ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 34

கேள்வி: 18 சித்தர்களும் முக்கியமான (சிதம்பரம் பழனி போன்ற) ஸ்தலங்களில் அடங்கியிருப்பதாக பெரியோர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் பழனிக்கு செல்லும் மக்கள் முருகனை மட்டும் வணங்குகிறார்கள். போகரை வணங்குவதாக எனக்கு தெரியவில்லை இது ஏன்?

இறைவன் அருளால் புரிந்து கொள்ள வேண்டும். 18 சித்தர்கள் என்பது தவறான வழக்காகும். பதி எனப்படுவது இறைவனை குறிக்கக்கூடியது. பதி எண் சித்தர்கள் பதியாகிய இறைவனை சதாசர்வகாலம் எண்ணக்கூடிய அனைவருமே சித்தர்கள்தான். இது மருவி 18 என்று ஆகிவிட்டது. அடுத்தாக சித்தர்கள் அடங்கியிருப்பதாக கூறப்படும் அதாவது ஜீவ அருட் பீடம் என்று எம்மாலும் ஜீவ சமாதி என்று மனிதர்களாலும் கூறப்படுகின்ற எல்லா இடங்களிலும் அவ்வாறு இருப்பதல்ல. பின் அந்த வழக்கம் எவ்வாறு ஏற்பட்டது? என்றால் அதுபோன்ற ஸ்தலங்களில் சித்தர்கள் பல காலம் தங்கி இறை தொண்டும் மக்களுக்கு சேவையும் செய்திருப்பார்கள். இன்னொன்று வேருக்கு நீர் ஊற்றினாலே அது விருட்சத்தின் (மரத்தின்) எல்லா பகுதிகளுக்கும் செல்லும். மூலவராகிய இறைவனை வணங்கினாலே அது சித்தர்களுக்கும் சேர்த்துதான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். எனவே போகனை வணங்கவில்லை என்பதை குற்றமாக கொள்ள வேண்டாம் என்றாலும் அதுபோன்ற இடங்களில் தனியாக ஒரு சித்த சன்னதி இருந்தால் கட்டாயம் சென்று வணங்குவது நல்ல பலனைத் தரும். மேலும் நெறிப்படுத்த மனிதனுக்கு உண்மையை உணர்த்த அந்த சித்தர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை யாம் இத்தருணம் இயம்புகிறோம்.

கேள்வி: சஹஸ்ர லிங்கம் லிங்கம். இதில் எது சிறந்தது?

வைரம் வைடூரியம் இரண்டில் எது உயர்வு? கனகம் கனகத்தில் செய்யப்பட்ட ஆபரணங்கள் இதில் எது உயர்வு? எனவே அனைத்தும் உயர்வுதானப்பா. இருக்கின்ற பரம்பொருளை எதன் வழியாக மனிதன் பார்க்க விரும்பினாலும் பார்க்கின்ற மனிதனின் மனோபாவம் சரியாக இருந்தால் அவன் கல்லிலும் கடவுளைக் காணலாம். மனோபாவம் சரியில்லையென்றால் கடவுளே எதிரில் வந்து நின்றாலும அவனுக்கு கல்லாகத்தான் தெரியும். இரண்டுமே உயர்வுதான்.

சுலோகம் -8

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #8

துரோணாச்சாரியாரான தாங்களும் பாட்டனார் பீஷ்மரும் கர்ணனும் யுத்தங்களில் வெற்றி பெறுகின்ற கிருபாச்சாரியாரும் அவர் போலவே அஸ்வத்தாமனும் விகர்ணனும் சோமதத்தனின் மகன் பூரிச்ரவஸூம்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: பாட்டனார் பீஷ்மர் இருக்கும் போது துரோணரை ஏன் துரியோதனன் முதலில் குறிப்பிட்டான்?

பீஷ்மர் அனைத்து ஆசாபாசங்களையும் விட்டவர் கர்மத்தை தீர்ப்பதற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரை உயர்த்தி பெருமைப்படுத்தி பேசினாலும் தாழ்த்தி சிறுமைப்படுத்தி பேசினாலும் இரண்டையும் ஒன்று போலவே ஏற்றுக் கொள்பவர். அவரை பெருமைப்படுத்தி பேசுவதினால் துரியோதனனுக்கு அதிகப்படியான எந்த விதமான பலனும் ஏற்படப் போவதில்லை. துரோணரின் பெயரை முதலில் குறிப்பிடுவதினால் அவர் திருப்தி அடைந்து மேலும் உற்சாகத்தோடு யுத்தம் புரிவார் என்ற எண்ணத்தில் துரியோதனன் முதலில் துரோணரின் பெயரை குறிப்பிட்டான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: துரோணர் என்பவர் யார்?

பரத்வாஜ மகரிஷியின் மகன் துரோணர். சரத்வான் மகரிஷியின் மகளும் கிருபாச்சாரியாரின் சகோதரியுமான கிருபியை மணந்து கொண்டார். இவரது மகன் அஸ்வத்தாமன். இவர் அக்னிவேச்ய மகரிஷியிடமும் பரசுராமரிடமும் அனைத்து வித அஸ்திர சாஸ்திர வித்தைகளையும் அதன் ரகசியங்களையும் பிரயோகப்படுத்தும் முறைகளையும் கற்றார். வேதத்தையும் அதன் அங்கங்களையும் முறையாக கற்றவர். பிரம்மாஸ்திரம் அக்னேய அஸ்திரத்தின் பிரயோகத்தை நன்கு அறிந்தவர். யுத்தக்களத்தில் இவர் தன்னுடைய பரிபூரண சக்தியோடு நின்றால் இவரை யாராலும் வெல்ல முடியாது. மகாபாரத யுத்தத்தில் பீஷ்மருக்கு பிறகு துரோணர் ஐந்து நாட்கள் சேனாதிபதியாக இருந்தார். தன்னுடைய மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்ற தவறான செய்தியை கேட்டதும் உலக வாழ்க்கையை வெறுத்து தன் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு தியானத்தில் அமர்ந்தார். அப்போது திருஷ்டத்யும்னன் தன்னுடைய வாளினால் துரோணரின் தலையை கொய்து தன் பிறப்பின் கடமையை செய்து முடித்தான். அவரது உடலில் இருந்து வந்த ஆத்ம ஒளியானது ஆகாயத்திற்கு சென்றதை அனைவரும் கண்டனர்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: பீஷ்மர் என்பவர் யார்?

சந்தனுவுக்கும் கங்கா தேவிக்கும் பிறந்தவர். இவரது இயற்பெயர் தேவவிரதர். தன் தந்தைக்கு சத்யவதியை திருமணம் செய்து கொடுப்பதற்காக அரச பதவியை தியாகம் செய்து பிரம்மச்சரிய விரதம் எடுத்துக் கொண்டார். இதனால் பீஷ்மர் என்று பெயர் பெற்றதோடு தன் தந்தையிடம் இருந்து இச்சாம்ருத்யு என்ற நினைக்கும் போது மட்டுமே மரணம் என்ற வரத்தையும் பெற்றார். அஸ்திர சாஸ்திரங்கள் அனைத்தையும் முழுவதும் அறிந்து அதில் தேர்ச்சியும் பெற்றவர். வீரம் தியாகம் சகிப்புத்தன்மை பொறுமை புலனடக்கம் தெளிவு வைராக்கியம் தாய் தந்தையிடம் பக்தி ஆகிய ஆகிய பல நல்ல பண்புகளைக் கொண்டவர். ஞானம் விஞ்ஞானத்தை நன்கு அறிந்து வைத்திருந்தார். கிருஷ்ணரின் ரூபத்தையும் தத்துவத்தையும் நன்கு அறிந்தவர். மகாபாரத யுத்தத்தில் இவருக்கு இணையாக ஒரு வீரரும் இல்லை. யுத்தத்திற்கு வரும் முன்பாக துரியோதனனிடம் பாண்டவர்கள் ஐவரையும் கொல்ல மாட்டேன். ஆனால் அவர்களின் படைகளில் ஒவ்வொரு நாளும் பதினாயிரம் வீரர்களை கொல்வேன் என்று பிரமாணம் செய்திருந்தார். கௌரவ படைகளுக்கு 10 நாட்கள் சேனாதிபதியாக இருந்து கோரமான யுத்தத்தை செய்தார். பாண்டவர்களின் வெற்றியை தடுக்கும் ஒரே ஒரு மாபெரும் சக்தியாக பீஷ்மர் இருந்தார். சிகண்டி பீஷ்மருடன் போர் புரிய அவர் முன்பு வந்து நிற்க சிகண்டி சிவனிடம் பெற்ற வரத்தின் விளைவாக பீஷ்மரால் ஆயுதம் எடுத்து போர் புரிய இயலாமல் போனது. அப்போது பீஷ்மரின் வில்லை அர்ஜுனன் உடைத்து தாக்க ஆரம்பித்தான். எதிரில் சிகண்டி ஆயுதம் தாங்கி நின்று கொண்டிருந்ததால் ஆயுதமின்றி பீஷ்மர் ஒடுங்கிப் போனார். அர்ஜூனனின் அம்பினால் வீழ்த்தப்பட்டு அம்புப் படுக்கையில் இருந்து அனைவருக்கும் ஞானோபதேசம் செய்தார். அவரால் அனைவருக்கும் சொல்லப்பட்டதே விஷ்ணு சஹஸ்ரநாமம். அவரது விருப்பப்படியே உத்தராயண காலம் வந்த பிறகு தன் உடலை விட்டார்.

இந்த சுலோகத்தில் 4 வது கேள்வி: கர்ணன் என்பவன் யார்?

குந்திதேவி துருவாச மகரிஷி அளித்த மந்திரத்தை சூரிய பகவானை நினைத்து விளையாட்டாக பிரயோகிக்க சூரிய பகவானின் அருளால் உடலோடு ஒட்டிய கவசத்துடனும் காதுகளில் குண்டலத்துடனும் பிறந்தவன் கர்ணன். அவனை குந்தி ஆற்றில் ஒரு பெட்டியில் வைத்து விட்டுவிட பெட்டி அதிரதன் என்ற ஒரு தேரோட்டியின் கையில் கிடைத்தது. குழந்தைக்கு கர்ணன் என்று பெயர் சூட்டி வளர்த்தார்கள். துரோணாச்சாரியாரிடமும் பரசுராமரிடமும் வில் அஸ்திர சாஸ்திர வித்தைகளை கற்றவன். துரியோதனின் நெருங்கிய நண்பனாக இருந்தவன். துரியோதனனின் ஆட்சிக்கு உட்பட்ட அங்க தேசத்திற்கு அரசனாக இருந்தவன். துரியோதனனின் நட்பிற்காக தன் உடல் பொருள் ஆவி அனைத்தும் துரியோதனுக்கே என்ற கொள்கையில் வாழ்ந்தவன். தன்னுடைய பிறவி ரகசியத்தை குந்திதேவி கர்ணனிடம் சொன்ன பிறகும் துரியோதனனை விட்டு பிரிந்து பாண்டவர்களுடன் சேர மறுத்து தான் கொண்ட கொள்கையுடன் வாழ்ந்தவன். யார் எதைக் கேட்டாலும் தன்னிடம் இருப்பதை தானமாக கொடுத்து விடும் தர்ம குணம் நிறைந்தவன். இந்திரன் உடலோடு ஒட்டிய கவசத்தையும் குண்டலத்தையும் தானமாக கேட்டதும் அக்கணமே யோசிக்காமல் தானமாக கொடுத்தவன். மகாபாரத யுத்தத்தில் பீஷ்மர் துரோணருக்கு பிறகு இரண்டு நாட்கள் சேனாதிபதியாக இருந்தான். மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணரின் வழிகாட்டுதலோடு அர்ஜூனன் கையால் இறந்தான்.

இந்த சுலோகத்தில் 5 வது கேள்வி: கிருபாச்சாரியார் என்பவர் யார்?

கௌதம வம்சத்தில் சரத்வான் என்ற மகரிஷியின் மகன் கிருபாச்சாரியார். இவரது சகோதரியின் பெயர் கிருபி. இவர்கள் இருவரையும் சந்தனு மன்னன் வளரத்தார். வில்வித்தையில் அனுபவம் உள்ளவர். வேதசாஸ்திரங்கள் அறிந்தவர். எதிரிகளை வெற்றி கொள்வதில் நிபுணராக இருந்தார். குரு வம்சத்திற்கு துரோணர் குருவாக வருவதற்கு முன்பாக பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் யாதவர்களுக்கும் குருவாக இருந்து வில்வித்தைகளை கற்றுக் கொடுத்தார். மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு இவர் பாண்டவர்களின் வாரிசான பரீட்சித்திற்கு வில் வித்தைகளை கற்றுக் கொடுத்தார்.

இந்த சுலோகத்தில் 6 வது கேள்வி: அஸ்வத்தாமன் என்பவன் யார்?

துரோணரின் மகன் அஸ்வத்தாமன். திருமணம் முடிந்து வெகுகாலமாகியும் புத்திர பாக்கியம் இல்லாத துரோணர் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவருடைய தவத்தால் மகிழ்ந்த சிவன் அவரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க சிரஞ்சீவியாக அமர வாழ்வு பெற்ற ஒரு புதல்வன் எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று வரம் கேட்கிறார். அவரின் வேண்டுகோளின்படி மனித குலத்தின் கடைசி உயிர் இருக்கும் வரை சாகா வரம் உள்ள குழந்தை பிறக்கும் என்று சிவன் வரம் கொடுத்தார். அதன் பிறகு துரோணருக்கு குழந்தை பிறந்தது. குழந்தையின் நெற்றியில் பிருங்கி என்று அழைக்கப்படும் மணி இருந்தது. இந்த மணி இருக்கும் வரை தேவர் கந்தர்வர் மனிதர் அரக்கர் ரிஷிகள் யட்சர்கள் மிருகங்கள் என எந்த உயிரினமோ அல்லது எந்த விதமான திவ்ய அஸ்திரமோ அவனை கொல்ல முடியாது. பிறக்கும் போதே குதிரையைப் போல் கனைக்கும் திறன் பெற்றதால் அஸ்வத்தாமன் என்று பெயர் சூட்டப்படுகிறான். அவனது தாத்தா மகரிஷி பரத்வாஜரிடம் வேதங்களையும் கிருபாச்சாரியாரிடம் போரின் வியூக நுணுக்கங்களையும் பரசுராமரிடம் மொத்த ஆயுத அறிவையும் கற்றுக் கொண்டவன். கிருஷ்ணரிடம் இருந்து நாராயண அஸ்திர மந்திரத்தை பெற்றவன். தன் தந்தை துரோணாச்சாரியாரிடம் இருந்து பிரம்மாஸ்திர மந்திரத்தை பெற்றவன். காளிதேவியிடம் இருந்து மூவுலகையும் அழிக்கும் பாசுபதாஸ்திர மந்திரத்தை பெற்றவன். துவாபர யுகத்தில் பிரம்மாஸ்த்திரம் நாராயண அஸ்திரம் பாசுபதாஸ்திரம் என்ற இந்த மூன்றையும் கற்ற ஒரே வீரன் அஸ்வத்தாமன் மட்டுமே. மற்ற அஸ்திரங்களை விட இந்த மூன்று அஸ்திரங்களும் பல மடங்கு சக்தி வாய்ந்தது. தன்னை விட பலம் அதிகம் கொண்ட எதிரியின் மீது மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். தர்மத்தின் பக்கம் நிற்பவர்களால் மட்டுமே இந்த அஸ்திரங்களின் கட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியும்.

யுத்தத்தின் இறுதியில் அஸ்வத்தாமன் பாண்டவர்களின் வம்சம் அழிந்து போக வேண்டும் என்று எண்ணி பிரமாஸ்திரத்தை செலுத்தினான். பதிலுக்கு அர்ஜூனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான். இரண்டும் மோதுமானால் உலகம் அழியும் என அறிந்த வியாசரும் நாரதரும் உலகை காக்க நினைத்தனர். அர்ஜூனனிடம் பிரம்மாஸ்திரத்தை திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு கட்டளையிட்டனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ஜூனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான். அஸ்வத்தாமனுக்கு பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்து கொள்ளும் அறிவு இல்லை. பிரமாஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும். அதனால் அஸ்வத்தாமன் பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும் என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான். ஆனால் கிருஷ்ணரின் அருளால் உத்திரையின் கரு மட்டும் காப்பாற்றப்பட்டது. சிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கிருஷ்ணர் பழித்தார். நெற்றியில் இருந்த பிருங்கி மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான். அறிவிலியே நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டு காட்டில் தன்னந்தனியாய் பல ஆயிரம் ஆண்டுகள் விலங்காகவும் மானுடனாகவும் தவிப்பாயாக என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர். (அஸ்வத்தாமன் வரலாற்றை மேலும் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.

துரோணரின் மகன் அஸ்வத்தாமன்

இந்த சுலோகத்தில் 7 வது கேள்வி: விகர்ணன் என்பவன் யார்?

திருதராஷ்டிரனின் நூறு மகன்களில் ஒருவன் விகர்ணன். துரியோதனனின் சகோதரன். மகாரதனாக இருப்பவன் மகாபலசாலி தர்மாத்மா. திரௌபதியை கௌரவர்கள் தங்களின் அரசவையில் கொடுமைப்படுத்திய போது நான் தோற்று விட்டேனா இல்லையா என்று திரௌபதி கேள்வி எழுப்பிய போது அனைவரும் அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார்கள். விதுரருடன் விகர்ணன் மட்டுமே எழுந்து பேசினான். திரௌபதியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருப்பது பெரிய அநியாயம் என்று தன் பேச்சினால் நியாயத்தையும் தர்மத்தையும் அனைவருக்கும் புரியும்படி தெளிவாக எடுத்துக் கூறினான். விகர்ணன் மிகவும் நல்லவன் என்று கிருஷ்ணரால் சொல்லப்பட்டவன். மகாபரத யுத்தத்தில் பீமனின் கையால் விகர்ணன் இறந்தான்.

இந்த சுலோகத்தில் 8 வது கேள்வி: பூரிச்ரவஸ் என்பவர் யார்?

சந்தனு மன்னனின் மூத்த சகோரதர் பாஹ்லீகரின் மகன் சோமதத்தனின் மகன் பூரிச்ரவஸ். மிகுந்த தர்மசீலன் யுத்தக் கலையில் தேர்ச்சி பெற்றவன். மகாரதனாக இருப்பவன். அதிகமான தட்சணைகள் கொடுத்துப் பல யாகங்கள் செய்திருக்கிறார். மகாபாரத யுத்தத்தில் சாத்யகியின் கையால் இறந்தார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 33

கேள்வி: ஆதாம் ஏவாள் பற்றி

இறைவன் அருளாலே ஏதோ ஒரு குறிப்பிட்ட ஒருவனை இறைவன் படைத்துவிட்டு அப்படி படைக்கப்பட்ட ஆணிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்தான் என்று ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தை சேர்ந்தவர்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்காக அதை குறை கூறவும் நாங்கள் விரும்பவில்லை. எனவே நீக்கமற நிறைந்துள்ள இந்த பிரபஞ்சம் அண்ட சராசரங்கள் எப்பொழுதுமே இருக்கின்றன. இங்கே ஆத்மாக்களும் எப்பொழுதுமே இருந்து கொண்டு இருக்கின்றன. இறைவன் எப்பொழுது இந்த உலகத்தைப் படைத்தான்? எப்படி படைத்தான்? என்று பார்க்கப்போனால் அதை புரிந்து கொள்ளக்கூடிய அறிவாற்றலானது மனித கூட்டுக்குள் இருக்கக்கூடிய ஆத்மாவிற்கு கிடையாது. இந்த மனித கூட்டுக்குள் இருக்கின்ற ஆத்மாவானது தன் உடலை மறந்து தனக்குள் நீக்கமற நிறைந்துள்ள ஆத்மாவை புரிந்து கொண்டு அந்த ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்று உணரும் பொழுதே அந்த ஆத்மாவிற்கு மெல்ல மெல்ல புலப்படத் துவங்கும்.

அதாவது பரந்துபட்டு ஓடுகின்ற ஒரு புண்ணிய நதி. அந்த நதியை சுட்டிகாட்டி அந்த அற்புதமான ஒரு புண்ணிய நதியைப் பார்த்து ஒருவன் கேட்பான் இது என்னப்பா? என்று இன்னொருவன் கூறுவான் இது புண்ணிய நதி இது கங்கை இது காவிரி இது சரஸ்வதி இது யமுனை என்று. சரி என்று ஒரு செப்புக் கலசத்திலே அந்த நதி நீரை அள்ளி இப்பொழுது இது என்ன? என்று கேட்டால் இது கலச நீர் என்பான். அந்த நதியிலே ஓடுகின்ற நீர்தான் கலசத்துள் வந்திருக்கிறது. ஆனால் நதியிலே இருக்கும் பொழுது அது கங்கை என்றும் காவிரி என்றும் பெயர் பெற்றது. இப்பொழுது அதே நீர் கலசத்திற்குள் வந்த பிறகு கலச நீர் என்றாகிவிட்டது. அந்த கலச நீரை நதியிலே மீண்டும் விட்டுவிட்டால் மீண்டும் நதி என்று பெயரை அடைந்து விடுகிறது. இப்படியாக இந்த ஆத்மா பரமாத்மா எனப்படும் நதியிலிருந்து பிரிக்கப்பட்டு இந்த உலகென்னும் கலசத்திற்குள் அடைக்கப்பட்டது. கலச நீர் ஜீவாத்மா என்று அழைக்கப்படுகிறது. மீண்டும் நதியோடு கலந்துவிட்டால் பரமாத்மா ஆகிவிடுகிறது. எனவே திடும்மென்று ஒரு நாள் ஒரு ஆணையோ பெண்ணையோ திடீரென்று இறைவன் படைத்து விடவில்லை. அதற்கு முன்பே தேவர்கள் யட்சர்கள் கந்தர்வர்கள் என்றெல்லாம் இருக்கிறது. அங்கே தவறு செய்பவர்களை அனுப்புவதற்கென்றே ஒரு சிறைக்கூடம் போல் ஒன்று செயல்பட்ட போது இந்த பூமி படைக்கப்பட்டு முதலில் மேலானவர்கள் செய்யக்கூடிய அறியாமையிலே அல்லது அகங்காரத்திலே செய்யக்கூடிய குற்றங்களுக்காக அவர்களை பதவியிறக்கம் செய்வதற்காக மனித குலம் படைக்கப்பட்டது. அந்த மனித குலம் மேலும் மேலும் விரிவடைந்து மீண்டும் மீண்டும் தவறுகள் மீண்டும் மீண்டும் பாவங்கள் என்று அடுக்கடுக்காக பிறவிகள் வந்து கொண்டே இருக்கிறது.

சுலோகம் -7

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #7

அந்தணர்களில் சிறந்தவரே நமது அணியிலும் பிரதான யுத்த வீரர்கள் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். என்னுடைய படையின் தலைவர்களான அவர்களைப்பற்றி உங்களது கவனத்திற்காக சொல்கிறேன்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: யுத்தத்தில் இருக்கும் அனைவரையும் துரோணருக்கு தெரியும் இருந்தும் துரியோதனன் ஏன் அவர்களின் பெயரை துரோணரிடம் சொல்கிறான்?

துரோணரிடம் பாண்டவர்களின் பெயரை குறிப்பட்ட போது இதனைக் கேட்ட தமது படை வீரர்கள் எதிரணியில் இத்தனை பெரிய வீரர்கள் இருக்கின்றார்களே என்று திகைத்து விடக்கூடாது எதிரணி வீரர்களை விட பலசாலிகள் நமது அணியில் இருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவும் யுத்தத்தில் ஈடுபடும் வீரர்களின் பெயரை அனைவருக்கும் முன்பாக துரியோதனன் பெருமைப்படுத்தி சொல்வதினால் அவர்கள் திருப்தி அடைந்து மேலும் உற்சாகத்தோடு யுத்தம் புரிவார்கள் என்ற காரணத்திற்காகவும் துரியோதனன் துரோணரிடம் அவர்களின் பெயரை குறிப்பிட்டு சொன்னான்.

சுலோகம் -6

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #6

பராக்கிரமம் மிகுந்த யுதாமந்யு பலசாலியான உத்தமௌஜா சுபத்திரையின் மகன் அபிமன்யு திரௌபதியின் ஐந்து மகன்கள் இவர்கள் அனைவரும் மகாரதர்களாக இருக்கிறார்கள்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: யுதாமந்யு உத்தமௌஜா என்ற இருவரும் யார்?

பாஞ்சால தேசத்து ராஜ குமாரர்கள் இருவரும் சகோதரர்கள். பலம் மிகுந்தவர்கள். மிகுந்த பலசாலிகள் ஆனதால் இவர்கள் விக்ராந்த வீர்யவான் என்று பெயர் பெற்றவர்கள். யுத்தத்தின் இறுதியில் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது இவர்கள் இருவரையும் அசுவத்தாமன் கொன்று விட்டான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: அபிமன்யு என்பவன் யார்?

அர்ஜூனனுக்கும் கிருஷ்ணரின் தங்கையான சுபத்திரைக்கும் பிறந்தவன். மத்யச நாட்டு அரசன் விராடனுடைய மகள் உத்தரையை அபிமன்யு மணந்தான். தன் தந்தை அர்ஜூனனிடமும் தாய் மாமன் பிரத்யும்னனிடமும் வில்வித்தை கற்ற நிகரற்ற வீரன். மகாபாரத யுத்தத்தில் எவரும் நுழைய முடியாத சக்கர வியூகத்தில் நுழைந்து எண்ணற்றவர்களை கொன்று குவித்தான். அப்போது துரோணர் கிருபாசாரியார் கர்ணன் அசுவத்தாமன் பிருஹத்பலன் கிருதவர்மா என்ற ஆகிய ஆறு மகாரதர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். இறுதியில் துச்சாதனனின் மகன் தனது கதாயுதத்தால் அபிமன்யுவின் தலையில் ஓங்கி அடிக்க அபிமன்யு மரணமடைந்தான்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: திரௌபதியின் ஐந்து மகன்கள் யார்?

பிரதிவிந்தயன் சுதசோமன் சுருதகர்மா சதானீகன் சுருதசேனன். யுத்தத்தின் இறுதியில் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது இவர்கள் ஐவரையும் அசுவத்தாமன் கொன்று விட்டான்.

இந்த சுலோகத்தில் 4 வது கேள்வி: மகாரதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?

சாஸ்திரங்களிலும் அஸ்திர வில்வித்தையிலும் கைதேர்ந்த நிபுணர்கள் மகாரதர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் தனிஒருவராகவே நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர்கள். பதினாயிரம் வில்லாளி வீரர்களை யுத்தத்தில் வழிநடத்திச் செல்வார்கள்.

குறிப்பு: சுலோகம் 5 மற்றும் 6 இல் துரியோதனனால் குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும் மகாரதர்கள் ஆவார்கள். பாண்டவ படைகளில் இவர்களைத் தவிர இன்னும் பல மகாரதர்கள் இருந்தார்கள். 6 வது சுலோகத்தின் இறுதியில் ஸர்வே என்ற வார்த்தையை துரியோதனன் சொல்வதாக வருகிறது. இந்த ஸர்வே என்ற சமஸ்கிருத சொல்லினால் பெயர் குறிப்பிடப்படாத பல மகாரதர்களையும் சேர்த்து துரியோதனன் துரோணரிடம் சொல்வதாக கருத வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 32

கேள்வி: திருமூலர் சித்தர் பற்றி கூறுங்கள் ஐயனே

சிவலோகத்தில் உள்ள சுத்த சதாசிவர் என்ற மகான் ஒருமுறை பூமியிலே இறைவனின் சிலை வடிவத்தைக் காண்பதற்காகவும் எம்மை (அகத்தியர்) தரிசிப்பதற்காகவும் சில அரிய கருத்துக்களை தெரிந்து கொள்வதற்காகவும் பூமிக்கு வந்து பல ஸ்தலங்களை தரிசித்து வருகையிலே ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மூலர் என்ற ஓர் இடையர் உயிர் இழக்க அந்த தேகத்திற்குள் இந்த முனிவரின் ஆத்மா புகுந்து சில லீலைகள் புரிய வேண்டும் என்பதே இறைவனின் திருவுள்ளமாக இருந்தது. கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த ஆவினங்கள் (பசுக்கள்) மீது இரக்கம் கொண்டு தன் தேகத்தை பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்துவிட்டு மூலர் உடம்பினுள் இந்த முனிவர் புகுந்து ஆடு மாடுகளை அந்தந்த வீடுகளில் சேர்த்துவிட்டு மீண்டும் உடலைத் தேடியபோது இறைவன் அசரீரி வாக்காக உன் உடலை யாம் மறைத்து விட்டோம். இனி இந்த உடலிலே இருந்து நீ செய்ய வேண்டிய செயல்களைச் செய் என்று கூற பிறகு அந்த உடலிலேயே இருந்து பலருக்கு உபதேசம் செய்ததோடு 3000 ஆண்டுகள் கடுமையான தவத்தில் இருந்தார்.

ஆண்டுக்கு ஒன்றாக பாடலைப் பாடி யோகம் ஞானம் மந்திரம் தந்திரம் வித்தை கலை சாஸ்திரம் வேதம் என்று அனைத்து மூலக்கூறுகளிலும் மனிதனுக்கு புரியும் வகையிலும் துன்மார்க்கர்களுக்கு எட்டாத வகையிலும் நுட்பமாக மனித தேகம் மற்றும் தேகம் நிலையாமை தேகம் தோன்றுகின்ற தன்மை ஆன்மாவின் தன்மை என்றெல்லாம் பல கூறுகளாகப் பிரித்து அதே சமயம் மரபு,சாஸ்திரம் என்ற பெயர்களில் மனிதர்கள் புரியாமலும் புரிந்த பிறகு சுயநலத்தாலும் செய்து வரும் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி நல்லதொரு தத்துவ ஞானப் பாடல்களையெல்லாம் இறைவன் அருளைக் கொண்டு எழுதி வைத்தார். அப்படிபட்ட அற்புதமான மகானப்பா அவர்.

சுலோகம் -5

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #5

திருஷ்டகேது சேகிதானன் வீரியமுடைய காசிராஜன் புருஜித் குந்திபோஜன் சிறந்த மனிதனாகிய சைப்யனும்

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: திருஷ்டகேது என்பவன் யார்?

சிசுபாலனின் மகன். சேதி நாட்டு அரசன். இவர் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: சேகிதானன் என்பவன் யார்?

விருஷ்ணி வம்சத்தை சேர்ந்தவர். மகாரதர் தனி ஒருவராக நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர். பாண்டவர்களின் ஏழு அக்ரோணிப் படைகளுக்குரிய ஏழு தளபதிகளில் இவரும் ஒருவர். இவர் மகாபாரத யுத்தத்தில் துரியோதனன் கையால் இறந்தார்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: காசிராஜன் என்பவன் யார்?

காசி நாட்டு அரசன். மகாரதர் தனி ஒருவராக நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர். மகாபாரதத்தில் சேனாபிந்து என்றும் க்ரோதஹந்தா என்றும் அபிபூ என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

இந்த சுலோகத்தில் 4 வது கேள்வி: புருஜித் குந்திபோஜன் என்ற இருவரும் யார்?

இவர்கள் இருவரும் குந்தியின் சகோதரர்கள். பாண்டவர்களுக்கு தாய் மாமன் ஆவார்கள். இருவரும் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்கள்.

இந்த சுலோகத்தில் 5 வது கேள்வி: சைப்யனும் என்பவன் யார்?

இவரது பெண் தேவிகாவை யுதிஷ்டிரர் திருமணம் செய்திருக்கிறார். யுதிஷ்டிரனின் மாமனார் ஆவார். மனிதர்களில் சிறந்தவர். மிகப்பெரிய யுத்த வீரர் அதனால் இவர் நரபுங்கவர் என்று அழைக்கப்படுவார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 31

அகத்தியரின் பொது வாக்கு

இறை வணங்கி இயம்புகிறோம். இத்தருணம் இடைவிடாத பிராத்தனைகள் செய்கின்ற நல் அறங்கள் நலம் சேர்க்கும். இந்த வாழ்வில் எதிர்படும் துன்பங்கள் யாவும் அவரவர் கர்மத்தின் எதிரொலியாகும். அதனை உணர்ந்து பாவங்கள் செய்யாமலும் செய்த பாவத்தை எண்ணி வருந்தி திருந்தியும் அதோடு இறை வணங்கியும் அறம் புரிந்தும் வாழ நலமாகும். திவ்யமான பரம்பொருளை உணர்ந்து திருவடி பற்றும் வளர துன்பங்கள் அணுகாது. இதைத் தவிர வேறு எதை அடைந்தாலும் நிரந்தர சாந்தி கிட்டாது. தளர்வோ விரக்தியோ வேதனையோ எதிர்மறை எண்ணங்களோ ஒரு பொழுதும் துன்பத்தை மாற்றாது. திட மனம் கொண்டு எதனையும் எதிர்கொள். பதற்றமின்றி செயல் படுத்துதலும் நலம் சேர்க்கும். சேர்க்கின்ற புண்ணியம் கடைசி வரையில் துணையாகும். சேர்க்கின்ற பாவமொ கடைசி வரையில் இடராகும் (துன்பத்தை தரும்). சிறப்பில்லா பாவ சூழல் மேலும் பாவத்தை சேர்த்துவிடும் என்பதால் சிந்திக்க வேண்டும். பாவம் எண்ணம் கூடாது. பாவ எண்ணங்கள் வளரவும் கூடாது. கூடாதப்பா தவறான மாந்தர்களுடன் உறவும் கூடாது. குறித்திடுவோம் எத்தனை துன்பத்திலும் எத்தனை சிக்கலிலும் கருத்தில் இதனை கொள்ள வேண்டும். இதனால் பாவம் செய்தேன் என்றியம்பக் கூடாது. பற்றற்று வாழ அதற்கான முயற்சியைத் தொடர நலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 30

கேள்வி: செடி கொடிகளை கொன்றுதான் இந்த பூமியில் வாழ வேண்டுமா? வேறு மாற்று வழியில்லையா?

மனிதனாக பிறந்து விட்டாலே பாவங்கள் செய்துதான் ஆக வேண்டும் என்பதற்கு இந்த வினாவும் ஒரு உதாரணம். ஆனாலும் ஐம்புலனை சரியாக கட்டுப்படுத்தி யோக நிஷ்டையில் அமர்ந்து யோக மார்க்கத்தில் செல்லக்கூடிய ஒரு பாக்கியம் பெற்ற ஆத்மாக்கள் ஐம்பூதங்களில் இருந்து தன் உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியும். காட்டிலிருந்தும் தன்னை சுற்றியுள்ள கதிர்வீச்சிலிருந்தும் சூரிய சந்திர ஔியிலிருந்தும் மண்ணிலிருந்தும் கூட அந்த பொருளின் புற பாதிப்புகள் ஏதும் இல்லாமல் தன் உடல் சோர்ந்து போகவண்ணம் தேவையான சத்துக்களை கிரகிக்க முடியும். இதற்கு பஞ்சபூத சாஸ்திர சக்தி தத்துவ முறை என்று பெயர். இவற்றையெல்லாம் சராசரி மனிதனால் உடனடியாக பின்பற்ற முடியாது.

கேள்வி: இந்த சூழ்நிலையில் நாங்கள் என்ன செய்வது?

எப்பொழுதும் வழக்கம் போல் வாழ்ந்து கொண்டே வா. பின்னால் இறைவன் அருளால் அதற்குண்டான சூழல் ஏற்பட்டால் யாமே அது குறித்து கூறுகிறோம்.

கேள்வி: அமாவாசை நாட்களில் கண் தெரிய உதவும் மற்றும் தொலை தூரத்தில் இருப்பவற்றை அறிய உதவும் மூலிகைகள் குறித்து

நீ கூறிய அனைத்து மூலிகைகளிலும் சதுரகிரி கொல்லிகிரி மற்றும் பர்வதமலையிலும் இருக்கிறதப்பா. ஆனால் அது யாருக்கு கிட்ட வேண்டுமோ அவனுக்கு தான் அது கிட்டும். இந்த மூலிகை கிடைக்க வேண்டிய வினைப்பயன் இருக்கின்ற மனிதனுக்கு உண்மையில் இந்த மூலிகை குறித்த ஆர்வம் இராது.

சுலோகம் -4

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #4

இங்கு (பாண்டவ படையில்) சூரர்களும் மிகப்பெரிய வில்வித்தை வீரர்களான பீமன் அர்ஜூனனுக்கு இணையான வீரர்கள் பலர் இருக்கிறார்கள். யுயுதானன் விராடன் மகாரதனாகிய துருபதன்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: யுயுதானன் என்பவன் யார்?

சினி என்பவருடைய மகன் யுயுதானன். யாதவ குலத்து அரசன். கிருஷ்ணரைச் சார்ந்தவன். அர்ஜூனனின் சீடன். சாத்யகிக்கு யுயுதானன் என்ற பெயரும் உண்டு. பலம் மிகுந்தவன். இவன் மகாபாரத யுத்தத்தில் இறக்கவில்லை. ரிஷியின் சாபத்தினால் யாதவர்களுக்குள் ஏற்பட்ட யுத்தத்தில் அடிபட்டு இறந்தான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: விராடன் என்பவன் யார்?

மத்சிய நாட்டு அரசன் விராடன். பாண்டவர்கள் தங்களின் 1 வருட அஞ்ஞாத வாசத்தை இவரது நாட்டில் மறைந்து வாழ்ந்தார்கள். இவருடைய பெண் உத்தரையை அர்ஜூனனுடைய மகன் அபிமன்யு மணந்தான். இவர் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: துருபதன் என்பவன் யார்?

புருஷத் என்பவரின் மகன் துருபதன். பாஞ்சால தேசத்து அரசர். துரோணரைக் கொல்ல வேண்டும் என்று யாஜர் உபயாஜர் என்ற இரண்டு ரிஷிகளை வைத்து யாகம் செய்தார். யாகத்தில் தோன்றியவர்கள் பாண்டவர்களின் சேனாதிபதியான திருஷ்டத்யும்னனும் பாண்டவர்கள் ஐவரை திருமணம் செய்த திரௌபதியும் ஆவார்கள். இவர் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்.