தெய்வங்கள் பேசும் ஆலயம்

பிஹாரில் இருக்கும் பஸ்தார் என்னும் இடத்தில் அமைந்துள்ளது ராஜராஜேஸ்வரி திருபுரசுந்தரி ஆலயம். இங்கு மூலஸ்தானத்தில் துர்காதேவி வீற்றிருக்கிறாள். இக்கோவிலில் இரவில் தெய்வங்கள் ஒன்று கூடி பேசிக் கொள்வது போல் சப்தம் கேட்பது அவ்வூர் மக்களுக்கு மர்மமான விஷயமாக இன்று வரை இருந்து வருகிறது. நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் தாந்திரிக் பவானி மிஸ்ரா என்பவரால் நிறுவப்பட்டது. அவர் அக்காலத்திலேயே தாந்திரீகம் மற்றும் வேத முறைப்படி எழுப்பிய இந்த கோவிலில் நிறைய தாந்திரீகர்கள் மற்றும் வேத சாஸ்திரம் பயின்றவர்கள் வருகை தருகின்றனர்.

இக்கோவிலில் 1. திரிபுரா பைரவி 2. துமாவதி 3. பகுளாமுகி 4. தாரா 5. காளி சின்னமஸ்தா 6.ஷோடசி 7. மாதங்கி 8. கமலா 9.உக்ரதாரா 10, புவனேஸ்வரி ஆகிய பத்து மகாவித்யாக்களின் சிலைகள் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இது தவிர 1. பங்களாமுகி மாதா 2. தத்தாத்ரேய பைரவ் 3. படுக் பைரவ் 4. அன்னபூர்ண பைரவ் 5. கால பைரவ் 6. மாதங்கி பைரவ் ஆகிய பைரவர்களின் சிலைகளும் இங்கு நிறுவப்பட்டுள்ளன.

இக்கோவிலில் இரவு வேளை பூஜை முடிந்ததும் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது போன்ற சப்தம் மதில் சுவர் வாயிலாக கேட்கப்படுகிறது. இது மிகவும் ஆச்சரியப்படும் வகையில் உள்ளதால் இக்கோவில் மக்களிடையே பிரபலமானது. இதனை ஆராய்ச்சி செய்வதற்கு வந்த விஞ்ஞானிகள் குழு ஒரு நாள் இரவு முழுவதும் அங்கு தங்கி இருந்தனர். வழக்கமாக இரவு நேரத்தில் இங்கே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவதில்லை. இரவில் கோவிலின் மதில் சுவரில் எதிரொலித்த வண்ணம் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை போல் சப்தங்கள் கேட்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சப்தம் மனிதர்கள் பேசுவதை போலவே எதிரொலித்தது. ஆனால் நிச்சயமாக அது இந்த கோவிலின் வெளியில் இருந்து வரவில்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

மூன்று மார்பகங்கள் கொண்ட மீனாட்சி அம்மன்

சிவப் புராணத்தில் உள்ளபடி மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னன் மலையத்துவசன் காஞ்சனமாலை தம்பதியர் வேள்வி செய்து பெற்ற தவப்புதல்வி ஆவாள். இவளே சுந்தரேஸ்வரரின் மனைவியும் ஆவாள். மீனாட்சி அம்மனை தடாதகை பிராட்டி எனவும் அழைக்கப்பட்டதாக சில கூற்றுகள் இருக்கின்றன. பிறப்பில் மீனாட்சி அம்மனுக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன. தன்னை திருமணம் செய்துக் கொள்ள போகும் மணவாளனை பார்த்த பிறகு தனது மூன்றாவது மார்பகம் மறைந்து போகும் எனும் நிலை கொண்டிருந்தார். கயிலை மலையில் சிவனை கண்ட பிறகு மீனாட்சி அம்மனின் மூன்றாவது மார்பான நடுமார்பு மறைந்தது என சிவப்புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. மீனாட்சி அம்மன் மிகுந்த வீரம் கொண்ட பெண்ணாக இருந்துள்ளார். தனது தந்தை இறந்த பிறகு பாண்டிய நாட்டிலிருந்து படையுடன் கிளம்பி கயிலை மலை வரை சென்று வென்று வந்தார் என திருவிளையாடல் புராணம் கூறுகிறது. கயிலை மலையில் சிவனை கண்டு வெட்கம் கொண்ட பெண் நிலையை மீனாட்சி அம்மன் அடைந்த பிறகு மூன்றாவது மார்பான நடுமார்பு மறைந்தது. சிவனையே சுந்தரேசுவரராக திருமணம் செய்து கொண்டார். இன்றளவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதலில் மீனாட்சி அம்மனுக்கு பூஜைகள் நடந்த பிறகே சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள் நடைப் பெற்று வருகின்றன.

சீரணி நாகபூசணி அம்மன்

சீரணி நாகபூசணி அம்மன் கோயில் யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் தென்மேற்குப் பிரிவில் சண்டிலிப்பாய் என்ற ஊரில் உள்ள சீரணியில் அமைந்துள்ளது. தம்மை வழிபட்டுப் பூசித்த நாகம் ஒன்றைத் தன்னுடைய திருமேனியில் ஆபரணமாய் பூண்ட காரணத்தால் இத்தேவியும் நாகபூஷணியம்மை என்று அழைக்கப்படுகிறாள்.

சீரணி நாகபூசணி கோவில் உள்ள இந்த இடத்தில் அக்காலத்தில் சாத்திரம் தெரிந்த சாத்திரியார் சண்முகம் பொன்னம்பலம் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஓர் நாகபூஷணியம்மை இயந்திரம் வைத்துப் பூசை செய்து சாத்திரம் சொல்லி வந்தார். அவருடன் இராமுத்தர் என்னும் ஒருவர் வசித்து வந்தார். சண்முகம் பொன்னம்பலம் இயந்திரத்தைச் சரிவரப் பூசிக்காமையால் அவர் வீட்டிற் சில துர் சகுனங்கள் நிகழ்ந்தன. அவை இராமுத்தர்க்கு பிடிக்காத காரணத்தினாலும் இயந்திரம் இரவில் கலகலப்பான பேரொலி செய்தமையாலும் அதனை அப்புறப்படுத்த நினைத்தார் இராமுத்தர். ஒருநாள் இராமுத்தர் நன்றாய் மதுபானம் அருந்தி விட்டுக் குறித்த இயந்திரத்தையும் அத்துடனிருந்த பொருட்களையும் பெட்டியுடன் எடுத்துச் சென்று வீட்டின் அருகாமையிலுள்ள ஓர் இடத்தில் போட்டுச் சென்று விட்டார். நாகபூஷணி அம்மன் இங்குள்ள அன்பர்கள் பலரின் கனவிற் தோன்றி நான் நயினை நாகபூஷணி எனக்கு கோவில் கட்டுங்கள் என்று காட்சியளித்தாள். பலர் நாங்கள் வறியவர்கள் தாயே எங்களால் எவ்வாறு இயலும் என அன்பர்கள் கூறி வருந்தினார்கள்.

சீரணி நாகபூசணி அம்மன் பக்தனாகிய முருகேசபிள்ளை என்பவரின் கனவிலே பல முறை வெளிப்பட்டு தன் திருவருள் தன்மைகளைக் காட்டியருளினாள். ஒரு முறை ஓரிடத்தைக் குறிப்பிட்டு இவ்விடத்திலே எம்மை வைத்து வழிபட்டு வருவாயாக என அம்மை அருளிச் செய்தாள். அவர் தமது நிலைமையை எண்ணி அஞ்சி தன் கனவில் வருவதை பிறருக்குச் சொல்லாமல் தம்முள்ளே வழிபட்டு வந்தார். 1896 ம் ஆண்டு விளம்பி வருடம் சித்திரை மாதப் பெளர்ணமி தினத்தன்று இரவு தேவி கனவிலே வெளிப்பட்டு உனக்குச் சொன்னவைகளை நீ உண்மை என்று நம்பினாய். அதன் உண்மையை உனக்கு இப்பொழுது காட்டுவோம். அதோ தோன்றுகின்ற தென்னை மரத்திலே சில இளநீர் பறித்து வந்து தா என்று கூறியருளினாள். அன்பருக்கு அது ஒரு முதிர்ந்த வறண்ட பட்டு போன மரமாகத் தோன்றியது. அதையுணர்ந்த அவர் அதில் இளநீர் குரும்பைகள் இல்லையே தாயே. இல்லாத இளநீரை நான் எப்படி தருவது என்றார். அதற்கு அன்னை நீ மரத்தின் அருகிலே சென்று பார். தேவையானது தோன்றும் என அருளினாள். அவ்வாறே அவர் சென்று பார்த்தார். தொங்கும் இளநீர்க் குலைகளைக் கண்டு வியப்பும் அச்சமுங் கொண்டவராய்ச் சில இளநீரைப் பறித்துக் கொண்டு வந்து கொடுத்தார். அம்மனும் அதிக தாகமுடையார் போலப் பருகினாள். பின்னர் அவரை நோக்கி அன்பனே இந்த இடத்தைத் தோண்டிப்பார் இங்கு ஒரு சிலை தோன்றும். அதனையே மூலமாக வைத்து ஒரு கொட்டகை அமைத்து வழிபடுவாயாக. சில காலத்திற்கு பிறகு பல திசைகளிலுமிருந்து அடியார்கள் வந்து வழிபட்டு விரும்பிய சித்திகளை எல்லாம் அடைவார்கள். வேண்டிய திரவியங்களை எல்லாம் காணிக்கையாக கொடுத்து வழிபடுவார்கள். அவற்றைக் கொண்டு திருப்பணிகளைச் செய்யத் தொடங்கு. கோவில் பூர்த்தியாகுவதற்கு யாம் அருள் செய்வோம் வேலையை தொடங்கு தொண்டர்கள் வருவார்கள். செல்வம் செழிக்கும் நாடு நலம்பெறும் வாழ்வு வளம் பெறும் என்றாள். மேலும் உனது மனம் புனிதமாகும் வகையில் ஒரு மந்திரமும் உபதேசம் செய்வோம் என சொல்லி விட்டு மறைந்தாள்.

சீரணி நாகபூசணி அம்மன் கனவில் குறிப்பிட்ட இடத்தை மறுநாள் காலையில் தொண்டிப் பார்த்தார். அங்கு ஒரு சிலை காணப்பட்டது. அதனைக் கண்டு பரவசப்பட்டவராய் ஒரு மண்டபம் அமைத்தார். 1896ம் ஆண்டு ஆடிமாதம் திங்கட்கிழமையும் அமாவாசையுங் கூடிய புண்ணியதினத்திலே பூஜையை தொடங்கி காலம் தவறாமல் பூஜித்து செய்து வந்தார். நான்கு திசைகளிள் இருந்தும் அடியார்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து நாகபூஷணியம்மையை வழிபட்டார்கள். இவ்வரலாறு குறித்தும் குட்டம் காசம் ஈளை முதலான கன்ம நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தை அடைந்து தேவியை வழிபட்டு தங்களது நோய்கள் தீர்த்துக் கொண்டார்கள். நாக சாபத்தினாலே நீண்டகாலம் பிள்ளைப் பேறில்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபாடுகள் செய்து பிள்ளைச் செல்வம் பெற்றார்கள். மேலும் அம்பாளின் அருட்செயல்கள் பற்றிப் பல கர்ண பரம்பரையான கதைகள் காலங்கண்ட முதியோர்களினாலே கூறப்படுகின்றன. சீரணி நாகபூஷணி அம்மன் தேவஸ்தானத்தின் திருப்பணிகளை நடத்தும் பொருட்டு 1962 அக்டோபர் 10 இல் திருப்பணிச் சபையொன்று அமைக்கப்பட்டு பல இடங்களிலும் நிதி திரட்டி தொண்டுகளைச் செய்து வருகின்றனர்.

சீரணி நாகபூசணி அம்மன் கோவில் கோபுரம் 1935 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்குள்ள அழகிய தேர் 1957 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இத்தேர் நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகளைக் கொண்ட அழகிய தேராகக் காணப்படுகின்றது. 1951 1965 1983 ஆம் ஆண்டுகளில் புனரா வர்த்தன கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது. தேவி வழிபாட்டுக்கு யாழ்ப்பாண நாட்டின் இரு கண்களாக விளங்குவது நயினை நாகபூஷணியம்மை மற்றும் சீரணி நாகபூஷணியம்மை ஆலயங்களாகும்.

காளிகாம்பாள் கோயில்

காளி அம்பாள் எப்போதும் கையில் தமருகம் சூலம் கட்கம் கபாலம் கேடகம் முதலிய ஆயுதங்கள் கொண்டு கோப ரூபத்துடன் காட்சியளிப்பவள். ஆனால் இக்கோயிலில் குடிகொண்டுள்ள அன்னை காளிகாம்பாள் வடிவம் எழில் கொஞ்சும் திருமேனியுடன் ஆணவத்தை அடக்கும் அங்குசம் ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம் சுகபோகத்தினை நல்கும் நீலோத்பல மலர் மற்றும் வரத முத்திரை சோமன் சூரியன் அக்னி என்ற மூன்று கண்கள் நவரத்ன மணிமகுடத்துடன் வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலத்துடன் காணப்படுகிறாள். காளிகாம்பாள் மகாலட்சுமியையும் சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும். காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். திருவடியில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சக்கரம் அர்த்த மேருவாக அமைந்துள்ளது. காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம் காஞ்சிபுரத்து காமாட்சி அம்மனாகும். சிவபெருமான் கமடேஸ்வரர் என்ற பெயரில் காட்சி தருகிறார். இத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது. உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர் நவக்கிரகங்கள் வள்ளி தெய்வானையுடன் முருகர் ஸ்ரீவீரபகாமங்கர் அவர் சீடர் சித்தையா. கமடேஸ்வரர் துர்கா சண்டிமகேஸ்வரர் பைரவர் பிரம்மா சூரிய சந்திரர்கள் உள்ளனர். வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர் கொடி மரம் வடகதிர்காம முருகன் சித்தி புத்தி விநாயகர் காயத்ரி துர்கா யாகசாலை நடராசர் மகாமேரு வீரபத்திர மகா காளியம்மன் நாகேந்திரர் விஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன. மேற்கு நோக்கிய நிலையில் ஆஞ்சநேயர் உள்ளார். இத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல் குண வாயில் என்றும் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் குட வாயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தல விருட்சமாக மாமரம் உள்ளது. வடமேற்குப் பகுதியில் சித்திபுத்தி விநாயகரும் அகோர வீரபத்திரசாமியும் மாகாளியும் வடகதிர்காம முருகனும் உள்ளனர்.

காளிகாம்பாள் கோயில் ஆரம்பத்தில் கடற்கரைப் பகுதியில் இப்போதைய புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பே இருந்தது. காளிகாம்பாள் ஆலயம் சுமார் 3000 ஆண்டு பழமையானது. இதனால் கோட்டையம்மன் என்றும் செந்தூரம் சாத்தி வழிபட்டதால் சென்னியம்மன் என்றும் அம்பாள் அழைக்கப்பட்டாள். இதிலிருந்தே சென்னை என்கிற பெயர் வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கிறது. பின்னர் 1640ம் வருடம் புனித ஜார்ஜ் கோட்டை கட்டத் தொடங்கியதும் கோவிலை அகற்ற அப்போதைய ஆங்கிலேயர்கள் முடிவு செய்தார்கள். உடனே முத்துமாரி ஆச்சாரி என்பவர் இப்போதுள்ள தம்புச் செட்டித் தெருவில் காளிகாம்பாள் கோயிலை நிர்மாணித்தார். ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் 1952 ம் ஆண்டு இந்த வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து உள்ளம் உருகுதடா என்ற பாடலை பாடினார். இதுவே பின்னாளில் உள்ளம் உருகுதைய்யா என டி.எம்.எஸ் குரலில் தமிழகம் முழுவதும் ஒலித்தது. கோயில் கோபுரம் 1983ல் கட்டி முடிக்கப்பட்டது.

தெற்கு நோக்கி படையெடுத்து வந்த மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி 3 அக்டோபர் 1677ம் வருடம் இந்தக் கோயிலில் வழிபட்டுள்ளார். இதற்கான குறிப்பு இக்கோவில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் வேலை பார்த்த போது தினமும் காளிகாம்பாளை வந்து வணங்குவார். யாதுமாகி நின்றாய் காளி என்ற பாடலை அவர் காளிகாம்பாளை மனதில் நினைத்தே எழுதினார். மச்ச புராணம் வாமன புராணம் கூர்ம புராணம் லிங்க புராணம் பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் இந்த கோவில் பற்றி குறிப்புகள் உள்ளது. புராணங்களில் இத்தலம் சொர்ணபுரி பரதபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் பூந்தேர் கிண்ணித்தேர் வெள்ளித் தேர் என்று மூன்று வகையான தேர்கள் உள்ளன. இந்த கோவிலில் உள்ளது போன்று இந்தியாவில் வேறு எங்கும் எந்த தலத்திலும் கிண்ணித் தேர் இல்லை. பாரதியார் பன்றிமலை சுவாமிகள் காயத்ரி சுவாமிகள் தவத்திரு ராமதாசர் உள்பட பல மகான்கள் ஆன்மீகப் பெரியோர்கள் காளிகாம்பாளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். காளிகாம்பாள் அருள்புரியும் இத்தலத்தில் இந்திரன் குபேரன் விராட் புருஷனான ஸ்ரீ விஸ்வகர்மா ஆகியோர் போற்றி வழிபட்டுள்ளனர். நாகலோக கன்னிகளும் தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜென்ம புண்ணியங்களை அடைந்துள்ளனர்.

திருமீயச்சூர் லலிதா தேவி

இறைவன் மேகநாதர் அம்பாள் லலிதாம்பிகை சவுந்திரநாயகி மேகலாம்பிகை. லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய வரத ஹஸ்த முத்திரையுடன் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. எல்லா சிவ ஸ்தலத்திலும் சிவனை வணங்கி பிறகு தான் அம்பிகை பரிவார மூர்த்திகளை வழிபடுவது மரபு. அரிதான சில சிவ ஸ்தலத்தில் மட்டுமே அம்பிகையை முதலில் வழிபாடு செய்வது சிறப்பானது அந்த அகரவரிசையில் இத்தல அம்பாளும் ஒருவர். சர்க்கரை பாவாடை என்று சொல்லும் நைவேத்தியம் இங்கு பிரசித்தமானது. சர்க்கரை பொங்கல் செய்து அம்மன் முன் வைத்து அதன் முன் நெய்யை குளம் போல் ஊற்றி வைப்பார்கள். அந்த நெய்யில் அம்பிகை உருவம் தெரியும். அது தான் சர்க்கரை பாவாடை நைவேத்தியம். லலிதாம்பிகை சகல ஆபரணங்களையும் அணிந்து பட்டத்தரசியாக ஜொலித்தாலும் காலில் கொலுசு அணியாமல் அலங்காரம் செய்து வந்தனர். 1999 ஆம் வருடம் ஒரு பக்தையின் கனவில் அம்பாள் தங்கக்கொலுசு கேட்டதால் அவர் திருமீயச்சூர் ஆலய அர்ச்சகர்களிடம் தொடர்பு கொண்டு கேட்கையில் அம்பிகையின் சிலாரூபத்தில் கொலுசு அணிவிக்கும் அமைப்பு இல்லை எனத் தெரிவித்தனர். அந்த பக்தை மீண்டும் வலியுறுத்திக் கேட்கையில் கவனத்துடன் தேடிப்பார்த்தனர். ஆண்டுக்கணக்கில் அபிஷேகம் செய்திருந்ததில் அபிஷேக பொருட்கள் கொலுசு அணிவிக்கக்கூடிய துவாரத்தை அடைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பின் அம்பிகைக்கு பக்தை அம்பாளுக்கு தங்கக்கொலுசு செய்து அணிவித்தார். தற்போதும் பக்தர்கள் கொலுசு காணிக்கை செலுத்துகிறார்கள்.

லலிதாம்பிகையிடம் உபதேசம் பெற்றவர் ஹயக்கிரீவர். இவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையைப் பற்றி விவரித்து ஹயக்ரீவர் சொல்ல லலிதா சகஸ்ர நாமத்தை அகத்தியர் எழுதினார். ஹயக்கிரீவரிடம் அகத்தியர் லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும் என கேட்டார். அதற்கு ஹயக்கிரீவர் பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும் என்றார். அகத்தியர் தன் மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர் லலிதா நவரத்தின மாலை என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.

கைகடிகாரம் கட்டும் அம்பாள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலம் பரமல்யாணி உடனுறை சிவசைலநாதர் திருக்கோவிலில் உற்சவர் அம்பிகைக்கு விழாக்காலங்களில் அலங்காரம் செய்யும் போது இடது கரத்தில் தங்க கைகடிகாரம் சார்த்துவார்கள்.