இராமாயணத்தில் அசோக வனத்தில் சீதையை சந்தித்த பிறகு இலங்கையை அழிக்கத் தொடங்கிய அனுமனை நோக்கி இந்திரஜித் தனது பிரம்மாஸ்திரத்தை எய்தான். பிரம்மாஸ்திரம் தன்னை ஒன்றும் செய்யாது என்ற வரத்தை ஏற்கனவே பெற்றிருந்த அனுமன் பிரம்மாவிற்கு மரியாதை அளிக்கும் நோக்கத்திலும் அந்த அஸ்திரத்தின் வலிமையை வீணடிக்கக் கூடாது என்பதாலும் பிரம்மாஸ்திரத்தின் மீது கொண்டிருந்த மரியாதையின் காரணமாகவும் அனுமன் அந்த அஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு அடிபணிந்து நின்றார். தான் அனுமனை கட்டுப்பட்டுத்தி வெற்றி பெற்றதாக நினைத்த இந்திரஜித் அனுமனை இராவணனின் அவைக்கு அழைத்துச் சென்றான். இலங்கையின் பலத்தையும் இராவணனின் எண்ணங்களையும் நேரில் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தூதரின் கடமையைச் செய்ய நினைத்த அனுமன் பிரம்மாஸ்திர கட்டுடன் இராவணனின் அரசவைக்கு சென்றார். இந்திரஜித்தின் அறிவுரையை மீறி அசுரர்கள் பிரம்மாஸ்திரத்தால் கட்டப்பட்ட அனுமனை மேலும் சாதாரண கயிறுகளால் கட்டினர். அவர்கள் இவ்வாறு செய்தவுடன் பிரம்மாஸ்திரம் அனுமனை விட்டு நீங்கியது.
இந்திரஜித்தின் வலிமை மிக்க பாம்பு போன்ற பிரம்மாஸ்திரம் எனும் ஆயுதத்தால் அனுமனின் கைகளும் வாலும் சுருட்டப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருக்கும் இராமாயணக் காட்சி இந்த சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் ஆந்திர மாநிலம் தாடிபத்ரியில் உள்ள சிந்தல வெங்கடரமண சுவாமி கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயில் விஜயநகரப் பேரரசின் தலைவரான திம்மநாயுடுவால் 1510 – 1525 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது.
