புரந்தரதாசர்

கர்நாடக மாநிலத்தில் 1484 ஆம் ஆண்டு புரந்தரகட எனும் ஊரில் செல்வந்தர் வரதப்பநாயக்கருக்கும் கமலாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக் ஆகும். இவர் இளமையில் சீனப்பா என்ற பெயராலும் திம்மப்பா திருமலையப்பா என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் விட்டலர் மீது பக்தி ஏற்பட்டதால் புரந்தரவிட்டலர் என்ற பெயர் ஏற்பட்டது. இவர் வளமான குடும்பத்தில் பிறந்ததால் நல்ல கன்னடக் கல்வியுடன் சமிஸ்க்ருத மொழியும் கற்பிக்கப்பட்டது. அத்துடன் இவருக்கு சங்கீதத்திலும் நல்ல புலமை கூடவே தொற்றிக் கொண்டது. தனது பதினாறாம் வயதில் சரஸ்வதிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார். தனது பெற்றோரை இருபதாம் வயதில் இழந்தார். தன் தகப்பனாரின் இரத்தின வியாபாரத்தையே தானும் தொடர்ந்து பெரும் செல்வம் ஈட்டி நவகோடி நாராயணன் என்னும் பெயருடன் விளங்கினார். இவர் தொடக்கத்தில் மிகவும் கருமியாகவும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார். இயல்பாகவே இவருக்கு ஒருவருக்கும் உதவும் சிந்தனை கிடையாது. இவரை நாடி யாராவது உதவி கேட்க வந்தால் கொஞ்சம் கூட இறக்கம் இல்லாமல் முடியாது என்பர். எதிலும் கணக்கு பார்ப்பார். எப்போதும் வியாபாரம் அதிலிருந்து கிடைக்கும் லாபம் ஒன்றே குறியாக இருப்பார். ஆரம்பத்தில் பணத்தின் மீது மட்டுமே அதீத ஆசை வைத்திருந்த அவரை மக்கள் வெறுத்து ஒதுக்கினர். நாராயணாவின் மனைவி சரஸ்வதிபாய் இவருக்கு நேர் எதிராக தயாள கொடையுள்ளம் கொண்டவர்.

ஓர் ஏழை பிராமணன் அடிக்கடி இவரது வியாபார தலத்திற்கு வந்து ஏதேனும் உதவுங்கள் என உதவி கேட்பார். ஒரு நாள் அவரிடம் இனி இங்கு வராதீர்கள் எனக்கூறி செல்லாத சில நாணயங்களைத் தந்தார். அதைப் பெற்றுக் கொண்ட ஏழை நேராக இவரது மனைவியிடம் சென்று இதனை காண்பித்து இப்படி உங்கள் கணவர் என்னை ஏமாற்றுகிறார் நீங்கள் எனக்கு ஏதாவது உதவுங்கள் என வேண்டினார். நாராயணாவின் மனைவி தன் பிறந்த வீட்டில் சீதனமாகத் தந்த தனது வைர மூக்குத்தியை அந்த பிராமணனிடம் தந்தார். அவரோ அதை விற்பதற்காக நேராக நவகோடி நாராயணாவின் கடைக்குச் சென்றார். ஆனால் நாராயணாவோ மிக கோபம் கொண்டு நான் தான் இங்கு வரக்கூடாது என்று சொல்லி அனுப்பினேனே பின் எதற்கு இங்கு வருகிறாய் என கடிந்து கொண்டார். அந்த ஏழை பிராமணன் நான் இங்கு வந்தது ஒரு நகையை விற்பதற்காகவே அன்றி உன்னிடம் யாசகம் கேட்க அல்ல என்று நகையை கொடுத்தான். அதை வாங்கி பார்த்த நாராயணா தன் வைர வியாபார அனுபவத்தினால் பிராமணன் கொடுத்தது தன் மனைவியின் மூக்குத்தி தான் என்று கண்டு பிடித்தார். இது எப்படி தன் மனைவி இவனுக்குக் கொடுக்கலாம் என கோபமடைந்தார். பிராமணரே இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும். இப்போது என்னிடம் இதற்கான பணம் இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். அதை ஒப்புக்கொண்ட பிராமணர் போய்விட்டார். ஒரு பெட்டியில் அந்த மூக்குத்தியை வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்ற நாராயணா தன் மனைவியை அழைத்து உடனே உன் வைர மூக்குத்தியை கொண்டுவா என்றார்.

சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். இப்போது என்ன செய்வது? அந்தப் பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே என்று இறுதியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். இந்தத் துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடு வதைவிட சாவதேமேல் என்ற முடிவோடு ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள். தாயே துளசி நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா என்று சொல்லி விஷத்தைக் குடிக்க முற்படுகையில் விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது. சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும் வியப்பும் அணைத்துக் கொண்டது. என்னைக் காப்பாற்றி விட்டாய் தாயே என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள். கணவனிடம் ஓடோடிச் சென்று இந்தாருங்கள் மூக்குத்தி என்று கொடுத்தாள். ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர்போல மீண்டும் தனது கடைக்குச் சென்று பூட்டி வைத்த பெட்டியை தேடினார் மூக்குத்தி இல்லை. கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து எனக்கு பணம் வேண்டாம் என்னுடைய நகையைக் கொடுங்கள் என்று கேட்டால் என்ன செய்வது?மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது போல் இருந்தது அவருக்கு கூடவே பயமும் வந்தது.

அதிகாலை ஏழை பிராமணன் திரும்ப வந்தான். நான் கொடுத்த நகைக்கு பணம் தருவதாகச் சொன்னீர்களே. இன்று பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னுடைய நகையைக் கொடுங்கள். வேறு கடையில் விற்றுக் வைத்துக் கொள்கிறேன் என்றான். நாராயணனின் நிலை பரிதாபமானது. செருக்குடன் வாழ்ந்தவர் கிழவனிடம் கெஞ்சினார். ஐயா மன்னித்து விடுங்கள் வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது வந்தவுடன் தருகிறேன் மாலை வாருங்கள் கண்டிப்பாக பணம் தருகிறேன் என்று கூறினார். சரி மாலை வருவேன் என்னை ஏமாற்றி விடாதே நான் வருகிறேன் என்று பிராமணன் சென்றார். பிராமணன் போனபின்பு தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி அவர் எங்கே போகிறான் என்று பார்த்துவிட்டு வா என்று அனுப்பினார். பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரம் கழித்து பதை பதைப்புடன் கடைக்கு ஓடி வந்தான். ஏன் இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி ஓடி வருகிறாய்? அந்த பிராமணன் உன்னை அடையாளம் தெரிந்துகொண்டு மிரட்டினானா என்று கேட்டார். அதற்கு வேலையாள் அந்த பிராமணர்இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார். நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார். பின்னர் மறைந்து விட்டார் என்றான். நாராயணன் திடுக்கிட்டார். என்ன இது அதிசயம் என்று வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்த பிராமணருக்கு தானம் தந்ததையும் பின்பு விஷ பாத்திரத்தில் மூக்குத்தி தானாக வந்ததையும் சொன்னாள்.

நாராயணனுக்கு புரிந்துவிட்டது. கடவுளே தன்னை சோதிப்பதை உணர்ந்தார். அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது. இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்? போ உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள். இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை. இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன் என்று அழைக்கப்படுவாய். பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார் என்று அசீரீரி கூறியது. நம்மிடம் வந்து விளையாடியது அந்த இறைவனே என்று மகிழ்ந்து இவ்வுலக வாழ்க்கை அனைத்தும் மாயை என்று உணர்ந்து ஸ்ரீகிருஷ்ண தாஸராக உருவெடுத்தார்.

நாராயணன் தன் அனைத்து சொத்துக்களையும் தன் குடும்பதரின் சம்மதத்தோடு தானம் செய்தார். பின் மத்வகுரு வியாசராஜரின் சீடரானார். தனது முப்பதாவது வயதில் ஞானம் பெற்றார். 1525 ம் ஆண்டு குருவுடன் பண்டரிபுரம் சென்ற அவருக்கு குரு வியாசராஜர் புரந்தர விட்டலன் என்ற பெயரை சூட்டினார். அன்றிலிருந்து புரந்தரதாஸராக அழைக்கப்பட்டார். திருப்பதிக்கு ஒருமுறை புரந்தரதாசர் வந்தார். அவரை புரந்தரி என்பவள் வரவேற்று உபசரித்தாள். அவள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் தெய்வ பக்தி மிகுந்தவள். மிகுந்த ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தாள். அதன் காரணமாக புரந்தரதாசரும் அவளது வீட்டில் தங்க சம்மதித்தார். இரவு நேரமாயிற்று. தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு ரகசியமாக வெளியே கிளம்பினாள் புரந்தரி. அதைக்கண்ட புரந்தரதாசரின் மனம் கசந்தது. தனது குலத்தொழிலை அவள் இன்னும் விடவில்லையே? என்று எண்ணி மனம் நொந்தவராய் அவளைப் பின் தொடர்ந்தார். நேராகக் கோயிலுக்குச் சென்றாள் புரந்தரி. அந்த அர்த்தஜாம வேளையிலும் மூலஸ்தானத்தின் கதவு மட்டும் திறந்திருந்தது. புரந்தரி உள்ளே சென்றதும் கதவு மூடிக்கொண்டது. கதவின் துவாரம் வழியே பார்த்தார் புரந்தரதாசர்.

மூலஸ்தானத்தில் அழகான இளைஞன் ஒருவன் வீணை இசைக்க புரந்தரி நடனமாடினாள். பிறகு புரந்தரி வீணை வாசிக்க அவன் நடனமாடினான். இதைக் கண்ட புரந்தரதாசரின் மனம் கொதித்தது. மறுநாள் காலை வீடு திரும்பிய புரந்தரியிடம் பார்த்தவற்றை கூறி யார் அது என்று கேட்டார். இன்று தெரிந்து கொள்வீர் புரந்தரதாசரே என்று கூறிச்சென்று விட்டாள். அன்று இரவும் அதே போலக் கிளம்பிய போது புரந்தரதாசரையும் அழைத்துச் சென்று கதவிற்கு வெளியே அமர வைத்தாள் புரந்தரி. அன்றும் அதேபோல நடந்தது. ஆனால் வீணை வாசிக்கும் போது அந்த இளைஞன் அபஸ்வரமாக வாசிக்க ஆரம்பித்தான். அபஸ்வரம் புரந்தரதாசரால் தாங்க முடியவில்லை. கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஓடிவந்தார் ரகுநாததாசர். அந்த திவ்யரூப சுந்தரன் எழுந்து ஓடினான். அவன் பின்னாலேயே ஓடினார் புரந்தரதாசர். அந்த இளைஞன் கருவறைக்குள் சென்றதும் அந்த சுந்தர ரூபம் மறைந்துவிட்டது. புரந்தரிக்கு அருள் புரிந்து ஆடவும் பாடவும் வந்தது இறைவனே என்பது புரந்தரதாசருக்குப் புரிந்தது. அம்மா உனக்காக இறைவனே வீணை இசைக்க நீ ஆடினாய். நீ இசைக்க அவர் ஆடினார். என்னே உன் பெருமை என்று கூறிக் கண்களில் நீர் பெருக அந்த பக்தையின் காலில் விழுந்தார் புரந்தரதாசர்.

பக்தை புரந்தரியின் மூலம் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு இசை உலகில் பெரும்புகழ் பெற்ற புரந்தரதாசராக மாறினார். இசை ஞானம் கொண்டுள்ள இவரை இவரது குரு வியாசதீர்த்தர் தென்னிந்திய கர்நாடக இசையை சொந்தமாக கீர்த்தனைகளை இயற்றி பரப்புவதற்கும் பாடல்கள் கடைக்கோடி மனிதர்களும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக இயற்றும்படி கட்டளையிட்டார். இதனை மேற்கொண்ட புரந்தரதாஸர் 4,75,000 கீர்த்தனங்கள் எழுதினார். இது வாசுதேவ நாமாவளிய என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் தற்போது 8000 பாடல்கள் மட்டுமே உபயோகத்தில் உள்ளது. இவரின் கீர்த்தனங்கள் கன்னடத்திலும் வடமொழியிலும் உள்ளன. இவரின் பாடல்களை தாசர்வாள் பதங்கள் என்றும் தேவர் நாமாக்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு. இவர் கீர்த்தனைகளில் வேதங்கள் உபநிடதங்கள் முதலியவற்றின் சாரம்சங்கள் உள்ளது.

ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற ச, ரி, க, ம, ப, த, நீ என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற்குத் தந்தவர் புரந்தரதாசரே. மிக முக்கியமாக முதன்முதலில் பாடல் கற்க ஆரம்பிப்போர்க்கு அரிச்சுவடியாய் திகழும் மாயா மாளகௌட என்ற ராகம் இவரால் இயற்றப்பட்டது. கர்நாடக இசையின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இவர் ஆரம்ப இசைப் பயிற்சிக்கான ஸ்வரவரிசைகள், ஜண்டை வரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள் முதலியவற்றை இயற்றியுள்ளார். மாயாமாளவகௌளை என்னும் ராகம் தான் ஆரம்பப் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ராகம் எனத் தேர்ந்தெடுத்தவரும் இவரே. இவர் பக்திப் பாடல்களை இயற்றி பாடுவதில் வல்லவரானார். விஜய நகர சாம்ராஜ்யத்தில் முக்கிய பதவியில் இருந்தவரும் திருப்பதி வேங்கடவனின் ஆலயத்தில் பல காலங்கள் சேவை புரிந்தவரும் மத்வ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானவருமான ஸ்ரீ வியாசராஜர் புரந்தரதாசரின் குருவாவார். இவர் தனது சீடரான புரந்தரதாசரை பாராட்டி ஒரு பாடல் பாடி புரந்தரதாசரை பெருமைப்படுத்தி இருக்கிறார். மேலும் பாகவதம் மற்றும் உபநிஷத்களின் சாரமாகக் கருதப்படும் புரந்தரதாசரின் பாடல்களை தொகுத்து அவற்றிற்கு புரந்தரோபநிஷத் என்று பெயரிட்டார் ஸ்ரீவியாசராஜர்.

கர்நாடகாவிலுள்ள ஹம்பி என்ற சரித்திர புகழ் மிக்க ஊரில் குடிபெயர்ந்தார். ஒவ்வொரு நாளும் தன்னுடைய தம்பூராவுடன் துளசிமணிமாலை அணிந்து கொண்டு தெருவில் பக்தி பாடல்களை பாடிக் கொண்டிருப்பார். அப்போது அப்பண்ணா என்ற ஒரு ஏழை குயவன் தினமும் பாண்டுரங்கனுடம் பேசுவதாக அறிந்தார். இதை காண விரும்பிய புரந்தரதாஸர் துங்கபத்ரா நதிக்கரையிலுள்ள அவரது குடிசைக்குச் சென்றார். குடிசை சாத்தப்பட்டு ஒரே இருளாக இருந்தது. ஆனால் யாரோ பேசிக்கொண்டிருப்பது மட்டும் இவரால் கேட்க முடிந்தது. ஆர்வத்தில் கதவைத் திறந்து உள்ளே சென்றார். அப்பண்ணா கண்ணை மூடிக்கொண்டு தானே பேசிக்கொண்டிருப்பதை கண்டார். கடுமையான கோபம் கொண்டு தானே பேசிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறாயா என்று அவரது தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டு வந்துவிட்டார். அன்று இரவு மற்றவர்கள் செயலில் நான் யார் தவறு கண்டு பிடிக்க என்று மனம் வருந்தினார். அவரவருக்கு அவரவர் சித்தாந்தம் என்று எண்ணி தூங்கிவிட்டார். மறுநாள் காலை விட்டலன் கோயிலுக்குச் சென்று தரிசித்தபோது விட்டலனின் தலையில் வீக்கம் இருப்பதும் விட்டலன் விக்ரஹத்திலிருந்து ஒரு விசும்பல் சத்தம் கேட்பதையும் பார்த்து பதைபதைத்தார். நேராக அப்பண்ணாவிடம் சென்று தன்னை மன்னிக்கும்படி அவரது காலில் விழுந்தார். அப்பாண்ணாவோ ஒன்றும் புரியாதவராய் நீங்கள் எவ்வளவு பெரிய மஹான் நீங்கள் ஏழையான என் காலில் விழுவதோ மன்னிப்பு கேட்பதோ மாபாதகச் செயல் எழுந்திருங்கள் என்றார். அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காத புரந்தரர் இவர் பெருமை ஊராருக்கும் தெரிய வேண்டுமென நினைந்து அவரை ஊரரிய கோயிலுக்கு அழைத்து வந்து மன்னிப்பு கேட்டார். உடனே விட்டலனின் தலை வீக்கமும் விசும்பல் சத்தமும் நின்றது.

புரந்தரதாசரின் பரம பக்தை ஒரு அழகான இளம் பெண். அவளது பெயர் லீலாவதி தாசியாக இருந்தாலும் எப்போதும் அவளது உதடுகள் புரந்தரதாசரின் பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். சுழன்றடிக்கும் மழை இடிமின்னல் அடித்தது. அப்போது வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தாள். எதிரே வாட்ட சாட்டமான மனிதர் ஒருவர் புன்னகையுடன் நின்றிருந்தார். மழை உடலை நனைத்திருந்ததால் அவர் நடுங்கிக் கொண்டிருந்தார். அவள் உள்ளே வாருங்கள் சுவாமி என்று அவரை அழைத்துச் சென்று ஆசனம் ஒன்றில் அமர வைத்து மாற்றுடை ஒன்றை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள். பின்பு சுவாமி அந்த அறைக்குச் சென்று உடை மாற்றி விட்டு ஓய்வெடுங்கள். நான் சாப்பிட ஏதேனும் கொண்டு வருகிறேன் என்றாள். மாற்றுடையை வாங்கிக் கொண்ட அதனை மாற்றிக்கொண்டார். புரந்தரதாஸரின் பாடலை முணுமுணுத்தவாறே அவரிடம் பழத்தட்டை நீட்டினாள் லீலாவதி.

தட்டை வாங்கிய அவர் அம்மணீ அருமையாகப் பாடுகிறீர்கள். இந்தப் பாடலை இயற்றியது யார் என்று தெரியுமா என்று கேட்டார். மகான் புரந்தரதாசரை அறியாதவர்கள் யாராவது இருப்பார்களா? அவரின் பக்தை நான். அவரது இசைக்கு நான் அடிமை என்றாள் லீலாவதி. அம்மணீ! தங்கள் அழகில் மயங்கி கொட்டும் மழையில் இச்சையுடன் தங்களது இல்லம் நாடி வந்திருக்கும் நான் தான் அந்த புரந்தரதாசன் என்றார். என்ன தாங்கள் தான் புரந்தர தாசரா தங்களை என் தெய்வமாக பூஜித்து வருபவள் நான். தங்கள் திருப்பாதங்களால் இந்த ஏழையின் குடிசை புனிதம் பெற்றது. எனினும் தாங்கள் கூறிய வார்த்தைகள் என்னைத் தீயாகச் சுடுகிறது. தயை கூர்ந்து அந்த எண்ணத்தை விடுத்து, எனக்கு ஆசி புரியுங்கள் கண்களில் நீர் பெருக அவர் பாதங்களில் வீழ்ந்தாள் லீலாவதி. அவளின் பதற்றத்தை ரசித்த அவர் அம்மணீ! தங்களது பக்திக்கு என் மனமார்ந்த நன்றி. தங்களைக் கண்டதே என் பாக்கியம். இதோ இதை என் அன்புக்கு அடையாளமாகப் இதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தன் வலக் கரத்திலிருந்த பொற்காப்பைக் கழற்றி அவளிடம் கொடுத்தார். அவள் அதை வாங்க மறுத்தாள். பலவந்தமாக அவள் கையில் திணித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார் புரந்தர தாசர். பொற்காப்பை தனது பூஜை அறையில் வைத்தாள் லீலாவதி.

அதிகாலை அரண்மனை காவலாளி ஒருவன் முச்சந்தியில் முரசு கொட்டி செய்தி ஒன்று தெரிவித்தான். நம் பாண்டுரங்கப் பெருமானின் சிலையில் இருந்த பொற்காப்பைக் காணவில்லை. அது தொடர்பான தகவல் அறிந்தால் உடனே மன்னரிடம் தெரிவிக்குமாறு பக்த ஜனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சொல்லி விட்டு சென்று விட்டான். அரசின் சிப்பந்தி கூறிய செய்தியை கேட்டதும் அதிர்ந்த லீலாவதி சட்டென்று எழுந்து அருகில் இருந்த தனது இல்லத்தின் பூஜை அறையை நோக்கி விரைந்தாள். அங்கு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட புரந்தரதாஸர் கொடுத்த பொற்காப்பு இருந்தது. புரந்தரதாசர் மீது அவளுக்கு ஆத்திரத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது. அந்தப் பொற்காப்புடன் அரண்மனையை நோக்கி விரைந்தாள். நடந்தவற்றை மன்னரிடம் எடுத்துரைத்தாள். அதைக் கேட்ட மன்னர் வியப்புற்றார். பண்டரிநாதனின் பக்தரான புரந்தரதாசரின் இந்தச் செயல் புதிராக இருந்தாலும் அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தார் அவர். தர்பாரில் லீலாவதியின் குற்றச்சாட்டுகளைக் கேட்டுக் குழம்பினார் புரந்தரதாசர். மன்னா நான் பகவானது பொற்காப்பைத் திருடவில்லை. அதை இந்த அம்மணியிடம் கொடுக்கவும் இல்லை. முதலில் இவர் யார் என்றே எனக்குத் தெரியாது. எல்லாவற்றுக்கும் மேலாக நேற்று நான் பண்டரிபுரம் செல்லவே இல்லை என்றார்.

லீலாவதியின் கண்கள் நெருப்பை உமிழ்ந்தன. மன்னா இவர் நேற்று எனது இல்லத்துக்கு வந்து என்னை நேசிப்பதாகக் கூறினார். இவரது இச்சைக்கு இணங்காமல் இவரை நான் தெய்வமாக வழிபடுவதைக் கூறினேன். இறுதியில் இந்தப் பொற்காப்பை என் கையில் திணித்து விட்டுச் சென்றார். பண்டரிநாதன் மேல் ஆணையாக நான் கூறியவை அனைத்தும் சத்தியம் என்றாள். புரந்தரதாசர் பிரமை பிடித்தவராகத் தலை குனிந்து நின்றார். கோபம் கொண்ட மன்னன் பாண்டுரங்கனது பொற்காப்பைத் திருடியது பெருங்குற்றம். அதற்கு தண்டனையாக இவருக்கு முப்பது கசையடி கொடுக்க உத்தர விடுகிறேன் என்று தீர்ப்பளித்தான். இதைக் கேட்டு புரந்தரதாசர் மனம் உடைந்தார். அப்போது அங்கு ஓர் அசரீரி கேட்டது மன்னா கோயில் கதவு பூட்டியது பூட்டியபடி இருந் தது என்று அர்ச்சகர் கூறியது ஞாபகம் இல்லையோ? கதவு பூட்டி இருக்கும்போது பொற்காப்பை புரந்தரதாசர் எப்படி எடுத்திருக்க முடியும்? என் பரம பக்தன் புரந்தரதாசனிடம் கொஞ்சம் அகம்பாவமும் இருந்தது. அதைப் போக்கவும் அவன் புகழை உலகறியச் செய்யவுமே யாம் லீலாவதியின் இல்லத்துக்குச் சென்றோம் என்று அசீரீரி கூறியது. புரந்தரதாசர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். மன்னரும் மற்றவர்களும் அவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினர்.

பல்வேறு சந்தர்பங்களில் புரந்தரதாஸருடைய பக்தியை தனது லீலா விநோதங்கள் மூலம் பாண்டுரங்கன் வெளிப்படுத்தியுள்ளார். திருமலை வேங்கடேசனின் தரிசனமும் சரஸ்வதி தேவியின் தரிசனமும் ஒருங்கே கிடைக்கப்பெற்ற புரந்தரதாஸர் திருமலையில் தங்கி பாடல்களை எழுதியுள்ளார். கர்நாடக சங்கீத உலகில் நாரத மஹரிஷியின் அவதாரமாகப் பார்க்கப்படும் இவரை சங்கீத பிதாமகர் என்று அழைப்பார்கள். இவருக்கு பல சீடர்கள் உண்டென்றாலும் இவரது பாடல்களை பரப்பியவர்களில் முக்கியமானவர் கனகதாஸர் ஆவார். ஒரு சமயம் இவர் வயிற்று வலியால் அல்லலுற்றார். இதைப் போக்க யாராலும் முடியவில்லை. பண்டரிபுரத்தில் கோயில் கொண்டுள்ள பாண்டுரங்கனை மூன்று முறை தீர்த்தயாத்திரை செய்த பின் வயிற்று வலி நீங்கியது. கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்தார் புரந்தரதாசர். திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையே சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவரது கடைசிக்காலத்தில் சந்நியாச ஆசிரமத்தை அடைந்து 1564 ம் ஆண்டு தை மாதம் இரண்டாம் திகதி அமாவாசையன்று இப்பூவுலகை நீத்தார்.

செவி சாய்த்த விநாயகர்

திருச்சி அருகில் இருக்கும் அன்பில் என்ற ஊரில் இருக்கும் சத்தீயவாகீஸ்வரரை தரிசிக்க திருஞானசம்பந்தர் சென்றார். அவரை சோதிக்க எண்ணிய இறைவன் கோவிலுக்கு வரும் வழியில் இருக்கும் காவிரி ஆற்றில் வெள்ளத்தை வரவழைத்தார். கோவிலுக்குள் செல்ல இயலாத திருஞானசம்பந்தர் ஆற்றின் கரையில் இருந்தே இறைவனை பாட ஆரம்பித்தார், அப்போது கோவில் இருக்கும் வினாயகர் தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து ஒரு காலை மடக்கி இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து திருஞானசம்பந்தரின் பாடலை கேட்டு ரசித்தார் வினாயகர்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 11

ராமர் வாலியின் கேள்விக்கு மேலும் பதில் கூறினார். இந்திரன் உனக்கு கொடுத்த வரத்தைக் காக்கவும் இந்திரனின் வரத்தின் மதிப்பை குறைத்துவிட வேண்டாம் என்பதற்காகவும் உன் மீது மறைந்திருந்து அம்பு எய்தேன். இதில் தவறு ஒன்றும் இல்லை. மேலும் சத்திரியர்கள் வேட்டையாடும் போது கவனமின்றி இருக்கும் மிருகங்களை மறைவான இடத்திலிருந்து அம்புகளால் தாக்குவதுண்டு. நீ ஒரு வானரம் என்பதால் மறைந்திருந்து முன்னறிவிப்பின்றி உன்னைத் தாக்கியதில் எந்த தவறும் இல்லை. எனது மனைவியை தேடுவதற்கு ஒரு மன்னனின் உதவி தேவைப்பட்டது. தர்ம சாஸ்திரங்களின்படி ஒரு மன்னன் தனது எதிரியை வெற்றி கொள்வதற்கு மற்றொரு மன்னனின் உதவியை நாடலாம். அதன்படி சுக்ரீவனை சந்தித்து நட்பு கொண்டேன். சுக்கிரீவன் முதலில் என்னைச் சரணடைந்து தனக்கு உதவுமாறு வேண்டினான். உன்னைக் கொல்வதாக நான் சுக்ரீவனுக்கு வாக்குறுதி அளித்துவிட்டேன். சத்திரியன் கொடுத்த வாக்கை மீறுவதில்லை என்பதால் அந்த வாக்கை தற்போது நிறைவேற்றியுள்ளேன். உன்னை அழிக்க உனது முன்னால் வரும் போது நீயும் என்னை சரணடைந்து அடைக்கலம் கொடு என்று கேட்டால் அப்போது என்னால் ஒன்றும் செய்ய முடியாது. சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்கை மீறியவனாவேன். அதைத் தவிர்ப்பதற்காகவும் சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காவும் மறைந்திருந்து அம்பு செலுத்த வேண்டி இருந்தது என்று சொல்லி முடித்தார் ராமர்.

ராமரிடம் மேலும் பேசினான் வாலி. ஒழுக்கம் என்பது மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட வரைமுறைகள். நாங்கள் விலங்குகள் விலங்குகளுக்குள் கணவன் மனைவி என்று உரிமை கொண்டாட முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடுக்கு இங்கே இடம் இல்லை. நாங்கள் விரும்பியவாறு வாழலாம் என்பது எங்களுக்கு உள்ள உரிமை. வல்லவன் எதையும் செய்யலாம். நாங்கள் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு வாழ்பவர்கள். மனிதருக்குச் சொல்லப்பட்ட அளவு கோல்களை வைத்து எங்களை அளப்பதில் நியாயம் இல்லை என்று வாலி கூறினான். அதற்கு ராமர் மிருகம் மனிதன் என்பது உடலைப் பற்றியது. ஆனால் சத்தியம் அனைவருக்கும் ஒன்றே. தம்பியின் தாரத்தைத் தங்கையாக மதிக்க வேண்டிய நீ அவளைத் துணைவியாக ஆக்கிக் கொண்டாய். பிறர் மனைவியை விரும்பும் அற்பத்தனம் உன்னிடம் அமைந்துள்ளது நீ உயிர் வாழத்தகுதியானவன் அல்ல. விலங்கு என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளமுடியாது என்றார் ராமர்.

ராமரின் பதிலில் திருப்தி அடைந்த வாலி அடுத்த கேள்வியை கேட்டான். உனது மனைவியை தூக்கிச் சென்ற ராவணனைக் கொல்வதற்கு என் நட்பை நீ தேடி இருக்கலாம். ஒரு கனத்தில் ராவணனை கயிற்றால் கட்டி தூக்கி வந்திருப்பேன். சிங்கத்தைத் துணையாக வைத்துக் கொள்வதை விட்டு சிறுமுயலை நம்பி விட்டாய். உன்னிடம் முன் யோசனை இல்லை என்றான் வாலி. அதற்கு ராமர் பற்களைக் குத்தித் துய்மைப்படுத்த சிறு துரும்பு போதும் எனக்கு உலக்கை தேவை இல்லை. அதுபோல் ராவணனை அழிக்க எனக்கு நீ தேவை இல்லை உன் தம்பியே போதும் என்று கூறினார். அதற்குப் பின் ராமர் தவறு செய்திருக்க மாட்டார். தவறு தன்னுடையது தான் என்று உணர்ந்த வாலி மனம் மாறி ராமரிடம் நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்றான்.

தொடரும்….

குறிப்பு: ராமர் வாலியை தாக்கியதற்கு வேறு சில பின்னணிக் காரணங்களும் உள்ளது. முதலில் வாலி யாராலும் எதிர்த்து வெற்றி கொள்ள முடியாத தன்னை விஷ்ணு அவதாரமெடுத்து அழிக்க வேண்டும் என்று விரும்பியிருந்தான். இரண்டாவதாக ராவணால் வாலியை எதிர்க்க முடியாமல் அவனை அழிக்க சில அரக்கர்களை அனுப்பி பல தந்திரங்களையும் செய்திருந்தான் ராவணன். அதன் காரணமாகவே வாலியும் சுக்ரீவனும் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திரனிடம் வாலி வரம் பெற்றதும் ராகுவிற்கும் வாலிக்கும் சண்டை ஏற்பட்டது. அதில் தோற்ற ராகு வாலியிடம் உனது மரணத்திற்கு நானே காரணாமாக இருப்பேன் என்று சாபமிட்டிருந்தான். வாலியும் சுக்ரீவனும் சண்டையிட்டு பிரிந்த நேரத்தில் ராகு தான் விட்ட சாபத்தின்படி வாலியின் மனதில் சுக்ரீவனின் மனைவி மீது ஆசை ஏற்படும்படி தூண்டி விட்டான் அதன்படியே சுக்ரீவனின் மனைவி மீது ஆசை கொண்டு அறநெறி தவறி வாழத்தொடங்கினான். இந்த நிகழ்வினால் ராகுவின் சாபம் நிறைவேறியது. ராவணனின் தந்திரம் நிறைவேறியது. வாலியின் ஆசைப்படி விஷ்ணுவின் கையாலேயே மரணமடைந்தான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 10

ராமரை பற்றிய செய்தியை ஒற்றர்களிடம் நானும் கேட்டு அறிந்தேன். நீ கவலைப்பட வேண்டாம். அவர் தர்மம் அறிந்தவர். அவர் அநியாய காரியத்தில் இறங்க மாட்டார். ராமருக்கு ஒரு குற்றமும் செய்யாத என்னை ஏன் அவர் கொல்லப் போகிறார்? எதிரி ஒருவன் சண்டைக்கு என்னை அழைக்கும் போது நான் எப்படி செல்லாமல் சும்மா இருக்க முடியும். அதனை விட உயிரை விடுவதே மேல். உனக்காக வேண்டுமானால் சுக்ரீவனின் கர்வத்தை அடக்கி அவனை கொல்லாமல் அப்படியே விட்டுவிடுகிறேன். அவன் போடும் கூக்குரல் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவனை அடக்கி வெற்றியுடன் திரும்பி வருகிறேன் பயப்பட வேண்டாம். மங்கள வார்த்தைகளை சொல்லி என்னை வழி அனுப்பு என்னை தடுக்காதே என்று சொல்லி கிளம்பினான் வாலி. தாரை கண்களில் கண்ணீருடன் வாலியை வலம் வந்து நடப்பது நல்லதாக நடக்கட்டும் என்ற மங்கள வார்த்தைகளை சொல்லி கவலையுடன் வழி அனுப்பினாள். வாலி சுக்ரீவன் இருக்குமிடம் வந்து சேர்ந்தான்,

ராமர் இருக்கும் தைரியத்தில் சுக்ரீவன் வாலியை நோக்கி வேகமாக வந்தான். இருவருக்கும் இடையே சண்டை மூர்க்கமாக நடைபெற்றது. சிறிது நேரத்தில் வாலியின் பலம் அதிகரித்தது. சுக்ரீவனின் பலம் குறைய ஆரம்பித்தது. இதனை கண்ட ராமர் இனியும் தாமதித்தால் சுக்ரீவன் தாங்க மாட்டான் என்று எண்ணி தன் அம்பை வாலிக்கு குறி வைத்து விடுத்தார். அம்பு ஆச்சா மரத்தை துளைத்தது போல் வாலியின் வஜ்ரம் போன்ற உடலை துளைத்தது. பட்ட மரம் வீழ்வது போல் வாலி கீழே விழுந்தான். தன் மீது அம்பு ஏய்தது யார் என்று நான்கு பக்கமும் தேடினான் வாலி. அப்போது ராமர் லட்சுமணரன் இருவரும் வாலியின் அருகில் வந்தனர். தன் மீது ராமர் தான் அம்பு ஏய்திருக்கிறார் என்பதை உணர்ந்த வாலி ராமரிடம் பேச ஆரம்பித்தான். உத்தம குலத்தில் தசரதரின் புத்திரனாக பிறந்த உனது நற்குணங்களும் ஒழுக்கமும் உலகம் அறிந்தது. நல்ல அரச குடும்பத்தில் பிறந்து இப்படி ஒரு பாவத்தை செய்து அரச பதவிக்கு தக்தியானவன் அல்ல என்று காட்டிவிட்டாய். நீ முறை தவறி என்னைக் கொன்று பெரும் பாவத்தை செய்து விட்டாய். தர்மத்தை கடைபிடிக்கும் நீ ஏன் இப்படி செய்தாய். உன்னிடமா நான் சண்டையிட்டுக் கொண்டிருந்தேன். நான் மற்றொருவனுடன் மனம் ஒன்றி சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் என் கண்களுக்கு தெரியாமல் மறைந்திருந்து என் மேல் அம்பு எய்தி விட்டாய். என் முன்பு நின்று என்னுடன் நீ சண்டையிட்டிருந்தால் இந்நேரம் என்னால் கொல்லப்பட்டிருப்பாய். நான் தனிப்பட்ட முறையில் உனக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. உன்னுடைய நாட்டிற்கோ நகரத்திற்கோ நான் எந்த தீங்கும் செய்யவில்லை. அப்படியிருக்கும் போது என்னைக் கொல்ல உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கடுமையான வார்த்தைகளால் ராமரிடம் பேசினான் வாலி.

ராமர் வாலியிடம் பதில் சொல்ல ஆரம்பித்தார். மலைகள் காடுகள் நதிகள் உட்பட இந்த முழு பூமியும் அதிலுள்ள அனைத்தும் இக்ஷ்வாகு வம்சத்தினரின் ஆட்சிக்கு உட்பட்டது. இக்ஷ்வாகு வம்ச அரசர்களுக்கு தவறு செய்யும் எல்லா மனிதர்களையும் விலங்குகளையும் தண்டிப்பதற்கான முழு அதிகாரம் உள்ளது. இஷ்வாகு குலத்தின் ராஜ குமாரனான எனக்கு மன்னரான பரதரின் கட்டளைப்படி நீதியிலிருந்து விலகியோரை தண்டிக்கும் அதிகாரம் உண்டு. காமத்தாலும் பேராசையாலும் நீ பாவகரமான செயல்களைச் செய்தாய். குறிப்பாக உனது இளைய சகோதரன் சுக்ரீவனின் மனைவியான ருமாவைக் கைப்பற்றி அவளை உனது மனைவியாக்கிக் கொண்டாய். இந்த ஒரு பாவச் செயல் போதும் உன்னை நான் தண்டிப்பதற்கு. மகள் மருமகள் சகோதரி சகோதரனின் மனைவி ஆகியோருடன் உறவு வைப்பவர்களுக்கு மரணமே தகுந்த தண்டனை. ஓர் அரசன் பாவம் செய்தவனைக் கொல்லவில்லை என்றால் அந்த பாவம் அரசனுக்கே வந்து சேரும் எனவே உன்னை கொன்றேன். ஆனால் ஏன் மறைந்திருந்து கொன்றேன் என்பதற்கான காரணத்தை சொல்கின்றேன் கேட்டுக்கொள் என்றார் ராமர்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 9

ராமர் லட்சுமணனிடம் தம்பியர்கள் அனைவரும் பரதன் ஆக முடியாது. சுக்ரீவனிடம் ஒரு சில குறைகளை அவனிடம் தேடினால் இருக்கலாம். அவன் எப்படிப் பட்டவன் என்ற ஆராய்ச்சி நமக்கு முக்கியம் இல்லை. யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை வைத்துத்தான் ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். வாலி சுக்கிரீவனிடமிருந்து அவனுக்குரிய ஆட்சியை எடுத்துக் கொண்டான் அதில் தவறு இல்லை. சுக்ரீவன் மனைவியை வாலி ஏன் கைப்பற்ற வேண்டும்? எந்தத் தவறும் செய்யாத தம்பியை சரிவர விசாரிக்காமல் உண்மை என்ன என்று அறியாமல் ஏன் விரட்டி அடிக்க வேண்டும்? வாலி தவறு செய்திருக்கிறான். அவனை அழிப்பது அறம் தான் என்று கூறித் தெளிவு படுத்தினார் ராமர்.

ராமர் மரத்திற்கு பின்பு நிற்பதை பார்த்துக்கொண்ட சுக்ரீவன் வாலி வெளியே வா என்று கத்த ஆரம்பித்தான். சுக்கிரீவனின் அறை கூவலைக் கேட்ட வாலி வியந்தான். சண்டைக்கு பயந்து ஓடியவன் இப்போது திரும்பவும் வலிய வந்து அழைக்கின்றானே என்று வாலிக்கு வியப்பை அளித்தது. இன்று சுக்ரீவனை அழித்தே விடவேண்டும் என்ற கோபத்தில் கிளம்பினான். வாலியின் மனைவி தாரை அவன் போருக்குச் செல்வதைத் தடுத்தாள். எனக்கு எதோ அபசகுனமாக தெரிகிறது. தாங்கள் சண்டைக்கு செல்வது எனக்கு பயமாக இருக்கிறது. அடிபட்டு அவமானப்பட்டு உயிருக்கு பயந்து ஓடிப்போன சுக்ரீவன் மீண்டும் தைரியத்துடன் தங்களுடன் சண்டையிட வந்திருக்கிறான். அவரது பேச்சையும் கர்ஜனையும் பார்த்தால் ஏதோ அபாயமுயும் சூழ்ச்சியும் இருப்பது போல் எனக்கு தெரிகிறது. அவருக்கு துணையாக யாரையாவது அழைத்து வந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். இன்று போக வேண்டாம். நாளை காலை ஆலோசனை செய்து யோசித்து முடிவு செய்யலாம். அதன் பிறகு எதிரியுடன் சண்டை போடலாம் என்று கூறி தடுத்தாள். தாரையின் பேச்சு வாலிக்கு பிடிக்கவில்லை. சண்டைக்கு கிளம்புவதிலேயே மும்முரமாய் இருந்தான். தாரை கண்ணிர் வடித்தாள். நமது ஒற்றர்கள் நமது மகன் அங்கதனிடம் சில தகவல்களை சொல்லியிருக்கிறார்கள். அவன் எனக்கு சொன்னான். அவர்கள் சொன்னதை அப்படியே தங்களிடம் சொல்கிறேன் தயவு செய்து கேளுங்கள் என்றாள்.

ராமர் என்பவரும் அவரது தம்பி லட்சுமணனும் அயோத்தியிலிருந்து வந்திருக்கின்றார்கள். மகாவீரனான அந்த மூத்த ராஜகுமாரனை சத்தியவானாகவும் தர்மவானாகவும் அனைவரும் மதிக்கின்றார்கள். அவருடைய நட்பை சுக்ரீவன் இப்போது பெற்றிருக்கிறான். இதனால் அவனது தைரியமும் பலமும் அதிகரித்திருக்கிறது. அவர்கள் வெற்றி பெறுவதற்கு ஏதேனும் சூழ்ச்சி செய்யக்கூடும். நான் பிதற்றுகிறேன் என்று எண்ண வேண்டாம். நமது மகன் அங்கதன் இருக்கின்றான். அவனுடைய நலனை கருத்தில் கொள்ளுங்கள். அவனுக்காகவும் எனக்காகவும் நீங்கள் இருக்க வேண்டும். தயவு செய்து செல்லாதீர்கள் என்று சொல்லி கண்ணீர் வடித்தாள். மேலும் உங்கள் தம்பியும் நல்லவன் தானே. அவனை ஏன் விரோதிக்க வேண்டும். உங்களிடம் பக்தியுடன் தானே இருந்தார். அவரை விட நெருக்கமான உறவினர் என்று சொல்ல நமக்கு யாரும் இல்லை. அவரிடம் உள்ள விரோதத்தை மறந்து விட்டு பாசத்தை காட்டுங்கள். அவரிடம் ஒன்றாக இருப்பதே நமக்கு நலம். அவரை அழைத்து பயைழபடி இளவரசு பட்டம் கட்டிவிடுங்கள். எனக்கு விருப்பமான காரியத்தை தாங்கள் செய்ய விரும்பினால் என் பேச்சை கேளுங்கள் புறக்கணிக்காதீர்கள் என்று வாலியை தடுத்தாள் தாரை. வாலி தாரையிடம் பேச ஆரம்பித்தான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 8

ராமர் ஒரு மரத்திற்கு பின்பு மறைந்து நின்று கொண்டார். சுக்ரீவன் வாலி வெளியே வா என்று கர்ஜனை செய்தான். அதைக் கேட்ட வாலி பெரும் கோபத்துடன் அரண்மனையை விட்டு வெளியே வந்தான். இருவருக்குமிடையே பயங்கரமான சண்டை நடந்தது. சண்டை ஆரம்பித்ததும் இருவரில் யார் சுக்ரீவன் யார் வாலி என்று ராமரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருவரும் ஒரே வானர வடிவத்தில் ஒரே விதமான உடைகளையும் ஆபரணங்களை அணிந்து ஒரே விதமாக தங்களது பராக்கிரமத்தை வெளிப்படுத்தும் வகையில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இருவரில் யார் வாலி என்று தெரியாமல் ராமரால் கொல்ல இயலவில்லை. ராமர் திகைத்து நின்றார். சுக்ரீவன் அடிபட்டு தன் உயிர் போகும் தருவாயில் ராமர் ஒன்றும் செய்யவில்லையே என்று ஏமாற்றமடைந்தான். மதங்க முனிவர் வாலி நுழைந்தால் இறந்து விடுவான் என்று சாபமிட்ட ரிச்யமுக காட்டிற்குள் ஒரே ஓட்டமாக ஓடினான் சுக்ரீவன். அதனை கண்ட வாலி சுக்கிரனை விட்டுவிட்டு தன் கோட்டைக்கு திரும்ப சென்றான்.

ராமர் லட்சுமணன் இருவரும் மிகவும் அடிபட்டு துக்கத்திலிருந்த சுக்ரீவனிடம் சென்றார்கள். ராமர் வாலியை கொல்வேன் என்ற சொல்லை தவற விட்டார் என்று ராமரின் மீது கோபத்தில் தரையை பார்த்துக் கொண்டே ராமரிடம் பேசினான். தங்களால் வாலியை கொல்ல முடியாது என்றால் என்னிடம் முன்பே நீங்கள் சொல்லியிருக்கலாம். நான் வாலியுடன் சண்டைக்கு சென்றிருக்க மாட்டேன். உங்களை நம்பி சென்ற நான் இப்போது எனது உடல் முழுக்க காயங்களுடன் உயிர் தப்பி வந்திருக்கின்றேன். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டான். ராமர் சுக்ரீவனிடம் என்னை கோபிக்க வேண்டாம் நான் சொல்வதை சிறிது அமைதியாக கேளுங்கள். நான் அம்பை வாலியின் மீது விடாததற்கு காரணம் சொல்கிறேன். நீங்களும் வாலியும் உயரம் உடல் பருமன் ஆடைகள் அணிகலன்கள் நடை உடை அனைத்திலும் ஒரே மாதிரி இருந்தீர்கள். சண்டை ஆரம்பித்து விட்ட பிறகு யார் சுக்ரீவன் யார் வாலி என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை நான் திகைத்து நின்றேன். சிறிதும் வித்தியாசம் இல்லாமல் ஒரே மாதிரி இருக்கின்றீர்கள். என்னால் எதுவும் செய்ய முடியாமல் திகைத்து நின்றேன். வாலி இவன் தான் என்று எனக்கு உறுதியாக தெரியாமல் சந்தேகத்தின் அடிப்படையில் அம்பெய்து அது உங்களை கொன்று விட்டால் என்ன செய்வது என்று அமைதியாக இருந்துவிட்டேன். மீண்டும் வாலியை சண்டைக்கு அழையுங்கள். உங்கள் இருவரில் யார் வாலி என்று நான் தெரிந்து கொள்ள இப்போது மாற்று ஏற்பாடு செய்து விடுவோம். எளிதில் வாலியை கண்டு பிடித்து நிச்சயமாக கொல்வேன் என்றார் ராமர்.

ராமர் லட்சுமணனிடம் அழகிய பூக்கள் நிறைந்த கொடியை கொண்டு வந்து சுக்ரீவனிடம் கொடுத்துவிடு. சுக்ரீவன் அதை அணிந்து கொண்டு சண்டை போடட்டும். அதை வைத்து யார் வாலி என்று எளிதில் கண்டு பிடித்து கொல்வேன். இன்று வாலி மரணித்து பூமியில் விழுவதை நீ பார்ப்பாய் சுக்ரீவா என்றார். சுக்ரீவன் சமாதானம் அடைந்து மறுபடியும் உற்சாகம் அடைந்தான். லட்சுமணன் பூங்கொடியை சுக்ரீவன் கழுத்தில் மாலையாக போட்டான். கிஷ்கிந்தைக்கு மீண்டும் சென்றான் சுக்ரீவன். ராம லட்சுமணன் பின்னாலேயே சென்றார்கள். வாலியை மீண்டும் அறை கூவி அழைத்தான் சுக்ரீவன். ராமரும் லட்சுமணனும் ஒரு மரத்திற்கு பின்னால் நின்று கொண்டார்கள். அப்போது லட்சுமணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். சுக்கிரீவன் நம்பத்தகுந்தவன் போல் தெரியவில்லை. தனது அண்ணனையே கொல்வதற்கு நம்மை அவன் துணை தேடுகிறான் என்றால் அது துரோகம் அல்லவா? அவனை நம்புவது மண் குதிரையை நம்பி நட்டாற்றைக் கடப்பது போல் இருக்கிறது என்றான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 7

ராமர் சுக்ரீவனுடைய பயத்தையும் சந்தேகத்தையும் போக்க முடிவு செய்தார். துந்துபி அரக்கனின் உடலைப் போல் 10 மடங்கு பெரிய பொருள் ஒன்றை ராமர் தனது கால் கட்டை விரலால் நெம்பி தூக்கி எறிந்தார். இந்த மரம் பத்து யோசனை தூரம் சென்று விழுந்தது. பிறகு தன்னுடைய வில்லில் அம்பை தொடுத்தார். சுக்ரீவன் காட்டிய மிகப்பெரிய ஆச்சா மரத்தை நோக்கி அம்பு எய்தார். அம்பு அந்த மரத்தையும் அதன் பின்னால் இருந்து மேலும் ஆறு ஆச்சா மரங்களையும் சேர்த்து மொத்தம் ஏழு மரங்களையும் ஒன்றாக துளைத்து வெளியே வந்து மீண்டும் ராமரின் அம்பாரிக்குள் வந்து விட்டது. இதைக்கண்ட சுக்ரீவன் பரவசமடைந்தான். வாலியின் வஜ்ஜிரம் போன்ற உடலை ராமரின் அம்பு துளைக்கும் என்று நம்பினான். உங்கள் பராக்கிரமத்தை கண்ணார கண்டேன் என்று ராமரின் கால்களில் விழுந்து வணங்கினான். வாலியை அழித்து என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன் என்றான்.

ராமரிடம் சூக்ரீவன் வாலியை பற்றிய வேறொரு முக்கியமான செய்தியை தங்களிடம் சொல்ல வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தான். வாலி மிகப்பெரிய சிவ பக்தன். சிவனை நோக்கி பெரும் தவங்கள் செய்திருக்கின்றான். கயிலையிலுள்ள சிவபெருமானின் அருளைப் பெற்றவன். முன்பொரு முறை அமிர்தம் பெறுவதற்க்கு பாற்கடலை கடையும் போது வாலி தேவர்களுக்கு உதவி செய்தான். அதனால் பஞ்ச பூதங்களின் வலிமையையும் பெற்றான். தனது தந்தையான இந்திரனிடம் இருந்து வாலி ஒரு வரத்தை பெற்றிருக்கின்றான். அந்த வரத்தின்படி வாலியுடன் யுத்தம் செய்பவர்களின் சக்தியில் பாதி சக்தி வாலிக்கு சென்றுவிடும். அதனால் மிகச்சிறந்த சிவபக்தனும் வலிமையும் அதிகாரமும் கொண்ட ராட்சசர்களின் தலைவனான ராவணன் கூட வாலி இருக்கும் பக்கம் வருவதில்லை. நீங்கள் வாலியின் மீது அம்பு எய்ய அவன் எதிரே நின்றால் வாலி பெற்ற வரத்தின்படி உங்களின் சக்தி பாதி வாலிக்கு சென்று விடும். ஏற்கனவே வாலி மிகவும் பராக்கிரமசாலி உங்களின் பாதி சக்தியும் வாலியுடன் சேர்ந்தால் அவன் இன்னும் பராக்கிரமசாலியாகி விடுவான். அதன் பிறகு அவனை யாராலும் அழிக்க முடியாது என்று சொல்லி முடித்தான். அதற்கு ராமர் வாலியின் உடலை எனது அம்பு துளைத்து அழிக்கும் சந்தேகமோ பயமோ வேண்டாம் என்றார். ராமரின் வார்த்தைகளை கேட்ட சுக்ரீவனுன் அப்போதே வெற்றி பெற்றுவிட்டதை போன்று பூரிப்படைந்தான்.

ராமரிடம் அனுமன் பேச ஆரம்பித்தார். முதலில் வாலியைக் கொன்று பின் சுக்கிரீவனுக்கு முடிசூட்ட வேண்டும். சுக்ரீவன் அரசனாவான். அவன் ஆணை பிறப்பித்ததும் எழுபது வெள்ளம் எண்ணிக்கை உள்ள வானரர் படைகள் ஒன்று சேர்வார்கள். (எண்ண முடியாத எண்ணிக்கையில் அடங்காத மிகப்பெரிய கூட்டம் ஒரு வெள்ளமாகும்) அவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் நாலா திக்குகளுக்கும் அனுப்பி வைத்தால் விரைவில் சீதையை கண்டு பிடித்து விடலாம் என்றார். ராமரும் அனுமன் சொல்வது சரி என்று ஏற்றுக் கொண்டார். அனுமன் தன் துணை அமைச்சர்களான தாரன் நீலன் நளன் ஆகியவர்களோடு ராமருக்கு வழிகாட்ட அனைவரும் வாலியின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றார்கள். கிஷ்கிந்தை காட்டுப் பகுதிக்கு வந்ததும் நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று சுக்கிரீவன் ராமனை நோக்கிக் கேட்டான். நீ வாலியை யுத்தத்திற்கு கூப்பிடு. நீங்கள் இருவரும் போர் செய்யும் போது மறைவிடத்தில் இருந்து அம்பு ஒன்றினால் வாலியைக் கொல்வேன் என்று ராமர் கூறினார். (ராமர் ஏன் இப்படி கூறினார் என்பதற்கான காரணம் பின் வரும் பகுதியில் வரும்) சுக்கிரீவன் தனது பயத்தை நீக்கி ஒர் உயரமான இடத்தில் இருந்து கொண்டு வாலியைப் போருக்கு வருமாறு கூவி அழைத்தான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 6

ஹிமவான் சொன்ன வார்த்தைகளை கேட்ட துந்துபி வாலியுடன் சண்டையிட கிஷ்கிந்தைக்கு வந்தான். மரங்களை தள்ளியும் அரண்மனை கோட்டையை இடித்தும் வானரத்தின் அரசனே வாலியே வெளியே வா என்னுடன் யுத்தம் செய் என்று வாலியை சண்டைக்கு அழைத்து கர்ஜனை செய்தான். அந்தப்புரத்தில் உற்சாக பானம் அருந்திக் கொண்டிருந்த வாலி வெளியே வந்து துந்துபியிடன் உயிரோடு இருக்க உனக்கு ஆசையிருந்தால் ஓடிப்போய் விடு என்று எச்சரித்தான். வாலி அலட்சியமாக பேசியதை கேட்ட துந்துபி கோபமாக உனக்கு வீரியமிருந்தால் என்னுடன் யுத்தம் செய். வீண் விவாதம் வேண்டாம் நீ இப்போது அந்தப்புரத்தில் இருந்து வந்திருக்கிறாய். உற்சாக பானம் அருந்தி களைப்பாக இருக்கிறாய். களைப்பாக இருப்பவனுடன் சண்டையிடுவது பாவமாகும். காலை வரை உனக்காக காத்திருக்கிறேன். உன்னுடைய களைப்பை விட்டு புத்துணர்ச்சி அடைந்ததும் வா சண்டையிடுவோம் என்றான் துந்துபி.

வாலி துந்துபியின் வார்த்தைகளை கேட்டு சிரிந்தான். நான் உற்சாக பானம் அருந்திருக்கிறேன் அது உண்மை தான். சண்டையிட நீ விரும்பினால் இப்போதே சண்டையிடலாம் வா என்று அசுரனை பிடித்து தூக்கி தரையில் எறிந்தான். ரத்தம் கக்கி விழுந்த அசுரன் மீண்டும் எழுந்து சண்டைக்கு வர சில கனத்தில் அடித்தே கொன்றான் வாலி. ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட அசுரனை சில கனங்களில் கொன்று விட்டான் வாலி. அவ்வளவு பெரிய பராக்கிரமசாலி. செத்து விழுந்த துந்துபி அசுரனை தூக்கி வீசினான் வாலி. அசுரன் ஒரு யோசனை தூரம் போய் விழுந்தான். அசுரன் விழுந்த இடத்திலிருந்து தெறித்த ரத்த துளிகள் காற்றில் பரவி அருகில் இருந்த மதங்க முனிவரின் ஆசிரமத்தில் விழுந்தது. இதனை கண்ட முனிவர் இதனை செய்தது யார் என்று அறிந்து கோபம் கொண்டார். இந்த ஆசிரமம் இருக்கும் காட்டிற்குள் வாலி வந்தால் இறந்து விடுவான் என்று வாலியை சபித்து விட்டார் மதங்க முனிவர். அருகில் தான் மதங்க முனிவரின் ஆசிரமம் இருக்கிறது. முனிவர் சாபமிட்ட இடமே இது. முனிவரின் சாபத்தினால் வாலி பயந்து இங்கு வரமாட்டான் என்று இந்த இடத்தில் நாங்கள் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

வாலி அதிகாலையில் எழுந்து ஒரே முகூர்த்தத்தில் நான்கு பக்கங்களிலும் இருக்கும் கடல்களுக்கு தாவி சென்று சந்தியா வந்தனம் செய்து முடிப்பான். ஒரு திசை கடலில் இருந்து அடுத்த திசை கடலுக்கு ஒரே தாவலில் சென்று விடுவான். தன்னுடைய உடல் பலத்தை காட்டும் வகையில் மலைப் பாறைகளை பந்து போல் மேலே எறிந்து விளையாடுவான். பெரிய மரங்களை புல்லை பிடுங்குவது போல் பிடுங்கி விளையாடுவான். இங்கிருக்கும் ஆச்சா மரங்களை பாருங்கள் எவ்வளவு பெரிதாக இருக்கின்றது. வாலி இந்த மரத்தினை ஒரே கையில் பிய்த்து விடுவான். மரத்தை லேசாக அசைத்தால் மரத்திலுல்ல இலைகள் எல்லாம் அதிர்ந்து விழுந்து விடும் என்று வாலியின் பராக்கிரமத்தை சொல்லி முடித்தான் சுக்ரீவன்.

லட்சுமணனுக்கு சுக்ரீவன் பேசிய பேச்சிலிருந்து வாலியை நினைத்து மிகவும் பயப்படுகின்றான். ராமரின் வீரத்தின் மீது சுக்ரீவனுக்கு சந்தேகம் இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டான். சுக்ரீவனிடம் உங்கள் சந்தேகம் தீர ராமரின் பலத்தை நீங்கள் சோதித்து பார்க்கலாம் என்றான். இதற்கு சுக்ரீவன் நான் ராமரிடம் சரண்டைந்து விட்டேன். ராமரின் வீரத்தின் மீது எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் வாலியின் வீரத்தையும் பராக்கிரமத்தையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவனை நினைக்கும் போதேல்லாம் நான் பயப்படுகின்றேன் என்றான்.