ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 14

ராமர் தாரையிடம் பேச ஆரம்பித்தார். இறப்பு பற்றி இது போன்ற தவறான எண்ணத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். பிரம்மா தான் இவ்வுலகை படைத்து இங்குள்ள அனைத்து சுக துக்கங்களையும் கொடுக்கிறார். மூன்று உலகத்தில் உள்ளவர்களும் பிரம்மாவின் விதியை மீறிச் செயல்படுவதில்லை. ஏனென்றால் எல்லோரும் அவர் வசத்தில் உள்ளார்கள். இனி வரும் காலத்தில் உனது மகன் இளவரசனாக பட்டம் சூட்டப்படுவான். நீ முன்பு இருந்தது போல் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருப்பாய். உனது விதி பிரம்மாவினால் இவ்வாறு தான் எழுதப்பட்டிருக்கிறது. மகாவீரனுடைய மனைவிகள் இவ்வாறு வேதனைப் படக்கூடாது வருந்தாதீர்கள் என்று தாரையிடம் ராமர் சொல்லி முடித்தார். நடப்பவற்றை முன்பே அறியும் திறன் கொண்ட தாரைக்கு வந்திருப்பது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை அறிந்து கொண்டு ராமரை வணங்கினாள். ராமரின் பேச்சு தாரைக்கு ஆறுதலை தந்தது. தனது அழுகையை விட்டு மௌனமானாள். வாலியின் மார்பில் இருந்த அம்பினை மந்திரி நீலன் பிடுங்கி எடுத்தான். அம்பு வெளியே வந்தவுடன் இரத்தம் பீறிட்டுக் கொண்டு வந்தது. அவன் உயிரும் அவனை விட்டு விடைபெற்றது. தாரை உயிரற்ற அவன் உடல் மீது விழுந்து புரண்டு அழுதாள். சுக்ரீவன் பேச ஆரம்பித்தான். நான் எவ்வளவு பெரிய குற்றம் செய்தாலும் என்னைக் கொல்லாமல் ஓடிப்போ உயிர் பிழைத்துக்கொள் என்று என்னை என் அண்ணன் துரத்தினான். சாகும் தருவாயில் கூட ராஜ்யத்தை எடுத்துக்கொள் என்று எனக்கு தந்தானே. அவனை சதி செய்து கொன்று விட்டேன். என்னை போன்ற பாதகன் உலகத்தில் யாரும் இல்லை. நான் உயிர் வாழ்வதில் அர்த்தம் இல்லையே என்று தனது பெரும் குற்றத்தை எண்ணி அழுதான்.

ராமர் பேச ஆரம்பித்தார். சோகத்தில் அனைவரும் மூழ்கி இருப்பதால் இறந்தவருக்கு எந்த நன்மையும் ஏற்படாது. காலம் கடந்து செய்யும் எந்த செயல்களும் பயன் தராது. வாலிக்கு உடனடியாக செய்ய வேண்டிய கர்மங்களை செய்யுங்கள் என்றார். இதனைக் கேட்ட லட்சுமணன் சுக்ரீவனிடத்தில் அங்கதனுடன் கலந்தாலோசித்து விரைவில் வாலிக்கான ஈமச் சடங்குகளை செய்து முடியுங்கள் என்று கேட்டுக்கொண்டான். அனைவரும் தங்களுக்குள் உள்ள சோகத்தை தள்ளி வைத்தனர். அரசனுக்குரிய மரியாதையுடன் வாலியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

ராமர் இருக்குமிடம் அனைவரும் வந்து சேர்ந்தார்கள். அனுமன் ராமரிடன் பேச ஆரம்பித்தார். தங்கள் பேருதவியால் சுக்ரீவன் வானர பேரரசை பெற்றுள்ளார். இப்போது தாங்கள் கிஷ்கிந்தைக்கு வந்து சுக்ரீவன் அரசனாகவும் அங்கதன் இளவரசனாகவும் முடிசூட்ட வேண்டும். பின்பு எங்கள் அரசன் தங்களை கௌரவித்து தங்களுக்கு கொடுத்த வாக்குப்படி சீதையை தேடுவதற்கான உத்தரவை வானரங்களுக்கு பிறப்பிப்பார் என்று சொல்லி முடித்தார் அனுமன். ராமர் அனுமனை நோக்கி தந்தையின் சத்தியத்தை நான் காப்பாற்ற வேண்டும். அதனால் பதினான்கு ஆண்டு காலம் எந்த கிராமம் மற்றும் நகரத்திற்குள்ளும் வர மாட்டேன். நீங்கள் மட்டும் சென்று உங்கள் மரபுப்படி சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம் செய்யுங்கள் என்றார். சுரீவனுக்கும் அங்கதனுக்கும் வானரங்களின் மரபுப்படி பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. பட்டாபிஷேகம் முடிந்ததும் ராமரிடம் சென்ற சுக்ரீவன் தனது வணக்கத்தை தெரிவித்துக்கொண்டான். அப்போது மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. மழையால் வெள்ளம் காட்டிற்குள் பெருக்கெடுத்து ஓடியது. செல்லும் பாதைகள் எல்லாம் தடைபட்டுக் கிடந்தது. இதனால் சீதையே தேடும் பணி மேலும் சிறிது நாட்கள் தள்ளிச் சென்றது. ராமர் இதனால் சிறிது வருத்தப்பட்டார். மழைக் காலத்தில் இப்போது சீதையை தேட சென்றால் அனைவருக்கும் கடினமாக இருக்கும். எனவே மழைக்காலம் முடிந்ததும் தேட ஆரம்பிக்கலாம். அதுவரை நாங்கள் காட்டிலேயே இருக்கின்றோம் என்று சொல்லி சுக்ரீவனை ராமர் அனுப்பினார்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 13

ராமரிடம் வாலி பேச ஆரம்பித்தான். தங்களிடம் 2 வரங்கள் கேட்கின்றேன் தாங்கள் கொடுக்க வேண்டும். முதலாவது என் தம்பி சுக்ரீவன் சில நேரங்களில் மதி மயக்கத்தில் மறந்து உங்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் தவறக் கூடும். அதைப் பெரிதாகக் கொள்ளாமல் அவனை மன்னித்து விடுங்கள். கோபத்தில் என் மீது செலுத்திய அம்பை அவன் மீது செலுத்த வேண்டாம். அதைத் தாங்கும் ஆற்றல் அவனுக்கு இல்லை. சுக்கிரீவனை உங்கள் தம்பி லட்சுமணனைப் போல ஏற்றுக் கொண்டு பாசமும் பரிவும் காட்டுங்கள். இரண்டாவது என் மகன் அங்கதனை உங்களிடம் அடைக்கலம் வந்தவானாக ஏற்றுக்கொண்டு ஆதரவு அளியுங்கள். அனுமனை உங்கள் வில்லைப் போல வலிமையுள்ள துணைவனாய் ஏற்றுக்கொள்ளுங்கள். இவர்கள் துணையோடு சீதையைத் தேடி அடையுங்கள் என்று ராமரிடம் சொல்லி முடித்தான் வாலி. ராமனின் மதிப்பில் வாலி மிக உயர்ந்து நின்றான்.

ராமர் தனது உடைவாளை அங்கதனிடம் தந்து அவனை பெருமைப் படுத்தினார். வாலியிடம் நீ செய்த பாவத்திற்கு தண்டனையை அனுபவித்து விட்டாய். தற்போது எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு விட்டாய் என்று ராமர் உறுதியளித்தார். அனுமன் அழுது கொண்டிருந்த தாரைக்கு அறுதல் சொன்னார். வாலி நிச்சயமாக நல்ல மேலுலகம் அடைவார். ஆகையால் வாலியைப்பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை. வாலிக்கு சரியானபடி காரியங்களை செய்து விட்டு அங்கதனுக்கு பட்டாபிஷேகம் செய்வோம். அதனை கண்டு மகிழ்வோம். அங்கதனுக்கு புத்திகூறி வளர்க்க வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது. கவலையை விட்டு சிறிது சாந்தமாக இருங்கள் என்று கூறினார். அதற்கு தாரை இனி இவ்வுலகத்தில் எனக்கு வேண்டியது ஒன்றுமில்லை. சுக்ரீவன் தனது மகனைப் போலவே அங்கதனை பார்த்துக் கொள்வான். ஆயிரம் அங்கதன் வந்தாலும் அது வாலிக்கு சமமாக இருக்காது. நான் வாலியுடன் மேலுலகம் செல்கிறேன் என்றபடி அழுது கொண்டே இருந்தாள். வாலியைக் கொன்ற ராமரின் மேல் எந்த கோபத்திற்கான அறிகுறியும் தன் முகத்தில் இல்லாமல் ராமரை நோக்கி சென்றாள் தாரை.

ராமரிடம் தாரை பேச ஆரம்பித்தாள். தாங்கள் யாராலும் அறிந்து கொள்ள முடியாத தன்மையை உடையவர். முக்காலமும் அறிந்தவர். உயர்ந்த தர்மங்களை கடைபிடிப்பவர். பூமியை போல் பொறுமை மிக்கவர். மனித உடலுக்கான இயல்பான பண்புகளை ஒதிக்கி தள்ளி வைத்து விட்டு தெய்வீகமான பண்புகளுடன் இருக்கின்றீர்கள். மேலுலகம் சென்ற வாலி அங்கு என்னை தேடி அலைவார். நானில்லாமல் அவரால் இருக்க முடியாது. மனைவியை பிரிந்த ஒருவர் எவ்வளவு மன வேதனையுடன் இருப்பார் என்று தங்களுக்கு தெரியும். எந்த அம்பினால் வாலியை கொன்றீர்களோ அதை அம்பினால் என்னையும் கொன்று விடுங்கள். அவர் இருக்குமிடம் நானும் செல்கிறேன். நாங்கள் இருவரும் மேலுலகத்தில் மகிழ்ச்சியுடன் இருப்போம். உத்தமமான தாங்கள் எப்படி ஒரு பெண்ணை கொல்வது இது மாபெரும் பாவம் என்று எண்ணாதீர்கள். இங்கு பாவத்திற்கு இடமில்லை. என்னை கொன்றால் அதற்கான பாவம் தங்களை வந்து சேராது. உலகத்து ஞானிகளின் கருத்துப்படி கணவனிடம் மனைவியை கொடுக்கும் பெண் தானத்தை விட உயர்ந்த தானம் வேறு ஒன்றும் இல்லை. தாங்களும் அந்த அறநெறிப்படி மேலுலகம் செல்லும் என் கணவரிடம் என்னை கொடுத்து விடுங்கள். இப்படி தானம் செய்வதினால் தங்களுக்கு எந்த பாவமும் வராது. வாலி இல்லாமல் இந்த உலகத்தில் என்னால் உயிர் வாழ முடியாது. சில நாட்களில் நான் இறந்து விடுவேன். இப்போதே நீங்கள் என்னை கொன்று பெண் தானம் செய்த புண்ணியத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று ராமரிடம் சொல்லி முடித்தாள் தாரை.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 12

ராமரால் வாலி கொல்லப்பட்டான் என்ற செய்தி கிஷ்கிந்தைக்கு தெரிந்தது. இச்செய்தியை கேட்டதும் தாரை நடுநடுங்கிப்போனாள். தன் மகன் அங்கதனுடன் தனது அறையிலிருந்து வெளியே வந்தாள். கிஷ்கிந்தையில் வானரங்கள் அங்குமிங்கும் பயந்து ஓடினார்கள். வானர சிங்கமான வாலி யுத்தத்திற்கு செல்லும் போது அவருக்கு முன்பாக செல்வீர்கள். இப்போது தனியாக இருக்கும் அவர் இருக்குமிடம் செல்லாமல் பயந்து ஓடுகின்றீர்கள். நில்லுங்கள் ஓடாதீர்கள் என்ற தாரை அவர்களிடம் பேச ஆரம்பித்தாள். சுக்ரீவனை அரசனாக்குவதற்காக வாலியைக் கொன்றான் ராமன். அவரால் உங்களுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை. ராமரை கண்டு நீங்கள் அனாவசியமாக பயந்து ஓட வேண்டாம் என்று வானரங்களுக்கு தைரியம் கொடுத்த பிறகு அங்கிருந்து சண்டை நடந்த இடத்திற்கு செல்ல ஆயத்தமானாள். வானரங்கள் அவளை தடுத்தார்கள். வாலியின் மகன் அங்கதனுக்கு பட்டாபிஷேகம் செய்து முதலில் அரசனாக்கி விட்டு கோட்டையை பத்திரப்படுத்துவோம். பிறகு சுக்ரீவனும் அவர்களுக்கு துணையாய் இருப்பவர்களும் நமது நாட்டை அவர்கள் கைப்பற்றாமல் காப்பாற்றுவோம் என்றார்கள். அதற்கு தாரை என் கணவர் வாலி இறந்த பிறகு அங்கதனால் எனக்கு ஒன்றும் ஆக வேண்டியதில்லை. அரசாட்சியால் என்ன பயன். நான் உயிரோடு இருந்து ஆகப்போவதென்ன? ராமனால் கொல்லப்பட்ட வாலியை காண்பதற்கான செல்கிறேன் என்று கதறி அழுதபடி நேராக சண்டை நடந்த இடத்திற்கு விரைந்து சென்றாள். தரையில் கிடந்த வாலியைப் பார்த்து துக்கத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுதாள். வாலியின் குமாரன் அங்கதனும் தாரையுடன் கதறி அழுதான். இக்காட்சியைக் கண்ட சுக்ரீவனுடைய உள்ளத்தில் தவறு செய்து விட்டோமோ என்ற உணர்ச்சி ஏற்பட்டது. அதற்குத் மரணத்தருவாயில் இருந்த வாலி கண்ணை திறந்து சுக்ரீவனைப் பார்த்து மெதுவாக பேச ஆரம்பித்தான்.

ராமருக்கு நீ வாக்களித்தபடி அவருக்கு தேவையானதை செய்து முடிக்க வேண்டும். அலட்சியமாக இருந்து விடாதே. நீ கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போனால் அதனால் உனக்கு பெரும் பாவம் வந்து சேரும் ராமரால் நீ கொல்லப்படுவாய் ஞாபகம் வைத்துக்கொள். சுக்ரீவா நாம் இருவரும் ஒன்றாக இருந்து சந்தோசமாக இந்த ராஜ்ஜியத்தை ஆண்டு அனுபவித்திருக்கலாம். ஒரே நேரத்தில் நாம் இருவரும் சுகமாக இருக்க வேண்டும் என்று விதி நிர்ணயிக்கவில்லை என்று எண்ணுகிறேன். தீர விசாரிக்காமல் இருந்த என்னுடைய தவறை அதிகமாக இருக்கிறது. முற்பிறவியில் செய்த வினைகளின் விளைவாக இப்பிறவியில் பல செயல்களை செய்ய வைக்கிறது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. இப்போது அதைப் பற்றி பேசிப்பயனில்லை. நான் மேலுலகம் செல்லப் போகிறேன். இந்த கிஷ்கிந்தைக்கு நீயே அரசனாகி இந்த ராஜ்யத்தை ஆழ்வாய். எனது உயிரை விட மேலான மகன் அங்கதனை உன்னிடம் ஒப்படைக்கிறேன். அவன் உன்னை போன்ற வீரன். யுத்தம் என்று வந்தால் உனக்கு முன்பாக போர்க்களத்திற்கு வந்து நின்பான். எனக்கு பதிலாக நீ அவனுக்கு தந்தையாக இருந்து அவனை அன்புடன் பார்த்துக்கொள் என்று உன்னிடம் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து என் மனைவி தாரை மிகுந்த அறிவாளி சூட்சுமமான பல விஷயங்களை முன்பே அறியும் சக்தி பெற்றவள். அவள் இவ்விதம் நடக்கும் என்று ஒன்றைக் கூறினால் அது அப்படியே நடக்கும். இதில் சந்தேகம் இல்லை. எனவே அவளுடைய யோசனையே எந்த விஷயத்திலும் தட்டாதே என்று சுக்ரீவனிடம் சொல்லி முடித்தான். அங்கதனிடம் வாலி பேச ஆரம்பித்தான். இந்த நாட்டின் அரசனாகிய சுக்ரீவனிடத்தில் நீ மரியாதையாகவும் பணிவுடனும் உள்ளன்புடனும் நடந்து கொள் என்று அங்கதனிடம் மேலும் பல புத்திமதிகளை சொல்லி முடித்தான் வாலி.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 11

ராமர் வாலியின் கேள்விக்கு மேலும் பதில் கூறினார். இந்திரன் உனக்கு கொடுத்த வரத்தைக் காக்கவும் இந்திரனின் வரத்தின் மதிப்பை குறைத்துவிட வேண்டாம் என்பதற்காகவும் உன் மீது மறைந்திருந்து அம்பு எய்தேன். இதில் தவறு ஒன்றும் இல்லை. மேலும் சத்திரியர்கள் வேட்டையாடும் போது கவனமின்றி இருக்கும் மிருகங்களை மறைவான இடத்திலிருந்து அம்புகளால் தாக்குவதுண்டு. நீ ஒரு வானரம் என்பதால் மறைந்திருந்து முன்னறிவிப்பின்றி உன்னைத் தாக்கியதில் எந்த தவறும் இல்லை. எனது மனைவியை தேடுவதற்கு ஒரு மன்னனின் உதவி தேவைப்பட்டது. தர்ம சாஸ்திரங்களின்படி ஒரு மன்னன் தனது எதிரியை வெற்றி கொள்வதற்கு மற்றொரு மன்னனின் உதவியை நாடலாம். அதன்படி சுக்ரீவனை சந்தித்து நட்பு கொண்டேன். சுக்கிரீவன் முதலில் என்னைச் சரணடைந்து தனக்கு உதவுமாறு வேண்டினான். உன்னைக் கொல்வதாக நான் சுக்ரீவனுக்கு வாக்குறுதி அளித்துவிட்டேன். சத்திரியன் கொடுத்த வாக்கை மீறுவதில்லை என்பதால் அந்த வாக்கை தற்போது நிறைவேற்றியுள்ளேன். உன்னை அழிக்க உனது முன்னால் வரும் போது நீயும் என்னை சரணடைந்து அடைக்கலம் கொடு என்று கேட்டால் அப்போது என்னால் ஒன்றும் செய்ய முடியாது. சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்கை மீறியவனாவேன். அதைத் தவிர்ப்பதற்காகவும் சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காவும் மறைந்திருந்து அம்பு செலுத்த வேண்டி இருந்தது என்று சொல்லி முடித்தார் ராமர்.

ராமரிடம் மேலும் பேசினான் வாலி. ஒழுக்கம் என்பது மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட வரைமுறைகள். நாங்கள் விலங்குகள் விலங்குகளுக்குள் கணவன் மனைவி என்று உரிமை கொண்டாட முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடுக்கு இங்கே இடம் இல்லை. நாங்கள் விரும்பியவாறு வாழலாம் என்பது எங்களுக்கு உள்ள உரிமை. வல்லவன் எதையும் செய்யலாம். நாங்கள் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு வாழ்பவர்கள். மனிதருக்குச் சொல்லப்பட்ட அளவு கோல்களை வைத்து எங்களை அளப்பதில் நியாயம் இல்லை என்று வாலி கூறினான். அதற்கு ராமர் மிருகம் மனிதன் என்பது உடலைப் பற்றியது. ஆனால் சத்தியம் அனைவருக்கும் ஒன்றே. தம்பியின் தாரத்தைத் தங்கையாக மதிக்க வேண்டிய நீ அவளைத் துணைவியாக ஆக்கிக் கொண்டாய். பிறர் மனைவியை விரும்பும் அற்பத்தனம் உன்னிடம் அமைந்துள்ளது நீ உயிர் வாழத்தகுதியானவன் அல்ல. விலங்கு என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளமுடியாது என்றார் ராமர்.

ராமரின் பதிலில் திருப்தி அடைந்த வாலி அடுத்த கேள்வியை கேட்டான். உனது மனைவியை தூக்கிச் சென்ற ராவணனைக் கொல்வதற்கு என் நட்பை நீ தேடி இருக்கலாம். ஒரு கனத்தில் ராவணனை கயிற்றால் கட்டி தூக்கி வந்திருப்பேன். சிங்கத்தைத் துணையாக வைத்துக் கொள்வதை விட்டு சிறுமுயலை நம்பி விட்டாய். உன்னிடம் முன் யோசனை இல்லை என்றான் வாலி. அதற்கு ராமர் பற்களைக் குத்தித் துய்மைப்படுத்த சிறு துரும்பு போதும் எனக்கு உலக்கை தேவை இல்லை. அதுபோல் ராவணனை அழிக்க எனக்கு நீ தேவை இல்லை உன் தம்பியே போதும் என்று கூறினார். அதற்குப் பின் ராமர் தவறு செய்திருக்க மாட்டார். தவறு தன்னுடையது தான் என்று உணர்ந்த வாலி மனம் மாறி ராமரிடம் நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்றான்.

தொடரும்….

குறிப்பு: ராமர் வாலியை தாக்கியதற்கு வேறு சில பின்னணிக் காரணங்களும் உள்ளது. முதலில் வாலி யாராலும் எதிர்த்து வெற்றி கொள்ள முடியாத தன்னை விஷ்ணு அவதாரமெடுத்து அழிக்க வேண்டும் என்று விரும்பியிருந்தான். இரண்டாவதாக ராவணால் வாலியை எதிர்க்க முடியாமல் அவனை அழிக்க சில அரக்கர்களை அனுப்பி பல தந்திரங்களையும் செய்திருந்தான் ராவணன். அதன் காரணமாகவே வாலியும் சுக்ரீவனும் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திரனிடம் வாலி வரம் பெற்றதும் ராகுவிற்கும் வாலிக்கும் சண்டை ஏற்பட்டது. அதில் தோற்ற ராகு வாலியிடம் உனது மரணத்திற்கு நானே காரணாமாக இருப்பேன் என்று சாபமிட்டிருந்தான். வாலியும் சுக்ரீவனும் சண்டையிட்டு பிரிந்த நேரத்தில் ராகு தான் விட்ட சாபத்தின்படி வாலியின் மனதில் சுக்ரீவனின் மனைவி மீது ஆசை ஏற்படும்படி தூண்டி விட்டான் அதன்படியே சுக்ரீவனின் மனைவி மீது ஆசை கொண்டு அறநெறி தவறி வாழத்தொடங்கினான். இந்த நிகழ்வினால் ராகுவின் சாபம் நிறைவேறியது. ராவணனின் தந்திரம் நிறைவேறியது. வாலியின் ஆசைப்படி விஷ்ணுவின் கையாலேயே மரணமடைந்தான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 10

ராமரை பற்றிய செய்தியை ஒற்றர்களிடம் நானும் கேட்டு அறிந்தேன். நீ கவலைப்பட வேண்டாம். அவர் தர்மம் அறிந்தவர். அவர் அநியாய காரியத்தில் இறங்க மாட்டார். ராமருக்கு ஒரு குற்றமும் செய்யாத என்னை ஏன் அவர் கொல்லப் போகிறார்? எதிரி ஒருவன் சண்டைக்கு என்னை அழைக்கும் போது நான் எப்படி செல்லாமல் சும்மா இருக்க முடியும். அதனை விட உயிரை விடுவதே மேல். உனக்காக வேண்டுமானால் சுக்ரீவனின் கர்வத்தை அடக்கி அவனை கொல்லாமல் அப்படியே விட்டுவிடுகிறேன். அவன் போடும் கூக்குரல் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவனை அடக்கி வெற்றியுடன் திரும்பி வருகிறேன் பயப்பட வேண்டாம். மங்கள வார்த்தைகளை சொல்லி என்னை வழி அனுப்பு என்னை தடுக்காதே என்று சொல்லி கிளம்பினான் வாலி. தாரை கண்களில் கண்ணீருடன் வாலியை வலம் வந்து நடப்பது நல்லதாக நடக்கட்டும் என்ற மங்கள வார்த்தைகளை சொல்லி கவலையுடன் வழி அனுப்பினாள். வாலி சுக்ரீவன் இருக்குமிடம் வந்து சேர்ந்தான்,

ராமர் இருக்கும் தைரியத்தில் சுக்ரீவன் வாலியை நோக்கி வேகமாக வந்தான். இருவருக்கும் இடையே சண்டை மூர்க்கமாக நடைபெற்றது. சிறிது நேரத்தில் வாலியின் பலம் அதிகரித்தது. சுக்ரீவனின் பலம் குறைய ஆரம்பித்தது. இதனை கண்ட ராமர் இனியும் தாமதித்தால் சுக்ரீவன் தாங்க மாட்டான் என்று எண்ணி தன் அம்பை வாலிக்கு குறி வைத்து விடுத்தார். அம்பு ஆச்சா மரத்தை துளைத்தது போல் வாலியின் வஜ்ரம் போன்ற உடலை துளைத்தது. பட்ட மரம் வீழ்வது போல் வாலி கீழே விழுந்தான். தன் மீது அம்பு ஏய்தது யார் என்று நான்கு பக்கமும் தேடினான் வாலி. அப்போது ராமர் லட்சுமணரன் இருவரும் வாலியின் அருகில் வந்தனர். தன் மீது ராமர் தான் அம்பு ஏய்திருக்கிறார் என்பதை உணர்ந்த வாலி ராமரிடம் பேச ஆரம்பித்தான். உத்தம குலத்தில் தசரதரின் புத்திரனாக பிறந்த உனது நற்குணங்களும் ஒழுக்கமும் உலகம் அறிந்தது. நல்ல அரச குடும்பத்தில் பிறந்து இப்படி ஒரு பாவத்தை செய்து அரச பதவிக்கு தக்தியானவன் அல்ல என்று காட்டிவிட்டாய். நீ முறை தவறி என்னைக் கொன்று பெரும் பாவத்தை செய்து விட்டாய். தர்மத்தை கடைபிடிக்கும் நீ ஏன் இப்படி செய்தாய். உன்னிடமா நான் சண்டையிட்டுக் கொண்டிருந்தேன். நான் மற்றொருவனுடன் மனம் ஒன்றி சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் என் கண்களுக்கு தெரியாமல் மறைந்திருந்து என் மேல் அம்பு எய்தி விட்டாய். என் முன்பு நின்று என்னுடன் நீ சண்டையிட்டிருந்தால் இந்நேரம் என்னால் கொல்லப்பட்டிருப்பாய். நான் தனிப்பட்ட முறையில் உனக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. உன்னுடைய நாட்டிற்கோ நகரத்திற்கோ நான் எந்த தீங்கும் செய்யவில்லை. அப்படியிருக்கும் போது என்னைக் கொல்ல உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கடுமையான வார்த்தைகளால் ராமரிடம் பேசினான் வாலி.

ராமர் வாலியிடம் பதில் சொல்ல ஆரம்பித்தார். மலைகள் காடுகள் நதிகள் உட்பட இந்த முழு பூமியும் அதிலுள்ள அனைத்தும் இக்ஷ்வாகு வம்சத்தினரின் ஆட்சிக்கு உட்பட்டது. இக்ஷ்வாகு வம்ச அரசர்களுக்கு தவறு செய்யும் எல்லா மனிதர்களையும் விலங்குகளையும் தண்டிப்பதற்கான முழு அதிகாரம் உள்ளது. இஷ்வாகு குலத்தின் ராஜ குமாரனான எனக்கு மன்னரான பரதரின் கட்டளைப்படி நீதியிலிருந்து விலகியோரை தண்டிக்கும் அதிகாரம் உண்டு. காமத்தாலும் பேராசையாலும் நீ பாவகரமான செயல்களைச் செய்தாய். குறிப்பாக உனது இளைய சகோதரன் சுக்ரீவனின் மனைவியான ருமாவைக் கைப்பற்றி அவளை உனது மனைவியாக்கிக் கொண்டாய். இந்த ஒரு பாவச் செயல் போதும் உன்னை நான் தண்டிப்பதற்கு. மகள் மருமகள் சகோதரி சகோதரனின் மனைவி ஆகியோருடன் உறவு வைப்பவர்களுக்கு மரணமே தகுந்த தண்டனை. ஓர் அரசன் பாவம் செய்தவனைக் கொல்லவில்லை என்றால் அந்த பாவம் அரசனுக்கே வந்து சேரும் எனவே உன்னை கொன்றேன். ஆனால் ஏன் மறைந்திருந்து கொன்றேன் என்பதற்கான காரணத்தை சொல்கின்றேன் கேட்டுக்கொள் என்றார் ராமர்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 9

ராமர் லட்சுமணனிடம் தம்பியர்கள் அனைவரும் பரதன் ஆக முடியாது. சுக்ரீவனிடம் ஒரு சில குறைகளை அவனிடம் தேடினால் இருக்கலாம். அவன் எப்படிப் பட்டவன் என்ற ஆராய்ச்சி நமக்கு முக்கியம் இல்லை. யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை வைத்துத்தான் ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். வாலி சுக்கிரீவனிடமிருந்து அவனுக்குரிய ஆட்சியை எடுத்துக் கொண்டான் அதில் தவறு இல்லை. சுக்ரீவன் மனைவியை வாலி ஏன் கைப்பற்ற வேண்டும்? எந்தத் தவறும் செய்யாத தம்பியை சரிவர விசாரிக்காமல் உண்மை என்ன என்று அறியாமல் ஏன் விரட்டி அடிக்க வேண்டும்? வாலி தவறு செய்திருக்கிறான். அவனை அழிப்பது அறம் தான் என்று கூறித் தெளிவு படுத்தினார் ராமர்.

ராமர் மரத்திற்கு பின்பு நிற்பதை பார்த்துக்கொண்ட சுக்ரீவன் வாலி வெளியே வா என்று கத்த ஆரம்பித்தான். சுக்கிரீவனின் அறை கூவலைக் கேட்ட வாலி வியந்தான். சண்டைக்கு பயந்து ஓடியவன் இப்போது திரும்பவும் வலிய வந்து அழைக்கின்றானே என்று வாலிக்கு வியப்பை அளித்தது. இன்று சுக்ரீவனை அழித்தே விடவேண்டும் என்ற கோபத்தில் கிளம்பினான். வாலியின் மனைவி தாரை அவன் போருக்குச் செல்வதைத் தடுத்தாள். எனக்கு எதோ அபசகுனமாக தெரிகிறது. தாங்கள் சண்டைக்கு செல்வது எனக்கு பயமாக இருக்கிறது. அடிபட்டு அவமானப்பட்டு உயிருக்கு பயந்து ஓடிப்போன சுக்ரீவன் மீண்டும் தைரியத்துடன் தங்களுடன் சண்டையிட வந்திருக்கிறான். அவரது பேச்சையும் கர்ஜனையும் பார்த்தால் ஏதோ அபாயமுயும் சூழ்ச்சியும் இருப்பது போல் எனக்கு தெரிகிறது. அவருக்கு துணையாக யாரையாவது அழைத்து வந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். இன்று போக வேண்டாம். நாளை காலை ஆலோசனை செய்து யோசித்து முடிவு செய்யலாம். அதன் பிறகு எதிரியுடன் சண்டை போடலாம் என்று கூறி தடுத்தாள். தாரையின் பேச்சு வாலிக்கு பிடிக்கவில்லை. சண்டைக்கு கிளம்புவதிலேயே மும்முரமாய் இருந்தான். தாரை கண்ணிர் வடித்தாள். நமது ஒற்றர்கள் நமது மகன் அங்கதனிடம் சில தகவல்களை சொல்லியிருக்கிறார்கள். அவன் எனக்கு சொன்னான். அவர்கள் சொன்னதை அப்படியே தங்களிடம் சொல்கிறேன் தயவு செய்து கேளுங்கள் என்றாள்.

ராமர் என்பவரும் அவரது தம்பி லட்சுமணனும் அயோத்தியிலிருந்து வந்திருக்கின்றார்கள். மகாவீரனான அந்த மூத்த ராஜகுமாரனை சத்தியவானாகவும் தர்மவானாகவும் அனைவரும் மதிக்கின்றார்கள். அவருடைய நட்பை சுக்ரீவன் இப்போது பெற்றிருக்கிறான். இதனால் அவனது தைரியமும் பலமும் அதிகரித்திருக்கிறது. அவர்கள் வெற்றி பெறுவதற்கு ஏதேனும் சூழ்ச்சி செய்யக்கூடும். நான் பிதற்றுகிறேன் என்று எண்ண வேண்டாம். நமது மகன் அங்கதன் இருக்கின்றான். அவனுடைய நலனை கருத்தில் கொள்ளுங்கள். அவனுக்காகவும் எனக்காகவும் நீங்கள் இருக்க வேண்டும். தயவு செய்து செல்லாதீர்கள் என்று சொல்லி கண்ணீர் வடித்தாள். மேலும் உங்கள் தம்பியும் நல்லவன் தானே. அவனை ஏன் விரோதிக்க வேண்டும். உங்களிடம் பக்தியுடன் தானே இருந்தார். அவரை விட நெருக்கமான உறவினர் என்று சொல்ல நமக்கு யாரும் இல்லை. அவரிடம் உள்ள விரோதத்தை மறந்து விட்டு பாசத்தை காட்டுங்கள். அவரிடம் ஒன்றாக இருப்பதே நமக்கு நலம். அவரை அழைத்து பயைழபடி இளவரசு பட்டம் கட்டிவிடுங்கள். எனக்கு விருப்பமான காரியத்தை தாங்கள் செய்ய விரும்பினால் என் பேச்சை கேளுங்கள் புறக்கணிக்காதீர்கள் என்று வாலியை தடுத்தாள் தாரை. வாலி தாரையிடம் பேச ஆரம்பித்தான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 8

ராமர் ஒரு மரத்திற்கு பின்பு மறைந்து நின்று கொண்டார். சுக்ரீவன் வாலி வெளியே வா என்று கர்ஜனை செய்தான். அதைக் கேட்ட வாலி பெரும் கோபத்துடன் அரண்மனையை விட்டு வெளியே வந்தான். இருவருக்குமிடையே பயங்கரமான சண்டை நடந்தது. சண்டை ஆரம்பித்ததும் இருவரில் யார் சுக்ரீவன் யார் வாலி என்று ராமரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருவரும் ஒரே வானர வடிவத்தில் ஒரே விதமான உடைகளையும் ஆபரணங்களை அணிந்து ஒரே விதமாக தங்களது பராக்கிரமத்தை வெளிப்படுத்தும் வகையில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இருவரில் யார் வாலி என்று தெரியாமல் ராமரால் கொல்ல இயலவில்லை. ராமர் திகைத்து நின்றார். சுக்ரீவன் அடிபட்டு தன் உயிர் போகும் தருவாயில் ராமர் ஒன்றும் செய்யவில்லையே என்று ஏமாற்றமடைந்தான். மதங்க முனிவர் வாலி நுழைந்தால் இறந்து விடுவான் என்று சாபமிட்ட ரிச்யமுக காட்டிற்குள் ஒரே ஓட்டமாக ஓடினான் சுக்ரீவன். அதனை கண்ட வாலி சுக்கிரனை விட்டுவிட்டு தன் கோட்டைக்கு திரும்ப சென்றான்.

ராமர் லட்சுமணன் இருவரும் மிகவும் அடிபட்டு துக்கத்திலிருந்த சுக்ரீவனிடம் சென்றார்கள். ராமர் வாலியை கொல்வேன் என்ற சொல்லை தவற விட்டார் என்று ராமரின் மீது கோபத்தில் தரையை பார்த்துக் கொண்டே ராமரிடம் பேசினான். தங்களால் வாலியை கொல்ல முடியாது என்றால் என்னிடம் முன்பே நீங்கள் சொல்லியிருக்கலாம். நான் வாலியுடன் சண்டைக்கு சென்றிருக்க மாட்டேன். உங்களை நம்பி சென்ற நான் இப்போது எனது உடல் முழுக்க காயங்களுடன் உயிர் தப்பி வந்திருக்கின்றேன். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டான். ராமர் சுக்ரீவனிடம் என்னை கோபிக்க வேண்டாம் நான் சொல்வதை சிறிது அமைதியாக கேளுங்கள். நான் அம்பை வாலியின் மீது விடாததற்கு காரணம் சொல்கிறேன். நீங்களும் வாலியும் உயரம் உடல் பருமன் ஆடைகள் அணிகலன்கள் நடை உடை அனைத்திலும் ஒரே மாதிரி இருந்தீர்கள். சண்டை ஆரம்பித்து விட்ட பிறகு யார் சுக்ரீவன் யார் வாலி என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை நான் திகைத்து நின்றேன். சிறிதும் வித்தியாசம் இல்லாமல் ஒரே மாதிரி இருக்கின்றீர்கள். என்னால் எதுவும் செய்ய முடியாமல் திகைத்து நின்றேன். வாலி இவன் தான் என்று எனக்கு உறுதியாக தெரியாமல் சந்தேகத்தின் அடிப்படையில் அம்பெய்து அது உங்களை கொன்று விட்டால் என்ன செய்வது என்று அமைதியாக இருந்துவிட்டேன். மீண்டும் வாலியை சண்டைக்கு அழையுங்கள். உங்கள் இருவரில் யார் வாலி என்று நான் தெரிந்து கொள்ள இப்போது மாற்று ஏற்பாடு செய்து விடுவோம். எளிதில் வாலியை கண்டு பிடித்து நிச்சயமாக கொல்வேன் என்றார் ராமர்.

ராமர் லட்சுமணனிடம் அழகிய பூக்கள் நிறைந்த கொடியை கொண்டு வந்து சுக்ரீவனிடம் கொடுத்துவிடு. சுக்ரீவன் அதை அணிந்து கொண்டு சண்டை போடட்டும். அதை வைத்து யார் வாலி என்று எளிதில் கண்டு பிடித்து கொல்வேன். இன்று வாலி மரணித்து பூமியில் விழுவதை நீ பார்ப்பாய் சுக்ரீவா என்றார். சுக்ரீவன் சமாதானம் அடைந்து மறுபடியும் உற்சாகம் அடைந்தான். லட்சுமணன் பூங்கொடியை சுக்ரீவன் கழுத்தில் மாலையாக போட்டான். கிஷ்கிந்தைக்கு மீண்டும் சென்றான் சுக்ரீவன். ராம லட்சுமணன் பின்னாலேயே சென்றார்கள். வாலியை மீண்டும் அறை கூவி அழைத்தான் சுக்ரீவன். ராமரும் லட்சுமணனும் ஒரு மரத்திற்கு பின்னால் நின்று கொண்டார்கள். அப்போது லட்சுமணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். சுக்கிரீவன் நம்பத்தகுந்தவன் போல் தெரியவில்லை. தனது அண்ணனையே கொல்வதற்கு நம்மை அவன் துணை தேடுகிறான் என்றால் அது துரோகம் அல்லவா? அவனை நம்புவது மண் குதிரையை நம்பி நட்டாற்றைக் கடப்பது போல் இருக்கிறது என்றான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 7

ராமர் சுக்ரீவனுடைய பயத்தையும் சந்தேகத்தையும் போக்க முடிவு செய்தார். துந்துபி அரக்கனின் உடலைப் போல் 10 மடங்கு பெரிய பொருள் ஒன்றை ராமர் தனது கால் கட்டை விரலால் நெம்பி தூக்கி எறிந்தார். இந்த மரம் பத்து யோசனை தூரம் சென்று விழுந்தது. பிறகு தன்னுடைய வில்லில் அம்பை தொடுத்தார். சுக்ரீவன் காட்டிய மிகப்பெரிய ஆச்சா மரத்தை நோக்கி அம்பு எய்தார். அம்பு அந்த மரத்தையும் அதன் பின்னால் இருந்து மேலும் ஆறு ஆச்சா மரங்களையும் சேர்த்து மொத்தம் ஏழு மரங்களையும் ஒன்றாக துளைத்து வெளியே வந்து மீண்டும் ராமரின் அம்பாரிக்குள் வந்து விட்டது. இதைக்கண்ட சுக்ரீவன் பரவசமடைந்தான். வாலியின் வஜ்ஜிரம் போன்ற உடலை ராமரின் அம்பு துளைக்கும் என்று நம்பினான். உங்கள் பராக்கிரமத்தை கண்ணார கண்டேன் என்று ராமரின் கால்களில் விழுந்து வணங்கினான். வாலியை அழித்து என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன் என்றான்.

ராமரிடம் சூக்ரீவன் வாலியை பற்றிய வேறொரு முக்கியமான செய்தியை தங்களிடம் சொல்ல வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தான். வாலி மிகப்பெரிய சிவ பக்தன். சிவனை நோக்கி பெரும் தவங்கள் செய்திருக்கின்றான். கயிலையிலுள்ள சிவபெருமானின் அருளைப் பெற்றவன். முன்பொரு முறை அமிர்தம் பெறுவதற்க்கு பாற்கடலை கடையும் போது வாலி தேவர்களுக்கு உதவி செய்தான். அதனால் பஞ்ச பூதங்களின் வலிமையையும் பெற்றான். தனது தந்தையான இந்திரனிடம் இருந்து வாலி ஒரு வரத்தை பெற்றிருக்கின்றான். அந்த வரத்தின்படி வாலியுடன் யுத்தம் செய்பவர்களின் சக்தியில் பாதி சக்தி வாலிக்கு சென்றுவிடும். அதனால் மிகச்சிறந்த சிவபக்தனும் வலிமையும் அதிகாரமும் கொண்ட ராட்சசர்களின் தலைவனான ராவணன் கூட வாலி இருக்கும் பக்கம் வருவதில்லை. நீங்கள் வாலியின் மீது அம்பு எய்ய அவன் எதிரே நின்றால் வாலி பெற்ற வரத்தின்படி உங்களின் சக்தி பாதி வாலிக்கு சென்று விடும். ஏற்கனவே வாலி மிகவும் பராக்கிரமசாலி உங்களின் பாதி சக்தியும் வாலியுடன் சேர்ந்தால் அவன் இன்னும் பராக்கிரமசாலியாகி விடுவான். அதன் பிறகு அவனை யாராலும் அழிக்க முடியாது என்று சொல்லி முடித்தான். அதற்கு ராமர் வாலியின் உடலை எனது அம்பு துளைத்து அழிக்கும் சந்தேகமோ பயமோ வேண்டாம் என்றார். ராமரின் வார்த்தைகளை கேட்ட சுக்ரீவனுன் அப்போதே வெற்றி பெற்றுவிட்டதை போன்று பூரிப்படைந்தான்.

ராமரிடம் அனுமன் பேச ஆரம்பித்தார். முதலில் வாலியைக் கொன்று பின் சுக்கிரீவனுக்கு முடிசூட்ட வேண்டும். சுக்ரீவன் அரசனாவான். அவன் ஆணை பிறப்பித்ததும் எழுபது வெள்ளம் எண்ணிக்கை உள்ள வானரர் படைகள் ஒன்று சேர்வார்கள். (எண்ண முடியாத எண்ணிக்கையில் அடங்காத மிகப்பெரிய கூட்டம் ஒரு வெள்ளமாகும்) அவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் நாலா திக்குகளுக்கும் அனுப்பி வைத்தால் விரைவில் சீதையை கண்டு பிடித்து விடலாம் என்றார். ராமரும் அனுமன் சொல்வது சரி என்று ஏற்றுக் கொண்டார். அனுமன் தன் துணை அமைச்சர்களான தாரன் நீலன் நளன் ஆகியவர்களோடு ராமருக்கு வழிகாட்ட அனைவரும் வாலியின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றார்கள். கிஷ்கிந்தை காட்டுப் பகுதிக்கு வந்ததும் நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று சுக்கிரீவன் ராமனை நோக்கிக் கேட்டான். நீ வாலியை யுத்தத்திற்கு கூப்பிடு. நீங்கள் இருவரும் போர் செய்யும் போது மறைவிடத்தில் இருந்து அம்பு ஒன்றினால் வாலியைக் கொல்வேன் என்று ராமர் கூறினார். (ராமர் ஏன் இப்படி கூறினார் என்பதற்கான காரணம் பின் வரும் பகுதியில் வரும்) சுக்கிரீவன் தனது பயத்தை நீக்கி ஒர் உயரமான இடத்தில் இருந்து கொண்டு வாலியைப் போருக்கு வருமாறு கூவி அழைத்தான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 6

ஹிமவான் சொன்ன வார்த்தைகளை கேட்ட துந்துபி வாலியுடன் சண்டையிட கிஷ்கிந்தைக்கு வந்தான். மரங்களை தள்ளியும் அரண்மனை கோட்டையை இடித்தும் வானரத்தின் அரசனே வாலியே வெளியே வா என்னுடன் யுத்தம் செய் என்று வாலியை சண்டைக்கு அழைத்து கர்ஜனை செய்தான். அந்தப்புரத்தில் உற்சாக பானம் அருந்திக் கொண்டிருந்த வாலி வெளியே வந்து துந்துபியிடன் உயிரோடு இருக்க உனக்கு ஆசையிருந்தால் ஓடிப்போய் விடு என்று எச்சரித்தான். வாலி அலட்சியமாக பேசியதை கேட்ட துந்துபி கோபமாக உனக்கு வீரியமிருந்தால் என்னுடன் யுத்தம் செய். வீண் விவாதம் வேண்டாம் நீ இப்போது அந்தப்புரத்தில் இருந்து வந்திருக்கிறாய். உற்சாக பானம் அருந்தி களைப்பாக இருக்கிறாய். களைப்பாக இருப்பவனுடன் சண்டையிடுவது பாவமாகும். காலை வரை உனக்காக காத்திருக்கிறேன். உன்னுடைய களைப்பை விட்டு புத்துணர்ச்சி அடைந்ததும் வா சண்டையிடுவோம் என்றான் துந்துபி.

வாலி துந்துபியின் வார்த்தைகளை கேட்டு சிரிந்தான். நான் உற்சாக பானம் அருந்திருக்கிறேன் அது உண்மை தான். சண்டையிட நீ விரும்பினால் இப்போதே சண்டையிடலாம் வா என்று அசுரனை பிடித்து தூக்கி தரையில் எறிந்தான். ரத்தம் கக்கி விழுந்த அசுரன் மீண்டும் எழுந்து சண்டைக்கு வர சில கனத்தில் அடித்தே கொன்றான் வாலி. ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட அசுரனை சில கனங்களில் கொன்று விட்டான் வாலி. அவ்வளவு பெரிய பராக்கிரமசாலி. செத்து விழுந்த துந்துபி அசுரனை தூக்கி வீசினான் வாலி. அசுரன் ஒரு யோசனை தூரம் போய் விழுந்தான். அசுரன் விழுந்த இடத்திலிருந்து தெறித்த ரத்த துளிகள் காற்றில் பரவி அருகில் இருந்த மதங்க முனிவரின் ஆசிரமத்தில் விழுந்தது. இதனை கண்ட முனிவர் இதனை செய்தது யார் என்று அறிந்து கோபம் கொண்டார். இந்த ஆசிரமம் இருக்கும் காட்டிற்குள் வாலி வந்தால் இறந்து விடுவான் என்று வாலியை சபித்து விட்டார் மதங்க முனிவர். அருகில் தான் மதங்க முனிவரின் ஆசிரமம் இருக்கிறது. முனிவர் சாபமிட்ட இடமே இது. முனிவரின் சாபத்தினால் வாலி பயந்து இங்கு வரமாட்டான் என்று இந்த இடத்தில் நாங்கள் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

வாலி அதிகாலையில் எழுந்து ஒரே முகூர்த்தத்தில் நான்கு பக்கங்களிலும் இருக்கும் கடல்களுக்கு தாவி சென்று சந்தியா வந்தனம் செய்து முடிப்பான். ஒரு திசை கடலில் இருந்து அடுத்த திசை கடலுக்கு ஒரே தாவலில் சென்று விடுவான். தன்னுடைய உடல் பலத்தை காட்டும் வகையில் மலைப் பாறைகளை பந்து போல் மேலே எறிந்து விளையாடுவான். பெரிய மரங்களை புல்லை பிடுங்குவது போல் பிடுங்கி விளையாடுவான். இங்கிருக்கும் ஆச்சா மரங்களை பாருங்கள் எவ்வளவு பெரிதாக இருக்கின்றது. வாலி இந்த மரத்தினை ஒரே கையில் பிய்த்து விடுவான். மரத்தை லேசாக அசைத்தால் மரத்திலுல்ல இலைகள் எல்லாம் அதிர்ந்து விழுந்து விடும் என்று வாலியின் பராக்கிரமத்தை சொல்லி முடித்தான் சுக்ரீவன்.

லட்சுமணனுக்கு சுக்ரீவன் பேசிய பேச்சிலிருந்து வாலியை நினைத்து மிகவும் பயப்படுகின்றான். ராமரின் வீரத்தின் மீது சுக்ரீவனுக்கு சந்தேகம் இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டான். சுக்ரீவனிடம் உங்கள் சந்தேகம் தீர ராமரின் பலத்தை நீங்கள் சோதித்து பார்க்கலாம் என்றான். இதற்கு சுக்ரீவன் நான் ராமரிடம் சரண்டைந்து விட்டேன். ராமரின் வீரத்தின் மீது எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் வாலியின் வீரத்தையும் பராக்கிரமத்தையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவனை நினைக்கும் போதேல்லாம் நான் பயப்படுகின்றேன் என்றான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 5

ராமரிடம் சுக்ரீவன் தொடர்ந்து பேசினான். நான் நடந்தவைகள் அனைத்தும் அப்படியே வாலியிடம் சொன்னேன். இந்த ராஜ்யம் உங்களுடையது அதனை பெற்றுக்கொண்டு அரசனாக முடிசூடிக் கொள்ளுங்கள் என்று கூறி உங்களிடம் எப்பொழுதும் போலவே உங்களுக்கு அடிபணிந்து நடந்து கொள்வேன் என்று அவரது காலில் விழுந்தேன். வாலி நான் சொல்வதை நம்பாமல் ராஜ்யத்திற்காக கொல்ல முயற்சிச்தேன் என்று என் மீது பழியை சுமத்தினான். அடுத்த முறை எங்காவது பார்த்தால் கொன்று விடுவேன் என்று சொல்லி நாட்டை விட்டை துரத்தி விட்டான். அணிந்திருந்த உடைகளுடன் அவமானப்பட்டு மனைவியை இழந்து அங்கிருந்து வெளியேறி இங்கு ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். என் மீது நம்பிக்கை உள்ள சில வானரங்கள் மட்டும் என்னுடன் வந்து விட்டார்கள். உண்மையை அறியாமல் எனக்கு அக்ரமங்களை செய்த வாலியை வதம் செய்து என்னை காப்பாற்றுங்கள் என்று பேசி முடித்தான் சுக்ரீவன். அனைத்தையும் கேட்ட ராமர் என் அம்பு வாலியின் உடலை துளைக்கும். உனக்கு நான் தந்த உறுதி மொழியை நிறைவேற்றுவேன் கவலைப்படாதே. விரைவில் ராஜ்யத்தையும் உனது மனைவியையும் அடைவாய் என்றார்.

ராமரின் வார்த்தைகளால் மகிழ்ச்சியடைந்த சுக்ரீவனுக்கு ராமரின் வீரத்தின் மீது சந்தேகம் வந்தது. ராமரின் பராக்ரமத்தை கொண்டு வாலியை வெல்ல முடியுமா? ஆகாத காரியமாக தோன்றுகிறதே வாலியின் தேகமோ இரும்பை போன்றது. அவனை எப்படி ராமர் அழிப்பார் இவரை விட்டாலும் இப்போது வேறு வழி இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தவன் ராமரை பரிட்சித்து பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

ராமரிடம் எப்படி இதனை கேட்பது என்று யோசித்தவாறு சமயோசனையுடன் ராமரிடம் மெதுவாக பேச ஆரம்பித்தான். தாங்கள் சொன்ன வார்த்தைகள் என் துக்கத்தை போக்கி மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களுடைய பராக்ரமத்தை நான் அறிவேன். உங்களால் விடப்படும் அம்பு மூன்று லோகங்களையும் அழிக்கும். வாலியின் பராக்ரமத்தை பற்றி உங்களிடம் சொல்ல வேண்டியது எனது கடமை. ஒரு காலத்தில் எருமை வடிவம் பெற்ற துந்துபி என்ற அசுரன் தவம் செய்து தான் பெற்ற வரத்தினால் ஆயிரம் யானைகளின் பலத்தை அடைந்தான். பெற்ற வரத்தை எப்படி பயன் படுத்துவது என்று தெரியாமல் கடல் ராஜனிடம் சென்று சண்டைக்கு அழைத்தான். கடல் ராஜனோ உனக்கு சமமான எதிரியுடன் சண்டை போட வேண்டும் என்னிடம் அல்ல. உனக்கு சமமான எதிரி வடக்கே ஹிமவான் என்ற இமயமலை இருக்கிறது. அதனுடன் சண்டையிட்டு உனது வீரத்தை காட்டு என்று அனுப்பி வைத்தார். இமயமலை வந்த துந்துபி அங்கிருந்த மலைகளை உடைத்து பாறைகளை கொம்பால் தள்ளி அட்டகாசம் செய்தான். அதனை பார்த்த ஹிமவான் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு நீ ஏன் என்னுடன் சண்டைக்கு நிற்கிறாய். யுத்தத்தில் எனக்கு பயிற்சி கிடையாது. முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் சாதுக்களுக்கும் இடம் கொடுத்து அவர்களுடன் காலம் கழித்து வருகிறேன். உனக்கு சமமான எதிரியுடன் சண்டையிடு என்றார். அப்படியானால் எனக்கு சம்மான எதிரி யார் என்று கூறு இப்போதே சண்டையிட்டு அவனை வெற்றி கொள்ள வேண்டும் என்று மூர்க்கமாக கத்தினான் அசுரன். இதனை கேட்ட ஹிமவான் தெற்கே வாலி என்ற வானரராஜன் இருக்கிறான். அவன் தான் உனது பலத்துக்கு சமமான வீரன் அவனை யுத்தத்திற்கு அழைத்து சண்டையிட்டு வெற்றி பெற்று உனது பராக்கிரமத்தை காட்டு என்றான்.