விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது சிங்கவரம் கிராமம். அங்கு பல்லவர் கால குடைவரைக் கோயிலாக அரங்கநாதர் கோயில் உள்ளது. அரங்கநாதருக்கு அருகாமையில் தனி சன்னதியில் அரங்கநாயகி தாயார் அமர்ந்து இருக்கிறார். இவர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஓர் அறை இருக்கிறது. தாயாருக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் ஆரத்தித் தட்டினை சிறிது அந்தப் பக்கம் காண்பிப்பார். சிறிய சாளரத்தின் வழியே தீப வெளிச்சத்தில் அங்கு வீற்றிருக்கும் அழகிய கொற்றவை காட்சித் தருவாள். கொற்றவைக்கு வழக்கமாக உள்ள 8 கரங்கள் ஆயுதங்கள் இங்கு இல்லை. நான்கு கரங்கள் மட்டுமே உள்ளது. பின்னிரு கரங்கள் சக்கரம் சங்கினை ஏந்தியுள்ளன. முன்னிரு கரங்கள் இடுப்பின் மீதும் தொடையின் மீதும் வைத்த நிலையில் சற்று சாய்ந்து ஒய்யாரமாக நிற்கிறாள். வழக்கமாகக் கொற்றவையின் இரண்டு கால்களும் எருமைத் தலைமீது வைத்த நிலையில் காணப்படும். ஆனால் இங்கு வலது காலை மட்டும் மகிஷனின் தலைமீதும் இடது காலை தரையிலும் ஊன்றி நிற்கின்றாள். இரண்டு பக்கமும் இரண்டு அடியவர்கள் உள்ளார்கள். வலப்பக்கத்தில் இருப்பவர் நீண்ட தலைமுடி மீசையுடன் வீரனுக்கே உரித்தான பாணியில் இருக்கிறார். தனது வலது கையில் உள்ள கத்தியால் இடது கால் தொடையின் சதையை அரிந்துகொள்வது போல் உள்ளது. இடது பக்கத்தில் இருப்பவர் தரையில் முழங்கால் மண்டியிட்டு பூஜை செய்யும் நிலையில் அமர்ந்து இருக்கிறார். தலை மழித்து காணப்படுகிறது. மீசையும் இல்லை.
