் எனக்குள் இருக்கும் ஆன்மாவை அறிந்து கொள்ள புத்தர் உதவினார். நானே சாகப் போவதில்லை என்கின்ற போது புத்தர் எப்படி சாக முடியும்? புத்தர் இங்கேதான் இருக்கப் போகிறார். இதுவரை புத்தர் ஒரு சிறு உடலுக்குள் அடங்கிக் கிடந்தார். ஒரு நதி கடலில் கரைந்து விடுவதைப் போல அவர் இந்தப் பிரபஞ்சத்தில் கரைந்து விடப் போகிறார். இந்தப் பிரபஞ்சம் முழுக்க பரவியிருக்கப் போகிறார். எனக்கு இது பெரு மகிழ்ச்சியைத் தருகிறது என்றார். இதனை எப்படி அறிந்து கொண்டாய் என்று அவரிடம் அனைவரும் கேட்டார்கள்.

என்னுடைய ஆன்மாவை நான் தெரிந்து வைத்திருப்பதால் புத்தர் இந்த உடலை விட்டு பிரபஞ்சத்தில் கலக்கப்போவது எனக்கு தெரிந்திருக்கிறது. அவர் சொன்னதையெல்லாம் நான் கேட்டு உள்வாங்கிக் கொண்டேன் . நீங்கள் அதனை உள்வாங்கவில்லை அதனால்தான் அழுகிறீர்கள் என்றார். புத்தர் மீண்டும் பேசினார். உனக்கு நீயே ஒளியாவாய் என்று புத்தர் கூறி விட்டு இந்த பிரபஞ்சத்தில் கலந்து விட்டார்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -10

ராமர் தன்னுடன் வந்த வெண்குடை சமாரம் என்று இளவரசனுக்கு உரிய அனைத்து சுகங்களும் தனக்கு வேண்டாம் யாரும் தன்னை பின் தொடர வேண்டாம் என்று சொல்லிவிட்டு தாய் கௌசலையின் மாளிகையை நோக்கி லட்சுமணனுடன் தனியாக செல்ல ஆரம்பித்தார். லட்சுமணன் கண்கள் சிவக்க கோபத்துடன் ராமரை பின் தொடர்ந்தார்.

கௌசலையின் மாளிகையில் அனைவரும் ராமரின் பட்டாபிஷேகத்தை காணச்செல்வதற்கு மகிழ்ச்சியுடன் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். ராமர் வந்ததை கண்ட கௌசலை ராமனை கட்டியணைத்து வரவேற்றாள். ராமருக்கு உரிய ஆசனத்தில் அமரச்சொன்னாள். ராமர் தாயே இந்த ஆசனத்தில் என்னால் அமர இயலாது. புல்லை பரப்பி உட்கார வேண்டிய தவஸ்வி தான். தங்களுக்கு வருத்தம் தரக்கூடிய செய்தியை கொண்டு வந்திருக்கின்றேன். தங்களையும் சீதையையும் லட்சுமணனையும் பிரிந்து காட்டிற்கு செல்லப்போகிறேன். தாங்கள் இச்செய்தியை பொருத்துக்கொண்டு என் செயலுக்கு ஆசி கூறி எனக்கு விடை கொடுக்கவேண்டும் என்று நடந்தவற்றை விரிவாக எடுத்துக்கூறி இன்றே நான் காட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லி முடித்தார்.

ராமர் சொன்னதை கேட்ட கௌசலை அம்பினால் தாக்கப்பட்ட பெண்மானைப்போல கீழே விழுந்தார். எனக்கு பிள்ளையாக பிறக்காவிட்டால் உனக்கு இந்த தூன்பம் வந்திருக்காது. தசரதர் ஆட்சியில் இருக்கும் போது மூத்த பட்டத்து அரசிக்கான எந்த சுகத்தையும் கண்டதில்லை. உன் சிற்றன்னைகளே அனைத்தையும் அனுபவித்தனர். அவர்களின் பணிப்பெண் போலவே நான் நடத்தப்பட்டேன். என் கணவர் என்னை சற்று தள்ளியே வைத்திருந்தார். நீ என்னுடன் இருந்த காரணத்தால் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது நீயும் என்னை விட்டு பிரிந்தால் என் கதி என்ன ஆகும் என்று எனக்கு தெரியவில்லை. நிச்சயமாக மரணித்து விடுவேன். கன்றின் மேல் உள்ள பாசத்தால் கன்றைத்தொடர்ந்து செல்லும் பசுவைப்போல் உன்னை தொடர்ந்து வருகிறேன் என்னையும் அழைத்துச்செல் என்று அழுதபடி சொன்னார்.

கௌசலையின் அழுகையினால் வருந்திய லட்சுமணன் பேச ஆரம்பித்தான். பெரியன்னையே சிற்றன்னையின் சொல்லிற்கான ராமர் காட்டிற்கு செல்வது எனக்கும் சம்மதமில்லை. நாட்டைவிட்டு காட்டிற்கு செல்லும் அளவிற்கு ராமர் குற்றம் ஒன்றும் சொல்லவில்லை. அவரிடம் மறைமுகமாக கூட யாரும் இதுவரை ஒர் குற்றத்தை கண்டதில்லை. வயோதிகரான தந்தையின் குணம் மாறிவிட்டது. கைகேயின் துர்செயலால் அவர் ஒன்றும் பேசாமல் இருக்கிறார். அவருடைய காலம் கடந்துவிட்டது. மக்கள் அனைவரும் ராமரை சிம்மாசனத்தில் பார்க்க ஆவலாக இருக்கின்றார்கள். அண்ணா உடனே அரச பட்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு உத்தரவு தாருங்கள். எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழித்துவிடுகிறேன் என்று கோபத்துடன் கூறினான் லட்சுமணன்.

மதனந்தேஸ்வரர் மதூர் சித்தி விநாயகர்

கேரள மாநிலம் மதூரில் இருக்கிறது மதனந்தேஸ்வரர் கோயில். சிவனுக்காக நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் என்றாலும் மக்கள் சித்தி விநாயகர் கோவில் என்றே அழைக்கின்றனர்.

ஒருமுறை மதூர் இனத்தைச் சேர்ந்த பழங்குடி இனப்பெண் ஒருவர் தனது பசுக்களுக்காகப் புல் அறுக்க காட்டுக்குச் சென்றார். அங்கு புல் அறுத்துக் கொண்டிருக்கும் போது அங்கு திடீரென சுயம்பு லிங்கம் ஒன்று வெளிப்பட்டது. உடனே அந்தப் பெண் ஓடி வந்து லிங்கம் வந்த அதிசயத்தை தன் இனத்தின் மூத்தவர்களிடம் கூறினாள். அவர்கள் மதூர் அரசனான மயிபாடி ராமவர்மாவிடம் சொன்னார்கள். சுயம்பு லிங்கம் கிடைத்தது குறித்து சந்தோஷத்தில் ராமவர்மா உடனடியாக அங்கே சிவனுக்கு ஒரு ஆலயம் எழுப்ப உத்தரவிட்டார். எந்த இடத்தில் கோவில் கட்டுவதென மன்னர் ஆன்மீக குருக்களையும் ஜோதிடத்தில் அறிந்த பெரியவர்களையும் வரவழைத்து ஆலோசனை கேட்டார். தீவிரமாக ஆலோசித்த பின் கோவில் கட்டுவதற்கான புள்ளியை எப்படித் தீர்மானிப்பதென வாக்குச் சொன்னார்கள். எந்தப் பெண்மணிக்கு முதன்முதலாகச் சுயம்புலிங்க தரிசனம் எங்கு கிடைத்ததோ அங்கு அந்த பெண்மணியை வரவழைத்து வந்து அவரது கையில் புல்லறுக்கும் கதிரறிவாளை கொடுக்கவேண்டும். அங்கிருந்து அதைத் தூரமாக தூக்கி வீசவேண்டும் என்றார்கள். அரசனும் அதன்படி செய்ய உத்தரவிட்டான். அப்பெண்மணி வீசிய கதிரறிவாள் மதுவாணி ஆற்றங்கரையோரம் சென்று விழுந்தது. அந்த இடத்திற்கு அனைவரும் சென்று பார்க்கையில் அங்கு பேரதிசயமாக புலியும் பசுவும் ஒரே இடத்தில் வாய் வைத்து நீரருந்திக் கொண்டிருந்தன. புலிக்கு இரையாகக் கூடிய பசுவுடன் புலி ஒற்றுமையாக நீரருந்தியது என்றால் அந்த இடம் புனிதமானது தான் என்று முடிவெடுத்து அங்கு சிவாலயம் எழுப்பினார்கள். மதனந்தேஸ்வரர் என்ற பெயரில் எழுந்த அந்த சிவாலயத்தில் பூஜை புனஸ்காரங்களைச் செய்விக்க நம்பூதிரி குடும்பத்தார் வரவழைக்கப்பட்டார்கள்.

ஒரு நாள் பூஜை செய்ய வந்த நம்பூதிரிமார்களில் பெரியவர்கள் எல்லாம் சிவ வழிபாட்டில் ஆழ்ந்திருந்தனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்களுக்கு பூஜை முடிந்த நேரங்களில் விளையாட ஆரம்பித்தார்கள். அந்த ஆலயத்தின் வேறொரு இடத்தில் கற்சுவற்றில் விநாயகர் உருவம் ஒன்றை வரைந்து வைத்துக் கொண்டு தம் வீட்டுப் பெரிய ஆண்கள் சிவனுக்கு வழிபாடு செய்வதைப் போலவே சிறுவர்களும் விநாயகருக்கு வழிபாடுகளும் பூஜைகளும் நடத்தத் தொடங்கினார்கள். பொழுது போக்காகத் தொடங்கிய குழந்தைகளின் பூஜையில் வினாயகரை கண்ட பெரியவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். கற்சுவரில் வரையப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்த விநாயகர் புடைப்புச் சிற்பம் போல வளர்ந்து பெரிதாக பெரும் சிலை வடிவம் பெற்றிருந்தார். குழந்தைகளின் சித்திரத்தில் இருந்து உருவான சுயம்பு மூர்த்தி என்பதால் அரசன் அவருக்கும் சிவனைப்போலவே பூஜை புனஸ்காரங்கள் நடத்த உத்தரவிட்டார்.

கேரளாவில் கும்பலா என்ற ஊரை ஆண்ட முதலாம் நரசிம்மன் பாண்டிய மன்னனுடன் போரிடச் சென்றபோது இந்த விநாயகரை வேண்டிக் கொண்டு சென்று வெற்றி வாகை சூடினார். அதன் நினைவாக இக்கோயிலில் ஒரு விஜய ஸ்தம்பத்தை நிறுவினார். அதை இன்றும் காணலாம். 1.68 மீட்டர் உயரத்தில் தெற்கு பார்த்து உள்ளது. இந்நாட்டு மன்னர் காசி சென்று வந்ததன் அடையாளமாக காசி விஸ்வநாதரையும் தட்சிணாமூர்த்தியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்.

ஒருமுறை மைசூர் மன்னன் திப்பு சுல்தான் இங்கு படையெடுத்து வந்தான். அந்தப் படையெடுப்பின் போது திப்பு இந்துக் கோவில்கள் பலவற்றைச் சிதைத்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான். பல ஆயிரம் இந்துக்களை வாள் முனையில் முஸ்லீமாக மாற்றினான். மாறாதவர்களை கொன்று குவித்தான். அவ்வேளையில் இந்தக் கோவிலிலும் நுழைந்து அவன் உபதேவதைகளை எல்லாம் சிதைத்து விட்டு கருவறை விநாயகரை நோக்கி முன்னேறிச் செல்கையில் திடீரென அவருக்கு தொண்டை வறண்டு தாகம் எடுத்திருக்கிறது. உடனே திப்பு கோவில் வளாகத்தில் இருந்த சந்திராசலா என்கிற கிணற்றுக்குச் சென்று அங்கிருந்த நீரை அருந்தினான். நீரை சிறிது அருந்தியவுடன் போரை நிறுத்தி விட உத்தரவிட்டு கருவறைச் சிலையை சேதப்படுத்தாமல் அப்படியே விட்டுச்சென்று விட்டான். இன்றும் இக்கோவிலின் தென்மேற்கு மூலையில் இருக்கும் சந்திராசலா கிணற்றுச் சுவரில் திப்பு தன் வாளால் கீறிய தடம் இருக்கிறது. இப்படி இந்தக் கோவிலைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் அனைத்தும் கோவிலின் தல புராணத்தில் இடம்பெற்றுள்ளன.

மூன்றடுக்கு அமைப்பில் உருவாக்கப்பட்ட இந்தக் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் நடக்கும் நாட்களில் அந்த அபிஷேக நீர் வெளியேற வழியே இல்லை. இங்கு அபிஷேக நீர் அப்படியே பூமிக்குள் புதையுண்டு செல்ல சுரங்கம் அமைத்திருக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு திடம்பு மூர்த்தி என்று சொல்லப்படக்கூடிய உற்சவ மூர்த்தியின் எடையானது மிக அதிகம். எனவே உற்சவ மூர்த்தி ஊர்வலமென்பது இந்தக் கோவிலுக்கு கிடையாது.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -9

ராமன் எந்த சலனமும் இல்லாமல் கைகேயியிடம் கம்பீரத்துடன் பேச ஆரம்பித்தார். பெற்றோர்களிடமிருந்து வரும் ஆணையை செயல்படுத்துவது மகனின் கடமை. என் தந்தை மட்டுமல்ல தாங்கள் எனக்கு ஆணையிட்டாலும் கொளுந்து விட்டு எரியும் தீயில் குதிப்பேன். ஆழ்கடலில் மூழ்குவேன். விஷத்தையும் அருந்துவேன். எனக்கு எந்த ஒரு வருந்தமும் இல்லை. தாங்கள் ஆணையிடுங்கள் அதற்கு அடிபணிந்து அச்செயலை இப்போதே செய்து முடிக்கிறேன் என்றார்.

ராமர் இவ்வாறு சொன்னதும் கைகேயி நமது காரியத்தை சுலபமாக சாதித்துவிடலாம். நாம் நினைத்த காரியம் இனிது முடியப்போகிறது என்று மகிழ்ச்சியுடன் மகா பயங்கரமான செய்தியை ராமரிடம் சொல்ல ஆரம்பித்தாள். முதல் வரமாக உனக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தில் பரதனுக்கு முடிசூட்டி அரசனாக்க வேண்டும். இரண்டாவது வரமாக நீ தவம் செய்யும் பொருட்டு காட்டிற்கு 14 வருடங்கள் வனவாசம் செல்லவேண்டும். இதுவே நான் உனது தந்தையிடம் கேட்ட வரம். இதனை கொடுக்க உனது தந்தை மறுத்தால் கொடுத்த சத்தியத்தில் இருந்து மீறியவர் ஆவார். இந்த இரண்டு வரங்களும் என்னால் மாற்ற முடியாத திட்டங்களாகும் என்று சொல்லி முடித்தாள். ஆனால் ராமரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.

என் தந்தையின் சத்தியத்தை காப்பாற்றும் பொருட்டு இப்போதே அரச உடைகளை களைந்து மரவுரி தரித்து காட்டுக்கு செல்கின்றேன். என் தந்தையின் வாக்கை எனது வாக்காக காப்பாற்றுவது எனக்கு கிடைத்த பாக்கியம். அதனை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவேன். பரதனுக்காக எதையும் விட்டுக்கொடுத்து பரமசந்தோசத்தை அடைவேன். இதனால் எனக்கு எள் அளவும் வருத்தம் இல்லை. பரதனை தூதுவர்கள் மூலம் அழைத்து வரச்செய்து குறித்த நேரத்தில் முடிசூட்டி விடுங்கள். பரதன் அரசாள்வது எனக்கு மகிழ்ச்சியே. எனது தந்தை தாயாரிடமும் சீதையிடமும் லட்சுமனனுடனும் விடைபெற்று செல்லவேண்டும். அதற்கான கால தாமதத்திற்கு மட்டும் சிறிது அனுமதி தாருங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டான். ராமருடைய முகத்தில் சிறிதளவும் வருத்தத்திற்கு உண்டான அறிகுறி கூட கைகேயிக்கு தெரியவில்லை. ராமரை பார்த்து திகைப்படைந்தாள். உடன் சென்ற லட்சுமனனுக்கு குடும்பத்தில் இருந்த குழப்பம் தெளிவாக புரிந்தது. தாய் தந்தையை எதிர்த்து பேச இயலாமல் மிகவும் துன்பத்தில் மூழ்கியவனாக தென்பட்டான். தசரதர் ராமர் நிலை என்ன ஆகுமோ என்று நடுநடுங்கிப்போய் பேச வார்த்தைகள் வராமல் அமர்ந்திருந்தார்.

ராமர் தசரதரையும் கைகேயியிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து லட்சுமனனுடன் தனது தாய் கௌசலையை பார்க்க சென்றார். கைகேயி தனக்கு பின்னால் வரும் வரப்போகும் துக்கத்தை அறியாமல் தன்னுடைய திட்டம் வெற்றி அடைந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள்.

இறைவன்

ஒரு ராஜா தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார். திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும். மந்திரி கூட நான்கு காவல்காரகளையும் அழைத்துச் செல்வார். ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது. காட்டு வழியே வரும்போது திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள். மந்திரியும் காவலர்களும் வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு நின்று விடுகிறார்கள். எங்கிருந்தோ ஆறு இளையர்கள் வந்து அவர்களை காப்பாற்றுகிறார்கள்.

மந்திரியுடன் ஆறு இளையர்களும் ராஜாவிடம் வருகிறார்கள். ராஜாவும் மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம் உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்று கூறுகிறார். முதல் இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான். இரண்டாவது இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான். மூன்றாவது இளைஞன் தான் வசிக்கும் கிராமத்தில் சாலைகள சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான். நான்காவது இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான். ஐந்தாவது இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான். அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன ராஜா ஆறாவது இளைஞனைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறான். இளைஞன் சற்று தயங்குகிறான் ராஜா மீண்டும் கேட்க இளைஞன் கூறுகிறான். அரசே எனக்கு பொன் பொருள் என்று எதுவும் வேண்டாம். வருடம் ஒரு முறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்னுடன் இருந்தால் போதும் என்று சொன்னான். ராஜாவும் இவ்வளவு தானா என்று முதலில் கேட்டான். பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையை தெரிந்து கொண்டான். ராஜா அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால் அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும். அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும். வேலைக்காரர்கள் வேண்டும். அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும். சொல்லப் போனால் முதல் ஐந்து இளைஞர்களும் கேட்து எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும் என்று தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார் ,

இந்தக் கதையில் கூறிய ராஜாதான் அந்த இறைவன். பொதுவாக எல்லோரும் இறைவனிடம் கதையில் கூறிய முதல் ஐந்து இளைஞர்களைப் போல் தனக்கு வேண்டிய செல்வம் திருமணம் குழந்தைகள் வேலை ஆரோக்கியம் என்று கேட்பார்கள். கடைசி இளைஞனைப் போல் இறைவனே நம்மிடம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -8

அதிகாலை விடிந்தது. பட்டாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வசிஷ்டர் செய்து முடித்தார். தசரத சக்ரவரத்தியை முடிசூட்டும் இடத்திற்கு அழைத்து வரச்சொல்லி சாரதி சுமந்தனிடம் வசிஷ்டர் தகவல் சொல்லி அனுப்பினார். கைகேயி இருக்கும் அந்தப்புரத்திற்கு வந்த சுமந்தன் தசரதரிடம் செய்தியை கூறினான். தசரதர் பேச இயலாமல் அமைதியாக இருந்தார். கைகேயி சுமந்தனிடம் ராமரை உடனே இங்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டார். தயங்கியபடியே தசரதரை பார்த்தான் சுமந்தன். ராமரை பார்க்க விரும்புகின்றேன் அவரை அழைத்து வா என்று வருத்தம் கலந்த குரலில் கூறினார் தசரதர். தசரதரின் முகவாட்டத்தை கண்ட சுமந்தன் ஏதோ விபரீதம் நடந்திருக்கின்றது என்று எண்ணி ராமருடைய மாளிகைக்கு ரதத்தை செலுத்தினான்.

பட்டாபிஷேகத்திற்கு சீதையுடன் தயாராக இருந்தார் ராமர். தங்கள் சிற்றன்னை கைகேயியின் மாளிகையில் தசரத சக்ரவர்த்தி தங்களை காணவேண்டும் என்று தங்களை அழைத்து வரச்சொன்னார் என்று சுமந்தன் ராமரிடம் கூறினான். அலங்காரத்துடன் இருந்த சீதையை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு ராமர் லட்சுமனனை அழைத்துக்கொண்டு சுமந்தனுடன் தசரதரை பார்க்க கிளம்பினார். செல்லும் வழி எங்கும் மக்கள் ராமரை பார்த்து போற்றினார்கள். ராமர் மாளிகைக்குள் நுழைந்ததும் ராமா என்று அலறிய தசரதர் கீழே விழுந்தார். மேற்கொண்டு அவரால் பேச இயலவில்லை. இக்காட்சி ராமரை திகிழடையச் செய்தது. தன் தந்தைக்கு மன வருத்தம் ஏற்படும் வகையில் ஏதேனும் செய்து விட்டேனோ என்று பயந்தார் ராமர். தன் தந்தையை சாந்தப்படுத்தி அவர் முன்னிலையில் வீழ்ந்து வணங்கினார். பின்பு கைகேயியின் முன்னிலையில் வீழ்ந்து வணங்கினார். வழக்கமாக கைகேயியின் முகத்தில் இருக்கும் தாயன்பு தற்போது இல்லாததை ராமர் கவனித்தார்.

அம்மா எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் தந்தை என்னிடம் அன்பாக பேசுவார். ஆனால் இப்போது வாடிய முகத்துடன் இருக்கிறார். நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா. தங்கள் கோபம் அடையும்படி நடந்துகொண்டேனா எதுவாக இருந்தாலும் தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள். இங்கு இருக்கும் சூழ்நிலைகளை பார்த்து எனக்கு அச்சமாக இருக்கிறது என்றார். ராமரின் பேச்சைக்கேட்ட கையேயி தன் காரியத்தை நிறைவேற்ற நல்ல சந்தர்ப்பம் அமைந்துவிட்டது என்று எண்ணி பேச ஆரம்பித்தாள். அரசருக்கு யார் மீதும் கோபம் இல்லை. அவர் மனதிலுள்ள செய்தியை உன்னிடம் சொல்ல பயப்படுகிறார். அதனால் பேசாமலிருக்கிறார். அதனை நானே சொல்லுகிறேன். உன் தந்தை பல வருடங்களுக்கு முன்பு எனக்கு இரண்டு வரங்கள் தந்தார். அதனை இப்போது நான் கேட்டுப்பெற்றுக் கொண்டேன். அந்த இரண்டு வரத்தில் ஒரு வரத்தோடு நீ தொடர்பு கொண்டிருக்கின்றாய். அதனை சொல்லவே உன் தந்தை தயங்குறார் என்றாள் கைகேயி.

திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர்

திலீபச்சக்கரவர்த்தி காட்டுக்கு வேட்டைக்கு வந்தார். பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். அம்பு பட்டவுடன் மான் ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினியாக வடிவெடுத்தது. அந்தப்பெண் அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட திலிபச்சக்கரவர்த்தி அவளருகே ஓடிவந்தார். அம்மா மான் என்று நினைத்தே அம்பெய்தேன். அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே என்று கண்ணீர் வடித்தார். அதுகேட்ட ரிஷிபத்தினி மன்னா இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும் என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள் என்று அழுதாள். மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை அதிலும் அந்தணப்பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா என்ன செய்வேன் என் குலகுருவே வசிஷ்ட மகரிஷியே தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது பாதங்களில் விழுந்தாள். என்ன நடந்தது என்பதை அறியாத வசிஷ்டர் தீர்க்க சுமங்கலி பவ என அவளை வாழ்த்தினார்.

மாமுனிவரே இதோ இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்தபிறகு அபாக்கியவாதியாக நிற்கிறேன் தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே இதெப்படி சாத்தியம் என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது நிலைமை புரிந்தது. தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும். இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தார். பெண்ணே காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி இதே போல உயிர்போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன் உனக்கு நிச்சயம் உதவுவான் கிளம்பு என்றார்.

மகிழ்ந்த ரிஷிபத்தினி உடனே கிளம்பினாள். அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும் சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி அன்னையே என்னைப் போலவும் ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல் நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும் என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள். ரிஷிபத்தினியும் முனிவரும் மீண்டும் திலீபச்சக்கரவர்த்தியை சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர். மன்னனும் கோவில் கட்டினான். அக்கோவிலே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -7

தசரதர் கொடுத்த உறுதிமொழியில் உற்சாகமடைந்த கைகேயி தனது வேண்டுதலை கேட்டாள். அரசே பஞ்ச பூதங்கள் சாட்சியாக கேட்கிறேன். சத்தியம் செய்திருக்கின்றீர்கள். எனக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுங்கள். ராமருக்கு பட்டாபிஷேகம் ஏற்பாடு செய்த அதே நேரத்தில் பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்து அரசனாக்குங்கள். ராமர் தவம் செய்யும் பொருட்டு பதினான்கு வருடங்கள் காட்டிற்கு இன்றே அனுப்புங்கள் என்றாள்.

கைகேயியின் வார்த்தையை கேட்ட தசரதன் தன் மேல் இடி இடித்ததை போல் உணர்ந்தார். தன் வலிமை அனைத்தும் அழிந்தவராக சோர்வுற்று கீழே விழுந்தார். புலி ஒன்று மானை பார்த்து நடுங்குவது போல் கைகேயியை பார்த்து தசரதர் நடுங்கினார். மன்னர்கள் அனைவரும் தசரதரின் காலில் விழுந்து வணங்குவார்கள் அத்தகைய சிறப்பு மிக்க தசரதர் கைகேயியின் காலில் விழுந்தார். ராமர் உனக்கு என்ன தீங்கு செய்தான் தன் தாயை விட உன் மீது மிகவும் அன்பாக இருந்து பணிவிடைகள் செய்கின்றான். ராமர் தன்னை அறியாமல் தவறு செய்திருந்தால் அவனை மன்னித்துவிடு.

பரதன் அரசனாக விரும்ப மாட்டான். அவன் விரும்பி ஏற்றுக்கொண்டாலும் இந்த உலகம் அதனை சரி என்று ஒப்புக்கொள்ளாது. மக்கள் இதனை கேட்டால் பொறுமை இழந்து உன்னை பழிப்பார்கள். இவ்வுலகில் மக்களால் பேசப்படும் புகழை நீ அடைய மாட்டாய். இந்த நிகழ்சியால் கொடிய பழி உன்னை வந்தடையும். இந்த பழியைக் கொண்டு என்ன பயனை அடையப்போகிறாய்.

ராமன் மூத்தவன் என்ற முறையில் அவனுக்கு அரச பட்டம் கொடுப்பதாக சொன்னதால் ராமன் அரசனாக முடிசூட்டிக்கொள்ள சம்மதித்தான். அவனிடம் நீ பரதனுக்கு இந்த பட்டத்தை கொடு என்று கேட்டால் ராமனே மனம் உகந்து பரதனை அரசனாக்கிவிடுவான். உன்னால் கேட்கப்பட்ட இரண்டாவது வரத்தை மட்டும் மறுபடியும் கேட்காதே. நீ கேட்ட முதல் வரத்தை இப்போதே தந்தேன். நீயும் பரதனும் இந்த உலகத்தை மகிழ்ச்சியுடன் ஆட்சி செய்யுங்கள். இனி அதனை மாற்ற மாட்டேன். என் உயிரான ராமன் எல்லா உயிர்களுக்கும் நல்லவனாக இருக்க கூடியவன். உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். என் உயிராக இருக்கும் ராமர் என்னை பிரிந்து காட்டிற்குள் சென்றால் உன் உயிர் என் உடலை விட்டு பிரிந்து விடும். நான் உன்னை யாசித்து கேட்கிறேன். ராமரை என்னிடம் இருந்து பிரித்து என்னை வருந்தும்படி செய்யும் இரண்டாவது வரத்தை கேட்காதே. ராமன் இந்த நாட்டை கடந்து செல்லாமல் இருக்க ஒரு நல்ல வார்த்தை சொல் உனது காலை பிடித்து கேட்கிறேன். அதர்மத்தை செய்ய என்னை தூண்டாதே என்றார்.

அனைத்தையும் கேட்ட கைகேயி கோபத்துடன் எனக்கு கொடுத்த வாக்கை நீங்கள் நிறைவேற்றா விட்டால் நீங்கள் சத்தியத்தை மீறியவர் ஆவீர்கள். கொடுத்த வாக்கை மீறியவர் தசரதர் என்ற பெயரை பெற்றுவிடுவீர்கள். நான் கேட்ட இரண்டு வரத்தை கொடுத்தால் கொடுங்கள் இல்லையேல் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். நான் இன்றே என் உயிரை விட்டுவிடுவேன் என்று தீர்க்கமாக கூறினாள்.