சீதளாதேவி அம்பாள்

தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள் தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன் தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால் தேவர்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் உடலில் அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன. தேவலோக வைத்தியர்களான அஸ்வினி தேவர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை. எனவே சிவபெருமானை சரணடைந்து தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துன்பத்தைப் போக்க சிவன் தனது ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும் கங்கையிடமிருந்தும் பேரொளியை தோற்றுவித்தார்.

பார்வதியின் அம்சமாக தோன்றிய அந்த ஒளி சீதளாம்பிகை என்று பெயர் பெற்று அம்பாளாக வடிவெடுத்தது. அந்த அம்பாளின் சிரசு முறத்தினாலும் கையில் குடம் மற்றும் துடைப்பத்துடன் கழுதை வாகனத்தில் காட்சி கொடுத்தாள். இந்த தேவியை வழிபடுவதற்காக சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக் கொடுத்தார் சிவன். சீதளாஷ்டகம் எனப்படும் இந்த மந்திரத்தைக் கூறி அம்பாளை வழிபட்டால் வெப்ப நோய் தீரும் என அருள்பாலித்தார். சீதளா என்றால் சமஸ்கிருதத்தில் குளிர்விப்பவர் என்று பொருள். தேவர்களும் அதுபோல் மந்திரத்தை சொல்லி சீதளாதேவியை வழிபட்டு தங்களின் துன்பத்தை போக்கிக் கொண்டார்கள். லலிதா சகஸ்ர நாமத்தில் அம்பாளின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி வணங்கும் போது சீதளாயை நமஹ என்ற பெயரும் வருகிறது. கழுதை என்பது அனாயசமாக பெரும் பொதியை சுமக்க வல்லது. அதுபோல் தன்னிடம் சரணடைபவர்களின் சுமையை தனதாகக் கருதி விரும்பி ஏற்கிறாள் அன்னை என்பதை அந்த வாகனம் உணர்த்துகிறது.

ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள சக்ஷூ (CHAKSHU) என்ற கிராமம் மற்றும் ராஜஸ்தான் குஜராத் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பாலைவனப் பகுதியிலும் வெப்பம் அதிகமாக தாக்கும் பகுதியிலும் கோடை துவங்கும் காலத்தில் சீதளாதேவிக்கு மிகவும் விமரிசையாகக் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. கோடை காலத்தில் வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும். அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை வழிபடுவார்கள். தமிழகத்தில் ரூபங்களில் சில வேற்றுமைகளுடன் சீதளாதேவிக்கு மாரியம்மன் என்ற பெயரில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. இங்கும் கோடை காலங்களில் வெப்பத்தினால் வரும் நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அதிகமாக திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.

தவ்வை என்னும் ஜேஷ்டாதேவி

ஜேஷ்டா தேவி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு தவ்வை மூதேவி அலட்சுமி, சேட்டை, காக்கைக் கொடியோள் பழையோள் கரியசேட்டை கேட்டை மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு. இவள் 14 பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இவர் விஷ்ணுவின் மனைவியும் லட்சுமிதேவியின் மூத்த சகோதரி ஆவார். மூதேவி என்றால் மூத்த தேவி என்று பொருள். சைவ வைணவப் புராணங்களில் திருமால் பாற்கடலைக் கடைந்த போது திருமகளுக்கு முன்பாக தோன்றியவள் மூதேவி என்று சொல்லப்பட்டுள்ளது. தவ்வையின் காக்கையை தனது கொடியாக கொண்டிருக்கிறாள். வாகனம் கழுதை. அவளின் கையில் துடைப்பம் உள்ளது. தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பல காலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆய்வாளர்கள் தாய் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை திகழ்கிறாள்.

பிரதி தவ்வை என்ற பெயரில் இவரை தமிழ் நூல்கள் குறிப்படுகின்றன. திருவள்ளுவர் ஔவையார் போன்றோர் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஏழாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கிடையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் தொண்டரடிப் பொடியாழ்வார் தன் திருவாய்மொழியில்

கேட்டிரே நம்பிமீர்காள் கெருட வாகனனும் நிற்க
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே

திருமால் இருக்க சேட்டை என்று அழைக்கபடுகின்ற தவ்வையிடம் செல்வத்தை எதிர்பார்க்கிறீர்களே என்று இகழ்ந்து பாடுகிறார். இப்பாடலில் இருந்து தவ்வையிடமே அக்காலத்தில் செல்வத்தை வேண்டி வழிபட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. சமஸ்கிருதத்தில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கின்றனர். மூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் வசைச்சொல். செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பதமாக மூதேவி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அமங்கலமானவள் எதற்கும் உதவாதவள் சோம்பேறி என்றெல்லாம் அந்த வார்த்தைக்குப் பொருள்பட ஒரு தவறான கருத்து இருக்கிறது. பண்டைய தமிழர்கள் தவ்வையின் தோற்றத்தை அறிவு சார்ந்து உருவாக்கியிருந்தனர். ஆனால் நாளடைவில் தோற்றத்தை மட்டும் வைத்து தவ்வையை அமங்கலத்தின் அடையாளமாகவும் இழிவாகவும் ஆக்கிவிட்டனர். தவ்வையைப் பார்ப்பது அமங்கலம் என்ற தவறான எண்ணத்தில் உத்திரமேரூரில் உள்ள தவ்வை சிற்பத்தை தரையை நோக்கி சாத்தி வைத்து விட்டனர். இப்படி அவச்சொல்லுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் மூதேவிதான் நம் முன்னோரின் பிரதான தெய்வமாக இருந்திருக்கிறாள். மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டிருக்கிறாள்.

இயற்கையிலிருந்து நமது வழிபாடு தொடங்குகிறது. மரங்களை வழிபடும் மரபுக்கு கந்தழி என்று பெயர். தங்களைக் காப்பாற்றுவதற்காக யுத்த களத்திற்குச் சென்று உயிரிழக்கும் வீரர்கள் தலைவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு அதைக் கடவுளாக வழிபடுவார்கள். அதற்கு நடுகல் வழிபாடு என்று பெயர். இவை அனைத்தையும் விட மேலானது பெண் தெய்வ வழிபாடு. மாரி தெய்வமாக மழையையும் நீர் மகளிராக நதிகளையும் தாய் தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது மரபு. கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. தவ்வை என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள். நம் முது தந்தையரை எப்படி மூதாதையர் என்று அழைக்கிறோமோ அப்படித்தான் மூத்த தேவிக்கு மூதேவி என்ற பெயர் வந்தது. அக்காவைக் குறிக்கும் சொல்லான அக்கை என்கிற வார்த்தை எப்படி தமக்கை ஆனதோ அதேபோல் அவ்வை என்ற வார்த்தை தவ்வை ஆகியிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். அப்படியெனில் தவ்வை யாருக்கு அக்கா? செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் திருமகளுக்கு. நெற்கதிர்களின் அடையாளம் திருமகள். நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம். இங்கே உரத்தின் அடையாளமாக உரமாக திகழ்பவள்தான் தவ்வை. அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாரிகுமரியில் கிடைத்த தவ்வைச் சிற்பங்களே அதற்குச் சான்று.

தவ்வை பற்றி திருக்குறளில் குறிப்பு இருக்கிறது. அதேபோல் தொண்டை நாட்டுச் சிற்றரசனான பார்த்திபேந்திர வர்மன் சேட்டையார் கோயிலுக்கு மானியமாக 1148 குழி நிலம் வழங்கியதாக உத்திரமேரூர் கல்வெட்டில் சான்றுகள் உள்ளன. சேட்டை மூதேவியின் மற்றொரு பெயர். பேரங்கியூர் தென் சிறுவலூர் ஆகிய இடங்களில் கிபி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. தவ்வைக்குத் தனியாகக் கோயில்களும் இருந்திருக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைக் கோயில் ஒன்று 2010 ஆம் ஆண்டு பழநியில் கண்டு பிடிக்கப்பட்டது. கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. இதற்கு ஆதாரமாகப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன. தவ்வையின் சிலை எவ்வித சிற்ப இலக்கணங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கு காரணாகமம் சுப்பிரபேதாகமம் போன்ற ஆகமங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் எல்லாம் செழித்த மார்புடனும் பருத்த வயிற்றுடனுமே காணப்படுகின்றன. இதுவே அவள் வளமை தெய்வம் என்பதற்கான சான்று.

பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8 ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது. அழுக்கு நாற்றம் துன்பம் புலம்பல் அடிக்கடி கொட்டாவி விடுதல் தலைவிரித்து போடுதல் எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல் அலங்கோலமாக இருத்தல் எதிர்மறையான எண்ணங்கள் தீராத மனக்கஷ்டம் இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மிடம் குடி புகுந்துவிடும். தவ்வை என்னும் ஜேஷ்டாதேவியை வழிபட்டால் இவை அனைத்தும் நீங்கி விடும்.

வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் ஜேஸ்டா (தவ்வை) தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல் வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப் படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. சப்த மாதா வழிபாட்டிலும் ஜேஸ்டா தேவிக்கு (தவ்வை) இடம் உண்டு. வடநாட்டு தாந்திரீக சாக்த மரபுகளிலும் தவ்வை சக்தியின் பத்து வடிவங்களில் ஒன்றான தூமாதேவியாகப் போற்றி வழிபடப்படுகிறாள். தூமாதேவிக்கு காஷ்மீரில் தூம்ராகாளி என்ற பெயரில் தவ்வைக்குக் கோயில் ஒன்று உள்ளது. இந்தியா முழுவதும் தவ்வைக்குச் சிறு சிறு சிலைகள் கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலைகளும் கோயில்களும் உள்ளன. தவ்வைக்கு வாராணாசியிலும் அஸ்சாமின் கௌஹாத்தியிலுள்ள காமாக்யாவிலும் கோயில் அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ள நீலாத்ரி மலையில் நீளா தேவிக்கு கோயில் அமைந்துள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள கமலமுனி சித்தர் பீடம் நுழைவு வாயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை அமைந்துள்ளது. மயிலாடுதுறை வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்ததேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலும் அச்சிற்பத்தை தென்மேற்கு மூலையில் வைத்துள்ளனர். திருக்கொண்டீச்வரம் பசுபதீஸ்வரர் கோவிலில் ஜேஷ்டா தேவி இடம் பெற்றுள்ளாள். இத்தலத்தில் இவள் ஒரு அனுக்கிரக தேவதையாக அருள்பாலிக்கிறார்.

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு. பல்லவன் இராச சிம்மன் கட்டிய காஞ்சி கயிலாசநாதர் கோயிலிலும் கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மங்களாம்பிகை சன்னிதிக்கு வடமேற்கேயும் வெடால் ஆண்டவர் திருக்கோயில் தென் புறத்திலும் சேஷ்டாதேவியின் திருவுருவம் நல்ல கட்டமைப்புடன் கூடிய இடத்தில் உள்ளது. திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் (மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சிவபெருமானுக்கு இப்பெயர்) கோவிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. ஓரையூர் சிவன் கோயில் கடலூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனநாதர் கோயில் திருச்சுற்றில் உள்ளது. சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோயில் திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் ஸ்ரீ மகாலட்சுமி சன்னதிக்கு அருகே தனிக்கல்லாக வைக்கப்பட்டுள்ளது. மோகனூர் அசலதீபேசுவரர் கோயில் சுற்றுசுவரில் பதியப்பட்டுள்ளது. திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில் திருச்சுற்றில் உள்ளது. சிறீராமசமுத்திரம் வாலீசுவரர் கோயில் கோயிலுக்கு வெளியே பிள்ளையார் நவக்கிரக சன்னதி அருகே உள்ளது.

யோகினி கோயில்

யோகினி கோயில் அல்லது சௌசதி யோகினி கோயில் என்று அழைக்கப்படும் இக்கோவில் ஓரிசா மாநிலத்தின் கோர்த்தா மாவட்டத்தின் ஹிராப்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழைமையான சாக்த சமயக் கோயில் ஆகும். இக்கோயிலில் காளி பிரதான தெய்வமாக இருக்கிறாள். இக்கோயிலின் உட்புறச் சுவரில் 64 கலைகள் 64 நோய்களுக்கு காரணமாக 64 யோகினி தேவதைகளின் சிற்பங்கள் உள்ளதால் இக்கோயிலை 64 யோகினி கோயில் என்றும் அழைப்பார்கள். இந்த யோகினி பெண் தெய்வங்களின் பெயர்கள் அவற்றின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோவில் கிபி 9ம் நூற்றாண்டில் கலிங்க இராணி ஹிராவதியால் கட்டப்பட்டது.

யோகினி கோயில் மணற்கல்லால் கட்டப்பட்டுள்ளது. யோனி அமைப்பில் வட்ட வடிவில் இக்கோயிலின் கட்டிட அமைப்பு உள்ளது. கோயிலின் மூலவரான காளி தேவி அரக்கனின் உடல் மீது ஏறி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் ஏகபாத மூர்த்தி பார்வதி பிள்ளையார் ரதி சாமுண்டி பைரவர் கிருஷ்ணர் சிற்பங்கள் உள்ளது. கோயிலின் உட்புறச் சுவர்களில் 64 யோகினி தேவதைகளின் கருங்கல் சிற்பங்கள் உள்ளது. இக்கோயில் சூரிய ஒளி படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் துவாரபாலகர் வடிவங்கள் உள்ளன. வெளிச்சுவரில் ஒன்பது காத்யாயினி வடிவங்கள் உள்ளன. கோயிலின் மையப்பகுதியில் உள்ள மண்டபம் சண்டி மண்டபம் எனப்படுகிறது. இக்கோவிலில் சாக்த சமய தாந்திரீகர்கள் தாந்திரீகச் சடங்குகள் செய்து வழிபட்டுள்ளனர். தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை நிர்வகித்து பராமரிக்கிறது.

செண்பகாதேவி அம்மன் கோவில்

செண்பகாதேவி அம்மன் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. செண்பகாதேவி அம்மன் கோயில் பெருமையை குற்றால ஸ்தல புராணத்தில் சிறப்பாக பாடப்பட்டுள்ளது. இங்கு நாகம் மற்றும் புற்று அமைந்துள்ளது. செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலை சுற்றி விநாயகர் அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களின் சிலை மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட நந்தி சிவலிங்கம் போன்றவையும் உள்ளது. செண்பகாதேவி அம்மன் பெயரிலேயே இங்குள்ள அருவி செண்பகாதேவி அருவி எனப் பெயர் பெற்றது. அகத்திய மாமுனிவர் செண்பகாதேவி அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளார்.

இந்த ஆலயத்தில் கருவறை அர்த்தமண்டபம் மகா மண்டபம் என்ற அமைப்புகளுடன் உள்ளது. இங்கு லட்சுமி சரஸ்வதி தேவியருடன் இணைந்து செண்பகாதேவி அம்மன் கருவறையில் காட்சியளிக்கின்றனர். அம்மனுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று திருவிழா சிறப்பாக நடைபெறும். திருவிழா நேரத்தில் சில ஆண்டுகள் முன்பு வரை ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியன்று மழை பெய்யும். செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலில் பௌர்ணமி பொழுது மட்டும் அதுவும் மதியம் வரை மட்டுமே தற்போது மக்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். மற்ற நேரங்களில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது.

துர்காதேவி மகிஷாசுரமர்த்தினி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் வாஸ்து சங்க்ரஹாலயா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள துர்காதேவி மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம்

தெய்வங்கள் பேசும் ஆலயம்

பிஹாரில் இருக்கும் பஸ்தார் என்னும் இடத்தில் அமைந்துள்ளது ராஜராஜேஸ்வரி திருபுரசுந்தரி ஆலயம். இங்கு மூலஸ்தானத்தில் துர்காதேவி வீற்றிருக்கிறாள். இக்கோவிலில் இரவில் தெய்வங்கள் ஒன்று கூடி பேசிக் கொள்வது போல் சப்தம் கேட்பது அவ்வூர் மக்களுக்கு மர்மமான விஷயமாக இன்று வரை இருந்து வருகிறது. நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் தாந்திரிக் பவானி மிஸ்ரா என்பவரால் நிறுவப்பட்டது. அவர் அக்காலத்திலேயே தாந்திரீகம் மற்றும் வேத முறைப்படி எழுப்பிய இந்த கோவிலில் நிறைய தாந்திரீகர்கள் மற்றும் வேத சாஸ்திரம் பயின்றவர்கள் வருகை தருகின்றனர்.

இக்கோவிலில் 1. திரிபுரா பைரவி 2. துமாவதி 3. பகுளாமுகி 4. தாரா 5. காளி சின்னமஸ்தா 6.ஷோடசி 7. மாதங்கி 8. கமலா 9.உக்ரதாரா 10, புவனேஸ்வரி ஆகிய பத்து மகாவித்யாக்களின் சிலைகள் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இது தவிர 1. பங்களாமுகி மாதா 2. தத்தாத்ரேய பைரவ் 3. படுக் பைரவ் 4. அன்னபூர்ண பைரவ் 5. கால பைரவ் 6. மாதங்கி பைரவ் ஆகிய பைரவர்களின் சிலைகளும் இங்கு நிறுவப்பட்டுள்ளன.

இக்கோவிலில் இரவு வேளை பூஜை முடிந்ததும் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது போன்ற சப்தம் மதில் சுவர் வாயிலாக கேட்கப்படுகிறது. இது மிகவும் ஆச்சரியப்படும் வகையில் உள்ளதால் இக்கோவில் மக்களிடையே பிரபலமானது. இதனை ஆராய்ச்சி செய்வதற்கு வந்த விஞ்ஞானிகள் குழு ஒரு நாள் இரவு முழுவதும் அங்கு தங்கி இருந்தனர். வழக்கமாக இரவு நேரத்தில் இங்கே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவதில்லை. இரவில் கோவிலின் மதில் சுவரில் எதிரொலித்த வண்ணம் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை போல் சப்தங்கள் கேட்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சப்தம் மனிதர்கள் பேசுவதை போலவே எதிரொலித்தது. ஆனால் நிச்சயமாக அது இந்த கோவிலின் வெளியில் இருந்து வரவில்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

மூன்று மார்பகங்கள் கொண்ட மீனாட்சி அம்மன்

சிவப் புராணத்தில் உள்ளபடி மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னன் மலையத்துவசன் காஞ்சனமாலை தம்பதியர் வேள்வி செய்து பெற்ற தவப்புதல்வி ஆவாள். இவளே சுந்தரேஸ்வரரின் மனைவியும் ஆவாள். மீனாட்சி அம்மனை தடாதகை பிராட்டி எனவும் அழைக்கப்பட்டதாக சில கூற்றுகள் இருக்கின்றன. பிறப்பில் மீனாட்சி அம்மனுக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன. தன்னை திருமணம் செய்துக் கொள்ள போகும் மணவாளனை பார்த்த பிறகு தனது மூன்றாவது மார்பகம் மறைந்து போகும் எனும் நிலை கொண்டிருந்தார். கயிலை மலையில் சிவனை கண்ட பிறகு மீனாட்சி அம்மனின் மூன்றாவது மார்பான நடுமார்பு மறைந்தது என சிவப்புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. மீனாட்சி அம்மன் மிகுந்த வீரம் கொண்ட பெண்ணாக இருந்துள்ளார். தனது தந்தை இறந்த பிறகு பாண்டிய நாட்டிலிருந்து படையுடன் கிளம்பி கயிலை மலை வரை சென்று வென்று வந்தார் என திருவிளையாடல் புராணம் கூறுகிறது. கயிலை மலையில் சிவனை கண்டு வெட்கம் கொண்ட பெண் நிலையை மீனாட்சி அம்மன் அடைந்த பிறகு மூன்றாவது மார்பான நடுமார்பு மறைந்தது. சிவனையே சுந்தரேசுவரராக திருமணம் செய்து கொண்டார். இன்றளவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதலில் மீனாட்சி அம்மனுக்கு பூஜைகள் நடந்த பிறகே சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள் நடைப் பெற்று வருகின்றன.

சீரணி நாகபூசணி அம்மன்

சீரணி நாகபூசணி அம்மன் கோயில் யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் தென்மேற்குப் பிரிவில் சண்டிலிப்பாய் என்ற ஊரில் உள்ள சீரணியில் அமைந்துள்ளது. தம்மை வழிபட்டுப் பூசித்த நாகம் ஒன்றைத் தன்னுடைய திருமேனியில் ஆபரணமாய் பூண்ட காரணத்தால் இத்தேவியும் நாகபூஷணியம்மை என்று அழைக்கப்படுகிறாள்.

சீரணி நாகபூசணி கோவில் உள்ள இந்த இடத்தில் அக்காலத்தில் சாத்திரம் தெரிந்த சாத்திரியார் சண்முகம் பொன்னம்பலம் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஓர் நாகபூஷணியம்மை இயந்திரம் வைத்துப் பூசை செய்து சாத்திரம் சொல்லி வந்தார். அவருடன் இராமுத்தர் என்னும் ஒருவர் வசித்து வந்தார். சண்முகம் பொன்னம்பலம் இயந்திரத்தைச் சரிவரப் பூசிக்காமையால் அவர் வீட்டிற் சில துர் சகுனங்கள் நிகழ்ந்தன. அவை இராமுத்தர்க்கு பிடிக்காத காரணத்தினாலும் இயந்திரம் இரவில் கலகலப்பான பேரொலி செய்தமையாலும் அதனை அப்புறப்படுத்த நினைத்தார் இராமுத்தர். ஒருநாள் இராமுத்தர் நன்றாய் மதுபானம் அருந்தி விட்டுக் குறித்த இயந்திரத்தையும் அத்துடனிருந்த பொருட்களையும் பெட்டியுடன் எடுத்துச் சென்று வீட்டின் அருகாமையிலுள்ள ஓர் இடத்தில் போட்டுச் சென்று விட்டார். நாகபூஷணி அம்மன் இங்குள்ள அன்பர்கள் பலரின் கனவிற் தோன்றி நான் நயினை நாகபூஷணி எனக்கு கோவில் கட்டுங்கள் என்று காட்சியளித்தாள். பலர் நாங்கள் வறியவர்கள் தாயே எங்களால் எவ்வாறு இயலும் என அன்பர்கள் கூறி வருந்தினார்கள்.

சீரணி நாகபூசணி அம்மன் பக்தனாகிய முருகேசபிள்ளை என்பவரின் கனவிலே பல முறை வெளிப்பட்டு தன் திருவருள் தன்மைகளைக் காட்டியருளினாள். ஒரு முறை ஓரிடத்தைக் குறிப்பிட்டு இவ்விடத்திலே எம்மை வைத்து வழிபட்டு வருவாயாக என அம்மை அருளிச் செய்தாள். அவர் தமது நிலைமையை எண்ணி அஞ்சி தன் கனவில் வருவதை பிறருக்குச் சொல்லாமல் தம்முள்ளே வழிபட்டு வந்தார். 1896 ம் ஆண்டு விளம்பி வருடம் சித்திரை மாதப் பெளர்ணமி தினத்தன்று இரவு தேவி கனவிலே வெளிப்பட்டு உனக்குச் சொன்னவைகளை நீ உண்மை என்று நம்பினாய். அதன் உண்மையை உனக்கு இப்பொழுது காட்டுவோம். அதோ தோன்றுகின்ற தென்னை மரத்திலே சில இளநீர் பறித்து வந்து தா என்று கூறியருளினாள். அன்பருக்கு அது ஒரு முதிர்ந்த வறண்ட பட்டு போன மரமாகத் தோன்றியது. அதையுணர்ந்த அவர் அதில் இளநீர் குரும்பைகள் இல்லையே தாயே. இல்லாத இளநீரை நான் எப்படி தருவது என்றார். அதற்கு அன்னை நீ மரத்தின் அருகிலே சென்று பார். தேவையானது தோன்றும் என அருளினாள். அவ்வாறே அவர் சென்று பார்த்தார். தொங்கும் இளநீர்க் குலைகளைக் கண்டு வியப்பும் அச்சமுங் கொண்டவராய்ச் சில இளநீரைப் பறித்துக் கொண்டு வந்து கொடுத்தார். அம்மனும் அதிக தாகமுடையார் போலப் பருகினாள். பின்னர் அவரை நோக்கி அன்பனே இந்த இடத்தைத் தோண்டிப்பார் இங்கு ஒரு சிலை தோன்றும். அதனையே மூலமாக வைத்து ஒரு கொட்டகை அமைத்து வழிபடுவாயாக. சில காலத்திற்கு பிறகு பல திசைகளிலுமிருந்து அடியார்கள் வந்து வழிபட்டு விரும்பிய சித்திகளை எல்லாம் அடைவார்கள். வேண்டிய திரவியங்களை எல்லாம் காணிக்கையாக கொடுத்து வழிபடுவார்கள். அவற்றைக் கொண்டு திருப்பணிகளைச் செய்யத் தொடங்கு. கோவில் பூர்த்தியாகுவதற்கு யாம் அருள் செய்வோம் வேலையை தொடங்கு தொண்டர்கள் வருவார்கள். செல்வம் செழிக்கும் நாடு நலம்பெறும் வாழ்வு வளம் பெறும் என்றாள். மேலும் உனது மனம் புனிதமாகும் வகையில் ஒரு மந்திரமும் உபதேசம் செய்வோம் என சொல்லி விட்டு மறைந்தாள்.

சீரணி நாகபூசணி அம்மன் கனவில் குறிப்பிட்ட இடத்தை மறுநாள் காலையில் தொண்டிப் பார்த்தார். அங்கு ஒரு சிலை காணப்பட்டது. அதனைக் கண்டு பரவசப்பட்டவராய் ஒரு மண்டபம் அமைத்தார். 1896ம் ஆண்டு ஆடிமாதம் திங்கட்கிழமையும் அமாவாசையுங் கூடிய புண்ணியதினத்திலே பூஜையை தொடங்கி காலம் தவறாமல் பூஜித்து செய்து வந்தார். நான்கு திசைகளிள் இருந்தும் அடியார்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து நாகபூஷணியம்மையை வழிபட்டார்கள். இவ்வரலாறு குறித்தும் குட்டம் காசம் ஈளை முதலான கன்ம நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தை அடைந்து தேவியை வழிபட்டு தங்களது நோய்கள் தீர்த்துக் கொண்டார்கள். நாக சாபத்தினாலே நீண்டகாலம் பிள்ளைப் பேறில்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபாடுகள் செய்து பிள்ளைச் செல்வம் பெற்றார்கள். மேலும் அம்பாளின் அருட்செயல்கள் பற்றிப் பல கர்ண பரம்பரையான கதைகள் காலங்கண்ட முதியோர்களினாலே கூறப்படுகின்றன. சீரணி நாகபூஷணி அம்மன் தேவஸ்தானத்தின் திருப்பணிகளை நடத்தும் பொருட்டு 1962 அக்டோபர் 10 இல் திருப்பணிச் சபையொன்று அமைக்கப்பட்டு பல இடங்களிலும் நிதி திரட்டி தொண்டுகளைச் செய்து வருகின்றனர்.

சீரணி நாகபூசணி அம்மன் கோவில் கோபுரம் 1935 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்குள்ள அழகிய தேர் 1957 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இத்தேர் நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகளைக் கொண்ட அழகிய தேராகக் காணப்படுகின்றது. 1951 1965 1983 ஆம் ஆண்டுகளில் புனரா வர்த்தன கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது. தேவி வழிபாட்டுக்கு யாழ்ப்பாண நாட்டின் இரு கண்களாக விளங்குவது நயினை நாகபூஷணியம்மை மற்றும் சீரணி நாகபூஷணியம்மை ஆலயங்களாகும்.

காளிகாம்பாள் கோயில்

காளி அம்பாள் எப்போதும் கையில் தமருகம் சூலம் கட்கம் கபாலம் கேடகம் முதலிய ஆயுதங்கள் கொண்டு கோப ரூபத்துடன் காட்சியளிப்பவள். ஆனால் இக்கோயிலில் குடிகொண்டுள்ள அன்னை காளிகாம்பாள் வடிவம் எழில் கொஞ்சும் திருமேனியுடன் ஆணவத்தை அடக்கும் அங்குசம் ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம் சுகபோகத்தினை நல்கும் நீலோத்பல மலர் மற்றும் வரத முத்திரை சோமன் சூரியன் அக்னி என்ற மூன்று கண்கள் நவரத்ன மணிமகுடத்துடன் வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலத்துடன் காணப்படுகிறாள். காளிகாம்பாள் மகாலட்சுமியையும் சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும். காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். திருவடியில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சக்கரம் அர்த்த மேருவாக அமைந்துள்ளது. காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம் காஞ்சிபுரத்து காமாட்சி அம்மனாகும். சிவபெருமான் கமடேஸ்வரர் என்ற பெயரில் காட்சி தருகிறார். இத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது. உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர் நவக்கிரகங்கள் வள்ளி தெய்வானையுடன் முருகர் ஸ்ரீவீரபகாமங்கர் அவர் சீடர் சித்தையா. கமடேஸ்வரர் துர்கா சண்டிமகேஸ்வரர் பைரவர் பிரம்மா சூரிய சந்திரர்கள் உள்ளனர். வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர் கொடி மரம் வடகதிர்காம முருகன் சித்தி புத்தி விநாயகர் காயத்ரி துர்கா யாகசாலை நடராசர் மகாமேரு வீரபத்திர மகா காளியம்மன் நாகேந்திரர் விஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன. மேற்கு நோக்கிய நிலையில் ஆஞ்சநேயர் உள்ளார். இத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல் குண வாயில் என்றும் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் குட வாயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தல விருட்சமாக மாமரம் உள்ளது. வடமேற்குப் பகுதியில் சித்திபுத்தி விநாயகரும் அகோர வீரபத்திரசாமியும் மாகாளியும் வடகதிர்காம முருகனும் உள்ளனர்.

காளிகாம்பாள் கோயில் ஆரம்பத்தில் கடற்கரைப் பகுதியில் இப்போதைய புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பே இருந்தது. காளிகாம்பாள் ஆலயம் சுமார் 3000 ஆண்டு பழமையானது. இதனால் கோட்டையம்மன் என்றும் செந்தூரம் சாத்தி வழிபட்டதால் சென்னியம்மன் என்றும் அம்பாள் அழைக்கப்பட்டாள். இதிலிருந்தே சென்னை என்கிற பெயர் வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கிறது. பின்னர் 1640ம் வருடம் புனித ஜார்ஜ் கோட்டை கட்டத் தொடங்கியதும் கோவிலை அகற்ற அப்போதைய ஆங்கிலேயர்கள் முடிவு செய்தார்கள். உடனே முத்துமாரி ஆச்சாரி என்பவர் இப்போதுள்ள தம்புச் செட்டித் தெருவில் காளிகாம்பாள் கோயிலை நிர்மாணித்தார். ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் 1952 ம் ஆண்டு இந்த வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து உள்ளம் உருகுதடா என்ற பாடலை பாடினார். இதுவே பின்னாளில் உள்ளம் உருகுதைய்யா என டி.எம்.எஸ் குரலில் தமிழகம் முழுவதும் ஒலித்தது. கோயில் கோபுரம் 1983ல் கட்டி முடிக்கப்பட்டது.

தெற்கு நோக்கி படையெடுத்து வந்த மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி 3 அக்டோபர் 1677ம் வருடம் இந்தக் கோயிலில் வழிபட்டுள்ளார். இதற்கான குறிப்பு இக்கோவில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் வேலை பார்த்த போது தினமும் காளிகாம்பாளை வந்து வணங்குவார். யாதுமாகி நின்றாய் காளி என்ற பாடலை அவர் காளிகாம்பாளை மனதில் நினைத்தே எழுதினார். மச்ச புராணம் வாமன புராணம் கூர்ம புராணம் லிங்க புராணம் பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் இந்த கோவில் பற்றி குறிப்புகள் உள்ளது. புராணங்களில் இத்தலம் சொர்ணபுரி பரதபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் பூந்தேர் கிண்ணித்தேர் வெள்ளித் தேர் என்று மூன்று வகையான தேர்கள் உள்ளன. இந்த கோவிலில் உள்ளது போன்று இந்தியாவில் வேறு எங்கும் எந்த தலத்திலும் கிண்ணித் தேர் இல்லை. பாரதியார் பன்றிமலை சுவாமிகள் காயத்ரி சுவாமிகள் தவத்திரு ராமதாசர் உள்பட பல மகான்கள் ஆன்மீகப் பெரியோர்கள் காளிகாம்பாளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். காளிகாம்பாள் அருள்புரியும் இத்தலத்தில் இந்திரன் குபேரன் விராட் புருஷனான ஸ்ரீ விஸ்வகர்மா ஆகியோர் போற்றி வழிபட்டுள்ளனர். நாகலோக கன்னிகளும் தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜென்ம புண்ணியங்களை அடைந்துள்ளனர்.