கேள்வி: பக்தி மார்க்கத்தின் வழியாக சென்றால் முக்தி. ஞான மார்க்கத்தின் வழியாக சென்றால் மறுபிறவி உண்டு என்பது பற்றி:
இறைவன் அருளால் இப்படியெல்லாம் யாங்கள் கூறவில்லையப்பா. எந்த வழிபாட்டில் எந்த வழிமுறையில் சென்றாலும் உள்ளம் பண்பட்டு பக்குவப்பட்டு உள்ளம் உறுதியோடு நோக்கம் சிதறாமல் இறைவனின் திருவடியை பிடித்துக்கொள்வதுதான் நோக்கம் பிற விஷயங்கள் எனக்கு முக்கியமல்ல. என் கடமைகளை செய்வேன். என்னால் முடிந்த நன்மைகளை பிறருக்கு செய்வேன். பிறர் செய்கின்ற தீமைகளையெல்லாம் எனது பாவக்கழிவாக எண்ணுவேனே தவிர அவர்கள் மீது நான் சினம் கொள்ள மாட்டேன் என்று எவனொருவன் உறுதியோடு இருக்கிறானோ அவன் எந்த வழியில் வந்தாலும் அவனுடைய முக்தி நிலை என்பது உறுதியாகும்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் நாற்பதாவது படலமாகும்.
வரகுணன் சீரும் சிறப்புமாக மதுரை நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்து வந்தான். அதேநேரத்தில் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டிருந்தான். ஒருநாள் அவன் வேட்டையாட காட்டிற்குச் சென்றான். இருள் சூழ்ந்த வேளையில் அவன் கனவட்டம் என்ற குதிரையின் மீது அமர்ந்து நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வழியில் தூங்கிக் கொண்டிருந்த அந்தணர் ஒருவர் குதிரையின் காலடியில் சிக்கி இறந்தார். இதனை அறியாத வரகுணன் அரண்மனை திரும்பினான். காட்டில் இருந்த சிலர் இறந்த அந்தணரின் உடலை எடுத்துக் கொண்டு வரகுணனின் வாயிலில் இட்டு நடந்தவற்றை வரகுணனுக்கு கூறினர். தனது குதிரையின் காலடியில் சிக்கி அந்தணர் இறந்ததை அறிந்த வரகுணன் இறந்த அந்தணனைச் சார்ந்தவர்களை வரவழைத்து பொன் பொருள் உதவி செய்ததோடு அந்தணனுக்கு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்த ஏற்பாடு செய்தான். எனினும் வரகுணனை பிரம்மகத்தி என்னும் பாவம் (கொலைப் பாவம்) பற்றிக் கொண்டது. பிரம்மகத்தி பிடித்த வரகுணன் மிகவும் துன்பத்துக்கு ஆளானான். அதனைப் போக்குவதற்கு நிறைய முயற்சிகள் செய்தான். இறுதியில் பெரியோர்களின் சொல்படி நாள்தோறும் சொக்கநாதரைத் தரிசித்து 1008 முறை வலம் வந்தான். அப்போது ஒருநாள் இறைவனார் அசரீரியாக பாண்டியனே நீ அஞ்சாதே காவிரி நாட்டைச் சார்ந்த சோழன் உன்னுடன் போரிட வருவான். அப்போது நீ அவனை புறங்காட்டி ஓடச்செய்வாய். நீ சோழனைத் தொடர்ந்து சென்று அவனது எல்லையில் உள்ள திருவிடைமருதூரை அடைவாய். அங்கே உன்னுடைய பிரம்மகத்தியை யாம் நீக்குவோம். என்று திருவாய் மலர்ந்தருளினார்.
சொக்கநாதரின் அசிரிரீ வாக்கைக் கேட்ட வரகுணன் மகிழ்ந்து சோழனின் வருகைக்காக காத்திருந்தான். இறைவனாரின் கூற்றுப்படி சோழன் பாண்டியனின் மீது படையெடுத்து வந்தான். வரகுணனும் சோழனை எதிர்த்து போரிட்டு அவனை விரட்டிச் சென்றான். திருவிடைமருதூர் வந்ததும் மகாலிங்கத்தை வழிபடுவதற்காக வரகுணன் கோவிலின் கிழக்கு வாயில் வழியாக திருகோவிலுக்குச் சென்றான். வரகுணனைப் பிடித்திருந்த பிரம்மகத்தி கோவிலின் வெளியே தங்கியது. உள்ளே சென்ற வரகுணன் மகாலிங்கத்தை பலவாறு துதித்து வழிபாடு நடத்தினான். அப்போது இறைவனார் பாண்டியனே நீ மேற்கு வாயிலின் வழியாக வெளியேறு. கிழக்கு வாயிலில் பிரம்மகத்தி உன்னை பிடிப்பதற்காக காத்திருக்கிறது என்று திருவாய் அருளினார். வரகுணனும் இறைவனாரின் ஆணைப்படி மேற்கு வாயிலின் வழியே வெளியேறினான். மதுரைக்கு திரும்பிய வரகுணன் சொக்கநாதரை நாள்தோறும் வழிபட்டு வந்தான்.
சிவராத்திரி நாளன்று வேதங்கள் ஆகமங்கள் உள்ளிட்ட நூல்களில் கூறியபடி உலகம் அனைத்திலும் மேம்பட்ட சிவலோகத்தைக் காணும் ஆசை வரகுணனுக்கு ஏற்பட்டது. தன்னுடைய விருப்பத்தை சொக்கநாதரிடம் தெரிவித்து மனமுருக வழிபாடு மேற்கொண்டான். வரகுணனின் விருப்பத்தை நிறைவேற்ற சொக்கநாதர் திருவுள்ளம் கொண்டார். திருநந்தி தேவரை அழைத்து வரகுணனுக்கு சிவலோகத்தை காட்ட ஆணையிட்டார். திருநந்தி தேவரும் சிவலோகத்தை மதுரைக்கு எழுந்தருளச் செய்து வரகுண பாண்டியனின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி காட்டி அருளினார். இறைவன் இறைவியுடன் இருந்த காட்சியைக் கண்ட வரகுணன் பேரின்பக்கடலில் மூழ்கினான். ஹரி அயனால் அடிமுடி காணப்பெறாத சிவ ஜோதியே கண்டேன் பேறுபெற்றேன் பேறுபெற்றேன் என்று சொல்லி மகிழ்ந்தார். பாண்டியன் வணங்கித் துதி பாடுகையில் கைலாயம் மறைந்து விட்டது. மன்னன் ஆச்சரியமுற்று அருகில் இருப்பவரிடம் தான் கண்ட காட்சிகளைக் கூற அரசே நீரே பாக்கியவான் என அனைவரும் புகழ்ந்தனர். அன்று முதல் மதுரையம்பதி பூலோக சிவலோகம் என்று சிறப்பிக்கப்படுகிறது.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
இறைவனார் தனது அடியவர்களுக்காக செயற்கரும் செயல்களைச் செய்து காட்டுவார் என்பதையும் பிரம்மகத்தி பாவம் பிடித்தவர்கள் தங்களின் பாவத்தைப் போக்கிக் கொள்வதற்கான வழிமுறையையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: அனைத்து கோவில்களிலும் கர்ப்பகிரகத்தின் சுவற்றின் மேல் கஜலட்சுமி தாயார் இருப்பதின் தாத்பர்யம்:
ஆதிகாலத்திலே இந்தப் பழக்கம் இல்லையப்பா. இறையருளால் கூறவருவது என்னவென்றால் பிற்காலத்திலே இது ஏற்பட்டது. மனிதர்களுக்கு எந்த நிலையில் சென்றாலும் பொருளாசை என்பது விடாது. பொருளுக்குரிய தெய்வம் அன்னை மகாலட்சுமி என்று தெரிந்து விட்டதால் எல்லா இடங்களிலும் மகாலட்சுமி சின்னத்தை வைத்தால் மங்களமாகவும் பொருள் வரவாக இருக்கட்டுமே? என்றும் அதுபோல் இறையை ஆராதிக்கின்ற பணியை செய்கின்ற எனக்கு பொருள் வரவேண்டும் என்பதற்காகவும் பிற்காலத்திலே ஆலயம் நன்றாக இயங்க அங்கு நிரந்தர பொருள் சேரவேண்டும் என்பதற்காகவும் கூறப்பட்டது. அக்காலத்தில் சில இடங்களில் மகாலட்சுமிக்கு அனுதினமும் யாகமே நடந்ததுண்டு நிறைய பொன் பொருள் சேர்க்கை வேண்டும் நிறைய ஆடு மாடுகள் சேரவேண்டும் என்றெல்லாம். எனவே இவையனைத்தும் உலகியல் நோக்கத்திற்காக மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மாமனாக வந்து வழக்குரைத்த படலம் முப்பத்தி ஒன்பதாவது படலமாகும்.
மதுரையில் தனபதி என்றொரு வணிகர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி பெயர் சுசீலை. இத்தம்பதியினருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. இருவரும் எவ்வவோ அறச் செயல்கள் செய்தும் குழந்தையே பிறக்கவில்லை. அதனால் தனபதி தன் தங்கையின் புதல்வனை தன் பிள்ளைபோல் எண்ணி வளர்த்து அந்தப் பிள்ளையை தத்துப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டார். ஒரு நாள் அவரது சகோதரி அலட்சியமாக அவர்கள் குழந்தை பாக்கியமில்லாத மலடு என்றும் என்னுடைய பிள்ளையால் தான் உங்களுக்கு இம்மை மறுமைப் பயன்கள் கிடைக்கப் போகிறது என்று கூறினாள். இதனைக் கேட்டதும் தனபதி அடுத்த பிறவியிலாவது பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டும் என்று எண்ணி காட்டிற்குச் சென்று தவம் மேற்கொள்ள எண்ணினார். ஆகையால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய தங்கை மகனுக்கு உரிமையாக்கிவிட்டு தன் மனைவியோடு தவம் செய்ய காட்டிற்குச் சென்றார். தனபதி காட்டிற்குச் சென்றதை அறிந்த அவரது பங்காளிகள் அவரது தங்கையை வஞ்சித்து சொத்துக்களை எல்லாம் பறித்துக் கொண்டு அவளை அடித்து விரட்டி விட்டனர். இதனால் தனபதியின் தங்கை செய்வதறியாது திகைத்தாள். இறுதியில் சொக்கநாதரைச் சரணடைந்தாள்.
சொக்கநாதரே என் தமையன் மனம் வருந்தும்படி பேசிய பலனை இப்போது இப்படி அனுபவிக்கிறேன் என்னை மன்னியுங்கள். எல்லோருக்கும் தாயும் தந்தையுமாய் இருப்பவரே என்னுடைய தமையனார் குழந்தைப்பேறு வேண்டி தவத்திற்குச் செல்லும் போது தத்துப் பிள்ளையான எனது மகனுக்கு அவருடைய செல்வங்கள் அனைத்தையும் விட்டு சென்றார். இதனை அறிந்த எங்களது உறவினர்கள் பொய் வழக்கு பேசி சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர். ஐயனே நான் யாருமில்லாமல் தனியாக இருக்கிறேன். எனக்கு இவன் ஒருவனே புதல்வன். இவனோ நல்லது கெட்டது அறியாத சிறுவன். எங்களுக்கென்று யாரும் இல்லை. இறைவா எங்களை இந்நிலையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று மனமுருக வழிபட்டாள். பின் சோர்வு மிகுதியால் அங்கேயே கண்ணயர்ந்தாள். அப்போது சொக்கநாதர் அவளுடைய கனவில் தோன்றி பெண்ணே நீ நாளை உன்னுடைய சுற்றத்தாரை உன்னுடைய சொத்துக்களை கேட்டு வழக்காடு மன்றத்திற்கு அழைத்து வா. யாம் இப்பொய் வழக்கினைத் தீர்த்து உம்முடைய பங்கினை உமக்கு அளிப்போம் என்று கூறினார். இறைவனாரின் திருவாக்கினைக் கேட்டதும் திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பது இதுதானோ என்று எண்ணி தன்னுடைய வீட்டிற்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றாள். மறுநாள் தன்னுடைய உறவினர்களிடம் சென்று தன்னுடைய சொத்துக்களை திருப்பி அளிக்கும்படி கேட்டாள். அவர்கள் அவளையும் அவளுடைய மகனையும் திட்டி அடித்து விரட்டினர். உடனே அவள் அழுதபடியே வழக்காடு மன்றத்திற்குச் சென்று தன்னுடைய சொத்துக்களை உறவினர்களிடமிருந்து திருப்பித் தரும்படி கேட்டாள். வழக்காடு மன்றத்தினர் தனபதியின் உறவினர்களை அழைத்துவர உத்தரவு இட்டனர். வழக்காடு மன்றத்தில் தனபதியின் தங்கைக்கும் உறவினர்களும் வழக்கு நடைபெற்றது. அப்போது இறைவனார் தனபதியின் உருவில் வழக்காடு மன்றத்திற்கு வந்தார். தனபதியைக் கண்டதும் அவருடைய உறவினர்கள் நடுங்கினர்.
இறைவனான தனபதி தன்னுடைய தங்கையையும் மருமகனையும் கட்டிக் கொண்டார். பின்னர் சபையோர்களிடம் என் தங்கையின் வழக்கை ஆராய்ந்து தர்மத்தின் வழியில் நின்று முடிவினைத் தெரிவியுங்கள் என்றார். பின் வழக்காடு மன்றத்தில் இருந்தவர்கள் இருதரப்பினரையும் நன்கு கேட்டறிந்து உறவினர்களின் கூற்று பொய் என்று கூறினர். இதனைக் கேட்டதும் தனபதியின் உறவினர்கள் வந்திருப்பது தனபதியே அல்ல என்றனர். இதனைக் கேட்டதும் இறைவனான தனபதி அவருடைய சொத்துக்களின் விவரம் உறவினர்களின் விவரம் அவர்களின் குடிப்பெயர் உடன் பிறந்தோர் அவர்களின் குணங்கள் அவர்கள் செய்யும் தொழில்கள் ஆகியவற்றை விளக்கமாக எடுத்து உரைத்தார். இதனைக் கேட்டதும் வழக்காடு மன்றத்தினர் இவர் தனபதியே என்றனர். இதனைக் கேட்டதும் தனபதியின் உறவினர்கள் எல்லோரும் இனியும் இங்கிருந்தால் அரச தண்டனைக் கிடைக்கும் என்று கருதி ஒருவர் பின்னர் ஒருவராக வெளியேறினர். பின்னர் வழக்காடு மன்றத்தினர் தனபதியின் சொத்துக்கள் முழுவதும் அவருடைய தங்கை மகனுக்கு உரியது என்று கூறி சாசனம் அளித்தனர். தனபதியான இறைவனார் அந்த சாசனத்தை தனபதியின் தங்கையிடம் கொடுத்தார். பின்னர் எல்லோரும் பார்த்திருக்கும் போது அங்கிருந்து மறைந்தருளினார். இதனைக் கண்ட அங்கிருந்தோர் மாமனாக வந்தது சொக்கநாதரே என்பதை உணர்ந்தனர். இதனை சுந்தரேச பாத சேகர பாண்டியனிடம் தெரிவித்தனர். இறைவனின் திருவிளையாடலை எண்ணி வியந்தார் சுந்தரேச பாத சேகர பாண்டியன். மதுரையை நல்வழியில் ஆட்சி புரிந்து சிறிது காலத்திற்குப் பிறகு தன் மகனான வரகுண பாண்டியனிடம் நாட்டை ஒப்புவித்து இறைவனின் திருவடியை அடைந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
தனது தவறை உணர்ந்து அதனை திருத்திக் கொண்டு இறைவனை சரணடைபவர்களை இறைவன் கட்டாயம் காப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உலவாக் கோட்டை அருளிய படலம் முப்பத்தி எட்டாவது படலமாகும்.
மதுரையில் அடியார்க்கு நல்லான் என்னும் வேளாளன் ஒருவன் இருந்தான். அடியவர்களுக்கு தொண்டு செய்வதே அறமாகக் கொண்டதால் அடியார்க்கு நல்லான் என்று பெயர் பெற்றான். அவனுடைய மனைவி தரும சீலை. இப்பெண்மணியும் அறவழியில் நடந்து கணவன் அறவழியில் செல்வதற்கு உதவினாள். தினமும் அடியவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிட்ட பின்பே இருவரும் உணவருந்துவார்கள். அடியார்க்கு நல்லான் தன்னுடைய வேளாண்மையில் விளைந்த பொருட்களில் ஆறில் ஒரு பகுதியை அரசுக்கு வரி செலுத்தி மீதி உள்ளதை சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்தல் என்னும் சிறப்பான சேவையை செய்து வந்தான். தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் அடியார்களுக்கு திருவமுது செய்விக்க பயன்படுத்தினான். இதனால் நாளடைவில் அடியார்க்கு நல்லானிடம் திருவமுது உண்ணும் சிவனடியார்களின் கூட்டம் பெருகியது. இந்நிலையில் இறைவனார் அடியார்க்கு நல்லான் தன்னுடைய செல்வம் குறைந்த போதிலும் சிவனடியார்க்கு செய்யும் திருவமுது செய்வித்தலை குறையாகக் கொள்ளமாட்டான் என்ற உயர்ந்த பண்பினை உலகுக்கு உணர்த்த விரும்பினார். நாளடைவில் அடியார்க்கு நல்லானின் விளைநிலங்களில் விளைச்சல் குறையத் தொடங்கியது. இதனால் அவனிடம் இருந்த செல்வவளம் குன்றியது. எனினும் அடியார்க்கு நல்லான் பிறரிடம் கடன் வாங்கி சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்தான். ஒரு கட்டத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்காததால் அடியார்க்கு நல்லானுக்கு யாரும் கடன் தரவில்லை. அடியார்க்கு நல்லானும் தரும சீலையும் வறுமையால் சிவனடியார்களுக்கு திருவமுது செய்யவும் இயலாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தனர். இறுதியில் அடியார்க்கு நல்லான் தன்னுடைய மனைவியான தரும சீலையுடன் சொக்கநாதரின் சந்நிதிக்குச் சென்றான். அப்பனே என்னுடைய விளைநிலங்களில் விளைச்சல் இல்லை. எனவே பிறரிடம் கடன்வாங்கி அடியார்களுக்கு திருவமுது செய்வித்தேன். இப்போது எனக்கு கடன் கொடுப்பவர்கள் யாரும் இல்லை. தயவு செய்து கடன் தருபவர்கள் யாரவது இருந்தால் அவரை எனக்கு காட்டுங்கள். அவரிடம் கடன் பெற்று அடியார்களுக்கு திருவமுது செய்விப்பேன். இல்லையேல் எங்களுடைய உயிரினை விட்டுவிடுவோம் என்று மனமுருகி வழிபட்டான்.
அடியார்க்கு நல்லானின் வழிபாட்டினைத் தொடர்ந்து வானில் இறைவனார் வேளாளனே பயப்பட வேண்டாம். உன் வீட்டில் நெல் உள்ள ஒரு உலவாக்கோட்டை (உலவாக்கோட்டை என்பது 24 மரக்கால் அளவு கொண்ட கொள்கலன் ஆகும். 1 மரக்கால் என்பது 4 படி ஆகும். ) ஒன்றைச் வைத்துள்ளோம். அதிலிருந்து நெல்லை எப்பொழுது எவ்வளவு எடுத்தாலும் அள்ள அள்ளக் குறையாது. அதனைக் கொண்டு அடியவர்களுக்கு திருவமுது செய்விக்கும் தொண்டினையும் பிற தருமங்களையும் செய்து வருவாயாக. இறுதியில் யாம் வீடுபேற்றினை அளிக்கின்றோம் என்று திருவாக்கு அருளினார். அதனைக் கேட்ட அடியார்க்கு நல்லான் மகிழ்ந்து இறைவனாரை பலவாறு துதித்து வழிபாடு மேற்கொண்டு தன்னுடைய மனைவியுடன் தன்வீடு திருப்பினான். அங்கு இறைவனாரின் அருட்கொடையினால் அரிசிக் கோட்டையைக் கண்டான். நாள்தோறும் தன் மனைவியுடன் அதனை முறைப்படி வழிபட்டு அதிலிருந்து உணவுக்குத் தேவையானவற்றைப் பெற்று அடியார்களுக்கு திருவமுது செய்துவித்து நல்ல முறையில் வாழ்ந்து வந்தான். இறுதியில் இறையருளால் வீடுபேறு பெற்றான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
தானத்தில் சிறந்தது அன்னதானம். அதனை எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் சிவனுக்கே செய்யும் தொண்டாக எண்ணி செய்தால் இறைவன் அவர்களின் செயலுக்கு துணை நிற்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: பரம்பொருள் ஒன்றுதான் என்று கூறுகிறீர்கள். பரம்பொருள் நாராயணன் தமது தோஷம் நீங்க பரம்பொருள் சிவபெருமானை வழிபட்டதாக சில ஆலய வரலாறுகள் கூறுகின்றன. ஆனால் பரம்பொருள் சிவபெருமான் தனது தோஷம் மற்ற இறை வடிவங்களை பூஜித்ததாக உள்ளதா? அப்படியென்றால் சிவபெருமான் தான் உச்சநிலை பரம்பொருள் வடிவமா?
இப்படியும் கதை கூறப்பட்டிருக்கிறது. அப்படியும் கதை கூறப்பட்டிருக்கிறது. முக்கண்ணனாகிய சிவபெருமான் தன்னிடம் உள்ள பிரம்ம கபாலம் நீங்க நாராயணனையும் மகாலட்சுமியையும் அண்டியதாக ஒரு கதை இருக்கிறது. அதைப்போல அடிமுடி காண முடியாமல் சிவனின் திருவடியை மகாவிஷ்ணு தீண்டியதாகவும் ஒரு கதை இருக்கிறது. இவற்றையெல்லாம் தத்துவார்த்தரீதியாக புரிந்து கொள்ள வேண்டும். எந்த உயரத்தில் இருந்தாலும் எல்லோரும் தன்னை தாழ்த்திக் கொள்கிறார்கள், மனிதனும் அவ்வாறுதான் இருக்கவேண்டும் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர இருவரின் கருத்து சண்டையாகவும் சச்சரவாகவும் மாறிவிடக் கூடாது.
கேள்வி: பரம்பொருள் சிவபெருமான் லிங்க வடிவமாக இருப்பதன் பொருள் என்ன ?
இறைவனின் கருணையைக்கொண்டு கூறுவது யாதென்றால் லிங்க வடிவிலும் இறைவன் இருக்கிறார் என்று மனிதர்களுக்கு ஒரு பகுதியினர் போதித்திருக்கிறார்கள். அம்பாளைப் பார்த்தாலும் அதுவும் இறைவனின் ஒரு வடிவம்தான். வேறு எந்த வடிவத்தைப் பார்த்தாலும் அதுவும் இறைவனின் வடிவம்தான். இருந்தாலும் கூட லிங்க வடிவத்திற்கு யாங்கள் முன்னரே விளக்கம் கூறியிருக்கிறோம். விளக்கம் அறிந்தவரிடம் இன்னவன் அறிந்து கொள்ளலாம்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சோழனை மடுவில் வீட்டிய படலம் முப்பத்தி ஏழாவது படலமாகும்.
இராசேந்திர பாண்டியனின் வழித்தோன்றலான சுந்தரரேச பாத சேகரபாண்டின் என்பவன் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவனாக இருந்தான். அவன் தன் படைபலத்தைக் குறைத்துக் கொண்டு அதற்கு செலவிடும் அத்தொகையைக் கொண்டு சிவாலயங்களைப் புதுப்பித்து சிவதொண்டு செய்து வந்தான். அப்போது சோழ நாட்டை பரிக்கோர் சேவகன் என்ற சோழ அரசன் ஆட்சி செய்து வந்தான். இவன் யுத்தத்தில் ஆயிரம் குதிரைகளை இவன் ஒருவனே சமாளிக்கும் வலிமை பெற்றவனாக இருந்தான். ஆகையால் ஆயிரம் குதிரைகளுக்கு ஒருவன் என்பதால் பரிக்கோர் சேவகன் என்று பெயர் பெற்றான். பாண்டியன் படைபலத்தைக் குறைத்ததை ஒற்றர்களின் மூலம் அறிந்த ஆயிரம் பரிக்கோர் சேவகன் இதுவே பாண்டிய நாட்டினைக் கைப்பற்ற சரியான தருணம் என்று எண்ணி பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருவதை அறிந்த சுந்தரரேச பாத சேகரபாண்டியன் திருக்கோவிலை அடைந்தான். இறைவா பாண்டிய படையின் பலத்தினைக் குறைத்ததை அறிந்த சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறான். சோழனிடமிருந்து பாண்டிய மக்களைக் காப்பாற்று என்று உருகி வழிபட்டான். பாண்டியனின் முறையீட்டினைக் கேட்டதும் இறைவனார் சுந்தரரேச பாத சேகர பாண்டியா நீ கலங்காதே உன் படையைத் திரட்டி சோழனை எதிர்கொள். யாமும் சோழனுடன் போரிட்டு வெற்றியை உனதாக்குவோம் திருவாக்கு அருளினார்.
இறைவனின் திருவாக்கினைக் கேட்டதும் சுந்தரரேச பாத சேகரபாண்டியன் தெளிந்த மனத்துடன் தனது படைகளைத் திரட்டி சோழனை எதிர்க்க போர்க்களம் சென்றான். சொக்கநாதரின் திருவருளால் சிறிய பாண்டியர் படை சோழர் கண்களுக்கு கடல் போல் விரிந்து காணப்பட்டது. இத்தனை பெரிய படை இவர்களுக்கு ஏது என சோழர் படை குழம்பியது. பிரம்மாண்டமான சோழர் படை சிறியதாக பாண்டியப் படைக்குக் காட்சியளித்தது. இத்தனால் பாண்டியப் படைகள் மன தைரியம் பெற்று மன வலிமையுடன் போரிட்டனர். இதனால் சோழனது படையின் பெரும்பாகம் அழிந்து விட்டது. இதனால் சோழன் சினம் கொண்டு போரின் முன்னணிக்கு வந்தான். ஆயிரம் புரவி வீரர்களை ஒரே சமயத்தில் வெல்லக்கூடிய சோழன் முழுவேகத்துடன் முன்னணிக்கு வரவும் பாண்டியன் மனம் கலங்கி நின்றான். அப்போது சொக்கநாதர் தழல் போன்ற சிவந்த கண்களுடன் கரு நிறத்தவராய் விசித்திரமான சட்டை தலைப்பாகை அணிந்து யானைக் கொம்பிலிருந்து செய்த காதணி கழுத்திலே முத்து மாலை தோள்வளை கைக்காப்பு தலைப்பாகையில் மயில் தோகையுடன் வேதமாகிய குதிரை மீதேறிக் கொண்டு வேடனின் உருவத்தில் கையில் வேலோடு விரைந்து வந்து ஆயிரம் பரிக்கோர் சேவகனின் முன்னால் சென்று நின்றார். இதனைக் கண்ட சோழன் சினந்து நான் ஆயிரம் குதிரைகளுக்கு ஒரே வீரனாக நான் இங்கு போரிட வந்தேன் என்று கூறினான். அதனைக் கேட்டதும் சொக்கநாதர் எண்ணில்லாத குதிரைகளுக்கு ஒரே வீரனாக நான் இங்கு போரிட வந்தேன் என்று கூறி சோழனுடன் போரிட்டார். வேடுவனின் தாக்குதலை சமாளிக்க இயலாத சோழன் குதிரையில் ஏறி போர்களத்தை விட்டு ஓடினான். நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருருந்த பாண்டியன் வேடனாக வந்திருப்பது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான்.
வேடனின் வடிவத்தில் வந்த சொக்கநாதரும் சோழனும் சண்டையிட்டது மிகப் பயங்கரமாய் இருந்தது. விரைவில் சோழன் புறமுதுகு காட்டி ஓடினான். வேடனுக்கு பயந்து சோழன் ஓடுவதைக் கண்ட அவனது படைகளும் பின்வாங்கின. அப்போது வேடனான சொக்கநாதர் அங்கிருந்து மறைந்தார். பாண்டியனும் அவன் படைகளும் உற்சாகத்துடன் சோழப் படைகளை விரட்டத் தொடங்கினார்கள். சோழனை விரட்டி பாண்டியன் அவனைத் தொடர்ந்து சென்றான். சிறிது நேரம் கழித்து சோழன் திரும்பிப் பார்த்தான். தன்னை துரத்திய வேடனைக் காணாது பாண்டியன் துரத்துவதை கண்டான். பயம் தெளிந்த சோழன் பாண்டியனை துரத்தத் தொடங்கினான். போர்க் களத்தை நோக்கி பாண்டியன் ஓடினான். அப்போது பாண்டியன் எதிரில் மடு (குளம்) ஒன்று இருப்பதைக் கவனியாது அதனுள் வீழ்ந்தான். பாண்டியனைத் துரத்திய சோழனும் மடுவினுள் வீழ்ந்தான். சோழன் விழுந்த இடத்தில் சுழல் இருந்ததால் சோழன் மடிந்தான். பாண்டியன் இறைவனின் கருணையால் உயிருடன் மடுவில் இருந்து மீண்டான். பின்னர் சோழப் படையை வெற்றிக் கொண்ட பாண்டியன் அவற்றின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு சிவாலயத் திருப்பணிகள் செய்து இறைவனின் அருளுக்கு பாத்திரமானான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
இறைபணியில் ஈடுபடுபவர்களை பாதுகாத்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி இறைவன் காப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
கேள்வி: கிரகண காலங்களில் கிரிவலம் செல்லலாமா? கோவில்கள் திறந்திருக்கலாமா?
இறைவனின் அருளாலே ஆலயங்களின் உள்ளே மனிதர்கள் கூட்டமாக அமர்ந்து பிரார்த்தனை செய்யலாம். அல்லது பாதுகாப்பான நீர் நிலைகளிலே (தூய நீராக இருந்து அதுவும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். ஆக்ரோஷமாக ஓடக்கூடாது. மனிதன் தாங்கக்கூடிய அளவில் ஓட்டம் இருக்கவேண்டும்) பிரார்த்தனை செய்யலாம் மந்திர ஜபம் செய்யலாம். அது ஏற்புடையது. கிரிவலம் ஏற்புடையது அல்ல.