லட்சுமணன் குகனிடம் மூன்று உலகத்தையும் யுத்தம் செய்து தனதாக்கிக்கொள்ளும் வல்லமை பெற்ற என் அண்ணன் புல் தரையில் படுத்து ஓய்வெடுக்கிறார். ஜனகர் மகாராஜாவின் புதல்வி சீதை சுகத்தை மட்டுமே அனுபவித்தவர். இப்போது தரையில் படுத்திருக்கிறாள். ராமனை வனத்திற்கு அனுப்பிய பின்பு அயோத்தி நகரம் எப்படி பிழைக்கப்போகிறதோ தெரியவில்லை. அரண்மனை முழுவதும் பெண்களின் அழுகுரலே கேட்டுக்கொண்டிருக்கும். ராமரை பிரிந்த துக்கத்தில் என் அன்னையர்கள் சுமத்ரையும் கௌசலையும் எப்படி உயிரோடு இருக்கின்றார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. வனத்திற்கு போ என்று தந்தை சொல்லிவிட்டார். அனால் அவர் ராமனை பிரிந்த துக்கத்தில் இனி உயிர் பிழைத்திருப்பது கடினமே. பதினான்கு வருடம் வனவாசம் இப்போது தான் ஆரம்பித்திருக்கின்றது. வனவாசம் முடிந்து நாங்கள் அரண்மனைக்கு திரும்பி செல்லும் போது யார் இருப்பார்கள் யார் இருக்க மாட்டார்கள் என்றே தெரியாது. இவ்வளவு துக்கத்தில் இருக்கும் எனக்கு தூக்கம் வரவில்லை என்றான். லட்சுமணன் கூறியதை கேட்ட குகனும் கண்ணீர் விட்டான். இருவரும் தூங்காமல் ராமருக்கும் சீதைக்கும் காவலாக இருந்து இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.
அதிகாலையில் எழுந்த ராமர் குகனிடம் கங்கை நதிக்கரையை கடக்க ஒரு ஓடத்தை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டார். குகனும் தன் பணியாட்களிடம் சொல்லி ஓடம் ஒன்றை ஏற்பாடு செய்தார். மூவரும் கங்கை நதிக்கரையை கடக்க ஓடத்தில் ஏறினார்கள். குகன் ஓடத்தை செலுத்தினான். சீதை கங்கையை பிரார்த்திக்க ஆரம்பித்தாள். அனைனையே எங்கள் பதினான்கு வருட விரதம் முடிந்ததும் உன்னை கடந்து அயோத்திக்கு திரும்பி செல்ல அருள்புரிவாயாக என்று வேண்டிக்கொண்டாள். கங்கையின் மறுகரையை குகன் கடந்தான். குகனுக்கு தர வேண்டிய கூலிக்காக சீதை தன் மோதிரத்தைக் கொடுத்தாள். இதைக் கண்ட குகன் சுவாமி நாம் இருவரும் ஒரு தொழில் செய்பவர்கள். ஆற்றைக் கடக்க வைக்கும் ஓடக்காரன் நான். பிறவிக் கடலைக் கடக்க உதவும் ஓடக்காரர் நீங்கள். ஒரே தொழில் செய்யும் ஒருவருக்கொருவர் கூலி வாங்குவது தர்மம் ஆகாது என மோதிரத்தை வாங்க மறுத்தான். அவனது அன்பைக் கண்ட ராமர் உன்னையும் சேர்த்து தசரதருக்கு ஐந்து பிள்ளைகள் ஆகி விட்டோம் என்று உளமார வாழ்த்தினார்.
மூவரும் யார் துணையும் இன்றி முதன் முறையாக காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தார்கள். ராமர் லட்சுமணனிடம் நீ தான் இனி எங்களுக்கு காவல் படை என்றார். லட்சுமணனும் நீங்கள் முன்னால் செல்லுங்கள். உங்களை தொடர்ந்து அண்ணி சீதை வரட்டும் அவர்களை தொடர்ந்து நான் வருகிறேன். வனவாசத்தில் உங்களுக்கு கடினங்கள் ஏதும் வராமல் முடிந்தவரை பார்த்துக்கொள்கிறேன் என்றான். லட்சுமணா இக்காட்டின் அருகில் பரத்துவாஜர் முனிவரின் ஆசிரமம் உள்ளது. அவரிடம் சென்று அவரின் ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொண்டு பதினான்கு வருட வனவாசத்தை எங்கு கழிப்பது என்று அவருடைய யோசனையை கேட்டு அதன் படி நடந்து கொள்ளலாம் என்றார். லட்சுமணனும் ஆமோதிக்க அங்கிருந்து மூவரும் கிளம்பி பரத்துவாஜர் முனிவரின் ஆசிரமத்துக்கு சென்று சேர்ந்தார்கள்.
சிவன் சொத்து என்பது சுக்கிலம் ஆகும். சதா காலமும் சிவன் சொத்தான சுக்கிலத்தை பூமியை நோக்கி கீழே விழச் செய்யாமல் சேமித்து யோக பயிற்சியின் மூலம் குண்டலினியை மேலே எழச்செய்து சகஸ்ரதளத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். பிரம்மச்சரியத்தால் கட்டி உச்சந்தலையை நோக்கி சுக்கிலத்தை உயர்த்தி உள் நாக்கில் அமிர்தத் துளிகளாய் விழ வைக்க வேண்டும். அதன்பின்னர் சாதகனுக்கு அஷ்டமா சித்திகள் கிடைக்கும். இவ்வாறு சுக்கிலத்தை ஒருவன் மேல் நோக்கி எழுப்பினால் அவனால் இல்லறத்தில் ஈடுபட்டு குழந்தை பாக்கியம் பெற முடியாது. அவனது வம்சம் அவனுடனேயே அழிந்துவிடும். இதனால்தான் சிவன் சொத்து குல நாசம் என்று சொன்னார்கள்.
ரதத்தில் அன்று முழுவதும் பயணப்பட்டு கங்கா நதிக்கரையை அடைந்தார்கள். அயோத்திக்கு திரும்பி போகும்படி தேரோட்டி சுமந்திரனுக்கு ராமர் கட்டளையிட்டார். சுமந்திரன் ராமரை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். சுமந்திரனுக்கு ஆறுதல் சொன்ன ராமர் நாங்கள் மூவரும் மகிழ்ச்சியுடனேயே வனம் செல்கின்றோம் என்பதை அரண்மனையில் இருக்கும் அனைவரிடமும் தெரிவித்துவிடு என்றும் கைகேயியினால் நடைபெற்ற அந்த சம்பவங்களால் மனவருத்தம் ஏதும் அடையவில்லை என்று கைகேயியிடம் சொல்லிவிடு என்றும் சொல்லி ராமர் சுமந்திரனுக்கு விடை கொடுத்தார். மிகுந்த துயரத்துடன் காலி ரதத்தை ஒட்டிக்கொண்டு சுமந்திரன் திரும்பிச்சென்றான்
கங்கா நதிக்கரையின் அழகை அனுபவித்துக்கொண்டே மூவரும் நடந்தார்கள். கங்கை நதியில் ஓரிடத்தை கண்ட ராமர் இங்கு மிகவும் அழகாக இருக்கிறது இன்று இரவு நாம் இங்கை தங்கலாம் என்று சொன்னார். மூவரும் ஓர் மரத்தடியில் அமர்ந்தார்கள். அப்போது அந்த பிரதேசத்தின் தலைவனாக இருந்த குகன் ராமரின் மேல் அபார அன்பு கொண்டவன். ராமர் லட்சுமணன் வந்திருப்பதை அறிந்ததும் தன் பரிவாரங்களுடன் அவர்களை தரிசிக்க வந்தான். தூரத்தில் குகன் வருவதை அறிந்த ராமர் தானே குகனிடம் சென்று குகனை கட்டி அனைத்தார். குகனுடைய உபசாரங்கள் அபாரமாக இருந்தது. பலவிதமான உணவு பண்டங்களை குகனின் ஆட்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள். ராமரின் தவகோலத்தை கண்ட குகன் அயோத்தி உங்களுக்கு எப்படியோ அதேபோல் இந்த நகரமும் உங்களுடையது ஆகும். நீங்கள் இங்கு வசதியாக இருந்து கொள்ளலாம். பதினான்கு வருடங்களையும் தாங்கள் இங்கே இருந்து எங்களுடனேயே கழித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றேன் என்றான் குகன்.
ராமர் குகனிடம் பதினான்கு வருடங்கள் தவவாழ்க்கை முறையை வாழுவதாக எண்ணி இருக்கின்றேன். தவவாழ்க்கை விரதத்தில் கனிகளை தவிர்த்து வேறு எதையும் உண்ணக்கூடாது. உன் அன்புக்கு கட்டுப்பட்டு கனிகளை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். இங்கே இருந்து உங்கள் உபசாரங்களை பதினான்கு வருடங்களும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால் அது நான் கொண்ட சத்தியத்தில் இருந்து விலகுவது போலாகும். ஆகவே தன்னால் இங்கு இருக்க முடியாது நாளை இங்கிருந்து கிளம்பிவிடுவோம் என்றார்.
ராமருக்கும் சீதைக்கும் மரத்தடியில் புல்களை பரப்பி அன்று இரவில் தூங்க ஏற்பாடு செய்தான் லட்சுமணன். குகன் லட்சுமணிடம் நீங்கள் தூங்க தனியாக இடம் ஏற்பாடு செய்திருக்கின்றேன். இந்த இடத்தில் என்னை மீறி யாரும் வரமாட்டார்கள். எந்த பயமும் இல்லை. நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள் நான் காவலுக்கு இருக்கின்றேன் என்றான்.
புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். ஒரு சீடன் குழப்பத்துடனே இருந்தான். சீடன் குழப்பத்தில் இருப்பதை உணர்ந்த புத்தர் செல்லும் வழியில் ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார். சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார். சீடன் செல்லும் முன்பே ஒரு மாட்டு வண்டி அந்த நீர் வழியாகச் சென்றது. சீடன் சென்று பார்த்த போது நீர் கலங்கியிருந்தது. இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து புத்தரிடம் விவரம் சொன்னான். சிறிது நேரம் கழித்து அந்த நீரை கொண்டுவா என்றார். அவன் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தான். நீர் சிறிது தெளிந்திருந்தாலும் இன்னும் கலங்கலாகவே இருந்தது. அவன் திரும்பி வந்து புத்தரிடம் சொன்னான். சிறிது நேரம் சென்றது. புத்தர் மீண்டும் அவனைப் போய் வரச் சொன்னார்.
இம்முறை சென்று பார்த்தபோது நீர் தெளிவடைந்திருந்தது. எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தான். புத்தர் அந்தச் சீடனைப் பார்த்துச் சொன்னார் அந்த நீர் தெளிவதற்காக நீ ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருந்தாய். கலங்கிய நீரை அப்படியே விட்டு விட்டாய். நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது. உன் மனமும் இது போன்றதுதான். குழப்பம் ஏற்படும் போது மனதை அப்படியே விட்டுவிட்டு அமைதியாக இரு. சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும்.
மன அமைதியைப் பெறக் கடினமாக பயிற்சிகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அமைதியாக இருந்தாலே போதும் மனம் தானே குழப்பத்தில் இருந்து விடுபடும் – புத்தர்.
ராமர் சென்ற ரதம் தசரதரின் கண்ணை விட்டு மறைந்ததும் கதறிக்கொண்டே கீழே விழுந்தார். ஒரு பக்கம் கௌசலையும் மறுபக்கம் கைகேயியும் தசரதரை பிடித்தார்கள். தசரதர் கைகேயியை பார்த்து பாவியே என்னை தொடாதே. என் முகத்தை பார்க்க நான் விரும்பவில்லை. உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. உன்னை விட்டேன் உன்னை விட்டேன் என்று சொல்லிக்கொண்டே கைகேயியின் கையை உதறினார். உன்னுடைய வரத்தின் படி பரதன் இந்த ராஜ்ஜியத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டானேயானால் என் இறுதிக்காலத்தில் அவன் எனக்கு செய்யும் பிதுர்கடன் என்னை வந்து சேராது. உன் காரியத்தை நீ நடத்தி முடித்துக்கொண்டாய். கணவன் இல்லாத விதவைக்கோலத்தில் நீ மகிழ்ச்சியுடன் இரு. உன்னை நான் இனி பார்க்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி கௌசலையின் மாளிகைக்கு திரும்பினார்.
தரசதர் கௌசலையிடம் புலம்ப ஆரம்பித்தார். ராமர் எவ்வாறு காட்டில் வசிப்பான். மெத்தையில் படுத்து சுகமாக உறங்கியவன் காட்டில் தரையில் படுத்து தலைக்கு கல்லை வைத்து தூங்குவான். உணவிற்கு காட்டில் அவனுக்கு என்ன கிடைக்குமோ சாப்பிட்டானோ இல்லையோ என்று கதறிக்கொண்டே இருந்தார். கௌசலை ராமர் சென்ற மிகப்பெரிய துக்கத்தில் இருந்த படியால் தசரதருக்கு ஆறுதல் ஒன்றும் கூற முடியாமல் அமைதியாகவே அழுதுகொண்டிருந்தாள்.
சுமத்ரை கௌசலைக்கு ஆறுதல் சொன்னாள். அக்கா சாஸ்திரமும் தருமமும் தெரிந்த தாங்கள் ஏன் துக்கப்படுகின்றீர்கள். தசரதருக்கு தைரியம் சொல்ல வேண்டிய தாங்கள் தைரியம் இழக்காதீர்கள். தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற ராமர் ராஜ்ஜியத்தை துறத்து வனம் சென்றிருக்கின்றான். சத்தியத்திற்கு மறுபெயரான ராமரை பெற்ற தாங்கள் பெருமைப்படவேண்டும். ராமர் சென்றதை நினைத்து துக்கப்பட வேண்டாம். ராமருடன் சீதையும் லட்சுமணனும் சென்றிருக்கிறார்கள். அவர்களை ராமரை நன்றாக பார்த்துக்கொள்வார்கள். நிச்சயமாக மூவரும் திரும்பி வருவார்கள். ராமர் அயோத்தியை அரசாள்வான் என்று சமாதானம் செய்தாள். சுமத்ரையின் வார்த்தைகளால் கௌசலை சிறிது ஆறுதல் அடைந்தாள்.
ராமர் சென்ற ரதத்துடனே மக்கள் பெருங்கூட்டமாக வனம் போக வேண்டாம் நாட்டிற்கு திரும்புங்கள் என்று கூக்குரலிட்டவாரே பின் தொடர்ந்து சென்றார்கள். ரதத்தை நிறுத்திய ராமர் மக்களிடம் பேச ஆரம்பித்தார். அயோத்தி நகரத்து மக்களே என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும் பிரியமும் நான் அறிவேன். அதே அன்பையும் பிரியத்தையும் இனி நீங்கள் பரதன் மீது செலுத்தி பரதனை திருப்தி அடைய செய்யுங்கள். அதுவே எனக்கு திருப்திதரும். என்னைவிட வயதில் சிறியவனாக இருந்தாலும் ஞானத்தில் சிறந்தவன் பரதன். என் தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற தருமத்தின் படி வனம் செல்கின்றேன். விரைவில் திரும்பி வந்துவிடுவேன். அரசரின் ஆணைப்படி நீங்கள் நடந்து கொள்ளவேண்டும். அனைவரும் திரும்பிசெல்லுங்கள் என்று தன் அன்பு நிறைந்த பார்வையால் மக்களை பார்த்து உத்தரவிட்டார். மக்கள் அனைவரும் நகரத்திற்கு திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். ரதத்தை காட்டை நோக்கி செலுத்தினான் சுமந்திரன்.
ராமர் தசரதரிடம் தந்தையே வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன். நான் ராஜ சுகங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வனம் செல்ல வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றேன். தவசிகள் வாழும் தவ வாழ்க்கையை வாழ விரும்புகின்றேன். தாங்கள் சொல்லும் செல்வமும் சேனை பரிவாரங்களும் தவ வாழ்க்கைக்கு உபயோகப்படாது. நீங்கள் சொல்லும் அனைத்தையும் நான் காட்டிற்கு கொண்டு சென்றால் யானையை தானாம் செய்த பிறகு அதனை கட்டும் கயிற்றின் மீது ஆசைப்படுவது போலாகும். ஆகையால் மண்வெட்டியும் ஒரு கூடை மட்டும் போதும் அதை மட்டும் கொடுங்கள் எனக்கு போதும் என்றார். கைகேயி சிறிதும் கவலைப்படாமல் ஓடிப்போய் தயாராக இருந்த மண்வெட்டியையும் கூடையையும் கொண்டு வந்து கொடுத்தாள். அதனை பெற்றுக்கொண்ட ராமர் தந்தையே நாங்கள் செல்கிறோம். நான் திரும்பி வரும்வரையில் தாய் கௌசலையை இங்கே விட்டு செல்கிறேன் அவர் மிகவும் துக்கத்தில் இருக்கிறாள். எனக்காகவே அவள் உயிரை வைத்துக்கொண்டிருக்கிறாள். நான் திரும்பி வரும் வரை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மூவரும் கிளம்பினார்கள். தசரதர் தேர் ஒட்டி சுமந்தனை அரைத்து மூவரையும் காட்டின் எல்லைவரை விட்டுவிட்டுவா என்று கண்ணீருடன் சொல்லி ராமர் செல்வதை காண முடியாமல் தனது கண்களை மூடிக்கொண்டார். அரண்மனை பெண்கள் அனைவரும் கண்ணீருடன் விடை கொடுத்தார்கள். தன் திட்டம் முழுமையடைந்து விட்டதாக கைகேயி மகிழ்ச்சி அடைந்தாள்.
ராமர் சென்றதும் தசரதர் நான் எத்தனையோ கன்றுகளை கொன்று தாய் பசுவை இம்சித்திருக்க வேண்டும். அதனாலேயே நானும் கைகேயியின் இம்சையினால் என் மகனை பிரிந்து வாடுகின்றேன் என்று சொல்லி கதறி அழுதார். சுமத்திரையிடம் விடைகொடுக்குமாறு வணங்கினார்கள். சுமத்திரை லட்சுமணனை கட்டி அணைத்து உன் அண்ணனிடம் நீ வைத்துள்ள அன்பை பார்த்து உன்னை பெற்றதன் பாக்கியத்தை அடைந்துவிட்டேன். ராமரை காப்பது உன் கடமை. உன் அண்ணன் அருகில் இருந்து பத்திரமாக பார்த்துக்கொள். தம்பிக்கு அண்ணன் குருவும் அரசனும் ஆவான். இது நம் குலத்தின் தருமம். இதனை காப்பாற்றுவாயாக போய் வா லட்சுமணா என்று சுமத்திரை மூவருக்கும் விடைகொடுத்தாள்.
மூவரும் ரதத்தில் ஏறினார்கள். சீதை ராமருடன் காட்டில் இருக்கப்போகின்றோம் என்று சிரிப்பும் சந்தோசமுமாக ஏறினாள். தேரோட்டி சுமந்திரன் ராமரை பார்த்து இப்போது முதல் பதினான்கு வருடம் ஆரம்பம் ஆகின்றது என்று சொல்லி தேரில் ஏறினான். வீதியில் காலை முதல் குதூகலத்துடன் கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் இப்போது துக்கத்துடன் இருந்தார்கள். புறப்பட்ட ரதத்தை தடுத்த மக்கள் ராமரை கண்குளிர பார்த்துக்கொள்கின்றோம் சிறிது நேரம் நிறுத்திவைக்கும் படி மக்கள் கூப்பாடு போட ஆரம்பித்தார்கள். இங்கிருந்தால் மக்களிடம் இன்னும் துக்கம் அதிகமாகும் என்று எண்ணிய ராமர் ரதத்தை வேகமாக செலுத்த உத்தரவிட்டார். மிகவும் கஷ்டப்பட்டு ரதத்தை சுமந்திரன் அரண்மணை வாயியில் இருந்து ரதத்தை வெளியே கொண்டு வந்து வேகமாக செலுத்தினான். தசரதர் வெளியே வந்து ரதம் புறப்பட்டதில் இருந்து கண்ணை விட்டு மறையும் வரை ரதத்தை பார்த்துக்கொண்டே வெகு நேரம் நின்றார்.
கங்கைக் கரையில் செருப்பு ரிப்பேர் செய்யும் முதியவர் ஒருவர் இருந்தார். செருப்பு தைக்கும் தாழ்ந்த நிலையில் இருப்பதால் அவருக்கு கங்கை நீரை தொடுவதற்கு தடை. அவரால் அருகில் செல்ல முடியவில்லை. தினமும் கங்காமாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவார். ஒரு பண்டிதர் தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே வருவார். கங்கையில் இறங்கி நீராடுவர். அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார். ஒருநாள் அவரது செருப்பு அறுந்து விட்டது. அதை முதியவரிடம் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொன்னார். நன்றாக ரிப்பேர் செய்து கொடுத்தார் முதியவர். அரை அணா பணத்தை தூக்கி எறிந்தார் பண்ணிதர். முதியவர் அவரை வணங்கி சுவாமி உங்களிடம் நான் காசு வாங்க மாட்டேன். நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும் வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்கியம். உங்கள் காசு எனக்கு வேண்டாம் என்றார். நீ எனக்கு இலவசமாக சேவை செய்தால் அதை நான் ஏற்க முடியாது என்றார் பண்டிதர். அப்படி என்றால் இந்த ஏழைக்கு நீங்கள் ஒரு உதவி செய்யுங்கள். இதோ இந்த கங்காமாதாவை அனுதினமும் வணங்குகிறேன் என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. நான் அளித்த காணிக்கையாக நீங்களே அதை அவளுக்கு இந்த பணத்தை சமர்ப்பித்து விடுங்கள் என்றார். சரி என்ற பண்டிதர் இந்த ஓரணாவை வைத்துக்கொண்டு கங்கையில் இறங்கி வணங்கினார். மந்திரங்கள் ஜெபித்தார். அம்மா கங்கா தேவி இதோ இந்த ஓரணா கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் முதியவர் உன்னிடம் சமர்ப்பிக்க சொன்னது. ஏற்றுக்கொள் என்று சொல்லி வீசி எறிந்தார்.
ஓடிக்கொண்டிருந்த கங்கையிலிருந்து ஒரு அழகிய கை வெளியே தோன்றி அவர் வீசிய ஓரணா காசை ஆர்வமாக அன்பாக பெற்றுக் கொண்டது. கங்கையின் முகம் தோன்றியது பேசியது. பண்டிதரே எனக்கு மிக்க மகிழ்ச்சி இதோ இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த முதியவரிடம் கொடுங்கள் என்று கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர நவரத்னக் கற்கள் பதித்து ஒளிவீசிய தங்க வளையலை கொடுத்தாள். பண்டிதர் அசந்து போனான். ஆச்சர்யத்தில் நடுங்கினான். அதை தனது மேல் துண்டில் பத்திரமாக முடிந்து வைத்து கொண்டார். முதியவரிடம் அது பற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்கு போய் மனைவிடம் நடந்ததை சொன்னார், கங்காதேவி தந்த வளையலை மனைவியின் கண்களாங் நம்ப முடியவில்லை. கையில் போட்டு அழகு பார்த்தாள். மின்னியது. கண் கூசியது. இந்த ஒரு வளையலை வைத்துக்கொண்டு பிரயோஜனம் இல்லை. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அழகான ஒத்தை வளை கையில் போட்டுக் கொண்டு அலைந்தால் எல்லாரும் சிரிப்பார்கள். இதை ராஜாவிடம் கொடுத்துவிட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வாருங்கள். கொஞ்சகாலம் நிம்மதியாக சௌகர்யமாக வாழலாம் என்றாள். ராஜாவிடம் சென்றார் பண்டிதர். ராஜா வளையலை வாங்கி பார்த்து மகிழ்ந்தார். ஒரு பை நிறைய பொற்காசுகள் கொடுத்தார்.
ராணியிடம் ஆசையோடு அந்த வளையலை கொடுத்தார். அந்த ராணிக்கு. அவள் கைக்கு அது பொருத்தமாக அமைந்தது. அப்போது தான் அவளுக்கு தோன்றியது. ராஜாவிடம் இன்னொரு வளையளும் வேண்டுமே என்று கேட்டாள். ராஜா ஆட்களை அனுப்பி பண்டிதரை அழைத்து வர செய்தார். பண்டிதரை இன்னொரு வளையல் எங்கே அதனை ஏன் தரவில்லை வீட்டில் வைத்திருந்தால் கொண்டு வந்து உடனே கொடுங்கள். ராணி கேட்கிறாள் என்றார். பண்டிதர் தயங்கினார். ராஜாவுக்கு கோபம் வந்தது. இன்னும் ரெண்டு மணிநேரத்தில் இன்னொரு வளையலுடன் நீ வரவில்லை என்றால் உன் உயிர் உனதல்ல .ஜாக்கிரதை என்றான். ராஜாவின் கட்டளை பண்டிதனுக்கு எம பயத்தை தந்ததால் கங்கைக்கரையில் இருக்கும் முதியவரிடம் ஓடினான்.
முதியவர் வழக்கம்போல் கங்கைக் கரைக்கு தூரமாக நின்று இரு கரம் கூப்பி கண்களை மூடி கங்கையை வணங்கினார். செருப்பு தைக்க தேவையான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்தார். தன் முன்னே பண்டிதர் ஓடிவந்து வணங்கினார். முதியவருக்கு அதிர்ச்சியுடன் சாமி நீங்க என்ன செய்றீங்க நான் தானே உங்களை எப்பொழுதும் தங்களை வணங்குவேன். நீங்கள் என்னை ஏன் வணங்குகின்றீர்கள் என்று கேட்டார். என்னை மன்னித்து விடு நான் துரோகி. கங்கா மாதா உனக்கு ஒரு பரிசு கொடுத்தாள் என்று நடந்த அனைத்தையும் சொல்லி ராஜாவிடம் இருந்து தன்னை காப்பாற்ற வழி சொல்லுமாறு கேட்டார். முதியவர் கண்ணை மூடினார். தனக்கு அருகே இருந்த செருப்பு தைக்க தேவையான தண்ணீர் பாத்திரத்தில் நிரம்பிய நீரை வேண்டினான். அம்மா கங்கா நீ எனக்கு பரிசாக ஒரு வளை கொடுத்ததற்கு நான் எத்தனையோ ஜென்மம் கடமைப் பட்டிருக்கிறேன் தாயே. பாவம் இந்த பண்டிதரின் உயிரைக் காப்பாத்து தாயே. இன்னொரு வளையலும் தா அவர் பிழைக்கட்டும் என்று தனது கையை அந்த தண்ணீரில் விட்டார். மீண்டும் பிரகாசமான தங்க வைர கற்கள் பதித்த இன்னொரு வளையல் அந்த முதியவரின் தண்ணீர் பாத்திரத்திலிருந்து தோன்றியது. பண்டிதர் ராஜாவிடம் அதை எடுத்து போகவில்லை. தனது உயிரைப் பற்றி கவலைப் படவில்லை. முதியவரின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கண்ணீரால் அவற்றை நனைத்து அபிஷேகம் செய்தான். சீடனாக அருகில் அமர்ந்தார். செய்தி அனைவருக்கும் பரவியது. ராஜாவும் அவர் மனைவியும் ஓடி வந்தார்கள். முதியவரை வணங்கி இத்தொழிலை விட்டுவிட்டு அரண்மனையில் வந்து தங்குமாறு அழைத்தார்கள். என் கங்காமாதா தரிசனம் ஒன்றே போதும் என்று அவர்களை திரும்பி வணங்கினார் முதியவர்.
கேரள மாநிலம் திருச்சூர் தேக்கின்காடு பகுதியில் வடக்குநாதர் கோவில் உள்ளது. மூலவர் வடக்குநாதர். மூலவர் முழுவதும் நெய்யினால் ஆனவர். மூலவர் வடக்குநாதர் 12 அடி உயரமும் 25 அடி அகலமுடைய நெய்லிங்கமாக எப்போதும் உருகாமல் பாறை போல் இறுகி உள்ளார். எப்போதாவது நெய் உருகி வெளிப்பட்டால் உடனே காணாமல் போய்விடுகிறது. மூலவருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்து வருகின்றனர். பன்னீர் சந்தன அபிஷேகம் செய்தாலும் லிங்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. கோடையின் வெப்பமோ ஆரத்தி வெப்பமோ இந்த நெய்யை உருகி விழச்செய்யவில்லை. பூச்சிகள் மூலவரை தாக்காது. மூலவர் மீது உள்ள நெய்க்கு வாசனை கிடையாது. இந்த லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது. கோவில் நான்கு புறமும் பெரிய கோபுரத்துடனான வாசல்களைக் கொண்டிருக்கிறது. வட்ட வடிவத்திலான கருவறையில் வடக்குநாதர் மேற்கு நோக்கிய நிலையில் இருக்கிறார். பின்புறம் அமைந்திருக்கும் சன்னிதியில் பார்வதிதேவி கிழக்கு நோக்கியபடி வீற்றிருக்கிறார்.
கோவில் வளாகத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ராமர் சங்கரநாராயணர் கணபதி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. இந்த ஐந்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக வழிபாடு நடத்தப்படுகிறது. ஆலயத்தில் சிவனின் பூதகணமான சிம்மோதரனுக்கும் கோவிலை நிறுவிய பரசுராமருக்கும் சங்கு சக்கரத்துடன் ஆதிசங்கரருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து சிவபெருமான் கோவில்களிலும் நந்தி மூலவரை நோக்கியபடி அமர்ந்திருப்பார். திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் நந்தி சிவனுக்கு எதிர்புறம் இல்லாமல் விலகி தனி மண்டபத்தில் இருக்கிறார். பிரதோஷக் காலங்களில் மட்டும் சிவபெருமான் இந்த மண்டபத்தில் எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருளுகிறார். அமிர்தம் கிடைக்க தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள். கடைந்து முடித்ததும் அந்த பாம்பு கோவில் கருவறை முன்பிருக்கும் வாசலில் மணியாக வந்து அமர்ந்துவிட்டது. இதனால் பிரதோஷக் காலங்களில் இந்த மணியைத் தலைமை அர்ச்சகர் மட்டும் அடித்து ஒலி எழுப்புவார். வேறு யாரும் தொட அனுமதியில்லை.
ஜமதக்னி முனிவர் ரேணுகாதேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் பரசுராமர். சத்ரிய குலத்தவர்கள் மீது கோபம் கொண்ட பரசுராமர் சத்ரிய குலத்தவர்கள் பலரையும் அழித்தார். அதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க நினைத்த பரசுராமர் சிவபெருமானுக்கு கோவில் நிறுவ விரும்பினார். அதற்காகக் கடல் அரசனிடம் சென்ற அவர் சிவபெருமானுக்கு கோவில் கட்ட கடல் பகுதியில் நிலத்தை உருவாக்க உதவும்படி வேண்டினார். கடல் அரசனும் அவர் வேண்டுகோளை ஏற்று பரசுராமரின் கையிலிருந்த வேள்விக்கான பொருள்கள் இருந்த பையை வீசியெறிய சொன்னார். பரசுராமரின் பையை தூக்கி எறிந்தார். கையை விழுந்த இடம் வரை கடல்நீர் பின் வாங்கிப் புதிய நிலப்பரப்பை உருவாக்கிக் கொடுத்தார் கடல் அரசர். புதிய நிலப்பரப்பில் ஒரு மேடான இடத்தில் சிவபெருமானுக்கு முதல் கோவில் அமைக்க விரும்பினார் பரசுராமர். அதன்படி வடக்குப் பகுதியில் இருந்த நிலத்தை சிறிய குன்று போல் உயர்த்தி கோவில் அமைக்க முடிவு செய்தார். சிவபெருமானிடம் இந்த இடத்தில் தங்கியிருந்து அதன் மூலம் இப்பகுதியை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டார் பரசுராமர். சிவன் தனது மனைவி பார்வதி அவரது மகன்களான விநாயகர் மற்றும் சுப்பிரமணியனுடன் பரசுராமரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய இக்கோவிலுக்கு வந்தார். சிவன் இப்போதிருக்கும் திருச்சூர் என்ற இடத்தில் நின்றார். பின்னர் அவரும் அவருடன் வந்தவர்களும் ஒளிமயமாகி மறைந்து விட்டனர். ஒளிமயமான இறைவனை பரசுராமர் ஒரு பெரிய ஆலமரத்தின் அடிவாரத்தில் ஒரு பிரகாசமான சிவலிங்கமாக கண்டார். சிவலிங்கமாக மறைந்திருந்த இறைவனை நெய்யால் குளிர்வித்தார். இதனால் இறைவனின் உருவம் நெய்லிங்கமாக மாறியது. 12 அடி உயரம் 25 அடி அகலம் எனும் அளவில் அமைந்த இந்த லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது.
பெரிய ஆலமரத்தின் அடிவாரத்தில் பல காலங்கள் இருந்த சிவலிங்கத்தை அந்நாட்டின் அரசன் மிகவும் வசதியான இடத்திற்கு மாற்றி ஒரு கோவிலில் வைத்து வழிபட முடிவு செய்தார். தெய்வத்தை புதிய இடத்தில் மீண்டும் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது. சிவலிங்கத்தை எடுக்க ஒரு சிரமம் இருந்தது. ஆலமரத்தின் ஒரு பெரிய பகுதியை வெட்டாமல் லிங்கத்தை அகற்ற முடியவில்லை. மரத்தின் கிளைகளை வெட்டும்போது அதன் ஒரு பகுதி சிலை மீது விழுந்து சிலை சேதமடையும் அபாயம் இருந்தது. ஆட்சியாளருக்கும் மற்றவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியாதபோது யோகதிரிப்பாடு என்பவர் லிங்கத்தை முழுவதுமாக மூடிமறைக்கும்படி லிங்கத்தின் மீது படுத்துக் கொண்டு மரத்தை வெட்டும்படி ஆட்களிடம் கேட்டுக்கொண்டார். வெட்டுதல் தொடங்கியது. அனைவரும் அதிசயிக்கும்படி மரத்தின் ஒரு துண்டு கூட லிங்கத்தின் அருகே எங்கும் விழவில்லை. சிவலிங்கம் நகர்த்தப்பட்டு புதிய இடத்தில் நிறுவப்பட்டது, அது இப்போது வரை உள்ளது. பின்னர் சாஸ்திரங்களில் வகுக்கப்பட்ட விதிகளின்படி இந்த கோயில் கட்டப்பட்டது.
ஆதிசங்கரரின் தாய் தந்தை இக்கோவிலில் 41 நாட்கள் விரதம் இருந்து பூஜை செய்ததன் பயனாக ஆதிசங்கரர் அவதரித்தார். வடக்குநாதர் கோவில் 7ம் நூற்றாண்டு காலகட்டத்தில் பெருந்தச்சன் என்பவரது காலத்தில் கட்டுமானம் சரி செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. அவரது காலத்திற்குப் பின் நம்பூதிரிகளின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இந்த நம்பூதிரிகளில் இருந்து ஒருவர் யோகதிரிப்பாடு எனும் பெயரில் நிர்வாகத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு நிர்வாகம் நடைபெற்றது. அதன் பிறகு கி பி 981 க்குப் பின் கொச்சியை ஆண்ட மன்னன் ராஜா சக்தன் தம்புரான் என்பவரது காலத்தில் இந்த நடைமுறை மாற்றப்பட்டுக் கோவிலைப் பொதுமக்களே நிர்வகிக்கத் தொடங்கினர். மன்னரின் காலத்தில் கோவிலைச் சுற்றிலும் அமைந்திருந்த தேக்கு மரக்காட்டை அழிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அப்பகுதி மக்கள் அங்கிருந்த மரங்களெல்லாம் சிவபெருமானின் சடைமுடியாக இருக்கிறது அதை அழிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்புகளை மீறி அங்கிருந்த காடு அழிக்கப்பட்டது. காடு அழிக்கப்பட்ட பின் வருடாவருடம் இந்தக் கோவிலில் நாற்பத்தியொரு நாட்கள் வரை நடத்தப்பட்டு வந்த திருவிழாவை இன்று வரை நடத்த முடியவில்லை. மூலவருக்கு இரவு எட்டு மணிக்கு மேல் நடைபெறும் திருப்புகா வழிபாட்டிற்கு தேவலோகத்தினர் பலரும் வருகின்றனர். அவர்கள் வருகைக்கு இடையூறு எதுவும் இருக்ககூடாது என்பதற்காக இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் வழிபாட்டிற்கு இடையில் கோவிலுக்கு வெளியேச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இரவு வழிபாடு முடிவடைந்த பின்னரே கோவிலை விட்டு வெளியேற முடியும்.
ராமரும் சீதையும் லட்சுமணனும் தசரதரிடம் வீழ்ந்து வணங்கினர். ராமர் தசரதரிடம் பேச ஆரம்பித்தார். தந்தையே சீதையும் லட்சுமணனும் என்னுடன் வருகின்றார்கள். அவர்கள் என்னோடு வரும் முடிவிலிருந்து பின் வாங்க மறுக்கின்றார்கள். நாங்கள் மூவரும் வனவாசம் செல்கிறோம் எங்களை ஆசிர்வதித்து அனுப்புங்கள் என்றார். அதற்கு தசரதர் ராமா கைகேயிக்கு கொடுத்த வரங்களால் நான் கட்டுப்பட்டவனாக இருக்கின்றேன். கைகேயியினால் நாம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். அவளால் இந்த பாவ காரியத்திற்கு நான் துணை போவது போல் ஆகிவிட்டது. நாட்டிலிருந்து உன்னை வெளியேற்ற வேண்டிய இந்த அடாத செயலை கனவிலும் நான் நினைத்துபார்க்கவில்லை. கைகேயியிடம் நான் கொடுத்த வரத்திற்கு நான் கட்டுப்பட்டாலும் நீ கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. தந்தையின் வாக்கை சத்தியமாக்க வேண்டும் என்று வனம் போக தீர்மானித்துவிட்டாய். நீ உன் பலத்தை பயன்படுத்தி இந்நாட்டின் அரசனாக ஆகியிருக்கலாம். ஏன் அப்படி செய்யவில்லை என்று கேட்டார்.
அதற்கு ராமர் இந்த நாட்டை நீங்கள் அரசராக இருந்து இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்யவேண்டிய இந்த அரச பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. என் பலத்தை பயன் படுத்தி அரசபதவியை பெற்றால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் சத்தியத்தை இழந்து பொய்யனாகி விடுவீர்கள். உங்கள் சத்தியத்தை காப்பாற்றுவது என் கடமை அதனை மகிழ்ச்சியுடன் செய்துமுடிப்பேன். பதினான்கு வருடம் வனவாசத்தில் இருந்து விரைவில் திரும்பிவருவேன். பரதனை விரைவில் வரவழைத்து அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து அவனை ஆசிர்வதித்து உங்களது இரண்டாவது வரத்தையும் நிறைவேற்றுங்கள் என்றார்.
ராமா உன்னிடம் ஒரு சிறு கோரிக்கை வைக்கின்றேன். இன்று இரவு தங்கிவிட்டு நாளை அதிகாலை இங்கிருந்து செல்வாய். உன்னை மனதார பார்த்து திருப்தி அடைய விரும்புகின்றேன் என்றார். அதற்கு ராமர் என் தாய்க்கு கொடுத்த வாக்கின்படி நான் மனதால் அரசபதவியை துறந்துவிட்டேன். என் மனம் வனத்தை பற்றி இருக்கிறது. உங்களுடைய மனதில் வருத்தமும் குறையும் வேண்டாம். ஒரு நாள் செல்வதை ஒத்திப்போட்டால் தாய்க்கு நான் கொடுத்த வாக்கை மீறுவது போலாகும். மேலும் நாளை செல்வதனால் அதிகப்படியான பயன்கள் ஏதும் ஏற்படாது. என்னை ஆசிர்வதியுங்கள் நாங்கள் செல்கின்றோம் எங்களுக்கு உத்தரவு கொடுங்கள் என்றார். தருமத்தில் இருந்து பிறழாத உத்தமனே குலத்தின் பெருமையை பெருக்குவாய். பயம் உன்னை விட்டு விலகி நிற்கட்டும். நீ சென்றுவா என்று அனுமதி கொடுத்தார்.
தசரதன் தேரோட்டியான சுமந்தனிடம் நம்முடைய சேனேத்தலைவர்களிடம் சொல்லி சதுரங்க சேனே ஒன்றை உருவாக்கி ராமர் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடு செய்துவிடு. மேலும் ராமன் காட்டில் சுகமாக வாழ்வதற்கு தேவையான தனம் தானியம் பணியாட்களுடன் சகல பொருட்களையும் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துவிடு என்று உத்தரவிட்டார். அருகிலிருந்த கைகேயி சிரித்தாள். ராஜ்யத்தில் உள்ள செல்வத்தை எல்லாம் வாரி ராமருடன் கொடுத்தனுப்பி விட்டு மீதி இருப்பதை பரதனுக்கு தருவீர்களா. வரத்தை மிக அழகாக பூர்த்தி செய்கின்றீர்கள் என்றாள்.
நாட்டின் எல்லையில் இருந்தது அந்தத் துறவியின் குடில். அவரை அறியாதவர்கள் யாரும் இல்லை. நாட்டின் மன்னன் அவ்வப்போது துறவியிடம் வந்து ஆசி பெற்றுச் சென்றான். ஆசிபெற வரும் போதெல்லாம் அரசன் தன்னுடைய அரண்மனையின் சிறப்பு பற்றி பெருமையாக பேசுவான். தன் அரண்மனையை பற்றி மிக பெருமையாக பேசுவார். தனது அரண்மனைக்கு வந்து சில காலம் தங்கிச் செல்லும்படியும் துறவிக்கு அழைப்பு விடுத்தான். கல்வி கேள்விகளில் சிறந்தவன் நல்லாட்சி வழங்குபவன் தரும சிந்தனை கொண்டவன் என பெயர் பெற்ற அந்த அரசனின் பேச்சில் தான் என்ற கர்வம் இருந்ததை அறிந்த துறவி கர்வத்தை அடக்க தீர்மானித்து ஒருநாள் அரண்மனைக்கு சென்றார். அங்கிருந்த காவலர்கள் அவரை அறிந்தவர்கள் என்பதால் துறவியை தடுக்கவில்லை. வணங்கி வழிவிட்டு நின்றார்கள். துறவி நேராக உள்ளே சென்றார். அந்த மாட மாளிகையில் பல நாட்கள் வாழ்ந்தவர் போல் விறுவிறுவென ஒவ்வொரு இடமாக சென்று வந்தார். அரண்மனைக்குள் பணியாற்றிய பணியாளர்கள் காவலர்கள் அதிகாரிகள் என யாரையும் துறவி கண்டு கொள்ளவில்லை. தன்போக்கில் சென்று அரசனின் அறையை அடைந்து அரசனுக்கு முன்னே போய் நின்றார். அவரைக் கண்டதும் மன்னன் மகிழ்ச்சியடைந்தான். வரவேற்று துறவியை வணங்கினான். வாருங்கள் குருவே உங்கள் வருகையால் என்னுடைய அரண்மனை புனிதம் அடைந்தது. முதலில் அமருங்கள் தங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் குருவே உடனே அதனை நிறைவேற்ற காத்திருக்கிறேன் என்றான் அரசன்.
அதற்கு துறவி இந்த விடுதியில் எனக்குத் தூங்குவதற்கு கொஞ்சம் இடம் வேண்டும் என்றார். விடுதி என்று துறவி சொன்னது அரசனுக்கு வருத்தத்தையும் கோபத்தையும் அளித்தது. இவ்வளவு பெரிய அரண்மனையை இந்தத் துறவி விடுதி என்கிறாரே என்று நினைத்தான். கோபத்தை அடக்கிக் கொண்டு குருவே இது விடுதி அல்ல என் அரண்மனை என்றான். அப்படியா சரி நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல். இந்த அரண்மனை இதற்கு முன்னால் யாருக்குச் சொந்தமாக இருந்தது என்றார் துறவி. என் தந்தைக்கு என்றான் அரசன். அவர் எங்கே இப்போது இருக்கிறார் என்று கேட்டார் துறவி. உடனே மன்னன் அவர் இறந்துவிட்டார் என்றான். அவருக்கும் முன்பாக இந்த அரண்மனை யாருக்கு சொந்தமாக இருந்தது என்று கேட்டார் துறவி. என் பாட்டனாருக்கு என்றான் மன்னன். அவர் இப்போது எங்கே என்று கேட்டார் துறவி. அவரும் இறந்துவிட்டார் என்று மன்னன் தெரிவித்தான். துறவி சிறு புன்னகையுடன் அப்படியானால் உன் தந்தை பாட்டனார் இருவரும் இங்கே சில காலம் தங்கியிருக்கிறார்கள். வந்த வேலை முடிந்ததும் கிளம்பிப் போய்விட்டார்கள். அப்படியென்றால் இது விடுதிதானே நீ இதனை அரண்மனை என்கிறாய் என்றார்.
துறவியின் பதிலைக் கேட்டு அரசன் திகைத்துப் போய் நின்றான் அரசன். தான் என்ற கர்வத்தில் என்னுடைய அரண்மனை என்று சொன்னது எவ்வளவு பெரிய தாழ்வான செயல் என்று நினைத்து மனம் தெளிந்தான். துறவிக்கு நன்றி கூற அவன் முன்வந்து நிமிர்ந்து பார்த்தபோது வந்த வேலை நல்லபடியாக முடிந்த திருப்தியில் வெகுதூரம் நடந்து சென்றிருந்தார் துறவி.