ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி -3

ராமர் சரபங்க முனிவரின் ஆசிரமத்திற்கு வரும் முன்னதாகவே இந்திரன் தனது தேவகணங்களுடன் வந்து சரபங்க முனிவருடன் பேசிக்கொண்டிருந்தான். ராமர் ஆசிரமத்திற்குள் நுழைவதை அறிந்த இந்திரன் தன் பேச்சை விரைவாக முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றான். சரபங்க மகரிஷியின் பாதங்களில் விழுந்து ராமர் சீதை லட்சுமணன் மூவரும் வணங்கி வழிபாடு செய்தார்கள். மூவரையும் பார்த்து மகிழ்ந்த சரபங்க மகரிஷி ராமா உங்களை பார்ப்பதில் பேரானந்தம் அடைகின்றேன். உனக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கின்றேன் ராமா. என்னுடைய உலக வாழ்க்கை வினைகள் எல்லாம் முடிந்து மேலுலகம் செல்லும் காலம் வந்து விட்டது. என்னை மேலுலகம் அழைத்துச் செல்ல சிறிது நேரத்திற்கு முன்பு இந்திரன் வந்திருந்தான். உன்னை காணாமல் மேலுலகம் செல்ல விரும்பவில்லை எனவே இந்திரனிடம் ராமனை காண ஆவலாய் இருக்கின்றேன் ராமரை கண்ட பின்பு வருகிறேன். சிறிது நேரம் காத்திருக்குமாறு இந்திரனிடம் கூறினேன். ராமரை நான் இன்னும் சந்திப்பதற்கான காலம் வரவில்லை. தற்போது ராமரை காண காத்திருப்பது சரியாக இருக்காது என்று நான் மேலுலகம் செல்ல உடலை விடும் வழிகளை சொல்லி விட்டு இந்திரன் சென்று விட்டான். நீ மண்ணுலகில் நிறைவேற்றுவதற்கான அரிய பெரிய செயல்களை செய்து முடித்த பின்பு இந்திரனே உன்னை வந்து சந்திப்பான். பகவானே இப்போது என்னுடைய புண்ணிய பலன்கள் எல்லாம் உங்களிடம் தந்தேன் பெற்றுக்கொள்ளுங்கள் சரபங்க முனிவர்.

ராமர் சரபங்க முனிவரிடம் நான் சத்ரிய குலத்தில் பிறந்தவன். என்னுடைய குல தர்மப்படி என்னிடம் கேட்பவர்களிடம் நான் தான் கொடுக்க வேண்டும். யாரிடமும் எதுவும் பெற்றுக்கொள்ள கூடாது. தாங்கள் குறிப்பிட்ட நல் புண்ணியங்களை நல் கார்மாக்கள் செய்து என்னால் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே தாங்கள் கொடுக்கும் புண்ய பலன்களை என்னால் பெற்றுக்கொள்ள இயலாது. நாடு நகரம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு தபஸ்வியாய் காட்டில் வாழ வந்திருக்கின்றேன். இக்காட்டில் வசிக்க எங்களுக்கு ஒரு நல்ல இடத்தை தேர்ந்தேடுத்து சொல்லுங்கள் என்றார்.

இக்காட்டில் சுதீட்சணர் என்ற ரிஷி இருக்கிறார். அவர் முக்காலமும் அறிந்தவர். இந்த மந்தாகினி நதியின் எதிர் திசையில் இருக்கும் புனிதமான இடத்தில் அவர் தவம் செய்து கொண்டிருக்கின்றார். அவரிடம் சென்று இந்த வனத்தில் எங்கே வசிக்க வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள். உன்னை சந்தித்ததில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் உன்னை சந்திக்கும் என்னுடைய ஆசை தீர்ந்தது. சிறிது நேரம் இங்கே இருப்பாயாக. நான் மேலுலகம் செல்லும் நேரம் வந்து விட்டது என்று சொல்லி பெரிய நெருப்பை வளர்த்து அதனுள் நுழைந்தார் சரபங்க முனிவர். நெருப்பில் இருந்து ஒரு திவ்யமான ஒளி உருவமாக தோன்றி பிரம்பலோகத்தை அடைந்தார் சரபங்க முனிவர்.

விராதன் ராட்சசன் ராமரால் கொல்லப்பட்டதை அறிந்த காட்டிலிருக்கும் முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ராமரை காண அனைவரும் முடிவு செய்து ராமரை காண கூட்டமாக புறப்பட்டார்கள்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி -2

ராமர் ராட்சசனிடம் பேச ஆரம்பித்தார். நாங்கள் இஷ்வாகு வம்சத்தை சேர்ந்த ராஜ குமாரர்கள். இப்பெண் சீதை என் மனைவி. நாங்கள் வனவாசம் செய்ய இக்காட்டிற்குள் வந்திருக்கின்றோம். அப்பெண்ணை விட்டுவிடு இல்லையென்றால் இப்போதே என் அம்பு உன் உடலை துளைக்கும் என்றார். ராட்சசன் சிரித்தான். எனது தந்தை பெயர் ஜயன். தாயார் பெயர் சதஹ்ரதை என்னை அனைவரும் விராதன் என்று அழைப்பார்கள். ஆயுதத்துடன் இருக்கும் சத்ரியர்களே உங்கள் ஆயுதங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. ஆயுதங்களால் என் உயிர் போகாது என்று பிரம்மாவிடம் வரம் பெற்றிருக்கின்றேன். இப்பெண்ணை விட்டு ஒடிவிடுங்கள். இல்லை என்றால் உங்களை கொன்று இப்பெண்ணை கொண்டு செல்வேன் என்றான் ராட்சசன்.

ராமர் நீ எமனிடம் செல்லும் நேரம் வந்துவிட்டது என்று கூறி தன்னுடைய அம்பை ராட்சசன் மீது விட்டார். அம்பு ராட்சசனின் உடலை துளைத்துக் கொண்டு ரத்தத்துடன் வெளியே வந்து விழுந்தது. ராட்சசன் அப்படியே நின்று கொண்டிருந்தான். கோபத்துடன் சீதையை இறக்கிவிட்டு தன்னுடைய சூலத்தை லட்சுமணன் மீது வீச முயன்றான். ராமர் லட்சுமணன் இருவரும் ராட்சசன் மீது அம்பு மழை பொழிந்தார்கள். அம்புகள் அனைத்தும் ராட்சசனின் உடலில் பாய்ந்தது. பெரிய முள்ளம் பன்றி போல் நின்ற ராட்சசன் சிரித்தான். உடலை ஒரு சிலுப்புச் சிலுப்பினான். உடலில் இருந்த அம்புகள் அனைத்தும் கீழே விழுந்தது. ராம லட்சுமணர்களை சூலத்தை வைத்து தாக்க முயற்சித்தான் ராட்சசன். ராமரின் ஒரு அம்பு சூலத்தை இரண்டாக உடைத்தது. ராமரும் லட்சுமணனும் கத்தியை எடுத்துக்கொண்டு அவனை தாக்க ஆரம்பித்தார்கள். ராட்சசன் தன் உருவத்தை மாற்றிக்கொண்டு இருவரையும் இரு கைகளால் தூக்கிக்கொண்டு காட்டிற்குள் ஓட ஆரம்பித்தான்.

அடர்ந்த காட்டிற்குள் ராமரும் லட்சுமணனும் கண்ணில் இருந்து மறைந்ததை பார்த்த சீதை அழ ஆரம்பித்தாள். ராட்சசனின் கைகளில் இருந்த இருவரும் அவனது இரு கைகளையும் உடைத்து பிய்த்து எரிந்தார்கள். ராட்சசன் கீழே விழ்ந்தான். ஆயுதங்களால் இவனுக்கு மரணமில்லை என்பதை அறிந்து தன் கரங்களாலும் காலால் மிதித்தும் ராட்சசனை கசக்கினார்கள். ராமரும் லட்சுமணனும் ராட்சசனின் உடலை எவ்வளவு கசக்கினாலும் பிரம்மாவின் வரத்தால் ராட்சசன் உயிர் போகவில்லை. ஆனால் வலியினால் ராட்சசன் கதற ஆரம்பித்தான். ராமர் தனது காலை ராட்சசன் மார்பின் மீது மிதித்தார். அப்போது ராட்சசன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். பகவானே உங்கள் பாதம் என் மீது பட்டதும் எனக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் வந்து விட்டது. நான் ஒரு கந்தர்வன் மேலுலகம் செல்ல நான் பெற்ற வரமும் சாபமும் எனக்கு தடையாய் இருக்கிறது. என் உயிரை எப்படியாவது தாங்கள் எடுத்துவிட்டால் நான் மேலுலகம் சென்றுவிடுவேன் என்றான். ராமரும் லட்சுமணனும் ஆயுதங்கள் ஏதும் இன்றி ராட்சசன் உடலை தனி தனியாக பிய்த்து ஒரு பெரிய பள்ளம் ஒன்று தோண்டி அதில் போட்டு முடிவிட்டனர். ராட்சசனும் கந்தர்வ உருவம் பெற்று ராமரை வணங்கி மேலுலகம் சென்றான். ராமரும் லட்சுமணனும் சீதை இருக்கும் இடம் சென்று நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லி அவளுக்கு தைரியம் சொன்னார்கள். அங்கிருந்து கிளம்பி மூவரும் சரபங்க முனிவரின் ஆசிரமம் சென்றார்கள்.

ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி -1

ராமர் சீதை லட்சுமணன் மூவரும் அடர்ந்த தண்டகாரண்ய காட்டிற்குள் சென்றனர். சீதை அங்கே இருந்த அழகிய மலர்களை பார்த்து மகிழ்ந்து கொண்டே நடந்தாள். சிறிது தூரத்தில் வேத மந்திரங்கள் கேட்டது. சத்தம் வரும் திசை நோக்கி சென்றார்கள். அங்கே மிருகங்களும் பறவைகளும் ஒற்றுமையுடன் பயமின்றி சுற்றிக்கொண்டிருந்தன. அங்குள்ள ரிஷிகள் ராமரைக் கண்டதும் மகிழ்ந்து வரவேற்று உபசரித்தனர். ராமர் அன்று இரவு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். உபசாரங்கள் அனைத்தும் முடிந்ததும் ராமரிடம் விண்ணப்பம் ஒன்று செய்தார்கள். தாங்கள் தர்மத்தை காப்பற்றுகின்றவர். கீர்த்தி மிக வாய்க்கப்பெற்றவர். நாட்டில் இருந்தாலும் காட்டில் இருந்தாலும் தாங்களே அரசர். இக்காட்டில் எங்களை துன்புறுத்தும் கொடிய அரக்கர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். ராமர் ரிஷிகளிடம் நீங்கள் மிகப்பெரும் தபஸ்விகள். உங்கள் தவத்தின் சக்தி அளவிட முடியாதது. சாபத்தை இட்டு அரக்கர்களை அழித்துவிடலாமே என்றார். இதனைக்கேட்ட ரிஷிகள் நாங்கள் கோபத்தை வென்று விட்டவர்கள். புலன்களை வென்றவர்கள். எங்களுக்கு கோபம் வராது. நாங்கள் சாபமிட்டால் எங்களின் தவவலிமை குன்றிவிடும். தவம் செய்வதை தவிர எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. எங்களை காப்பாற்றுங்கள் என்று முறையிட்டார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற ராமர் அன்று இரவு அங்கே தங்கினார்.

அதிகாலை ரிஷிகளிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு அடர்ந்த காட்டிற்குள் சென்றார்கள். காட்டிற்குள் பெரிய மலை போன்ற ரட்சசன் ஒருவன் மூவரின் முன்னே வந்து நின்றான். அவன் வடிவம் கோரமாக இருந்தது. கையில் ஒரு சூலாயுதம் இருந்தது. அதில் அப்போது தான் கொல்லப்பட்ட சிங்கத்தின் தலையும் யானையின் தலையும் தொங்கிக்கொண்டு இருந்தது. இடி இடித்தாற் போல் கர்ஜனை செய்தான். நான் விராதன் அரக்கன். யாரும் உள்ளே வர முடியாத காட்டிற்குள் இருக்கும் ரிஷிகளை கொன்று தின்று சுற்றிதிரிவேன். இன்று உங்களையும் இப்போதே கொன்று சாப்பிடப்போகின்றேன். நீங்கள் பார்க்க பாலகர்கள் போலிருக்கின்றீர்கள். முனிவரைப் போல் உடை உடுத்தி இருக்கின்றீர்கள். கையில் ஆயுதம் வைத்திருக்கின்றீர்கள். உடன் ஒர் பெண்ணும் இருக்கிறாள். முனிவர்களைப் போல் வேடம் போட்டு ஏமாற்றி தப்பி விடலாம் என்று நினைத்தீர்களா? ரிஷிகளை தின்று உயிர் வாழும் எனக்கு இப்பெண் இனி மனைவியாக இருப்பாள். உங்களை இப்போதே கொன்று தின்று விடுகிறேன் என்று சொல்லிக்கொண்டே சீதையை கையில் தூக்கி பிடித்துக் கொண்டான்.

சீதை ரட்சசனின் கையில் நடுநடுங்கிக் கொண்டிருந்தாள். சீதை நடுங்குவதை பார்த்த ராமர் எந்த விதத்தில் ராட்சசனை எதிர்ப்பது என்று தோன்றாமல் சில வினாடிகள் தன் அமைதியை இழந்தார். பார் லட்சுமணா சீதையை எதையும் பொறுக்கும் என்னால் இதனைக் கண்டு பொறுக்க முடியவில்லை. இதைக்காணத் தான் கைகேயி நம்மை இங்கே அனுப்பினாளா என்று மனம் கலங்கி பேசினார். ராமர் தைரியமும் அமைதியும் இழந்து பேசியதை கண்ட லட்சுமணன் குழப்பமடையாமல் பேசினான். நீங்கள் இந்திரனுடைய பலம் பெற்றவர். உங்களுடன் நானும் இருக்கிறேன். ஏன் இப்படி பேசுகின்றீர்கள். அயோத்தியில் என் கோபத்தை அடக்கினீர்கள். இப்போது பாருங்கள் அந்த கோபம் அனைத்தையும் இந்த ராட்சசன் மீது காட்டி இவனை கொன்று என் கோபத்தை தணித்துக்கொள்கிறேன் என்றான். உடனே ராமர் தெளிந்தார். முகத்தில் அமைதியுடன் வீரம் ஜொலித்தது. ராமரும் லட்சுமணனும் அம்பில் வில்லை பூட்டி ராட்சசனுக்கு குறி வைத்தார்கள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -40

ராமர் வசித்த சித்திரக்கூடம் காட்டுப்பகுதியில் இருந்த ரிஷிகள் ராமரை சந்திக்க வந்தார்கள். இக்காட்டில் ராவணனுடைய இளைய தம்பி கரன் என்ற ராட்சசன் அடிக்கடி வந்து எங்களுக்கு தொல்லைகள் கொடுக்கின்றான். எனவே நாங்கள் வேறு இடத்திற்கு செல்ல முடிவு செய்திருக்கின்றோம். தங்களை ஒரு முறை பார்த்து விட்டு செல்லலாம் என்று வந்தோம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாங்களும் எங்களுடன் வந்துவிடலாம் என்றார்கள். ராட்சசனுக்கு பயந்து இங்கிருந்து செல்ல வேண்டாம். இங்கே இருங்கள் வரும் ராட்சசர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ராமர் அவர்களுக்கு தைரியம் சொன்னார். ஆனால் ரிஷிகள் ராமர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். ரிஷிகள் அனைவரும் சென்றவுடன் ராமருக்கு தனது உறவினர்களின் ஞாபகம் வந்தது. பரதன் தனது மூன்று தாயாருடன் வந்ததும் அங்கே தங்கியிருந்து அவர்களிடம் பேசியதும் ராமரின் நினைவை விட்டு செல்லவில்லை. லட்சுமணனிடமும் சீதையிடமும் நமது நாட்டு மக்களும் உறவினர்களும் வந்து சென்றதும் எனக்கு அவர்களின் நினைவு அதிகமாக இருக்கிறது. வேறு இடத்திற்கு சென்றார் நலமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நாமும் இங்கிருந்து கிளம்பி வேறு இடத்திற்கு செல்லலாம் என்றார். லட்சுமணனும் சீதையும் ராமரின் சொல்லை ஆமோதித்து சித்ரகூட மலையில் இருந்து கிளம்ப ஆயத்தமானார்கள்.

சித்ரகூட மலையில் இருந்து கிளம்பியவர்கள் அத்திரி மகரிஷி ஆசிரமத்திற்கு சென்று அவருக்கு வணக்கம் செலுத்தினார்கள். ராமரை வரவேற்ற அத்திரி மகரிஷியும் அவரது மனைவி மகா தபஸ்வியுமான அனுசூசையும் அவர்களை வரவேற்று ஆசிர்வாதம் செய்து உபசரித்தார்கள். அனுசூயை சீதையிடம் காட்டிற்கு செல்ல முடிவெடுத்த கணவருடன் நீயும் வந்து கஷ்டங்களை அனுபவித்து எல்லோருக்கும் வழிகாட்டியாய் இருக்கின்றாய் என்று பாராட்டி தன் அன்புக்கு அடையாளமாக ஆபரணங்களும் ஆடைகளும் கொடுத்தாள். அத்திரி மகரிஷியின் வேண்டுகோளின் படி அன்று இரவு அவரின் குடிசையில் தங்கினார்கள்.

அத்திரி மகரிஷியிடம் நாங்கள் சித்ரகூட மலையில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல தீர்மானித்திருக்கின்றோம். நாங்கள் வசிக்க சிறந்த வேறு வனப்பகுதி சொல்லுங்கள் என்று நடந்தவற்றை சொன்னார் ராமர். அதற்கு அத்திரி மகரிஷி அறநெறியில் செல்லும் வனவாசிகளாக தபஸ்விகள் தண்டகாரண்யத்தில் வசிக்கிறார்கள். அந்த காட்டில் இருக்கும் தவசிகளுக்கு அரக்கர்கள் மிகவும் தொந்தரவு கொடுக்கின்றார்கள். பலவிதமான வடிவங்களை எடுத்து துன்புறுத்துகின்றார்கள். மனிதர்களை தின்னும் அரக்கர்களும் அக்காட்டில் இருக்கின்றார்கள். அங்கு சென்று நீங்கள் அந்த அரக்கர்களை அழிக்கவேண்டும். அக்காடு எளிதில் உள்புக முடியாதபடி அடர்ந்த காடாக இருக்கும். ததபஸ்விகள் பழம் பூ வேள்விக்கான பொருள்களை சேகரித்து செல்லும் வழி ஒன்று உள்ளது அதன்வழியாக உள்ளே செல்லலாம் என்று சொல்லி அக்காட்டிற்கு செல்லும் வழியையும் காட்டினார் அத்திரி மகரிஷி. உங்கள் பயணம் நல்லபடியாக அமைந்து செல்லும் காரியம் நிறைவேற வேண்டும் என்று ஆசிர்வதித்தார் அத்திரி மகரிஷி. ராமர் சீதை லட்சுமணனோடு மேக கூட்டத்தில் பிரவேசிக்கும் சூரியனைப்போல் அந்த காட்டில் புகுந்தார்.

அயோத்தியா காண்டம் முற்றியது.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -39

பரதன் ராமரிடம் பேசினான். தந்தையின் ஆணையை நிறைவேற்றியே தீர வேண்டுமானால் நான் தங்களுக்கு பதிலாக 14 வருடங்கள் காட்டில் இருக்கிறேன். எனக்கு பதிலாக நீங்கள் அயோத்தியில் அரச பதவியை ஏற்றுக்கொண்டு ஆட்சி செய்யுங்கள் என்றான். ராமர் இதனைக்கேட்டு சிரித்தார். பரதா இது என்ன பண்ட மாற்று வியாபாரமா ஒருவன் கடமையை ஆபத்துக்காலங்களில் அவனால் செய்ய முடியவில்லை என்றால் மற்றோருவன் செய்வதுண்டு. நான் எற்றுக்கொண்ட விரதத்திற்கு என் உடல் சக்தியில்லாமல் இருந்து என்னால் செய்ய முடியவில்லை என்றால் தம்பி முறையில் நீ செய்யலாம். ஆனால் நான் திடகாத்திரமான வலிமையோடு இருக்கின்றேன். நான் சக்தியற்றும் நீ சக்தியுள்ளவன் என்றும் உன்னால் சொல்ல முடியுமா என்றார். பரதன் தலை குனிந்து நின்றான். வசிஷ்டர் பரதனிடம் நீ ராமனுடைய அனுமதியை பெற்றுக்கொண்டு அரசாட்சி செய் இதனால் எந்த பழி பாவமும் உன்னை வந்து சேராது. சத்தியமும் தர்மமும் காக்கப்படும் என்றார்.

ராமர் பரதனை அனைத்து அயோத்தியை நான் உனக்கு தந்த ராஜ்யமாக எண்ணி அரசாட்சி செய் என்று தன் அன்பின் சக்தியெல்லாம் அவன் மீது செலுத்தி கட்டளையிட்டார் ராமர். பரதன் ராமரிடம் அண்ணா நீயே என் தந்தை என் தெய்வம் நீ சொல்கின்றபடி செய்கின்றேன். நீங்கள் 14 வருடம் முடிந்ததும் அயோத்திக்கு வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்வேன் என்று உறுதி மொழி தாருங்கள். பின்னர் உங்கள் மிதியடியை தந்தீர்கள் என்றால் உங்கள் மிதியடியை சிம்மாசனத்தின் மீது வைத்து 14 வருடங்கள் கழித்து நீங்கள் வரும் வரை அரசாட்சி செய்வேன். எனது பணிகள் அனைத்தையும் உங்கள் மிதியடிக்கு சமர்ப்பிப்பேன் என்றான் பரதன். அப்படியே என்ற ராமர் தனது மிதியடியை பரதனிடம் கொடுத்தார். பரதன் ராமரின் மிதியடியை பெற்றுகொண்டு தன் தலையில் வைத்துக்கொண்டு அயோத்தி நகரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். தாயார் மூவரும் பின் தொடர அனைவரும் அயோத்தி நோக்கி சென்றார்கள்.

அயோத்தி செல்லும் வழியில் பரத்வாஜ முனிவரிடம் நடந்தவற்றை சொல்லி அவரிடம் ஆசி பெற்றான் பரதன். பரதனுடைய குணத்தை பாராட்டிய பரத்வாஜ முனிவர் மழை நீர் பள்ளத்தை நோக்கி பாய்வதை போல உன் குலத்தின் நெறி உன்னை அடைந்திருக்கின்றது. உன்னை பெற்ற தந்தை பெரும் பாக்கியவான். அவர் இறக்கவில்லை உன் சொரூபத்தில் அமரராக இருக்கிறார் என்று சொல்லி வாழ்த்தினார்.

அயோத்தி நகரை அடைந்ததும் பரதன் வசிஷ்டர் மற்றும் மந்திரிகள் அனைவரையும் சபைக்கு வரவழைத்தான். அந்த ராஜ்யம் ராமருடையது. தற்காலிகமாக அவர் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். அண்ணனுக்கு பதிலாக அவரின் மிதியடியை அரசரின் சிம்மாசனத்தில் அமர்த்திருக்கிறேன். ராமர் 14 ஆண்டுகள் கழித்து திரும்பி வரும் வரையில் நான் அருகில் இருக்கும் நந்தி கிராமத்தில் இருந்து ஆட்சி செய்து அவர் எனக்கு இட்ட கட்டளையே நிறைவேற்ற போகின்றேன். தாங்கள் அனைவரும் அதற்கு உறுதுணையாக இருந்து நல்வழிகாட்டுகள் என்றான்.

தொடரும்………..

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -38

வசிஷ்டர் ராமரிடம் பேசினார். ராஜ்யத்தின் அரச பதவியை மூத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உனது குல தர்மம். இன்னொரு பக்கம் தந்தையின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்ற தர்மம். இரண்டில் பெரிய தர்மம் தந்தையின் ஆணையை நிறைவேற்ற வேண்டியது என்ற உன்னுடைய செயல் சரியானதாக இருந்தாலும் உன்னுடைய தம்பி தன் மேல் விழுந்த பழி பாவத்திற்கு அஞ்சி உன்னை தஞ்சம் அடைந்திருக்கின்றான். தஞ்சம் அடைந்தவர்களை காப்பாற்றவேண்டும் கைவிட கூடாது என்பது உன்னுடைய விரதமாயிற்றே. நீ உன்னுடைய விரதத்தையும் காப்பாற்ற வேண்டும் ஆகையால் பரதனுக்காக உன்னுடைய தர்மத்திலிருந்து சிறிது இறங்கிவா என்றார்.

தாங்கள் எனக்கு கூறிய சொற்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்க கூடியதாகவும் என்னால் செய்யக்கூடியதாக இருந்தாலும் இச்செயல் நல்ல வழி போல் தோற்றமளிக்கும். ஆனால் இது தவறான பாதையே ஆகும். அறநூல்களின் உபதேசங்களின் படி நடக்காதவன் தனது ஒழுக்கம் சிந்தனையில் இருந்து வேறுபட்டு பாவங்களை செய்தவன் ஆகின்றான். தந்தையும் தாயும் குழந்தைகளுக்கு செய்யும் சேவைக்கு கைமாறாக அக்குழந்தைகள் வளர்ந்தபின் காலம் முழுவதும் என்ன செய்தாலும் தீர்க்க முடியாது. அதிகபட்சம் அவர் கொடுத்த உத்தரவிற்காவது கட்டுப்பட்டு நடக்க வேண்டும். என் தந்தை எனக்கு காட்டிற்கு 14 வருடங்கள் செல்ல கட்டளையிட்டிருக்கிறார். நான் அவரின் கட்டளைக்கு சம்மதம் தெரிவித்து காட்டிற்கு வந்துவிட்டேன். அவரின் சொல்லை ஒரு போதும் பொய்யாக்க மாட்டேன். இருக்கும் தர்மத்தில் கடைபிடிக்க வேண்டிய பெரிய தர்மம் சத்தியத்தை காப்பாற்றுவதாகும். அவருக்கு கொடுத்த சத்தியத்தை நான் மீற மாட்டேன் என்றார் ராமர்.

ராமர் இவ்வாறு பேசியதும் பரதன் தன்னுடன் வந்தவர்களிடம் முறையிட்டான். எனது அண்ணன் என் மீது சிறிதும் இரக்கம் காட்ட மறுக்கிறார். ஆகையால் இங்கேயே நான் பட்டினி கிடந்து உயிர் துறக்கபோகின்றேன் என்று சொல்லி சுமந்தரனிடம் தர்பை புல்லை கொண்டு வர உத்தரவிட்டான் பரதன். சுமந்திரன் ராமரைப்பார்த்து தயங்கிய படியே நின்று கொண்டிருந்தான். பரதன் தானே சென்று தர்பை புல்லை எடுத்து வந்து ராமரின் முன்பாக போட்டு அமர்ந்தான் சுற்றி இருக்கும் மக்களிடம் பேச ஆரம்பித்தான். ராமர் வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையெனில் நான் இங்கேயே பட்டினி இருந்து உயிர் துறப்பேன் என்றான். மக்கள் பரதனிடம் ராமர் சத்தியம் தவறாதவர். தந்தைக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தன் எண்ணத்தில் அசையாமல் நிற்கின்றார். அவரின் குணம் நமக்கு தெரியும். அவர் அயோத்திக்கு வரமாட்டார். அவரை வற்புறுத்துவதில் பயன் ஒன்றும் இல்லை என்றார்கள்.

ராமர் பரதனை பார்த்து சத்ரிய தர்மத்துக்கு விரோதமான செயலை செய்யாதே எழுத்திரு. அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே செல்வார்கள். நாம் சத்தியத்தை இத்தனை நாட்கள் மீறாமல் காத்தபடியால் மக்களும் சத்தியத்தை மீறாமல் காப்பாற்றுகிறார்கள். மக்களின் பேச்சையும் கேள். அயோத்திக்கு சென்று அரச பதவியை எற்று உனது கடமையை செய் என்றார்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -37

ராமருடைய உறுதியான பேச்சைக்கேட்ட பரதனும் மக்களும் பேச வார்த்தை இல்லாமல் தவித்தார்கள். பரதன் மீண்டும் ராமரிடம் சொன்னான். தாங்கள் ராஜ்யத்தை ஏற்க மறுத்தால் என்மேல் விழுந்த பழி தீராமல் போகும். நான் என்ன செய்தாலும் இப்பாவத்தை போக்க இயலாது என்று வருத்தத்துடன் சொன்னான். அதற்கு ராமர் உன்னை நீயே நிந்தித்துக்கொள்ள வேண்டாம். நடந்தவைகள் அனைத்தும் உன்னாலேயே நடந்தது என்று நீ எண்ண வேண்டாம். விதியே அனைத்திற்கும் காரணம். துக்கத்தை விடு. தேவ ராஜனுக்கு சமமான நமது தந்தையார் எனக்கு இட்ட ஆணையை நான் நிறைவேற்றாமல் போனால் அதற்கு பதிலாக இந்த உலகமே எனக்கு கிடைத்தாலும் நான் திருப்தி அடைய மாட்டேன். தந்தையின் ஆணையை என்னால் நிராகரிக்க முடியாது. தந்தையின் கட்டளையை நாம் இருவரும் ஏற்க வேண்டும். உன்னிடம் ஒப்படைத்த ராஜ்ஜியத்தை நீ ஏற்றுக்கொண்டு அரச பதவியை நீ தாங்கியே ஆக வேண்டும். அயோத்திக்கு சென்று அரசனுக்கு உரிய பணியை செய்து மக்களுக்கு நன்மையை செய். உனக்கு உதவியாக சத்ருக்கணன் இருக்கின்றான். எனக்கு உதவியாக லட்சுமணன் இருக்கின்றான். தசரதரின் நான்கு புத்திரர்களாகிய நாம் நால்வரும் தந்தையின் ஆணையை நிறைவேற்றுவோம் என்று உறுதியுடன் கூறினார் ராமர்.

ராமரின் உறுதியையும் ராமருக்கு துணையாக லட்சுமணனேயும் பரதனின் அன்பையும் பரதனுக்கு துணையாக சத்ருக்கணனையும் பார்த்த கௌசலை சுமத்ரை கைகேயி மூவரும் களங்கமற்ற உள்ளத்தை கொண்ட ராஜகுமாரர்களை பெற்றோமே என்று மகிழ்ந்தார்கள். பரதனுடன் வந்த மக்கள் கூட்டத்தில் இருந்த ஜாபலர் என்ற புரோகிதர் இடையில் ராமருக்கு வணக்கம் செலுத்தி பேசினார். தந்தையின் ஆணை என்று திரும்ப திரும்ப சொல்கின்றீர்கள். தசரதர் என்பது ஒரு உடல். அது அழிந்து பஞ்ச பூதங்களுடன் கலந்து விட்டது. இல்லாத ஒரு உருவத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருப்பது போலவே பேசுகின்றீர்கள். இது அறியாமை. கண் எதிரே இருக்கும் சுகங்களை அனுபவிக்காமல் விட்டு விட்டு மூடர்கள் பேசும் பேச்சு போல் இருக்கினது தாங்கள் பேசுவது. துயரத்தில் மூழ்கி கிடக்கும் பெண் ஒருத்தி கூந்தலை வாரி முடிக்காமல் உள்ளது போல் அயோத்தி இப்போது துக்கத்தில் கிடந்து உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. பட்டாபிஷேகம் செய்து கொண்டு சுகங்களை அனுபவித்துக் கொண்டு மகிழ்ச்சியாய் இருந்து அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுங்கள் அதுவே இப்போதைய தர்மம். பரதன் சொல்வதை கேளுங்கள் என்றார்.

ராமருக்கு அவர் இவ்வாறு பேசியது அதிருப்தியை உண்டாக்கியது. சத்தியத்தை நீங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று எண்ணுகின்றேன். நீங்கள் நாத்திகம் பேசுவது போல் உள்ளது. இது சரியாக இல்லை. சத்தியத்தை விட உயர்ந்த பொருள் உலகத்தில் இல்லவே இல்லை என்றார் ராமர். வசிஷ்டர் ராமரை சமாதானம் செய்தார். உன்னை எப்படியாவது அயோத்திக்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என்றும் பரதனுடைய துக்கத்தை போக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் அவ்வாறு பேசினார். அவர் மீது கோபிக்க வேண்டாம் என்றார் வசிஷ்டர்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -36

ராமர் பரதனிடம் பேச ஆரம்பித்தார். தந்தை உனக்கு தந்த ராஜ்யத்தை விட்டு தபஸ்விகளுக்கான உடைகளை அணிந்து கொண்டு ஏன் இங்கு வந்திருக்கிறாய். மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருக்கும் போது கடமையை விட்டு வந்திருக்கும் காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் சொல் என்றார். பரதன் பல தடவை பேச ஆரம்பித்து பேச முடியாமல் திக்கி திணறி மெதுவாக பேச ஆரம்பித்தான். உங்களை காட்டுக்கு அனுப்பிவிட்டு யாரும் செய்யத் துணியாத காரியத்தை செய்துவிட்டேனே என்று துக்கத்திலேயே வெந்து மேலுலகம் சென்று விட்டார் தந்தை. என்னை பெற்றவளும் தான் விரும்பிய சந்தோசத்தை பெற முடியாமல் மகா பாவம் செய்து உலகத்தால் பழிக்கப்பட்டு உயிருடன் நரக வேதனை அனுபவித்துக் கொண்டு சோகத்தில் மூழ்கி இருக்கின்றாள். அயோத்தி மக்கள் துக்கமே வடிவமாக மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். மாற்றங்கள் ஏதும் செய்து இனி தந்தையை பெற முடியாது. ஆனால் நீங்கள் அரச பதவியை எற்க சம்மதம் தெரிவித்து உங்களுக்கு உரிய ராஜ்யத்தை நீங்கள் அடைந்தால் அயோத்தி மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். தாயார் கௌசலையும் சுமத்ரையும் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள். தாயார் கைகேயி இனி வரப்போகும் பழிச்சொல்லில் இருந்து மீள்வார். சூழ்ச்சியால் ராஜ்யத்தை பெற்றேன் என்ற பழிச்சொல் என்னையும் விட்டு நீங்கும். அரச குடும்பத்தில் மூத்தவர் அரசனாக வேண்டும் என்ற நமது குல தர்மம் காப்பாற்றப்படும்.

சொர்க்கம் சென்ற தந்தையும் இதனையே விரும்புவார். உரிய அரசனில்லாமல் அயோத்தி நகரம் தேய்ந்த சந்திரனைப்போல் இருட்டாக இருக்கிறது. அதனை அகற்றி அயோத்தியை பூரண சந்திரனைப்போல் மங்கள நகரமாக்கி வெளிச்சமாக்குங்கள். உங்கள் பாதங்களில் வீழ்ந்து கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அரசனானால் அனைத்து பிரச்சனைகளுக்கும் சுமூகமான தீர்வு கிடைத்துவிடும். அரச பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என்ற தங்களின் வார்த்தையை கேட்க ஆவலுடன் நமது தாயார் மூவர் முதல் மக்கள் வரை காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மறுத்துவிடாதீர்கள் என்று கண்களில் நீர் வழிய ராமரின் காலை பிடித்துக்கொண்டான் பரதன்.

பரதனை தூக்கிய ராமர் தன் அருகில் அமர வைத்து பேச ஆரம்பித்தார். நாம் நால்வரும் நற்குலத்தில் பிறந்தோம். நல்ல முறையில் வளர்க்கப்பட்டோம். நாம் நால்வரும் ஒரு நாளும் தவறு செய்ய மாட்டோம். உன்னிடம் எள் அளவும் குறைகளை நான் இதுவரை கண்டதில்லை. நீ துக்கப்பட வேண்டாம். உனது தாயாரையும் குற்றம் கூற வேண்டாம். நம்முடைய குல பண்பாட்டுக்கு இது தகாது. நம்மை பெற்ற தந்தையும் தாயும் நமக்கு எந்த ஆணையும் இடலாம். அது அவர்களுடைய உரிமை. காட்டிற்கு அனுப்புவதும் ராஜ்யத்தை கொடுப்பதும் அவர்களுடைய உரிமை. அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றி தாய் தந்தையை கௌரவிப்பது நமது கடமை. உனக்கு ராஜ்ய பொறுப்பை தந்து எனக்கு 14 ஆண்டுகள் வனத்தின் தவ வாழ்க்கையை வகுத்துக் கொடுத்திருக்கிறார். இதனை நாம் மீறலாகாது. 14 ஆண்டுகள் 14 நாட்கள் போல் கழித்துவிட்டு விரைவில் அயோத்தி திரும்பிவருவேன் என்றார் ராமர்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -35

ராஜ குமாரர்கள் நால்வரும் மந்தாகினி ஆற்றங்கரைக்கு சென்றார்கள். அங்கே தசரதருக்கு செய்ய வேண்டிய தர்பணங்களை முறைப்படி செய்தார்கள். ஒருவரை ஒருவர் அணைத்து தங்கள் துயரத்தை தீர்த்துக்கொண்டு குடிசைக்கு திரும்பினார்கள். கௌசலை சுமத்ரை கைகேயி மூவரையும் ராமர் இருக்கும் குடிசைக்கு செல்லலாம் வாருங்கள் என்று வசிஷ்டரரும் அவர்களுடன் கிளம்பினார். வழியில் மந்தாகினி ஆற்றங்கரையில் பித்ருக்களுக்கான தர்ப்பை புல்லும் எள்ளும் வைத்திருப்பதை பார்த்தார்கள். இந்த ஆற்றங்கரையில் இருந்து தான் தங்களுக்கு தேவையான நீரை கொண்டு செல்வார்கள் அருகில் தான் ராமர் இருக்கும் குடிசை இருக்கின்றது என்றார் வசிஷ்டர். எவ்வளவு வசதியாக வாழ்ந்த ராஜ குமாரர்கள் இங்கிருந்து குடிசை வரை தண்ணீர் சுமந்து கொண்டு செல்கின்றார்களா என்று கௌசலை அழ ஆரம்பித்தாள். சுமத்திரை கௌசலையை ஆறுதல் படுத்தினாள். ராமருக்காக லட்சுமணன் தினந்தோறும் தண்ணீரை சுமந்து கொண்டு செல்வதை மகிழ்ச்சியாகவே செய்வான். லட்சுமணனுக்கு இது பெரிய கடினமான காரியம் இல்லை என்று பேசிக்கொண்டே குடிசைக்கு அருகில் வந்தார்கள்.

நான்கு ராஜ குமாரர்களும் பட்டத்து அரசிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அரண்மனையில் சுக போகத்துடன் வாழ்ந்த ராஜகுமாரர்கள் குடியையில் இருப்பதை பார்த்ததும் சக்தியற்றவர்களாக கௌசலையும் சுமத்ரையும் அங்கேயே அமர்ந்து விட்டார்கள். கௌசலையிடம் விரைவாக வந்த ராமர் அவளை தூக்கி தலையில் தடவிக்கொடுத்தார். ராமரின் ஸ்பரிசத்தில் மயங்கிய கௌசலை ஆனந்தத்தில் மூழ்கிப்போனாள். சீதையிடம் வந்த கௌசலை ஜனகருக்கு மகளாகப் பிறந்து அயோத்திக்கு மருமகளாய் வந்து இந்த காட்டில் சிறு குடியையில் தங்கியிருக்கின்றாய். உன்னை பார்த்ததும் நெருப்பில் எரியும் விறகு போல் என் மனம் எரிகிறது என்று சீதையை அணைத்துக்கொண்டாள். சுமித்ரையின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி ராமரும் லட்சுமணனும் ஆசி பெற்றனர். நீண்ட கால பிரிவை ஒட்டி ஒருவரை ஒருவர் தங்கள் கண்களில் நீர் வழிய அணைத்துக் கொண்டு ஆனந்தம் கொண்டார்கள்

ராஜ குமாரர்கள் பட்டத்து அரசிகள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்கின்றார்கள் என்று தெரிந்தவுடன் படைகள் அனைத்தும் அவர்கள் இருக்குமிடம் நோக்கி விரைந்து வந்தார்கள். தசரதரை இழந்த துக்கத்தில் இருந்த அனைவரையும் ஒன்றாக பார்த்த மக்கள் இனி ராமர் அயோத்திக்கு திரும்பி வந்து விடுவார் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். வசிஷ்டருடைய பாதங்களில் ராமரும் லட்சுமணனுடன் பரதனும் சத்ருக்கணனும் வீழ்ந்து வணங்கி அவருக்கு தங்களுடைய வணக்கத்தை செலுத்தினார்கள். வசிஷ்டர் அவர்களுக்கு ஆசி கூறி ஓரிடத்தில் அமர்ந்தார். அவரை பின்பற்றி அனைவரும் அமர்ந்தார்கள். பரதன் ராமரின் அருகில் வந்து அமர்ந்தான். மக்கள் அனைவரும் பரதன் ராமரிடன் என்ன பேசப்போகின்றார் எப்படி ராமரை அயோத்திக்கு அழைக்கப்போகின்றார் என்ற ஆர்வத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -34

ராமரிடம் பரதன் பேச ஆரம்பித்தான். ராஜ தர்மத்தைப் பற்றி பேச நான் தகுதியற்றவனாய் நிற்கின்றேன். சிம்மாசனத்தில் அமர்ந்து ராஜ்யம் செய்ய நீங்கள் இருக்கும் போது நான் எப்படி அரசனாவேன். தர்மத்தை மீறி சிம்மாசனத்தில் நான் அமர்ந்தால் அரசனுக்கு உரிய தர்மத்தை என்னால் அனுஷ்டிக்க முடியாது. எனக்கு தெரிந்த தர்மம் தங்களுக்கு அடிமையாக இருந்து தங்களுக்கு சேவை செய்வது மட்டுமே. நீங்கள் காட்டிற்கு வந்து விட்டபடியால் இத்தனை நாட்கள் அதற்கும் பிராப்தம் இல்லாமல் போய் விட்டது. நமது ராஜ குல தருமப்படி மூத்தவரே அரசனாக வேண்டும். பல தலைமுறைகளாக இருக்கும் நமது குலத்தின் பொதுவான தருமம் இது. நாட்டின் நலன் கருதி நீங்கள் அயோத்திக்கு வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கேயே தங்களுக்கு பட்டாபிஷேகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளுடன் வந்திருக்கின்றோம். தயவு செய்து அரச பதவியை ஏற்றுக்கொண்டு நாட்டுக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டிய நன்மைகளை செய்யுங்கள் என்றான் பரதன்.

ராமர் பேச ஆரம்பித்தார். கேகய நாட்டில் இருக்கும் நீ அயோத்திக்கு வந்து பின்னர் தந்தையை பிரிந்து வெகு தூரத்தில் இருக்கும் யாராலும் எளிதில் உள்ளே வரமுடியாத அடர்ந்த காட்டிற்குள் வந்திருக்கறாய் என்றால் என்னை பிரிந்த தந்தையார் மனோ தைரியத்துடன் இருக்கின்றார் என்று எண்ணுகின்றேன். தாயார் மூவரின் நலம் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றார்களா சொல் இதனை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன் என்றார் ராமர்.

நான் கேகய நாட்டில் இருந்த போது அரண்மனையில் நடந்த சூழ்ச்சியால் நீங்கள் அயோத்தியில் இருந்து கிளம்பி காட்டிற்கு வந்துவிட்டீர்கள். பற்பல வேள்விகளை செய்தவரும் மாவீரராய் திகழ்ந்தவரும் சான்றோர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட நமது தந்தை தசரதர் உங்களை பிரிந்த துக்கத்தை தாங்க முடியாமல் நோய் வாய்ப்பட்டு உங்கள் பெயரை மீண்டும் மீண்டும் சொல்லி அழைத்துக்கொண்டே இருந்தார். சுமந்திரன் வரும் போது நீங்களும் அவனுடனேயே திரும்பி வந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார். சுமந்திரன் மட்டும் தனியாக வந்ததை பார்த்ததும் தங்களின் பெயரை கூறிக்கொண்டே சொர்க்கலோகம் புகுந்து விட்டார் நமது தந்தையார் என்று தழுதழுத்த குரலில் கூறினான் பரதன். பரதன் கூறியதை கேட்டதும் கோடாலியால் வெட்டப்பட்ட மரம் போல ராமர் கீழே விழுந்தார்.

ராமரை தாங்கிபிடித்த பரதன் நம்முடைய தந்தையாருக்கு செய்ய வேண்டிய கிரியை கடமைகளை நானும் சத்ருக்கனனும் செய்து விட்டோம். தந்தைக்கு மிக பிரியமானவராக தாங்கள் இருந்தீர்கள். உங்கள் ஞாபகமாகவே தந்தை உடலை விட்டார். நீங்கள் கொடுக்கும் பிதுர்கடனே அவருக்கு சாந்தி தரும். அவருக்கு செய்ய வேண்டி கடமைகளை நீங்களும் லட்சுமணனும் செய்து முடிக்கவேண்டும். தாங்கள் வருந்தவேண்டாம். நீங்களே எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டியவர் என்று ஆறுதலாக சொல்லி முடித்தான் பரதன்.