மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -32

துரியோதனன் மற்றும் அவனுடைய மந்திரி புரோச்சனன் இவர்களது கொடிய சதித்திட்டத்தை விதுரர் தெளிவாக அறிந்தார். எனவே சுரங்கம் அமைப்பதில் சிறந்த பொறியாளனான கனகன் என்பவன் ஒருவனே வாரணவதத்திற்கு அனுப்பி வைத்தார். கனகன் யுதிஷ்டிரனை தனியாக சந்தித்து விதுரர் தன்னை சுரங்கம் அமைக்க அனுப்பி வைத்ததாக சொன்னான். அந்த அரக்கு மாளிகையில் இருந்து அருகில் இருந்த வனத்திற்கு போகும் படியான ரகசிய சுரங்கம் ஒன்றை கட்டுவதற்கான திட்டத்தைப் பற்றி யுதிஷ்டிரனிடம் பேசினான். இருவரும் திட்டம் ஒன்றை திட்டினார்கள்.

அந்த திட்டத்தின்படி புரோச்சனனிடம் யுதிஷ்டிரன் இந்த மாளிகையிலேயே தாங்கள் நிரந்தரமாக வசித்து இருக்கப்போவதாகவும் ஆகையால் பாதுகாப்பிற்காக அகழியை வலிமைப்படுத்த வேண்டும் என்றும் இங்கு இருக்கும் காலம் முழுவதும் புரோச்சனன் அவர்களுக்கு நிர்வாக காரியதர்சியாக இங்கேயே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டார்கள். இவர்களது திட்டப்படி கனகன் மாளிகையை சுற்றி இருந்த அகழியை திருத்தி அமைக்கும் வேலையில் நியமிக்கப்பட்டான். புரோச்சனன் அதற்கு ஆட்சேபம் எதுவும் செய்யவில்லை. காலையிலிருந்து இரவு வரையில் காட்டில் சென்று வேட்டையாடுவதில் பாண்டவர்கள் ஈடுபட்டார்கள். புரோச்சனனையும் அவர்களோடு நாள்தோறும் அழைத்துச்சென்றனர். இவர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் வேறு யாருக்கும் தெரியாதபடி அதிவிரைவில் சுரங்கம் ஒன்று அமைக்கப்பட்டது.

அரக்கு மாளிகைக்கு தீ மூட்டும் நாள் ஒன்றை துரியோதனனும் புரோச்சனனும் குறித்து வைத்திருந்தனர். அந்த நாளும் வந்தது. அந்நாளில் குந்திதேவி ஊரில் இருப்பவர்கள் அனைவருக்கும் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தாள். விருந்திற்கு வந்தவர்களில் வேடுவச்சி ஒருத்தியும் அவளின் ஐந்து புதல்வர்களும் வந்திருந்தனர். அன்னமும் பானமும் அனைவருக்கும் தாராளமாக வழங்கப்பட்டது. உணவை உண்டு முடித்தபின் வேடுவச்சி மற்றும் அவளது ஐந்து மைந்தர்களை தவிர அனைவரும் சென்று விட்டனர். விதிவசத்தால் உண்ட மயக்கத்தில் வேடுவச்சியும் அவர்களது புதல்வர்களும் அங்கேயே தங்கி விட்டனர். நள்ளிரவு வந்தது. புரோச்சனனும் அயர்ந்து தூங்கி போனான்.

குந்தி தேவியையும் மற்ற சகோதரர்களையும் சுரங்கத்தின் வழியாக வெளியே போகும்படி பீமன் கூறினான். அவர்களும் அவ்வாறே சென்றனர். பிறகு அரக்கு மாளிகையின் அனைத்து பகுதிக்கும் தீ மூட்டிவிட்டு பீமனும் அச்சுரங்கத்தின் வழியாக வெளியே வந்தான். அரக்கு மாளிகை முற்றிலும் எரிந்த பின்பு சுரங்கத்தின் அமைப்பின்படி இவர்கள் வெளியேறிய நுழைவுப்பகுதியின் வாயிலை மூடியது. பாண்டவர்களும் சுரங்கத்தின் மறுபகுதியை வந்தடைந்தனர். பின் இவர்கள் வெளியே வந்த வாயில் இருக்கும் இடம் தெரியாமல் அதனை மூடிவிட்டனர். அடுத்தபடியாக காட்டில் இருந்த நதிக்கரைக்கு வந்தனர். அங்கு விதுரரின் ஏற்பாட்டின்படி அவர்களுக்காக படகு ஒன்று இருந்தது. நதியில் நெடுந்தூரத்துக்கு அப்பால் இருக்கும் அடையாளம் தெரியாத ஒரு நாட்டிற்கு அவர்கள் வந்து சேர்த்தனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.