ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 211

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 211

கேள்வி: தியானம் செய்யும் பொழுது மனம் அலை பாய்கிறது:

இது இயல்புதான். உன்னுடைய எண்ண ஓட்டத்தைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டேயிரு. எண்ணங்களை அடக்க முயன்றால் அது திமிறிக் கொண்டு எழும். எண்ணங்களை கவனிக்கப் பழகு. தானாகவே அனைத்தும் உன்னை விட்டு மெல்ல மெல்ல சென்று விடும். அதற்குத் தான் யாங்கள் (சித்தர்கள்) எடுத்த எடுப்பிலேயே தியானம் குறித்து உபதேசம் செய்யாமல் ஸ்தல யாத்திரை தர்மம் தொண்டு என்று கூறி அதன் மூலம் பாவங்களைக் குறைத்து பாவங்கள் குறைந்த நிலையில் ஒருவன் தியானத்தை செய்ய அமர்ந்தால் அந்த தியானம் சற்று சற்று எளிதாக வசப்படும். பொதுவாக மனிதர்கள் அறிந்திட வேண்டும். நாங்கள் இப்படி கூறுவதால் மனித விஞ்ஞானம் இதனை ஏற்றுக் கொள்ளாது என்றாலும் கூட ஓரளவு புற விஞ்ஞான அறிவும் அக மெய்ஞான அறிவும் ஓரளவு புரிந்த மனிதன் புரிந்து கொள்வான். ஏனைய மனிதர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வது ஏற்புடையது. அதாவது எத்தனையோ விஷய ஞானங்களை ஆய்வு செய்து இறைவன் அருளால் புறத்தே தன்னை வளர்த்துக் கொண்ட மனித குலம் இந்த பிரபஞ்சம் அனைத்துமே சில விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறது என்பதை அடிக்கடி மறந்து விடுகிறது. பிரபஞ்சம் மட்டுமல்லாது இந்த அண்ட சராசரங்களும் பல்வேறு விதிகளுக்கு உட்பட்டே இயங்குகிறது.

இந்த விதிகளை மீறி மனிதன் எதையாவது செய்ய வேண்டுமென்றால் அதற்கும் அந்த விதிமுறைகளுக்கும் ஒரு தொடர்பும் ஒரு எதிர்சக்தியும் இருக்க வேண்டும். அந்த வகையிலே ஒரு வாகனம் சீராக ஓட வேண்டும் என்றால் அந்த வாகனம் எல்லா வகையிலும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். வாயு உருளைகள் வடிவம் மிகவும் சிறப்பான முறையிலும் நல்ல முறையிலும் இருக்க வேண்டும். வேகமாக செல்வதற்கென்று வாகனம் வடிவமைக்கப்பட்டால் அதற்குரிய வாயு உருளை அகமில்லாமல் இருக்க வேண்டும். உதாரணமாக அதிக வேகம் என்றால் வாகனத்தின் எடை குறைவாக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த வாகனம் எந்தளவிற்கு விரைவாக செல்கிறதோ அந்தளவிற்கு செல்லுகின்ற பாதையிலே வாயு உருளையால் உராய்வுத் தன்மை ஏற்படும். இந்த உராய்வு எதிர்விசையை ஏற்படுத்தி வேகத்தை மட்டுப்படுத்தும். அந்த உராய்வு தன்மையை குறைப்பதற்கென்று அந்த வாயு உருளைகள் வடிவமைக்கப் பட்டிருந்தால் அது எதிர் விளைவை குறைவாகத் தரும். அப்படி குறைக்கப்பட வேண்டுமென்றால் அதன் ஒட்டு மொத்த பாகத்திலே ஓடுகின்ற தளத்திலே மிக மிக மிக குறைவான பகுதியே அந்த வாயு உருளை படவேண்டும். அந்த அளவிற்கு அது குறைவாக படும் பொழுதுதான் குறைவான எதிர் விளைவுகள் ஏற்படும். வேகம் மட்டுப்படாது. இதையெல்லாம் தாண்டி ஓடுகின்ற ஓடுதளம் என்பது சமச்சீராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது பொது விதி. அதே சமயம் வேகம் எந்தளவிற்கு முக்கியமோ அந்த வாகனத்தை சட்டென்று நிறுத்த வேண்டுமென்ற நிலை வந்தால் அந்த சமச்சீரான தளம் அதற்கு பாதகத்தை தந்துவிடும். அதற்காக சற்றே சீரற்ற ஓடுதளத்தை உருவாக்கினால் அது ஓரளவு பாதுகாப்பைத் தந்தாலும் வேகத்தை மட்டுப்படுத்தும்.

இப்படி எல்லாவகையிலும் பார்த்து அதிவிரைவாக ஓடுவதற்கென்று ஒருவகையான ஓடுதளமும் அதற்கேற்ற வாகனமும் அதில் செல்ல வேண்டும். மற்றபடி சராசரி மாந்தர்கள் (மனிதர்கள்) பயணம் செல்கின்ற அந்த பயண ஓடுதளமானது அதிக விரைவை ஏற்க வல்லாத நிலையில்தான் இருக்க வேண்டும். ஒரு வாகனம் அதன் உச்சகட்டத்தில் செல்கிறதென்றால் என்ன பொருள்? வாகனம் மட்டும் செல்லவில்லை. வாகனத்தில் செல்கின்ற மனிதர்களும் அதே வேகத்தில்தான் செல்கிறார்கள் என்று பொருள். சட்டென்று வாகனத்தை ஏதாவது ஒரு காரணத்திற்காக நிறுத்தவேண்டிய ஒரு தருணம் வந்துவிட்டால் வாகனத்தின் உள்ளே இருக்கின்ற தடையமைப்பு உள்ளேயிருக்கின்ற மனிதர்களை தடை செய்வதில்லை என்பதால்தான் சிறு விபத்துகளும் பெருவிபத்துகளும் ஏற்படுகின்றன. எப்படிப் பார்த்தாலும் தெளிவற்ற மனிதர்கள் குழப்பமான மனிதர்கள் மூடத்தனமான மனிதர்கள் இருக்கின்ற இந்த பரந்த பகுதியிலே அதிக வேகம் என்பது ஏற்புடையதல்ல. எதிர் நோக்கின்ற வேகத்தை விடவே 60 கல் வேகம் என்பதே அதிகம்தான். இப்படி குறைவாக செல்வதால் என்ன லாபம் வந்துவிடும்? என்றெல்லாம் பாராமல் பாதுகாப்பை மட்டும் கருதி வாகனத்தை இயக்குவதே எம்வழி (அகத்திய மாமுனிவர்) வரும் சேய்களுக்கு (பிள்ளைகளுக்கு) ஏற்புடையதாகும். ஏனென்றால் வாகனத்தின் பாகங்கள் பல்வேறு விதமான முறையிலே ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மனிதர்கள் எண்ணிக் கொண்டாலும் கூட அதிக அனலும் அதிக உராய்வும் கண்பார்வைக்குத் தெரியாத வெடிப்புகளையெல்லாம் ஏற்படுத்தி திடீர் அழுத்தத்தால் அவைகள் விலகவும் சுயகட்டுப்பாட்டை இழக்கவும் ஏற்புடையதான ஒரு சூழலில்தான் இருக்கிறது. இறைவன் கருணையும் ஒருவனின் ஜாதகப்பலனும் நன்றாக இருக்கும் வரையில் நலமே நடக்கும். எப்பொழுது ஒருவனுக்கு பாவ வினை குறுக்கே வரும்? என்பதை மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. எனவே இறைவனை வணங்கி அமைதியான முறையில் சாந்தமான முறையில் குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்குதலே பொதுவாக அனைவருக்கும் ஏற்புடையதாகும். ஆனால் மனித மனம் இதை எந்தளவு ஏற்கும் எந்தளவு ஏற்காது என்பது எமக்குத் தெரியும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 210

கேள்வி: திமிரி (வேலூர் மாவட்டம்) ஆலயத்தில் த்வஜஸ்தம்பம் (கொடிமரம்) எவ்வித இடையூறுமின்றி ஸ்தாபிதம் செய்யப்படவும் தீர்த்தத்தின் மகிமை பற்றியும் அந்த குளத்தில் நீராடினால் என்ன பயன்? என்றும் அந்த குளத்திற்கு கரை கட்டும் வேலை விரைவில் நடைபெற தங்கள் ஆசியும் மேலும் இந்த ஆலயத்தின் சிறப்பை இந்த இறைவனின் சிறப்பைப் பற்றியும் சொல்லி அருள வேண்டும்?

இறைவன் பெயர்: அருள்மிகு ஸ்ரீ சோம நாத பாஷாண லிங்கேஸ்வரர்.

திருக்கோவில் உள்ள இடம்: திமிரி வேலூர் மாவட்டம்.

இறைவனின் கருணையைக் கொண்டு முன்பே அன்னவனுக்கு சிலவற்றை இயம்பியிருக்கின்றோம். இறைவன் விருப்பத்திற்கேற்பவே அனைத்தும் நடந்து கொண்டேயிருக்கிறது. எனவே தக்க காலத்தில் த்வஜஸ்தம்பம் (கொடிமரம்) சிறப்பாய் அமையும். ஏன் இத்தனை தடைகள் வருகின்றன. ஏன் ஏக த்வஜஸ்தம்பம் ஆயத்தம் செய்தும் அது பலனளிக்காமல் போனது? என்பதற்கெல்லாம் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. ஆயினும் கூட அன்னவனே அறிவான். ஐயன் (சிவபெருமான்) லிங்க ரூபமாய் வெளிப்பட்டு பல ஆண்டுகள் பூர்த்தியான பிறகே ஏகாந்த ஆலயமும் கலச விழாவும் காண நேர்ந்தது. அதுவும் இறை விருப்பமே. எனவே த்வஜஸ்தம்பமும் தீர்த்த நிலையும் விரைவில் இறைவன் அருளால் நன்றாக தம்மை அமைத்துக் கொள்ளும். இது போல நிலையிலே பொதுவாய் மனிதன் இயற்கை சார்ந்த எந்த விஷயங்களை பயன் படுத்தினாலும் அதனை ஊறு (இடையூறு) செய்யாமல் பயன்படுத்தினால் அது என்றென்றும் அவனுக்கு தொடர்ந்து நலத்தை நல்கும். ஆனால் ஒரு மனிதன் இயற்கை சார்ந்த எந்த விஷயங்களையும் குறிப்பாய் நீர் நிலைகளை பயன்படுத்தும் பொழுது அதனை முறையாக பயன்படுத்தாமல் முறை தவறி பயன் படுத்துவதால் நீர் தோஷத்திற்கு ஆளாகி நீரால் அதிக பாதிப்பு ஒன்று நீர் குறைந்து பாதிப்பு அல்லது நீர் அதிகமாகி பாதிப்பு வருகிறது.

திமிரி ஆலயம் என்று இல்லை. எந்த ஆலயத்திலும் தீர்த்தம் என்பது மிக மிக புனிதமானது உயர்வானது. அதனைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது மனிதனின் கடமை. பல ஆலயங்களில் தீர்த்தம் இருந்த இடமே இல்லாமல் போயிருக்கிறது. இன்னொன்று தீர்த்தம் இருந்தாலும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் அதனை மனிதன் வைத்திருக்கிறான். எனவே அந்த தீர்த்த தடம் நன்றாய் சுத்தி செய்யப்பட்டு பூரணத்துவம் பெற்றாலும் சிறிதளவு நீரையெடுத்து தெய்வ காரியங்களுக்கு அபிஷேகங்களுக்கு பயன்படுத்துவதே இத்தருணம் ஏற்புடையது. மனிதர்கள் அதிலே நீராடுவதோ வேறு செயல்கள் செய்வதோ ஏற்புடையது அல்ல. அப்படியானால் அடுத்ததொரு ஐயம் வரும். ஒரு மனிதன் இந்த தீர்த்தத்தில் இறங்கி நீராடினால் அதனால் அந்த தீர்த்தம் மாசுபட்டால் அது எப்படி புனித தீர்த்தமாகும் என்று. உண்மையில் தெய்வீகம் சார்ந்த எதனையும் மனிதனால் மாசுபடுத்த முடியாது. ஆனால் மனிதனுக்கு தரவேண்டிய நல்விஷயங்களையெல்லாம் இறைவன் சமயத்தில் மறை பொருளாக வைத்திருக்கிறார். அந்த சூட்சுமத்தை புரிந்து கொள்ளாமல் மனிதன் அதனை தவறாக கையாளும் பொழுது கிடைக்க வேண்டிய நற்பலன் கிட்டாமல் வேறு வேறு பலன்கள் அவனுக்கு வந்துவிடுகிறது. எனவே தீர்த்தம் பாதிக்கப்படும் என்று நாங்கள் அந்த நோக்கில் கூறவில்லை. அவ்வாறு நீராடாமல் இருப்பது தற்சமயம் அங்கு வரும் பக்தர்களுக்கு நன்மையைத் தரும். வேண்டுமானால் தூய சிந்தனையுடன் தூய தேகத்துடன் அந்த தீர்த்தத்தை எடுத்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யும் நோக்கிலே பயன்படுத்தலாமே தவிர மனிதர்களுக்கு அதனை தற்சமயம் பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல. அந்த தீர்த்தம் நன்றாய் பொலிவு பெற்ற பிறகு அந்த தீர்த்தத்தையும் அதுபோல் திமிரி ஐயன் இருக்கும் அந்த தீர்த்த நிலைக்கு அந்த தீர்த்தத்தையே வைத்துக் கொள்ளலாம்.

அருள்மிகு ஸ்ரீ சோம நாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவிலைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

சுலோகம் -107

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-60

அர்ஜூனா பற்று அழியாததால் கலக்குபவைகளான புலன்கள் முயற்சியுள்ள புத்தியாலியான மனிதனின் மனதைக் கூட பல வந்தமாக இழுத்துச் சென்று விடுகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மனிதன் தனது புலன்களை ஆசைகளின் வழியாக செல்ல விடாமல் தனக்குள் உள்ளிழுத்து வைத்துக் கொண்டு மன உறுதியுடன் இருந்தாலும் மனதில் இருக்கும் ஆசைகளை அழிக்காவிட்டால் எவ்வளவு புத்திசாலியான மனிதனின் மனதைக் கூட புலன்களானது பலவந்தமாக இழுத்துச் சென்று விடும். ஆகவே மனிதன் தன் புலன்களை ஆசைகளின் வழியாக செல்ல விடாமல் உள்ளிழுத்துக் கொண்டதும் தொடர்ந்து தனக்கான யோக சாதனைகளை (எப்படி என்பதை அடுத்த சுலோகத்தில் சொல்கிறார்) செய்து மனதை ஒரு நிலைப்படுத்தி தனக்குள் இருக்கும் இறைவனை உணர முயற்சிக்க வேண்டும் இறைவனை கண்டு உணர்ந்தால் அனைத்து ஆசைகளும் அழிந்து விடும் அதன் பிறகு புலன்கள் மனதை இழுக்க முடியாது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

திருச்செந்தூர் முருகன் பழைய புகைப்படங்கள்

உற்சவர்
கோவில் யானை கோவிலுக்குள் நுழையும் காட்சி

மூன்று தலை நந்தி

கர்நாடக மாநிலத்தில் ஹம்பி என்ற ஊரில் புகழ்பெற்ற கோவிலாக விருபாட்சர் கோவிலில் உள்ளது. இங்கு மூன்று தலைகளும் ஒரே உடலும் கொண்ட நந்தியானது உலகில் வேறு எங்கும் இது போன்ற நந்தி கிடையாது. இக்கோவிலில் மூன்று கால வழிபாடு நடைபெறுகிறது. நந்தியின் மூன்று தலை பகுதிகள் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தலைப்பகுதி மட்டும் சிதைந்த நிலையில் தற்போது காணப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவில்களில் இக்கோவிலின் கோபுரம் மிகவும் உயரமானதாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 209

அகத்தியர் மாமுனிவரின் பொதுவாக்கு

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் யாம் அடிக்கடி எமை (அகத்திய மாமுனிவர்) நாடுகின்ற மாந்தர்களுக்கு கர்ம வினைகளின் தாக்கம் குறித்து எடுத்து இயம்பிக் கொண்டே இருக்கிறோம். இந்த பாவவினைகள் ஒரு மனிதனை சுற்றி பின்னிப் படர்ந்து கொண்டே இருக்கும் அந்த நிலையிலே ஒன்று நல்லதை செய்ய மனம் விரும்பாது. அடுத்தாக மேலும் தவறு மேல் தவறு செய்து பாவங்களை சேர்த்துக் கொள்ளவே தூண்டும். ஆனால் அந்த பல்வேறு பாவங்களிலும் ஏதாவது ஒரு புண்ணியம் (அவன்) இறை வழியில் வர வேண்டும் என்று இருக்கும் பட்சத்திலே அந்த ஆத்மாக்கள் மட்டுமே பிறக்கும் தருணம் ஓரளவு மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இறை ஆலயங்களை தரிசித்து இயன்ற தர்மங்களை செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெறும் தனத்தை சேர்த்துக் கொண்டு அதனால் ஆவது என்ன? என்ற ஒரு முடிவுக்கு வரும். ஆனால் அந்த நிலையில் வந்தாலும் மனம் தடுமாறும். பிறரை ஒப்பிட்டுப் பார்த்து அவர்களெல்லாம் இது போல் எதுவும் செய்யாமல் நன்றாக வாழ்கிறார்களே? நேற்றை விட இன்றைக்கும் இன்றை விட நாளைக்கும் பொருளாதாரத்தில் உயர்ந்து காணப்படுகிறார்களே? நாம் அவ்வாறில்லாமல் கடவுள் பிறவி தர்மம் என்று ஒருவேளை தவறாக புரிந்து கொண்டு செல்கிறோமோ என்றெல்லாம் குழப்பம் வரும்.

இது போன்ற தருணங்களில் எம் (அகத்திய மாமுனிவர்) வழியில் வருகின்ற மனிதர்கள் பொறுமையோடும் திட சிந்தனையோடும் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிலையிலே ஒரு மனிதனின் வினைப் பயனை ஒட்டியேதான் வாழ்வு முழுவதும் நடக்கும் என்றாலும் யாம்(அகத்திய மாமுனிவர்) அந்த வினையில் வேறு வகையான மாற்றங்கள் செய்கிறோமோ இல்லையோ தொர்ந்து இறை வழியில் வருவதற்குண்டான வலுவை தரத்தான் நாங்கள் (சித்தர்கள்) எமை நாடுகின்ற மாந்தர்களுக்கு உதவுகிறோம். ஆனால் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. எமை நாடுகின்ற மனிதர்கள் மனோரீதியாக வல்லவனாகவும் இருக்க வேண்டும். அது எங்ஙனம் என்றால் தன்னை சுற்றியுள்ள மனிதர்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். வெறும் தவறுகளையே செய்து கொண்டு சுயநலமாய் வாழ்ந்து கொண்டு தனம் தான் பிரதானம் என்று வாழ்கின்ற மனிதர்களுக்கே அத்தனை தன்னம்பிக்கையும் தைரியமும் இருக்கும் பொழுது நிரந்தரமில்லாத ஒரு வாழ்வை நோக்கி செல்கின்ற அந்த மனிதனே திடமாக இருக்கும் பொழுது இறைவனை நோக்கி செல்கின்ற ஒரு மனிதன் திடமாக இருக்க வேண்டாமா? சிறிய கஷ்டம் வந்து விட்டாலும் கூட சித்தர்களை நம்பினோம். சித்தர்கள் இப்படி செய்து விட்டார்களே என்று அங்கலாய்ப்பது என்பது எம்(அகத்திய மாமுனிவர்) வழியில் வருகின்ற மனிதர்களுக்கு இயல்பாகிக் கொண்டே இருக்கிறது. அல்லது இவையெல்லாம் நடக்கப் போகிறது என்று சித்தர்களுக்குத் தெரியாதா? ஏன் எச்சரிக்கைவில்லை? என்றும் கேட்கிறார்கள்.

எதைக் கூற வேண்டும், எதைக் கூறக் கூடாது என்று நாங்கள் மட்டும் முடிவெடுப்பதில்லை. இந்த இந்த ஆத்மாக்களுக்கு இதை இதை உணர்த்து என்று இறை கட்டளையிடுகிறது. அந்த கட்டளைக்கு ஏற்பவும் எமை நாடுகின்ற மனிதனின் மனோ திடத்திற்கும் பக்குவத்திற்கும் ஏற்பவும்தான் நாங்கள்(சித்தர்கள்) வாக்கை பகிர்ந்து கொண்டே இருக்கிறோம். ஆக கடுமையான ஊழ்வினை தோஷம் ஒரு மனிதனை பாடாய் படுத்துகிறது. எந்த தொழில் செய்தாலும் நஷ்டம் வருகிறது. அந்த நிலை இன்னும் அவனுக்கு 20 ஆண்டுகள் இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலை உள்ள ஒரு மனிதன் எமை நாடுகிறான். இன்னும் 20 ஆண்டுகள் உனக்கு கஷ்டம் தான் நீடிக்கும் என்று எமது வாக்கால் கூற இயலுமா? அவனுக்கு இருக்கின்ற கர்ம வினைகளை எப்படி குறைக்க வேண்டும்? எந்த வினையை எப்படி மாற்ற வேண்டும் என்றெல்லாம் நாங்கள் அனுமானம் செய்து இறையிடமும் உத்தரவைக் கேட்டு அதற்கு ஏற்றாற் போல் நாங்கள் செய்து கொண்டே இருக்கிறோம்.

அந்த நிலையிலே அது போல மனிதன் வரும் பொழுதெல்லாம் இதை செய் அதை செய் என்றும் சில சமயங்களில் 3 மாதங்கள் ஆகட்டும் 6 மாதங்கள் ஆகட்டும் முன்பு உரைத்த வழிபாட்டை செய் என்றும் கூறி அவனுடைய கர்ம வினையை குறைக்க முயற்சி செய்கிறோம். ஆனால் எமது வாக்கையோ வாக்கின் நுட்பத்தையோ சரிவர புரிந்து கொள்ள முடியாத நிலையிலே மனிதன் குழம்புகிறான். இங்கு வந்து விட்டாலோ சித்தர்களின் வாக்கை கேட்டு விட்டாலோ மறுதினமே எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று எண்ணுகிறான். தீரலாம் தீருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த அளவிற்கு ஒரு ஆன்மா தன்னை தயார் செய்து தகுதி படைத்திருக்கிறதா? என்று பார்க்கவேண்டும். பொறுமை இருக்க வேண்டும். எனக்கு இப்படியெல்லாம் சோதனை வருகிறது. நான் நம்புகிறேன். என் தாய் தந்தை இதை (ஜீவநாடி) நம்பவில்லை. என் மனைவி நம்ப மறுக்கிறாள். என் குழந்தைகள் நம்பவில்லை. அவர்களையும் உங்கள் வழியில் மாற்றுங்கள் என்று கோரிக்கை வைப்பதும் நகைப்புக்குரியது (சிரிப்புக்குரியது). யாருக்கு இதில் எப்பொழுது ஆர்வம் வரவேண்டும்? யாருக்கு இந்த வழி ஏற்புடையது என்றெல்லாம் பிறக்கும் பொழுதே விதி தீர்மானித்து விடுகிறது. அதைத் தாண்டி எம் (அகத்திய மாமுனிவர்) வழியில் வரக்கூடாத மனிதனை வேறு வழியில்லாமல் இங்கு வருகின்ற மனிதன் அழைத்து வந்தாலும் திசை மாறிதான் செல்வான்.

யாரையாவது அழைத்து வந்து இவன் எனக்கு வேண்டிய மனிதன். நல்ல அறப்பணிகள் செய்கிறான். இவனுக்கு வாக்கைக் கூறுங்கள் குருதேவா என்றால் அந்த மனிதனின் அந்த பிறவியை மட்டும் ஒரு சில கால பழக்கம் மட்டுமே இங்கு வருகின்ற மனிதனுக்குத் தெரியும். ஆனால் அவனின் ஆதியோடு அந்தரங்கம் அனைத்தும் எமக்குத்(அகத்திய மாமுனிவர்) தெரியும். அவனுக்கு வாக்கு உரைப்பதால் எவ்விதமான பலனும் இல்லை என்பது எமக்குத் தெரியும். அது மட்டுமல்லாது பல்வேறு மனிதர்கள் மூடர்களாகவே பிறந்து மூடர்களாகவே வாழ்ந்து மூடர்களாகவே இறக்கிறார்கள். அது அவனின் கர்மவினை. அதாவது அவர்களை பொறுத்தவரை புறத் தோற்றம் என்பது மிக முக்கியம். ஒரு ஆன்மீக அமைப்புக்கு செல்ல வேண்டும் என்றால் அந்த ஆன்மீக அமைப்பு உலகியல் ரீதியாக பலரும் அறிந்த ஒன்றாக இருக்க வேண்டும். இவன் உலகியல் ரீதியாக யாரையெல்லாம் மதிக்கிறானோ அவர்கள் எல்லாம் அங்கு வந்து போக வேண்டும். அந்த புறத் தோற்றம் ஜொலிக்க வேண்டும். அங்கு அவன் யாரை சந்திக்கிறானோ எந்த சந்தியாசியை சந்திக்கிறானோ அந்த போதகன் மிக உயர்ந்த இடத்திலே அமர்ந்து கொண்டு மிகவும் ஆணவத்தோடு நடந்து கொண்டாலும் அவனை சுற்றி பல்வேறு மனிதர்களும் இருக்க வேண்டும். அப்பேற்பட்ட மனிதனைதான் ஞானி என்றும் இறையருள் பெற்றவன் என்றும் பல்வேறு மனிதர்கள் நம்புகிறார்கள். தனம் இல்லாமலும் ஒரு கிழிந்த குடிசையில் அமர்ந்து கொண்டும் ஒரு அழுக்கு துணியை சுற்றிக் கொண்டும் யாராவது ஒருவன் போதனை செய்தால் யாராலும் அந்த ஞானியை அடையாளம் காட்ட முடியாது. ஞானிகளும் தன்னை நாடி வருகின்ற மனிதர்கள் ஆயிரக்கணக்கில் வர வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஒரு சிலர் வந்தாலும் உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் வந்தால் போதும் என்று என்றுதான் எண்ணுகிறார்கள்.

அது போல்தான் இந்த ஜீவ அருள் ஓலையும். இது எல்லோருக்கும் ஏற்றது அல்ல. இதைப் புரிந்து கொள்வதற்கும் ஒரு மனிதனின் ஜாதகத்தில் சில ஜாதக பலன்கள் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் லக்னத்தை சுபகிரகங்கள் பார்க்கவேண்டும். அதிலும் குரு பார்க்க வேண்டும். (இவ்வாறு) இல்லாத மனிதர்களை எத்தனை முறைதான் அழைத்து வந்தாலும் போராடி எடுத்து கூறினாலும் இங்கு அமர்ந்து நல்ல பிள்ளை போல் கேட்டு விட்டு பிறகு வெளியே சென்று இவையெல்லாம் ஏற்புடையதல்ல. இதையெல்லாம் நம்பமாட்டேன் என்று கூறிவிட்டு எங்கு சென்றால் ஏமாறுவானோ அங்கு சென்று தான் ஏமாறுவான். இவையெல்லாம் அவனவன் கர்மவினை என்று எடுத்துக் கொண்டு இங்கு வருகின்றவர்கள் அமைதியை கடைபிடித்து எமது வழியில் வர நல்லாசிகள் கூறுகிறோம்.

சுலோகம் -106

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-59

புலன்களின் மூலம் போகப் பொருட்களை ஏற்றுக் கொள்ளாத மனிதனுடைய புலன் நுகர் பொருட்களை மட்டுமே விலகுகின்றன. ஆனால் அவற்றில் தங்கியுள்ள பற்று விலகுவதில்லை. இந்த புத்தி உறுதியானவனுக்கு பரமாத்வை தரிசித்த பிறகு அந்த பற்றும் விலகி விடுகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உலகப் பற்றுகளின் மீது புலன்கள் செல்லாதவாறு தனக்குள் இழுத்துக் கொண்ட உறுதியுடையவனின் புலன்கள் உள்ளிழுக்கப் படுவதால் ஆசைப்படும் பொருளின் மீது மட்டுமே அவனது புலன் விலகுகிறது. ஆனால் பொருளின் மீது இருக்கும் ஆசை அவனிடம் இருந்து விலகுவதில்லை. ஆனால் இந்த புலன்களை உள்ளிழுத்துக் கொண்டதன் பயனாக அவனது மனம் தனக்குள் ஒரு முகப்படுத்தப்பட்டு தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து தரிசிப்பான். இறைவனின் தரிசனத்தை தனக்குள் கண்ட பிறகு அவன் அந்த பொருளின் மீது வைத்திருந்த ஆசையும் அவனை விட்டு விலகி விடுகிறது.

யோக தட்சிணாமூர்த்தி

யோக தட்சிணாமூர்த்தி அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படுபவர் வடிவமாகும். யோக நிலையைப் பிரம்ம குமாரர்களுக்குக் கற்பித்து அத்தகைய யோக நிலையில் இருந்துக் காட்டிய உருவமே யோக தட்சிணாமூர்த்தியாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 208

கேள்வி: தண்டபாணி என்று சொல்லப்படுவதன் பொருள்:

இறைவன் அருளால் தண்டமும் அங்கே ஒரு ஆயுதமாக பயன்படுகிறது. அன்பை போதிக்கின்ற மகான்களும் ஞானிகளும் ஆயுதம் வைத்திருப்பார்களா? அப்படியிருக்க அன்பே வடிவான கருணையே வடிவான இறைவன் கையில் ஆயுதம் இருக்குமா? அப்படியல்ல. இறைவன் கையில் ஆயுதத்தை வைத்ததின் மர்மமும் சூட்சுமமும் என்ன? மனிதனுக்கு ஒரு பாதுகாப்பு. ஒரு காவலன் கையில் இருக்கின்ற ஆயுதம் மனிதனுக்கு அச்சத்தை தராது ஏன்? அது சமூகத்தைக் காப்பதற்காக அவனுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு அதிகாரம். நாட்டை பாதுகாக்க ரணகளத்தில் பணியாற்றுகின்ற மனிதரிடம் ஆயுதம் இருக்கிறது. அந்த ஆயுதத்தை யாரும் அச்சத்தோடு பார்ப்பதில்லை. ஆனால் ஒரு கள்வன் கையில் ஆயுதம் இருந்தால் அச்சத்தோடு பார்க்கிறார்கள். எனவே ஆயுதம் என்பது பொதுவாக பார்த்தால் அது அஃறிணை. ஆனால் யாரிடம் இருக்கிறது? என்பதை பொறுத்துதான் அதன் பலனும் பலாபலனும். ஆனாலும்கூட இறைவன் கையில் ஆயுதம் இருப்பது அறியாமையில் இருக்கின்ற மனிதனுக்கு உன்னை இறைவன் பாதுகாப்பார். இறைவன் பராக்ரமசாலி பலசாலி. உலகிலுள்ள சக்திகளுக்கெல்லாம் சக்தி என்பதை புரிந்து கொள்ளவே இறைவனுக்கு பலவிதமான கரங்களும் (கைகளும்) சிரங்களும் (தலைகளும்) கொடுக்கப்பட்டன. ஆனால் அப்படிதான் இறைவன் இருக்கிறாரா? இல்லை. நினைத்தவர் தம் மனதிலே எப்படி நினைக்கிறார்களோ அப்படி காட்சி தரக்கூடிய நிலையில்தான் பரம் பொருள் இருக்கிறது.

எனவே பழனி முருகனிடம் தண்டம் ஆயுதமாக இருப்பதன் மர்மமே பொதுவாக முருகனுக்கு எது ஆயுதம்? வேல் ஆயுதம். அந்த வேல் மனிதன் கையில் இருக்கின்ற வேல் அல்ல. இந்த வேல் ஆழமாக இருக்கும். அகலமாக இருக்கும். நீளமாக இருக்கும். குளுமையாக இருக்கும். இது ஞானவேல். அன்னை சக்தி தந்ததினால் சக்திவேல் என்றாலும் அது முழுக்க முழுக்க ஞானத்தை தரக்கூடிய வேலாகும். இரத்தின வேல் என்று கூட வேலிலே ஒருவகை இருக்கிறது. வைர வேலும் இருக்கிறது. சில வகை தோஷங்களை வைரம் போக்கும். சில வகை தோஷங்களை வைரம் தரும். வைர வேல் தரிசனத்தைப் பார்த்தாலே மனிதர்களுக்கு சில வகை தோஷங்கள் நீங்கும். சில முருக ஆலயங்களிலே வைர வேல் தரிசனம் என்பது இருக்கிறது. ஆக இந்த வேலானது ஞானத்தைக் குறிக்கிறது. இப்பொழுது இவள் கேட்டாளே பாசத்திலிருந்து பந்தத்திலிருந்து உலக மாயையிலிருந்து எவ்வாறு விடுபடுவது? என்று இவற்றையெல்லாம் அறுக்கின்ற ஆயுதம்தான் தண்டாயுதம்.

ஆக மனிதனுக்கு யார் எதிரி? என்றால் புறத்தே இருக்கின்ற மனிதன் எதிரி அல்ல. அவன் மனதிலே விளையக் கூடிய களைகள் பதர்கள் தேவையற்ற எண்ணங்கள் சபலங்கள் கீழான எண்ணங்கள் இவற்றையெல்லாம் விட்டுவிட முடியாமல் மனிதன் தவிக்கிறான். தடுமாறுகிறான். இவற்றையெல்லாம் அடித்து நொறுக்கக்கூடிய ஆயுதமே தண்டாயுதம் வேலாயுதம். இது போன்ற இறையுடன் இருக்கக்கூடிய ஆயுதம் அசுரர்களை அழிப்பதாக புராணங்கள் கூறுவதைக் கொண்டு அசுரர்கள் என்றால் எங்கோ புறத்தே இருக்கிறார்கள். கோரப் பற்களோடும் மிகப்பெரிய பயமுறுத்தும் கண்களோடும் இருக்கிறார்கள். கருகரு என்று வருவார்கள். மனிதர்களை மிரட்டுவார்கள் என்று எண்ணுகிறார்கள். அந்த அசுரர்களைக்கூட மனிதர்கள் சமாளித்துவிடலாம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றானே பொறாமை எனும் அசுரன் காமம் எனும் அசுரன் சபலம் எனும் அசுரன் வேதனை எனும் அசுரன் விரக்தி எனும் அசுரன் கோபம் எனும் அசுரன் இவற்றைதான் மனிதனால் விரட்ட முடியாது. இவற்றை விரட்டக்கூடிய ஆயுதம் தண்டாயுதம். அந்த தண்டு முதுகிலே மையப் பகுதியில் இருக்கும். அது முதுகுத்தண்டு. இது தாமரையின் மையத்திலே இருக்கிறது. அது தாமரைத்தண்டு. தண்டு என்றாலே பொதுவாக அதன் பொருள் மையம். அங்கே தண்டம் என்பது மனிதரிடம் இருக்கக் கூடிய எல்லா வகையான எதிரான குணங்களையும் நீக்கக்கூடிய ஒரு மையம். மனிதனுக்கு மையம் எது? புருவ மத்தி. அந்த புருவ மத்தியை நோக்கி ஒரு மனிதன் சிந்தனை செய்தால் சர்வகாலமும் புருவ மத்தியை கவனித்துக் கொண்டே வந்தால் அவனுடைய சிந்தனை ஒழுங்குபடும். நேர்படும் நிரல்படும் உறுதிபடும். எனவே மனிதனுக்கு மையம் புருவ மத்தி. அங்கே தண்டு மையம். அந்த மையத்தை நோக்கி இவன் சென்றால் இவன் மையம் சரியாகும் என்பதன் பொருள்தான் தண்டாயுதமாகும்.