ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 4

ராமருக்கு சுக்ரீவன் சொன்ன வார்த்தைகள் வேர் போல உள்ளத்தில் பதிந்தது. சீதையின் ஆபரணங்களை கண்ட கலக்கத்தில் இருந்து மீண்டு புத்துணர்ச்சி பெற்றார். தன் கண்களில் இருந்த நீரை துடைத்துக்கொண்டு சுக்ரீவனை அனைத்துக் கொண்டார். உன்னுடைய சிறந்த நட்பை அடைந்தேன் சுக்ரீவா. சீதை இருக்கும் இடம் அறிந்து கொள்ளும் வழியை நீ யோசித்துச் சொல் உன் யோசனைப்படியே நடக்கின்றேன். அது போல் உன் காரியத்தை என் காரியமாகவே நான் செய்வேன் என்று சத்தியம் செய்கின்றேன். உன் கஷ்டத்தை தீர்க்கும் வழியை சொல் உடனடியாக செய்து முடிக்கின்றேன். நம்முடைய நட்பு என்றைக்கும் பொய்க்காது என்று ராமர் சுக்ரீவனிடம் பேசி முடித்தார். ராமரின் பேச்சைக் கேட்ட சுக்ரீவன் மகிழ்ச்சி அடைந்தான். அவனுடன் இருந்த மந்திரிகளும் படைகளும் தங்களுடைய துயரங்கள் நீங்கியது. சுக்ரீவன் மீண்டும் வானர ராஜ்யத்தை அடைவார் என்று எண்ணி மகிழ்ந்தார்கள்.

ராமரிடம் சுக்ரீவன் தனது அண்ணன் வாலிக்கும் தனக்கும் உண்டான விரோதத்தை விவரமாக சொல்ல ஆரம்பித்தான். வாலி வானர அரசனாக கிஷ்கிந்தை நாட்டை அரசாண்டு வந்தான். மிகவும் வலிமையானவன் பராக்கிரமசாலி. அவரிடம் குறைவில்லாத அன்புடனும் பக்தியுடனும் யுவராஜாவாக இருந்து வந்தேன். வாலிக்கும் மாயாவி என்ற அசுரனுக்கும் முன் விரோதம் நீண்ட நாட்களாக இருந்தது. ஒரு நாள் இரவில் மாயாவி கிஷ்கிந்தைக்கு வந்து வாலியை யுத்தத்துக்கு அழைத்தான். மாயாவியின் கர்ஜனையில் கோபம் கொண்ட வாலி மாயாவியை எதிர்க்க அரண்மனையிலிருந்து சென்றார். நானும் அவருக்கு உதவியாக சென்றேன். நாங்கள் இருவரும் வருவதை பார்த்த மாயாவி ஓட ஆரம்பித்தான். நாங்கள் அவனை பின் தொடர்ந்து சென்றோம். காட்டில் இருந்த குகையில் மாயாவி ஒளிந்து கொண்டான். நான் உள்ளே செல்ல முயற்சித்தேன். வாலி என்னை தடுத்து நிறுத்தி நான் ஒருவனே அவனை கொல்ல வேண்டும் நீ இங்கேயே இரு என்று எனக்கு உத்தரவிட்டு என்னை குகைக்கு வெளியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.

குகைக்கு உள்ளே சென்றவன் பல நாட்களாகியும் வெளியே வரவில்லை. அண்ணனுக்கு என்ன நேர்ந்ததோ என்று வெளியே கவலையுடன் காத்திருந்தேன். ஒரு நாள் உள்ளே இருந்து பல அசுரர்களின் கத்தும் பெருங்கூக்குரல் கேட்டது. வாலியின் கதறல் சத்தமும் கேட்டது. அதன் கூடவே குகைக்குள் இருந்து ரத்தமாக வெளியே வந்தது. அதனைக் கண்டதும் அசுரர்கள் பலர் சேர்ந்து வாலியை கொன்று விட்டார்கள் என்று எனக்குள் தீர்மானித்துக் கொண்டேன். அண்ணனை கொன்ற அசுரர்களை பழி தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி அசுரர்கள் குகைக்குள்ளேயே கிடந்து தவிக்கட்டும் என்று ஒரு பெரிய பாறையை வைத்து குகையை மூடிவிட்டு அரண்மனைக்கு கவலையோடு திரும்பினேன். வாலி இறந்து விட்டான் என்ற செய்தியை யாரிடமும் சொல்லாமல் ராஜ காரியங்களை பார்த்து வந்தேன். வாலி எங்கே என்று மந்திரிகள் முதல் அவரது மனைவி வரை அனைவரும் என்னை தொந்தரவு செய்து வாலி இறந்த செய்தியை கேட்டு தெரிந்து கொண்டார்கள். கிஷ்கிந்தை நாட்டில் அரசனில்லாமல் இருக்க கூடாது என்று அனைவரும் என்னை வற்புறுத்தி அரசனாக எனக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள்.

குகைக்குள் பல நாட்களாக நடந்த சண்டையில் மாயாவியையும் அவனது அசுர கூட்டத்தையும் அழித்து விட்டு குகை வாயிலுக்கு வாலி திரும்பி வந்தான். சுக்ரீவா சுக்ரீவா என்று கூப்பிட்டான் நான் அங்கில்லாத படியால் அவரது குரல் எனக்கு கேட்கவில்லை. தனது வலிமையினால் குகை பாறையை உடைத்து விட்டு அரண்மனைக்கு திரும்பி வந்தான். நான் அரசனாக இருப்பதை பார்த்து கோபமடைந்த வாலி என்னை திட்ட ஆரம்பித்தான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 3

ராமரிடம் சுக்ரீவன் பேச ஆரம்பித்தான். பெண் ஒருத்தியை ராட்சசன் ஆகாய மார்க்கமாக தூக்கி செல்வதை பார்த்தோம். அவள் தன்னுடைய ஆபரணங்களை நாங்கள் இருக்கும் இடம் நோக்கி கீழே எறிந்தாள். அவள் ராமா லட்சுமணா என்று கதறிக்கொண்டே செல்வதை பார்த்தோம். அந்த ஆபரணங்கள் எங்களிடம் இருக்கின்றது. தங்களின் மனைவியுடையதா என்று பார்த்து சொல்லுங்கள் என்றான். அதனைக் கேட்டதும் பரபரப்படைந்தார் ராமர் சீக்கிரம் கொண்டு வாருங்கள் அந்த நகைகளை என்றார். துணியில் சுற்றி வைத்திருந்த நகைகளை சுக்ரீவன் கொடுத்தார். லட்சுமணனிடம் ராமர் இப்போது இந்த நகைகளை பார்க்கும் மனநிலையில் நான் இல்லை. நீ இந்த துணியை பிரித்து நகைகளை பார் லட்சுமணா என்றார். துணையை பிரித்து அதில் இருந்து சீதையின் கால் சிலம்பை எடுத்து ராமரிடம் காண்பித்த லட்சுமணன் இது சீதையினுடையது தான் என்று கூறினான். நகைகளை பார்த்த ராமருக்கு அடங்க முடியாத கோபமும் துக்கமும் உண்டானது. சீதையை தூக்கிப் போன அந்த ராட்சசனுக்கு யமன் வீட்டு வாசல் காத்திருக்கிறது. அவனை அழிப்பேன். அவனுக்கு ஆதரவாக வந்தால் அவன் குலம் முழுவதும் அழிப்பேன் என்று கர்ஜனை செய்தார்.

ராமர் தனக்கு முதலில் உதவி செய்து ராஜ்யத்தை அடையச் செய்வார் பிறகு நாம் அவருக்கு உதவி செய்யலாம் என்று எண்ணியிருந்த சுக்ரீவன் ராமரின் கோபத்தை பார்த்து மிகவும் கவலைப்பட்டான். ராமர் முதலில் நமக்கு உதவி செய்து நம்முடைய ராஜ்யத்தை மீட்டுக்கொடுப்பாரா இல்லை சீதையை மீட்க அவருக்கு நாம் முதலில் உதவி செய்வதா? யார் யாருக்கு முதலில் உதவுவது என்று குழப்பமடைந்தான். ராமருக்கு முதலில் உதவி செய்து சீதை இருக்குமிடம் தேடிப்போக வேண்டுமானால் நாம் முதலில் மறைந்திருக்கும் இடத்தை விட்டு வெளியே வரவேண்டும். நாம் வெளியே வந்தது தெரிந்தால் வாலி நம்மை தாக்குவான். வாலியை எதிர்த்து போராட முடியாது. எனவே ராமரை நமக்கு முதலில் உதவி செய்ய சொல்லி ராஜ்யத்தை அடைந்து விடுவோம் பிறகு நாம் அவருக்கு உதவி செய்து சீதையை தேடிக்கண்டு பிடிக்க உதவி செய்யலாம் என்று முடிவெடுத்தான் சுக்ரீவன். ஆனால் இதனை எப்படி ராமரிடம் சொல்வது அவர் இருக்கும் துக்கத்திலும் கோபத்திலும் நமக்கு முதலில் உதவி செய்ய சொல்லி சொன்னால் நம்மை தவறாக நினைத்தால் என்ன செய்வது? இப்போது ஆரம்பித்த நட்பு உடனடியாக முடிவுக்கு வந்து விடுமோ என்று பயந்தான். ராமருடைய மன நிலைக்கு ஏற்றார் போல் சமயோசிதத்துடன் பேச ஆரம்பித்தான்.

ராமரிடம் சுக்ரீவன் பேச ஆரம்பித்தான். சீதையை தூக்கிச் சென்ற ராட்சசனின் பராக்கிரமம் என்ன? அவன் எங்கிருக்கின்றான்? அவன் சீதையை எங்கு வைத்திருக்கிறான் என்று எதுவும் எனக்கு தெரியாது. உங்களுக்கு நான் ஒரு சத்தியம் செய்து கொடுக்கிறேன். சீதை எங்கிருந்தாலும் அவர்களை தேடிக்கண்டு பிடித்து எதிர்த்து வரும் அந்த ராட்சசர்களை கொல்லும் வழியை தேடி அவர்களை மீட்க உங்களுக்கு நான் உதவுவேன். உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். அந்த ராட்சசனை கண்டு பிடித்து அவனது குலத்தையே அழிப்போம். உங்களது வீரமும் எனது படை பலமும் வீண்போகாது. தைரியமாக இருங்கள் துக்கமான நேரத்தில் தைரியமுடன் இருக்க வேண்டும். துக்கத்திற்கு நாம் இரையானால் அது நம்மை இழுத்து கொண்டு போய் தோல்வியின் பள்ளத்தில் விட்டு விடும். உங்களைப் போல் மனைவியை இழந்து ராஜ்யத்திலிருந்து அவமானப் படுத்தப்பட்டு துரத்தப்பட்டவன் நான். என்னுடைய துக்கத்தை அடக்கிக் கொண்டு தைரியத்தை காத்து வருகிறேன். வானரமான என்னால் முடியும் போது ராஜாகுமாரரான உங்களாலும் உங்கள் மனதின் துக்கத்தை அடக்கிக்கொள்ள முடியும். உங்களுக்கு உபதேசம் செய்யும் தகுதி எனக்கில்லை. நண்பன் என்ற முறையில் எனக்குள் தோன்றுவதை உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன் என்று சொல்லி முடித்தான் சுக்ரீவன்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 2

ராமரைப் பற்றியும் தம்மைப் பற்றியும் அனுமனிடம் சொல்ல ஆரம்பித்தான் லட்சுமணன். ராமர் எனது அண்ணன் அயோத்தியை ஆண்ட தசரதரின் மூத்த ராஜகுமாரன். தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற தற்போது வனவாசத்தில் இருக்கிறார். இந்நேரத்தில் அவரது மனைவி சீதையை ராட்சசன் ஒருவன் ஏமாற்றி தூக்கிச் சென்று விட்டான். அவளை தேடிச் செல்லும் போது கபந்தன் என்ற ஒரு ராட்சசன் சாப விமோசனம் பெற்றான். சீதை இருக்கும் இடம் தெரியாமல் தேடிக்கொண்டிருக்கும் எங்களிடம் சுக்ரீவனின் நட்பை பெற்றுக்கொள்ளுங்கள். அவருக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். உங்களுக்கு அவர் உதவியும் செய்வார். சீதையை நீங்கள் மீட்டெடுக்கலாம் என்று சொல்லினார். அதன்படி சுக்ரீவனின் நட்பை பெற்றுக் கொள்வதற்கான சுக்ரீவனை தேடி இங்கை வந்திருக்கின்றோம் என்று சொல்லி முடித்தான் லட்சுமணன்.

அனுமன் சூக்ரீவனை பற்றி சொல்ல ஆரம்பித்தார். சுக்ரீவன் தனது அண்ணன் வாலியினால் ராஜ்யத்தையும் மனைவியையும் இழந்து தற்போது காட்டில் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். உங்கள் உதவியால் அவர் தனது ராஜ்யத்தையும் மனைவியையும் அடைவார். அவரது உதவியால் நீங்கள் உங்களது மனைவியை அடைவீர்கள். வாருங்கள் உங்களை சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி தனது உடலை பெரிய உருவமாக மாற்றிக்கொண்டார் அனுமன். ராமர் லட்சுமணர் இருவரையும் தனது தோள்களில் அமர வைத்து ரிச்ய மலையிலிருந்து சுக்ரீவன் இருக்கும் மலய மலைக்கு பறந்து சென்றார் அனுமன். சுக்ரீவனிடம் ராமரை பற்றிய அனைத்து விவரங்களையும் சொல்லி இவரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டால் நீங்கள் இழந்த ராஜ்யத்தை அடையலாம் என்று விரிவாக எடுத்துச் சொன்னார் அனுமன்.

ராமரைப் பார்த்ததும் சுக்ரீவன் பேச ஆரம்பித்தார். ராஜகுமாரனே வானரமான என்னுடைய நட்பை நீங்கள் தேடி வந்ததினால் இப்போதே உங்களை நட்பை ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய நட்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தனது கையை நீட்டினார். இருவரும் கைகளை பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்கள். சுக்ரீவன் தன்னுடைய அண்ணன் வாலியால் தனக்கு ஏற்பட்ட தூக்கத்தை பகிர்ந்து கொண்டான். எனது அண்ணன் வாலியால் ராஜ்யத்தையும் இழந்து மனைவியையும் இழந்தேன். என்னை தாக்க வருவானே என்று அவனுக்கு பயந்து இக்காட்டில் அங்கும் இங்கும் திரிந்து ஒளிந்து கொண்டு காலத்தை கழித்து வருகிறேன். நீங்கள் வாலியை கொன்று என் துக்கத்தை தீர்த்து எனக்கு ராஜ்யத்தையும் மனைவியையும் திரும்ப பெறும்படி செய்யுங்கள் என்றான் சுக்ரீவன். அதற்கு ராமர் அறம் தவறி உன்னுடைய மனைவியை தூக்கிச் சென்ற வாலியை கொல்வேன் இது நிச்சயம். என்னுடைய அம்புகள் வீண்போகதவை. என் அம்புக்கு வாலி நிச்சயம் இரையாவான் இதில் சந்தேகம் இல்லை என்று உறுதி கூறினார். ராமர் கூறிய வார்த்தையை கேட்ட சுக்ரீவன் உங்களால் நான் இழந்தவைகள் அனைத்தையும் பெறுவேன் என்று மகிழ்ச்சி அடைந்தான்.

ராமர் சுக்ரீவனிடத்தில் உறுதி கூறிய அதே நேரத்தில் வாலிக்கும் லங்கையில் இருக்கும் சீதைக்கும் ராவணனுக்கும் இடது கண் துடித்தது. சீதைக்கு மங்கள கரமாக துடித்தது. இதனை அறிந்த சீதை ராமர் தம்மை தேட ஆரம்பித்து விட்டார். நம்மை ராட்சசன் தூக்கி வந்ததை அறிந்திருப்பார். நாம் இங்கிருப்பது அவருக்கு தெரிந்து விட்டது. விரைவில் நம்மை காப்பாற்ற வந்துவிடுவார் என்று ஆறுதலடைந்தாள். ராவணனுக்கும் வாலிக்கும் இடது கண் அபசகுனமாக துடித்தது.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 1

ராமரும் லட்சுமணனும் ரிச்யமுக மலைக்கு வந்து சுக்ரீவனை தேடினார்கள். இதனை கண்ட சுக்ரீவனின் ஒற்றர்கள் வில்லும் அம்பும் வைத்துக்கொண்டு இருவர் வனத்தில் யாரையோ தேடுகின்றார்கள் என்று சுக்ரீவனிடம் செய்தி சொன்னார்கள். இதனை கேட்ட சுக்ரீவனுக்கும் அவனது படைகளுக்கும் பயம் பிடித்துக் கொண்டது. ராஜ்யத்தில் இருந்து துரத்தப்பட்ட நாம் வாலியால் கண்டு பிடிக்க முடியாத மலைப்பிரதேசத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றோம். இங்கு நம்மை தேடி வாலி மாறு வேடத்தில் வந்திருப்பானோ அல்லது வாலியின் நண்பர்கள் நம்மை அழிக்க இங்கு வந்திருக்கின்றார்களோ என்று சுக்ரீவன் பயந்தான். அவனது படைகள் பயந்து அங்கும் இங்கும் ஓடி ஒளிய இடம் தேடினார்கள். அனுமன் சுக்ரீவனுடைய முதல் மந்திரி அவர் சுக்ரீவனுக்கு தைரியம் சொன்னார். வந்திருக்கும் இருவரை பற்றிய செய்தியை கேட்டால் அவர்கள் வாலியோ அவனது நண்பர்களோ இல்லை என்று எண்ணுகிறேன். அதனால் நாம் பயப்பட வேண்டியதில்லை. நான் சென்று அவர்களை பற்றிய தகவல்களை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொண்டு வருகிறேன் என்றார். அனுமனிடமிருந்து வாலி வரவில்லை என்ற வார்த்தையை கேட்ட சுக்ரீவன் மிகவும் மகிழ்ந்தான். மிகவும் சாமர்தியமாக அவர்களை பற்றிய உண்மையை அறிந்து கொண்டு வா. அவர்கள் அங்கும் இங்கும் அழைந்து தேடுவதைப் பார்த்தால் சிறிது பயமாக இருக்கிறது. ஜாக்கிரதையாகப சென்று வா என்று அனுப்பி வைத்தார்.

ராமர் இருக்கும் இடத்திற்கு அனுமன் ஒரு பிராமண வடிவமெடுத்து சென்றார். தூரத்தில் ராமரைக் கண்டதும் அனுமனின் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சி உண்டாகியது. ராமரின் அருகில் வந்து அவரின் முகத்தைப் பார்த்ததும் அனுமன் பரவச நிலையை அடைந்தான். ராமரிடம் உள்ளது உள்ளபடி உண்மையை பேச ஆரம்பித்தார். இக்காட்டில் சுக்ரீவன் என்கின்ற வனராஜா தன் அண்ணனால் துரத்தப்பட்டு மறைந்து வாழ்ந்து வருகிறார். அவருடைய மந்திரி நான் எனது பெயர் அனுமன் நான் வாயுவின் புத்திரன். எனது அரசரின் உத்தரவின் படி தங்களை பற்றி தெரிந்து கொள்ள மாறுவேடமிட்டு வந்திருக்கின்றேன். நீங்கள் இந்த வனத்திற்கு தவம் செய்ய வந்த தவஸ்விகள் போல் மரஉரி தரித்து வேடமணிந்து வந்திருக்கின்றீர்கள். மனதைக் கவரும் ரூபம் கொண்ட நீங்கள் தேவ ரிஷிகளைப் போல் கம்பீரமாக உள்ளீர்கள். நீங்கள் இந்த வனத்திற்கு வந்ததும் முன்பை விட இந்த வனம் மிகவும் அழகாக இருக்கின்றது. பெரிய ராஜ்யத்தை ஆட்சி செய்ய பிறத்தவர் போலவே இருக்கின்றீர்கள். உங்களுடைய பராக்கிரமத்தை பார்த்து இந்த காட்டில் இருக்கும் பல ஜீவன்கள் பயப்படுகின்றது. நீங்கள் யார் எங்கிருந்து வந்திருக்கின்றீர்கள் என்று அனுமன் இருவரிடமும் கேட்டு தன் சுயஉருவை எடுத்துக்கொண்டார்.

ராமர் அனுமனின் பேச்சை ரசித்தார். அனுமனின் பணிவான வார்த்தைகளை கேட்ட ராமர் லட்சுமணனிடம் இவர் பேசிய பேச்சின் அழகை பார்த்தாயா எவ்வளவு சரியான படி வார்த்தையை உபயோகித்து இலக்கணப்படி பேசுகிறார். வேதங்களை முறையாக கற்றவர் போல் பேசுகிறார். இவரின் பேச்சால் எனக்கு முழு நம்பிக்கை வந்திருக்கிறது. தூதர் என்பவர் இவரைப்போல் இருக்க வேண்டும். இவரை தூதராக கொண்ட சுக்ரீவனுக்கு எந்த காலத்திலும் குறை இருக்காது. நாம் சுக்ரீவனை தேடி வந்திருக்கின்றோம் அவரே நம்மை தேடி தூதரை அனுப்பியிருக்கிறார். இவரிடம் நாம் யார் என்பதையும் சுக்ரீவனிடம் நட்பு தேடி வந்திருக்கின்றோம் என்பதையும் சொல்லி அவர் இருக்குமிடத்திற்கு நம்மை அழைத்துச்செல்ல அனுமதி பெற்றுக்கொள். நாம் விரைவில் அவரை சந்திக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார்.