வேணுகோபாலன்

கிருஷ்ணரின் மிக நுட்பமான சிற்பம். கூர்ந்து கவனித்தால் தெரியும். பிரபாவளியில் விஷ்ணுவின் அனைத்து 10 அவதாரங்களும் செதுக்கப்பட்டுள்ளன. 1000 ஆண்டுகள் பழமையான சிற்பம். இடம் லட்சுமி நரசிம்மர் கோவில் ஹரனஹள்ளி ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

இரட்டைக் கோயில்

ஸ்ரீ மல்லிகார்ஜுனா கோவில் மற்றும் ஸ்ரீ மல்ல கோவில் என்ற இரட்டைக் கோயில்கள் ஒன்றாக இருக்கிறது. இக்கோயில் அசலேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு முக்கிய கோவில்கள் மற்றும் மூன்று சிறிய மண்டபங்கள் உள்ளன. இந்த இரட்டைக் கோயிலின் இரண்டு கர்ப்ப கிரகங்களுக்கும் பொதுவான மண்டம் உள்ளது. மண்டபத்தின் வடக்கிலும் தெற்கிலும் நுழை வாயில்கள் உள்ளன. கிழக்கு சன்னதியின் உள்ளே சிவலிங்கம் உள்ளது. ஒரு பெரிய நந்தி கிழக்கு சன்னதிக்கு எதிரே உள்ளது. கிழக்கு சன்னதி இரண்டிலும் முதன்மையானதாக இருக்கிறது. மேற்கு சன்னதி தற்போது காலியாக உள்ளது. இந்தக் கோயில் கிபி 1054 இல் கட்டப்பட்டது. அனந்தசயனா விஷ்ணுவின் சிற்பம் உள்ளது. கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் சுடி. இக்கோயில் கல்வெட்டுகளில் சுண்டி என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

சதுர்புஜ மகாவிஷ்ணு

ஹரியும் சிவனும் வேறில்லை என்பதை உணர்த்தும் விதமாக ஆவுடையார் மீது அமர்ந்திருக்கும் பெரிய திருவடியான கருடன் மேல் சங்கு சக்கரம் கதம் ஏந்திய வண்ணம் சதுர்புஜ மகாவிஷ்ணு அமர்ந்துள்ளார். இடம் சங்கு நாராயணன் கோவில் பக்தபூர் மாவட்டம். காத்மாண்டு நேபாளம்.

அனுமன்

சோழர் காலத்தைச் சேர்ந்த வாயு புத்திரன் அனுமனின் செப்புத் திருமேனி. வானர குலத்தைச் சேர்ந்த மன்னன் சுக்ரீவனின் ஆலோசகர் அனுமன். தென்னிந்தியாவின் சோழ சாம்ராஜ்யத்தை சேர்ந்த இந்த அனுமனின் கலைநயமிக்க சிற்பம் தற்போது அமெரிக்காவில் உள்ள தி மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் இல் உள்ளது. காலம் 11ஆம் நூற்றாண்டு.

ஜடாயுவை சந்திக்கும் ராமர் லட்சுமணர்

ஹரியானா மாநிலம் பெஹோவா குர்க்ஷேத்ராவிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 4 – 5 ஆம் நூற்றாண்டு குப்தர் காலத்தைச் சேர்ந்த இராமாயண இதிகாசத்தின் ஒரு பகுதியாக ஜடாயுவை சந்திக்கும் ராமர் மற்றும் லட்சுமணரின் சிற்பம். தற்போது ஹரியானா மாநில தொல்லியல் துறையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதியேந்திர விஷ்ணு குடைவரை கோயில்

நாமக்கல் மலையின் கிழக்கு பக்கம் ஒரு குகைக் கோயில் உள்ளது. இம்மலையின் பாதி வழியில் வடபால் அனந்தாச்சாரி விஷ்ணு குகை இருக்கிறது. இக்குகைக் கோயிலில் வாமன அவதாரமும் கேவல நரசிம்மன், விக்கிரம அவதாரம், சங்கர நரசிம்ம அவதாரம் முதலிய சிற்பங்கள் சிறந்த வேலைப்பாட்டுடன் விளங்குகின்றன. இங்கு பெருமாள் கார்கோடகன் என்னும் திருநாமத்தில் தெற்கில் தலையும் வடக்கே கால் நீட்டியும் பள்ளிகொண்டு திருச்சேவை சாதிக்கிறார்.

லட்சுமணன்

ராமர் சீதை மற்றும் லட்சுமணன் வனவாசத்தின் போது லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை வெட்டும் சிற்பமானது 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டு குப்தர் காலத்தைச் சேர்ந்த ஆதிவராக கோவிலில் சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு தற்போது டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

வேணுகோபால்

பத்து முதல் பதினான்காம் ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் இன்றைய கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய ஹொய்சாளர்களின் ஆட்சியின் போது பல கோயில்கள் கட்டப்பட்டது. இதில் ஒன்று மைசூர் அருகே உள்ள சோமநாதபுராவில் உள்ள 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கேசவா கோயில் உள்ளது. இக்கோயிலில் புல்லாங்குழல் வாசிக்கும் வேணுகோபாலனின் சிற்பம் உள்ளது.

கருடாழ்வார்

பாம்புகளுடன் கூடிய தலை மற்றும் கைக்கவசத்துடன் அஞ்சலி முத்திரையில் 11ஆம் நூற்றாண்டு கருடாழ்வாரின் சிதிலமடைந்த சிற்பம். இடம் இந்திய அருங்காட்சியகம். மேற்குவங்காளம் கொல்கத்தா.