ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 473

கேள்வி: கோவில்களில் இருக்கும் சப்தமாதாக்களின் பெருமையை பற்றியும் அவர்களினால் மக்கள் அடையும் நன்மைகள் பற்றியும்:

இறைவன் அருளால் சப்தமாதாக்கள் அல்லது சப்த கன்னியர்கள் சப்த ரிஷிகள் பற்றி முன்பு கூறிய வாக்குகள் இவர்களுக்கும் பொருந்தும். சப்த மாதாக்களை எங்கே ப்ரதிஷ்டை செய்திருப்பார்கள்? என்றால் தட்சிணாமூர்த்திக்கு நேர் எதிரில் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். ஞான வாழ்க்கைக்கும் பரிபூரண ஞானத்தை புரிந்து கொள்வதற்கும் ஞான அருளை பெறுவதற்கும் இதுபோல் அம்பாளின் வடிவங்கள்தான் சப்தமாக பிரிந்து மனிதர்களுக்கு அருள்புரிந்து கொண்டிருக்கிறது. மேலும் ஞானத்தை இறைவனிடமிருந்து வாங்கிக் கொள்வதற்காகவும் வாங்கி மனிதர்களுக்கு தருவதற்காகவும்தான் தட்சிணாமூர்த்திக்கு எதிரே அமர்ந்து அவர்களும் மௌன தவத்தில் ஈடுபடுகிறார்கள். ஒரு மனிதன் சித்தர்கள் வழியில் வரவேண்டும் சித்தர்கள் அருளைப் பெறவேண்டும் என்றால் அதற்கு சப்தமாதாக்களின் வழிபாடு மிகவும் முக்கியமாகும். இதுபோக இன்னும் உபரியாக இந்த மாதாக்களின் வழிபாடுகள் அதிகம் உண்டு. இதுபோன்ற சக்திகளில் அஸ்வாரூடா என்ற சக்தியும் இருக்கிறது. இந்த அஸ்வாரூடா தேவதை என்பது குதிரைமீது அமர்ந்து பவனி வருவதுபோல் இருக்கும். இந்த தேவதையை வழிபட்டு இதுபோல் சாஸ்திரப்படி பூஜைகள் செய்தாலும் எதிரிகளின் தாக்கமும் எதிர்ப்புகளின் தாக்கமும் குறையும்.

இது போல சப்த மாதாக்களின் ஒட்டுமொத்த வழிபாடு ஞானத்தை தருவதோடு மட்டுமல்லாமல் உலகியல் வாழ்க்கையிலே குறிப்பாக பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகள் குறைவதற்கு சப்தமாதாக்கள் வழிபாடு மிகவும் உதவும். அனாச்சாரமில்லாமல் ஆத்மார்த்தமாக ஆலயம் சென்று சப்த மாதாக்களை அமைதியான முறையில் வழிபட்டுவர நல்லதொரு மாற்றம் ஏற்படும். ஆனால் சப்த மாதாக்களை புடைப்பு சிற்பமாக வைப்பது எமக்கு ஏற்புடையது அல்ல. தனித்தனி சிற்பமாக முழுக்க ஆடை அலங்காரம் செய்வதுபோல் அமைத்து வழிபாடு செய்வது ஏற்புடையது. நாங்கள் முன்பே கூறியிருக்கிறோம்.இல்லத்திலே சப்தமாதாக்களை வைத்து வழிபட முடியாத நிலையிலே ஏழு மஞ்சள் துண்டங்களை வைத்து பெண்கள் சுக்ரவாரம் தோறும் குங்கும அர்ச்சனை செய்து மலர்கள் தூவி வழிபட்டால் களத்திர தோஷம் குறையும். உள்ளன்போடு ஏழு வாரம் செய்தாலே நல்ல மாற்றத்தை உணரலாம்.

50. சுந்தரப் பேரன் செய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சுந்தரப் பேரன் செய்த படலம் ஐம்பதாவது படலமாகும்.

வங்கிசேகரப் பாண்டியன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது விக்கிரம சோழன் என்ற சோழ அரசன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அவனுக்கு உதவியாக வடநாட்டு அரசர்கள் பலர் பாண்டிய நாட்டினை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருந்தனர். சோழனின் படைகள் பாண்டிய நாட்டிற்குள் புகுந்து நீர் நிலைகளை உடைத்தும் பசுக்களைக் கவர்ந்தும் வியாபாரிகளிடம் கொள்ளை அடித்தும் தாக்குதல் நடத்தினர். இச்செய்தியை வீரர்கள் மூலம் அறிந்த வங்கிசேகர பாண்டியன் பாண்டிய நாட்டினை சொக்கநாதரை தவிர யாராலும் காப்பாற்ற இயலாது என்று எண்ணி அவரைச் சரணடைந்தான். திருகோவிலுள் நுழைந்த பாண்டியன் எம் தந்தையே விக்கிரம சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறான். என்னிடமோ சோழனை எதிர்க்கும் அளவுக்கு படை வலிமை இல்லை. ஆதலால் தாங்கள்தான் பாண்டிய நாட்டினையும் என்னையும் காத்தருள வேண்டும் என்று வேண்டினான். அப்போது இறைவனார் வானத்தினின்றும் பாண்டியனே நீ முதலில் சென்று சோழனை எதிர்கொள். யாம் பின்னால் வந்து வெற்றியை உமதாக்குவோம் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

சொக்கநாதரின் திருவாக்கினைக் கேட்டதும் வங்கிசேகர பாண்டியன் தெளிவடைந்து சோழனை எதிர்க்கப் புறப்பட்டான். போர்க் களத்தில் பாண்டிய மற்றும் சோழப் படைகள் ஒன்றை ஒன்று எதிர்த்து போரிட்டன. அப்போது சோழனுக்கு உதவியாக வடநாட்டுப் படைகள் போர்க்களத்தை அடைந்தன. இதனால் பாண்டியனின் படைகள் சோழனின் படைகளை எதிர்க்க முடியாமல் சிதறி ஓடின. சோழன் போரில் வெற்றி பெற்றோம் என்று எண்ணி சங்கை முழங்கினான். அப்போது சொக்கநாதர் வேடுவ வடிவம் கொண்டு பாண்டியனின் சேனைக்கு தலைவராக சுந்தரேசன் என்ற திருப்பெயருடன் போர்க் களத்திற்கு வந்தார். தம்முடைய கணைகளை சோழனின் படைகளின் மீது எய்தார். அவர் விட்ட ஒவ்வொரு அம்பும் சோழப்படையில் பதினாறாயிரம் வீரர்களைக் கொன்றது. சோழப்படைகளின் எண்ணிக்கை குவியல் குவியலாக குறைந்தது. இதனைக் கண்ட சோழன் ஐயமுற்று இந்த அம்புகளுக்கு இவ்வளவு வலிமை எப்படி வந்தது என்று எண்ணி அம்பினை ஆராய்ந்த போது அம்பில் சுந்தரேசன் என்ற பெயர் பொறித்திருந்ததைக் கண்டான். வேடுவ வடிவில் உள்ளவர் சொக்கநாதர் பாண்டியனுக்கு துணையாக வந்துள்ளார் என்பதை உணர்ந்தான் விக்கிரம சோழன். மற்ற அரசர்களை அழைத்து இந்த அம்பை எறிந்தவர் சொக்கநாதர். அவர் போர் முனைக்கு வந்திருக்கிறார். தெய்வ பலத்தை மனித சக்தியால் வெல்ல முடியாது. அதனால் யுத்தத்தை நிறுத்தி ஊருக்குப் போகலாம் என்றான். சிலர் சம்மதித்தனர். சிலர் சண்டையிட்டு மாண்டார்கள். சோழன் போர்க் களத்தை விட்டு வெளியேறி சோழநாட்டிற்கு பயணமானான்.

வங்கிசேகர பாண்டியன் போரில் வெற்றி பெற்றான். இறைவனார் பாண்டியனின் வெற்றிப் புன்னகையைப் பார்த்து அருள்நகை புரிந்து மறைந்தருளினார். வெற்றி பெற்ற திருக்கோயிலுக்குச் சென்று வங்கிசேகர பாண்டியன் இரத்தினத்தால் செய்த வில்லும் சுந்தரர் என்று பேர் எழுதிய அம்பும் செய்து சாற்றி வணங்கினான். பின்னர் நீதிதவறாமல் ஆட்சி செய்து வந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

எவ்வளவு பெரிய வலிமையானவனாக எதிரி இருந்தாலும் தன்னை சரணடைந்தவர்களை இறைவன் காப்பாற்றுவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 472

கேள்வி: மக்களின் துன்பங்கள் தீர்க்க தாங்கள் எப்பொழுது தனி நபர் வாக்கை அருள்வீர்கள்?

இறைவனின் கருணையைக்கொண்டு யாங்கள் கூறவருவது என்னவென்றால் ஒருவன் உயர்ந்தவன் ஒருவன் தர்மம் செய்கிறான் ஒருவன் நல்லவனாக இருக்கிறான் அவனுக்கு வாக்கு சொல்ல வேண்டும். ஒருவன் தாழ்ந்தவன் தீய எண்ணங்கள் கொண்டிருக்கிறான் அவனுக்கு வாக்கு சொல்லக்கூடாது என்றெல்லாம் இல்லை. பொதுவாகக் கூறுவோம் நல்ல எண்ணங்களும் தர்ம எண்ணங்களும் சாத்வீகமான சிந்தனையும் உள்ள மனிதர்களுக்கும் நாங்கள் வாக்கினை கூறுவோம் என்று. ஆனால் உண்மையில் எல்லோருக்கும் இறைவன் அருளால் யாங்கள் வாக்கை கூறிக்கொண்டுதான் இருக்கிறோம். இதுபோல் நிலையிலே இறைவனின் அருளாணையைப் பெற்று எப்பொழுது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் நாங்கள் வாக்கு கூற தயாராகத்தான் இருக்கிறோம். எனவே மனிதர்கள் எங்கள் வாக்கினை புரிந்துகொண்டு அந்த வழியில் வருவது அவர்களுக்கு பல நேரங்களில் கடுமையாக கடினமாக இருப்பதால் மௌனத்தைக் காட்டுகிறோம். இன்னொன்று எங்கள் வாக்கை கேட்டுவிட்டாலோ ஓலைசுவடியிலே எங்களோடு தொடர்பு வந்து விட்டாலோ வாழ்க்கையில் ஒரு துன்பம் கூட வரக்கூடாது ஒரு கஷ்டம் கூட வரக்கூடாது என்று மனிதன் எண்ணுகிறான். நியாயம்தான் ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் எத்தனை பூஜைகள் தர்மங்கள் செய்தேன் எத்தனை ஸ்தலங்கள் சென்றேன் எனக்கு ஏன் இப்படியொரு துன்பம் வந்துவிட்டது? என்றெல்லாம் கேட்கிறார்கள். எம்மிடம் வந்தால் துன்பம் போவதற்கு பதிலாக துன்பங்கள் அதிகமாகும். சம்மதம் என்றால் எமது வாக்கை யார் வேண்டுமானாலும் வந்து கேட்கலாம்.

அடுத்து இன்னொரு மிகப்பெரிய பிரச்சினை மனிதனிடம் இருக்கிறது. தன்னுடைய மகனோ மகளோ காந்தர்வம் (விரும்பியவர்களை திருமணம்) கொண்டுவிட்டால் ஏதோ கொலைபாதகம் செய்து விட்டது போல் எண்ணுகிறார்கள். அதை எப்படியாவது தடுக்க வேண்டும் குருநாதா என்று மௌனமாக எம்மிடம் பிரார்த்தனை வைக்கிறார்கள். எம் வழியில் வருபவர்கள் எதை செய்யக்கூடாது? என்று நாங்கள் எண்ணுகிறோமோ அதை செய்வதற்கு எங்களையே துணைக்கு அழைக்கிறார்கள். என் பெண் விரும்புகின்ற வாழ்க்கை அமையக் கூடாது. நாங்கள் பார்க்கின்ற மாப்பிளையைதான் அவள் திருமணம் செய்யவேண்டும். இதற்கு நீங்கள் வழி காட்டக்கூடாதா குருநாதா என்று எம்மிடமே வந்து கேட்கிறார்கள். யாங்கள் கூறுவதோ அல்லது அவன் கூறுவதோ இருக்கட்டும். முதலில் அந்தப் பெண்ணின் விதி எப்படியோ அப்படிதான் நடக்கும் என்பதை யாரும் புரிந்து கொள்வதேயில்லை.

அடுத்ததாக காந்தர்வம் என்பது நல்லதாக இருந்துவிட்டால் பாதகமில்லை குருநாதா. தவறான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டால் எங்களுக்குதானே மனக்கஷ்டம ? அதனால்தானே தடுக்கிறோம்? என்றெல்லாம் கேட்கலாம். அப்படித்தான் நடக்க வேண்டும் என்ற விதியிருந்தால் அதை யாரும் மாற்ற முடியாது. அது ஒருபுறமிருக்கட்டும். முதலில் இப்படியொரு அனாச்சாரம் நடக்கக் கூடாது என விரும்பக் கூடியவர்கள் சிறு வயது முதலே அதிக பூஜைகளையும் முன்னோர்களின் சாபங்களை நீக்கும் பூஜைகளையும் தர்ம காரியங்களையும் செய்து கொண்டே வந்தால் பருவ தடுமாற்றம் என்பது ஆணுக்கோ பெண்ணுக்கோ இராது. ஆனால் இதை குற்றமாக பார்ப்பது மனிதனின் இயல்பாகிவிட்டது. இதை இறைவனோ சித்தர்களோ குற்றமாக பார்ப்பதில்லை. தன்னை சமுதாயத்தை கெடுக்காத தன் குடும்பத்தை நியாயமான வழியிலே பாதிக்காத எதனையும் நாங்கள் குற்றமென்று எடுத்துக் கொள்வதில்லை. ஒரு பெண்ணும் ஆணும் வளர்ந்த பிறகு நல்லது கெட்டதை போதிப்பதுதான் ஈன்றோரின் கடமையே தவிர வாழ்க்கையை இப்படித்தான் நீ வாழ வேண்டும் இந்த வேலைக்குதான் செல்ல வேண்டும் இந்த வியாபாரம்தான் செய்ய வேண்டும் இந்த பெண்ணைதான் நீ திருமணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் எவனொருவன் கூறுகிறானோ அவன் எமது வழியில் வருபவன் அல்ல.

49. திருவால வாயான் படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் திருவால வாயான் படலம் நாற்பத்தி ஒன்பதாவது படலமாகும்.

சுகுண பாண்டியனின் மரபில் அவனுக்குப் பின் சித்திநாதன் சித்தி பூஷணன் சித்திரத்வஜன் சித்திரவர்மன் சித்திரசேனன் சித்திரவிக்ரமன் ராஜமார்த்தாண்டன் ராஜசூடாமணி ராஜ சார்த்தூலன் ராஜ குஞ்சரன் சத்ருஞ்சரன் பீமரதன் பீமபராக்கிரமன் பிரதாப மார்த்தாண்டன் விக்கிரம கஞ்சுகன் யுத்த கோலகன் அதுலவிக்கிரமன் அதுலகீர்த்தி கீர்த்திவிபூஷணன் முதலானோர் வம்ச வழியாக வெகுகாலம் நீதி நெறி தவறாமல் அரசாண்டனர். இந்த இருபத்தோரு மன்னர்கள் வெகு காலம் நெறிதவறாது அரசு புரிந்ததும் ஒரு மனுவின் காலம் முடிந்துவிட்டது. மனுவின் காலம் முடிந்தபடியால் ஊழிக் காலம் எனப்படும் பிரளயம் உண்டானது. கடல் நீர் பொங்கியதால் உலகில் உள்ளவை அழியத் தொடங்கின. அப்பிரளயத்திலிருந்து மீனாட்சி அம்மன் திருக்கோவில் திருக்கோவிலின் இந்திர விமானம் பொற்றாமரைத் தீர்த்தம் பசுமலை பன்றிமலை நாகமலை இடபமலை யானைமலை ஆகியவை அழியாதிருந்தன. பிரளயக் காலம் முடிந்ததும் இறைவனார் உலகத்தையும் உயிர்களையும் படைத்தார். சூரியனிடமிருந்தும் சந்திரனிடமிருந்தும் மன்னர்கள் தோன்றினர். சேர சோழ பாண்டிய நாடுகள் பிரிந்தன. அப்போது பாண்டிய மரபில் வங்கிசேகரப் பாண்டியன் என்பவன் தோன்றினான். அவன் அறுபத்து நான்கு கலைகளிலும் சிறந்தவனாய் விளங்கினான். அவன் மீனாட்சி அம்மன் திருக்கோவிலைச் சுற்றிலும் சிறிய நகரத்தை உண்டாக்கி ஆட்சி செய்து வந்தான். நாளடைவில் அவனின் நல்லாட்சியின் விளைவால் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆதலால் வங்கிசேகரப் பாண்டியன் நகர எல்லையை விரிவாக்க எண்ணினான். எனவே அவன் திருக்கோவிலை அடைந்து எம் பெருமானே உன் அருளினால் நான் இந்நாட்டை ஆண்டு வருகிறேன். இப்போது என்னுடைய குறை ஒன்றை போக்கி அருள வேண்டும். என்னுடைய குடிமக்கள் வசிக்க ஒரு நகரம் அமைக்க வேண்டும். இந்நகரத்திற்கு ஆதியில் வரையறுக்கப்பட்ட எல்லையை வரையறுத்துக் காட்டி அருளுங்கள் என்று வேண்டினான்.

வங்கிசேகரப் பாண்டியனின் வேண்டுதலை ஏற்ற இறைவனார் சித்தர் வடிவம் கொண்டு மகாமண்டபத்தின் அருகே வந்து நின்றார். தமது திருக்கரத்தில் கங்கணமாகக் கட்டி இருந்த பாம்பினைப் பார்த்து நீ இப்பாண்டியனுக்கு இந்நகரத்தின் எல்லையை வரையறை செய்து காட்டுவாயாக என்று ஆணை இட்டார். உடனே அப்பாம்பு எம்பெருமானே இந்நகரம் எனது பெயரினால் விளக்க அருள்புரிவாயாக என்று வேண்டுகோள் விடுத்தது. இறைவனாரும் அவ்வாறே ஆகுக என்று அருளினார். உடனே பாம்பு விரைந்து சென்று கிழக்கு திசையில் சென்று வாலை நீட்டியது. நகருக்கு வலமாக தரையில் படிந்து உடலை வளைத்து வாலைத் தன் வாயில் பிடித்து பழைய நகரின் எல்லையைக் காட்டியது. பின்னர் கங்கணமாக மாறி இறைவனாரின் திருக்கரத்தில் மீண்டும் அமர்ந்தது. பாண்டியனை ஆசீர்வதித்து சித்தர் மறைந்தார். சர்ப்பம் காட்டிய எல்லைப்படி நகரை அமைத்து ஆலவாய் எனப் பெயரிட்டான் வமிசசேகரன். நான்கு பக்கமும் எல்லை வகுத்ததால் நான்மாடக் கூடல் என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. பாம்பு வரையறுத்த எல்லையின் படி வங்கிசேகரப் பாண்டியன் சக்கர வாளகிரி என்னும் மதிலைக் கட்டுவித்தான். அந்நகருக்கு தெற்கு வாயிலுக்கு திருப்பரங்குன்றமும் வடக்கு வாயிலுக்கு இடபமலையும் மேற்கு வாயிலுக்கு திருஏடகமும் கிழக்கு வாயிலுக்கு திருப்பூவணமும் எல்லையாக அமைந்தன. அப்பெரிய மதிலை ஆலவாய் மதில் என்றும் அந்நகரை ஆலவாய் என்றும் அழைக்கத் தொடங்கினர். பாம்பு வரையறுத்த எல்லையில் வங்கிசேகரப் பாண்டியன் நகரினை விரிவு செய்து சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

பிரளயத்தில் உலகமே அழிந்தாலும் அழியாத பெருமை பெற்ற மதுரையின் சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ளவும் மதுரை திருஆலவாய் என்ற பெயர் அழைக்கப்படும் காரணத்தையும் வழி தெரியாமல் இறைவனை சரணடைபவர்களை இறைவனார் காப்பார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 471

கேள்வி: பொதுவாக குரு சுக்ர ஹோரைகளை சுபகாரியங்களுக்கு பயன்படுத்துவதும் சுபகாரியங்களுக்கு இராகு காலத்தை தவிர்ப்பதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் வெள்ளிக்கிழமை அன்று 10.30 லிருந்து 11.00 மணி வரை குரு ஹோரையும் இராகு காலமும் சேர்ந்து வருகிறது இதை எப்படி கையாள்வது?

இறைவனின் கருணையைக் கொண்டு ஞானப் பார்வையிலே ஞானத்தை முழுமையாக அடைந்து விட்ட மனிதனுக்கோ அல்லது அடைய முயற்சி செய்யும் மனிதனுக்கோ இதுபோன்ற பேதங்கள் தேவையில்லை. இருந்தாலும் இவைகள் எதற்காக கூறப்பட்டுள்ளன? சாலை விதிகள் போலதான் இதுவும். ஒரு சாலையிலே எப்படி வேண்டுமானாலும் வாகனத்தை ஓட்டினால் வாகனம் ஓடும். ஆனால் இப்படித்தான் ஓட்ட வேண்டும் இன்ன திசையில்தான் வரவேண்டும் இன்ன திசையில்தான் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் ஒரு சில சட்ட திட்டங்கள் கூறப்படுகின்றன. எதற்காக? என்பது மனிதர்கள் அறிந்ததே. அதைப் போலத்தான் மனிதர்கள் சுயநலமாய் இந்த உலக வாழ்வை வாழ்வதற்கும் தன் சொந்த பிரச்சினைகளுக்காகவும் துன்பங்களுக்காகவும் பிராயச்சித்தம் செய்வதற்கும் சில சுப ஹோரைகளையும் சுப தினங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் எல்லாம் இறை செயல். நான் எனக்கென்று எதையும் செய்யப் போவதில்லை வாழப் போவதில்லை. எப்பொழுதுமே எனக்கு பொது தொண்டுதான் தியாகம்தான் தர்மம்தான் பிறர் நலன்தான் குறிக்கோள் என்று வாழக் கூடிய மனிதர்களுக்கு இதுபோன்ற ஹோரையோ இராகு காலமோ எமகண்டமோ பார்க்க தேவையில்லை.

இருந்தாலும் சராசரி மனிதர்கள் வாழ்க்கையிலே இன்ப துன்பங்களால் ஆட்படும் பொழுது சில குறிப்பிட்ட கால கட்டத்தில் சில விஷயங்களை செய்தால் நல்லது. செய்யாமல் தவிர்த்தாலும் நல்லது என்பதற்காக கூறப்பட்டுள்ளது. இந்த வகையில் பார்க்கும் பொழுது செய்யக் கூடிய செயல் பொது நலமான செயலா? சுயநலமான செயலா? என்று பார்த்து ஹோரையையும் எமகண்டம் இராகு காலத்தையும் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் இராகு காலம் எமகண்டம் சுப ஹோரை ஆகியவற்றை பார்க்கும் பொழுது அவசரமான தீவிர சிகிச்சையை ஒரு மனிதனுக்கு செய்ய வேண்டும். இராகு காலம் முடியட்டும் சிகிச்சை செய்கிறேன் என்று மருத்துவன் கூறினால் ஏற்றுக்கொள்வாயா? அல்லது எமகண்டம் முடியட்டும் என்றால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? பசியினால் மயங்கி விழுகிறேன். ஏதாவது அன்னம் கொடுங்கள் என்று ஒருவன் அங்காடியில் கேட்கிறான். சற்று பொறு அப்பா. எமகண்டம் முடியப் போகிறது. இன்னும் ஐந்து மணித்துளிகள் கழித்து உனக்கு உணவு தருகிறேன் என்றால் யாராவது கேட்பார்களா? எனவே மனோ நிலையை பொறுத்தும் சூழலை பொறுத்தும் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதன்முதலாக வீட்டிற்கு ஒரு விலையுயர்ந்த பொருள் வாங்கப் போகிறார்கள் அல்லது பெண் பார்க்கப் போகிறார்கள் அல்லது ஒரு சுப நிகழ்வு நிகழப்போகிறது என்றால் அதற்கு ஓரளவு துல்லியமாக நாளை பார்க்கலாம். மனிதர்கள் அதில்கூட அறியாமையால் தவறுதான் செய்கிறார்கள். கிடைத்த பஞ்சாங்கமோ தவறான பஞ்சாங்கம். அதைவிட சூரிய உதயத்தை மனதில் வைத்துதான் இராகு காலம் எமகண்டம் பார்க்க வேண்டும். சூரிய உதயம் என்றாலே 6 மணி என்று இவர்கள் வைத்துக் கொண்டு அதற்கேற்பத்தான் இராகு காலத்தையும் எமகண்டத்தையும் பார்க்கிறார்கள். இதேபோல் மதியோன் வாரம் பார்த்தால் இராகு காலமும் சுப ஹோரையும் குறுக்கிடும். எனவே இதுபோன்ற தருணங்களிலே சுப ஹோரையா இராகு காலமா என்று பார்ப்பதை விட செய்கின்ற செயல் சுய நலமா அல்லது பொது நலமா என்று பார்த்து முடிவெடுப்பதே சிறப்பிலும் சிறப்பாகும்.

48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் நாரைக்கு முத்தி கொடுத்த படலம் நாற்பத்தி எட்டாவது படலமாகும்.

பாண்டிய நாட்டில் வைகை ஆற்றிற்கு தெற்கே அழகிய தாமரை மலர்களைக் கொண்ட குளம் ஒன்று இருந்தது. அக்குளத்தில் இருந்த மீன்களை பிடித்து உண்டு நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு சமயம் மழை இல்லாமல் போனதால் தடாகத்தில் இருந்த தண்ணீர் வற்றி விட்டது. எனவே அந்த குளத்தில் மீன்கள் இல்லாமல் போனது. இதனால் நாரை உணவில்லாமல் தவித்தது. எனவே அது காட்டினை நோக்கிப் பறந்தது. அக்காட்டில் சிவனடியார்களான முனிவர்கள் வாழ்ந்து வந்தனர். முனிவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் குளம் ஒன்று இருப்பதை நாரை கண்டது. அத்தடாகத்தைச் சுற்றிலும் படித்துறை அமைந்திருந்தது. அத்தடாகத்தைச் சுற்றிலும் மரங்கள் நிறைந்திருந்தன. அக்குளத்தை அச்சோதீர்த்தம் என்று அழைப்பர். இதுவே தான் தங்குவதற்கு சிறந்த இடம் என்று எண்ணிய நாரை அங்கேயே தங்கியது. முனிவர்கள் அத்தீர்த்தத்தில் நீராடும் போது மீன்கள் அவர்களின் மீதும் அவர்களின் சடையின் மீதும் புரண்டன. அதனைக் கண்ட நாரை இம்முனிவர்களின் மேனியில் தவழும் இம்மீன்களை உணவாகக் கொள்ளுதல் கூடாது என்று எண்ணியது. தீர்த்தத்தில் நீராடிய முனிவர்களிடம் சத்தியதவர் என்ற முனிவர் மதுரையம்பதியின் பெருமைகளையும் சொக்கநாதரின் திருவிளையாடல்களையும் விரிவாக எடுத்துக் கூறினார். முனிவரின் விளக்கத்தினைக் கேட்ட நாரைக்கு மீனை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மறைந்தது. சொக்கநாதரை வழிபடும் எண்ணம் அதிகரித்தது. எனவே அது மதுரையம்பதியை நோக்கி பறந்தது.

மதுரையம்பதியை அடைந்த நாரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் வழிபட்டது. இவ்வாறு பதினைந்து நாட்கள் வழிபாடு நடத்தியது. பதினாறாம் நாள் நாரை பொற்றாமரைக் குளத்தில் நீராட செல்லும் போது அங்கு மீன்கள் துள்ளுவதைக் கண்டது. உடனே அதற்கு மீனினை உண்ணும் ஆவல் உண்டானது. குளத்திற்குள் தனது காலை வைத்ததும் சொக்கநாதரின் சிந்தனை தலை தூக்கியது. சொக்கநாத்தரின் குளத்தில் உள்ள மீனை உண்ணக் கூடாது என்று அவர் மீது கொண்ட அன்பினால் மீனினை உண்ணாமல் பொற்றாமரைக் குளத்தில் நீராடிவிட்டு சொக்கநாதரை வழிபட்டது. நாரையின் செயலினால் இறைவனுக்கு அதன்மீது கருணை ஏற்பட்டது. இதனால் நாரையின் முன்னால் சொக்கநாதர் தோன்றி என் இனிய நாரையே உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு நாரை ஐயனே இப்பிறவியை நீக்கி உன்னுடைய அடியவர்கள் வசிக்கும் சிவலோகத்தில் என்னை சேர்த்துக் கொள்ள வேண்டும். என்னைப் போல பறவைகள் இத்தீர்த்தத்தில் உள்ள மீனினை உண்டால் அவர்களுக்கு பாவம் வந்து சேரும். ஆதலால் இப்பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் எக்காலத்தும் இல்லாமல் இருக்க அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இறைவனாரும் அவ்வாறே ஆகுக என்று அருள் புரிந்தார். பின்னர் நாரை நான்கு தோள்களும் மூன்று கண்களும் கொண்ட சிவகணமாக மாறி சிவலோகத்தை அடைந்து நந்தி கணங்களுள் ஒன்றானது. நாரைக்கு வரம் அளித்த நாள் முதல் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் மட்டும் இன்றி நீரில் வாழும் உயிரினங்கள் ஏதும் இல்லாமல் போனது. சுகுண பாண்டியன் சிலகாலம் ஆட்சி செய்து பின்னர் சிவப்பேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனைப் பற்றிய தூய சிந்தனையும் அவரின் செய்திகளையும் உணர்ந்து கேட்கும் போது பிற உயிரினங்களுக்கு துன்பம் விளைவிக்கும் எண்ணம் அழிந்து விடும் என்பதையும் பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது இறைவனை அடைய சிறந்த வழி என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 470

அகத்திய பெருமானின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையை கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் இறைவனின் கருணையால் இதுபோல் எம் வழி வருகின்ற அனைத்து சேய்களுமே நலமாய் உயர்வாய் நல்வித செயல்களை செய்து செய்து இறையருளை தொடர்ந்து பெற அதுபோல் இறை அருளைக் கொண்டே நல்லாசிகளை இயம்புகிறோம். இயம்புகிறோம் திடமான மனது உறுதியான மனது எந்த விதமான சங்கடத்திற்கும் சலனத்திற்கும் ஆளாகாத மனது இதுபோல் வைரத்தைவிட வைடூரியத்தை விட உறுதியான மனது ஒவ்வொரு மனிதனுக்கும் வாய்த்தால்தான் அறக்காரியங்களை செய்ய இயலும் நன்மையை செய்ய இயலும். யாம் அடிக்கடி கூறுவது போல தவறை செய்கின்ற மனிதன் சுயநலமாய் வாழ்கின்ற மனிதன் பாவத்தின் மேல் பாவத்தை சேர்க்கின்ற மனிதன் பலர் விமர்சனம் செய்கிறார்களே? பலர் உற்று உற்று பார்க்கிறார்களே? என்று தன் தவறான செயல்களை நிறுத்தி விடுகிறானா? இல்லையே? ஒரு தவறு செய்கின்ற மனிதன் துணிந்து தவறு செய்கிறான். இல்லையென்றால் அதற்கு பலவிதமான நியாய வாதங்களை கற்பித்து தவறு மேல் தவறு செய்து கொண்டே போகிறான். ஆனால் நல்லதை தர்மத்தை செய்ய வேண்டும் சத்தியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று முன் வருகின்ற மனிதர்கள் மட்டும் அதில் ஏதாவது இடையூறுகள் ஏளனங்கள் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வந்தால் அதனை விட்டு விடுகிறார்களே ஏன்? தீயதை செய்கின்ற மனிதன் யார் விமர்சனம் செய்தாலும் ஏன்? சட்டம் போட்டு தடுத்தாலும் கூட அதனையும் மீறி தீயதை செய்து கொண்டே இருக்கிறான்.

நல்லதை செய்கின்ற மனிதன் மட்டும் நல்லதை செய்வதால் சில துன்பங்கள் வருகிறதே? இத்தனை எதிர்ப்புகள் ஏளனங்கள் வருகிறதே? என்று மனம் வெதும்பி விரக்தியடைந்து அதனை விட்டுவிடுகிறான். இந்த தன்மையை எம் வழியில் வருகின்ற சேய்கள் அறவே குறைத்துக் கொண்டு நல்லதை செய்கின்ற தன்மைக்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதனை விட்டுவிடக் கூடாது என்ற சிந்தனைக்கு வந்து விட வேண்டும். அறவே அச்சம் குழப்பம் இல்லாமல் வாழ முயற்சி செய்ய வேண்டும். பல இடங்களில் பல விதமான தர்ம காரியங்களை பெறுவதற்கு பல மனிதர்கள் இருக்க சுற்றிலும் பலர் வேடிக்கை பார்க்கிறார்கள் நான் அள்ளிக் கொடுக்கலாம் என்றுதான் நினைத்தேன். மற்றவர்களின் பார்வை என்னை சங்கடப்படுத்துகிறது. எனவே குறைவாக கொடுத்து விட்டேன் என்றெல்லாம் மனிதர்கள் எண்ணுவது அறியாமையாகும். பலர் பார்க்க தீய பானங்களை ஒரு மனிதன் பருகுகிறான் தீய பொருள்களை விற்கிறான் வாங்குகிறான். தீய செயலை செய்கிறான். அதற்கெல்லாம் அச்சப்படாத வெட்கப்படாத மனிதன் தர்மத்தை செய்ய நல்லதை செய்ய ஏன் அச்சப்பட வேண்டும்? ஏன் வெட்கப்பட வேண்டும்? எனவே இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வார் என்று ஒரு மனிதன் நம்பிக்கையோடும் உறுதியோடும் இருத்தலே எம் வழியில் வருவதற்கு ஏற்ற மனோபாவமாகும்.

இந்த மனோபாவத்தை மனோநிலையை ஒருவன் வளர்த்துக் கொண்டே இருத்தல் அவசியமாகும். துன்பங்களை தாங்குவதற்கு பலம் வேண்டும் மனோபலம் வேண்டும் என மனிதர்கள் வினவுகிறார்கள், கேட்கிறார்கள். கட்டாயம் புண்ணியம் நற்காரியங்கள் அதிகம் சேர சேர நற்செயல்கள் அதிகம் செய்ய செய்ய மனோபலம் உருவாகும். துன்பங்களை தாங்குகின்ற சக்தியை வளர்த்துக் கொள்ள எந்த துன்பம் வந்தாலும் துவண்டு விடாமல் அதனை எதிர்கொள்ளக் கூடிய திறனை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதிகளவு தர்ம காரியங்களும் தன்னலம் கருதாத தொண்டும் பூஜைகளும் ஸ்தல யாத்திரையும் மந்திர உச்சாடனமும் எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் அறிவு கொண்டும் எம் பார்வையிலும் அதற்கு தீர்வு காணவேண்டும் என்று முயற்சி செய்வதே சிறப்பிலும் சிறப்பாகும். அப்படி ஒரு மனிதன் வாழ முற்பட்டால் மனோதிடம் அதிகமாகும் மனோபலம் அதிகமாகும். இதுபோல் கர்ணனை நாங்கள் உதாரணம் காட்டுவது எதற்கு? என்றால்

ஒரு மனிதனிடம் எத்தனை விதமான ஏற்க முடியாத குணங்கள் இருந்தாலும் கூட தர்ம குணங்கள் அதிகம் இருந்தால் இறையருள் நிச்சயம் என்பதற்கு கர்ணன் ஒரு சிறந்த உதாரணம். அது மட்டுமல்லாமல் கடுமையான தவமோ பிரார்த்தனையோ இல்லாமல் செய்கின்ற தர்மத்தாலும் நற்காரியங்களாலும் இறைவன் அருளை பெறுவதோடு மட்டுமல்லாமல் இறைவனை தரிசிக்கவும் செய்யலாம் என்பதற்கு கர்ணன் சிறந்த உதாரணம். எனவே எம் வழியில் வர எண்ணுகின்ற சேய்கள் இதுபோல் கருத்தை உறுதியாக மனதிலே வைத்துக் கொண்டு தொடர்ந்து விடாது தர்மம் என்று தர்ம வழியில் வருவதோடு சத்தியம் என்று சத்திய வழியிலும் வந்து பரிபூரண சரணாகதி பக்தியிலே தன்னை ஆட்படுத்திக் கொண்டு சாத்வீக எண்ணங்களை வளர்த்துக் கொண்டு எவர் மனதையும் புண்படுத்தாமல் ஆணவமில்லாமல் தன்னை உயர்த்திக் கொள்ளக் கூடிய முயற்சியில் இறை வழியில் வர இறையருளால் அவர்கள் துன்பங்களெல்லாம் ஓடி அவர்கள் நித்ய இன்பமாக, நிம்மதியாக வாழ வழி பிறக்கும் என்று யாங்கள் கூறுகிறோம். இந்தக் கருத்தை நன்றாக மனதிலே பதியவைத்து சதாசர்வகாலம் இறைவனின் திருவடியை சிந்தித்து சிந்தித்து நல்வழியில் வர எம் சேய்களுக்கு இறைவன் அருளாலே நல்லாசிகளை இத்தருணம் இயம்புகிறோம்.

47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் நாற்பத்தி ஏழாவது படலமாகும்.

இராசராச பாண்டியனுக்குப் பின் அவனுடைய மகன் சுகுண பாண்டியன் மதுரையை நல்லாட்சி செய்து வந்தான். அப்போது முற்பிறவியில் நல்ல வினைகள் செய்த ஒருவன் சில தீவினைகள் செய்தமையால் மதுரைக்கு அருகில் உள்ள ஊரில் கரிக் குருவியாக பிறந்தான். அக்கரிக் குருவியை காகம் உள்ளிட்ட பெரிய பறவையினங்கள் தலையில் கொத்தின. இதனால் கரிக் குருவிக்கு தலையில் காயங்கள் உண்டானது. கரிக் குருவியால் அப்பறவைகளை எதிர்க்க இயலவில்லை. எனவே கரிக் குருவி அவ்வூரை விட்டு காட்டுப் பகுதிக்கு சென்றது. அங்கு ஒருநாள் மரத்தில் கரிக் குருவி அமர்ந்திருந்தது. அப்போது சிவபக்தர் ஒருவர் தன் அடியவர் கூட்டத்தினருடன் அம்மரத்தடிக்கு வந்து சிறிது ஓய்வெடுக்க அமர்ந்தார்கள். சிவபக்தர் கூட்டத்தினரை நோக்கி இறைவனைப் பற்றி பேச ஆரம்பித்தார். தலம் தீர்த்தம் மூர்த்தி என மூன்று சிறப்புகளையும் உடையது மதுரையம்பதி. அங்கு கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் தலைசிறந்தவர். அவர் தம் பக்தர்களுக்கு இம்மையிலும் மறுமையில் நற்கதி அளிப்பார். என்று மதுரையின் சிறப்பையும் சொக்கநாதரின் பெருமைகளையும் எடுத்துக் கூறினார். சிவபக்தர் கூறியதைக் கேட்ட கரிக் குருவிக்கு சொக்கநாதரை வழிபட வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. அக்கரிக் குருவி மதுரை நோக்கி பறந்தது. மதுரையை அடைந்ததும் பொற்றாமரைக் குளத்தில் நீராடியது.

மீனாட்சி அம்மனையும் சொக்கநாதரையும் மனமுருக வழிபட்டது. இவ்வாறாக மூன்று தினங்கள் கரிக்குருவி இறை வழிபாடு செய்தது. கரிக்குருவியின் செயலினைக் கண்டதும் மீனாட்சி அம்மன் இறைவனாரிடம் ஐயனே இக்கரிக் குருவி வழிபடும் காரணம் என்ன? என்று கேட்டாள். அதற்கு இறைவனார் கரிக் குருவி முற்பிறவியில் செய்த தவறினால் இப்பிறவியில் குருவியாக பிறந்தது. முற்பிறவியில் செய்த நன்மையால் இப்பிறவியில் மதுரையம்பதியையும் பொற்றாமறைக் குளத்தையும் இறைவனைப் பற்றியும் தெரிந்து கொண்டது. இத்தலத்தில் தனக்கு பிறவித் துன்பம் நீங்கும் என்று முழுமையாக நம்பிக்கையுடன் தனது வழிபாட்டை செய்து கொண்டிருக்கிறது. அதன் நம்பிக்கைக்கும் வழிபாட்டிற்கும் உரிய பலன் அதற்கு கிடைக்கும் என்று சொல்லி கரிக்குருவிக்கு ஆயுள் பலத்தையும் பிறவித் துன்பத்தையும் போக்கும் மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். ஞானம் பெற்ற கரிக்குருவியானது இறைவனை பலவாறு துதித்து வழிபட்டது. பின்னர் இறைவனாரிடம் ஐயனே எனக்கு ஓர் குறை உள்ளது. மற்ற பறவைகள் எல்லாம் என்னை துன்புறுத்துகின்றன என்றது. அதனைக் கேட்ட இறைவனார் அப்பறவைகளுக்கு எல்லாம் நீ வலிமையுள்ளவன் ஆவாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே இந்த வலிமையானது எமது மரபில் உள்ள அனைத்து பறவைகளுக்கும் கிடைக்கப் பெற்று விளங்க வேண்டும் எமக்கு உபதேசித்த மந்திரத்தை அவைகளுக்கும் ஓதி அனைத்து பறவைகளும் உய்ய அருள வேண்டும் என்று வேண்டியது. சொக்கநாதர் அவ்வாறே ஆகுக என்று கூறியருளினார். உடனே அக்குருவியும் அதன் இனமும் சொக்கநாதர் ஓதியருளிய மந்திரத்தை உச்சரித்து வலிமை பெற்றது. அதனால் அந்தப் பறவைகள் அனைத்தும் வலியன் என்னும் காரணப் பெயர் பெற்றுச் சிறப்பு பெற்றன. சில காலம் சென்ற பின் கரிக்குருவி சிவனடியை அடைந்தது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனை உணர்ந்த சான்றோர்கள் இறைவனை அடையச் சொல்லும் வழிகளை நம்பிக்கையுடன் கடைபிடித்து இறைவனை வழிபட்டு வந்தால் உறுதியாக வீடு பேறு பெறலாம் என்பதையும் தீமைகள் செய்தால் தீமைகள் வந்து சேரும் எனபதையும் நன்மை செய்தால் நன்மை கிடைக்கும் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 469

தொண்டு தர்மம் மூலம் எவ்வாறு விதியின் தன்மை தளர்த்தப்படுகிறது என்பது பற்றி அகத்திய பெருமானின் வாக்கு:

நாங்கள் சில சமயம் சில காலம் ஆகட்டும் என்பதை மனதில் வைத்து வேண்டாம் என்று கூறினாலும் அங்கே விதி முன் நின்று நடத்தி விடும். நாமத்தோன் சேயவனுக்கும் சில காலம் ஆகட்டும் என்று தான் கூறினோம். வேண்டாம் இப்பொழுது என்று கூறினோம். ஆனால் விதி அங்கே முன்னின்று நடத்தி விட்டது. இப்பொழுது இங்கே என்ன பார்க்க வேண்டும். சித்தர்கள் வேண்டாம் என்று கூறினார்கள். வேண்டவே வேண்டாம் என்கிறார்கள். சில காலம் ஆகட்டும் என்றார்கள் ஏன் நடந்தது? அப்படியானால் சித்தர்கள் வாக்கு பலிதமாகவில்லையா? ஏன் என்று ஒரு வினா வரும்? வரவேண்டும் மனிதர்கள் இங்கு புரிந்துக் கொள்ள வேண்டும். இதே இவன் வாழ்க்கை வெறும் சராசரி உலக வாழ்க்கையாக அப்படியில்லாமல் கடுகளவும் முன் ஜென்ம புண்ணியத்தால் தொண்டு வாழ்க்கையாக மாறியிருப்பதால் அப்படி ஒரு விதி வசத்தால் இப்படி ஒரு திருமணம் நடந்து அதனால் அதிக பாதிப்பு உடனடியாக வராமலிருக்கக் கூடிய வாய்ப்பை இறைவன் தந்திருக்கிறார். அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதற்குத்தான் தொண்டு தொண்டு தொண்டு தர்மம் தர்மம் தர்மம் ஆலயம் செல் என்று கூறிக்கொண்டே இருக்கின்றோம். ஏனென்றால் விதவிதமான தர்மங்கள் விதவிதமான பூஜைகள் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் ஆலயம் செல். இந்த உலகிலே உழைப்பதா? தொழில் செய்வதா? பணிக்கு செல்வதா? இல்லை சித்தர்கள் கூறுகின்ற வேலையை செய்வதா? என்றெல்லாம் எத்தனை விமர்சனங்கள் யாருக்காக கூறுகிறோம்? அவன் கர்ம வினை பாவ வினை குறைய வேண்டும் என்று தான் கூறுகின்றோம். சரி நூற்றுக்கு நூறு வாய்ப்பு இருப்பவர்கள் செய்து விடுவார்கள். வாய்ப்பில்லாதவர்கள் எப்படி செய்வது? அதற்கு தானே நாங்கள் வழி காட்டுகிறோம். செய்வதற்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது அதற்கு வேறு பணியில்லை உனக்குத்தான் இறைவன் வேறு பணி கொடுத்திருக்கிறான் அல்லவா. அப்பணியால் பணம் தனம் நன்றாக வருகிறது அல்லவா? அதை தாராளமாக கொடுத்தால் உன் சார்பாக இங்கு அதையே பணியாக செய்யக் கூடிய மனிதர்கள்சேய்கள் செய்வார்களே. இந்த சிந்தனை ஏன் யாருக்கும் இத்தனை ஆண்டுகள் வந்தும் வரவில்லை? விதி இங்குதான் விளையாடுகிறது. ஆனாலும் அதற்காக நாங்கள் இதோ எம் முன் அமரும் மனிதன் எமது பேச்சை கேட்க மாட்டான். ஒரு ஆலயம் கூட செல்லமாட்டான். ஒன்றையும் நம்ப மாட்டான். இவனுக்கு எதற்கு வாக்கு கூறுவது என்றெல்லாம் இருக்க மாட்டோம். எம்மையே இழிவாக பேசினாலும் இந்த அமைப்பையே இழிவாக பேசினாலும் நாங்கள் வாக்கை கூறிக் கொண்டு தான் இருப்போம். என்றாவது ஒருநாள் அந்த ஆத்மா மனதில் அது தைத்து நல்ல ஒரு செயலை செய்யட்டும்.

நல்லதை சொல்லிக் கொண்டே இருப்பது தான் மகான்களின் கடமை. எனவேதான் யாங்கள் கூறி ஒன்று நடந்தாலும் அது நன்மைக்கே. நடவாமல் போனாலும் அது நன்மைக்கே. இந்த தன்மை இந்த உண்மை புரிந்து கொண்டால் தான் கர்ம வினைகளை குறித்த கடுகளவு தெளிவு வரும். நாடிகளை குறித்த புரிதல் வரும். நாடி என்று இல்லை உண்மையாக கூறுகின்ற அருள்வாக்கின் தன்மையும் புரியும். இல்லையென்றால் குழப்பம்தான் மிஞ்சும். குழப்பம் வருவதோ நம்பிக்கை குறைவதோ அவரவர்கள் உரிமை தாராளமாக வாழ்ந்து விட்டு போகட்டும். ஏனென்றால் எதையும் ஆய்ந்து பார்த்து இப்படி எல்லாம் வந்தால் எப்படி ஏற்றுக் கொள்வது நம்பும்படியாக இல்லை என்று அறிவு பூர்வமாக வாதம் செய்யக் கூடியவர்கள் கடைசி வரை வாதம் செய்து கொண்டு இருக்க வேண்டியது தான். அவர்கள் விதி அவர்களை அவ்வாறு அழைத்து சென்று கொண்டே இருக்கிறது. எனவே அதுபோன்ற மனிதர்கள் அப்படி கூறிக் கொண்டே இருக்கட்டும். அதுதான் அவர்கள் விதி அவர்களை அப்படி அழைத்து செல்கிறது. எத்தனையோ தர்மங்கள் செய்தவர்கள் கூட இப்படியெல்லாம் திசை மாறி குழப்பமடைந்து தவறுதலாக பேசிக் கொண்டு செல்கிறார்களே. அவர்கள் செய்த தர்மம் ஏன் அவர்களை இந்த இடத்தில் தடுத்து நிறுத்தவில்லை? தெளிவை தரவில்லை? என்றால் சிந்திக்க வேண்டும் அந்த தர்மத்தின் பலன் அவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும். எப்படி கிடைக்கும். இந்த இடத்திலே தடுமாறும் பொழுது அவர்களுக்கு இறைவன் தந்த அறிவை பயன்படுத்தி அந்த கடுமையான பாவவினை தவறான வழியை காட்டுகிறது. யார் பேச்சையோ கேட்டு தவறாக சிந்திக்கின்றார்கள். ஒரு கணம் சிந்திக்க வேண்டும். இது போன்ற இடங்களிலே என்ன நடக்கின்றது? இங்கு நம்மிடம் தனத்தை வாங்கிக் கொண்டு இங்கு என்ன வேலை நடக்கிறது? அந்த தனமெல்லாம் என்னவாக மாறுகிறது? என்று சிந்தித்து பார்க்க வேண்டும். அப்படி தன்னுடைய தனம் முழுவதும் பலருக்கு பலவிதமான உதவிகளாக செல்லும் பொழுது அது தன்னுடைய பாவங்களையும் தன்னுடைய சாபங்களையும் குறைக்கத்தானே உதவுகிறது. அதன் மூலம் தனக்கு நன்மை தானே நடக்க இருக்கிறது. இதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் சிந்தித்து இருந்தால் நல்ல வழி கிடைக்கும்.

ஆனால் தொன்னூற்றோன்பது விழுக்காடு (99%) மனிதர்கள் குழப்பத்திலும் ஐயத்திலும் தான் இருக்கிறார்கள். அவர்கள் விதி அவ்வாறு அழைத்து செல்கிறது. ஆனால் நாங்கள் அதற்காகத்தான் பாடப்பிரிவை கூறுகிறோம். ஒரு மாணவன் பல விதமான பாடப்பிரிவுகளிலே நன்கு மதிப்பெண் எடுத்தால் தான் அடுத்தக்கட்ட கல்விக்கு தேர்ச்சி அடைய முடியும். நான் கணிதத்தில் நூற்றுக்கு நூறு விழுக்காடு வாங்கி விட்டேன். வேறு வேறு பாடப்பிரிவில் நூற்றுக்கு நூறு விழுக்காடு வாங்கி விட்டேன். ஒரேயோரு பாடப்பிரிவில் மட்டும் எதுவும் வாங்கவில்லை? என்றால் அவனை ஒத்துக் கொள்வார்களா? அதைப் போலத்தான் பூஜை செய்ய வேண்டும். புண்ணிய காரியங்களும் செய்ய வேண்டும். நல்ல விதமாக சிந்திக்க வேண்டும். நல்லதை பேச வேண்டும். யாரையும் குற்றம் குறை கூறக்கூடாது. பொய் பகரக் கூடாது. ஒருவன் சொல்லாததை சொன்னதாக இன்னொரு மனிதனிடம் சொல்லக்கூடாது. ஆனால் பல விதமான தர்மங்களை செய்து விட்டு ஒருவன் பொய் கூறுகிறான் அதனால் யாருக்கும் பாதிப்பில்லை என்றால் அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் அவன் கூறிய பொய்யை நம்பி பலரும் குழப்பம் அடைந்து தவறான வழியில் செல்லும்போது அத்தனை பேரின் பாவமும் அவனுக்கு வந்துவிடுகிறது . இவன் எதற்கு அப்படி ஒரு பொய்யை சொல்ல வேண்டும்? பல தர்மங்களை செய்த அந்த மனிதனுக்கு ஏன் இப்படியோரு பொய் சொல்ல வேண்டும் என்கிற எண்ணம் வருகிறது என்றால் இப்படித்தான் விதி விளையாடும்? வேண்டுமென்றே சிலவற்றை காட்டித்தரும். அப்பொழுதுதான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

அந்த இடத்திலே விழிப்புணர்வு இல்லாமல் போவதற்கு காரணம் என்ன? தன்முனைப்பு. தன்முனைப்பற்ற நிலையில் ஒருவன் எதை செய்தாலும் தப்பித்துக் கொள்வான். நாம் தான் தர்மம் செய்கிறோமே. கடவுள் நம்மை காப்பாற்றுவார். நம்மைப்போல் யார் தர்மம் செய்வார்? நாம் தான் அள்ளி அள்ளி தருகிறோமே? என்று எண்ணிக் கொண்டே தர்மம் செய்தால் சரியப்பா. நீ தர்மம் செய்திருக்கிறாய். அதற்குண்டானதை நீ எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு இறைவன் ஒதுங்கி விடுவார். இறைவன் ஒதுங்கிவிட்டால் இக்கட்டான அவனுடைய தசாபுத்தி காலங்கள் சரியில்லாத நேரத்தில் தவறான சிந்தனைகளும் தவறான மனிதர்கள் தொடர்பும் ஏற்பட்டு ஏனப்பா இப்படி தனத்தை எல்லாம் கொண்டு அங்கு தருகிறாய். அங்கு தராதே. அப்படி தந்தால் அந்த தனத்தை வைத்துக் கொண்டு அவர்கள் தர்மம் என்ற பெயரில் ஏதேதோ வீண் செலவு செய்கிறார்கள் என்று கூற ஒருவேளை அது உண்மையாக இருக்குமோ? என்று இவன் போதாத காலம் இவனை சிந்திக்க வைக்கும்.

இதையும் தாண்டி அடிப்படையிலே சில குழப்பங்களோடு இருக்கும் போது உண்மையை உண்மை பேச ஒரு தைரியம் இல்லாத மனிதனுக்கு உலகத்திலே எத்தனை செல்வம் இருந்தாலும் பெரிய பதவி இருந்தாலும் இறைவனின் அருள் ஒருபொழுதும் கிடைக்காது. உண்மையை சபை அறிய பேச வேண்டும். நான் இப்படியேல்லாம் சிந்திக்கிறேன். இது சரியா தவறா என்று புரியவில்லை எனக்கு விளக்கம் கொடு? என்று கூறினால் உண்மையில் இறைவன் இங்கு மட்டுமல்ல அவன் இல்லத்திலேயே யாராக இருந்தாலும் விளக்கம் தருவார். ஆனால் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுகின்ற மனிதர்களுக்கு இறைவன் எப்படி அருளுவார்? சரியப்பா உன் சிந்தனைப்படி வாழ்ந்துக்கொள். என்று அமைதியாக விட்டுவிடுவார். அதனால் தான் இறைவழியில் அறவழியில் செல்வதல்ல தன்முனைப்பு இல்லாமல் செல்ல வேண்டும். எனவே தன்முனைப்பு குறைய குறைய விதிப்படி சில விசயங்கள் நடந்தாலும் அதனால் வரக் கூடிய பாதிப்பை சற்று இறைவன் தணித்து தருவார் அதையும் மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

46. பன்றிக்குட்டிகளை மந்திரிகள் ஆகிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பன்றிக் குட்டிகளை மந்திரிகள் ஆகிய படலம் நாற்பத்தி ஆறாவது படலமாகும்.

சொக்கநாதரிடம் பால் அருந்திய பன்றிக் குட்டிகள் பன்றி முகமும் மனித உடலும் கொண்ட பன்றி குமாரர்களாக மாறினர். அவர்கள் பல கலைகளிலும் வல்லவர்களாக பன்றி மலையில் வசித்து வந்தனர். அப்போது ஒருநாள் மீனாட்சி அம்மன் சொக்கநாதரிடம் எம்பெருமானே இழிந்த பிறவியான பன்றிக் குட்டிகளுக்கு தாங்கள் பாலூட்டி அவைகளின் அறியாமையை போக்கியது ஏன்? என்று கேட்டார். அதற்கு சொக்கநாதர் உலகில் உள்ள சகல உயிர்களும் எமக்கு ஒரே தன்மையை உடையவையே. உலக உயிர்களிடம் எந்த பேதமையும் எமக்கு கிடையாது. ஆகையால்தான் எம்மை சகல ஜீவ தயாபரன் (எல்லா உயிர்களுக்கும் ஒரே தன்மையை அருளுபவன்) என்று அழைக்கின்றனர். ஆதரவின்றி தவித்த பன்றிக் குட்டிகளுக்கு பாலூட்டி அவற்றின் அறியாமையை நீக்கினோம். இனி அப்பன்றி குமாரர்களை பாண்டியனுக்கு மந்திரியாக்கி இறுதியில் அவர்களை சிவகணங்களாக்குவோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

இராசராச பாண்டியனின் கனவில் தோன்றிய சொக்கநாதர் அரசனே பன்றி மலையில் அறிவில் சிறந்த பன்னிரெண்டு பன்றி குமாரர்கள் இருக்கிறார்கள். நீ அவர்களை மந்திரியாக்கி நன்மைகளைப் பெறுவாயாக என்று கூறினார். சொக்கநாதரின் ஆணையைக் கேட்ட இராசராசபாண்டியன் விழித்து எழுந்தான். காலையில் தன்னுடைய ஆட்களை பன்றி மலைக்கு அனுப்பி பன்றி குமாரர்களை அழைத்து வரச்செய்தான். பன்றி குமாரர்களுக்கும் அரசனின் அழைப்பினை ஏற்று மதுரை வந்தனர். பின்னர் அவர்கள் மதுரையை அடையும் போது அவர்களை எதிர்கொண்டு அழைத்து பரிசுகள் பல அளித்து அவர்களை மந்திரிகளாக ஆக்கிக் கொண்டான். பழைய அமைச்சர்களின் பெண்களை அவர்களுக்கு திருமணம் செய்வித்தான். அப்பன்றி குமாரர்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து பாண்டியனுக்கு நல்லோசனைகள் கூறி நல்ல நெறிகளைச் செயல்படுத்தினர். சிலகாலம் சென்றபின் சிவலோகத்தை அடைந்து சிவகணங்களாக மாறும் பேறு பெற்றனர். இராசராச பாண்டியனும் தேவலோகம் அடைந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவன் முன் அனைத்து உயிர்களும் சமம். தகுதி பெறும் உயிர்களுக்கு உலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து இறுதியில் அருளையும் கொடுத்து தன்னிடம் அழைத்துக் கொள்கிறார் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.