விராலி மலை

விராலிமலை முருகன் கோயில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இம்மலையின் புராண பெயர் சொர்ணவிராலியங்கிரி. மூலவர் சண்முகநாதர் ஆறுமுகம். முருகர் மயில் மீது வீற்றிருக்கிறார். இந்த மயில் தெற்கு பார்த்திருப்பதால் இதற்கு அசுர மயில் என்று பெயர். அம்மன் வள்ளி மற்றும் தெய்வானை. தலமரம் விராலிச்செடி காசிவில்வம். தீர்த்தம் சரவணப் பொய்கை நாக தீர்த்தம். நாகதீர்த்தம் நடுவே நாகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகரின் வாகனமான மயில்கள் அதிகமாக நடமாடும் கோயில் இது. இடும்பன் சன்னதி பாறையில் குடைந்து அமைக்கப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.

வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் அவரை விராலிமலை இருக்குமிடத்திற்கு வர கட்டளையிட்டார். விராலி மலைக்கு வழி தெரியாமல் தவித்த அருணகிரிநாதருக்கு விராலிமலைக்கு செல்லும் வழியை காட்ட முருகன் வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி தற்போது இக்கோவில் இருக்குமிடத்தில் உள்ள குரா மரத்தினுள் மறைந்து விட்டார். இந்த விராலிமலைத் தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு முருகர் அஷ்டமாசித்தி என்னும் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை வழங்கினார். திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். இத்தலத்தில் பலகாலம் தங்கியிருந்த அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளது இத்தலத்தின் பெருமைக்கு சான்று.

சிவன் பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக அவரது ஒரு தலையைக் கொய்தார். அப்போது நாரதர் தன் தந்தை எந்தத் தவறும் செய்யவில்லை என்று சிவனிடம் வாதிட்டார். இதனால் அவர் சிவநிந்தனைக்கு ஆளானார். இதனால் அவரது தம்புரா வளைந்தது. சிவநிந்தையை போக்குவதற்கு இத்தலத்தில் முருகப் பெருமானை வணங்கி விமோசனம் பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு நாரதர் உற்சவராக இருக்கிறார். இவரது தம்புரா இப்போதும் வளைந்து காணப்படுகிறது. கோயில் திருவிழாவின் போது சுவாமி முன்பாக இவரும் உலா வருகிறார்.

குமாரவாடி என்ற ஜமீனில் நிர்வாகியாகப் பணி புரிந்தவர் கருப்பமுத்து பிள்ளை. வெள்ளிக் கிழமை தோறும் முருகப்பெருமானை தரிசித்த பின்பே உண்ணும் வழக்கம் உடையவர். இவர் தீவிர முருக பக்தர். இக்கோவிலில் நடந்த திருப்பணியில் கருப்பமுத்து ஈடுபட்டார். ஒருநாள் வெள்ளிக் கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அருகில் இருந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடக்க முடியவில்லை. எப்படியாவது முருகனை தரிசிக்க வேண்டும் என்று முருகனைப் பிரார்த்தித்தார். குளிர் தாங்காமல் சுருட்டு ஒன்றை பற்ற வைத்தார். அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா? எனக் கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். இருவருமாக ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருக்கும் போது அவர் மறைந்து விட்டார். இதனைக் கண்டு வியப்புற்ற கருப்பமுத்து கோயிலை அடைந்ததும் அங்கு முருகனுக்கு முன்பாக தான் கொடுத்த சுருட்டு இருப்பதைக் கண்டு தம்மிடம் சுருட்டு பெற்றவர் முருகனே என உணர்ந்தார். கருப்பமுத்து அங்கிருந்த அனைவரிடமும் நடந்ததைக்கூற ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் உருவானது.

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஒரு முறை விராலிமலை வந்தார். சுருட்டை நிவேதனமாக வைப்பது கண்டு திடுக்கிட்ட மன்னர் இனி சுருட்டை நிவேதனப் பொருளாக வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டு சென்றுவிட்டார். அன்று மாலை அரண்மனை திரும்பிய மன்னருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. எந்த மருத்துவமும் பலன் தரவில்லை. அன்று இரவு முருகர் அவர் கனவில் தோன்றி எனக்கு சுருட்டு படைப்பது மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும். பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தானே தவிர புகைக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக அல்ல. துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என என் பக்தர் விரும்பினார். அதற்காகவே அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக் கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே என்றார். மேலும் நிவேதனமாக சுருட்டை வைக்க வேண்டாம் என்று கூறியதால் தான் அவருக்கு வயிற்று வலியை தோன்ற செய்தேன் என்று கூறினார். அடுத்தநாள் மன்னர் தான் போட்ட தடையை நீக்கினார். முதல் சுருட்டு நைவேத்தியமாக முருகனுக்கு வைத்தவுடன் மன்னரின் வயிற்று வலி குணமானது. அதன்பிறகு இன்று வரை இப்பழக்கம் இருக்கிறது. ஆறு கால பூஜையின் போது பாலும் பழமும் பஞ்சாமிர்தம் நைவேத்தியமாக செய்யப்படுகிறது. உச்சிகால வழிபாட்டின்போது மட்டும் சுருட்டு சேர்த்து நைவேத்தியம் செய்யப்படுகிறது

வசிஷ்டரும் அவரது துணைவி அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமியற்றி உள்ளார்கள். திருவாரூரில் இருந்த தட்சிணாமூர்த்தி என்னும் அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம். சனகர் சனந்தர் சனாதனர் சனத்குமாரர் ஆகிய நால்வருக்கும் முருகன் தோன்றி காட்சி தந்த திருத்தலம். இத்தலத்தின் மீது விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார். பங்குனி உத்திரம் கந்த சஷ்டி ஆகிய நாட்களில் இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பொதுவாக ஆலயங்களில் பிரமோச்சவம் என்பது ஒரு தடவை மட்டுமே நடக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் விசாகம் மற்றும் பூசம் விழாக்களை ஒட்டி இரண்டு பிரம்மோச்சவம் நடைபெறுகிறது. விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கிபி1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன.

சண்முகன்

ஆறுமுகங்களும் பன்னிருகைகளுடன் கொண்ட சண்முகன். ஸ்ரீ சிகாநாதசாமி (சிகாகிரீஸ்வரர்) கோவில் குடுமியான்மலை. புதுக்கோட்டை மாவட்டம்.

தண்டாயுதபாணி

தண்டாயுதபாணி தன்னுடைய வாகனமான மயில் மீது சாய்ந்த தோரணையில் சுமார் 6 அடி உயரத்தில் நிற்கும் எழில்மிகு தோற்றம். மயிலின் வாயில் பாம்பு. இடம் ஆத்மநாத சுவாமி கோவில் ஆவுடையார்கோயில். புதுக்கோட்டை மாவட்டம்.

சேனாதிபதி ஆறுமுகன்

சேனாதிபதி ஆறுமுகனின் அழகிய கற்சிலை. ஆறு முகத்தில் ஐந்து முகம் மட்டுமே முன்னால் தெரிகிறது. முருகரின் வலது பக்கத்தில் ஆறாவது முகம் மறைவாக இருக்கிறது. இடம்: ஸ்ரீ கண்டேஸ்வரர் கோயில். நஞ்சன்கூடு. கர்நாடக மாநிலம்.

11 முகம் கொண்ட முருகன்

முருகன் 11 தலை 22 கைகளுடன் அருள்மிகு சுவாமிநாத சுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இராமநாதபுரம் குண்டுக்கரை பகுதியில் இக்கோவில் உள்ளது. சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பு முருகன் இத்தலத்துக்கு வந்த முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். மற்ற கோயில்களில் எல்லாம் பிரணவ மந்திரத்தின் பொருள் கூற முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால் இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனே சிவன் சிவனே முருகன். இருவரும் ஒருவரின்றி வேறில்லை என்பதற்கேற்ப இங்கு தகப்பன் சுவாமி குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிப்பது மிகச்சிறப்பான அம்சமாகும். கோயிலுக்குள் 18 திருக்கரத்துடன் கூடிய 7 அடி உயர துர்க்கை சிலையும் உள்ளது.

300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்த போது இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும் உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார். ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமி மலையானின் பெயரான சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினார்.

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்

  1. ஆறுமுகம்: ஈசானம் தத்புருஷம் வாமதேவம் அகோரம் சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
  2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம். மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
  3. குமரன்: மிக உயர்ந்தவன். இளமையை எப்போதும் உடையவன். பிரம்மச்சாரி ஆனவன்.
  4. முருகன்: முருகு என்றால் அழகு என்று பொருள். முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
  5. குருபரன் : கு – அஞ்ஞான இருள் ரு – நீக்குபவர். ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும் அகத்தியருக்கும் அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
  6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
  7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
  8. கந்தன்: கந்து – யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் கந்தன் தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
  9. கடம்பன்: கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
  10. சரவணபவன்: சரம் – நாணல். வனம் – காடு. பவன் – தோன்றியவன். நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
  11. சுவாமி: சுவம் – சொத்து. எல்லா உலகங்களையும் எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
  12. சுரேசன்: தேவர் தலைவன் சுரேசன்.
  13. செவ்வேள்: செந்நிறமுடையவன் ஞானச் செம்மை உடையவன்.
  14. சேந்தன்: செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
  15. சேயோன்: சேய் – குழந்தை குழந்தை வடிவானவன்.
  16. விசாகன்: விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
  17. வேலவன் வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக ஞான வடிவாக விளங்கும் வேல் கூர்மை அகலம் ஆழம் என்னும் மூன்றும் உடையது.
  18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
  19. சுப்ரமணியன்: சு – மேலான பிரம்மம் – பெரிய பொருளிலிருந்து நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
  20. வள்ளற்பெருமான்: முருகன் மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும் விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும் வேலின் மூலம் ஞான சக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும் முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
  21. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
  22. மயில் வாகனன்: மயில் – ஆணவம். யானை – கன்மம். ஆடு – மாயை. இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
  23. சோமாஸ்கந்தன்: சிவன் உமை முருகன் மூவர் சேர்ந்த வடிவம் சோமாஸ்கந்தன். உலக நாயகர்களாம் அம்மைக்கும் அப்பனுக்கும் இடையில் முருகன் அமர்ந்த திருக்கோலம். சோமாஸ்கந்தன் ஆனந்தத்தின் வடிவம்.

தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால் இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும். இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.