நவ துர்க்கை

உலகையே துன்புறுத்திக் கொண்டிருந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை எதிர்த்து நின்று அவனை அழித்த துர்கா தேவியின் சக்தியை வழிபடும் நாட்கள்தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களில் ஒவ்வொரு நாளும் துர்கா தேவியை ஒவ்வொரு அவதாரமாக வழிபடுகிறோம். தீய சக்தியை வென்ற நல்ல சக்தியின் கதைதான் நவராத்திரி அம்பாளின் வழிபாட்டைக் குறிக்கிறது. வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது. இவர்களை நவராத்திரி தினத்தில் வழிபட்டு அன்னையின் அருளை பெற்றிடுவோம்.

நவ துர்க்கை அவதாரங்கள்:

1.சைலபுத்ரி
2.பிரம்மச்சாரினி
3.சந்திரகாண்டா
4.குஷ்மந்தா
5.ஸ்கந்தமாதா
6.காத்யாயனி
7.காலராத்திரி
8.மகாகௌரி
9.சித்திதாத்ரி

  1. சைலபுத்ரி

துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. சைலபுத்ரி என்றால் மலைமகள் என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி சதி பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன. ஒன்பது சக்கரங்களில் இவள் மூலாதாரத்தில் இருப்பவள். யோகிகள் தங்களுடைய யோக சாதனைகளை இவளை வணங்கியே துவங்கி இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இவளின் வாகனம் நந்தி. ஆயுதமாக சூலத்தையும் ஏந்தி நிற்கிறாள்.

  1. பிரம்மசாரிணி

பிரம்ம என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது. இந்த துர்க்கைக்கு வாகனம் ஏதும் இல்லை. சிவ பெருமானை திருமணம் செய்யும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக கடும் தவம் புரிந்தார். இவரின் தவ உக்கிரம் மூன்று உலகங்களையும் உலுக்கியது. இறுதியில் சிவ பெருமான் பிரம்மசாரிணியைத் திருமணம் புரிந்தார். பிரம்மச்சாரிணியை வணங்குவதன் மூலம் பேரறிவு பொறுமை மற்றும் ஞானத்தைப் பெறலாம். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லவள். ஒன்பது சக்கரங்களில் இவள் சுவாதிஷ்டானத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள்.

  1. சந்திரகாண்டா

நீதியை நிலை நாட்டி சந்திர பிறையை அணிந்தவள். சந்திர என்றால் நிலவு. காண்டா என்றால் மணி என்று பொருள். சந்திர மணி அணிந்து பத்து கைகளை கொண்டு சிங்க வாகனத்துடன் அருளுகின்றார். சந்திரகாண்டா போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருகிறார். ஒன்பது சக்கரங்களில் இவள் மணிபூரக சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்கரத்தை அடைந்தோர் தெய்வீக சப்தத்தை கேட்பார்கள்.

  1. கூஷ்மாண்டா

1.கூ 2. உஷ்மா 3.ஆண்டா என்ற மூன்று சொற்கள் உள்ள பெயரின் முறையே 1. சிறிய 2. வெப்பமான 3. உருண்டை என்ற பொருள் கொண்டது. கூஷ்மாண்டா என்பவர் ஆதிசக்தி துர்கா தேவியின் படைத்தல் உருவம் ஆகும். இவர் சூரிய மண்டலத்தை இயக்குவதாகக் கூறப்படுகின்றது. இவரை வணங்குவோர் உடல் மன வலிமை பெறுவர்கள். ஒன்பது சக்கரங்களில் இவள் அனாதக சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்கரத்தை அடைந்தவர்கள் உடல் மன வலிமை பெறுவார்கள்.

  1. ஸ்கந்த மாதா

ஸ்கந்த என்றால் முருகனை குறிக்கும். மாதா என்றால் அன்னை தேவர்களின் சேனைகளுக்கு தலைவனாக இருக்கும் முருகனின் தாய் ஆவார். இவர் தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு பகைவர்களாக விளங்கிய சூரபத்மனை (தாரகாசுரனை) வதம் செய்ய முருகனுக்கு சக்தி கொடுத்தவள். நான்கு கரங்களை உடைய ஸ்கந்த மாதா இரண்டு கரங்களில் தாமரையுடனும் ஒரு கரம் பக்தர்களுக்கு ஆசி வழங்கியும் மற்றொரு கரத்தின் மடியில் குழந்தை முருகனை ஆறுமுகத்துடன் அரவணைத்து காட்சி தருகின்றாள். இவர் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக விளங்குகின்றார். இவரை வழிபடும் போது நாம் முருகனையும் சேர்த்து வணங்குகின்றோம். இதனால் இருவரின் ஆசியும் நமக்கு கிட்டுகின்றது. ஒன்பது சக்கரங்களில் இவள் விசுத்தி சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்ரத்தை அடைவோரின் மனதில் இருந்து தூய்மையில்லாத கருத்துக்கள் வெளியேறி மனமானது தூய்மையான கருத்துக்களால் நிறையும்.

  1. காத்யாயனி

முற்காலத்தில் காதா என்ற முனிவர் இருந்தார். காதா கடும் தவம் செய்து துர்க்கையை மகளாக பெற்றார். இதனால் இவளுக்கு காத்யாயனி என்ற பெயர் வந்தது. இவளுக்கு மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு. ஒன்பது சக்கரங்களில் இவள் ஆக்ஞா சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்கரத்தை அடைந்தவர்கள் முக்காலத்தையும் உணரும் தன்மையை பெறுவார்கள்.

  1. காளராத்திரி

அன்னையின் ஒன்பது ரூபங்களில் மிக பயங்கரமான ரூபம் இந்த காளராத்திரி எனும் காளி ரூபம். காள என்றால் நேரத்தையும் மரணத்தையும் குறிக்கும். ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும். இந்த துர்க்கை வடிவம் எதிரிக்கும் அச்சத்தைத் தரக் கூடியது. இவளின் நான்கு கைகளின் ஒன்றில் கரத்தில் வஜ்ராயுதமும் மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருவதாக உள்ளது. இந்த அன்னைக்கு கழுதை வாகனமாக உள்ளது. இவளின் பார்வை பட்டாலே துன்பமும் பாவமும் தொலைந்திடும். ஒன்பது சக்கரங்களில் இவள் சகஸ்ரதள சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்கரத்தை அடைந்தவர்களின் மாயை விலகும். இறை காட்சியை காண்பார்கள். தனக்குள்ளே இறைவனை உணர்வார்கள்.

  1. மகாகௌரி

மகா என்றால் பெரிய என்றும் கௌரி என்றால் தூய்மையானவள் என்றும் பொருள்படும். இவள் பால் போல் வெண்மையாகக் காட்சி தருகின்றாள். முற்காலத்தில் மகாகௌரி ஈசனை மணம் செய்து கொள்ள வேண்டி கடுமையாக தவத்தை மேற்கொண்டார். அப்போது அவரின் உடலை மண் சூழ்ந்து கருமையாக்கியது. இவளது தவத்தின் பலனால் சிவன் இவரை மணந்து கொள்வதாக கூறினார். அதற்கு முன் இவளை கங்கை நீரில் நீராட இறைவன் பணித்தார். இறைவனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கங்கையில் நீராடிய தேவியின் உடல் பால் போன்று வெண்மையாக மாறியதால் இவள் மகாகௌரி என அழைக்கப்படுகிறார். நான்கு கரம் கொண்ட மகாகௌரி ஒரு கரத்தில் சூலம் மறு கரத்தில் மணியையும் தங்கி நிற்கிறாள். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருகிறார். இவருக்கு வெண்மையான காளை வாகனமாக இருக்கின்றது. யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கி பிறவியில்லாத நிலையை அடைவார்கள்.

  1. சித்திதாத்ரி

சித்தி என்றால் சக்தி என்றும் தாத்ரி என்றாள் அருள்பவள் அருள்பவள் என்று பொருள். மார்கண்டேய புராணத்தில் பக்தர்களுக்கு அன்னை அருளிய எட்டு விதமான சித்திகளான சித்திகள் அணிமா மகிமா கரிமா லஹிமா ப்ராப்தி பிரகாமியம் வாசித்வம் ஈசத்வம் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சித்திதாத்ரி நான்கு கரங்களில் இடது கரத்தில் கதை சக்கரத்துடனும் வலக் கரத்தில் தாமரை சங்கு ஏந்தியும் அருள்பவள். சித்திதாத்ரியின் வாகனம் சிங்கம். இவள் சிவ பெருமானே வழிபாடு செய்து அனைத்து சித்திகளையும் பெற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என தேவி புராணம் கூறுகிறது. மோட்சத்தை அருளக் கூடிய சித்திதாத்ரி தேவியை எந்நேரமும் தேவர் முனிவர் யட்சர் கிங்கரர் வழிபடுவார்கள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் அட்டமா சித்திகளை பெறுவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.