ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 16

ராமர் தனது கோபத்தை வார்த்தைகளில் லட்சுமணனுக்கு புரிய வைத்தார். கொடுத்த வாக்கை நிறைவேற்றாதவன் அதன் காரணமாகவே விரைவில் அழிந்து போவான். எங்களுக்கு கொடுத்த வாக்கை மறந்து எங்களை ஏமாற்ற நீ விரும்பினால் உனக்கும் அதே கதி தான் உண்டாகும். வாலிக்காக காத்திருந்த மேலுலகம் உனக்காகவும் காத்திருக்கிறது தெரிந்துகொள். நீயும் மேலோகம் செல்ல விரும்புகிறாயா? ராமருடைய வில்லும் அம்பும் உனக்காக தயாராக இருக்கின்றது. நீயும் உன்னை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக போகங்களை அனுபவித்து ராமருடைய கோபத்தை பெற்று விட்டீர்கள் என்ற செய்தியை கூறுவாய் என்று ராமர் லட்சுமணனை அனுப்பி வைத்தார். லட்சுமணன் தன் அண்ணனுடைய துயரத்தையும் கோபத்தையும் அப்படியே கேட்டுக்கொண்டு கிஷ்கிந்தைக்கு கிளம்ப முற்பட்டான். அப்போது ராமர் சில கணங்கள் லட்சுமணனின் பேசும் சுபாவத்தை யோசித்தார். லட்சுமணனை மீண்டும் அழைத்தார். சுக்ரீவனிடம் எனது கோபத்தை தெரியப்படுத்தும் போது கடுமையான சொற்களை உபயோகிக்க வேண்டாம். நமது நண்பனாகி விட்டான். எனவே அவனது தவறை மட்டும் சுட்டிக்காட்டு என்று சொல்லி அனுப்பினார் ராமர். லட்சுமணனும் அப்படியே செய்கிறேன் என்று சொல்லி கோபத்துடன் கிளம்பினான்.

லட்சுமணனுடைய கோபத்தையும் அவனது தோற்றத்தையும் அவன் கையிலிருந்த ஆயுதங்களையும் பார்த்து வானர காவலாளிகள் பயந்து ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டார்கள். எனவே கோட்டையை ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டுமென்று ஆயத்தமானார்கள். அவர்களுடைய இந்த நடவடிக்கையை பார்த்த லட்சுமணனுக்கு மேலும் கோபம் அதிகரித்தது. சில வானரங்கள் ஓட்டமாக ஓடி அந்தப்புரத்தில் இருந்த சுக்ரீவனிடம் லஷ்மணன் கோபத்துடன் வில்லும் அம்புடன் வந்து கொண்டிருக்கிறான் யார் தடுத்தாலும் நிற்கவில்லை. யாராலும் அவனை தடுக்க இயலவில்லை என்றார்கள். சுக்ரீவன் அந்தப்புரத்தில் மயக்கத்தில் கிடந்ததால் வானரங்கள் சொன்னது அவன் காதில் விழவில்லை. ராஜ சேவகர்களுடைய உத்தரவின் பேரில் அரண்மனையை காவலாளிகள் பலமாக நின்று யாரும் உள்ளே நுழையாமல் காவல் காத்தார்கள். இக்காட்சியை கண்ட லட்சுமணனுக்கு மேலும் கோபத்தை உண்டு பண்ணியது. தடையை மீறி லட்சுமணன் உள்ளே நுழைந்தான். லட்சுமணன் முதலில் அங்கதனை கண்டான். அவனை கண்டதும் லட்சுமணன் கோபம் ஓரளவு தணிந்தது. அங்கதனிடம் வானர ராஜவாகிய சுக்ரீவனிடம் நான் வந்திருக்கும் செய்தியை முதலில் சொல்வாய் என்று சொல்லி அனுப்பினார். அங்கதன் சுக்ரீவனிடம் விஷயத்தை தெளிவாக எடுத்து கூறினான். ஆனால் போக மயக்கத்தில் இருந்த சுக்ரீவனுக்கு எதுவும் புரியவில்லை. அங்கதன் மிகவும் வருத்தப்பட்டான். மந்திரிகளுடன் என்ன செய்வது என்று ஆலோசித்தான். அனுமன் உட்பட சில மந்திரிகள் உள்ளே சென்று சுக்ரீவனுக்கு விஷயங்களை நன்றாக எடுத்துக் காட்டி அவன் புத்தி தெளிவடையச் செய்தார்கள்

ராமனின் தம்பி லட்சுமணன் கோபத்துடன் வில் அம்புடன் வந்திருக்கிறான் என்ற செய்தியை கேட்டதும் சுக்ரீவன் நான் ஒரு தவறும் செய்யவில்லை. என் நண்பர்களாகிய ராம லட்சுமணர்களுக்கு என் மேல் ஏன் கோபம் வந்தது. யாரோ விரோதிகள் ஏதோ சொல்லி அவர்களுடைய மனதை கெடுத்திருக்க வேண்டும் என்றான் சுக்ரீவன். அதற்கு அனுமன் அரசே ராமனுக்கு நாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் தாமதம் செய்து விட்டோம். ராமருடைய துயரத்தை நாம் மறந்து விட்டோம். இது இப்போது சிறிது அபாயத்தை உண்டு பண்ணியிருக்கிறது. லட்சுமணனிடம் மன்னிப்பு கேட்டு இனி தாமதப்படுத்தாமல் ராமருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றார் அனுமன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.