ராமாயணம் பால காண்டம் பகுதி -20

வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டான் சத்தியவிரதன். ஆனால் மேலும் பசுவை கொன்று தின்றதால் ஏற்பட்ட பாவத்தால் மேலும் பல பிறவிகள் எடுப்பாய் என்று சாபமிட்டு சென்று விட்டார் வசிஷ்டர். வசிஷ்டரின் கொடுத்த சாபத்தினால் சத்தியவிரதன் சாம்பல் பூசப்பட்ட உடலுடன் இரும்பு அணிகலன்களும் கருப்பு ஆடை அணிந்து திரிசங்கு என்ற பெயரில் உருமாறினான். பின்பு விஸ்வாமித்திரரின் குடும்பத்தினரைச் சந்தித்து வசிஷ்டர் தனக்கு அளித்த சாபம் பற்றி கூறி அதன் பிறகும் அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தேடிக் கொண்டு வந்து கொடுத்து அந்தக் குடும்பத்தினரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். இந்நிலையில் விஸ்வாமித்திரர் தனது கடுமையான தவத்தால் பல வரங்களைப் பெற்றுத் திரும்பினார். அப்போது அவருக்கு பஞ்சத்தால் தன் குடும்பம் அடைந்த கஷ்டமும் சத்தியவிரதன் உதவி செய்ததும் அவனுக்கு சாபம் கிடைத்ததும் தெரியவந்தது. விஸ்வாமித்திரர் சத்தியவிரதனிடம் வசிஷ்டர் கொடுத்த சாபத்திலிருந்து உன்னை என்னால் விடுவிக்க முடியாது. ஆனால் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியை என்னால் காட்ட முடியும் என்றார்.

சத்தியவிரதனோ வசிஷ்டரின் சாபத்திலிருந்து விடுபடுவதை விட எனக்கு இன்னொரு ஆசை இருக்கிறது. தாங்கள்தான் எனது ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்றான். வசிஷ்டர் எனக்குச் சாபம் கொடுப்பதற்கு முன் நான் பசுவைக் கொன்று தின்றதால் ஏற்பட்ட பாவத்தால் இந்தப் பிறவியில் சொர்க்கம் செல்ல முடியாது என்றும் பசுவைக் கொன்று தின்ற பாவத்திற்கு நான் இன்னும் பல பிறவிகள் எடுக்கவேண்டும் என்றும் சொன்னார். எனக்கு இந்தப் பிறவியிலேயே மானிட உடலுடன் சொர்க்கம் செல்ல வேண்டும் என்று விருப்பம். என் ஆசையை நிறைவேற்றி வையுங்கள் என்று சொல்லி விஸ்வாமித்திரரை வணங்கினான். வசிஷ்ட முனிவர் மீது பொறாமை கொண்டிருந்த விசுவாமித்திரர் சத்தியவிரதா நான் செய்த தவ வலிமையால் பெற்ற வரங்களைக் கொண்டு உன் விருப்பப்படி இந்த உடலுடனே உன்னை சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அதற்கான வேள்வியைத் தொடங்கினார்.

விசுவாமித்திரர் செய்த வேள்வியின் பலனால் திரிசங்கு என்று பெயர் பெற்ற சத்தியவிரதன் விண்ணை நோக்கிச் செல்லத் தொடங்கினான். மானுட உடலுடன் ஒருவன் சொர்க்கம் நோக்கி வருவதைக் கண்ட வானவர்கள் இந்திரனிடம் தகவல் தெரிவித்தனர். இந்திரன் பூமியிலிருந்து மேலெழும்பி வந்து கொண்டிருந்த திரிசங்குவை வழியில் தடுத்து நிறுத்தினான். பின்னர் அவன் திரிசங்குவிடம் மானுட உடலுடன் ஒருவர் சொர்க்கலோகம் வருவது சரியான செயல் இல்லை. நீ பூலோகத்திற்குத் திரும்பிச் சென்று விடு என்று எச்சரித்தான். ஆனால் திரிசங்கு விஸ்வாமித்திரர் இருக்கும் தைரியத்தில் இந்திரனின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் முன்னேறிச் சென்று கொண்டிருந்தான். இதைக் கண்டு கோபமடைந்த இந்திரன் திரிசங்கை எட்டி உதைத்தான். மறு நிமிடம் திரிசங்கு தலைகுப்புற கவிழ்ந்து பூமியை நோக்கி செல்லத் தொடங்கினான். பயத்தில் திரிசங்கு விஸ்வாமித்திரரே என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான். விஸ்வாமித்திரர் உடனடியாக திரிசங்குவை வான் வெளியிலேயே நிற்கவைத்தார். பின்னர் திரிசங்கு உனக்காக நான் நீ தற்போது இருக்கும் இடத்திலேயே ஒரு சொர்க்கத்தை உருவாக்குகிறேன் என்று கூறி வேறொரு சப்தரிஷி மண்டலம் நட்சத்திரங்கள் முதலியவற்றை சிருஷ்டித்து புதிதாக தேவர்களையும் சிருஷ்டி செய்யப் போவதாக அறிவித்தார் விஸ்வாமித்ரர்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -19

பிரம்ம ரிஷி பட்டத்தை பெற்ற விஸ்வாமித்திரருக்கு வசிஷ்ட மகரிஷி தன்னை பிரம்மரிஷியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தன் வாயால் பிரம்ம ரிஷி விஸ்வாமித்ரர் என்று அழைக்கவேண்டும் என்ற வெறியும் அவர் மனதில் இருந்தது. இதனை தன் சுய அறிவினால் பெற்றுவிட முடியும் என்று தன் சத்திரிய குல அரச குணத்தால் அவரின் தவ வலிமைகள் எல்லாம் அவரின் சுய ஆசாபாசங்களுக்காக பயன்படுத்தினார். விஸ்வாமித்திரை சிறந்த பிரம்ம குல ரிஷியாக மாற்ற இந்திரனுக்கு ஆணையிட்டார் பிரம்மா. இந்திரன் தன் சபையில் உள்ள சிறந்த அழகியும் அறிவில் சிறந்தவளுமான மேனகையை அனுப்பினான்.

மேனகை அவர் புத்தி எனும் இரண்டாம் நிலையிலிருந்து மேல் நிலைக்கு செல்ல ஆக்ஞா சக்கரத்தை விஸ்வாமித்திரருக்கு வழங்க முயற்சித்தாள். விஸ்வாமித்திரர் மேனகையின் ஆக்ஞை சக்கரத்தை ஏற்றுக்கொள்ளத் தவறியதுடன் கீழ்நிலையான காமத்தில் லயித்துவிட்டார். அத்துடன் மேனகையை மனைவியாக ஆக்கிக்கொண்டார் விஸ்வாமித்திரர். இவர்கள் இருவருக்கும் சகுந்தலை என்ற மகள் பிறந்தாள். இப்போது உணர்வு நிலைக்கு வந்த விஸ்வாமித்ரர் தன் தவம் மேனகையால் கலைக்கப்பட்டதாலும் தன் தவ பலன்களை அனைத்தும் விரயமானதால் மேனகையை விசுவாமித்திரர் சபித்து மீண்டும் தவத்தில் ஈடுபட்டார். விஸ்வாமித்திரர் தனது மனைவி மக்களை விட்டுவிட்டு கடுந்தவம் செய்வதற்காகத் தனிமையான இடம் ஒன்றைத் தேடிச் சென்று விட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு கடுந்தவம் செய்த விஸ்வாமித்ரர் உண்ணாமல் மூச்சு விடுவதையும் கூட அறவே குறைத்து கடும் தவம் புரிந்தார்.

அப்போது நாட்டில் மழை பெய்யாமல் கடும் பஞ்சம் ஏற்பட்டது. விஸ்வாமித்ரரின் குடும்பத்தினருக்கு தேவையான உணவு கிடைக்காமல் அவர்கள் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர். விஸ்வாமித்திரரின் குடும்பத்தினர் பட்டினி கிடப்பதை அறிந்த சூரிய வம்சத்து மன்னர் திரியருனியின் மகன் சத்தியவிரதன் அந்தக் குடும்பத்திற்குத் தேவையான உணவினைத் தேடிக் கொண்டு போய்க் கொடுத்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். ஒருநாள் அவனுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. அப்போது வசிஷ்டர் வளர்த்து வந்த பசுக்களில் ஒன்று அவனின் கண்ணில் பட்டது. அந்தப் பசுவைத் திருடிக் கொண்டு சென்ற அவன் அதைக் கொன்று அதன் இறைச்சியை விசுவாமித்திரரின் மனைவி மக்களுக்குக் கொடுத்து தானும் சாப்பிட்டான்.

பசு காணாமல் போனதை அறிந்த வசிஷ்டர் நடந்ததை தனது ஞான திருஷ்டியால் கண்டறிந்தார். அவர் காட்டிற்குள் இருந்த சத்தியவிரதனைச் சந்தித்து பசுவைக் கொல்வது பாவம் அதை கொன்று இறைச்சியையும் சாப்பிட்டு மிகப்பெரிய பாவம் செய்து விட்டாய் என்றார். பசிக்கு உணவில்லாத போது பசு மட்டுமல்ல எதைக் கொன்று சாப்பிடுவதும் தவறில்லை உங்களுடைய அறிவுரை எதையும் கேட்க நான் தயாராக இல்லை என்றான் சத்தியவிரதன். கோபமடைந்த வசிஷ்டர் நல்லுரையைக் கேட்காதது பசுவைக் கொன்றது மற்றும் பசு இறைச்சியை உண்டது என்ற மூன்று பாவங்களுக்காக திரிசங்கு (மூன்று பாவங்களைச் செய்தவன்) என்ற பெயருடன் சண்டாளனாக விளங்குவாய் என்று சத்தியவிரதனுக்கு சாபம் கொடுத்தார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -18

வசிஷ்டரிடம் சென்ற கௌசிகன் தாங்கள் முற்றும் துறந்த முனிவர் தங்களுக்கு இந்த நந்தினி காமதேனு பசு தேவையில்லை. நாட்டை ஆளுகின்ற என்னிடம் இருப்பதே சரியானது. என்னிடம் இந்த பசு இருந்தால் நான் கேட்டதை பெற்று நாட்டிற்கு மேலும் நன்மை அளிக்க இயலும் ஆகவே இந்த பசுவை என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டார். வசிஷ்டர் கொடுக்க மறுத்துவிட்டார். தங்களுடைய இந்த ஒரு பசுவுக்கு இணையாக 1000 பசுக்களை கொடுக்கின்றேன் கொடுங்கள் என்று கேட்டார் கௌசிகன். ஆனால் வசிஷ்டர் மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த கௌசிகன் காமதேனு பசுவை பலவந்தமாக எடுத்துச்செல்ல முற்பட்டான். வசிஷ்டரின் தவபலனுக்கு முன்னால் தன் வலிமையால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன் படைகள் அனைத்தையும் அனுப்பி காமதேனு பசுவை எடுத்துச்செல்ல முற்பாட்டான். வசிஷ்டர் தன்னுடைய தண்டத்தை முன்னால் போட அனைத்து படைகளும் அழிந்து போனது.

அரசனின் படை பலம் அதிகார வலிமையை விட தவ பலனே அதிகம் என்பதை உணர்ந்தான் கௌசிகன். வசிஷ்டர் கௌசிக மன்னனிடம் பிரம்ம ரிஷிகளுக்கு மட்டுமே காமதேனு பசுக்கள் கட்டுப்படும் நீங்கள் பிரம்மரிஷியானால் காமதேனு பசுவை தருகிறேன் என்றார். தவம் செய்தாலும் சத்ரியனான தாங்கள் எளிதில் பிரம்மரிஷி பட்டம் வாங்க முடியாது என்று கூறினார். தவம் செய்து தன்னை வெற்றி கொண்ட வசிஷ்டரை போல் மிகப்பெரிய ரிஷியாக வேண்டும் என்றும் வசிஷ்டரே தன்னை பிரம்மமகரிஷி என்று அழைக்க வேண்டும் என்ற வேட்கை அவரிடம் அதிகரித்தது.

சத்ரிய குலத்தில் தோன்றியதால் தவ பலனை பெற்று அதிகாரத்தினாலே அனைத்தையும் பெற்று விடலாம் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. தன் சுய அறிவால் அனைத்தையும் பெற்று விட நினைத்தார் கௌசிகன். கௌசிகனும் அந்த பிரம்மரிஷி பட்டத்தை வாங்கி காட்டுவதாக சவால் விடுத்து ஒரு கள்ளி செடியின் முனையில் மேல் நின்று கடும் தவம் புரிந்தார். இதை கண்ட பார்வதிதேவி கௌசிகன் முன் தோன்றி விளக்கில் பஞ்சமுகமாக திரி போட்டு தீபம் ஏற்றினால் உன் தவம் சித்தியாகி பிரம்மரிஷி பட்டம் பெறலாம் என்று அறிவித்து மறைந்தாள்.

பஞ்சமுகமாக திரிவைத்து விளக்கேற்ற முனைந்தான் கௌசிகன். எவ்வளவு முயன்றும் அந்த திரிகள் எரியவில்லை. உடனே அந்த விளக்கில் தன் தலை இரண்டு கை மற்றும் கால்கள் இவை ஐந்தையும் வைத்து அந்த விளக்கை ஒரு மந்திரம் ஓதி எரிய வைத்தான் கௌசிகன். தனது உடலையே திரியாக்கி தீபம் ஏற்றி தவம் செய்வதை கண்ட சிவசக்தியர் கௌசிகனுக்கு தரிசனம் கொடுத்தார்கள். தனது உடலை திரியாக்கி தீபம் ஏற்றி தவம் செய்த போது கௌசிக மன்னன் தான் அறிந்த நன்கு வேதத்தின் சாரமாக ஒரு மந்திரம் இயற்றி அதனை சிவசக்திக்கு உச்சாடனம் செய்தார். மந்திரத்திற்காக தன் உடலையே (காயத்தை) திரியாக்கி உச்சாடனம் செய்து வரம் பெற்றதால் அந்த மந்திரம் காயத்ரி மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. கௌசிகன் மன்னன்
தன் தவத்தினால் காயத்ரீ மந்திரத்தை உலகிற்கு அளித்தார். விஸ்வம் என்றால் உலகம் மித்ரர் என்றால் நண்பன் உலகத்தின் நண்பன் என்ற பொருளில் சிவசக்தியர் கௌசிகனை விஸ்வாமித்திரர் என்று அழைத்து பிரம்மரிஷி பட்டத்தையும் வழங்கினார்கள்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -17

ரீசிக முனிவரிடம் இரண்டு பிரசாதங்களையும் வாங்கிக்கொண்டு சத்யவதி தன் தாயை சந்திக்க சென்றாள். நடந்த அனைத்தையும் தன் தாயிடம் தெரிவித்தாள். சில நொடிகள் யோசித்த சத்யவதியின் தாய் நான் ஒன்று சொன்னால் நீ வருத்தப்படக்கூடாது சத்யவதி பொதுவாக எல்லா தந்தைகளும் தன் மகன் தான் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். ஆகையால் நீ சாப்பிட வேண்டும் என்று உன் கணவர் கூறிய அந்த பிரசாதத்திற்கு தான் சக்தி அதிகமாக இருக்கும். ஆகையால் அதை நீ எனக்கு கொடுத்துவிட்டு எனக்காக கொடுத்ததை நீ சாப்பிடு. மரத்தையும் அதற்கேற்றாற் போல நாம் மாற்றி சுற்றிக்கொள்வோம். எனக்கு பிறக்கப்போகும் உன்னுடைய சகோதரனுக்காகவும் இந்நாட்டின் எதிர்கால அரசனுக்காகவும் இதை நீ செய்வாயா என்றார். சத்யவதியும் சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி என்று கூறிவிட்டாள். அதன் பிறகு பிரசாதத்தை இருவரும் மாற்றி சாப்பிட்டு விட்டு மரத்தையும் மாற்றி சுற்றினர்.

சில நாட்களில் சத்யவதியும் அவள் தாயும் கர்ப்பம் அடைந்தனர். சத்யவதியின் உருவ மாற்றத்தை கவனித்த முனிவர் பிரசாதம் உண்பதில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்பதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். பெரும் தவறு செய்துவிட்டாயே சத்தியவதி நான் ஒரு அந்தணன் என்பதால் உனக்கு பிறகும் குழந்தை அந்தணனாக இருக்கவேண்டும் என்றும் உன் தந்தை சத்ரியன் என்பதால் உன் தாய்க்கு பிறகும் குழந்தை சத்ரியனாக இருக்கவேண்டும் என்று நான் பிரசாதம் அளித்தேன். இப்போது நீங்கள் இருவரும் பிரசாதத்தை மாற்றி சாப்பிட்டதால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை அந்தணனுக்கு உரிய குணத்தோடு எப்போதும் தவம் செய்துகொண்டிருக்க விரும்புவான். உனக்கு பிறக்கப்போகும் குழந்தையோ போர் குணத்தோடும் அனைவரையும் கொன்று குவிக்கும் வலிமையோடும் பிறக்கப்போகிறான் என்றார். இதை கேட்டு அதிர்ந்த சத்யவதி நான் செய்த தவறை மன்னித்து இதை எப்படியாவது மாற்றுங்கள் சுவாமி என கதறி அழுதாள்.

மனம் மாறிய முனிவர் ஒரே ஒரு வழி இருக்கிறது. உனக்கு பிறக்கும் குழந்தை அந்தணனாக பிறப்பான். ஆனால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை சத்ரியனாக பிறந்தாலும் சில காலத்திற்கு பிறகு அவன் அந்தணன் போல மாறிவிடுவான் என்று கூறி அதற்கான வரத்தையும் அளித்தார். அதன்படி சத்யவதிக்கு பிறந்த குழந்தையே பிற்காலத்தில் ஜமதக்னி முனிவர் என்றழைக்கப்பட்டார். அவளின் தாய்க்கு பிறந்த குழந்தை தான் அரசனாக இருந்து பின் முனிவராக மாறிய விசுவாமித்திரர் ஆவார். அவருக்கு கௌசிகன் என்று பெயர் வைத்தார்கள். தனது தந்தைக்கு பிறகு அரசனான கௌசிகன் ஒரு நாள் காட்டிற்கு தன் படை பலத்துடன் வேட்டையாட சென்றார். காட்டில் இருந்த வசிஷ்டரின் ஆசிரமத்தை கண்ட கௌசிகன் அங்கு சென்றார். வந்த அனைவரையும் வரவேற்ற வசிஷ்டர் அனைவருக்கும் உணவு கொடுத்து உபசரித்தார். தனிமையில் காட்டில் இருக்கும் ஒரு முனிவரால் உடனடியாக இவ்வளவு பெரிய படைக்கு எப்படி உணவு இவரால் கொடுக்க முடிந்தது என்று கௌசிகன் ஆச்சரிப்பட்டு தெரிந்து கொள்ள முயற்சித்தான். வசிஷ்டரிடம் இருந்த கேட்டதை கொடுக்கும் நந்தினி என்னும் காமதேனு பசுவால் வசிஷ்டர் அனைவருக்கும் விருந்தளித்தார் என்பதை தெரிந்து கொண்டு வசிஷ்டரிடம் இருந்து நந்தினி காமதேனு பசுவை எப்படியாவது கொண்டு சென்றுவிடவேண்டும் என்று எண்ணினார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -16

குசநாபர் காதி என்றொரு அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு அழகிய மகள் இருந்தாள் அவள் பெயர் சத்யவதி. அவளை நல்ல வசதியான ஒரு இடத்தில் மணம் முடித்து தரவேண்டும் என்று விரும்பினான் காதி. அதற்கான வேலைகளிலும் அவன் தீவிரமாக இறங்கினான். அந்த சமயம் அரசனை தேடி அரண்மனைக்கு வந்த ரிசீகர் என்ற முனிவர் சத்யவதியின் நர்குணங்களை கண்டு வியந்தார். அவளை மனம் முடிக்கவேண்டும் என்று விரும்பினார். தன்னுடைய ஆசையை அவர் அரசனிடம் தெரிவித்தார். இதை கேட்ட அரசனுக்கு என்னசொல்வதென்றே தெரியவில்லை. முடியாது என்று சொன்னால் முனிவரின் சாபத்திற்கு ஆளாகிவிடுவோம் என்று எண்ணினான். முனிவரை எப்படியாது தட்டி கழிக்க வேண்டும் என்று முனிவரிடம் எனக்கு உங்களிடம் சிறிய வேண்டுகோள் உள்ளது. அதை நீங்கள் நிறைவேற்றினால் என் மகளை உங்களுக்கு மணம் முடித்து தருகிறேன் என்றான் அரசன். அது என்ன வேண்டுகோள் என்றார் முனிவர். ஒரு காது கருப்பாகவும் உடல் முழுவதும் வெள்ளையாகவும் உள்ள 1000 குதிரைகளை நீங்கள் எனக்கு தரவேண்டும் என்றான். அரசனின் வேண்டுகோளை ஏற்று குதிரைகளோடு வருவதாகக் கூறி சென்றார் முனிவர். இது போன்ற 1000 குதிரைகளை முனிவர் எங்கு தேடி கண்டுபிடிப்பார். அவரால் அதை தரவே முடியாது. ஆகையால் அவர் சத்தியவதியை மணக்கும் விருப்பத்தை விட்டுவிடுவார் என்று நினைத்தான் அரசன்.

அரசனின் வேண்டுகோளை பூர்த்திசெய்ய முனிவர் வருணபகவானிடம் வேண்டினார். வருணபகவானும் அவர் கேட்டதுபோல 1000 குதிரைகளை தந்தருளினார். அதை அரசனிடம் ஒப்படைத்தார் முனிவர். இப்போது அரசனுக்கு வேறு வழி இல்லை. ஆகையால் தன் மகளை ரிசீகர் முனிவருக்கு மனம் முடித்து கொடுத்தார். ரிசீகரும் சத்யவதியும் நல்ல ஒரு தம்பதிகளாகவே வாழ்ந்துவந்தனர். ஒருநாள் ரிசீகர் சத்யவதியை அழைத்து நான் உனக்கு ஒரு வரம் தர ஆசைப்படுகிறேன் என்ன வேண்டுமோ கேள் என்றார். நான் எனக்கான வரத்தை இன்னொரு நாள் கேட்கிறேன் என்றாள் சத்யவதி. ரிசீகரும் அதற்கு சம்மதித்தார். ஒருநாள் சத்யவதி தன் தாய் வீட்டிற்கு சென்றாள். அங்கு தாயும் மகளும் அனைத்து விஷயங்களை பற்றியும் பேசினர். அப்போது சத்யவதி தன் கணவர் தனக்களித்த வரம் குறித்து தன் தாயிடம் தெரிவித்த அவள் உங்களுக்கு ஏதாவது ஆசை இருந்தால் கூறுங்கள் அம்மா நான் அதை என் கணவரிடம் கேட்கிறேன் என்றாள் சத்யவதி. உடனே அந்த தாய் இந்த நாட்டை ஆள்வதற்கு தனக்கொரு ஆண் மகன் பிறந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினாள். சில மணி நேரங்களுக்கு பிறகு சத்யவதி தன் தாய் வீட்டில் இருந்து புறப்பட்டு தன் இல்லத்தை அடைந்தாள்.

ரிசீக முனிவரிடம் தனக்கான வரம் குறித்த பேச்சை தொடங்கினாள் சத்யவதி. முனிவரும் என்ன வரம் வேண்டும் கேள் என்றார். சுவாமி எனக்கொரு மகன் வேண்டும் என் தாய்க்கும் ஒரு மகன் வேண்டும் என்றாள் சத்யவதி. அப்படியே ஆகட்டும் என்று கூறிய முனிவர் சில மணி நேரம் தியானத்தில் அமர்ந்தார். பின் இரு பிரசாதங்களை அவர் சத்யவதியிடம் கொடுத்தார். ஒரு பிரசாதத்தை குறிப்பிட்டு இதை நீ உண்ணவேண்டும் மற்றொன்றை உன் அன்னை உண்ணவேண்டும். அடுத்த நாள் இருவரும் குளித்து விட்டு நீ அத்தி மரத்தையும் உன் தாய் அரச மரத்தையும் சுற்ற வேண்டும் என்றார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -15

கௌதம மகரிஷி அகலிகையின் உபசரிப்பை ஏற்றுக்கொண்ட பின் ராமர் லட்சுமனனுடன் விஸ்வாமித்ரர் தனது சீடர்களுடன் கிளம்பி மிதிலையை அடைந்தார்கள். மிதிலையில் ஜனகரின் மாளிகை வழியே சென்ற போது சீதை மாளிகையின் மாடத்தில் நின்று கொண்டிருந்தாள். ராமர் செல்வதை சீதையும் சீதை மாடத்தில் இருப்பதை ராமரும் பார்த்துக்கொண்டார்கள். பார்த்த உடனே சீதை ராமரின் தோளகை கண்டு ஒவியம் போல் திகைத்து நின்றாள். ராமரும் சீதையின் அழகில் மயங்கினார். பார்த்த உடனே ஒருவரை ஒருவர் மனதால் கவரப்பட்டு ராமரின் உள்ளத்தில் சீதையும் சீதையின் உள்ளத்தில் ராமரும் புகுந்தனர். விஸ்வாமித்ரருடன் மாளிகையை கடந்த ராமர் அவளின் கண்களில் இருந்து மறைந்தார். இவரை தான் மணக்க வேண்டும். அதற்கு சிவதனுசு தடையைக இருக்கிறதே. இவரை மணந்து இவர் தூணைவனாக வந்தால் காட்டில் இவருடன் வாழ்வதாக இருந்தாலும் பரவாயில்லை அதற்கும் தான் தயாராக இருப்பதாக எண்ணிக்கொண்டாள் சீதை.

மிதிலையில் யாகம் செய்வதற்காக பரந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர்களின் அந்தஸ்திற்கு ஏற்ப தங்கும் இடங்கள் கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தது. விஸ்வாமித்ரரும் அவரது கூட்டத்தினரும் ராம லட்சுமனனுடன் முகாமிற்கு உள்ளே நுழைந்தார்கள். ஜனக மகாராஜா தன் நடத்தும் வேள்வியின் தலைமை புரோகிதரான சதாநந்தரோடு விரைந்து வந்து முனிவரை வரவேற்றார். தன்னுடைய யாக மண்டபத்திற்கு வந்திருந்த விஸ்வாமித்ரரை வணங்கி அவரின் வருகைக்கு நன்றி செலுத்தினார். அனைவரும் ஜனகர் சபையை அடைந்தபின் சதாநந்தரின் தாய் அகலிகை ராமரினால் சாபவிமோசனம் பெற்றதையும் அவரது தந்தையாருடன் இணைந்து விட்டதையும் கூறினார். இதனைக்கேட்ட சதாநந்தர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

விஸ்வாமிரருடன் வந்திருந்த ராமரின் உருவம் ஜனகரை கவர்ந்தது. இதனை கவனித்த விஸ்வாமித்ரர் தனது ஆசிரமத்தில் உலக நன்மைக்காக செய்த வேள்வியை காத்து அசுரர்களை அழித்த ராம லட்சுமனனின் வீரத்தை ஜனகரிடம் தெரிவித்தார். வீரம் செறிந்த இளைஞர்கள் இருவரும் தங்கள் மாளிகையில் வைக்கப்பட்டிருக்கும் சிவதனுசை காண்பது முற்றிலும் அவசியம் ஆகவே இவர்களை அழைத்து வந்தேன் என்று ஜனகரிடம் விஸ்வாமித்ரர் கூறினார். இதன் உட்பொருளை உணர்ந்த ஜனகர் அனைவரும் சிறிது ஒய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஒய்வெடுக்க அனைவரும் படுத்ததும் ராமருக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. ஐனகரின் மாளிகையில் நின்று கொண்டிருந்த பெண்ணின் அழகை பார்த்ததும் ரசித்துவிட்டோமே. எந்த பெண்ணை பார்த்தாலும் தனது தாயான கௌசலையை பார்ப்பது போலவே பார்ப்போம். இந்த பெண்ணை பார்க்கும் போது அந்த எண்ணம் தோன்றவில்லையே இது வரை குற்றம் செய்யத நமது மனம் குற்றம் ஏதும் செய்திருக்காது என்று எண்ணி தனக்கு தானே ஆறுதல் செய்து கொண்டார். அடுத்த நாள் அனைவரும் காலை வேள்விசாலையை அடைந்தார்கள்.

ஜனக மகாராஜாவின் தலைமை புரோகிதரான சதாநந்தர் வேள்விக்கு வந்திருந்த விஸ்வாமித்ரரை பற்றியும் அவரது பண்புகளும் அவரின் வரலாற்றையும் ராமரிடம் எடுத்துச்சொல்ல வேண்டிய கடமை இருந்தது. எனவே விஸ்வாமித்ரரின் வரலாற்றை ராமரிடம் எடுத்துக்கூற ஆரம்பித்தார் சதாநந்தர்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -14

கௌதம மகரிஷி தினந்தோறும் அதிகாலை குளக்கரைக்கு செல்வதை இந்திரன் அறிந்துகொண்டான். ஒருநாள் விடிவதற்கு முன்பே சேவலாய் மாறி கூவினான். விடிந்து விட்டது என்று எண்ணிய கெளதமர் குளக்கரைக்கு செல்ல வீட்டை விட்டு வெளியேறினார். இந்திரன் கௌதம மகரிஷி போல் உருவத்தை மாற்றிக்கொண்டு அகலிகை இருந்த குடிலுக்குள் சென்றான். தனது கணவர் தான் வந்திருக்கின்றார் என்று எண்ணிய அகலிகை அவருக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தாள். இதனை பயன் படுத்திக்கொண்ட இந்திரன் அவளிடம் நெருக்கமானான். திடீரென தன் கணவன் தன்னை நெருங்கி வருவதை அறிந்த அகலிகை தனது கணவரின் குணாதிசயத்தை போல் தெரியவில்லையே என மனதிற்குள் நினைத்து ஏதோ ஒரு தவறு நடக்கிறது என புரிந்து கொண்டாள். ஆனால் என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

இன்னும் சரியாகப் பொழுது விடியவில்லை என்பதை உணர்ந்த கௌதமர் எதோ தவறு நடக்கப்போகிறது என உணர்ந்து விரைவாக குடிலுக்கு திரும்பினார். கௌதமர் உடனடியாக திரும்பி வந்ததை அறிந்த இந்திரன் பூனை உருவத்திற்கு தன்னை மாற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான். அதனை அறிந்த கௌதமர் பூனை வடிவத்தில் இருப்பது யார் என்று தன் கையில் இருந்த தண்ணிரை பூனை மேல் தெளிக்க இந்திரன் கௌதமரின் உருவத்தை அடைந்தான். தன்னைப்போல் இருப்பவனை பார்த்த கௌதமர் நடந்ததே புரிந்துகொண்டார். உடல் முழுவதும் உனக்கு பெண் உருப்பாக போகட்டும் என்று அவனை சபித்தார். கணவனின் தொடு உணர்வை அறிந்து கொள்ளாமல் கல் போல் இருந்த நீ கல்லாக போவாய் என்று அகலிகையை சபித்தார். அகலிகை உண்மையை உணர்ந்து கௌதமர் காலில் விழுந்து கதறினாள். நீண்டகாலம் காற்றே உணவாக எடுத்துக்கொண்டு கல்லாக இருப்பாயாக. பல காலம் கழித்து இங்கு தசரதன் மகன் அவதார புருஷன் ராமன் ஒருநாள் இங்கு வருவார். இந்த ஆசிரமத்திற்கு வரும் ராமரின் கால்பாதம் உன் மீது பட்டதும் உன் சாபம் பாவம் இரண்டும் நீங்கும். நீ அவரை வரவேற்று உபசரிப்பாய். அப்போது உன்னுடைய இயற்கை குணத்தை அடைந்து மறுபடியும் என்னுடன் வாழ்வாய் என்று கூறினார். இந்திரன் செய்த தவறினால் அறியாமால் தவறுக்கு உடந்தையாக இருந்த அகலிகையை சபித்துவிட்டோமே இந்த பாவத்திற்கு ஈசனின் திருவடி தரிசனம் கிடைத்தால் மட்டுமே இந்த பாவம் போகும் என்று ஈசன் திருவடியை நாடி கௌதம மகரிஷி இமயமலை சென்று தியானத்தில் அமர்ந்து விட்டார்.

இந்த துளசி செடி இருக்கும் கல்லுக்குள் அகலிகையின் ஆத்மா உள்ளது. ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு ஒரு ஆணால் சபிக்கப்பட்டவளே இந்த பெண். ராமா இவளுடைய சாபத்தை உன்னால் மட்டுமே திருப்பி எடுக்க முடியும். இந்த கல்லை உன் பாதங்களால் நீ தொட்டால் சாபத்தில் இருந்து அகல்யா மீள்வாள் இந்த கல்லில் உன் பாதத்தை வை என விஸ்வாமித்திரர் கூறினார். விஸ்வாமித்திரர் கூறியதை போல் தன் பாதத்தை கல்லின் மீது வைத்தார் ராமர். அந்த கல் ராமருடைய ஸ்பரிசத்தால் சாப விமோசனம் பெற்றாள் அகலிகை. ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பெய்ய அவளுடைய கொடிய பாவம் தீர்ந்து தேவகன்னிகை போல் பிரகாசித்தாள். அகலிகைக்கு விமோசனம் கிடைத்ததை அறிந்த கெளதமரும் அங்கே வந்து சேர்ந்தார். கௌதமரும் அகலிகையும் ராமருக்கு உபசரணைகள் செய்தார்கள். அனைத்தையும் ஏற்றுக்கொண்டார் ராமர்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -13

ஓர் காலத்தில் அருளுக்கும் அழகுக்கும் பெயர் பெற்றதாக இந்த ஆசிரமம் இருந்தது. இந்த ஆசிரமத்தின் தலைமையில் இருந்தவர் கௌதம மகரிஷி ஆவார். அவரது மனைவியின் பெயர் அகலிகை. இவள் பிரம்மனின் மானசீக மகளாவாள் இவளது பெயருக்கு மாசு அற்றவள் என்றும் தனது உடலில் அழகில்லாத பகுதி சிறிது இல்லாதவள் என்று பொருள். தேவலோகத்தில் இருந்த ஊர்வசி தான் தான் அழகு என்று எண்ணி அகங்காரம் கொண்டிருந்தாள். அவளது ஆணவத்தை அடக்க பிரம்மா நீரிலிருந்து அகலிகையை மிக அழகுடன் படைத்தார். அவளை மணக்க அனைவரும் போட்டி போட்டனர். எனவே சுயவர போட்டி நடத்த பிரம்மா முடிவு செய்தார். அகலிகையை மணக்க சுயவர போட்டி நடந்தது. யார் முதலில் முன்பும் பின்பும் தலை உள்ள பசுவை மூன்று முறை முதலில் வலம் வருகிறார்களோ அவர்களுக்கே அகலிகை என்ற போட்டியை பிரம்மா வைத்தார். முன்னும் பின்னும் தலை உள்ள பசு மூன்று உலகத்திலும் எங்கும் இல்லை ஆகவே வேறு ஏதேனும் சொல்லுங்கள் என்று தேவர்கள் பிரம்மாவிடம் கோரிக்கை வைத்தார்கள். மூன்று உலகத்தையும் யார் முதலில் சுற்றி வருகின்றார்களோ அவர்களுக்கே அகலிகை என்று இரண்டாவது போட்டியை பிரம்மா அறிவித்தார். இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் யார் முதலில் வெற்றி பெருக்கின்றார்களோ அவர்களுக்கு அகலிகை மனைவியாவாள் என்று பிரம்மா அறிவித்தார்.

இந்திரன் மாய வேலைகள் செய்து அகலிகையை அடைய எண்ணியிருந்தான். தேவர்கள் அவர்களுக்கான வாகனத்தில் மூன்று உலகத்தையும் சுற்ற போட்டி போட்டுக்கொண்டு கிளம்பினார்கள். நடப்பது அனைத்தையும் எட்டி நின்று பார்த்தார் நாரதர். கௌதம முனிவர் ஆஸ்ரமத்தில் அவருக்குப் பணிவிடை செய்ய ஏற்றவள் அகலிகை. ஆகவே அகல்யாவை கௌதம முனிவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நாரதர் திட்டம் திட்டினார். எனவே பூரண கருவுற்றிருந்த ஒரு பசுவை ஓட்டிக்கொண்டு கௌதம முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தார். கௌதமரை வெளியே அழைத்தார். அந்தப் பசு அப்போது கன்றை ஈன ஆரம்பித்தது. பசுவின் பின்புறம் கன்றின் முகம் முதலில் தோன்றியது. உடனே நாரதர் கௌதமரை அந்தப் பசுவை மூன்று முறை வலம் வரச்செய்தார். கௌதமர் இரண்டு தலைகளை உடைய பசுவை இப்போது மூன்று முறை சுற்றி வந்துவிட்டார். நாரதர் கௌதம மகரிஷியை பிரம்மதேவரிடம் அழைத்துப்போய் நடந்ததைக் கூறி கௌதமர் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டார். எனவே கௌதமருக்கு அகலிகையை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டார்

பிரம்மதேவரும் அகலிகையை கௌதமருக்குத் திருமணம் செய்து வைத்தார். அகலிகையும் மகிழ்ச்சியுடன் கௌதமருடன் இல்லறத்தில் மகிழ்ந்திருந்தாள். அந்த மகிழ்ச்சியில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது அக்குழந்தைக்கு சதானந்தர் என்று பெயர் வைத்தார்கள். ஜனக மகாராஜாவின் புரோகிதராக இருப்பவர் இந்த சதானந்தாரே ஆவார். இந்திரன் மற்றவர்களுக்கு முன்னால் உலகை வலம் வந்து பிரம்மதேவரிடம் அகலிகையைக் கேட்டான். ஆனால் அகலிகைக்குத் திருமணம் ஆகிக் குழந்தையும் பிறந்துவிட்ட கதையைப் பிரம்மதேவர் சொல்ல இந்திரன் ஏமாற்றத்தால் பொருமினான். மனதிற்குள் வன்மத்தை வளர்ந்த இந்திரன் எப்படியும் அகலிகையை அடைய வேண்டும் என்று திட்டம் திட்டினான். தினந்தோறும் அகலிகையையும் கௌதம மகரிஷியின் செயலையும் நோட்டமிட்டான் இந்திரன்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -12

பகீரதன் ஈசனைக் குறித்துத் தவம் இருந்து வேண்டினான் மனம் மகிழ்ந்த ஈசனும் அவனுக்குக் காட்சி அளித்து பகீரதா உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும் உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கை பூமிக்கு வரும் போது எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும். அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன் என்றார். பகீரதனும் கங்கையிடம் ஈசனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க அவளும் மகிழ்வோடு சப்தமிட்டுக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்தாள். ஈசன் தன் சடையை விரித்துப் பிடித்தார். அப்போது கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. நான் மிகவும் வேகமாக வருகின்றேன். என் ஆற்றலையும் வேகத்தையும் இந்த ஈசனால் தாங்க இயலுமா என யோசித்தாள். எல்லாம் வல்ல ஈசன் கங்கையின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டார். நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார். திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவித்து தன் அகங்காரத்தை போக்கிக்கொண்டாள். பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைந்தான் ஈசனை நோக்கி மீண்டும் ஒற்றைக்காலில் தவமிருந்தான்.

பகீரதன் முன் தோன்றிய ஈசன் கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான். வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது. கங்கை வந்த வேகத்தில் அந்த ஆசிரமத்தை முற்றிலும் நீரால் அழித்து முனிவரையும் உருட்டித் தள்ள ஆயத்தமானாள். கோபம் கொண்ட முனிவர் கங்கையை அப்படியே தன் கைகளால் கங்கையை எடுத்து அள்ளிக் குடித்து விட்டார். கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான். முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும் கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான். அவன் நிலை கண்டு இரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார். இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக்கொண்டு தம் மூதாதையரின் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான்.

சகரர் புத்திரர்கள் அறுபதாயிரம் பேருக்கும் நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்தது என்று கங்கையின் வரலாற்றை ராமருக்கு விஸ்வாமித்ரர் சொல்லி முடித்தார். மிதிலை நகரம் தூரத்தில் தென்பட்டது. மிதிலை நகரத்திற்கு முன்பு ஒரு ஆசிரமம் தென்பட்டது மிகவும் பழமையாகவும் யாரும் இல்லாததைப்போலவும் தென்பட்ட ஆசிரமம் ஓர் காலத்தில் சிறப்பானதாக இருந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டது. ஆசிரமத்தின் அருகில் ஓரு கல்லில் இருந்து ஒரு துளசி செடி வளர்வதை ராமர் கண்டார். குருவே இது மிகவும் வியப்பாக உள்ளது. எப்படி இங்கே அனைத்தும் தனித்து விடப்பட்டுள்ளது அப்படி இருந்தும் எப்படி ஒரு கல்லில் இருந்து துளசி செடி வளர்கிறது இது யாருடைய ஆசிரமம் இது. இந்த ஆசிரமத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகின்றேன் தாங்கள் கூறுங்கள் என்று கேட்டார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -11

விஸ்வாமித்ரர் தலைமையில் அனைவரும் கங்கை நதிக்கரையை அடைந்தனர். விஸ்வாமித்ரரிடம் கங்கை எப்படி மூவுலகிலும் ஓடுகிறது. கங்கையின் வரலாற்றை கூறுமாறு ராமர் கேட்டுக்கொண்டார். ஹிமவானின் மூத்த பெண் கங்கா தேவி. இளைய பெண் பார்வதி தேவி என்று சொல்லி கங்கா தேவியின் கதையை சொல்ல விஸ்வாமித்ரர் ஆரம்பித்தார். ஆதிகாலத்தில் அயோத்தியை ஆண்ட இசுவாகு குலத்தில் சகரர் என்பவர் குழந்தைப்பேறின்மையால் இறைவனை வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது முதல் மனைவி சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும் 2 வது மனைவி கேசினி என்பவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தனர். சில காலம் கழித்து சகரர் அசுவமேதயாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தார். அப்போது இந்திரன் யாக குதிரையை மறைத்து வைக்க குதிரையை தூக்கிச்சென்று பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மகரிஷியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். அந்த குதிரையை தேடிச்சென்ற சகரரின் புதல்வர்கள் ஆறுபதாயிரம் பேரும் கபிலரின் ஆசிரமத்தில் குதிரை இருப்பதை கண்டு கபிலரை திட்டியதுடன் அவரை துன்புறுத்த துவங்கினார்கள். கோபமடைந்த கபில மகரிஷி அவர்களை சபித்து சாம்பலாக்கி விட்டார். அனைத்தையும் அறிந்த சகரர் மன்னன் கபிலரை வணங்கி தான் செய்யும் அஸ்வமேத யாககுதிரை தங்கள் ஆசிரமத்தில் இருந்ததினால் இந்த குழப்பங்கள் வந்தது. தன் புதல்வர்களை மன்னிக்குமாறும் அவர்கள் சாப விமோசனம் தந்து நற்கதி அடைவதற்கு வழி சொல்லுமாறும் தன் குதிரையை எடுத்துச்செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

சகரரின் வேண்டுகோளை ஏற்ற கபிலமகரிஷி குதிரையை எடுத்துச்செல்ல அனுமதி கொடுத்து மேலுலகத்தில் இருக்கும் கங்கையை பூலோகம் வரவழைத்து இந்த சாம்பலை புனிதப்படுத்தினால் இவர்கள் நற்கதி அடைவார்கள் என்று விமோசம் கூறினார். இதனை கேட்டு மகிழ்ந்த சகரர் குதிரையை எடுத்துச் சென்று அசுவமேத யாகத்தை முடித்தார். முதல் மனைவியின் வாரிசுகள் அறுபதாயிரம் பேரும் சாம்பலானதால் இரண்டாவது மனைவியின் புதல்வன் நாட்டின் அரச பதவியை ஏற்றுக்கொண்டார். அவனுக்குப்பின் அவனது புதல்வன் பகீரதன் ஆட்சி பொறுப்பை ஏற்றக்கொண்ட போது தமது முன்னோர்கள் ஆறுபதாயிரம் பேருக்கு நடந்ததை தெரிந்துகொண்டார். பின்பு நாட்டை துறந்து கங்கையை பூலோகம் கொண்டு வர பிரம்ம தேவரை நினைத்து காட்டில் கடும் தவம் இயற்றினான். இவரின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைந்து ஆலோசனை வழங்கினார்.

பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடையவேண்டி கங்கை பூமிக்கு வந்து பின் பாதளத்துக்கு வந்து தன் முன்னோர்கள் மோட்சம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக்கொண்டான். அதற்கு கங்கை பகீரதா நான் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்க மாட்டாள். நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன் என்று கூறினாள். பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும் பராக்கிரம சாலிகளிடமும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான். ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்துவிட்டனர். பகீரதன் மஹாவிஷ்ணுவை வேண்ட அவர் இச்செயல் ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும். அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர். அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெறு என்று கூறினார்.