ஸ்ரீ வாதிராஜர்

ஸ்ரீ வாதிராஜரின் ஸ்ரீ மடத்தை ஒட்டி தனியார் ஒருவருக்குச் சொந்தமான பரந்த நிலப்பரப்பு இருந்தது. அதன் உரிமையாளர் கடலையை விதைத்திருந்தார். அது செழிப்பாக வளர்ந்திருந்தது. ஒரு நாள் காலையில் உரிமையாளர் நிலத்தைப் பார்வையிட வந்தபோது ஒரு பகுதியில் வளர்ந்திருந்த பயிர்கள் சிதைவடைந்து அலங்கோலமாக இருந்தன. கவலையுடன் வீடு திரும்பிய உரிமையாளர் மறு நாள் காலையிலும் போய்ப் பார்த்தார். அன்றும் மேலும் சில பகுதிகள் சேதம் அடைந்திருந்தன. எப்படியும் இன்று இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்த உரிமையாளர் அன்று இரவு நேரத்தில் அங்கேயே ஒரு பக்கத்தில் மறைவாகக் காத்திருந்தார். சற்று நேரத்தில் ஸ்ரீ வாதிராஜரின் ஸ்ரீ மடத்தில் இருந்து, கண்ணைக் கவரும் வெள்ளை நிற குதிரை ஒன்று வெளிவந்தது. அது நேராக வயலை அடைந்தது. கடலைச் செடிகளைச் சேதப்படுத்தியது. இதைக் கவனித்த நிலத்தின் உரிமையாளர் குதிரையை விரட்டினார். அந்தக் குதிரை அவரிடமிருந்து தப்பித்து ஓடி ஸ்ரீ மடத்துக்குள் புகுந்தது. வீடு திரும்பிய உரிமையாளர் மறு நாள் காலையில் ஸ்ரீ வாதிராஜரிடம் போய் நடந்ததை விவரித்து நியாயம் கேட்டார்.

மடத்தில் அப்படிப்பட்ட குதிரை எதுவும் கிடையாதே நிஜமாகத்தான் சொல்கிறாயா எனக் கேட்டார் ஸ்ரீ வாதிராஜர். நானே என் இரண்டு கண்களாலும் பார்த்தேன் சுவாமி எதற்கும் இன்று இரவு மறுபடியும் பார்த்து விட்டு நாளை காலையில் வந்து சொல்கிறேன் என்ற உரிமையாளர் ஸ்ரீ வாதிராஜரை வணங்கி விடை பெற்றார். அன்று இரவும் அதே வெள்ளை குதிரை மடத்திலிருந்து வெளி வந்தது. வழக்கம் போல் நிலத்தில் புகுந்து கடலைச் செடிகளைத் தின்று சேதப்படுத்தியது. பிறகு முந்தைய நாள் போலவே ஸ்ரீ மடத்துக்குள் நுழைந்தது. ஸ்ரீ மடத்தின் வாயில் வரை அதை துரத்தி வந்த உரிமையாளரால் அன்றும் பிடிக்க முடியவில்லை. எனவே மறு நாள் பொழுது விடிந்ததும் ஸ்ரீ வாதிராஜரின் முன்னால் வந்து நின்றார். சுவாமி நேற்றிரவும் என் கண்ணாரக் கண்டேன். வெள்ளை வெளேர் என்ற குதிரை ஒன்று இந்த ஸ்ரீ மடத்தில் இருந்து வெளியே வந்தது. எனது நிலத்தில் புகுந்து செடிகளை நாசப்படுத்தியது. விடாமல் துரத்தி வந்த என் கைகளில் அகப்படாமல் அது ஸ்ரீ மடத்துக்குள் நுழைந்து விட்டது என்றார் உரிமையாளர். நான் நேற்றே சொன்னேன். ஸ்ரீ மடத்தில் குதிரை கிடையாது. ஆனால் நீயோ இப்படி சொல்கிறாய். இதற்கு என்ன பதில் சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை என்றார். தான் சொன்னதையே மீண்டும் வலியுறுத்திய நில உரிமையாளர் சுவாமி ஏற்கெனவே என் நிலத்தில் நிறையச் செடிகள் பாழாகிவிட்டன. இனிமேலும் இழப்பு வந்தால் என்னால் தாங்க முடியாது சுவாமி என்று மன்றாடினார். அவருக்கு ஆறுதல் சொன்ன ஸ்ரீ வாதிராஜர் சரி உனது வார்த்தையை நான் நம்புகிறேன். நீ போய் உனக்கு எவ்வளவு சேதமாகியுள்ளது என்று மதிப்பிட்டுச் சொல். இங்கிருந்து குதிரை வருகிறது என்று நீ சொல்வதால் அந்த இழப்பை நானே ஈடு செய்கிறேன் என்றார். நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு வழி பிறந்தது என்ற ஆறுதலுடன் நிலத்தை நோக்கிப் போனார் உரிமையாளர். போனதை விட வெகு வேகமாகத் திரும்பி ஓடி வந்தார் உரிமையாளர்.

ஸ்ரீ வாதிராஜரை வணங்கிய சுவாமி என் கண்கள் கூசுகின்றன. எனது நிலத்தில் அற்புதம் விளைந்திருக்கிறது. சேதமாகியிருந்த பகுதியில் எல்லாம் இப்போது தங்கக் கடலைகள் இறைந்து கிடக்கின்றன. சுவாமி தங்கள் மடத்துக் குதிரை சாதாரணமானதல்ல தெய்வீகமானது என்று ஆச்சரியத்துடன் கூறினார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட ஸ்ரீ வாதிராஜர் பின்னர் தியானத்தில் அமர்ந்தார். வெள்ளை குதிரையாக வந்தது ஹயக்ரீவர் என்பதைப் புரிந்து கொண்டார். அவரது தியானம் கலைந்தது. சுவாமி தெரியாமல் வெள்ளைக் குதிரையை விரட்டி விட்டேன். அற்புதம் செய்த அந்தக் குதிரையை இன்று இரவில் மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறேன் என்றார் நில உரிமையாளர். இனிமேல் உன்னால் அந்தக் குதிரையைப் பார்க்க முடியாது. பார்க்க முயன்றால் உன் பார்வை போய்விடும் என்று எச்சரித்தார் ஸ்ரீ வாதிராஜர். எனது பார்வை முற்றிலுமாகப் போனாலும் பரவாயில்லை. அந்த குதிரையை நான் பார்த்தே ஆக வேண்டும் சுவாமி என்ற நில உரிமையாளர் ஸ்ரீ வாதிராஜரிடம் விடைபெற்று வீடு திரும்பினார்.

தனது நிலத்தில் இரவு நேரத்தில் குதிரையின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் நில உரிமையாளர். வழக்கம் போல் குதிரை வந்தது. அதைப் பார்த்த சற்று நேரத்துக்குள் அவரது பார்வை பறிபோனது. அதற்காக அவர் கவலைப்படவில்லை. அதற்கு பதிலாக குதிரையாக தினமும் வந்தது தெய்வமே என்பதை உணர்ந்து மெய்மறந்து அப்படியே உட்கார்ந்திருந்தார் அவரது உன்னதமான பக்தியை கண்ட ஸ்ரீ வாதிராஜர் நில உரிமையாளருக்கு மீண்டும் பார்வை தருமாறு ஸ்ரீ ஹயக்ரீவரிடம் வேண்டிக்கொண்டார். சுவாமியின் அருளால் உரிமையாளருக்கு கண் பார்வை திரும்ப கிடைத்தது. ஸ்ரீ மடத்தில் இருந்து வெளிப்பட்ட தெய்வக் குதிரையின் திருப்பாதங்கள் பதிந்த எனது நிலம் இனிமேல் ஸ்ரீ மடத்துக்கே சொந்தம் என்று சொல்லி தனது நிலத்தை ஸ்ரீ மடத்துக்கு தானமாக கொடுத்துவிட்டார்.

அந்த நிலத்தில் இருந்து விளையும் கடலையை வேக வைத்து வெல்லம் தேங்காய் துருவல் ஆகியவற்றை கலந்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும் பழக்கத்தை உண்டாக்கினார் ஸ்ரீ வாதிராஜர். சுவாமிக்காக தயாரிக்கப்பட்ட அந்த நைவேத்தியத்தை ஒரு தட்டில் வைத்து இரண்டு கைகளாலும் பிடித்து தன் தலைக்கு மேல் வைத்து கொள்வார் ஸ்ரீ வாதிராஜர். அவருக்குப் பின்புறமாக ஸ்ரீ ஹயக்ரீவர் வெண்மையான குதிரை வடிவில் வந்து தனது முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி ஸ்ரீ வாதிராஜரின் தோள்களின் மீது வைத்தபடி நைவேத்யத்தை முழுவதுமாக உண்ணாமல் கொஞ்சம் மீதி வைப்பார். அந்த மீதியை ஸ்ரீ வாதிராஜர் உண்பார். இது அன்றாட நிகழ்ச்சி. இவ்வாறு நடக்கும் போது கோயிலில் உள்ள அர்ச்சகர்களுக்கு நைவேத்தியத்தில் தினமும் ஒரு சிறு பாகம் குறைவது பற்றி சந்தேகம் உண்டாயிற்று. வாதிராஜரே அந்த பகுதியை உட்கொள்கிறார் என்ற முடிவுக்கு வந்தனர். இதனால் ஸ்ரீ வாதிராஜரிடம் பொறாமை கொண்ட ஒரு சிலர் ஒரு நாள் நைவேத்தியத்தில் விஷம் கலந்தனர். வழக்கப்படி நைவேத்தியத்தை ஸ்ரீ வாதிராஜர் உண்பார். அவர் கதை முடிந்து விடும் என்று நம்பினர். வழக்கம்போல் நைவேத்தியத்தை வாதிராஜர் எடுத்துக்கொண்டு சந்நிதியினுள் சென்று கதவைத் தாழிட்டார். நைவேத்தியத்தை உட்கொள்ள ஹயக்ரீவரைப் பணிந்து துதித்தார். பிறகு பாத்திரத்தைத் தாழ்த்தியபோது அதில் வழக்கம்போல் மீதம் நைவேத்தியம் இல்லாமல் வெறும் பாத்திரம் மட்டுமே உள்ளதைக் கண்டு வியந்தார். இந்தப் புனிதப் பிரசாதத்தை உட்கொள்ள தகுதியற்றுப் போனோமோ என்று கடவுளை வேண்டினார்.

வெளியே அர்ச்சகர்கள் சந்நிதியினுள் என்ன நிகழ்கிறதோ என்ற ஆவலுடன் காத்திருந்தார்கள். வாதிராஜர் திட்டமாக ஆனால் வாடிய முகத்துடன் வெளியே கால் பதித்தது கண்டு வியப்படைந்தார்கள். பகவான் சிறிதளவு பிரசாதத்தைக்கூட என்று நமக்கு வைக்கவில்லை என்று மெல்லிய குரலில் கூறினார். சந்நிதியினுள் சென்ற அர்ச்சகர்கள் நைவேத்தியத்தைப் படைக்கும் பாத்திரம் சுத்தமாக நக்கப்பெற்று வெறுமனே உள்ளதைக் கண்டார்கள். ஆனால் பகவானின் உருவம் நீல நிறமாக மாறியிருந்தது. உடனே சுவாமியே இவ்வளவு நாட்களாக பிரசாதத்தை உண்கிறார் என்றுணர்ந்து வாதிராஜரிடம் ஓடிவந்து உண்மையை உரைத்து அவரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினார்கள். வாதிராஜரோ பெருந்துயரத்தில் ஆழ்ந்தார். நான் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தேன். என் கையாலேயே பகவானுக்கு விஷம் கலந்த நைவேத்தியத்தைப் படைத்தேன் ஆனால் பகவான் தன் எல்லையற்ற கருணையினால் ஒரு துளிகூட மிச்சமில்லாமல் உட்கொண்டாரே என வருந்தினார். இவரை அறியாஅல் இக்குற்றம் நடந்தாலும் விஷத்தின் அறிகுறி பகவானின் திருவுருவில் தோன்றியது. பொழுது புலரும் வேளையில் வாதிராஜரின் கனவில் கடவுள் தோன்றி விதைகள் உள்ள ஒரு பொட்டலத்தைக் கொடுத்து மட்டி என்ற ஊரில் இவ்விதைகளை விதையிடு. இவை காய்க்கும். காய்ந்த காய்களிலிருந்து 48 நாட்கள் தொடர்ந்து நைவேத்தியத்தைப் படை. விஷத்திற்கு இது முறிவாக இருக்கும் என்று அருளிச்செய்தார். விழித்தவுடன் வாதிராஜர் மட்டி என்ற ஊருக்குச் சென்று அந்த விதைகளை விதைத்தார். அந்தச் செடியினில் காய்ந்த காய்களைக் கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து நைவேத்தியத்தைப் படைத்தார். இவ்வாறு நைவேத்தியம் செய்யச் செய்ய திருவுருவினின்று நீல நிறம் சிறிது சிறிதாக இறங்கிற்று. 48 நாட்களுக்குப் பிறகு சிறு நீல நிறக் கீறல் ஒன்றே நெஞ்சில் இருந்தது.

கர்ணன்

மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற ரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் கிருஷ்ண பகவானின் லீலையால் அறிந்தான்.

பூர்வ ஜன்மத்தில் கர்ணன் பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது. சஹஸ்ர கவசன் என்று பெயர் பெற்ற அசுரனாக இருந்தான். தேவர்களை தாட்சண்யமின்றி தாக்கி வந்தான். எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும். இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான். இதை தேவர்களால் செய்ய இயலவில்லை. எனவே அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர். அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி சஹஸ்ர கவசனை ஒழிக்க உதவுமாறு வேண்டினர். இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழிக்க நர நாராயணர்களாக அவதரித்தார்.

சஹஸ்ர கவசனை அழிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர். நரன் 12 வருடங்கள் தவம் புரிய நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். அதன் பிறகு நாராயணர் 12 வருடங்கள் தவம் புரிய நரன் 12 வருடங்கள் போர் புரிந்தான். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை அறுத்து எறிந்தனர். இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது. எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான். இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள பூர்வ ஜன்ம கவசத்தோடு பிறப்பெடுத்தான்.

இந்தக் கவசமும் அறுக்கப்படவேண்டிய காரியத்திற்காக பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும் நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் பிறப்பெடுத்தனர். 12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். ஒரு கவசத்தை கிருஷ்ணர் தன் லீலைகள் மூலம் இந்திரன் மூலம் கவசத்தை நீங்கினார். கவசம் நீங்கியதால் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது இல்லையென்றால் இருவருக்கும் 12 வருடகாலம் யுத்தம் நடந்திருக்கும்.

சுருட்டப்பள்ளி கொண்டீஸ்வரர்

துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகஸ்பதி கூறினார். திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் மந்திர மலையை மத்தாகவும் கொண்டு தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவபெருமானே இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள் என மன்றாடினர். தேவர்களும் அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர்.

சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் திரட்டி சிவனிடம் தந்தார். உடனே சிவன் விஷாபகரண மூர்த்தியாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த பார்வதி சிவனை தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. அதனால் அவர் நீலகண்டன் ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்பாள் அமுதாம்பிகை ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் சுருட்டப்பள்ளி என பெயர் கொண்ட இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணமும் ஸ்கந்த புராணமும் கூறுகிறது. சிவன் பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்த இந்த அருட்காட்சியை இக்கோவிலில் பார்க்கலாம். சுவாமி பள்ளி கொண்டிருப்பதால் பள்ளி கொண்டீஸ்வரர் எனப்படுகிறார். இத்திருக்கோயில் விஜயநகர பேரரசர் வித்யாரண்யரால் கட்டப்பட்டது. இங்குள்ள சிவபெருமான் மனித உருவில் ஆலகால விஷம் உண்டபின்னர் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து படுத்தபடி ஓய்வெடுக்கும் உருவில் இருக்கிறார்.

சிவன் பள்ளி கொண்ட நிலையில் அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக இக்கோவிலில் உள்ளனர். பள்ளி கொண்ட ஈஸ்வரன் – சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் – மரகதாம்பிகை, விநாயகர் – சித்தி, புத்தி. சாஸ்தா – பூரணை, புஷ்கலை, குபேரன் – கவுரிதேவி, சங்கநிதி, பதுமநிதி. என்று அனைவரும் மனைவியருடன் உள்ளனர். மூலவர் வால்மீகிஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இவருக்கு எதிரில் ராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்கு பதில் சங்கநிதியும் பதுமநிதியும் உள்ளனர். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும் கற்பகவிருட்சமும் உள்ளனர். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.

பப்ருவாகனனால் வீழ்த்தப்பட்டு மீண்டும் உயிர் பெற்ற அர்ஜூனன்

குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற்று யுதிஷ்டிரர் அரசராக முடிசூட்டிக்கொண்டார். தேசம் முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்த விரும்பினார். அதன் பொருட்டு அசுவமேத யாகம் செய்ய முடிவுசெய்தார். யாகம் செய்வதற்கு உரிய வழிமுறைகளை வியாசரிடம் கேட்டறிந்தார். வியாசர் வழிகாட்டியபடி சித்ரா பௌர்ணமியன்று யுதிஷ்டிரருக்கு முறைப்படியாக தீட்சை கொடுக்கப்பட்டது. பின்னர் உத்தம லட்சணங்கள் பொருந்திய குதிரையை தேசம் முழுவதும் சுற்றிவர அனுப்பினார் யுதிஷ்டிரர். குதிரையை எதிர்ப்பவரை வெற்றி கொள்ள அர்ஜுனனை அனுப்பி வைத்தார். அர்ஜுனனும் தெய்விக அஸ்திரங்கள் வில் எடுக்கக் குறையாத அம்பறாத் தூளிகள் ஆகியவற்றுடன் புறப்பட்டான். சென்ற நாடுகளில் எல்லாம் யாகக் குதிரைக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அனைத்து நாட்டு மன்னர்களும் யாகக் குதிரையை வணங்கி மாலை மரியாதை செய்தனர். வட தேசம் முழுவதும் வெற்றிகொண்ட அர்ஜுனன் தென் தமிழகத்தில் மதுரைக்கு அருகில் இருந்த மணலூருபுரம் என்ற நாட்டை அடைந்தான்.

மதுரை அப்போது கடம்ப வனமாக இருந்தது. மணலூருபுரம்தான் அப்போதைய பாண்டிய நாட்டின் தலைநகரமாக இருந்தது. அப்போது அந்த நாட்டை பப்ருவாகனன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். இவன் அர்ஜுனனுக்கும் பாண்டிய மன்னரின் மகளான சித்ராங்கதைக்கும் பிறந்தவன். யாகக் குதிரை வந்திருக்கும் தகவல் பப்ருவாகனனுக்கு வீரர்கள் மூலம் தெரியவந்தது. பெரியப்பா நடத்தும் யாகக் குதிரைக்கும் காவலாக வந்திருக்கும் தன் தந்தைக்கும் சகல மரியாதைகளையும் செய்ய வேண்டும் என்று பப்ருவாகனன் விரும்பினான். அதன்படி மாலை மற்றும் காணிக்கைகளுடன் அர்ஜுனனிடம் சென்றான். அப்போது அர்ஜுனனின் மற்றொரு மனைவியும் நாக கன்னிகையுமான உலூபி என்பவள் அங்கே வந்து சேர்ந்தாள். பப்ருவாகனனைப் பார்த்து மகனே நான் உன் தந்தையின் மனைவியரில் ஒருத்தி. உனக்கு நானும் ஒரு தாய்தான். நான் சொல்வதைக் கேள். உன் தந்தையுடன் போர் செய். அதுதான் அவருக்கு மகிழ்ச்சி தரும் என்றாள்.

பப்ருவாகனன் போருக்குத் தயாரானான். குதிரையைப் பழக்கப்படுத்துவதில் தேர்ச்சிபெற்ற சில வீரர்களை அழைத்து குதிரையைப் பிடித்துக் கட்டும்படி உத்தரவிட்டான். அர்ஜுனன் பப்ருவாகனன் சிறந்த வீரன்தான் என்று பாராட்டிவிட்டு யுத்தத்துக்குத் தயாரானான். போர் கடுமையாக நடைபெற்றது. அர்ஜுனன் பப்ருவாகனனின் தேரில் பறந்த கொடியை அறுத்து தேர்க் குதிரைகளையும் கொன்றான். தேரைவிட்டு கீழே இறங்கிய பப்ருவாகனன் அர்ஜுனனைக் குறிவைத்து அம்புகளை மழையெனப் பொழிந்தான். மகனிடம் கொண்டிருந்த பாசத்தின் காரணமாக அர்ஜுனன் அந்த அம்புகளைத் தடுத்தானே தவிர மகனை அதிகம் தாக்கவில்லை. பப்ருவாகனன் அக்னிப் பிழம்புடன் சீறும் பாம்பாகச் சென்று பேரழிவை உண்டாக்கும் கணைகளை அர்ஜுனனின் மார்பைக் குறிவைத்து ஏவினான். சக்தி வாய்ந்த அந்த அம்புகள் அர்ஜுனனின் மார்பைப் பிளந்து அவனைக் கீழே சாய்த்தன. எதிர்க்க அவகாசமில்லாமல் அர்ஜுனன் யுத்தக் களத்தில் மடிந்து வீழ்ந்தான். தந்தை இறந்ததைக் கண்டதும் பப்ருவாகனனின் ஆவேசமெல்லாம் போன இடம் தெரியவில்லை. தந்தையின் மரணத்துக்கு தான் காரணமாகிவிட்டோமே என்று நினைத்து மயங்கிவிழுந்தான். தகவல் ஊரெங்கும் பரவியது. அர்ஜுனனின் மனைவி சித்ராங்கதை யுத்தகளத்துக்கு வந்து அழுது அரற்றினாள். தன் கணவனின் இறப்புக்குக் காரணமான உலூபியிடம் கோபம் கொண்டாள். மயக்கம் தெளிந்து எழுந்த பப்ருவாகனனும் உலூபியைப் பார்த்து நாக கன்னிகையே நீ சொன்னதைக் கேட்டு நான் என் தந்தையையே கொன்றுவிட்டேன். இனி நான் உயிருடன் இருந்து என்ன பயன் நானும் என் தாயுடன் அக்னிப் பிரவேசம் செய்து உயிர்விடப்போகிறேன் என்று கதறினான்.

அப்போது அங்கே வந்த பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனன் இறந்ததைக் கண்டு அழுவதுபோல் நடித்தார். கிருஷ்ணர் அழுவதைப் பார்த்த உலூபி மற்றவர்கள் அர்ஜுனன் இறந்ததற்காக அழலாம். ஆனால் நீங்களே அழலாமா நீங்கள் சொன்னால் நான் அர்ஜுனனை உயிர் பெறச் செய்கிறேன் என்று கூறினாள். கிருஷ்ணரும் சரியென்று கண்களாலேயே கூறினார். உடனே உலூபி தன் மனதில் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்ஜீவன மணியை நினைத்தாள். உடனே தன் கையில் வந்து சேர்ந்த அந்த மணியை அர்ஜுனன் உடலில்வைத்து அவனை உயிர்த்தெழச் செய்தாள். உயிர்த்தெழுந்த அர்ஜுனன் தன்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்த சித்ராங்கதை, பப்ருவாகனன், கண்ணன், உலூபி ஆகியோரைப் பார்த்தான். பிறகு உலூபியிடம் தன் மகனைக்கொண்டே தன்னைக் கொல்லச் செய்து பிறகு தன்னை உயிர் பிழைக்கச் செய்ததற்கான காரணத்தைக் கேட்டான். கிருஷ்ணரின் உத்தரவுப்படி உலூபி நடந்த நிகழ்ச்சியைக் கூறினாள்.

தட்சனின் மகள் வசுவின் பிள்ளைகள் எட்டுப் பேர். இவர்களில் ஏழு பேர் சாந்தனுவின் பிள்ளைகளாகப் பிறந்து கங்கையில் விடப்பட்டவர்கள். இளையவர் பீஷ்மராகப் பிறந்தார். தங்களில் ஒருவரான பீஷ்மரை அர்ஜுனன் முறைதவறி கொன்றுவிட்டான் என்று அர்ஜுனன் மேல் கோபம் கொண்டு அவன் தன் மகனாலேயே மடிய வேண்டும் என்று சபித்துவிட்டனர். இதை அறிந்த என் தந்தை அவர்களிடம் போய் மன்னிப்புக் கேட்டார். மனமிறங்கிய அவர்கள் என் தந்தையிடம் அர்ஜுனனுக்கு மணலூருபுரத்தில் ஒரு மகன் இருக்கிறான். அவன் அர்ஜுனனை போர்க்களத்தில் வீழ்த்துவான். அப்போது உன்னிடம் இருக்கும் சஞ்ஜீவன மணியால் அர்ஜுனனை உயிர்த்தெழச் செய் என்று சாபவிமோசனம் கொடுத்தனர். அதனால்தான் இப்படி நடைபெற்றது. இல்லையென்றால் பீஷ்மரைக் கொன்ற பாவத்துக்காக நீங்கள் கொடிய நரகத்துக்குச் சென்றிருப்பீர்கள் என்றாள். உலூபி சொன்னதை ஆமோதித்தார் பகவான் கிருஷ்ணர். அனைவரும் மகிழ்ச்சியுடன் பப்ருவாகனனின் அரண்மனைக்குச் சென்று உபசாரங்களை ஏற்றுக்கொண்டனர். பின்னர் தன் மனைவி சித்ராங்கதை மகன் பப்ருவாகனன் ஆகியோரிடம் விடைபெற்றுக்கொண்டு அர்ஜுனன் யாகக் குதிரையுடன் அஸ்தினாபுரம் புறப்பட்டான். அஸ்வமேத யாகம் இனிதே நிறைவுபெற்றது.

150 ஆண்டுகளாக முதலை காவல் காக்கும் கோவில்

கேரளத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அனந்தபுரா கோவில் உள்ளது. இக்கோவிலில் வில்வமங்கலம் என்ற முனிவர் இக்கோவிலில் தவம் புரிந்த போது அம்முனிவருக்கு சிறுவன் வடிவில் காட்சி தந்த மஹாவிஷ்ணு இக்கோவிலின் குளத்தையொட்டி உள்ள ஒரு குகையில் சென்று மறைந்தார். அத்தகைய புனிதமான குகைக்குள் மற்ற மனிதர்கள் யாரும் செல்லாதவாறு இறைவனின் கட்டளைப்படி இம்முதலை காவல் காக்கிறது.

இக்கோவிலைச் சுற்றி பச்சைப் பசேல் என்று பாசி படிந்திருக்கும் குளத்தில் இந்தமுதலை வாழ்ந்து வருகிறது. முதலைகள் இயற்கையாகவே மாமிசம் உண்ணும் விலங்காகும். ஆனால் இக்குளத்தில் உள்ள இந்த முதலை இக்குளத்திலுள்ள மீன்களைக்கூட உண்டதில்லை. தினம் இருவேளை பூஜைகள் முடிந்து அரிசியால் செய்யப்பட்ட பிரசாதத்தை இக்கோவிலின் அர்ச்சகர் அக்குளத்தின் ஓரம் வந்து அம்முதலையை பபியா என்று பெயர் கூறி அழைக்கிறார் பிரசாதத்தை முதலை வந்து பெற்றுக்கொள்கிறது. அதுவே அதற்கு உணவு. மேலும் இக்குளத்தில் அவ்வப்போது குளித்து வரும் இக்கோவிலின் அர்ச்சகரையோ பக்தர்களையோ இது வரை இம்முதலை அச்சுறுத்தவோ தாக்கவோ செய்தததில்லை. கடந்த 100 முதல் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இக்குளத்தில் ஒரு முதலை இறந்து விடுமேயானால் மறு தினமே மற்றொரு முதலை குளத்தில் தென்படும். ஒன்றுக்கு மேற்பட்ட முதலையை இந்தக் குளத்தில் இதுவரை எவரும் கண்டதில்லை. முதலைகள் வாழும் பெரிய ஆறுகளோ சதுப்பு நிலங்களோ இக்கோவிலுக்கு அருகாமையில் ஏதுமில்லாத போது இங்கு இந்த முதலை தோன்றுகிறது. இக்கோவில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சகுனி குரு குலத்தை அழிக்கும் காரியங்கள் ஏன் செய்தான்

காந்தார மன்னன் சுலபனின் மகன் சகுனி. மகள் தான் காந்தாரி. காந்தார நாட்டு இளவரசி அழகும் இளமையும் நற்பண்புகளும் மட்டுமல்லாமல் ஆயுதக் கலையிலும் பயிற்சி பெற்றவள் காந்தாரி. எல்லாவிதமான ஆயுதங்களையும் சுலபமாகக் கையாளும் திறன் கொண்டவள். அழகும் அறிவும் நிரம்பி இளமையின் பூரிப்பில் மதர்ந்திருந்த காந்தாரிக்கும் எல்லா பெண்களையும் போலவே திருமணத்தைப் பற்றியும் தன் மணாளனைப் பற்றியும் கனவுகளும் கற்பனைகளும் மனது முழுக்க நிறைந்திருந்தது. சிவபெருமானிடம் தனக்கு நூறு பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றவள். அவளின் ஜாதக தோஷத்தின் படி அவளை திருமணம் செய்யும் முதல் கணவன் இறந்துவிடுவான் என்ற விதி இருந்தது. இது தெரிந்தால் எந்த மன்னனும் தன் மகளை மணம் புரியத் துணிய மாட்டானே என்ற கவலை காந்தார மன்னனை பெரிதும் வாட்டியது.

அதே சமயத்தில் பீஷ்மர் தன் குலம் தழைக்க குரு குலத்தின் வாரிசுகளான திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் பெண் தேடிக் கொண்டிருந்தார். திருதராஷ்டிரனுக்கு மணமுடிக்க காந்தாரியை பெண் கேட்டு வந்த பீஷ்மரின் தூதை காந்தார நாட்டு மன்னன் உடனே ஏற்கவில்லை. அறிவும் அழகும் ஆற்றலும் நிரம்பிய தன் மகள் ஒரு கண் தெரியாதவனுக்கு மனைவியாவதா என்ற எண்ணம் அவனை வாட்டியது. அதன் பின் குரு குலத்தின் அருமை பெருமைகளை மனதில் கொண்டு பார்வை அற்ற திருதராஷ்டிரனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்துவைக்க சம்மதிக்கிறான். ஆனால் மகளுக்கு இருந்த தோஷம் அவனை கவலை அடையச் செய்தது. அதனால் ஒரு உபாயம் செய்கிறான். தோஷம் நீக்குவதற்கு பரிகாரமாக ஒருவரும் அறியாமல் ரகசியமாக ஒரு ஆட்டுக்கிடாவை அவளுக்கு திருமணம் செய்து வைத்து பின் அதை வெட்டி பலி கொடுத்து விடுகின்றனர். அதன் படி காந்தாரி தன் முதல் கணவனான ஆட்டுக்கிடாவை இழந்துவிட்ட விதவை. திருதராஷ்டிரன் இரண்டாம் கணவனாகிவிடுவதால் அவன் ஆயுளுக்கு பங்கம் இல்லை என்ற கணக்கு சரியாகிவிடுகிறது.

திருதராஷ்டிரன் தான் தன் கணவன் என்று பெற்றோர்கள் நிச்சயம் செய்திருப்பதை அறிந்த காந்தாரி மறுவார்த்தை கூறாமல் சம்மதம் தெரிவித்தாள். கண் தெரியாதவனாய் இருந்தாலும் தன் கணவன் குருகுலத்தில் மூத்தவன் அரச குமாரன் என்ற காரணங்களால் மனம் தேற்றிக் கொண்டாள். சகல சீர் வரிசைகளுடனும் பரிசுகளுடனும் தன் தமக்கையை காந்தார நாட்டிலிருந்து பாரதத்திற்கு அழைத்துச் செல்கிறான் சகுனி. அங்கு காந்தாரியும் சகுனியும் சகல மரியாதைகளோடு வரவேற்கப்படுகின்றனர். திருமண ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெறுகிறது. தன் கணவன் பார்வை அற்றவனாக இந்த உலகை காண முடியாதவனாக இருந்த காரணத்தால் தானும் இனி இவ்வுலகை காண மாட்டேன் என்று தன் கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டுவிட்டாள் காந்தாரி.

காந்தாரி திருமணத்திற்கு முன் தனக்கிருந்த தோஷத்தால் ஆட்டுக் கிடாயை மணம் செய்து கொண்டதும் அதன் பின் அதை பலி கொடுத்து முதல் கணவன் இறந்தான் எனும்படி தோஷ பரிகாரம் செய்ததும் பீஷ்மருக்கு தாமதமாக ஒற்றர்கள் மூலம் கிடைக்க தன் குலத்திற்கு விதவை மருமகள் ஆவதா? இந்த விஷயம் மற்றவர் அறிந்தால் இகழ்ச்சிக்கு ஆளாக நேரிடுமே என்று எண்ணினார். இந்த விஷயத்தை மறைத்து திருமணம் செய்த சுபலன் மற்றும் அவனது நாட்டை நிர்மூலமாக்க பீஷ்மர் எண்ணினார். காந்தார நாட்டுக்கு படையெடுத்துச் சென்று எல்லோரையும் சிறைப் பிடித்தார். அப்போதும் பீஷ்மரை சமாதானப்படுத்திய சுபலன் மற்றும் அவரது உறவினர்கள் பீஷமருக்கு விஷம் வைத்துக் கொல்ல திட்டம் போட்டனர். இதையும் ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொண்ட பீஷ்மர் கோபத்தின் உச்சிக்கே சென்றார். ஒட்டுமொத்த சுபலன் கூட்டத்தை பாதாள அறைக்குள் சிறையில் வைத்தார். ஒட்டுமொத்த குடும்பத்தை நிர்மூலமாக்குவது பாவம் என ஆலோசகர்கள் சொன்னதால் ஒருநாளைக்கு இரண்டு பிடி உணவும் ஒரு சுரைக்காய் குடுவை அளவு நீரும் மட்டுமே அவர்களுக்கு வழங்க உத்தரவிட்டார்.

தன் உடன் பிறந்தவர்களையும் உற்றாரையும் நோக்கிய சகுனி இந்த உணவை வைத்துக்கொண்டு ஒரே ஒருவர் உயிர் வாழ முடியும் மற்றவர்கள் ஒருவருக்காக உயிர்த்தியாகம் செய்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் அனைவரும் அழிந்து போவோம். யார் உயிர் வாழவேண்டிய நபர் என்று நமக்குள் முடிவு செய்யுங்கள் என்றான். சிறிது நேர ஆலோசனைக்கு பிறகு சகுனியின் தந்தை சுபலன் அறிவில் சிறந்த சகுனியே உயிர் பிழைக்க வேண்டும். சகுனி தன் உயிரை பீஷ்மாரின் குலத்தை ஒழிக்கவே பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். அவர் சொன்னது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்படியே ஒவ்வொரு நாளின் உணவும் சகுனிக்கு அளிக்கப்பட்டது. அவன் கண்ணெதிரே ஒவ்வொருவராக பசியால் செத்து விழுந்தார்கள். தந்தை சுபலன் மரண அவஸ்தையில் இருந்தபோது சகுனியை அழைத்து அவனின் வலது காலை அடித்து உடைத்தார். சகுனி வலியால் துடித்தபோது உன் ஒவ்வொரு அசைவின் போதும் இந்த மரணங்களை மறக்கக் கூடாது பழி பழி என்று அலைய வேண்டும் என்றார் தந்தை. மேலும் அவரது வலக்கையை ஒடித்துக் கொடுத்து இதில் இருக்கும் எலும்பைக் கொண்டு தாயக்கட்டைகளை உருவாக்கி கொள். சூதாட்டத்தில் சிறந்த உனக்கு இந்த தாயக்கட்டைகளே வேண்டிய எண்ணைக் கொடுக்கும். இதைக் கொண்டே குருவம்சத்தை அழித்து விடு என்றார். அதன்படியே அத்தனை உறவுகளையும் இழந்தான்.

பல வருடங்களுக்கு பின்னர் அனைவரும் மாண்டிருப்பர் எனக் கருதிய துரியோதனன் சிறைச்சாலையில் புகுந்து பார்த்தான். துரியோதனன் மேல் ஆத்திரம் பொங்கினாலும் சகுனி அதனை அடக்கிக் கொண்டான். அன்பு மருமகனே நீ எனக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்திருக்கின்றாய். இந்தக் கயவர்கள் அனைவரும் சேர்ந்து காந்தார நாட்டின் பட்டத்துக்கு உரியவனாகிய என்னை ஒழிக்கத் திட்டம் போட்டிருந்தனர். நீ அதை உணர்ந்து சிறையிட்டு இந்தக் கொடியவர்களை ஒழித்து காந்தார நாட்டை முழுவதும் எனக்கு உரிமையாக்கி விட்டாய். இதற்கு உனக்கு எப்படிக் கைம்மாறு செய்வது என்று தேன் ஒழுக பேசினான். துரியோதனன் அவன் பேச்சை அப்படியே நம்பி விடுதலை செய்தான். சகுனி தன்னந்தனியாக சூதே உருவாக வெளியே வந்தான். மனமெங்கும் கோபமும் பழி வாங்கும் உணர்வும் மேலோங்கியது. குரு குலத்தை பூண்டோடு அழிப்பேன் என்று சபதம் செய்தான். தீமையின் வடிவான துரியோதனனின் ஆலோசகன் ஆனான். வீணான மோதலை உருவாக்கி கௌரவ பாண்டவ யுத்தத்தை உருவாக்கி தனது சபதத்தை நிறைவேற்ற இறுதிவரை போராடினான்.

திருவார்பூ கிருஷ்ணர்

ஒவ்வொருநாளும் கோவில் திறந்திருக்கும் நேரம் 23.58 மணிநேரம். கோயில் மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்கும். நெய்வேத்தியம் நடந்துகொண்டே இருக்கிறது எனவே 23.58 மணி நேரமும் 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும். கோயில் 2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்படுகிறது. கோவில் நடை சாத்திய அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோவில் நடை திறக்க தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியுடன் தயாராக இருக்கிறார். கிருஷ்ணர் பசியோடு இருப்பார் என்பதால் ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால் கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையிலேயே கிருஷ்ணர் இக்கோவிலில் மூலவராக இருக்கிறார். அபிஷேகம் முடிந்தபின் மூலவரின் தலையை உலர்த்தியபின் முதலில் நைவேத்திம் அவருக்குப் படைக்கப்படும். பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும். இந்த கோவில் கிரகணத்தின் போது கூட மூடப்படுவதில்லை. ஒருமுறை கோயில் கிரகணத்தின் போது மூடப்பட்டது. கதவைத் திறந்தபோது கிருஷ்ணரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள். அந்த சமயத்தில் வந்த ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார். அப்போதிருந்து கிரகணத்தின் போதும் அக்கோவில் மூடப்படுவதில்லை. கிருஷ்ணா தூங்கும் நேரம் தினமும் 11.58 மணி முதல் 12 மணி வரை. 2 நிமிடங்கள் மட்டுமே. பிரசாதம் பெறாமல் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. தினமும் 11.58 மணிக்கு ஆலயத்தை மூடுவதற்கு முன்பு பூசாரி சத்தமாக இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா என கேட்டுவிட்டு தான் நடையை சாத்துவார். 1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவார்பூவில் இக்கோயில் அமைந்துள்ளது.

பாரத யுத்தத்தில் கொல்லப்பட்ட மிகமிக நல்லவன்

பதினெட்டு நாட்கள் நடைபெற்றது குருக்ஷேத்திரப் போர். பதினான்காவது நாளில் இன்று அதிக எண்ணிக்கையில் கௌரவர்களைக் கொன்று குவிப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டபின் பாண்டவர்கள் பாசறையை விட்டு வெளியே வந்தனர். அவர்களை வீரத் திலகமிட்டு வழியனுப்பி வைத்தாள் திரோபதி அவரவர் தேரில் அமர்ந்து போர்க்களம் நோக்கிப் புறப்பட்டார்கள். அந்தத் தருணத்தில் திரோபதியிடமிருந்து அந்த விசித்திரமான வினா கிருஷ்ணனை நோக்கிப் புறப்பட்டது கிருஷ்ணா எல்லாம் தெரிந்த எம்பெருமானே இந்த யுத்தம் முழுவதையும் நீயே நடத்துகிறாய் என்பதை நான் அறிவேன். கொல்பவனும் நீ. கொல்லப்படுபவனும் நீ. வெல்பவனும் நீ. வெல்லப்படுபவனும் நீ. சொல். இன்று யார் யாரால் கொல்லப்படுவார்கள் என்று கேட்டாள். திரோபதியின் இந்தக் கேள்வியைக் கேட்டதும் பாண்டவர்கள் அனைவரும் கிருஷ்ணரின் முகத்தை ஆவலோடு நோக்கினார்கள். இன்றைய போரின் நிலவரத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவரிடமும் இருந்தது. எதனாலும் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத கிருஷ்ணன் நகைத்தவாறே சொன்னான். திரோபதி உனக்கு எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் உள்ளது. சொல்கிறேன் கேள். இன்று இரு தரப்பினராகப் பிரிந்து போரிடும் அனைவரிலும் மிகமிக நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான். இப்போது உலகில் வாழ்பவர்களில் அவனைவிட நல்லவர்கள் யாருமில்லை. அவன் இறக்கவிருப்பதை எண்ணி என் மனம் இப்போதே வருந்துகிறது என்றார். இந்த பதிலால் கடும் அதிர்ச்சியடைந்த அர்ஜூனன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் தங்கள் அண்ணனான யுதிஷ்டிரரைக் கவலையோடு பார்த்தார்கள். யுதிஷ்டிரரரை விட நல்லவர்கள் யாரிருக்க முடியும் என்று அனைவரும் எண்ணினர்.

திரோபதி கண்களில் நீர்வழிய யுதிஷ்டிரரைப் பார்த்தாள். இதயத்தைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தாள். பாண்டவர்கள் ஐவரும் போர் முடிந்து நல்லபடியாகத் திரும்ப வேண்டும் இன்று மாலை ஐவரும் திரும்புவார்களா இல்லை நால்வர் மட்டும் தானா என்று கவலையுடன் இருந்தாள். கிருஷ்ணன் தன் பதிலால் ஏற்பட்ட பின்விளைவு எதையும் பொருட்படுத்தாமல் போர்க்களம் நோக்கிப் சென்றார். யுதிஷ்டிரர் தேர் மற்றும் அனைவரின் தேர்களுக்கும் அடுத்து அடுத்து நகர்ந்தது.

போர்க்களத்தில் கையில் கதாயுதத்தோடு களத்தில் இறங்கிய பீமன் தன்னுடன் போர்த் தொடுக்க முன்வந்து நின்ற விகர்ணனைப் பார்த்துக் கடுமையாக எச்சரித்தான். விகர்ணா என்முன் வராதே தள்ளிப் போ. நான் உன்னைக் கொல்வதற்காகக் களத்தில் இறங்கவில்லை. உன் இரு அண்ணன்களான துரியோதனன் துச்சாதனன் இருவரையும் வதம் செய்ய வந்திருக்கிறேன். அவர்கள் இருவரின் குருதியையும் கலந்து கூந்தலில் பூசிக் குளிப்பேன் எனச் சபதம் செய்திருக்கிறாள் திரோபதி. மேகம் போல் அடர்ந்த அவள் கூந்தல் முடியப்படாமல் இருப்பதை எத்தனை நாட்கள் நான் பார்த்துக் கொண்டிருப்பது இன்று என் கையில் உள்ள கதையால் உன் அண்ணன்கள் இருவரின் கதை முடியவேண்டும். திரோபதி தன் கூந்தலை முடியவேண்டும். குறுக்கே வராதே வழிவிடு என்றான். பீமனின் வீராவேசப் பேச்சைக் கேட்டு விகர்ணன் பீமா என்னை வென்றுவிட்டு அவர்களை உன்னால் வெல்ல இயலாதா என்னை வெல்ல முடியாதென்ற பயமா என்றார். கௌரவர்கள் நூறு பேரில் நீ மட்டும் தப்பிப் பிறந்தவன். அன்று கௌரவர் சபையில் திரோபதியை உன் அண்ணன் துச்சாதனன் துகிலுரிய எத்தனித்தானே அப்போது மெய்ஞ்ஞானியான பீஷ்மர் கூட வாய்மூடி மௌனியாக இருந்தார். அதர்மம் தலைவிரித்தாடிய அந்த சந்தர்ப்பத்தில் தர்மத்தின் பக்கம் நின்று குரல்கொடுத்தவன் நீ மட்டும்தான். அநியாயம் நடக்கிறது நிறுத்துங்கள் என்று அறைகூவியவன் நீ ஒருவன்தான். உன்னுடைய குரல் உன் அண்ணன் துரியோதனனுக்கு பிடிக்காது என்பதையும் நீ யோசிக்கவில்லை. அறத்தின் பக்கமே நின்றது உன் மனம். உன்மேல் கொண்ட அன்பால் உன்னைக் கொல்ல என் கதாயுதம் விரும்பவில்லை நான் உன்னைக் கொல்ல முயன்றாலும் கூட என் கதாயுதம் என்னைத் தடுத்துவிடுமோ எனத்தான் அஞ்சுகிறேன். உன்மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தப்பிப் பிழைத்துப் போ என்றார் பீமன்.

விகர்ணா நீ எங்களுடன் சேர்ந்துவிடு. பாண்டவர்கள் உன்னையும் சேர்த்து ஆறுபேராக இருப்போம். உனக்கும் அரசு வழங்கி முடி சூட்டுகிறோம். திரௌபதியின் மானத்தைக் காக்கக் குரல்கொடுத்த உன் தலையில் முடிசூட்டிப் பார்க்க என் மனம் ஆசைப்படுகிறது. என் விருப்பத்தை நிறைவேற்று என்றார் பீமன். பீமா நான் அற வழியில் நிற்பவன் என்று சொன்னாயே அது உண்மைதான். அன்று பெண்ணின் மானம் சூறையாடப்படும் நிலையில் அதன் பொருட்டு எதிர்த்துக் குரல் கொடுப்பது அறம். எனவே எதிர்த்துக் குரல் கொடுத்தேன். இன்று யார் தரப்பில் நியாயம் இருந்தாலும் நான் சார்ந்திருக்கும் என் அண்ணண் தரப்புக்காக நான் போரிடுவதே நியாயம். வெறும் மகுட ஆசைக்காக என் அண்ணனை விட்டு விலகி விடுவேன் என்றா நினைத்தாய் என்னைத் தாண்டித்தான் நீ துரியோதனனை அடைய முடியும். இயலுமானால் என்னை வெற்றி பெற்று துரியோதனனிடம் செல் என்றான். விகர்ணனின் பேச்சு பீமனுக்குக் கோபத்தை விளைவித்தது. தேரிலிருந்து குதித்துப் பாய்ந்து சென்று விகர்ணனை தனது கதையால் தாக்கினான் பீமன். உக்கிரமான போர் நெடுநேரம் நடைபெற்றது. ஒரு மாபெரும் வீரனுடன் போர் புரிகிறோம் என்பதை பீமனின் மனம் உணர்ந்தது. மேலும் அறத்தின் வழியே வாழ்பவர்களை வெல்வது சுலபமல்ல என்பதையும் அவன் மனம் புரிந்துகொண்டது. மனமே இல்லாமல் தன் கதாயுதத்தால் ஓங்கி விகர்ணனை அறைந்தான் பீமன். தர்மத்தின் வழியிலேயே நின்ற அவன் முகத்தில் புன்முறுவல் படர்வதையும் சிரித்துக் கொண்டே அவன் மரணத்தை வரவேற்பதையும் பார்த்து வியந்தது பீமன் மனம். விகர்ணனின் உயிர்ப் பறவை விண்ணில் பறந்தபோது பீமன் உள்ளம் இனம் தெரியாத சோகத்தில் ஆழ்ந்தது. மாலை சூரியாஸ்தமனத்திற்குப் பிறகு யுத்தம் நிறுத்தப்பட்டது.

பாண்டவர்கள் பாசறைக்குத் திரும்பினார்கள். அனைவரிலும் நல்லவன் அன்று கொல்லப்படுவான் என்று கிருஷ்ணன் சொன்னானே பதற்றத்தோடு காத்திருந்த திரௌபதி யுதிஷ்டிரர் உள்ளிட்ட எல்லோரும் நலமாகத் திரும்பி வருவதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். திரௌபதி கிருஷ்ணனிடம் கேட்டாள். அனைவரிலும் நல்லவன் இன்று மரணமடைவான் என்றாயே இறந்தது யார்? என் கணவர் ஐவரிலும் மூத்தவரைத் தானே உலகம் மிக நல்லவர் எனப் புகழ்கிறது. அவரின் நலத்திற்காக நான் இன்று முழுவதும் உன்னைப் பிரார்த்தித்தவாறே காலம் கழித்தேன். அவரை விடவும் நல்லவர்கள் உண்டா என்று கேட்டாள்.

திரௌபதி நல்லவர்களிடையே நல்லவனாக இருப்பதில் சிரமம் ஒன்றும் இல்லை. ஆனால் விகர்ணன் கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்தான். உன் மானத்தைக் காப்பதற்காக எதிரணியில் இருந்து குரல்கொடுத்தான். இப்போது தன் அண்ணன் கெட்டவனே ஆனாலும் தன் அண்ணனுக்காக உயிரையே கொடுத்திருக்கிறான். மகுட ஆசை கூட அவன் மனத்தை மாற்ற முடியவில்லை. தான் இறப்போம் என்று தெரிந்தே இறந்திருக்கிறான். தர்மம் எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணியில் தான் கிருஷ்ணர் இருப்பார் என்பதும் நான் இருக்கும் அணிதான் வெல்லும் என்பதும் அவன் அறிந்தவை தான். ஆனாலும் தன் உயிர் போவதை அவன் ஒரு பொருட்டாய்க் கருதவில்லை. தனது அண்ணனுக்காக உயிரை விடுவதே தனது தர்மம் எனக் கருதியிருக்கிறான். அவன் இருந்தவரை கௌரவர்கள் அத்தனை பேரையும் அந்த நல்லவனின் தர்மசக்தி கவசமாய்க் காத்திருந்தது. அவன் இருக்கும்வரை கௌரவர்களை அழிப்பது இயலாத செயல். இன்று பீமன் அந்த நல்லவனை வதம் செய்துவிட்டான். இனி கெட்டவர்களான மற்ற கௌரவர்களை அழிப்பது கடினமல்ல என்றார். இதற்கு யுதிஷ்டிரர் என்னை நல்லவன் என்கிறார்கள். அது உண்மையோ இல்லையோ விகர்ணன் என்னை விடவும் நல்லவன் என்பது மட்டும் உண்மை. இந்தப் பாழும் போரால் அந்த உத்தமனையும் கொல்ல நேர்ந்ததே என்று அனைவரும் அவனுக்காக வருத்தப்பட்டனர்.

பற்று

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது. ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைக்க யாரும் முயற்சிக்கவில்லை. வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான். என் வீடு என் வீடு என்று அலறினான். அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான். இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது. இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். அதே வீடு தான் அதே நெருப்பு தான் ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.

சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை. வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே என்றான். இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது. சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான். இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

இங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு அதே நெருப்பு அதே இழப்பு. இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு மனிதனை சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது மனிதனை சோகம் தாக்குவது இல்லை. நான் என்னுடையது எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று.

Rammalar's Weblog | Just another WordPress.com weblog ...