திருச்செந்தூர்முருகன் கோவிலில் கொடுக்கப்படும் இலை விபூதியின் மகத்துவம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது கந்தசஷ்டி திருவிழாவாகும். இங்கு வழங்கப்படும் பிரசாதங்களில் முக்கியமானது பன்னீர் இலை விபூதியாகும். ஒரு முறை ஆதிசங்கரர் காசநோயால் பாதிக்கப்பட்டு திருச்செந்தூர் முருகனிடம் வந்துள்ளார். அப்போது முருகப் பெருமான் ஆதிசங்கரரிடம் இனிய தமிழில் பாடல் பாடுமாறு கேட்டார். அதற்கு அவர் நான் எம்பெருமானை மட்டுமே பாடுவேன் என்று கூறினார். இதனால் வருத்தமடைந்த முருகப் பெருமானை அப்போது அங்கு வந்த எம்பெருமான் கண்டார். முருகன் வருத்தத்துடன் இருப்பதற்கு காரணத்தை அறிந்த எம்பெருமான் ஆதிசங்கரரிடம் சென்று முருகப் பெருமான் முன் சென்று கண்ணை மூடிக் கொண்டு என்னை நினைத்து பாடு என்று கூறினார். அதுபோலவே முருகப் பெருமான் முன் நின்று கண்ணை மூடிக்கொண்டு பாடினார் ஆதிசங்கரர். கண்ணை திறந்து பார்க்கும் போது முருகப் பெருமான் இருக்கும் இடத்தில் எம்பெருமான் இருந்தார். எம்பெருமான் தான் முருகன் முருகன் தான் எம்பெருமான் என்பதை உணர்ந்த ஆதிசங்கரர் முருகப் பெருமானிடம் மன்னிப்பு கேட்டு முருகனை பாடி காசநோயை குணப்படுத்த வேண்டும் என்று வேண்டினார். உடனே முருகப்பெருமான் இலையில் விபூதியை அவரிடம் கொடுத்தார். திருநீற்றுப் பச்சிலையில் (பன்னீர்இலை) வைத்து கொடுக்கப்பட்ட இலை விபூதியை சாப்பிட்டதும் காசநோய் குணமாகியது.

தேவர்களை சிறை பிடித்து கொடுமைப்படுத்திய சூரபத்மனிடம் தேவர்களை விடுவித்து முருகப் பெருமானிடம் சரணடையுமாறு வீரபாகு தேவன் கேட்டபோது சூரன் மறுத்தான். முருகப் பெருமானிடம போர் புரிய தயாரானான். போர் தொடங்கியது போரில் முருகப் பெருமான் படை சார்பில் இருந்த வீரர்கள் சிலர் காயமடைந்தனர். அந்த காயத்திற்கு மருந்தாக இலை விபூதி கொடுத்து குணமாக்கியுள்ளனர். பின்னாளில் அதன் மகத்துவத்தை அறிந்து கோவிலை கட்டிய சாதுக்கள் பணியாற்றிய ஊழியருக்கு ஊதியமாக இலை விபூதியை கொடுத்துள்ளனர். பெற்றுக் கொண்ட ஊழியர்கள் விடலை கோவில் பிள்ளையார் அருகே வந்து அதைத் திறந்து பார்த்த போது ஊதியத்திற்கு ஏற்ப பொற்காசுகள் ஆக மாறியிருந்ததாம். வேலை செய்யாதவர்களுக்கு வெறும் விபூதி மட்டுமே இருக்குமாம். அதனுடைய தத்துவத்தை உணர்த்தும் வகையில் இன்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.