வீணை இல்லாத சரஸ்வதி தேவி

கலைமகள் ஞானசரஸ்வதி தாமரை பீடம் மீது அமர்ந்த திருக்கோலம். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஞானசரஸ்வதி தனி சன்னதியில் இருக்கிறார். அர்த்த (பாதி) பத்மாசனத்தில் காட்சி தரும் இவளின் வலது கையின் ஆள்காட்டி விரல் மேல் நோக்கியபடி உள்ளது. இதற்கு சூசி முத்திரை என பெயர். கடவுளைப் பற்றி அறிவதே மேலானது என்பது இதன் பொருள். சாந்த முகத்துடன் மார்பில் பூணூல் கைகளில் ஜபமாலை கமண்டலம் சுவடி வளையல்கள் என கலை நயத்துடன் காட்சியளிக்கிறாள்.

சரஸ்வதி – பென்சைட்டென்

ஜப்பான் நாட்டு வரலாறு மற்றும் புராணங்களின்படி சூரிய குலத்தில் தோன்றிய யமாடோ வம்ச சக்கரவர்த்திகள் ஜப்பானை ஒரே நாடாக ஆட்சி புரிந்திருக்கின்றனர். அவர்கள் காலத்தில் இயற்கை வழிபாடுகள் சடங்குகள் அதிகம் நிறைந்த ஷிண்டோ மதமும் புத்த மதமும் பரவின. இந்த இரண்டு மதங்கள் இந்தியாவில் இருந்து வந்த துறவிகளால் ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன என்று அந்நாட்டு ஆன்மிக இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. ஆறாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் சரஸ்வதி வழிபாடு ஜப்பானில் பரவி இருக்கிறது.

ஜப்பானில் வணங்கப்படும் 7 அதிர்ஷ்ட தேவதைகளில் சரஸ்வதியும் ஒருவர். பென்தென் என்பது பிரம்மாவைக் குறிக்கும். பென்சைட்டென் என்ற பெயரில் சரஸ்வதி அழைக்கப்படுகிறாள். பென்சைட்டென் சக்தி மிக்க தெய்வமாகவும் ஜப்பானை காக்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறாள். ஜப்பான் நீரால் சூழப்பட்ட தீவு நாடாக உள்ளது. நாட்டைக் காப்பதற்கு நீரோடு தொடர்பு கொண்ட சரஸ்வதி துணை நிற்கிறாள். மேலும் இனிமையான குரல் அதிர்ஷ்டம் அழகு மகிழ்ச்சி ஞானம் சக்தியை அருளும் தெய்வமாகவும் அங்கு போற்றப்படுகிறாள். கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய புனித நதிகள் நமது நாட்டில் மதிக்கப்படுவதைப்போல ஜப்பானிலும் நீர்நிலைகள் குளங்கள் ஆகியவற்றை சரஸ்வதியாக பாவித்து வணங்குகிறார்கள். ஜப்பான் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது பென்சைட்டனை வணங்கிய பின்னரே புறப்படுகிறார்கள். அங்கு உள்ள பிள்ளையார் ஷோட்டன் எனவும் கருடன் கருரா எனவும் அழைக்கப்படுகிறார்கள். மேலும் வாயு வருணன் உள்ளிட்ட தேவர்களுக்கும் ஜப்பானில் சிலைகள் உள்ளன.

சரஸ்வதிதேவி விரித்திரன் என்ற பாம்பு வடிவ அசுரனை அழித்ததாக ரிக் வேதத்தில் தகவல் உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஜப்பானில் பாம்புகள் மற்றும் டிராகன் ஆகியவற்றுடன் தொடர்புடையவராக சரஸ்வதி கருதப்படுகிறார். டோக்கியோ நகரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள எனோஷிமா தீவு உட்பட ஜப்பான் முழுவதும் நூற்றுக்கணக்கான சரஸ்வதி கோவில்கள் உள்ளன. நமது நாட்டின் சரஸ்வதி கையில் வீணை வைத்திருப்பதை போலவே ஜப்பானிய பென்சைட்டெனும் தந்திகள் கொண்ட இசைக்கருவியை வைத்திருக்கிறாள். அந்த நாட்டு மக்கள் கல்வி கலைகளில் சிறக்கவும் முக்கிய தேர்வுகளில் வெற்றி பெறவும் சரஸ்வதி கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.

நவ துர்க்கை

உலகையே துன்புறுத்திக் கொண்டிருந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை எதிர்த்து நின்று அவனை அழித்த துர்கா தேவியின் சக்தியை வழிபடும் நாட்கள்தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களில் ஒவ்வொரு நாளும் துர்கா தேவியை ஒவ்வொரு அவதாரமாக வழிபடுகிறோம். தீய சக்தியை வென்ற நல்ல சக்தியின் கதைதான் நவராத்திரி அம்பாளின் வழிபாட்டைக் குறிக்கிறது. வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது. இவர்களை நவராத்திரி தினத்தில் வழிபட்டு அன்னையின் அருளை பெற்றிடுவோம்.

நவ துர்க்கை அவதாரங்கள்:

1.சைலபுத்ரி
2.பிரம்மச்சாரினி
3.சந்திரகாண்டா
4.குஷ்மந்தா
5.ஸ்கந்தமாதா
6.காத்யாயனி
7.காலராத்திரி
8.மகாகௌரி
9.சித்திதாத்ரி

  1. சைலபுத்ரி

துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. சைலபுத்ரி என்றால் மலைமகள் என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி சதி பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன. ஒன்பது சக்கரங்களில் இவள் மூலாதாரத்தில் இருப்பவள். யோகிகள் தங்களுடைய யோக சாதனைகளை இவளை வணங்கியே துவங்கி இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இவளின் வாகனம் நந்தி. ஆயுதமாக சூலத்தையும் ஏந்தி நிற்கிறாள்.

  1. பிரம்மசாரிணி

பிரம்ம என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது. இந்த துர்க்கைக்கு வாகனம் ஏதும் இல்லை. சிவ பெருமானை திருமணம் செய்யும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக கடும் தவம் புரிந்தார். இவரின் தவ உக்கிரம் மூன்று உலகங்களையும் உலுக்கியது. இறுதியில் சிவ பெருமான் பிரம்மசாரிணியைத் திருமணம் புரிந்தார். பிரம்மச்சாரிணியை வணங்குவதன் மூலம் பேரறிவு பொறுமை மற்றும் ஞானத்தைப் பெறலாம். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லவள். ஒன்பது சக்கரங்களில் இவள் சுவாதிஷ்டானத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள்.

  1. சந்திரகாண்டா

நீதியை நிலை நாட்டி சந்திர பிறையை அணிந்தவள். சந்திர என்றால் நிலவு. காண்டா என்றால் மணி என்று பொருள். சந்திர மணி அணிந்து பத்து கைகளை கொண்டு சிங்க வாகனத்துடன் அருளுகின்றார். சந்திரகாண்டா போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருகிறார். ஒன்பது சக்கரங்களில் இவள் மணிபூரக சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்கரத்தை அடைந்தோர் தெய்வீக சப்தத்தை கேட்பார்கள்.

  1. கூஷ்மாண்டா

1.கூ 2. உஷ்மா 3.ஆண்டா என்ற மூன்று சொற்கள் உள்ள பெயரின் முறையே 1. சிறிய 2. வெப்பமான 3. உருண்டை என்ற பொருள் கொண்டது. கூஷ்மாண்டா என்பவர் ஆதிசக்தி துர்கா தேவியின் படைத்தல் உருவம் ஆகும். இவர் சூரிய மண்டலத்தை இயக்குவதாகக் கூறப்படுகின்றது. இவரை வணங்குவோர் உடல் மன வலிமை பெறுவர்கள். ஒன்பது சக்கரங்களில் இவள் அனாதக சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்கரத்தை அடைந்தவர்கள் உடல் மன வலிமை பெறுவார்கள்.

  1. ஸ்கந்த மாதா

ஸ்கந்த என்றால் முருகனை குறிக்கும். மாதா என்றால் அன்னை தேவர்களின் சேனைகளுக்கு தலைவனாக இருக்கும் முருகனின் தாய் ஆவார். இவர் தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு பகைவர்களாக விளங்கிய சூரபத்மனை (தாரகாசுரனை) வதம் செய்ய முருகனுக்கு சக்தி கொடுத்தவள். நான்கு கரங்களை உடைய ஸ்கந்த மாதா இரண்டு கரங்களில் தாமரையுடனும் ஒரு கரம் பக்தர்களுக்கு ஆசி வழங்கியும் மற்றொரு கரத்தின் மடியில் குழந்தை முருகனை ஆறுமுகத்துடன் அரவணைத்து காட்சி தருகின்றாள். இவர் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக விளங்குகின்றார். இவரை வழிபடும் போது நாம் முருகனையும் சேர்த்து வணங்குகின்றோம். இதனால் இருவரின் ஆசியும் நமக்கு கிட்டுகின்றது. ஒன்பது சக்கரங்களில் இவள் விசுத்தி சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்ரத்தை அடைவோரின் மனதில் இருந்து தூய்மையில்லாத கருத்துக்கள் வெளியேறி மனமானது தூய்மையான கருத்துக்களால் நிறையும்.

  1. காத்யாயனி

முற்காலத்தில் காதா என்ற முனிவர் இருந்தார். காதா கடும் தவம் செய்து துர்க்கையை மகளாக பெற்றார். இதனால் இவளுக்கு காத்யாயனி என்ற பெயர் வந்தது. இவளுக்கு மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு. ஒன்பது சக்கரங்களில் இவள் ஆக்ஞா சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்கரத்தை அடைந்தவர்கள் முக்காலத்தையும் உணரும் தன்மையை பெறுவார்கள்.

  1. காளராத்திரி

அன்னையின் ஒன்பது ரூபங்களில் மிக பயங்கரமான ரூபம் இந்த காளராத்திரி எனும் காளி ரூபம். காள என்றால் நேரத்தையும் மரணத்தையும் குறிக்கும். ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும். இந்த துர்க்கை வடிவம் எதிரிக்கும் அச்சத்தைத் தரக் கூடியது. இவளின் நான்கு கைகளின் ஒன்றில் கரத்தில் வஜ்ராயுதமும் மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருவதாக உள்ளது. இந்த அன்னைக்கு கழுதை வாகனமாக உள்ளது. இவளின் பார்வை பட்டாலே துன்பமும் பாவமும் தொலைந்திடும். ஒன்பது சக்கரங்களில் இவள் சகஸ்ரதள சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்கரத்தை அடைந்தவர்களின் மாயை விலகும். இறை காட்சியை காண்பார்கள். தனக்குள்ளே இறைவனை உணர்வார்கள்.

  1. மகாகௌரி

மகா என்றால் பெரிய என்றும் கௌரி என்றால் தூய்மையானவள் என்றும் பொருள்படும். இவள் பால் போல் வெண்மையாகக் காட்சி தருகின்றாள். முற்காலத்தில் மகாகௌரி ஈசனை மணம் செய்து கொள்ள வேண்டி கடுமையாக தவத்தை மேற்கொண்டார். அப்போது அவரின் உடலை மண் சூழ்ந்து கருமையாக்கியது. இவளது தவத்தின் பலனால் சிவன் இவரை மணந்து கொள்வதாக கூறினார். அதற்கு முன் இவளை கங்கை நீரில் நீராட இறைவன் பணித்தார். இறைவனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கங்கையில் நீராடிய தேவியின் உடல் பால் போன்று வெண்மையாக மாறியதால் இவள் மகாகௌரி என அழைக்கப்படுகிறார். நான்கு கரம் கொண்ட மகாகௌரி ஒரு கரத்தில் சூலம் மறு கரத்தில் மணியையும் தங்கி நிற்கிறாள். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருகிறார். இவருக்கு வெண்மையான காளை வாகனமாக இருக்கின்றது. யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கி பிறவியில்லாத நிலையை அடைவார்கள்.

  1. சித்திதாத்ரி

சித்தி என்றால் சக்தி என்றும் தாத்ரி என்றாள் அருள்பவள் அருள்பவள் என்று பொருள். மார்கண்டேய புராணத்தில் பக்தர்களுக்கு அன்னை அருளிய எட்டு விதமான சித்திகளான சித்திகள் அணிமா மகிமா கரிமா லஹிமா ப்ராப்தி பிரகாமியம் வாசித்வம் ஈசத்வம் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சித்திதாத்ரி நான்கு கரங்களில் இடது கரத்தில் கதை சக்கரத்துடனும் வலக் கரத்தில் தாமரை சங்கு ஏந்தியும் அருள்பவள். சித்திதாத்ரியின் வாகனம் சிங்கம். இவள் சிவ பெருமானே வழிபாடு செய்து அனைத்து சித்திகளையும் பெற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என தேவி புராணம் கூறுகிறது. மோட்சத்தை அருளக் கூடிய சித்திதாத்ரி தேவியை எந்நேரமும் தேவர் முனிவர் யட்சர் கிங்கரர் வழிபடுவார்கள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் அட்டமா சித்திகளை பெறுவார்கள்.

ஒப்பில்லாமுலையம்மை

திருவாவடுதுறை கோமூக்தீஸ்வரர் ஒப்பில்லா முலையம்மை கோயிலில் 15.08.2023 ஆடி மாத கடைசெவ்வாயை முன்னிட்டு அம்பாளுக்கு சகஸ்ர நாம அர்ச்சனையும் நெய்குள தரிசனமும் மகா தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது.

சீதளாதேவி அம்பாள்

தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள் தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன் தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால் தேவர்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் உடலில் அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன. தேவலோக வைத்தியர்களான அஸ்வினி தேவர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை. எனவே சிவபெருமானை சரணடைந்து தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துன்பத்தைப் போக்க சிவன் தனது ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும் கங்கையிடமிருந்தும் பேரொளியை தோற்றுவித்தார்.

பார்வதியின் அம்சமாக தோன்றிய அந்த ஒளி சீதளாம்பிகை என்று பெயர் பெற்று அம்பாளாக வடிவெடுத்தது. அந்த அம்பாளின் சிரசு முறத்தினாலும் கையில் குடம் மற்றும் துடைப்பத்துடன் கழுதை வாகனத்தில் காட்சி கொடுத்தாள். இந்த தேவியை வழிபடுவதற்காக சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக் கொடுத்தார் சிவன். சீதளாஷ்டகம் எனப்படும் இந்த மந்திரத்தைக் கூறி அம்பாளை வழிபட்டால் வெப்ப நோய் தீரும் என அருள்பாலித்தார். சீதளா என்றால் சமஸ்கிருதத்தில் குளிர்விப்பவர் என்று பொருள். தேவர்களும் அதுபோல் மந்திரத்தை சொல்லி சீதளாதேவியை வழிபட்டு தங்களின் துன்பத்தை போக்கிக் கொண்டார்கள். லலிதா சகஸ்ர நாமத்தில் அம்பாளின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி வணங்கும் போது சீதளாயை நமஹ என்ற பெயரும் வருகிறது. கழுதை என்பது அனாயசமாக பெரும் பொதியை சுமக்க வல்லது. அதுபோல் தன்னிடம் சரணடைபவர்களின் சுமையை தனதாகக் கருதி விரும்பி ஏற்கிறாள் அன்னை என்பதை அந்த வாகனம் உணர்த்துகிறது.

ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள சக்ஷூ (CHAKSHU) என்ற கிராமம் மற்றும் ராஜஸ்தான் குஜராத் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பாலைவனப் பகுதியிலும் வெப்பம் அதிகமாக தாக்கும் பகுதியிலும் கோடை துவங்கும் காலத்தில் சீதளாதேவிக்கு மிகவும் விமரிசையாகக் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. கோடை காலத்தில் வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும். அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை வழிபடுவார்கள். தமிழகத்தில் ரூபங்களில் சில வேற்றுமைகளுடன் சீதளாதேவிக்கு மாரியம்மன் என்ற பெயரில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. இங்கும் கோடை காலங்களில் வெப்பத்தினால் வரும் நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அதிகமாக திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.

தவ்வை என்னும் ஜேஷ்டாதேவி

ஜேஷ்டா தேவி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு தவ்வை மூதேவி அலட்சுமி, சேட்டை, காக்கைக் கொடியோள் பழையோள் கரியசேட்டை கேட்டை மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு. இவள் 14 பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இவர் விஷ்ணுவின் மனைவியும் லட்சுமிதேவியின் மூத்த சகோதரி ஆவார். மூதேவி என்றால் மூத்த தேவி என்று பொருள். சைவ வைணவப் புராணங்களில் திருமால் பாற்கடலைக் கடைந்த போது திருமகளுக்கு முன்பாக தோன்றியவள் மூதேவி என்று சொல்லப்பட்டுள்ளது. தவ்வையின் காக்கையை தனது கொடியாக கொண்டிருக்கிறாள். வாகனம் கழுதை. அவளின் கையில் துடைப்பம் உள்ளது. தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பல காலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆய்வாளர்கள் தாய் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை திகழ்கிறாள்.

பிரதி தவ்வை என்ற பெயரில் இவரை தமிழ் நூல்கள் குறிப்படுகின்றன. திருவள்ளுவர் ஔவையார் போன்றோர் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஏழாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கிடையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் தொண்டரடிப் பொடியாழ்வார் தன் திருவாய்மொழியில்

கேட்டிரே நம்பிமீர்காள் கெருட வாகனனும் நிற்க
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே

திருமால் இருக்க சேட்டை என்று அழைக்கபடுகின்ற தவ்வையிடம் செல்வத்தை எதிர்பார்க்கிறீர்களே என்று இகழ்ந்து பாடுகிறார். இப்பாடலில் இருந்து தவ்வையிடமே அக்காலத்தில் செல்வத்தை வேண்டி வழிபட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. சமஸ்கிருதத்தில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கின்றனர். மூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் வசைச்சொல். செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பதமாக மூதேவி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அமங்கலமானவள் எதற்கும் உதவாதவள் சோம்பேறி என்றெல்லாம் அந்த வார்த்தைக்குப் பொருள்பட ஒரு தவறான கருத்து இருக்கிறது. பண்டைய தமிழர்கள் தவ்வையின் தோற்றத்தை அறிவு சார்ந்து உருவாக்கியிருந்தனர். ஆனால் நாளடைவில் தோற்றத்தை மட்டும் வைத்து தவ்வையை அமங்கலத்தின் அடையாளமாகவும் இழிவாகவும் ஆக்கிவிட்டனர். தவ்வையைப் பார்ப்பது அமங்கலம் என்ற தவறான எண்ணத்தில் உத்திரமேரூரில் உள்ள தவ்வை சிற்பத்தை தரையை நோக்கி சாத்தி வைத்து விட்டனர். இப்படி அவச்சொல்லுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் மூதேவிதான் நம் முன்னோரின் பிரதான தெய்வமாக இருந்திருக்கிறாள். மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டிருக்கிறாள்.

இயற்கையிலிருந்து நமது வழிபாடு தொடங்குகிறது. மரங்களை வழிபடும் மரபுக்கு கந்தழி என்று பெயர். தங்களைக் காப்பாற்றுவதற்காக யுத்த களத்திற்குச் சென்று உயிரிழக்கும் வீரர்கள் தலைவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு அதைக் கடவுளாக வழிபடுவார்கள். அதற்கு நடுகல் வழிபாடு என்று பெயர். இவை அனைத்தையும் விட மேலானது பெண் தெய்வ வழிபாடு. மாரி தெய்வமாக மழையையும் நீர் மகளிராக நதிகளையும் தாய் தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது மரபு. கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. தவ்வை என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள். நம் முது தந்தையரை எப்படி மூதாதையர் என்று அழைக்கிறோமோ அப்படித்தான் மூத்த தேவிக்கு மூதேவி என்ற பெயர் வந்தது. அக்காவைக் குறிக்கும் சொல்லான அக்கை என்கிற வார்த்தை எப்படி தமக்கை ஆனதோ அதேபோல் அவ்வை என்ற வார்த்தை தவ்வை ஆகியிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். அப்படியெனில் தவ்வை யாருக்கு அக்கா? செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் திருமகளுக்கு. நெற்கதிர்களின் அடையாளம் திருமகள். நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம். இங்கே உரத்தின் அடையாளமாக உரமாக திகழ்பவள்தான் தவ்வை. அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாரிகுமரியில் கிடைத்த தவ்வைச் சிற்பங்களே அதற்குச் சான்று.

தவ்வை பற்றி திருக்குறளில் குறிப்பு இருக்கிறது. அதேபோல் தொண்டை நாட்டுச் சிற்றரசனான பார்த்திபேந்திர வர்மன் சேட்டையார் கோயிலுக்கு மானியமாக 1148 குழி நிலம் வழங்கியதாக உத்திரமேரூர் கல்வெட்டில் சான்றுகள் உள்ளன. சேட்டை மூதேவியின் மற்றொரு பெயர். பேரங்கியூர் தென் சிறுவலூர் ஆகிய இடங்களில் கிபி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. தவ்வைக்குத் தனியாகக் கோயில்களும் இருந்திருக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைக் கோயில் ஒன்று 2010 ஆம் ஆண்டு பழநியில் கண்டு பிடிக்கப்பட்டது. கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. இதற்கு ஆதாரமாகப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன. தவ்வையின் சிலை எவ்வித சிற்ப இலக்கணங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கு காரணாகமம் சுப்பிரபேதாகமம் போன்ற ஆகமங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் எல்லாம் செழித்த மார்புடனும் பருத்த வயிற்றுடனுமே காணப்படுகின்றன. இதுவே அவள் வளமை தெய்வம் என்பதற்கான சான்று.

பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8 ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது. அழுக்கு நாற்றம் துன்பம் புலம்பல் அடிக்கடி கொட்டாவி விடுதல் தலைவிரித்து போடுதல் எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல் அலங்கோலமாக இருத்தல் எதிர்மறையான எண்ணங்கள் தீராத மனக்கஷ்டம் இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மிடம் குடி புகுந்துவிடும். தவ்வை என்னும் ஜேஷ்டாதேவியை வழிபட்டால் இவை அனைத்தும் நீங்கி விடும்.

வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் ஜேஸ்டா (தவ்வை) தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல் வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப் படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. சப்த மாதா வழிபாட்டிலும் ஜேஸ்டா தேவிக்கு (தவ்வை) இடம் உண்டு. வடநாட்டு தாந்திரீக சாக்த மரபுகளிலும் தவ்வை சக்தியின் பத்து வடிவங்களில் ஒன்றான தூமாதேவியாகப் போற்றி வழிபடப்படுகிறாள். தூமாதேவிக்கு காஷ்மீரில் தூம்ராகாளி என்ற பெயரில் தவ்வைக்குக் கோயில் ஒன்று உள்ளது. இந்தியா முழுவதும் தவ்வைக்குச் சிறு சிறு சிலைகள் கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலைகளும் கோயில்களும் உள்ளன. தவ்வைக்கு வாராணாசியிலும் அஸ்சாமின் கௌஹாத்தியிலுள்ள காமாக்யாவிலும் கோயில் அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ள நீலாத்ரி மலையில் நீளா தேவிக்கு கோயில் அமைந்துள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள கமலமுனி சித்தர் பீடம் நுழைவு வாயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை அமைந்துள்ளது. மயிலாடுதுறை வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்ததேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலும் அச்சிற்பத்தை தென்மேற்கு மூலையில் வைத்துள்ளனர். திருக்கொண்டீச்வரம் பசுபதீஸ்வரர் கோவிலில் ஜேஷ்டா தேவி இடம் பெற்றுள்ளாள். இத்தலத்தில் இவள் ஒரு அனுக்கிரக தேவதையாக அருள்பாலிக்கிறார்.

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு. பல்லவன் இராச சிம்மன் கட்டிய காஞ்சி கயிலாசநாதர் கோயிலிலும் கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மங்களாம்பிகை சன்னிதிக்கு வடமேற்கேயும் வெடால் ஆண்டவர் திருக்கோயில் தென் புறத்திலும் சேஷ்டாதேவியின் திருவுருவம் நல்ல கட்டமைப்புடன் கூடிய இடத்தில் உள்ளது. திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் (மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சிவபெருமானுக்கு இப்பெயர்) கோவிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. ஓரையூர் சிவன் கோயில் கடலூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனநாதர் கோயில் திருச்சுற்றில் உள்ளது. சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோயில் திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் ஸ்ரீ மகாலட்சுமி சன்னதிக்கு அருகே தனிக்கல்லாக வைக்கப்பட்டுள்ளது. மோகனூர் அசலதீபேசுவரர் கோயில் சுற்றுசுவரில் பதியப்பட்டுள்ளது. திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில் திருச்சுற்றில் உள்ளது. சிறீராமசமுத்திரம் வாலீசுவரர் கோயில் கோயிலுக்கு வெளியே பிள்ளையார் நவக்கிரக சன்னதி அருகே உள்ளது.

யோகினி கோயில்

யோகினி கோயில் அல்லது சௌசதி யோகினி கோயில் என்று அழைக்கப்படும் இக்கோவில் ஓரிசா மாநிலத்தின் கோர்த்தா மாவட்டத்தின் ஹிராப்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழைமையான சாக்த சமயக் கோயில் ஆகும். இக்கோயிலில் காளி பிரதான தெய்வமாக இருக்கிறாள். இக்கோயிலின் உட்புறச் சுவரில் 64 கலைகள் 64 நோய்களுக்கு காரணமாக 64 யோகினி தேவதைகளின் சிற்பங்கள் உள்ளதால் இக்கோயிலை 64 யோகினி கோயில் என்றும் அழைப்பார்கள். இந்த யோகினி பெண் தெய்வங்களின் பெயர்கள் அவற்றின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோவில் கிபி 9ம் நூற்றாண்டில் கலிங்க இராணி ஹிராவதியால் கட்டப்பட்டது.

யோகினி கோயில் மணற்கல்லால் கட்டப்பட்டுள்ளது. யோனி அமைப்பில் வட்ட வடிவில் இக்கோயிலின் கட்டிட அமைப்பு உள்ளது. கோயிலின் மூலவரான காளி தேவி அரக்கனின் உடல் மீது ஏறி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் ஏகபாத மூர்த்தி பார்வதி பிள்ளையார் ரதி சாமுண்டி பைரவர் கிருஷ்ணர் சிற்பங்கள் உள்ளது. கோயிலின் உட்புறச் சுவர்களில் 64 யோகினி தேவதைகளின் கருங்கல் சிற்பங்கள் உள்ளது. இக்கோயில் சூரிய ஒளி படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் துவாரபாலகர் வடிவங்கள் உள்ளன. வெளிச்சுவரில் ஒன்பது காத்யாயினி வடிவங்கள் உள்ளன. கோயிலின் மையப்பகுதியில் உள்ள மண்டபம் சண்டி மண்டபம் எனப்படுகிறது. இக்கோவிலில் சாக்த சமய தாந்திரீகர்கள் தாந்திரீகச் சடங்குகள் செய்து வழிபட்டுள்ளனர். தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை நிர்வகித்து பராமரிக்கிறது.

செண்பகாதேவி அம்மன் கோவில்

செண்பகாதேவி அம்மன் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. செண்பகாதேவி அம்மன் கோயில் பெருமையை குற்றால ஸ்தல புராணத்தில் சிறப்பாக பாடப்பட்டுள்ளது. இங்கு நாகம் மற்றும் புற்று அமைந்துள்ளது. செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலை சுற்றி விநாயகர் அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களின் சிலை மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட நந்தி சிவலிங்கம் போன்றவையும் உள்ளது. செண்பகாதேவி அம்மன் பெயரிலேயே இங்குள்ள அருவி செண்பகாதேவி அருவி எனப் பெயர் பெற்றது. அகத்திய மாமுனிவர் செண்பகாதேவி அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளார்.

இந்த ஆலயத்தில் கருவறை அர்த்தமண்டபம் மகா மண்டபம் என்ற அமைப்புகளுடன் உள்ளது. இங்கு லட்சுமி சரஸ்வதி தேவியருடன் இணைந்து செண்பகாதேவி அம்மன் கருவறையில் காட்சியளிக்கின்றனர். அம்மனுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று திருவிழா சிறப்பாக நடைபெறும். திருவிழா நேரத்தில் சில ஆண்டுகள் முன்பு வரை ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியன்று மழை பெய்யும். செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலில் பௌர்ணமி பொழுது மட்டும் அதுவும் மதியம் வரை மட்டுமே தற்போது மக்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். மற்ற நேரங்களில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது.

துர்காதேவி மகிஷாசுரமர்த்தினி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் வாஸ்து சங்க்ரஹாலயா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள துர்காதேவி மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம்