திருச்செந்தூர் தலபுராணம்

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் இருக்கும் மடப்பள்ளியில் நைவேத்தியம் தயாரிப்பதற்கு முதியவர் ஒருவரை ஆலயத்தார் அமர்த்தியிருந்தார்கள். அவர் முருகன் மீது அதிதீவிரமான பக்தியைக் கொண்டிருந்தார். நைவேத்தியத்திற்குண்டான நேரத்திற்கு வயோதிகத்தின் காரணமாய் சரியான நேரத்திற்கு இவரால் நைவேத்ய உணவு தயாரித்துக் கொடுக்க முடியவில்லை. இதனால் ஆலய அர்ச்சகர்கள் பலமுறை அவரிடம் கோபம் கொண்டு ஏசினர். முதியவர் முருகனிடம் தன் நிலை குறித்து புலம்பி அழுதார். ஒரு நாள் அவர் மிகவும் தாமதமாக உணவு சமைத்துக் கொடுக்கவே ஒரு அர்ச்சகர் கோபத்தில் அவரை கடுமையாகத் திட்டி விட்டார். இதனால் மனம் வருந்திய முதியவர் தன் உயிரை மாய்த்து விடுவதே சரி என்றெண்ணி கடலுக்குள் இறங்கினார். அவர் கடலினுள் செல்ல செல்ல நீர்மட்டம் கூடுதலாகாமல் அவரது முழங்கால் வரை மட்டுமே இருந்தது. அவரும் ஆழத்தை எதிர்பார்த்து சற்று தொலைவிற்கு நடந்து போனார். அப்போதும் முழங்காலுக்கு மேல் கடல்நீர் உயராமல் இருந்தது.

இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாம் என்று அவர் செல்லவும் நில்லுங்கள் என குரல் கேட்க சமுத்திரத்தில் நின்றவாறு திரும்பிப் பார்த்தார். கரையில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவன் முதியவரிடம் முதலில் கரைக்கு திரும்பி வாருங்கள் என அழைத்தான். அவரும் திரும்பி வந்து அச்சிறுவன் முன்பு நின்றார். கடலில் மூழ்கி உயிரை விடும் அளவிற்கு உங்களுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்து விட்டது என்றான் அச்சிறுவன். முதியவர் அவனிடம் தன் கவலைகள் அனைத்தையும் சொல்லி அழுதார். இதற்காகவா உயிர் துறப்பார்கள் என்று சிறுவன் சிரித்தான். உங்களுக்கு வேறு பணி இருக்கும்போது எதற்காக மடப்பள்ளியில் வேலை பார்க்கிறீர்கள் என்றான். முதியவர் எனக்கு சமையலைத் தவிர வேறு பணி எதுவும் தெரியாது என வருத்தத்துடன் சொன்னார். நீங்கள் திருச்செந்தூரில் பல காலமாக இருக்கிறீர்களே இந்த தலத்தின் தல புராணத்தை எழுதினால் என்ன என்றான் சிறுவன். இந்த வார்த்தையைக் கேட்டதும் அதிர்ந்துவிட்டார் முதியவர். திருச்செந்தூர் தல புராணத்தை நான் எழுதுவதா பள்ளிக்கூடம் போகாத எனக்கு கல்வியறிவு கொஞ்சமும் கிடையாதே என்னால் இது எப்படி சாத்தியமாகும் என்றார். மனத்தால் நினைத்தால் இதெல்லாம் சாத்தியமாகும். மேலும் நீங்கள் தான் தலபுராணத்தை எழுத வேண்டும் என்று செந்திலாண்டவனும் விரும்புகிறான். இதோ அதற்கான ஊதியத்தை பிடியுங்கள் என்று ஒரு துணிமுடிப்பை அவர் கையில் வைத்தான். சிறுவனிடம் கைநீட்டி ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார் முதியவர். இனிமேல் நீங்கள் சமையல் பணியாளர் அல்ல இன்று முதல் வென்றிமாலை கவிராசர் என்று அழைக்கப்படுவீர்கள் என்று சொல்லிப் போய் மறைந்தான் அச்சிறுவன்.

முதியவர் ஒன்றும் புரியாமல் நின்றார். முதியவருக்கு குழப்பமாக இருந்தது. வந்த சிறுவன் முருகனோ தெளிச்சி அடைந்த முதியவர் கிருஷ்ண சாஸ்திரி என்பவரைப் போய் பார்த்தார். அவரிடம் செந்திலாண்டவன் தல புராணத்தைச் சொல்லும்படி விவரமாகக் கேட்டார். பின் அதனை நூலாக எழுதினார். அதனை அரங்கேற்றம் செய்ய அர்ச்சகர்களை நாடினார். முருகன் தனக்கு காட்சி தந்ததையும் அவர் சொல்லியபடி நூல் இயற்றியதையும் அர்ச்சர்களிடம் கூறினார். அங்கிருந்த அர்ச்சகர்கள் யாவரும் இதை நம்பவில்லை. மாறாக அவரைக் கேலி செய்து கோயிலிலிருந்து விரட்டி விட்டனர். கோயிலை விட்டு வெளியேறிய கவிராசர் மனம் குமுறி தான் இயற்றிய நூலை கடலில் வீசிவிட்டார். கடலில் விழுந்த நூல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு திருச்செந்தூரிலிருந்து அடுத்த கிராமத்துக் கடற்கரையில் கரை ஒதுங்கிக் கிடந்தது. அடுத்த ஊரில் அங்கு வசித்த வந்த அறிஞர் ஒருவர் காலாற கடற்கரையில் நடந்து வந்தபோது அவரின் கண்களில் இந்நூல் காணப்பட்டன. அதை எடுத்துப் பிரித்துப் படித்தார் வியப்படைந்து போனார். எவ்வளவு மகோத்மன்யமான இது கடலில் கிடந்து கசங்குகிறதே என்று அந்நூலை செந்திலாண்டவன் கோயிலுக்குள் கொண்டு சென்று அர்ச்சகர்கள் முன்பு படித்துக் காட்டினார். நூலின் முடிவில் நூலை எழுதியது வென்றிமாலை கவிராயர் என குறிப்பு இருந்ததைப் பார்த்து அர்ச்சகர்கள் அனைவரும் வியந்து போயினர். கவிராயரை தேடிக் கண்டு அழைத்து வந்தனர் அர்ச்சகர்கள். உங்களிடம் அவமதிப்புடன் நடந்து கொண்டதற்கு, முதலில் எங்களை பெருந்தன்மையுடன் மன்னிக்க வேண்டும் என கேட்டு தகுந்த மரியாதையையும் செய்தனர். பின்பு செந்திலாண்டவன் முன்னிலையில் தல புராண அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது. படிக்காதவரையும் பாவலராக்கினான் செந்திலாண்டவன் முருகன்.

திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம் கடற்கரையிலிருந்து 140 மீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கருவறை தரை மட்டத்திலிருந்து 15 அடியும் கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோவில் பற்றிய விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால் இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வளவு ஆபத்தான இடத்தில் கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்கிறது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களாளும் பெரும் பணக்காரர்களும் கட்டப்பட்டிருக்கும் நிலையில் பிட்சை ஏற்று உண்ணும் ஆண்டிகலாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும். கோவிலைக்கட்டிய ஆண்டிகள் இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டி புனரமைப்பு பணிகள் செய்த ஆண்டிகள்.

  1. மௌனசுவாமி
  2. காசிசுவாமி
  3. ஆறுமுகசுவாமி இவர் ராஜகோபுரம் கட்டியவர்
  4. ஸ்ரீவள்ளிநாயகசுவாமி
  5. தேசியமூர்த்திசுவாமி.

முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் அமைந்திருக்கும் நாழிக் கிணற்றின் தெற்கே மூவர் சமாதி என்ற பெயருடனே அமைந்துள்ளது.

நான்காவதாக ஞான ஸ்ரீவள்ளிநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜ கோபுரத்தின் வடக்கு வெளிப்பிரகாரத்திலிருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.

ஐந்தாவதாக ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக் கடந்து ஆழ்வார்தோப்பு என்னும் ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் உள்ளது.

கந்த சஷ்டி கவசம் வரலாறு

முருகப்பெருமான் புகழ்பாடும் கந்த சஷ்டி கவசம் இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர் மிகச்சிறந்த முருக அடியார் கந்த சஷ்டி கவசத்தில் நிறைய சொற்கள் வடமொழியில் இருந்து எடுத்தாளப்பட்டு இருக்கிறது. சஷ்டி கவசப் பாடல்களின் வயது சுமார் 250 ஆண்டுகள் இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

பாலதேவராய சுவாமிகளுக்கு ஒருசமயம் அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணியவர் முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது. கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார்.

ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது. மனம் வாடாது. குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம். நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.

முருகன் அருள்

ஒரு சிறுவன் அவனது காலில் புண் ஏற்பட்டது சின்னப்புண் தானே என்று அந்தப் பையனும் கண்டு கொள்ளவில்லை நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூர புரையோடிப் போனதால் அவனுக்கு உள்ளே வலி ஏற்பட்டது வலி தாங்கமுடியாது தவித்த அவனை அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர். அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி இப்படியா விட்டு வைப்பது உடனே பட்டணம் போய் காண்பியுங்கள் என்றார். பையனைச் சோதித்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார் உள்ளே செப்டிக் ஆகி விட்டது உடனே காலை எடுக்க வேண்டும் இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர்.

இந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தரமுடியும் இந்தக் கால் தேயும் வரை அவன் ஆலயத்தை சுற்றுவோம் இவ்வாறு நினைத்தவன் தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்றான். 108 மற்றும் 1008 என்ற கணக்கெல்லாம் இல்லை. காலை மாலை என தினமும் கணக்கு வழக்கின்றி கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான். சில மாதங்களில் யாராலும் நம்ப முடியாத அற்புதமாக ஏன் அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில் தானே ஆற ஆரம்பித்த புண் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது. இனி என் வாழ் நாள் முழுதும் முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும். அதுவே என் தொழில். அதுவே என் மூச்சு என்று ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன். அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை ஓர் அரை நூற்றாண்டிற்கு மேல் நின்றபடியே முருகன் புகழ் பாடிய திரு முருக கிருபானந்த வாரியார் என அழைக்கப்பட்ட வாரியார் சுவாமிகள்.

பழனி மலை

சங்க இலக்கியங்கள் பழனி மலையை பொதினி என்றே குறிப்பிடுகின்றன. பொதினி என்ற பெயர்தான் பழனி என்று மருவிற்று. பழனி மலை இருக்கும் இடத்தை கல்வெட்டுக்கள் வையாபுரி நாடு என்று குறிப்பிடுகின்றன. இவ்வையாபுரி நாட்டை வையாபுரிக் கோப்பெரும்பேகன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். முற்காலத்தில் சித்தர்கள் பலர் வையாபுரி நாட்டில் வாழ்ந்துள்ளனர். தண்டாயுதபாணி ஆலயம் சேரமன்னன் சேரமான் பெருமானால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தங்கள் கட்டடக்கலையை பறைசாற்றும் வகையில் பாண்டியர்களும் சோழர்களும் இந்த ஆலயத்தைப் புதுப்பித்து கோபுரங்கள் மண்டபங்கள் கட்டி பல வசதிகள் செய்துள்ளனர். 450 மீட்டர் உயரமான இந்த மலையில் 690 படிகள் உள்ளது. இம்மலை முருகனின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். புராண காலங்களில் இந்த ஊர் திருஆவினன்குடி என்றும் தென்பொதிகை என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் தண்டாயுதபாணி மற்றும் குழந்தை வேலாயுதர் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள முருகர் நவபாஷணத்தால் போகரால் செய்யப்பட்டவர். போகர் பழனி மலையில் கடும் தவத்தில் இருக்கும் பொழுது முருகப் பெருமான் அவர் முன் காட்சியளித்து பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார். இந்த நவபாஷாண சிலையை வடிப்பதற்கு போகர் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகளாகும். 4000 திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கலந்து இந்த நவபாஷாண சிலை செய்யப்பட்டது. 81 சித்தர்கள் போகரின் வழிகாட்டுதலின் படி நவபாஷாண சிலை செய்யும் பணியில் உதவினர். இந்த நவபாஷான சிலை செய்யும் காலத்தில் இயற்கை தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சிலை செய்ய ஏற்றார் போல் சூழ்நிலை அமைத்து சித்தர்களுக்கு உதவி செய்தது.

தண்டாயுதபாணி விக்ரகம் எப்பொழுதும் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும் அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீர் அபிஷேக தீர்த்ததுடன் கலந்து காலை அபிஷேகம் நடக்கும் போது அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் கொண்டு அபிஷேகம் நடைபெருகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து உடனே அகற்றப்படுகிறது. சந்தனம் பன்னீர் மட்டும் அடி முதல் முடி வரை அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால் பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது. தண்டாயுதபாணி சிலையில் நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். முருகன் விக்கிரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கிறது. பழனி மலைக்கு செல்லும் வழியில் இடும்பனின் சந்நிதி இருக்கிறது. இடும்பனுக்கு அதிகாலையில் முதலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகே மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுகிறது.

இலங்கையில் கண்டி கதிர்காமத்தில் போகர் பெருமானுடைய இயந்திரம்

விக்கிரங்களோ அல்லது சிலையோ எதுவுமே இல்லாத ஆகம விதிகள் பிரகாரம் கட்டப்படாத ஒரு முருகன் கோவில் கதிர்காமம். இக்கோவிலின் ரகசியம் இங்கு உள்ள இயந்திரம் அடங்கிய பெட்டி மட்டுமே. இந்த இயந்திரம் 10000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது. தமிழில் ஓம் எழுத்துடன் கூடிய ஒரே இயந்திரம்.