14. இந்திரன் முடிமேல் வாளை எறிந்த படலம்

திருவிளையாடல் புராணம் 14. இந்திரன் முடிமேல் வாளை எறிந்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம் நூலின் பதினான்காவது படலமாகும்.

உக்கிரபாண்டியன் நீதிநெறி தவறாமல் மதுரையை ஆட்சி செய்து வந்தான். அப்பொழுது ஒரு சமயம் மழையானது மூவேந்தர்கள் ஆட்சி செய்யும் தமிழ் நாட்டில் பொய்த்தது. ஆகையால் தமிழ் நாட்டில் நீர் வளமின்றி பஞ்சம் உண்டானது. நாட்டு மக்களின் துயர் தீர்க்க எண்ணிய மூவேந்தர்களும் பொதிகை மலையில் வசித்த அகத்தியரின் உதவியை நாடிச் சென்றார்கள். அகத்தியரும் கோள்களின் நிலையையும் கால நிலையையும் ஆராய்ந்து மூவேந்தர்களிடமும் அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மழை பெய்யாது. ஆதலால் நீங்கள் மழைக் கடவுள் வருணனுக்கு தலைவனான இந்திரனிடம் மழையைப் பெய்யச் செய்யுமாறு கேளுங்கள் என்று கூறினார். மூவேந்தரும் அகத்தியரிடம் நாங்கள் இந்திரனை சந்திக்க வேண்டுமென்றால் இந்திர லோகம் செல்ல வேண்டும் நாங்கள் எப்படி இந்திலோகத்திற்கு செல்வது என்று கேட்டார்கள். அதற்கு அகத்தியர் நீங்கள் மூவரும் சோம வார விரத வழிபாட்டினைப் பின்பற்றி சிவபெருமானின் திருவருளைப் பெற்று இந்திரலோகத்தை அடையுங்கள் என்று கூறினார். தமிழ் மூவேந்தரும் சோமவார விரத முறையை விளக்குமாறு அகத்தியரிடம் கேட்டுக்க கொண்டார்கள்.

சோமாவார விரத முறையை பின்பற்ற விரும்புபவர்கள் கார்த்திகை மார்கழி மாதங்கள் மற்றும் இரண்டு அமாவாசை சேர்ந்து வரும் மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் திங்கள் கிழமைகளில் இவ்விரதத்தை துவக்கலாம். இதற்காக விரதம் தொடங்கும் திங்கள் கிழமைக்கு முந்தைய ஞாயிற்று கிழமைகளில் இரவில் உணவு உண்ணாமல் நிலத்தில் படுத்து உறங்க வேண்டும். திங்கள் கிழமை அதிகாலையில் எழுந்து சொக்கநாதரை மனதில் நினைத்து அன்றைய கடன்களை முடித்து பொற்றாமரைக் குளத்தில் நீராடி வெண்ணீறு அணிந்து கொள்ள வேண்டும். மந்தாரை முல்லை இருவாட்சி சாதி மல்லிகை மலர்களால் விநாயகரை வழிபட்டு பின் சொக்கநாதரை முறைப்படி வழிபட வேண்டும். பின் பஞ்சாமிர்தம் பஞ்சகவ்வியம் நறுங்கனித்தேன் சந்தனக்குழம்பு குளிர்ந்த தூய நீர் ஆகியவற்றால் இறைவனுக்கு அபிசேகம் செய்ய வேண்டும். அழகிய வெண்பட்டு பச்சைக் கற்பூர சுண்ணம் சந்தனம் மல்லிகை உள்ளிட்ட மணமுள்ள மாலை ஆகியவற்றை அணிவிக்க வேண்டும். பொன்னாலான அணிகலன்களை இறைவனுக்கு அணிவிக்க வேண்டும். பல வித பலகாரம் பானகம் மணம் மிக்க தாம்பூலம் ஆகியவற்றைப் படைத்து தீபதூப ஆராதனைகள் செய்து வில்வத்தால் அர்ச்சித்து மனமுருக வழிபாடு நடத்த வேண்டும். பின் தானங்கள் பலவற்றைக் கொடுக்க வேண்டும். இவ்வாறு வழிபட்டால் நல்ல திருமணப்பேறு நன்மக்கட்பேறு நல்லவாக்கு கல்வி பொருள் இனியபோகம் பகைவரை வெற்றி கொள்ளும் தன்மை இப்பிறவியிலேயே அரசுரிமை பிறநலன்கள் ஆகியவை கிடைக்கும். மேலும் முந்தைய பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கப் பெற்று இப்பிறவியில் வீடுபேறு அடைவர். தேவருலகில் பதினான்கு இந்திரப் பட்டம் பெற்று அவன் பக்கத்தில் வாழ்வர்கள் என்று சோமவாரத்தின் விரதமுறை மற்றும் பலன்களை அகத்தியர் விளக்கிக் கூறினார்.

அகத்தியர் கூறிய விதிமுறைப்படி மூவேந்தர்கள் மூவரும் சோமவார விரதத்தைப் பின்பற்றி சிவபெருமானின் திருவருளைப் பெற்று இந்திரலோகத்தைச் சென்று அடைந்தனர். மூவேந்தரும் வருவதை அறிந்த இந்திரன் மூவேந்தர்கள் அமருவதற்காக தன்னை விட தாழ்ந்த நிலையில் உள்ள சிம்மாசனத்தை அமைத்தான். இந்திரோலகத்தை அடைந்த மூவேந்தர்களில் சேரனும் சோழனும் இந்திரனின் காட்டிய சிம்மாசனத்தில் அமர்ந்தனர். உக்கிரபாண்டியன் மட்டும் இந்திரனுக்கு சமமாக அவனுடைய சிம்மாசனத்தில் இந்திரனோடு அமர்ந்தான். இதனால் இந்திரன் உக்கிரபாண்டியனின் மீது கடும் கோபம் கொண்டான். இந்திரன் சேர சோழர்களைப் பார்த்து நீங்கள் வந்த காரியம் யாது? என்று கேட்டான். அவர்கள் இந்திரனிடம் மழைக்கு அதிபதியே எங்கள் நாட்டில் மழை பெய்யவில்லை. அதனைப் பெற வேண்டி இங்கே வந்தோம் என்று கூறினார்கள். அதனைக் கேட்ட இந்திரன் அவர்களுக்கு பொன்னாடை மற்றும் இரத்தின ஆபரங்கள் கொடுத்து அவ்விருவர் நாடுகளிலும் மழை பெய்ய செய்யவதாக வாக்கு கொடுத்து அவர்களை வழி அனுப்பினான்.

தனக்கு இணையாக அமர்ந்திருந்த உக்கிரபாண்டியனை நோக்கிய இந்திரன் அவனை அவமானப்படுத்த எண்ணி ஒரு சூழ்ச்சியைச் செய்தான். பல பேர் சேர்ந்து தூக்கி வரும் எடை அதிகமாக உள்ள முத்து மாலையை உக்கிரபாண்டியனுக்கு பரிசளிக்க எண்ணினான். அவனின் ஆணையின்படி பல பேர் சேர்ந்து முத்து மாலையைத் தூக்கி வந்து உக்கிரபாண்டியனிடம் நீட்டினர். உக்கிரபாண்டியன் முத்து மாலையை தூக்கத் திணருவதைப் பார்த்து கைகொட்டி சிரிக்க இந்திரன் எண்ணியிருந்தான். ஆனால் உக்கிரபாண்டியன் முத்து மாலையை எளிதாக தூக்கி கழுத்தில் அணிந்து கொண்டான். இதனைப் பார்த்த இந்திரன் அதிர்ச்சியடைந்தான். பின் உக்கிரபாண்டியனிடம் இன்று முதல் நீ ஆரம் தாண்டிய பாண்டியன் என்று அழைக்கப்படுவாய் என்று கூறினான். ஆனால் உக்கிரபாண்டியன் அதனைப் பொருட்படுத்தாது இந்திரனிடம் ஏதும் கேட்காது மதுரை நகர் திரும்பினான். சேர சோழ நாடுகளில் இந்திரன் மழையைப் பெய்வித்தான். பாண்டிய நாட்டில் மட்டும் மழை பெய்யவில்லை. ஒருநாள் உக்கிரபாண்டியன் மரங்கள் அடர்ந்த பொதிகை மலைச்சாரலில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது புட்கலாவருத்தம் சங்காரித்தம் துரோணம் காளமுகி என்னும் நான்கு மேகங்கள் பொதிகை மலைச்சாரலில் மேய்ந்து கொண்டிருந்தன. அதனைக் கண்ட உக்கிரபாண்டியன் அவற்றைப் பிடித்து சிறையில் அடைத்தான். இதனை அறிந்த இந்திரன் கடும் கோபம் கொண்டான். உக்கிரபாண்டியன்மீது போர் தொடுத்தான்.

பாண்டியனின் படைகளும் இந்திரனின் படைகளும் நேருக்கு நேராக நின்று போரிட்டனர். போரின் போது உக்கிரபாண்டியன் இறைவனான சுந்தரபாண்டியன் அளித்த வாளை இந்திரனை நோக்கி வீசினான். வாள் இந்திரன் அணிந்திருந்த கிரீடத்தைச் சிதைத்தது. அதனைக் கண்ட இந்திரன் நான் முன்னர் சோமசுந்தரரை வழிபட்டதின் பலனாக என்னுடைய தலை இன்று தப்பியது என்று எண்ணி போர் களத்தைவிட்டு வெளியேறி தேவலோகத்தை அடைந்தான். பின்னர் உனது நாட்டில் மழையைப் பொழிவிக்கிறேன். நீ என்னுடைய மேகங்களைத் திருப்பித் தருவாயாக என்று ஓலை ஒன்றை அனுப்பினான். இந்திரன் அனுப்பிய ஓலையை நம்பாததால் மேகங்களின் விடுவிக்க உக்கிரபாண்டியன் மறுத்து விட்டான். பாண்டிய நாட்டு வேளாளன் ஒருவன் அரசே இந்திரனின் செய்திக்கு நான் பிணை. இந்திரன் என்னை நன்கு அறிவான். ஆதலால் நீங்கள் மேகங்களை விடுதலை செய்யுங்கள் என்று கூறினான். உக்கிரபாண்டியனும் மேகங்களை விடுவித்தான். பின்னர் இந்திரன் பாண்டிய நாட்டில் மழையை பெய்யச் செய்து நாட்டை வளமாக்கினான். மழையால் பாண்டிய நாடு செழித்து பொலிவு பெற்றது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வழிபடும் முறை மற்றும் அதற்கான பலன்களை அருளினார். மேலும் வலிமை மிக்கவர்கள் தங்களை விட வலிமை குறைந்தவர்களை துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டால் இறைவனின் அருளால் வலிமை மிக்கவர் தண்டிக்கப்படுவர்கள் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 434

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

தீபம் ஏற்ற ஏற்ற பாவம் குறையும் என்பது ஒரு உண்மையாகும். எனவே இருள் என்பது துன்பமும் பாவமும் ஆகும். ஒளி என்பது அதற்கு எதிராக இருந்து பாவத்தை துன்பத்தை நீக்குவதாகும். இருள் அகற்றி மாந்தனின் மனதிலே உள்ள இருள் அகற்றி சுற்று புறத்தில் உள்ள இருளையும் அகற்றி பாவம் என்னும் இருளையும் அகற்றி சோதனை கஷ்டங்கள் வேதனை என்ற இருளையும் அகற்றி ஒளி வளரட்டும் ஒளி பரவட்டும் என்பதின் ஆத்மார்த்தமான தத்துவமே தீபமாகும். இருந்தாலும் கூட உயர் தரமான நெய்யினை கொண்டு நல்விதமாக தீபத்தை ஏற்றும் பொழுது அந்த நெய் ஏற்றுகின்ற இடத்தையும் ஏற்றுகின்ற மனதையும் சுத்த படுத்துகின்றது என்பதை புரிந்து கொண்டு வெறும் எந்திரம் போல் தீபத்தை ஏற்றாமல் ஆத்மார்த்தமான பிரார்த்தனை செய்து கொண்டே தீபத்தை ஏற்ற ஏற்ற ஏற்ற எற்றுபவனுக்கு ஏற்ற படும் இடத்தில் அதிலே சுற்றி இருந்து பங்கு பெரும் மனிதனுக்கு பாவ வினைகள் படி படியாக குறைந்து நல் வினைகள் கூடி அவன் எதிர்பார்க்ககூடிய நல்ல காரியங்கள் எல்லாம் இறைவன் அருளால் நடக்கும் என்பது தீபத்தின் விளக்கம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 433

கேள்வி: நடக்க முடியாதவர்கள் வீட்டில் பூஜை செய்தால் பலன் உண்டா?

இறைவனின் அருளாணைப்படி நடக்க முடியாதவர்கள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள். சித்தர்களின் அருளாணைப்படி வாக்குப்படி நடக்க முடியாதவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள். எனவே நடப்பது என்பது கால்களால் மட்டுமல்ல.

நாமேல் நடப்பீர் நாமேல் நடப்பீர் என்று அதுபோல் நாவுக்கரசர் கூறியிருக்கிறார்.

நாவால் நடப்பது நல்ல வார்த்தைகளால் நல்ல நல்ல சிந்தனைகளால் ஒருவன் நடக்க வேண்டும். அதுதான் உண்மையான நடப்பு. எனவே வெறும் பாதங்களால் நடப்பது நடப்பல்ல. அப்படி உடல்ரீதியான பிரச்சினை உள்ளவர்கள் அவர்களால் இயன்ற பூஜையை எங்கு செய்தாலும் எப்படி செய்தாலும் உள்ளன்போடு செய்தால் இறைவன் ஏற்றுக் கொள்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 432

கேள்வி: பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர் வலக்கையில் சிவலிங்கம் வைத்திருப்பதின் தாத்பர்யம் என்ன?

இறைவனின் கருணையாலே இதுபோல் நல்விதமாய் இதற்கு பல காரணங்களை கூறலாம். இன்னொன்று தெரியுமா? யாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே பல்வேறு தருணங்களில் பல்வேறு ஆலயங்கள் கட்டப்படும் பொழுது சிற்பிகள் சில தவறுகள் செய்து விடுவார்கள். அதைவிட அந்த ஆலயத்தை கட்டுகின்ற ஆகம வல்லுனன் சில தவறுகளை செய்து விடுவான். உதாரணமாக காலம் காலமாக கிழக்கு நோக்கியபடி இறை ரூபம் வைக்கப்பட வேண்டுமென்றால் ஏதோ ஒரு சிந்தனையில் (இறை ரூபத்தை) தெற்கு நோக்கி வைத்து விடுவார்கள். பிறகு இப்படி இருப்பதுதான் சிறப்பு எங்கும் இல்லாத வழிமுறை அவர்களாகவே ஒரு கற்பனை கலந்த கதையை கூறிவிடுவார்கள். பரவாயில்லை இறை பக்தியால் இதை செய்வதால் யாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அந்த வகையிலே தன் தந்தையை கையில் வைத்து முழுமையாக ஆராதனை செய்து முக்கண்ணனாகிய அந்த சிவனை பரம்பொருளை சிவபெருமானாக உள்ளுக்குள் உணர்ந்து அந்த சிவனை மனதில் வரித்து சிவனோடு ஐக்கியமாக வேண்டுமென்று பலர் தவம் செய்கிறார்கள். அப்படி நேரடியாக தவம் செய்து சிவனை அடைவது என்பது சிவன் செய்கின்ற சோதனையை தாங்குகின்ற வல்லமை உள்ளவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். மற்ற மனிதர்கள் சிவனின் சோதனையை இறைவனின் சோதனையை தாங்குவது கடினம்.

அதே இறைவன் விநாயகப் பெருமான் வடிவம் எடுக்கும் பொழுது எளிமையாக மிகவும் சாதாரண நிலையில் அருளைத் தருவதாக ஒரு வைராக்யம் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இதோ இந்த சிவனை தேடித்தானே போக வேண்டும். இந்த சிவனுக்குள்தானே ஒடுங்க வேண்டும் என்று எண்ணுகிறாய். என்னிடம் வா என் மூலம் சிவனில் ஒடுங்கலாம் என்று கூறாமல் கூறுகிறார். தானும் தன்னுடைய இன்னொரு வடிவமான சிவத்தை நினைத்து தவத்தை செய்து கொண்டிருக்கிறார். அங்கு சென்று வழிபட ஒரே சமயத்தில் பரம்பொருளின் இரண்டு தெய்வீக வடிவத்தையும் வணங்கிய பலன் உண்டு.

13. கடல் சுவற வேல் விட்ட படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கடல் சுவற வேல் விட்ட படலம் நூலின் பதிமூன்றாவது படலமாகும்.

சுந்தரபாண்டியனார் தடாதகை ஆகியோரின் குமரனான முருக்கடவுளை ஒத்த உக்கிரபாண்டியன் மதுரையை சிறப்புற ஆட்சி செய்தார். மதுரையின் வளம் குன்றாது இருக்க உக்கிரபாண்டியன் 96 வேள்விகளைச் செய்து முடித்தார். இன்னும் நான்கு வேள்விகளைச் குறைவின்றி செய்து முடித்தால் உக்கிரபாண்டியனுக்கு இந்திரப்பதவி கிடைத்து விடும் என்று எண்ணி தேவர்களின் தலைவனான இந்திரன் உக்கிரபாண்டியனின் மீது பொறாமை கொண்டான். இந்திரனின் பொறாமையால் அவனுடைய மனதில் சூழ்ச்சி ஒன்று உருவானது. அதன்படி அவன் கடலரசனை அழைத்து மதுரையை அழிக்கும்படி கூறினான். கடலரசனும் இந்திரனின் பேச்சுக்கு உடன்பட்டு மதுரையை அழிப்பதாக இந்திரனுக்கு வாக்குறுதி அளித்தான். கடலரசன் இந்திரனுக்கு அளித்த வாக்குறுதிப்படி மதுரை அழிப்பதற்காக பெரும் சீற்றத்துடன் ஊழிக் காலத்தினை ஒத்த அழிவினை மதுரையில் உண்டாக்குவதற்காக பொங்கி எழுந்து மதுரையை நோக்கி வந்தான். கடலரசன் நள்ளிரவில் மதுரையின் கிழக்குப் பகுதியை அடைந்த போது சொக்கநாதர் உக்கிரபாண்டியனின் கனவில் சித்தர் வடிவில் தோன்றினார். பாண்டியனே உன்னுடைய மதுரை நகரினை அழிக்கும் பொருட்டு கடலானது பொங்கி எழுந்து வருகிறது. நீ உன்னுடைய வேல்படையை கடலின் மீது ஏவி அதனை வெற்றி பெற்று மதுரையைக் காப்பாயாக என்று எச்சரிக்கை வார்த்ததை கூறி மறைந்தார்.

சித்தரின் எச்சரிக்கை வார்த்தை கேட்டு கண் விழித்த உக்கிரபாண்டியன் தனது அமைச்சர்களோடு கலந்து ஆலோசித்து விரைந்து சென்று பேரொலியோடு வருகின்றன கடலினைப் பார்த்து வியந்து நின்றான். அப்போது பாண்டியனின் கனவில் வந்த சித்தமூர்த்தி நேரில் அவ்விடத்திற்கு வந்தார். பின் உக்கிரபாண்டியனை நோக்கி பாண்டியனே இனியும் காலம் தாழ்த்தாது உன்னிடம் உள்ள வேல் படையைக் கொண்டு பொங்கிவரும் கடலினை வெற்றி கொண்டு மதுரையை விரைந்து காப்பாய் என்று கூறினார். சித்தரின் வார்த்தைகளைக் கேட்டவுடன் உக்கிரபாண்டியன் தன்னிடம் இருந்த வேல் படையின் கூரியமுனை கடலில் படுமாறு வலஞ்சுழித்து வீசி எறிந்தான். கூரிய வேலின் நுனி கடலில் பட்டவுடன் கடலானது பேரோலியுடன் வற்றி வலிமை இழந்தது. உக்கிரபாண்டியனின் கணுக்கால் அளவுக்கு கடல் நீர் குறைந்தது. மதுரைக்கு கடலினால் வந்த பெரும் ஆபத்து விலகியது. உக்கிரபாண்டியனின் அருகில் நின்றிருந்த சித்தர் வைகைக் கரையில் கடைச்சங்கத்தை நிறுவி தமிழ் வளர்ப்பாய் என்று அருளினார். பின் வானத்தில் உமையம்மையோடு இடப வாகனத்தில் காட்சியருளினார். உக்கிரபாண்டியன் அவரைத் துதித்துப் போற்றினான். இறைவனார் திருக்கோவிலுள் ஜோதி வடிவில் புகுந்தருளினார். உக்கிரபாண்டியனும் இறைவனாரை திருகோவிலினுள் சென்று வழிபாடு செய்தான். பல விளை நிலங்களை திருகோவிலுக்கு சொந்தமாக்கிய உக்கிரபாண்டியன் மதுரையை இனிது ஆட்சி புரிந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தமிழுக்கு கடைச் சங்கத்தை ஏற்படுத்தி அருளினார். மேலும் வஞ்சனை எண்ணம் கொண்டவர்களோடு சேர்ந்து மற்றவர்களுக்கு தீயது செய்தால் தீய செயலில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவர் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 431

கேள்வி: பாடல்பெற்ற ஸ்தலங்களில் ஐந்தினை மயான ஸ்தலங்கள் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவற்றிற்கும் பொதுவாக வழிபடக்கூடிய ஸ்தலங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

இறைவனின் கருணையாலே இதுபோல் மனிதர்கள் ஒருவகையில் அச்சப் படக்கூடிய இடம் விரும்பாத இடம் என்று மயானத்தை கூறலாம். ஆனால் மயான அமைதி என்ற வார்த்தையை மனிதனே கூறுவான். ஏனென்றால் அங்கு செல்லுகின்ற மனிதர்கள் இயக்கமற்ற நிலையிலே ஏதும் செய்ய இயலாத நிலையிலே அமைதியடைந்து விடுகிறார்கள். ஒரு மனித உடல் தேவையற்ற நிலைக்கு ஆளான பிறகு அதாவது ஆத்மாவை விட்ட பிறகு அந்த உடல் சென்று அடங்கக் கூடிய இடத்திற்கும் மனிதன் உயிரோடு சென்று வழிபடக் கூடிய ஆலயத்திற்கும் ஒரேவிதமான பொருள் வரக் கூடிய மயானம் என்ற வார்த்தையை எதற்காக வைத்தார்கள்? மனிதன் சிந்திக்க வேண்டும். உயிர் இல்லாத பொழுது இந்த உடல் அடக்கத்தோடு இருப்பதைவிட உயிர் இருக்கும் பொழுதே அடக்கமாக இருப்பதற்குண்டான வழிமுறையை கற்றுத் தரக் கூடிய ஆலயங்களில் ஒன்றுதான் அந்த ஆலயம். மயானத்தில் ஆடாது அசையாது ஒரு இருக்கும் மனிதன் அதன் பிறகு அவன் எந்த பாவமும் செய்வதில்லை. அவனால் செய்ய முடிவதில்லை. உடலோடு இருக்கும் பொழுது எத்தனையோ பாவங்களையும் அனாச்சாரங்களையும் செய்கிறான்.

நன்மைகளையும் செய்கிறான் இல்லையென்று கூறவில்லை. இங்கே ஒரு வேடிக்கை என்னவென்றால் அந்த இடத்தில் ஞானம் பெற வேண்டும் என்பதற்காகத்தான் மயானத்தோடு தன்னை தொடர்புபடுத்தி வைத்திருக்கிறார் முக்கண்ணன். ஒன்றுமில்லை எல்லாம் மாயை என்பதை மனிதன் உணர வேண்டும் என்று. ஆனால் மனிதன் என்ன செய்கிறான்? அங்கும் சென்று மனிதன் தன் ஆதிக்கத்தை காட்டி இறைவனை பின்னே தள்ளி விடுகிறான். இது இன்ன பிரிவில் பிறந்தவன் எரிக்கப்பட வேண்டிய மேடை. இது இன்ன ஜாதியில் பிறந்தவன் எரிக்கப்பட வேண்டிய மேடை என்றெல்லாம் பிரித்து வைக்கிறான். அதைத் தாண்டி இன்னொன்று செய்கிறான். ஒரு குழி தோண்டி இந்த உடலை மூடிவிட்டு ஒரு சிறு கட்டிடம் எழுப்பி அவன் படித்த பட்டங்களையெல்லாம் போட்டு வைக்கிறான். இதையெல்லாம் இறைவன் பார்த்து ஓ இவன் இந்தளவு படித்திருக்கிறானா? இவனை அழைத்து பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று சிந்திக்கப் போகிறாரா என்ன? மனிதனின் அறிவு வளரவே மறுக்கிறது என்பதுதான் எங்களின் ஆதங்கம். எத்தனை சொல்லித் தந்தாலும் நான் கீழேதான் இருப்பேன் என்பதுதான் மனிதனின் அறியாமை இருக்கட்டும்.

மனிதனின் அறியாமைதான் இந்த உலக இயக்கத்திற்கு அச்சாணியாக இருக்கிறது. இந்த உலகிலே அத்தனை பேரும் ஞானம் பெற்றுவிட்டால் இறைவனுக்கே அலுத்துவிடுமப்பா. மீண்டும் இன்னவனின் வினாவிற்கு வருகிறோம். அந்த மயானத்திலே ஒரு மனிதனுக்கு ஞானம் கிட்டும். நல்விதமான ஞானத்தை எத்தனையோ சித்தர்கள் மயானத்திலே அடைந்திருக்கிறார்கள். பிராந்தையார் எனும் சித்தனுக்கு ஞானம் மயானத்தில்தான் கிடைத்தது. மயானத்தில்தான் அவன் தவம் செய்து ஞானத்தை பெற்றான். அப்படியொரு ஞானம் மயானத்தில் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு சில ஜாதக விதிகள் வேண்டும். எல்லோரும் அதற்காக மயானம் சென்று உயிரோடு இருக்கும் பொழுதே தியானம் செய்ய வேண்டாம்.

12. உக்கிர குமாரனுக்கு வேல்வலை செண்டு கொடுத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உக்கிர குமாரனுக்கு வேல்வலை செண்டு கொடுத்த படலம் நூலின் பன்னிரண்டாவது படலமாகும்.

உக்கிரவர்மனின் திருமணத்திற்காக பெண் தேடுதல் நடைபெற்றது. மதுரையை அடுத்த மணவூரில் இருக்கும் அரசனான சோமசேகரனின் மகளான காந்திமதியை உக்கிரவர்மனுக்கு மணமகளாகத் தேர்வு செய்து திருமணம் முடிக்க இறைவனான சுந்தர பாண்டியரும் தடாகையும் கருதினர்கள். அன்றிரவு சோமசேகரனின் கனவில் தோன்றிய சொக்கநாதர் மதுரையை ஆண்டு வரும் சுந்தரபாண்டியனாரின் திருமகனான முருகனைப் போல் இருக்கும் உக்கிரவர்மனுக்கு உன் பெண்ணை மணம் முடிப்பாயாக என்று கூறினார். இதனைக் கேட்ட சோமசேகரன் விழித்து எழுந்தான். இறைவனின் ஆணையை நிறைவேற்ற விடியலுக்காக காத்திருந்தான். பின் விடிந்ததும் நித்திய கடமைகளை முடித்து தன் சுற்றத்தார் மற்றும் மகளுடன் மதுரையை நோக்கிச் சென்றான். முந்தைய நாளில் முடிவு செய்தபடி அமைச்சர்கள் சுந்தரபாண்டியரின் உறவினர்களோடு மதுரையிலிருந்து மணவூரை நோக்கிப் புறப்பட்டனர். வழியில் எதிர்ப்பட்ட சோமசேகரனைக் கண்டு உன்னுடைய புதல்வியை முருகக்கடவுளைப் போன்ற உக்கிரவர்மனுக்கு மணம் முடித்துக் கொடுப்பாயாக என்று கேட்டனர். சோமசேகரனும் சொக்கநாதரின் கட்டளையும் அதுவே. ஆகையால்தான் என்னுடைய மகளையும் அழைத்துக் கொண்டு மதுரையை நோக்கி வருகிறேன் என்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான். அமைச்சர்கள் திருமணத்திற்கான சோமசேகரனின் சம்மதத்தை சுந்தரபாண்டியனாருக்கு தெரிவித்தனர்.

சோமசேகர மன்னன் காந்திமதி மற்றும் சுற்றத்தாரை அழைத்துக் கொண்டு சுந்தரபாண்டியனாரின் அமைச்சர்கள் மதுரையை அடைந்தனர். சோமசுந்தரரும் பெண் வீட்டாரை எதிர்கொண்டு அழைத்து அரண்மனை ஒன்றில் தங்க வைத்தார். பின்னர் அமைச்சர்கள் அனைவரும் கூடி திருமணநாளை நிச்சயித்தனர். மற்ற அரசர்களுக்கு திருமண ஓலையை அனுப்பினர். மதுரை மக்களுக்கு திருமண முரசினை அறிவித்து திருமணச் சேதியை அறிவித்தனர். மதுரை மக்கள் உக்கிரவர்மனின் திருமணத்திற்காக வாழை மரங்கள் மற்றும் கமுகு மரங்களைக் கொண்டு தோரணங்கள் கட்டி தங்கள் வீட்டினையும் மதுரை நகரினையும் அழகுபடுத்தினர். உக்கிரவர்மனின் திருமணத்திற்கு மன்னர்கள் தேவர்கள் முனிவர்கள் தவசிகள் உள்ளிட்டோர் மதுரைக்கு வருகை தந்தனர். தேவர்களின் குருவான வியாழபகவானும் காந்திமதி சமுத்திரிகா லட்சணம் நிறைந்த‌ பெண் என்று பெருமையாகக் கூறினார். உக்கிரவர்மன் திருமண நாளன்று வைகை ஆற்றின் நீரில் நீராடி மணமகனாக அலங்காரம் செய்து கொண்டு மணமேடையை அடைந்தார். காந்திமதியையும் மணப்பெண்ணாக அலங்கரித்து உக்கிரவர்மனின் அருகில் அமரச் செய்தனர். சோமசேகரப் பாண்டியன் தனது பெண்ணை உக்கிரவர்மனுக்கு தாரை வார்த்து கொடுத்து பல பரிசுப் பொருட்களையும் வழங்கினான். இவ்வாறாக உக்கிரவர்மன் காந்திமதி திருமணம் இனிது நடைபெற்றது. அறுசுவை உணவுகள் திருமணத்திற்கு வருகை புரிந்தோர்களுக்கு திருமண விருந்தாக வழங்கப்பட்டது. திருமணத்திற்கு வருகை புரிந்தவர்கள் சுந்தரபாண்டியனாரையும் தடாதகையையும் வணங்கி விடைபெற்றனர்.

ஒரு நாள் சுந்தரபாண்டியனார் உக்கிரவர்மனை அழைத்து மகனே உனக்கு இந்திரனும் கடல் அரசனும் பெரும் பகைவர்களாக வருவார்கள். இந்திரனால் ஆபத்து வரும்போது அவனுடைய முடி சிதறும் வண்ணம் இந்த வளையினைக் கொண்டு எறிவாயாக. கடலரசன் மதுரையை அழிக்க வரும் போது இந்த வேலை எறிந்து அவனைத் தடுப்பாயாக. மேருவின் செருக்கினை அழிக்க இந்த செண்டினால் அடிப்பாயாக என்று கூறி மூன்று படைக் கருவிகளை உக்கிரவர்மனுக்கு அருளினார். உக்கிரவர்மனும் தன் தந்தையை வணங்கி அப்படைக்கலன்களைப் பெற்றுக் கொண்டான். பின்னர் உக்கிரவர்மனுக்கு அரசனாக முடிசூட்டிய சுந்தரபாண்டியனார் வாய்மை வழியே நின்று சிறப்பான முறையில் ஆட்சி செய் என்று கூறி ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைந்தார். அன்றிலிருந்து உக்கிரவர்மன் உக்கிரபாண்டியன் என்று அழைக்கப்பட்டான். பின்னர் சுந்தரபாண்டியனார் தன்னைச் சுற்றி இருந்த சிவகணங்களுக்கு முந்தைய வடிவத்தினைக் கொடுத்து தடாதகையுடன் மதுரை திருக்கோயிலினுள் சென்று சுந்தரேஸ்வரராகவும் மீனாட்சி அம்மனாகவும் எழுந்தருளினார்கள். உக்கிரபாண்டியனார் சிறப்புடன் ஆட்சி புரிந்து வந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

பிள்ளைகளைப் பெற்று நல்வழியில் வளர்த்து நல்ல குணங்களை கற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு வேண்டிய பொருளாதாரத்தை நல்வழியில் ஈட்டச் செய்து நல்ல மண வாழ்க்கையையும் அமைத்து தருவது பெற்றோரின் கடமை என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 430

தேவராய ஸ்வாமிகள் இயற்றிய சத்ருசம்ஹார வேல் பதிகம் பற்றி:

இறைவனின் கருணையாலே சத்ரு சம்ஹார த்ரிசதியை ஓது என்று யாங்கள் கூறுவோம். பலமான எதிர்ப்புகளும் எதிரிகளின் தொல்லையும் எங்கிருந்து வருகிறது? இவன் பாவ கர்மாவில் இருந்துதானே வருகிறது. எனவே பாவங்களை குறைத்துக் கொள்ள கூறப்படுகின்ற வழிபாடுகளில் இதும் ஒன்று. அதைப் போல இன்னவன் வினவிட்ட அன்னவன் (தேவராய ஸ்வாமிகள்) கூறிய அதும் நல்விதமான மாற்றத்தை மனித மனதிலே ஏற்படுத்தும். எதிர்ப்பு வெளியில் இருந்து வந்தாலும் இவன் மனம் பக்குவம் அடைந்து விட்டால் எதிர்ப்புகள் குறைந்து விடும். அதற்கு முதலில் இந்த வழிபாடு உதவும். மனம் சாந்தமடையத்தான் இந்த வழிபாடுகள். இதைப்போல சுதர்சன வழிபாட்டையும் செய்யலாம்.

பாம்பன் ஸ்வாமிகளின் இதுபோல் நல்விதமாய் பகை கடிதலையும் ஓதலாம். இவை அனைத்துமே மனித மனதை பக்குவப்படுத்தவும் மனம் பக்குவமடைய பக்குவமடைய அவனுக்கு வரும் எதிர்ப்பை மிக லாவகமாக எப்படி கையாள்வது? என்ற அறிவையும் இந்த வழிபாடு அவனுக்கு சொல்லித்தரும். எனவேதான் இந்த வழிபாட்டை யாங்கள் கூறுகிறோம். சிலர் எண்ணுவதுபோல இந்த வழிபாடுகளையெல்லாம் கூறினால் எதிரிகள் ஒழிந்து விடுவார்கள். எதிரிகள் தோற்று ஓடி விடுவார்கள். எதிரிகள் எங்கோ பதுங்கி விடுவார்கள் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம். ஒரு நல்ல மனிதனுக்கு முன்வினையின் பயனாக எதிரிகளும் எதிர்ப்பும் வந்தால் அதனை அந்த வினைகள் வழியாக சென்று தீர்த்துக் கொள்ள உதவக் கூடிய வழி முறைகளில் இதும் ஒன்று.

11. உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம் நூலின் பதினொன்றாவது படலமாகும்.

இறைவனான சுந்தரபாண்டியனார் காஞ்சன மாலை மற்றும் மலயத்துவசனுக்கு வீடுபேற்றினை அளித்தார். இறைவியான தடாதகை பாண்டியவ வம்சத்தை தழைக்கச் செய்ய மகவு ஒன்றினை பெற விரும்பினார். இதனை அறிந்த சுந்தர பாண்டியனார் தமிழ் கடவுளான முருகப் பெருமானை தடாகையின் வயிற்றில் தோன்றச் செய்தார். அம்மையாரும் கர்ப்பவதியானார். தடாகையின் கர்ப்பம் குறித்து அறிந்த மதுரை மக்கள் தங்களின் எதிர்கால மன்னனின் வரவை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தடாகை கர்ப்பவதியானதைக் கொண்டாட மதுரை நகரமே திருவிழா பூண்டது. கர்ப்பவதியான தடாகைக்கு குங்குமப்பூ கலந்த பால் பழங்கள் உள்ளிட்ட அவர் விரும்பிய பொருட்களை எல்லாம் உண்ணக் கொடுத்தனர். ஆன்மீகக் கதைகள் பாடல்கள் போதனைகள் தத்துவங்கள் உள்ளிட்ட இறைசிந்தனை மிக்கவற்றை தடாகையைக் கேட்கச் செய்தனர். கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு விழாவும் தடாகைக்கு நடத்தப்பட்டது.

கர்ப்பவதியான தடாகைக்கு திங்கட்கிழமையும் திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நாள் ஒன்றில் ஆண்மகவினைப் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்ததும் சுந்தரப்பாண்டியர் பொன்னும் மணியும் ஆடை ஆபரணங்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் அள்ளி வழங்கினார். தடாகையின் குழந்தையைப் பார்க்க திருமால் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் மதுரைக்கு வந்து வாழ்த்துக்களை வணங்கினர். மதுரை மாநகர மக்கள் தங்களின் இளவரசரின் வரவினை எண்ணி மகிழ்ந்தனர். வீடுகள் தெருக்கள் உள்ளிட்டவைகளை அலங்கரித்து விழாக்கள் கொண்டாடினர். பின்னர் அக்குழந்தைக்கு உக்கிரவர்மன் எனப் பெயரிட்டனர். நான்காம் மாதத்தில் குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். ஆறாம் மாதத்தில் குழந்தைக்கு அன்னம் ஊட்டினர். பதின்மூன்றாம் மாதத்தில் மயிர்வினை முடித்தனர். தேவகுருவாகிய வியாழ பகவான் வேதம் முதலிய கலைகளையும் வில் பயிற்சியையும் வாள் பயிற்சியையும் யானை ஏற்றம் குதிரை ஏற்றம் முதலியவற்றை உக்கிரவர்மனுக்கு கற்பித்தார். பாசுபதப் படைப்பயிற்சி இறைவனான சுந்தர பாண்டியரே உக்கிரவர்மனுக்கு கற்றுக் கொடுத்தார். பல விதமான படைப் பயிற்சியையும் வீர விளையாட்டுகளையும் கற்றுத் தேர்ந்த உக்கிரவர்மன் காளைப்பருவத்தை அடைந்தார்.

அவர் காளைப்பருவத்தில் முப்பத்திரெண்டு இலட்சணங்களும் பொருந்தி சிறந்த நற்குணம் உடையவராக திகழ்ந்தார். மகனுடைய போர் திறனும் சாதுர்யத்தையும் கண்ட சுந்தரபாண்டியனார் இவன் பூமண்டலம் முழுவதும் அரசாள‌ வல்லவன் என்று எண்ணினார். உக்கிரவர்மனுக்கு திருமுடி சூட்டுவதா? மணம் முடிப்பதா? என தடாதகை பிராட்டியாரும் சுந்தரபாண்டியனாரும் மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்து திருமணம் செய்வது என்று முடிவு செய்து திருமணத்திற்கு பெண் பார்க்கத் தொடங்கினர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் நல்லவைகளை பார்க்க வேண்டும் நல்லவைகளை கேட்க வேண்டும் அப்போது நல்ல குழந்தைகளைப் பெறலாம் என்பதே அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 429

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

ஆழ்வார்களின் பாடல்கள் அனைத்துமே உயர்ந்ததப்பா. அத்தனையும் தீந்தமிழ் சுவை. ஆண்டாளின் அத்தனை பாடல்களுமே சிறப்பு அப்பா. அதிலே ஒன்றில்

வியாழன் உறங்கி வெள்ளி முளைத்தது என்ற சொற்றொடர் வரும்.

யோசித்து பார்க்க வேண்டும். குரு அஸ்தமனமானால் அங்கே சுக்கிரன் உதிக்கும். ஆக உலக ஞானம் தலை தூக்கி விட்டால் பர ஞானம் என்பது மறைந்து விடும். ஞானகுரு மறைந்த இடத்திலே உலக இச்சைகள் தலை தூக்கும் என்ற பொருளும் அதுபோல் குருவாகிய கிரகம் மறைய சுக்கிரன் மேலே எழுந்தது என்ற ஒரு பொருளும் உண்டு. குரு மறைய சுக்கிரன் தோன்ற வேண்டுமென்றால் எத்தனையோ நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். இதை ஜோதிட கலைஞர்கள் கணித்துப் பார்த்தால் ஆண்டாளின் காலம் என்ன? என்பதை கண்டுபிடித்து விடலாம்.