39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மாமனாக வந்து வழக்குரைத்த படலம் முப்பத்தி ஒன்பதாவது படலமாகும்.

மதுரையில் தனபதி என்றொரு வணிகர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி பெயர் சுசீலை. இத்தம்பதியினருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. இருவரும் எவ்வவோ அறச் செயல்கள் செய்தும் குழந்தையே பிறக்கவில்லை. அதனால் தனபதி தன் தங்கையின் புதல்வனை தன் பிள்ளைபோல் எண்ணி வளர்த்து அந்தப் பிள்ளையை தத்துப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டார். ஒரு நாள் அவரது சகோதரி அலட்சியமாக அவர்கள் குழந்தை பாக்கியமில்லாத மலடு என்றும் என்னுடைய பிள்ளையால் தான் உங்களுக்கு இம்மை மறுமைப் பயன்கள் கிடைக்கப் போகிறது என்று கூறினாள். இதனைக் கேட்டதும் தனபதி அடுத்த பிறவியிலாவது பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டும் என்று எண்ணி காட்டிற்குச் சென்று தவம் மேற்கொள்ள எண்ணினார். ஆகையால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய தங்கை மகனுக்கு உரிமையாக்கிவிட்டு தன் மனைவியோடு தவம் செய்ய காட்டிற்குச் சென்றார். தனபதி காட்டிற்குச் சென்றதை அறிந்த அவரது பங்காளிகள் அவரது தங்கையை வஞ்சித்து சொத்துக்களை எல்லாம் பறித்துக் கொண்டு அவளை அடித்து விரட்டி விட்டனர். இதனால் தனபதியின் தங்கை செய்வதறியாது திகைத்தாள். இறுதியில் சொக்கநாதரைச் சரணடைந்தாள்.

சொக்கநாதரே என் தமையன் மனம் வருந்தும்படி பேசிய பலனை இப்போது இப்படி அனுபவிக்கிறேன் என்னை மன்னியுங்கள். எல்லோருக்கும் தாயும் தந்தையுமாய் இருப்பவரே என்னுடைய தமையனார் குழந்தைப்பேறு வேண்டி தவத்திற்குச் செல்லும் போது தத்துப் பிள்ளையான எனது மகனுக்கு அவருடைய செல்வங்கள் அனைத்தையும் விட்டு சென்றார். இதனை அறிந்த எங்களது உறவினர்கள் பொய் வழக்கு பேசி சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர். ஐயனே நான் யாருமில்லாமல் தனியாக இருக்கிறேன். எனக்கு இவன் ஒருவனே புதல்வன். இவனோ நல்லது கெட்டது அறியாத சிறுவன். எங்களுக்கென்று யாரும் இல்லை. இறைவா எங்களை இந்நிலையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று மனமுருக வழிபட்டாள். பின் சோர்வு மிகுதியால் அங்கேயே கண்ணயர்ந்தாள். அப்போது சொக்கநாதர் அவளுடைய கனவில் தோன்றி பெண்ணே நீ நாளை உன்னுடைய சுற்றத்தாரை உன்னுடைய சொத்துக்களை கேட்டு வழக்காடு மன்றத்திற்கு அழைத்து வா. யாம் இப்பொய் வழக்கினைத் தீர்த்து உம்முடைய பங்கினை உமக்கு அளிப்போம் என்று கூறினார். இறைவனாரின் திருவாக்கினைக் கேட்டதும் திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பது இதுதானோ என்று எண்ணி தன்னுடைய வீட்டிற்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றாள். மறுநாள் தன்னுடைய உறவினர்களிடம் சென்று தன்னுடைய சொத்துக்களை திருப்பி அளிக்கும்படி கேட்டாள். அவர்கள் அவளையும் அவளுடைய மகனையும் திட்டி அடித்து விரட்டினர். உடனே அவள் அழுதபடியே வழக்காடு மன்றத்திற்குச் சென்று தன்னுடைய சொத்துக்களை உறவினர்களிடமிருந்து திருப்பித் தரும்படி கேட்டாள். வழக்காடு மன்றத்தினர் தனபதியின் உறவினர்களை அழைத்துவர உத்தரவு இட்டனர். வழக்காடு மன்றத்தில் தனபதியின் தங்கைக்கும் உறவினர்களும் வழக்கு நடைபெற்றது. அப்போது இறைவனார் தனபதியின் உருவில் வழக்காடு மன்றத்திற்கு வந்தார். தனபதியைக் கண்டதும் அவருடைய உறவினர்கள் நடுங்கினர்.

இறைவனான தனபதி தன்னுடைய தங்கையையும் மருமகனையும் கட்டிக் கொண்டார். பின்னர் சபையோர்களிடம் என் தங்கையின் வழக்கை ஆராய்ந்து தர்மத்தின் வழியில் நின்று முடிவினைத் தெரிவியுங்கள் என்றார். பின் வழக்காடு மன்றத்தில் இருந்தவர்கள் இருதரப்பினரையும் நன்கு கேட்டறிந்து உறவினர்களின் கூற்று பொய் என்று கூறினர். இதனைக் கேட்டதும் தனபதியின் உறவினர்கள் வந்திருப்பது தனபதியே அல்ல என்றனர். இதனைக் கேட்டதும் இறைவனான தனபதி அவருடைய சொத்துக்களின் விவரம் உறவினர்களின் விவரம் அவர்களின் குடிப்பெயர் உடன் பிறந்தோர் அவர்களின் குணங்கள் அவர்கள் செய்யும் தொழில்கள் ஆகியவற்றை விளக்கமாக எடுத்து உரைத்தார். இதனைக் கேட்டதும் வழக்காடு மன்றத்தினர் இவர் தனபதியே என்றனர். இதனைக் கேட்டதும் தனபதியின் உறவினர்கள் எல்லோரும் இனியும் இங்கிருந்தால் அரச தண்டனைக் கிடைக்கும் என்று கருதி ஒருவர் பின்னர் ஒருவராக வெளியேறினர். பின்னர் வழக்காடு மன்றத்தினர் தனபதியின் சொத்துக்கள் முழுவதும் அவருடைய தங்கை மகனுக்கு உரியது என்று கூறி சாசனம் அளித்தனர். தனபதியான இறைவனார் அந்த சாசனத்தை தனபதியின் தங்கையிடம் கொடுத்தார். பின்னர் எல்லோரும் பார்த்திருக்கும் போது அங்கிருந்து மறைந்தருளினார். இதனைக் கண்ட அங்கிருந்தோர் மாமனாக வந்தது சொக்கநாதரே என்பதை உணர்ந்தனர். இதனை சுந்தரேச பாத சேகர பாண்டியனிடம் தெரிவித்தனர். இறைவனின் திருவிளையாடலை எண்ணி வியந்தார் சுந்தரேச பாத சேகர பாண்டியன். மதுரையை நல்வழியில் ஆட்சி புரிந்து சிறிது காலத்திற்குப் பிறகு தன் மகனான வரகுண பாண்டியனிடம் நாட்டை ஒப்புவித்து இறைவனின் திருவடியை அடைந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தனது தவறை உணர்ந்து அதனை திருத்திக் கொண்டு இறைவனை சரணடைபவர்களை இறைவன் கட்டாயம் காப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 461

கேள்வி: மாதா ஆயுர்தேவி பற்றி சிறப்பான ஆயுர்வேத ஸ்தலம் பற்றி:

இறைவனின் கருணையாலே எம் நாமத்தில் வருகின்ற அந்த லிகிதத்திலே (எழுதப்பட்டது) பல கூறப்பட்டிருக்கிறதே? அதைப் பின்பற்றினால் போதுமப்பா.

*

38. உலவாக் கோட்டை அருளிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உலவாக் கோட்டை அருளிய படலம் முப்பத்தி எட்டாவது படலமாகும்.

மதுரையில் அடியார்க்கு நல்லான் என்னும் வேளாளன் ஒருவன் இருந்தான். அடியவர்களுக்கு தொண்டு செய்வதே அறமாகக் கொண்டதால் அடியார்க்கு நல்லான் என்று பெயர் பெற்றான். அவனுடைய மனைவி தரும சீலை. இப்பெண்மணியும் அறவழியில் நடந்து கணவன் அறவழியில் செல்வதற்கு உதவினாள். தினமும் அடியவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிட்ட பின்பே இருவரும் உணவருந்துவார்கள். அடியார்க்கு நல்லான் தன்னுடைய வேளாண்மையில் விளைந்த பொருட்களில் ஆறில் ஒரு பகுதியை அரசுக்கு வரி செலுத்தி மீதி உள்ளதை சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்தல் என்னும் சிறப்பான சேவையை செய்து வந்தான். தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் அடியார்களுக்கு திருவமுது செய்விக்க பயன்படுத்தினான். இதனால் நாளடைவில் அடியார்க்கு நல்லானிடம் திருவமுது உண்ணும் சிவனடியார்களின் கூட்டம் பெருகியது. இந்நிலையில் இறைவனார் அடியார்க்கு நல்லான் தன்னுடைய செல்வம் குறைந்த போதிலும் சிவனடியார்க்கு செய்யும் திருவமுது செய்வித்தலை குறையாக‌க் கொள்ளமாட்டான் என்ற உயர்ந்த பண்பினை உலகுக்கு உணர்த்த விரும்பினார். நாளடைவில் அடியார்க்கு நல்லானின் விளைநிலங்களில் விளைச்சல் குறையத் தொடங்கியது. இதனால் அவனிடம் இருந்த செல்வவளம் குன்றியது. எனினும் அடியார்க்கு நல்லான் பிறரிடம் கடன் வாங்கி சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்தான். ஒரு கட்டத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்காததால் அடியார்க்கு நல்லானுக்கு யாரும் கடன் தரவில்லை. அடியார்க்கு நல்லானும் தரும சீலையும் வறுமையால் சிவனடியார்களுக்கு திருவமுது செய்யவும் இயலாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தனர். இறுதியில் அடியார்க்கு நல்லான் தன்னுடைய மனைவியான தரும சீலையுடன் சொக்கநாதரின் சந்நிதிக்குச் சென்றான். அப்பனே என்னுடைய விளைநிலங்களில் விளைச்சல் இல்லை. எனவே பிறரிடம் கடன்வாங்கி அடியார்களுக்கு திருவமுது செய்வித்தேன். இப்போது எனக்கு கடன் கொடுப்பவர்கள் யாரும் இல்லை. தயவு செய்து கடன் தருபவர்கள் யாரவது இருந்தால் அவரை எனக்கு காட்டுங்கள். அவரிடம் கடன் பெற்று அடியார்களுக்கு திருவமுது செய்விப்பேன். இல்லையேல் எங்களுடைய உயிரினை விட்டுவிடுவோம் என்று மனமுருகி வழிபட்டான்.

அடியார்க்கு நல்லானின் வழிபாட்டினைத் தொடர்ந்து வானில் இறைவனார் வேளாளனே பயப்பட வேண்டாம். உன் வீட்டில் நெல் உள்ள ஒரு உலவாக்கோட்டை (உலவாக்கோட்டை என்பது 24 மரக்கால் அளவு கொண்ட கொள்கலன் ஆகும். 1 மரக்கால் என்பது 4 படி ஆகும். ) ஒன்றைச் வைத்துள்ளோம். அதிலிருந்து நெல்லை எப்பொழுது எவ்வளவு எடுத்தாலும் அள்ள அள்ளக் குறையாது. அதனைக் கொண்டு அடியவர்களுக்கு திருவமுது செய்விக்கும் தொண்டினையும் பிற தருமங்களையும் செய்து வருவாயாக. இறுதியில் யாம் வீடுபேற்றினை அளிக்கின்றோம் என்று திருவாக்கு அருளினார். அதனைக் கேட்ட அடியார்க்கு நல்லான் மகிழ்ந்து இறைவனாரை பலவாறு துதித்து வழிபாடு மேற்கொண்டு தன்னுடைய மனைவியுடன் தன்வீடு திருப்பினான். அங்கு இறைவனாரின் அருட்கொடையினால் அரிசிக் கோட்டையைக் கண்டான். நாள்தோறும் தன் மனைவியுடன் அதனை முறைப்படி வழிபட்டு அதிலிருந்து உணவுக்குத் தேவையானவற்றைப் பெற்று அடியார்களுக்கு திருவமுது செய்துவித்து நல்ல முறையில் வாழ்ந்து வந்தான். இறுதியில் இறையருளால் வீடுபேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தானத்தில் சிறந்தது அன்னதானம். அதனை எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் சிவனுக்கே செய்யும் தொண்டாக எண்ணி செய்தால் இறைவன் அவர்களின் செயலுக்கு துணை நிற்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 460

கேள்வி: பரம்பொருள் ஒன்றுதான் என்று கூறுகிறீர்கள். பரம்பொருள் நாராயணன் தமது தோஷம் நீங்க பரம்பொருள் சிவபெருமானை வழிபட்டதாக சில ஆலய வரலாறுகள் கூறுகின்றன. ஆனால் பரம்பொருள் சிவபெருமான் தனது தோஷம் மற்ற இறை வடிவங்களை பூஜித்ததாக உள்ளதா? அப்படியென்றால் சிவபெருமான் தான் உச்சநிலை பரம்பொருள் வடிவமா?

இப்படியும் கதை கூறப்பட்டிருக்கிறது. அப்படியும் கதை கூறப்பட்டிருக்கிறது. முக்கண்ணனாகிய சிவபெருமான் தன்னிடம் உள்ள பிரம்ம கபாலம் நீங்க நாராயணனையும் மகாலட்சுமியையும் அண்டியதாக ஒரு கதை இருக்கிறது. அதைப்போல அடிமுடி காண முடியாமல் சிவனின் திருவடியை மகாவிஷ்ணு தீண்டியதாகவும் ஒரு கதை இருக்கிறது. இவற்றையெல்லாம் தத்துவார்த்தரீதியாக புரிந்து கொள்ள வேண்டும். எந்த உயரத்தில் இருந்தாலும் எல்லோரும் தன்னை தாழ்த்திக் கொள்கிறார்கள், மனிதனும் அவ்வாறுதான் இருக்கவேண்டும் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர இருவரின் கருத்து சண்டையாகவும் சச்சரவாகவும் மாறிவிடக் கூடாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 459

கேள்வி: பரம்பொருள் சிவபெருமான் லிங்க வடிவமாக இருப்பதன் பொருள் என்ன ?

இறைவனின் கருணையைக்கொண்டு கூறுவது யாதென்றால் லிங்க வடிவிலும் இறைவன் இருக்கிறார் என்று மனிதர்களுக்கு ஒரு பகுதியினர் போதித்திருக்கிறார்கள். அம்பாளைப் பார்த்தாலும் அதுவும் இறைவனின் ஒரு வடிவம்தான். வேறு எந்த வடிவத்தைப் பார்த்தாலும் அதுவும் இறைவனின் வடிவம்தான். இருந்தாலும் கூட லிங்க வடிவத்திற்கு யாங்கள் முன்னரே விளக்கம் கூறியிருக்கிறோம். விளக்கம் அறிந்தவரிடம் இன்னவன் அறிந்து கொள்ளலாம்.

37. சோழனை மடுவில் வீட்டிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சோழனை மடுவில் வீட்டிய படலம் முப்பத்தி ஏழாவது படலமாகும்.

இராசேந்திர பாண்டியனின் வழித்தோன்றலான சுந்தரரேச பாத சேகரபாண்டின் என்பவன் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவனாக இருந்தான். அவன் தன் படைபலத்தைக் குறைத்துக் கொண்டு அதற்கு செலவிடும் அத்தொகையைக் கொண்டு சிவாலயங்களைப் புதுப்பித்து சிவதொண்டு செய்து வந்தான். அப்போது சோழ நாட்டை பரிக்கோர் சேவகன் என்ற சோழ அரசன் ஆட்சி செய்து வந்தான். இவன் யுத்தத்தில் ஆயிரம் குதிரைகளை இவன் ஒருவனே சமாளிக்கும் வலிமை பெற்றவனாக இருந்தான். ஆகையால் ஆயிரம் குதிரைகளுக்கு ஒருவன் என்பதால் பரிக்கோர் சேவகன் என்று பெயர் பெற்றான். பாண்டியன் படைபலத்தைக் குறைத்ததை ஒற்றர்களின் மூலம் அறிந்த ஆயிரம் பரிக்கோர் சேவகன் இதுவே பாண்டிய நாட்டினைக் கைப்பற்ற சரியான தருணம் என்று எண்ணி பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருவதை அறிந்த சுந்தரரேச பாத சேகரபாண்டியன் திருக்கோவிலை அடைந்தான். இறைவா பாண்டிய படையின் பலத்தினைக் குறைத்ததை அறிந்த சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறான். சோழனிடமிருந்து பாண்டிய மக்களைக் காப்பாற்று என்று உருகி வழிபட்டான். பாண்டியனின் முறையீட்டினைக் கேட்டதும் இறைவனார் சுந்தரரேச பாத சேகர பாண்டியா நீ கலங்காதே உன் படையைத் திரட்டி சோழனை எதிர்கொள். யாமும் சோழனுடன் போரிட்டு வெற்றியை உனதாக்குவோம் திருவாக்கு அருளினார்.

இறைவனின் திருவாக்கினைக் கேட்டதும் சுந்தரரேச பாத சேகரபாண்டியன் தெளிந்த மனத்துடன் தனது படைகளைத் திரட்டி சோழனை எதிர்க்க போர்க்களம் சென்றான். சொக்கநாதரின் திருவருளால் சிறிய பாண்டியர் படை சோழர் கண்களுக்கு கடல் போல் விரிந்து காணப்பட்டது. இத்தனை பெரிய படை இவர்களுக்கு ஏது என சோழர் படை குழம்பியது. பிரம்மாண்டமான சோழர் படை சிறியதாக பாண்டியப் படைக்குக் காட்சியளித்தது. இத்தனால் பாண்டியப் படைகள் மன தைரியம் பெற்று மன வலிமையுடன் போரிட்டனர்.  இதனால் சோழனது படையின் பெரும்பாகம் அழிந்து விட்டது.  இதனால் சோழன் சினம் கொண்டு போரின் முன்னணிக்கு வந்தான். ஆயிரம் புரவி வீரர்களை ஒரே சமயத்தில் வெல்லக்கூடிய சோழன் முழுவேகத்துடன் முன்னணிக்கு வரவும் பாண்டியன் மனம் கலங்கி நின்றான். அப்போது சொக்கநாதர் தழல் போன்ற சிவந்த கண்களுடன் கரு நிறத்தவராய் விசித்திரமான சட்டை தலைப்பாகை அணிந்து யானைக் கொம்பிலிருந்து செய்த காதணி கழுத்திலே முத்து மாலை தோள்வளை கைக்காப்பு தலைப்பாகையில் மயில் தோகையுடன் வேதமாகிய குதிரை மீதேறிக் கொண்டு வேடனின் உருவத்தில் கையில் வேலோடு விரைந்து வந்து ஆயிரம் பரிக்கோர் சேவகனின் முன்னால் சென்று நின்றார். இதனைக் கண்ட சோழன் சினந்து நான் ஆயிரம் குதிரைகளுக்கு ஒரே வீரனாக நான் இங்கு போரிட வந்தேன் என்று கூறினான். அதனைக் கேட்டதும் சொக்கநாதர் எண்ணில்லாத குதிரைகளுக்கு ஒரே வீரனாக நான் இங்கு போரிட வந்தேன் என்று கூறி சோழனுடன் போரிட்டார். வேடுவனின் தாக்குதலை சமாளிக்க இயலாத சோழன் குதிரையில் ஏறி போர்களத்தை விட்டு ஓடினான். நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருருந்த பாண்டியன் வேடனாக வந்திருப்பது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான்.

வேடனின் வடிவத்தில் வந்த சொக்கநாதரும் சோழனும் சண்டையிட்டது மிகப் பயங்கரமாய் இருந்தது. விரைவில் சோழன் புறமுதுகு காட்டி ஓடினான். வேடனுக்கு பயந்து சோழன் ஓடுவதைக் கண்ட அவனது படைகளும் பின்வாங்கின. அப்போது வேடனான சொக்கநாதர் அங்கிருந்து மறைந்தார். பாண்டியனும் அவன் படைகளும் உற்சாகத்துடன் சோழப் படைகளை விரட்டத் தொடங்கினார்கள். சோழனை விரட்டி பாண்டியன் அவனைத் தொடர்ந்து சென்றான். சிறிது நேரம் கழித்து சோழன் திரும்பிப் பார்த்தான். தன்னை துரத்திய வேடனைக் காணாது பாண்டியன் துரத்துவதை கண்டான். பயம் தெளிந்த சோழன் பாண்டியனை துரத்தத் தொடங்கினான். போர்க் களத்தை நோக்கி பாண்டியன் ஓடினான். அப்போது பாண்டியன் எதிரில் மடு (குளம்) ஒன்று இருப்பதைக் கவனியாது அதனுள் வீழ்ந்தான். பாண்டியனைத் துரத்திய சோழனும் மடுவினுள் வீழ்ந்தான். சோழன் விழுந்த இடத்தில் சுழல் இருந்ததால் சோழன் மடிந்தான். பாண்டியன் இறைவனின் கருணையால் உயிருடன் மடுவில் இருந்து மீண்டான். பின்னர் சோழப் படையை வெற்றிக் கொண்ட பாண்டியன் அவற்றின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு சிவாலயத் திருப்பணிகள் செய்து இறைவனின் அருளுக்கு பாத்திரமானான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைபணியில் ஈடுபடுபவர்களை பாதுகாத்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி இறைவன் காப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 458

கேள்வி: கிரகண காலங்களில் கிரிவலம் செல்லலாமா? கோவில்கள் திறந்திருக்கலாமா?

இறைவனின் அருளாலே ஆலயங்களின் உள்ளே மனிதர்கள் கூட்டமாக அமர்ந்து பிரார்த்தனை செய்யலாம். அல்லது பாதுகாப்பான நீர் நிலைகளிலே (தூய நீராக இருந்து அதுவும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். ஆக்ரோஷமாக ஓடக்கூடாது. மனிதன் தாங்கக்கூடிய அளவில் ஓட்டம் இருக்கவேண்டும்) பிரார்த்தனை செய்யலாம் மந்திர ஜபம் செய்யலாம். அது ஏற்புடையது. கிரிவலம் ஏற்புடையது அல்ல.

36. இரசவாதம் செய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இரசவாதம் செய்த படலம் முப்பத்தி ஆறாவது படலமாகும்.

மதுரைக்கு அருகில் திருப்பூவனம் என்னும் ஊர் ஒன்று இருந்தது. (தற்போது அது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது). அவ்வூரில் இருந்த பூவனநாதர் என்னும் திருக்கோவில் இருந்தது. இக்கோவிலில் கணிகையர் எனப்படும் ஆடல் குலப் பெண்கள் ஆடல் பாடல்கள் பாடி இறைவனின் புகழைப் பரப்பினர். அப்பெண்களில் ஒருத்தி பொன்னனையாள். அவள் ஆடல் மற்றும் பாடல்களில் சிறந்தவளாகத் திகழ்ந்தாள். அவள் தினமும் பூவனநாதர் கோவிலுக்குச் சென்று மற்ற ஆடல் மகளிருடன் இணைந்து ஆடல் மற்றும் பாடல்கள் பாடி இறைவனின் புகழைப் பரப்புவாள். பின்னர் தன் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்து எஞ்சிய உணவினை உண்பாள். இதனையே அவள் வழக்கமாகக் கொண்டிருந்தாள். அவளுக்கு தன் நாட்டியத்திற்கு அதிபதியான இறைவனாரை பொன்னால் வடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. பொன்னால் இறைவனின் திருமேனியைச் செய்ய வேண்டுமானால் அதற்கு நிறையப் பணம் வேண்டும். ஆடல் பாடல் மூலம் சம்பாதித்த பணம் முழுவதும் அடியார்களுக்கு தொண்டு செய்வதிலேயே கழிந்தது. இறைவனின் திருமேனியை செய்ய பொருள் போதாமையால் அவள் ஆவல் நிறைவேறவில்லை. இரவும் பகலும் இதே ஏக்கம் கொண்டு அவள் மெலிந்தாள். பொன்னாலான இறைவனின் திருமேனியை செய்வதற்கு அருள்புரியுமாறு எப்போதும் இறைவனாரிடம் வேண்டிக் கொண்டிருந்தாள் பொன்னனையாள். மதுரை சொக்கநாதர் பொன்னனையாளின் விருப்பத்தை நிறைவேற்ற திருவுள்ளம் கொண்டார்.

சொக்கநாதர் சிவனடியாரின் வடிவம் ஏற்று சித்தராக பொன்னனையாள் இல்லத்திற்கு எழுந்தருளினார். பொன்னையாளின் இல்லத்தில் சிவனடியார்கள் எல்லோருக்கும் திருவமுதினைப் படைத்தாள். சித்தரான சிவனடியார் அமுதுண்ண இல்லத்திற்கு உட்செல்லாமல் புறக்கடையில் அமர்ந்திருந்தார். அப்போது பொன்னனையாளின் பணிப்பெண் சித்தரை திருவமுது உண்ண வருமாறு அழைத்தாள். சித்தரோ இவ்வில்லத்திற்கு உரிமையான பொன்னனையாளை அழைத்து வருமாறு கூறினார். சித்தர் கூறியதை பணிப்பெண் பொன்னனையாளிடம் தெரிவித்தாள். அதனை ஏற்று பொன்னனையாளும் சித்தர் இருப்பிடத்திற்கு வந்தாள். சித்தரிடம் ஐயா தாங்கள் விரும்பிய வண்ணம் தங்களுக்கு பணிவிடை செய்கிறேன். தாங்கள் தயவுகூர்ந்து திருவமுது உண்ண வாருங்கள் என்று கோரிக்கை வைத்தாள். சித்தரும் பொன்னனையாளிடம் பெண்ணே உன்னுடைய முகம் வாடியும் உடல் மெலிந்தும் இருப்பதற்கான காரணம் என்ன? என்று கேட்டார். பொன்னனையாளும் பொன்னாலான இறைவனின் திருமேனியைச் செய்ய வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து அதனாலேயே தான் முகம்வாடி உடல் மெலிந்து இருப்பதாகக் கூறினாள். இதனைக் கேட்டதும் சித்தர் சரி உன்னுடைய வீட்டில் உள்ள வெள்ளி இரும்பு செம்பு வெண்கல ஈயப் பொருட்களை கொண்டு வா நான் அதனை எல்லாம் பொன்னாக மாற்றித் தருகிறேன். அதனைக் கொண்டு நீ உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கூறினார்.

பொன்னனையாள் ஆச்சர்யம் கலந்த குழப்பத்துடன் அவளின் வீட்டில் இருந்த உலோகப் பொருட்களை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள். சித்தர் ஒவ்வொன்றிற்கும் விபூதியிட்டு நெருப்பில் வைத்தார். இந்த பாத்திரங்களை நாளை காலையில் அவைகளை எடுத்துப்பார். எல்லாம்  தங்கமாக இருக்கும். உன் விருப்பப்படி இறைவனின் பிரதிமை செய்து கொள் என்று கூறினார். அவரை உணவருந்திப் போகும்படியும் தாங்கள் இங்கு தங்கியிருந்து பொன்னாலான இறைவனின் திருமேனியைக் காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். அதற்கு சித்தர் நான் மதுரையில் வசிப்பவன். என்னை சித்தன் என்பார்கள். முதலில் நீ உன்னுடைய பணிகளை முதலில் முடி. நீ விரும்பும் போது இங்கு வருவேன் என்று கூறி மறைந்தருளினார். பொன்னனையாளும் அவ்வுலோகப் பொருட்களை மறுநாள் காலையில் பார்க்க அப்பொருட்கள் பொன்னாக மின்னின. இதனைக் கண்டதும் பொன்னனையாள் இச்செயலை சாதாரணமானவர்கள் செய்ய இயலாது. சிவனடியாராக வந்தது சொக்கநாதரே என்பதை உணர்ந்தாள். பின்னர் பொன்னாலாகிய இறைவனின் திருமேனியை உண்டாக்கினாள். அத்திருமேனியின் அழகில் சொக்கிய பொன்னனையாள் திருமேனியைக் கிள்ளி அழகிய பிரானோ என்று கொஞ்சி முத்தமிட்டாள். பொன்னனையாள் கிள்ளியதால் ஏற்பட்ட நகக்கீறலும் அழகிய பிரான் என்ற பெயரும் இறைவனுக்கு நிலைத்து விட்டன.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தான் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் தனக்கு பொன்னால் செய்யப்பட்ட இறைவன் வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தூய்மையான பக்தியில் அன்புடன் இறைவனை அனுகினால் தன் பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை இறைவனார் உறுதியாக நிறைவேற்றுவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 457

கேள்வி: குடிலின் பொருளாதாரம் மேம்பட என்னென்ன வழிபாடுகள் செய்ய வேண்டும்?

இறைவன் அருளாலே மனமாற்றம் பிரார்த்தனை முக்கியம். பிறர் பொருட்டு எந்த வகையான வழிபாடுகள் செய்தாலும் மனமொன்றி செய்தால் நலம் நடக்கும். அதனையும் தாண்டி புரிந்து கொள்ளக்கூடிய ஆத்மாக்கள் புரிந்து கொள்வார்கள். புரிந்து கொள்ள இயலாத ஆத்மாக்களுக்கு ஏற்கனவே ஓரளவு புரிந்து கொண்ட ஆத்மாக்கள் எடுத்துக் கூறுவது ஒன்றுதான் எளிய வழியாகும்.

35. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம் முப்பத்தி ஐந்தாவது படலமாகும்.

குலபூஷண பாண்டியனுக்கு இரண்டு புத்திரர்கள். தந்தைக்குப் பின் மூத்தவன் இராஜேந்திரன் பட்டத்துக்கு வந்தது இளைவன் ராஜசிங்கனுக்குப் பொறாமையாயிருந்தது. மதுரையில் இறைவனின் அருளால் மீனாட்சி அம்மன் உடனறை சொக்கநாதரை வழிபட்டு காஞ்சி திரும்பினான் காடுவெட்டி சோழன். காடு வெட்டின சோழனுக்கு மீனாட்சி அம்மனையும் சொக்கநாதரையும் மறக்கவே முடியவில்லை. சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் மீண்டும் வழிபட சோழன் விருப்பம் கொண்டான். மீண்டும் இறைவனை தரிசிக்க ஒரே வழி பாண்டியனுடன் நட்பு கொள்ள விருப்பம் கொண்டான். அரசனாக இருந்த இராசேந்திர பாண்டியனுக்கு தங்கம் வைரம் வெள்ளிப் பொருட்களுடன் ஏராளமானவற்றை பரிசாகக் கொடுத்து அனுப்பினான். ஏற்கனவே காடுவெட்டி மதுரை சொக்கநாதரை வழிபட்ட விதம் சோழன் சொக்கநாதரிடம் கொண்டிருந்த பேரரன்பு ஆகியவற்றை தன் தந்தை சொல்லக்கேட்டு இராசேந்திர பாண்டியன் அறிந்திருந்தான். ஆகையால் அவன் காடிவெட்டியின் பரிசினை ஏற்றுக் கொண்டு அவனுக்கு முத்துமாலை உள்ளிட்ட ஏராளமான பரிசுகளை பதிலுக்கு கொடுத்து அனுப்பினான். இதனால் பாண்டிய மற்றும் சோழ நாடுகளுக்கு இடையில் நட்புறவு ஏற்பட்டது. இதனை மேலும் வலுவாக்கி சொக்கநாதரை உரிமையுடன் வழிபட சோழன் விரும்பினான். சோழனின் மகளை இராசேந்திர பாண்டியனுக்கு மணமுடித்துக் கொடுப்பதே அதற்கான வழி என்பதை சோழன் தீர்மானித்தான். தன்னுடைய விருப்பத்தை பாண்டியனுக்குத் தெரிவித்தான்.

இராசேந்திர பாண்டியனும் சோழனின் மகளை திருமணம் செய்ய சம்மதித்தான். இராசேந்திர பாண்டியனுக்கு அரசசிங்கன் என்றொரு தம்பி இருந்தான். ராஜசிங்கனுக்கு அரச சிங்கன் இராச சிம்மன் என்ற பெயர்களும் உண்டு. அரசசிங்கன் மிகவும் தீய எண்ணம் கொண்டவனாக இருந்தான். சோழ இளவரசியை இராசேந்திர பாண்டியன் மணப்பதை அவன் விரும்பவில்லை. எவ்வாறேனும் சூழ்ச்சி செய்து சோழ இளவரசியை தான் மணந்து சோழ பாண்டிய நாடுகளை தனதாக்கிக் கொள்ள விருப்பம் கொண்டான். ஆகையால் இராசேந்திர பாண்டியனுக்குத் தெரியாமல் பாண்டியப் படையுடன் அரசசிங்கன் காஞ்சியை நோக்கிப் புறப்பட்டான். தன்னுடைய வருகையை காடுவெட்டிக்கு தெரிவித்தான். மணமகனின் வீட்டிலிருந்து வரும் விருந்தினரை வரவேற்க காடுவெட்டி தடபுடலான ஏற்பாடுகளைச் செய்தான். இதில் மகிழ்ந்த அரசசிங்கன் காடுவெட்டியிடம் என்னுடைய அண்ணன் உங்களின் மகளை மணந்தாலும் உங்களிடம் இணக்கமாக நடந்து கொள்ள மாட்டார். நான் அவ்வாறு இல்லை. உங்களுடைய மகளை எனக்கு மணம் முடித்துக் கொடுத்தால் நான் உங்களின் விருப்பப்படி நடந்து கொள்வேன் என்று நயவஞ்சகமாகப் பேசினான். காடுவெட்டியும் சோழன் வலிந்து பெண்ணைக் கொடுத்தான் என்பதைவிட பாண்டியன் விரும்பி சோழ இளவரசியை மணம் முடித்தான் என்ற சொல்லே நமக்கு புகழாகும் என்று எண்ணினான். மேலும் இளையவன் மூத்தவனை விட பலசாலி அழகன் என்பதாலும் அவன் அழைத்து வந்த பாண்டியப் படையின் பலத்தைக் கண்டு அஞ்சியும் சோழன் இதற்கு ஒப்புக் கொண்டான். திருமணம் சிறப்பாக நடந்தது. இராஜேந்திரன் இது தெரிந்தும் மௌனமாகவே இருந்தான். பின்னர் இராசேந்திர பாண்டியனுக்கு ஓலை ஒன்றினை அனுப்பினான். அதில் எனது மகளை அரசசிங்கனுக்கு மணம் முடித்து விட்டேன். ஆகையால் நீ பாண்டிய நாட்டை அரசசிங்கனிடம் ஒப்படைத்து விடு. இல்லையேல் சோழபடை உன் நாட்டின்மீது போர் தொடுக்கும். பின் போரில் வெற்றி பெற்று அரசசிங்கனை பாண்டிய நாட்டின் அரசனாக்கி விடுவேன் என்று எழுதி இருந்தான்.

மதுரைக்கு மிக அருகில் சோழப்படையும் தன் தம்பி அழைத்துச் சென்ற தமது பாண்டியப் படையில் உள்ளவர்களும் யுத்தத்திற்காக காத்திருந்தார்கள். ஓலையை படித்த பின் இராசேந்திர பாண்டியன் திருக்கோவிலை அடைந்து சொக்கநாதரிடம் எம்பெருமானே நள்ளிரவில் தனியனாய் உன்னை வழிபட்ட உன் பக்தனாகிய காடுவெட்டிய சோழனும் தனது தம்பியும் இப்போது எனக்கு விரோதமாக படையெடுத்து வந்துள்ளார்கள். அன்று அவனுக்கு துணையாக இருந்த தாங்கள் இன்று அவனுடைய செயலுக்கும் துணை புரிவீர்களா? என்று மனம் வருந்திக் கேட்டான். அப்போது பாண்டியனே நீ கலங்க வேண்டாம். உன்னுடைய சிறிய படையுடன் நாளை சோழனை எதிர்கொள்வாய். வெற்றியை உமதாக்குவோம் என்று தெய்வாக்கு வானில் கேட்டது. இறைவனாரின் தெய்வாக்கினைக் கேட்டதும் இராசேந்திரன் அரண்மனை திரும்பி மறுநாள் சோழனுடனான போருக்கு ஆயத்தமானான். இறை நம்பிக்கையில் சோழனின் பெரும் படையை எதிர்த்தான் இராசேந்திர பாண்டியன். போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இறைவனார் கடும் வெப்பத்தை அவ்விடத்தில் ஏற்படுத்தினார். சோழ பாண்டிய படைவீரர்கள் தாகத்தினால் களைப் படைந்தனர். நிழலைத் தேடத் தொடங்கினர் இருபடை வீரர்களும். அப்போது பாண்டியனின் படைக்கு இடையில் இறைவனார் சிவனடியார் வேடம் தாங்கி தண்ணீர்ப் பந்தல் வைத்தார். பாண்டியனின் படை வீரர்களுக்கு தண்ணீரை வழங்கினார். இறைவனார் அளித்த நீரினை உண்ட பாண்டியப் படைவீரர்கள் களைப்பு நீங்கி புத்துணர்வுடன் சோழப் படையை எதிர்த்து போரிட்டு எளிதில் வென்றனர். காடுவெட்டிய சோழனும் ராஜசிங்கனும் கைது செய்யப்பட்டனர். இராசேந்திர பாண்டியன் அவர்களை மன்னித்து விடுதலை செய்து காடுவெட்டிய சோழனை மீண்டும் தன்னுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பினான். ராஜசிங்கனை மன்னித்து தன் நாட்டின் முக்கிய பதவியை அளித்த இராசேந்திர பாண்டியன் நீதிநெறி தவறாமல் மதுரையை ஆட்சி செய்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தன்னுடைய பக்தனாக இருந்தாலும் தர்ம வழியில் செல்லாமல் இருந்தால் இறைவன் அவர்களைக் காப்பாற்ற மாட்டார். என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.