1923 வது வருடம் பாம்பன் சுவாமிகள் சென்னையில் நடந்து செல்லும் போது பாதையில் எதிர்பாராத விதமா ஒரு குதிரை வண்டி அவர் மேல் மோதியது. இதனால் அவரது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரை பரிசோதித்த டாக்டர்கள் 73 வயது ஆகிவிட்டதால் இனி இவரது எலும்பு கூடுவது மிகவும் கடினம் மேலும் இவர் நீண்ட காலமாக உப்பு போடாத பச்சரிசி பச்சைப்பயறு பொங்கல் மட்டுமே சாப்பிட்டு வந்ததால் மிகவும் பலகீனமாக இருக்கிறார் என்று டாக்டர் சொல்லி விட்டார்கள். அப்போது முதல் தான் இயற்றிய சண்முக கவசத்தை தொடர்ந்து ஆறு நாட்கள் பாடிக் கொண்டே இருந்தார். ஆறாவது நாள் அவர் கனவில் சேவல் மயிலுடன் குழந்தை வேலன் காட்சியளித்தார். அடுத்த நாள் காலையில் எழுந்து தானாகவே நடக்க ஆரம்பித்தார் பாம்பன் சுவாமிகள். டாக்டர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே X RAY எடுத்து பார்த்தார்கள். டாக்டர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம். அவரோட எலும்புகள் கூடி இருந்தது.
இன்றும் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் இவருக்கு முதலில் எடுத்த X RAY ரிப்போர்டும் அவர் நடக்க ஆரம்பித்ததும் எடுக்கப்பட்ட எடுத்த X RAY ரிப்போர்டும் ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது.
பரதன் என்ற ஒரு நாட்டு அரசன் காட்டில் தவ வாழ்வு மேற்கொள்ள நாட்டைத் துறந்தான். தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு நிறைமாத கர்பிணியாய் இருக்கும் மான் ஒன்று ஆற்றில் நீர் அருந்துவதை பார்க்கிறார். மான் அதன் தாகம் தீர்ந்தவுடன் கரையேற முற்படும் போது ஒரு சிங்கத்தின் கர்ஜனையை கேட்டது. மானுக்கு குலை நடுங்கி விட்டது. இதனால் தண்ணீருக்குள்ளேயை தன் குட்டியை ஈன்றது. அந்த மான் குட்டி ஆற்றின் நீரிலேயே விழுந்து மிதந்து போனது. தன் கண்ணெதிரே கன்று மிதந்து போவதை பார்த்து தாய் மான் கலங்கி உருகி வருந்தியது. சிங்கம் மானை துரத்த ஆரம்பிக்க சிங்கத்திடம் இருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல் காட்டிற்குள் ஓடி விட்டது. நீரில் சென்ற குட்டி மானை பார்த்த பரதன் அதன் மீது ஈரக்கம் கொண்டு அதனை காப்பாற்றி அன்புடன் வளர்க்க ஆரம்பித்தார். ஆசிரமத்தின் அருகாமையில் இருந்த இளம்புற்களை மேய்ந்து கொண்டும் புலியைக் கண்டால் பயந்து ஆசிரமத்துக்கு ஓடி வந்து ஒளிந்து கொண்டும் காலையில் புறப்பட்டு மேய்ந்து விட்டு மாலையில் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்து தங்கிக் கொண்டும் அந்த மான் வளர்ந்து வந்தது. அந்த மான் ஓடி விளையாடுவதைக் கண்ட பரதரின் மனம் மானின் மீது பற்றும் பாசமும் உண்டானது. ராஜ்யம் மக்கள் முதலிய பந்த பாசங்களை விட்டு தவம் செய்ய வந்த பரதன் மான் மீது மிகவும் அபிமானம் கொண்டிருந்தார். மாலை தனது இருப்பிடம் மான் வரவில்லை என்றால் நம்முடைய மான்குட்டியைக் காணவில்லையே? அதைச் புலி அடித்து சாப்பிட்டு விட்டதோ சிங்கம் அடித்து சாப்பிட்டு விட்டதோ இன்னமும் வரவில்லையே? என்ன செய்வேன்? என்று வருந்துவார். மான் குட்டி மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் வரை அதன் நினைவாகவே இருந்து தவவாழ்வினை மறந்தார். இந்நிலையில் அவருக்கு மரண காலமும் நெருங்கியது.
பரதனை அவரது அன்பு மகன் பார்ப்பதைப் போல அந்த மான் குட்டியானது கண்ணில் கண்ணீர் ததும்ப பார்த்துக் கொண்டிருந்தது. அதுபோலவே பிரியமான மகனைத் தந்தை பார்ப்பது போல பரதரும் கண்ணீர் ததும்ப மான்குட்டியைப் பார்த்துக் கொண்டே தன் உடலை விட்டார். அதனால் மறுபிறவியில் அவர் கங்கைக் கரையில் ஒரு மானாகப் பிறந்தார். ஆனாலும் தன் தவத்தின் பயனால் பூர்வ ஜன்ம ஞானமுடையவராக இருந்தார். மான் மீது வைத்த பற்றினால் தன்னுடைய தவ வாழ்க்கையை இழந்து விட்டோமே என்று எண்ணி வருத்தப்பட்ட அவர் தான் முன்பு வாழ்ந்த இடத்திற்கு வந்து அங்குள்ள உலர்ந்த புற்களையும் சருகுகளையும் தின்று மானாகப் பிறக்க காரணமான கர்மங்களைக் கழித்து அங்கேயே மரணமடைந்தார். பிறகு அந்த ஊரிலேயே பிராமணர் குலத்திலே பூர்வ ஜன்ம வாசனையோடு பிறந்தார். பூர்வ புண்ய ஞானத்தால் சகல சாஸ்திரங்களின் உண்மையை உணர்ந்தவராய் எல்லாவிதமான ஞானத்திலும் தேர்ச்சி பெற்றார். ஆத்ம ஞானியாக இருந்ததால் எந்தவொரு செயலையும் செய்யாமல் அழுக்கு நிறைந்த உடம்போடும் அழுக்கேறிய கந்தை ஆடைகளோடும் காண்பவர்கள் அருவருத்து அவமதிக்கும்படி நடந்து கொண்டார். யாரேனும் அருகில் வந்தால் அவர்கள் மீது பற்று வந்து மீண்டும் பிறவி எடுக்க வேண்டி வருமோ என்று எண்ணி இது போல் நடந்து கொண்டார். மூடனைப் போலவும் பித்தனைப் போலவும் நீண்ட ஜடாமுடியுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த இவரை ஊரார் ஜடபரதர் என்ற பெயர் கொடுத்தார்கள்.
ஜடபரதன் ஒரு ஆத்ம ஞானி என்பதை அறிந்து கொண்ட சவ்வீர ராஜன் என்பவன் இவரை காளிக்கு இவரை பலியிட்டால் பல சக்திகள் கிடைக்கும் என்று எண்ணி அவரைக் காளிக்கு நரபலியிட நிச்சயித்து இரவில் அவரைப் பிடித்துக் கொண்டு சென்றான். பலியிடுவதற்குரிய அலங்காரங்களை எல்லாம் அவருக்குச் செய்து காளியின் திருக்கோயிலின் எதிரே கொலை செய்யும் இடத்தில் கொண்டு நிறுத்தினான். காளியானவள் இவர் மகாயோகி என்பதையறிந்து அவரைப் பலியிட வந்த அந்தக் கொடியவனையே தன் கத்தியினால் வெட்டினாள்.
ஜடபரதன் இருந்த நாட்டின் சௌவீரன் என்ற மன்னன் கபிலர் என்ற ரிஷியிடம் துக்கமயமான சம்சாரத்தில் எது உயர்ந்தது என்ற தனது சந்தேகத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்று அவரை சந்திக்க தனது பல்லக்கில் சென்று கொண்டிருந்தான். பல்லக்கு தூக்குவதில் ஒருவனுக்கு உடல் சரியில்லாமல் போனது. பல்லக்கு தூக்குவதற்கு ஒருவரை மன்னனது சேவகர்கள் தேடினார்கள். அருகில் இருந்த ஜடபரதரை கண்ட அவர்கள் அரசனுடைய பல்லக்கை தூக்குமாறு கட்டளையிட்டார்கள். சகல ஞானமும் உணர்ந்தவராக ஜடபரதர் இருந்தாலும் தமது முற்பிறவிப் பாவங்களைத் தொலைக்க அவர் பல்லக்கை தூக்கி நடக்க ஆரம்பித்தார். பல்லக்கு தூக்கும் மூவரும் ஒரே வேகத்தில் நடக்க இவரது வேகம் சற்று வித்தியாசப்பட்டது. இதனால் பல்லக்கு நிலையின்றி தடுமாறி சென்றது. இதனைக் கண்ட மன்னன் பல்லக்கு சரியாக செல்லாததற்கு காரணம் ஜடபரதர் என்று எண்ணினார். என் பல்லக்கைச் சிறிது தூரம் தானே நீ சுமந்திருக்கிறாய் அதற்குள் உடல் களைத்து விட்டதோ? உடல் பருத்திருக்கும் உன்னால் மன்னனான என்னை வைத்து இந்த பல்லக்கை தூக்க முடியவில்லையா? என கோபமாக கேட்டார். அதற்கு ஜடபரதர் நீங்கள் மன்னரும் இல்லை. நான் பருத்தவனும் அல்ல. உனது பல்லக்கை நான் சுமக்கவும் இல்லை. அதனால் நான் களைப்படையவும் வில்லை என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்டு வியப்படைந்த அரசன் பல்லக்கிலிருந்து இறங்கி அம்மனிதனைப் பார்த்தான். என்னை மன்னித்து விடுங்கள் ஞானியான அந்தணரை அவமதித்த பாவம் என்னைச் சேரும் என அஞ்சுகிறேன். தங்கள் பேச்சுக்கள் என் மனத்தில் ஐயங்களை எழுப்பியுள்ளன. தாங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் என் கண்ணால் கண்டவற்றை மறுக்கின்றன. தயவு செய்து தங்கள் வார்த்தைகளின் உள்ளர்த்தம் என்னவென்பதை விளக்குங்கள் என்று பணிவுடன் வேண்டினான்.
ஜடபரதன் பேச ஆரம்பித்தார். உடல் வேறு உள்ளிருக்கும் ஆத்மா வேறு உடல் ஒவ்வொருவருக்கும் மாறிக் கொண்டே இருக்கும். குழந்தைப் பருவம் இளமைப் பருவம் முதுமைப் பருவம் என்ற கட்டங்களைக் கடந்து முடிவில் பஞ்சபூதங்களில் கலந்து விடும். நிலையில்லாத இந்த உடலைப் பார்த்து நீங்கள் பருத்தவன் என்று சொன்னீர்கள். அதனால் நான் பருத்தவன் இல்லை என்றேன். ஆனால் உடலுக்குள்ளிருக்கும் ஆத்மா அழிவற்றது. எப்போதும் மாறாதது. என்னையும் என் உடலையும் பல்லக்கையும் அதில் அமர்ந்துள்ள உங்களையும் இந்த பூமி சுமக்கிறது பூமியை யார் சுமக்கிறார்கள்? அறிவியல் ரீதியாக அணுக்கள் சுமக்கின்றன எனலாம். ஆனால் ஜடப்பொருளான அணு தானாக இயங்காது. அதை இயக்குபவன் அணுவைக் காட்டிலும் நுண்ணியதாக இருந்து இறைவன் இயக்குகின்றான். ஓர் உயிருக்கு இறைவன் வேறு இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் வேறு என்ற எண்ணம் அவனது கர்மங்களால் உண்டாகிறது. தவத்தின் வழியாக இந்த கர்மங்களை நீங்கியதும் இந்த வேறுபாடு நீங்கி விடும் அதன் பிறகு இந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்குள் இருக்கும் ஆத்மாக்கள் அனைத்திற்கும் ஒருவருகொருவர் உருவத்தில் வேற்றுமை கிடையாது. அனைத்திற்கும் மூலமாக இருப்பது பரமாத்மாவான இறைவனே என்று உணர்ந்து கொள்ளலாம் என்றார்.
ஜடபரதன் தொடர்ந்து பேசினார். அடுத்து நீங்கள் மன்னன் இல்லை என்றேன். உண்மையே நீங்கள் இந்த நாட்டுக்கு மட்டும் மன்னன். உங்களை விடப் பெரிய அரசர்கள் உள்ளனர். அவர்களை விட பெரிய அரசர்களும் உள்ளார்கள். அனைவரையும் ஆளும் அரசன் ஒருவன் இருக்கிறான் அவனே இறைவன். பந்தம் பாசத்தினால் உறவு என்ற எண்ணத்தில் நிலையில்லாத ஒரு உடலின் மீது பற்று வைத்துக் கொண்டு நாம் ஆசைகளை வளர்த்துக் கொண்டு துன்பங்களுக்கு ஆளாகிறோம் என்றார் ஜடபரதர். இந்த ஞானத்தை எப்படி பெறுவது என்று மன்னன் கேள்வி கேட்டான். அதற்கு ஜடபரதன் பார்க்கும் உயிர்கள் மற்றும் அசையும் பொருள் அசையா பொருள் அனைத்துமே இறைவனே என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த ஞானத்தை விரைவில் பெறலாம் என்றார். மன்னன் தெளிவடைந்து ஆன்மீக மார்க்கத்தில் பயணிக்க ஆரம்பித்தான்.
திரிலோசனதாசர் பொற்கொல்லர் இனத்தைச் சார்ந்தவர் தனது தொழிலில் மிகவும் நேர்மையானவர் இறை பக்தி மிக்கவர் பாண்டுரங்கனிடம் அளவு கடந்த அன்பும் பக்தியும் கொண்டவர். இவர் இயற்றியுள்ள பக்திப் பாடல்கள் சீக்கிய கிரந்தத்தில் இடம் பெற்றுள்ளன. இவர் மன்னரின் அரண்மனைப் பொற்கொல்லராக இருந்தார். மன்னரின் மகளுக்குத் திருமணம் நடக்கவிருந்தது. மகளுக்கான நகைகளை திரிலோசனதாசர் செய்ய வேண்டுமென மன்னன் விரும்பி பொன் மற்றும் நவரத்தினக் கற்களை திரிலோசனரிடம் கொடுத்து நான்கு நாட்களுக்குள் நகை செய்து தரவேண்டும் எனக் கட்டளையிட்டான். திரிலோசனரும் சம்மதித்தார். ஆனால் இவர் அரண்மனையிலிருந்து வீடு வந்து சேர்ந்தவுடன் இவர் வீட்டிற்கு பஜனை கோஷ்டி ஒன்று வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து திரிலோசனாருடன் பாண்டுரங்கனை பற்றி பஜனை செய்ய விரும்புவதாகச் சொன்ன போது மிகவும் மகிழ்ந்து போனார் திரிலோசனார். இரண்டு நாட்கள் அவரின் வீடு பாண்டுரங்கன் பஜனையால் கோலாகலமாய் இருந்தது. பஜனை கோஷ்டி விடை பெற்றுச் சென்றது. அதன் பின்னர் தான் இவருக்கு நகை செய்ய வேண்டுமென்ற நினைவு வந்தது. நவரத்தினம் பதித்த நகைகளை செய்யும் வேலையில் இறங்கினார். அந்நகையைச் செய்வது அவ்வளவு எளிதாய் இல்லை. நான்கு நாள் கெடுவில் ஏற்கனவே பஜனையில் இரண்டு நாட்கள் கழிந்து விட்டதால் மீதமிருந்த இரண்டு நாளில் என்ன முயன்றும் திரிலோசனதாசரால் நகைகளைச் செய்ய முடியவில்லை. மன்னரின் ஆட்கள் நான்கு நாட்கள் முடிந்து விட்ட நிலையில் நகை செய்தாகி விட்டதா எனக் கேட்டு வந்தார்கள். இவர் இன்னும் இரண்டு நாட்கள் தரும்படியும் அதற்குள் செய்து முடித்து விடுவதாகவும் சொல்ல இன்னும் இரண்டு நாட்களில் செய்து முடித்து தராவிட்டால் மன்னரின் கோபத்திற்கு ஆளாகி தண்டனை பெறுவீர்கள் என எச்சரித்து விட்டுச் சென்றார்கள். என்ன சோதனையோ இரண்டு நாளில் இவரால் முடிக்க முடியவில்லை பயந்து போனார் திரிலோசனார். மன்னர் என்ன தண்டனை தருவாரோ என்ற பயத்தில் மனைவியிடம் கூடச் சொல்லாமல் அடர்ந்த காட்டிற்குள் சென்று ஓர் மரத்தடியில் அமர்ந்து பாண்டுரங்கனை நினைத்து தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.
பாண்டுரங்கனின் அவதாரமான கிருஷ்ணரின் பால லீலைகலைப் பாடல்களாகப் புனைந்து பாடியபடியும் பாண்டுரங்கனை நினைத்து தியானித்தபடியும் காட்டில் காலத்தைப் போக்கினார். கணவரைக் காணாது அவரின் மனைவி கலங்கிப்போனார். அப்போது பாண்டுரங்கன் திரிலோசனதாசராக உருவெடுத்து அவருடைய வீட்டிற்கு வந்தார். அவருடைய மனைவி அவரிடம் திடீரென உங்களைக் காணவில்லையே எங்கு சென்றீர்கள் எனக் கேட்கவும் என்னிடம் கேள்வி கேட்பதைத் தவிர் என்றார் திரிலோகரின் உருவில் இருந்த பாண்டுரங்கன். மேலும் எதுவும் கேள்விகள் கேட்காமல் மௌனமாகிவிட்டார் திரிலோகரின் மனைவி. திரிலோசனாரின் வீட்டுக்கு அவரின் உருவில் வந்த பாண்டுரங்கன் மன்னரின் மகளுக்காக அழகிய நகைகளைச் செய்து முடித்தார். அது சந்திரனைப் போல் ஒளி வீசியது. அதனை அவரே அரண்மனைக்கு எடுத்துச் சென்றார். ஒளி வீசும் நகைகளைப் பார்த்த மன்னரின் கண்கள் வியப்பால் விரிந்தன. நகைகள் மிகவும் அழகு என வியந்து பாராட்டினார் மன்னர். இவ்வளவு அழகான நகைகளைச் செய்த உங்களுக்கு எவ்வளவு பொருள் தந்தாலும் தகும் எனச் சொல்லி ஒரு பை நிறைய பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினார். திரிலோசனாரின் உருவில் இருந்த பாண்டுரங்கன் பொற்காசுகளுடன் வீட்டிற்கு வந்தார். அவற்றை திரிலோசனதாசரின் மனைவியிடம் கொடுத்து பொற்காசுகளில் சிலவற்றை எடுத்துச் சென்று உணவுப் பொருட்கள் வாங்கி வந்து விருந்து தயாரிக்கும் படியும் தான் போய் பக்தர்கள் சிலபேரை விருந்துண்ண அழைத்து வருவதாகவும் சொல்லிச் சென்றார். திரிலோசனாரின் மனைவிக்கு அதிக அளவு பொற்காசுகளைப் பார்த்து அதிசயமாக இருந்தது. ஆனாலும் கணவரை ஒன்றும் கேட்கவில்லை. கணவர் சொல்லிச் சென்றது போல் விருந்து தயார் செய்தார்.
பாண்டுரங்கனும் சில பக்தர்களை உணவுண்ண அழைத்து வந்தார். தானும் அவர்களோடு அமர்ந்து உணவு உண்டார். பின்னர் விருந்தில் தயாரித்திருந்த அனைத்துப் பதார்த்தங்களையும் பொட்டலங்களாகாக் கட்டி எடுத்துக் கொண்டு திரிலோசனார் ஒளிந்திருந்த காட்டிக்கு அடியவர் வேடத்தில் வந்தார். அப்போது திரிலோசனார் கண்களை மூடி தியானத்தில் இருந்தார். அடியவர் வேடத்தில் வந்திருந்த பாண்டுரங்கன் ஐயா கொஞ்சம் விழித்துக் கொள்ளுங்கள் என்று பலமுறை வேண்டினார். திரிலோசனாரும் கண்களைத் திறந்து அடியவரை பார்த்து இந்த காட்டில் உங்களைப் பார்த்தால் வியப்பாக உள்ளது. நான் தங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார். அடியவர் வேடத்தில் இருந்த பாண்டுரங்கன் இன்று இன்னாட்டின் மன்னர் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம். மன்னரின் மகளான மணமகள் அணிய கண்டோர் வியக்கும் வண்ணம் நகைகளை பொற்கொல்லர் ஒருவர் செய்து கொடுத்திருக்கிறார். இதனால் மகிழ்ந்த மன்னர் அளவுக்கதிகமாக பொற்காசுகள் கொடுத்திருக்கிறார். அந்த பொற்கொல்லார் அடியவர்களை அழைத்து நல்லதொரு விருந்தளித்தார். அவ்விருந்தில் நானும் கலந்து கொண்டேன். திருப்தியாய் சாப்பிட்ட நான் திரும்பி வருகையில் பாதை தவறி இக்காட்டிற்குள் வந்து விட்டேன். விருந்தில் அளிக்கப்பட்ட பதார்த்தங்களை மீண்டும் பசியெடுத்தால் உண்ணலாமென கொஞ்சம் அந்த பொற்கொல்லரிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டு வந்துள்ளேன். உங்களைப் பார்த்தால் மிகவும் பசியோடு இருப்பவர் போல் தெரிகிறது. இந்தாருங்கள் இதனை நீங்கள் உண்ணுங்கள் என்று கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலத்தை அளித்தார்.
பாண்டுரங்கன் வடிவில் இருந்த அடியவர் கூறிய செய்தி திரிலோசனதாசருக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. நாம் இல்லை என்பதை தெரிந்து கொண்ட மன்னர் வேறொரு பொற்கொல்லரை வைத்து நகைகளை செய்து வாங்கிக் கொண்டார். இனி நமக்கு பயமில்லை. இனி நாம் நம் வீடு திரும்பலாம் என நினத்தார். அந்த நினைப்பே அவருக்குப் பசியைத் தூண்டியது. அடியவர் அளித்த உணவை ஏற்று அதனை உண்டார் திரிலோசனார். வீட்டுக்குக் கிளம்பியவர் அந்த அடியவரிடம் சுவாமி எனக்கு உணவளித்த நீங்கள் என்னுடன் என் இல்லம் வரவேண்டும். உங்களுக்குத் தக்க மரியாதை செய்ய விரும்புகிறேன் என்றார். அடியவரின் உருவில் இருந்த பாண்டுரங்கனும் சம்மதித்தார். இருவரும் திரிலோசனாரின் இல்லம் அடைந்தனர். அடியவர் திரிலோசனாரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொள்ள திரிலோசனதாசர் உள்ளே சென்றார். வீட்டில் குவிந்து கிடந்த மளிகைப் பொருட்களைக் கண்டு வியந்த திரிலோசனார் மனைவியிடம் இவ்வளவு மளிகைப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன எப்படி வந்தது என்று வியப்போடு கேட்டார். அவரின் கேள்வியில் திகைத்துப் போன மனைவி இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள்? நீங்கள் தானே நகைகளை செய்து கொடுத்ததற்காக மன்னர் அளித்த பொற்காசுகளை என்னிடம் கொடுத்து அடியவர்களுக்கு விருந்து வைக்க மளிகைப் பொருட்கள் வாங்கி வரச் சொன்னீர்கள். அவ்வாறு நானும் வாங்கி வர அடியவர்களுக்கு விருந்தும் வைத்தோமே? நீங்களும் அவ்விருந்தில் இருந்த பதார்த்தங்களைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு எங்கோ சென்றீர்களே? ஒன்றுமறியாதவர் போல கேள்வி கேட்கிறீர்களே என்றாள். மனைவி சொன்னதைக் கேட்டு வியந்து போன அவர் தன்னைக் காட்டில் சந்தித்தவரும் இதைத்தானே சொன்னார் என்று அதிசயத்தபடி வெளியே வந்து பார்த்த போது திண்ணையில் அந்த அடியவர் இல்லை. இப்போது திரிலோசனதாசருக்கு நன்கு புரிந்தது. தான் மன்னனுக்கு பயந்து காட்டில் சென்று ஓளிந்து கொண்ட போது பாண்டுரங்கனே தம் உருவில் இங்கு வந்து நகைகளைச் செய்து மன்னனிடம் கொடுத்து கூலிபெற்று அதில் மளிகை வாங்கி அடியவர்களுக்கு விருந்து படைத்துள்ளார். அவிருந்தில் அளிக்கப்பட்ட உணவினை எனக்கும் கொண்டு வந்து அளித்துள்ளார் என மிகுந்த பக்தியோடு தன்னை மறந்து பாண்டுரங்கன் மீது பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.
துக்காராம் தேவநகரம் என்னும் ஊரில் மாதவராவ் என்னும் பக்தசீலரின் பிள்ளையாக 1598ல் அவதரித்தார். தந்தை செய்து வந்த தானிய வியாபாரத்தை இவரும் செய்தார். கல்வியறிவு பெறாவிட்டாலும் இயற்கையிலேயே இசைஞானம் பெற்றவராக இருந்தார். கவிதை எழுதும் ஆற்றலும் இருந்தது. குடும்பத்தினர் வழிவழியாக மீது பக்தி செலுத்தியதை துக்காராமும் பின்பற்றினார். இசை ஞானமும் பக்தி ஞானமும் துக்காராமின் இருகண்களாக அமைந்தன. ஒரு கட்டத்தில் தானிய வியாபாரம் குறைந்து துக்காராமின் குடும்பம் வறுமையில் சிக்கியது. இந்த நிலையிலும் பாண்டுரங்கன் மீதான பக்தி மட்டும் துக்காராமுக்கு குறையவில்லை. பாண்டுரங்கன் பல அற்புதங்களை இவருடைய வாழ்வில் நிகழ்த்தினார். துக்காராம் அந்த ஊரில் உள்ள ஒரு சவுகாரிடம் கடன் பெற்று தானியம் வாங்க வெளியூர் சென்றார். தானியத்தை வண்டியில் ஏற்றிக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இரவுவேளை பலத்தமழை புயல்காற்றுடன் பெய்தது. மாடுகளை அவிழ்த்து விட்டு ஓரிடத்தில் ஒதுங்கினார். களைப்பாக இருக்கவே தூங்கி விட்டார். மறுநாள் விழித்த போது அதிர்ச்சி காத்திருந்தது. வண்டி மாடு தானியம் எதையும் காணவில்லை. மனவேதனைக்கு ஆளானார். மிகவும் சோர்வுற்ற துக்காராம் பாண்டுரங்கனைக் குறித்து தியானத்தில் ஆழ்ந்தார். அந்த நேரத்தில் பாண்டுரங்கனே துக்காராம் போல் உருவை மாற்றிக்கொண்டு மாட்டு வண்டியில் புறப்பட்டார். தானிய வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை துக்காராம் மனைவி ஜீஜாபாயிடம் கொடுத்துவிட்டு நீராடக் கிளம்பினார். ஜீஜாபாய் கடனாக வாங்கிய பணத்தைக் கொடுக்க சவுகார் வீட்டுக்குச் சென்றாள். ஏற்கனவே துக்காராம் வந்து கடனைத் திருப்பி கொடுத்து விட்டார் என்று சொன்னதும் எல்லையில்லாத மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பினாள். வீட்டில் குளித்துக் கொண்டிருந்த துக்காராமையும் காணவில்லை. வெளியே சென்றிருப்பார் என்று அமைதியாக இருந்து விட்டார் ஜீஜாபாய்.
துக்காராம் தியானத்தில் இருந்து கண் விழித்த துக்காராம் வருத்தத்துடன் வீடு திரும்பிவந்தார். வீட்டில் நடந்த விபரங்களை ஜீஜாபாய் மூலம் அறிந்து கொண்ட துக்காராம் ஆச்சரியத்தில் மூழ்கினார். தன்னைப் போல வந்து அற்புதத்தை நிகழ்த்தியது பாண்டுரங்கனே என்பதை எண்ணி தம்பதியர் இருவரும் ஆனந்தக்கண்ணீர் பெருக்கினர். துக்காராம் பாண்டுரங்கன் கோயிலில் பாடல்கள் பாடுவதை தன் முழுநேரப் பணியாகக் கொண்டார். கோயிலில் பக்தர் கூட்டம் பெருகியது. பலரும் இவருடைய சீடர்களாக மாறினர். சிலர் அவர் மீது பொறாமையும் கொண்டனர். அதில் ராமேஸ்வரபட் என்பவர் துக்காராம் நீ பிறப்பால் தாழ்ந்தவன் அதனால் நீ பாடும் பாடல்களை பாண்டுரங்கன் ஏற்றுக் கொள்ளமாட்டான். நீ எழுதிய பாடல்களை இந்திராயணி ஆற்றில் நானே எறிந்து விடுகிறேன் என்று சொல்லி ஆற்றில் தூக்கி எறிந்தார். துக்காராம் பாண்டுரங்கனை எண்ணி தியானத்தில் மூழ்கினார். நதிதேவதை மூலம் மீண்டும் பாடல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன. இந்த நிகழ்ச்சிக்குப் பின் அவருக்கு துன்பம் செய்த ராமேஸ்வரபட்டும் துக்காராமின் சீடராக மாறினார்.
துக்காராம் மீது வீரசிவாஜி மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். ஒருமுறை அவர் துக்காராமைச் சந்திக்க மாறுவேடத்தில் வந்திருந்தார். ஒற்றர்கள் மூலம் இவ்விஷயத்தை அறிந்த அவுரங்கசீப்பின் படைகள் பாண்டுரங்கன் கோயிலைச் சுற்றி வளைத்தன. சிவாஜியைக் காப்பாற்றும்படி பாண்டுரங்கனை துக்காராம் வேண்டிக் கொண்டார். பாண்டுரங்கனே வீரசிவாஜி போல குதிரையில் தப்பி ஓட அவுரங்கசீப்பின் படை வீரர்கள் பின்தொடர்ந்தனர். அதனால் உண்மையான சிவாஜி காப்பாற்றப்பட்டார். இதற்காக துக்காராமுக்கு பொன்னும் பொருளும் சன்மானமாக வீரசிவாஜி கொடுத்த போதும் அவற்றை துக்காராம் ஏற்றுக் கொள்ளவில்லை.
துக்காராமுக்கு கமலாபாய் என்ற மனைவியும் உண்டு. ஒரு நாள் அவள் தன் சேலையை துவைத்து வெயிலில் உலர்த்தப் போட்டுவிட்டு ஏதோ வேலையாக வெளியில் சென்றுவிட்டாள். கிழிந்த சேலை கட்டியிருந்த ஒரு ஏழைப்பெண்ணுக்கு உதவும் எண்ணிய துக்காராம் கமலாபாயின் சேலையை அவளிடம் கொடுத்து விட்டார். அவளும் அதை கட்டிக் கொண்டு புறப்பட்டாள். வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த கமலா தன் சேலையை உடுத்தியிருந்த பெண்ணைக் கண்டதும் துக்காராமிடம் கோபித்தாள். பாண்டுரங்கா பாண்டுரங்கா என்று சொல்லி வீட்டையும் பாழாக்குறீங்களே என்று கத்தினாள். குழவிக் கல்லை எடுத்துக் கொண்டு பாண்டுரங்களை அடிக்க கோயிலுக்கு புறப்பட்டாள். கோயிலில் புன்னகையுடன் ருக்மணியே கமலாபாயின் புடவையைக் கட்டிக் கொண்டு காட்சி அளித்தாள். பலவிதமான ஆடை ஆபரணங்களை கமலாபாய்க்கு கொடுத்து அருள்புரிந்தாள். ஓடிவந்து துக்காராமின் பாதங்களில் விழுந்து கதறி அழுதாள் கமலா. துக்காராம் கமலாபாயிடம் கமலா நீயே பாக்கியசாலி. வழிபட்டும் காணமுடியாத பிராட்டியைக் கண்ணாரக் கண்டு தரிசிக்கும் பாக்கியம் பெற்ற விட்டாயே நீ பாக்கியவதி என்று சொல்லி மகிழ்ந்தார்.
துக்காராம் தன்னை மறந்த நிலையில் இறைவனைப் பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவர் வந்து அவரை நமஸ்கரித்தார். துக்காராமோ தன்னை மறந்த நிலையில் பாடிக்கொண்டு பரவசத்துடன் காணப்பட்டார். வந்தவர் துக்காராம் அவர்களின் உடலில் காணப்படும் மயிர்க்கூச்சலைக் கண்டார். ரோமங்கள் எல்லாம் முள்ளம்பன்றியின் முட்கள்போல் புடைத்துக்கொண்டு காணப்பட்டது. விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. இருதயத்தில் பக்தியானது கீர்த்தனைகளாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அவருடைய முகத்தில் கருணை அன்பு அமைதி திவ்யமான தேஜஸ் எல்லாம் ஒன்று சேர்ந்து குடிகொண்டிருந்தது. துக்காராமை நமஸ்கரித்தவருக்கும் இது போல் நாமக்கும் நடை பெற வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. கீர்த்தனம் முடிந்தபிறகு துக்காராமை தனிமையில் தரிசனம் செய்தார். எனக்கும் தங்களைப் போல ஞான வைராக்கியத்துடன் கூடிய பக்தி சித்திக்க தாங்கள் அருள் செய்ய வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார். துக்காரமும் புன்முறுவலுடன் அவருக்கு ஒரு வாழைப்பழத்தை கொடுத்தார். பழத்தைப் பெற்றவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. நாம் ஞானபக்தியை வைராக்கியத்தைக் கேட்டால் இவர் ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டாரே என்று வருந்தினார். அந்த ஏமாற்றமும் வருத்தமும் எல்லாம் சேர்ந்து வெறுப்பாக மாறியது. வீதியில் அப்பொழுது சாங்கேவர்மன் என்ற ஓர் ஏழை தெருவிலிருக்கும் குப்பைகளைக் கூட்டிக் கொண்டிருந்தார். வெறுப்பில் அந்த வாழைப் பழத்தை அவரிடம் தூக்கிப் போட்டு விட்டுப் போய்விட்டார். அந்தப் பழத்தைச் சாப்பிட்டவுடன் அவர் பாண்டுரங்கனின் மகா பக்தராகி தனது குருநாதரைப் பற்றி பாடல்கள் பல இயற்றி பாடினார்.
துக்காராம் நாற்பத்தைந்து ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்த துக்காராம் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு நான் போய் வருகிறேன் என்று கூறினார். அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ராம் ராம் என்று சொல்லிக் கொண்டே இந்தப் பூத உடலுடன் வைகுண்டம் கிளம்பினார்.
பாண்டுரங்கனின் பக்தர்களான கங்காதர் ராவ் கமலாபாய் தம்பதி பண்டரிபுரத்தில் வசித்தனர். அவர்களின் மகள் சக்குபாய். சிறுமியான அவள் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த வழியாகத் தம்பூராவுடன் முதியவர் ஒருவர் பாடியபடி வந்தார். அவரது கால் இடறி மணல் வீடு சிதறியது. சக்குபாய் அவரைத் திட்டினாள். மன்னிப்பு கேட்டும் அவளது கோபம் தீரவில்லை. உன் கோபம் தணிய நான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார். தம்பூராவை எனக்கு தர வேண்டும் என்றாள். முதியவர் தம்புராவை கொடுத்ததோடு அதை எப்படி இசைக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்து ஓம் நமோ நாராயணாய மந்திரத்தை சிறுமியின் காதில் ஓதி இதனை செபிக்குமாறு தெரிவித்தார். அன்று முதல் விளையாட்டில் மனம் செல்லாமல் மந்திரம் செபிப்பதிலேயே அவளின் மனம் ஈடுபட்டது. திருமணம் செய்தால் இவள் மனம் மாறுவாள் என நினைத்தனர் பெற்றோர். டில்லியைச் சேர்ந்த மித்ருராவ் திருமணம் செய்து கொண்டார். எப்போதும் சக்குபாய் தியானத்தில் இருப்பதும் மந்திரம் ஜபிப்பதும் மாமியாருக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை மாமியார் தன் மகனிடம் இவளை இருட்டு அறையில் கட்டிப்போடு என நிர்பந்தம் செய்தாள். தயக்கத்துடன் மித்ருராவும் மனைவியைக் கயிற்றால் கட்டி வைத்தார். அப்போது துறவி வடிவத்தில் தோன்றிய பாண்டுரங்கன் பிச்சை கேட்டு தெருவில் சென்றார். அவரை பார்த்தார் மித்ருராவ். அருகில் வந்த துறவி வருந்தாதே மகனே என் மந்திர சக்தியால் உன் பிரச்னை தீரும் என்றார். மனைவியின் நோயை உங்களால் தீர்க்க முடியுமா எனக் கேட்டார் மித்ரு ராவ். குணப்படுத்துவேன். இப்போதே ஆற்றங்கரைக்கு அழைத்து வா என்றார் துறவி. மனைவியுடன் சென்றார் மித்ரு ராவ். ஆற்றில் குளிக்கச் சொல்லிய பிறகு நல்ல மருமகளாக இருப்பதே பெண்ணுக்கு அழகு என அறிவுரை சொன்னார். அதன் பின் சக்குபாயிடம் நல்ல மாறுதல் ஏற்பட்டதை கண்ட மித்ருராவ் மகிழ்ச்சி அடைந்தார்.
பாண்டுரங்கன் கோவிலுக்கு சிலர் சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் செல்ல சக்குபாயும் விரும்பினாள். ஆனால் அதற்கு மித்ருராவ் சம்மதிக்கவில்லை. சண்டை ஆரம்பமானது. கோபமடைந்த மித்ரு ராவ் சக்குபாயை துாணில் கட்டி வைத்தார். இதுவும் பாண்டுரங்கனின் லீலையே சக்குபாய் என பிரார்த்தனையில் ஈடுபட்டாள். சிறிது நேரத்தில் அவள் முன் மற்றொரு சக்குபாய் வந்தாள். பகவானே சக்குபாயாக காட்சியளித்தார். கட்டை அவிழ்த்து விட்டு பண்டரிபுரம் சென்று தரிசித்து வா என்றாள். அவளும் மகிழ்வுடன் புறப்பட்டாள். சக்குபாய்க்கு பதிலாக பகவான் துாணில் கட்டுண்டு விட்டார். பண்டரிபுரத்தில் சக்குபாய் தரிசித்தாள். பஜனை கோஷ்டியுடன் பாடினாள். பக்தியில் திளைத்ததால் குடும்பத்தையே மறந்தாள். வீட்டுத் துாணில் கட்டிருந்த சக்குபாய் சுவாமி என்னை மன்னியுங்கள். நான் இனி உங்கள் சொல்படி நடப்பேன். என்னை அவிழ்த்து விடுங்கள் என கணவரிடம் கெஞ்சினாள். கட்டை அவிழ்த்து விட்டார். அன்று முதல் சக்குபாய் (பகவான்) கணவருக்கும் மாமியாருக்கும் பணிவிடை செய்தாள். நாட்கள் கடந்தன.
பண்டரிபுரத்தில் இருந்த சக்குபாய் குடும்பத்தை மறந்து பக்தியில் ஈடுபட்டாள். பூக்களைப் பறித்து மாலையாக்கி பகவானுக்கு தினமும் சாத்தினாள். ஒரு நாள் பூப்பறிக்கும் போது பாம்பு தீண்ட மயங்கி விழுந்தாள். அங்கு இருப்பவர்கள் ஆபத்தான நிலையில் சக்குபாய் கிடக்கும் செய்தியை கணவரான மித்ருராவிடம் தெரிவித்தனர். அதே நேரம் வைத்தியராக தோன்றிய பகவான் விஷத்தை முறிக்க பச்சிலை கொடுத்து சக்குபாயைக் காப்பாற்றினார். அவளின் முன் சக்குபாயாக காட்சியளித்து நடந்தவற்றை நினைவுபடுத்தினார். தன் சுயரூபத்தை சக்குபாய்க்கு காட்டி வருந்தாதே வீட்டிற்கு செல் எல்லாம் நன்மையாக முடியும் என்று மறைந்தார். பண்டரிபுரத்திற்கு வந்த மித்ருராவ் சக்குபாயைக் கண்டதும் எங்கே என்ன செய்கிறாய் என ஆவேசமாகக் கேட்டார். உண்மையை சொன்னாள் சக்குபாய். இத்தனை நாளும் வீட்டு வேலைகளைச் செய்தவர் பகவான் என்ற உண்மையை அறிந்த மித்ருராவ் ஆச்சரியத்தில் சிலை போல நின்றார். தவறை உணர்ந்த அவர் மனைவியிடம் மன்னிப்பு கேட்டதோடு தனது குருவாகவும் ஏற்றார். அன்று முதல் இருவரும் பாண்டுரங்கனை வழிபட்டு முக்தி அடைந்தனர்.
நாமதேவர் பண்டரிபுரத்தில் கிருஷ்ணரின் பக்தன். விட்டல விட்டல என்று பாண்டு ரங்கனின் நாமத்தை சொல்லி பஜனைகள் செய்வதையே தனது தொழிலாக வாழ்ந்து வந்தார். பாகவதர் ஒருவர் அவர் இருக்கும் அதே தெருவில் வசித்தவர். இருவரும் பஜனை செய்வதையே தங்கள் தொழிலாக செய்து யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார்கள். பாகவதற்கு நாம தேவருடன் தொடர்ந்து பஜனைகள் செய்வதற்கு விருப்பம் இல்லாமல் போனது. பஜனைகள் செய்வதால் பயன் ஒன்றும் இல்லை. ஆகவே லட்சுமியை ஆராதணை செய்து மந்தர சித்தி பெற்று பொருள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் பாகவதற்குக் தோன்றியது. எனவே பாஜனை செய்ய செல்லாமல் எப்போதும் லட்சுமியை ஆராதணை செய்ய ஆரம்பித்தார். கடும் விரதம் உபாசனை மந்த்ரோச்சாடனம் பூஜையெல்லாம் செய்து லட்சுமியின் மனம் கனிய வைத்து அவளிடம் இருந்து ஒரு ஸ்பரிசக்கலை பெற்றுக் கொண்டார். அந்த கல்லின் மூலம் கண்ணில் கண்ட இரும்பு பொருள்களை எல்லாம் தொட்டு தங்கமாக்கினார். வீட்டில் இரும்பு தீர்ந்து போய் தெருவெல்லாம் கிடக்கும் ஆணி கம்பியெல்லாம் எடுத்து வந்து அவை தங்கமாக்கி தனதாக்கிக் கொண்டார். ஆனாலும் அவரது ஆசை பெருகிக் கொண்டே சென்றது. இதனால் நாமதேவருடன் பஜனைக்கு பல மாதங்களாக செல்லாமல் இருந்தார். பாகவதர் பஜனைக்கு வராததை எண்ணி நாமதேவர் மிகவும் வருந்தினார். விட்டலா இதுவும் உன் சித்தம் உன் விளையாட்டு என்று எண்ணிக் கொண்டு அமைதியாக இருந்தார்.
நாமதேவர் மனைவி ராஜாய் பாகவதர் மனைவிக்கு நெருங்கிய நண்பி. இருவரும் ஒன்றாகவே காலையில் சந்திரபாகா நதிக்கு சென்று ஸ்நானம் செய்து நீர் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்புவார்கள். ஒரு நாள் ராஜாய் பாகவதரின் மனைவியிடம் சிறிது நாட்களாக புதிய தங்க நகைகளாக அணிந்திருக்கிறாய். புது புடவையாக கட்டி வருகிறாய் எப்படி இதெல்லாம் என்று கேட்டாள். அதற்கு பாகவதரின் மனைவி பாகவதர் பாண்டுரங்கனை வழிபடுவதை விட்டு லட்சுமி குபேரன்னு நிறைய பூஜை மந்திர தந்திரமெல்லாம் செய்து இரும்பை தங்கமாக்கிற ஒரு கல்லை பெற்று விட்டார். அந்த கல்லாலே இரும்பை தொட்டாலே தங்கமாக மாறி விடுகிறது. இந்த செய்தியை யாரிடமும் சொல்லி விடாதே என்றாள். அனைத்தையும் கேட்ட நாமதேவர் மனைவி ராஜாய் எங்களது வீட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. பணம் சம்பாதிக்காமல் எப்போது பார்த்தாலும் பஜனை பஜனை என்று விட்டலன் நாமம் தான் வீட்டில் கேட்கிறது. நானும் எனது அம்மாவும் தான் தினமும் யாரிடமாவது யாசகம் பெற்று சமையல் செய்கிறோம். ஒரே ஒருநாள் எனக்கு அந்த கல்லை கொடு. வீட்டில் நிறைய துருபிடிச்ச இரும்பு இருக்கு அனைத்தையும் தங்கமாக மாற்றி விட்டு உன்னிடம் திருப்பி தந்து விடுகிறேன். இதனால் என் வீட்டிலும் வறுமை இல்லாமல் இருக்கும் என்று கல்லை கேட்டாள். பாகவதரின் மனைவியும் சம்மதித்து பாகவமருக்கு தெரியாமல் ராஜாய்யிடம் கல்லை கொடுத்தாள். நாமதேவரின் வீட்டில் இருந்த நிறைய ஊசிகளும் இரும்பு துண்டுகளும் தங்கமாயின. இதனை கண்ட நாமதேவர் தன் மனைவி இரும்பை தங்கமாக்குவதை கவனித்து பதறினார். விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். பண ஆசை தன் மனைவியையும் பாகவதரைப் போலவவே மாற்றி விடுவதை அறிந்து வாடினார். விட்டலா என்று கத்திக் கொண்டே அந்த மந்திரக்கல்லை ராஜாயிடம் இருந்து பிடுங்கி ஓடிய நாமதேவர் சந்திரபாகா நதியில் வீசி எறிந்தார். நதியின் ஆழத்தில் கல் விழுந்து மறைந்தது.
நாமதேவர் அமைதியாக வீடு திரும்பினார். ராஜாய் பாகவதர் மனைவியை பயத்தினால் அன்று சந்திக்கவில்லை. மறு நாள் வழக்கம் போல பாகவதர் பூஜைக்கு அமர்ந்தார். கல் இருந்த பேழையை கண்ணில் ஒற்றிக்கொண்டு லட்சுமியை பிரார்த்தித்து திறந்தார். உள்ளே கல் இல்லை மனைவியிடம் கேட்டு விசாரித்து உண்மையை தெரிந்து கொண்டார் நெருப்பாக அவளை திட்டி தீர்த்தார். நாமதேவர் வீட்டிற்க்கு வந்து எங்கே என்னுடைய மந்திரக்கல். அதனை உடனே கொடு என்றார். பாகவதரை அமைதிபடுத்திய நாமதேவர் பகவான் மீது செய்யும் பஜனையின் புண்ய பலனைகளை எல்லாம் எடுத்தி கூறி மீண்டும் பாகவதம் செய்ய வருமாறும் இந்த கல் மேல் உள்ள ஆசையை விடுமாறும் எடுத்துக் கூறினார். அதை கேட்கும் நிலையில் பாகவதர் இல்லை. வானுக்கும் பூமிக்குமாக குதித்து கொண்டு வா என் கல்லை என்று நச்சரிக்கவே அது சந்திரபாகா நதியில் போடப்பட்டதை நாமதேவர் சொன்னதும் பாகவதர் நதிக்கு ஓடினார். என் கல் என் கல் அதை இப்போதே தா என்று பித்து பிடிக்காத குறையாக கத்தினார் பாகவதர். நாமதேவரையும் விட்டலனையுமே வாய்க்கு வந்தபடியெல்லாம் தாழ்வாக ஏசினார். விட்டலனை பாகவதர் திட்டுவதை கேட்ட நாமதேவர் வருத்தமடைந்தார். பாகவதரே என்னோடு வாருங்கள் என்று அவர் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நதிக்குள் இறங்கினார். விட்டலா நான் செய்த தவறினால் இந்த பாகவதர் உன்னையும் திட்டுகிறார். என்னை மன்னித்து விடு. இந்த பாகவதரின் கல் மீண்டும் கிடைக்க அருள் புரியவேண்டும் என்று சொல்லி நதியில் மூழ்கி கைக்கு கிடைத்த கல்லெல்லாம் எடுத்து பாகவதரிடம் கொடுத்தார். உங்களது கல் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நாமதேவரின் கை நிறைய பெரிய பெரிய மந்திர கற்கள். நாமதேவரின் சக்தியையும் பாண்டுரங்கன் மகிமையையும் இமைக்கும் நேரத்தில் புரிந்துகொண்டார் பாகவதர். கற்களை வாங்கி நதியில் வீசிய பாகவதர் நாமதேவர் காலடியில் விழுந்தார். மீண்டும் விட்டலனின் ஆலயத்தில் நாமதேவரோடு பாகவதர் பஜனைகள் செய்ய ஆரம்பத்தார்.
காசியில் சிதம்பர சுவாமிகள் குருகுலத்தில் ஆசிரியர் தன்னுடைய மிகச் சிறந்த மாணவனான முத்துசுவாமியை அழைத்து தம்பி உன்னுடைய கல்வி நிறைவடைந்து விட்டது. நீ திருவாருர் செல். போகும் வழியில் திருத்தணி முருகனை வழிபட்டுச் செல். முருகன் உனக்கு வழி காட்டுவான் என்றார். முத்துசுவாமி தன்னுடைய கல்வி நிறைவு பெற்றதை எப்படி நான் அறிந்து கொள்வது என்று தன் குருவிடம் கேட்டார். அதற்கு குரு கங்கையில் நீராடி வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியை நினைத்துக் கொள் உனக்கு பதில் கிடைக்கும் என்றார். நேராக கங்கைக்கு சென்ற முத்துசுவாமி சரஸ்வதியை நினைத்துக் கொண்டே கங்கையில் மூழ்கி எழுந்தான். அப்போது சரஸ்வதி நேரடியாக காட்சி கொடுத்து அழகிய வீணையை பரிசாக கொடுத்தாள். அந்த வீணையின் சிறப்பாக அதில் ராம் என்று வடமொழியில் எழுதி இருந்தது. யாழ் மேல் நோக்கி பார்த்திருந்தது. மகிழ்ச்சி அடைந்த முத்துசுவாமி தான் கல்வியில் நிறைவு பெற்று விட்டோம் என்று எண்ணிக் கொண்டு குரு சொன்ன படி திருத்தணியில் ஒருமண்டலம் தங்கி தியானத்தில் இருக்க முடிவு செய்து அங்கேயே தங்கினார். 40 வது நாள் நாள் ஒரு வயதான பெரியவர் முத்துசுவாமியின் அருகில் வந்து உனது வாயைத் திற என்று சொல்லி வாயில் கற்கண்டைக் கொடுத்து நொடியில் மறைந்து விட்டார்.
முத்து சுவாமியின் வாயிலிருந்து ஶ்ரீ நாதாதி குரு குஹோ ஜயதி ஜயதி என்ற பாடல் பிறந்தது. ஶ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் சுவாமிகள் தனது முதல் பாட்டை முருகன் சன்னிதானத்தில் பாடினார். 15 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாத சுவாமிகளை தமிழில்பாடச் சொல்லிக் கேட்டு முருகன் மகிழ்ந்தானோ அதுபோலவே தீட்சிதர் சுவாமிகளை வடமொழியில் பாடச்சொல்லி மகிழ்ந்தான் முருகன். தீட்சிதர் சுவாமிகள் 500 மேற்பட்ட பாடல்களை வெவ்வேறு ராகங்களில் இயற்றியிருக்கிறார். முத்து சுவாமி சுவாமிகள் குரு குஹ என்று தன்னுடைய முத்திரையையும் என்ன ராகத்தில் பாடவேண்டும் என்பதற்காக ராகத்தின் பெயரையும் பாடல் வரிகளின் நடுவில் பதித்து இருப்பார்கள். சுவாமிகளின் சீடர் தம்பியப்பன் வயிற்று வலியால் துடித்த போது சீடரின் ஜாதகத்தைப் பார்த்து அந்த வலி குருப்பெயர்ச்சியால் என்று அறிந்து கொண்டு கிரகஸ்பதே என்று அடாணாவில் குரு பகவானை வாழ்த்தி ஒரு பாடலை இயற்றி சீடரின் வயிற்று வலியை போக்கினார் முத்து சுவாமி சுவாமிகள். தனது சீடரின் வேண்டுகொளுக்கு இணங்க நவகிரக தெய்வங்களுக்கு நவகிரக கீர்த்தனைகள் பல ராகங்களில் முத்து சுவாமி சுவாமிகள் இயற்றினார். ஒரு சமயம் மதுரையிலிருந்து எட்டையாபுரம் நடந்து வரும்போது சாத்தூர் அருகில் ஒரு கிராமத்தில் பல வருடங்களாக மழையில்லாமல் வாடி வதங்கி பூமி பாளம் பாளமாக வெடித்து பாலை வனமாக காட்சி அளித்ததைக் கண்டு மனம் வாடினார். இறைவியை வேண்டி ஆனந்த ம்ருதாக்ஷினி என்ற பாடலை அம்ரிதவர்ஷினி ராகத்தில் இயற்றி பாடினார். வருஷய வருஷய வருஷய என்று பாடலை முடிக்கும் போது மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது.
பாண்டுரங்கனின் பரம பக்தரான புரந்தரதாசர் ஒருமுறை கிருஷ்ணரை தரிசிப்பதற்காக நீண்ட பயணத்துக்குப் பின் பண்டரிபுரம் வந்து சேர்ந்தார். காலையில் கண்ணனை தரிசிக்கலாம் என்று எண்ணம் கொண்டு சத்திரம் ஒன்றில் தங்கினார். நடுஇரவில் புரந்தரதாசர் கண்விழித்தார். கால் வலி தாங்காமல் அப்பண்ணா ஒத்தடம் கொடுக்க வெந்நீர் கொண்டு வா என்று சீடனை அழைத்தார். பலமுறை கூவியழைத்த பிறகே சீடன் அப்பண்ணா ஒரு பாத்திரத்தில் சுடச்சுட வெந்நீர் கொண்டு வந்தான். தாமதமாக வந்த சீடன் மீது கோபம் கொண்டு வெந்நீர்ப் பாத்திரத்தை வாங்கிய புரந்தரதாசர் வெந்நீரை அப்படியே அப்பண்ணாவின் முகத்தில் வீசிவிட்டார். அப்பண்ணா ஒன்றுடம் சொல்லாமல் படுக்கச் சென்று விட்டார். பின்பு தமது செயலைக் குறித்து வருந்தினார். நிம்மதியாகத் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்தார். பொழுது விடிந்தது. அப்பண்ணாவை படுத்திருக்கும் இடத்திற்குஞ் சென்று நள்ளிரவில் தான் நடந்து கொண்ட விதத்துக்காக வருத்தம் தெரிவித்தார். அப்பண்ணா ஆச்சரியமாகி நான் இரவு முழுவதும் கண்விழிக்கவே இல்லையே என்றார். புரந்தரதாசர் குழம்பினார். நீராடி விட்டுப் பாண்டுரங்கனைத் தரிசிக்கப் போனார். அங்கே பரபரப்பும் சலசலப்புமாக இருந்தது. விசாரித்ததில் கொதிக்கும் வெந்நீரை முகத்தில் கொட்டியது போல பாண்டுரங்க விக்கிரகத்தின் முகம் முழுதும் கொப்புளங்களாக இருப்பது தெரியவந்தது.
கிருஷ்ணரே தனக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இரவு வந்திருந்தான் என்று உணர்ந்ததும் புரந்தர தாசர் நெகிழ்ந்து போனார். அப்பண்ணா வடிவில் வெந்நீர் கொண்டு வந்தது நீதான் என்று அறியாத பாவியாகிவிட்டேனே நான் கோபத்தை விட்டொழிக்க வேண்டுமென்பதற்காக நீ செய்த விளையாட்டா இது? உன் அழகுத் திருமுகத்தை நான் மறுபடி காண வேண்டும் என்று கண்ணீர் சிந்தினார். கிருஷ்ணரின் முகம் முன்பு போல் அழகானது. அந்த அழகில் மயங்கிய அவர் பாண்டுரங்கனின் மீது ஏகப்பட்ட துதிப்பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடினார். புரந்தரதாசர் கோவிலில் இருக்கும் கருட கம்பம் என்ற ஒரு தூணின் கீழ் அமர்ந்து பாடினார். இந்தத் தூணின் அடியில் அமர்ந்துதான் பாண்டுரங்கனின் மீது பாடல்கள் இயற்றினார் என்பதால் இதற்குப் புரந்தரதாசர் தூண் என்றும் பெயர். அந்த தூணுக்கு வெள்ளியால் காப்பு போடப்பட்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் 1484 ஆம் ஆண்டு புரந்தரகட எனும் ஊரில் செல்வந்தர் வரதப்பநாயக்கருக்கும் கமலாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக் ஆகும். இவர் இளமையில் சீனப்பா என்ற பெயராலும் திம்மப்பா திருமலையப்பா என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் விட்டலர் மீது பக்தி ஏற்பட்டதால் புரந்தரவிட்டலர் என்ற பெயர் ஏற்பட்டது. இவர் வளமான குடும்பத்தில் பிறந்ததால் நல்ல கன்னடக் கல்வியுடன் சமிஸ்க்ருத மொழியும் கற்பிக்கப்பட்டது. அத்துடன் இவருக்கு சங்கீதத்திலும் நல்ல புலமை கூடவே தொற்றிக் கொண்டது. தனது பதினாறாம் வயதில் சரஸ்வதிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார். தனது பெற்றோரை இருபதாம் வயதில் இழந்தார். தன் தகப்பனாரின் இரத்தின வியாபாரத்தையே தானும் தொடர்ந்து பெரும் செல்வம் ஈட்டி நவகோடி நாராயணன் என்னும் பெயருடன் விளங்கினார். இவர் தொடக்கத்தில் மிகவும் கருமியாகவும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார். இயல்பாகவே இவருக்கு ஒருவருக்கும் உதவும் சிந்தனை கிடையாது. இவரை நாடி யாராவது உதவி கேட்க வந்தால் கொஞ்சம் கூட இறக்கம் இல்லாமல் முடியாது என்பர். எதிலும் கணக்கு பார்ப்பார். எப்போதும் வியாபாரம் அதிலிருந்து கிடைக்கும் லாபம் ஒன்றே குறியாக இருப்பார். ஆரம்பத்தில் பணத்தின் மீது மட்டுமே அதீத ஆசை வைத்திருந்த அவரை மக்கள் வெறுத்து ஒதுக்கினர். நாராயணாவின் மனைவி சரஸ்வதிபாய் இவருக்கு நேர் எதிராக தயாள கொடையுள்ளம் கொண்டவர்.
ஓர் ஏழை பிராமணன் அடிக்கடி இவரது வியாபார தலத்திற்கு வந்து ஏதேனும் உதவுங்கள் என உதவி கேட்பார். ஒரு நாள் அவரிடம் இனி இங்கு வராதீர்கள் எனக்கூறி செல்லாத சில நாணயங்களைத் தந்தார். அதைப் பெற்றுக் கொண்ட ஏழை நேராக இவரது மனைவியிடம் சென்று இதனை காண்பித்து இப்படி உங்கள் கணவர் என்னை ஏமாற்றுகிறார் நீங்கள் எனக்கு ஏதாவது உதவுங்கள் என வேண்டினார். நாராயணாவின் மனைவி தன் பிறந்த வீட்டில் சீதனமாகத் தந்த தனது வைர மூக்குத்தியை அந்த பிராமணனிடம் தந்தார். அவரோ அதை விற்பதற்காக நேராக நவகோடி நாராயணாவின் கடைக்குச் சென்றார். ஆனால் நாராயணாவோ மிக கோபம் கொண்டு நான் தான் இங்கு வரக்கூடாது என்று சொல்லி அனுப்பினேனே பின் எதற்கு இங்கு வருகிறாய் என கடிந்து கொண்டார். அந்த ஏழை பிராமணன் நான் இங்கு வந்தது ஒரு நகையை விற்பதற்காகவே அன்றி உன்னிடம் யாசகம் கேட்க அல்ல என்று நகையை கொடுத்தான். அதை வாங்கி பார்த்த நாராயணா தன் வைர வியாபார அனுபவத்தினால் பிராமணன் கொடுத்தது தன் மனைவியின் மூக்குத்தி தான் என்று கண்டு பிடித்தார். இது எப்படி தன் மனைவி இவனுக்குக் கொடுக்கலாம் என கோபமடைந்தார். பிராமணரே இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும். இப்போது என்னிடம் இதற்கான பணம் இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். அதை ஒப்புக்கொண்ட பிராமணர் போய்விட்டார். ஒரு பெட்டியில் அந்த மூக்குத்தியை வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்ற நாராயணா தன் மனைவியை அழைத்து உடனே உன் வைர மூக்குத்தியை கொண்டுவா என்றார்.
சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். இப்போது என்ன செய்வது? அந்தப் பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே என்று இறுதியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். இந்தத் துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடு வதைவிட சாவதேமேல் என்ற முடிவோடு ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள். தாயே துளசி நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா என்று சொல்லி விஷத்தைக் குடிக்க முற்படுகையில் விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது. சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும் வியப்பும் அணைத்துக் கொண்டது. என்னைக் காப்பாற்றி விட்டாய் தாயே என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள். கணவனிடம் ஓடோடிச் சென்று இந்தாருங்கள் மூக்குத்தி என்று கொடுத்தாள். ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர்போல மீண்டும் தனது கடைக்குச் சென்று பூட்டி வைத்த பெட்டியை தேடினார் மூக்குத்தி இல்லை. கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து எனக்கு பணம் வேண்டாம் என்னுடைய நகையைக் கொடுங்கள் என்று கேட்டால் என்ன செய்வது?மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது போல் இருந்தது அவருக்கு கூடவே பயமும் வந்தது.
அதிகாலை ஏழை பிராமணன் திரும்ப வந்தான். நான் கொடுத்த நகைக்கு பணம் தருவதாகச் சொன்னீர்களே. இன்று பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னுடைய நகையைக் கொடுங்கள். வேறு கடையில் விற்றுக் வைத்துக் கொள்கிறேன் என்றான். நாராயணனின் நிலை பரிதாபமானது. செருக்குடன் வாழ்ந்தவர் கிழவனிடம் கெஞ்சினார். ஐயா மன்னித்து விடுங்கள் வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது வந்தவுடன் தருகிறேன் மாலை வாருங்கள் கண்டிப்பாக பணம் தருகிறேன் என்று கூறினார். சரி மாலை வருவேன் என்னை ஏமாற்றி விடாதே நான் வருகிறேன் என்று பிராமணன் சென்றார். பிராமணன் போனபின்பு தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி அவர் எங்கே போகிறான் என்று பார்த்துவிட்டு வா என்று அனுப்பினார். பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரம் கழித்து பதை பதைப்புடன் கடைக்கு ஓடி வந்தான். ஏன் இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி ஓடி வருகிறாய்? அந்த பிராமணன் உன்னை அடையாளம் தெரிந்துகொண்டு மிரட்டினானா என்று கேட்டார். அதற்கு வேலையாள் அந்த பிராமணர்இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார். நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார். பின்னர் மறைந்து விட்டார் என்றான். நாராயணன் திடுக்கிட்டார். என்ன இது அதிசயம் என்று வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்த பிராமணருக்கு தானம் தந்ததையும் பின்பு விஷ பாத்திரத்தில் மூக்குத்தி தானாக வந்ததையும் சொன்னாள்.
நாராயணனுக்கு புரிந்துவிட்டது. கடவுளே தன்னை சோதிப்பதை உணர்ந்தார். அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது. இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்? போ உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள். இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை. இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன் என்று அழைக்கப்படுவாய். பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார் என்று அசீரீரி கூறியது. நம்மிடம் வந்து விளையாடியது அந்த இறைவனே என்று மகிழ்ந்து இவ்வுலக வாழ்க்கை அனைத்தும் மாயை என்று உணர்ந்து ஸ்ரீகிருஷ்ண தாஸராக உருவெடுத்தார்.
நாராயணன் தன் அனைத்து சொத்துக்களையும் தன் குடும்பதரின் சம்மதத்தோடு தானம் செய்தார். பின் மத்வகுரு வியாசராஜரின் சீடரானார். தனது முப்பதாவது வயதில் ஞானம் பெற்றார். 1525 ம் ஆண்டு குருவுடன் பண்டரிபுரம் சென்ற அவருக்கு குரு வியாசராஜர் புரந்தர விட்டலன் என்ற பெயரை சூட்டினார். அன்றிலிருந்து புரந்தரதாஸராக அழைக்கப்பட்டார். திருப்பதிக்கு ஒருமுறை புரந்தரதாசர் வந்தார். அவரை புரந்தரி என்பவள் வரவேற்று உபசரித்தாள். அவள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் தெய்வ பக்தி மிகுந்தவள். மிகுந்த ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தாள். அதன் காரணமாக புரந்தரதாசரும் அவளது வீட்டில் தங்க சம்மதித்தார். இரவு நேரமாயிற்று. தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு ரகசியமாக வெளியே கிளம்பினாள் புரந்தரி. அதைக்கண்ட புரந்தரதாசரின் மனம் கசந்தது. தனது குலத்தொழிலை அவள் இன்னும் விடவில்லையே? என்று எண்ணி மனம் நொந்தவராய் அவளைப் பின் தொடர்ந்தார். நேராகக் கோயிலுக்குச் சென்றாள் புரந்தரி. அந்த அர்த்தஜாம வேளையிலும் மூலஸ்தானத்தின் கதவு மட்டும் திறந்திருந்தது. புரந்தரி உள்ளே சென்றதும் கதவு மூடிக்கொண்டது. கதவின் துவாரம் வழியே பார்த்தார் புரந்தரதாசர்.
மூலஸ்தானத்தில் அழகான இளைஞன் ஒருவன் வீணை இசைக்க புரந்தரி நடனமாடினாள். பிறகு புரந்தரி வீணை வாசிக்க அவன் நடனமாடினான். இதைக் கண்ட புரந்தரதாசரின் மனம் கொதித்தது. மறுநாள் காலை வீடு திரும்பிய புரந்தரியிடம் பார்த்தவற்றை கூறி யார் அது என்று கேட்டார். இன்று தெரிந்து கொள்வீர் புரந்தரதாசரே என்று கூறிச்சென்று விட்டாள். அன்று இரவும் அதே போலக் கிளம்பிய போது புரந்தரதாசரையும் அழைத்துச் சென்று கதவிற்கு வெளியே அமர வைத்தாள் புரந்தரி. அன்றும் அதேபோல நடந்தது. ஆனால் வீணை வாசிக்கும் போது அந்த இளைஞன் அபஸ்வரமாக வாசிக்க ஆரம்பித்தான். அபஸ்வரம் புரந்தரதாசரால் தாங்க முடியவில்லை. கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஓடிவந்தார் ரகுநாததாசர். அந்த திவ்யரூப சுந்தரன் எழுந்து ஓடினான். அவன் பின்னாலேயே ஓடினார் புரந்தரதாசர். அந்த இளைஞன் கருவறைக்குள் சென்றதும் அந்த சுந்தர ரூபம் மறைந்துவிட்டது. புரந்தரிக்கு அருள் புரிந்து ஆடவும் பாடவும் வந்தது இறைவனே என்பது புரந்தரதாசருக்குப் புரிந்தது. அம்மா உனக்காக இறைவனே வீணை இசைக்க நீ ஆடினாய். நீ இசைக்க அவர் ஆடினார். என்னே உன் பெருமை என்று கூறிக் கண்களில் நீர் பெருக அந்த பக்தையின் காலில் விழுந்தார் புரந்தரதாசர்.
பக்தை புரந்தரியின் மூலம் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு இசை உலகில் பெரும்புகழ் பெற்ற புரந்தரதாசராக மாறினார். இசை ஞானம் கொண்டுள்ள இவரை இவரது குரு வியாசதீர்த்தர் தென்னிந்திய கர்நாடக இசையை சொந்தமாக கீர்த்தனைகளை இயற்றி பரப்புவதற்கும் பாடல்கள் கடைக்கோடி மனிதர்களும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக இயற்றும்படி கட்டளையிட்டார். இதனை மேற்கொண்ட புரந்தரதாஸர் 4,75,000 கீர்த்தனங்கள் எழுதினார். இது வாசுதேவ நாமாவளிய என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் தற்போது 8000 பாடல்கள் மட்டுமே உபயோகத்தில் உள்ளது. இவரின் கீர்த்தனங்கள் கன்னடத்திலும் வடமொழியிலும் உள்ளன. இவரின் பாடல்களை தாசர்வாள் பதங்கள் என்றும் தேவர் நாமாக்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு. இவர் கீர்த்தனைகளில் வேதங்கள் உபநிடதங்கள் முதலியவற்றின் சாரம்சங்கள் உள்ளது.
ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற ச, ரி, க, ம, ப, த, நீ என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற்குத் தந்தவர் புரந்தரதாசரே. மிக முக்கியமாக முதன்முதலில் பாடல் கற்க ஆரம்பிப்போர்க்கு அரிச்சுவடியாய் திகழும் மாயா மாளகௌட என்ற ராகம் இவரால் இயற்றப்பட்டது. கர்நாடக இசையின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இவர் ஆரம்ப இசைப் பயிற்சிக்கான ஸ்வரவரிசைகள், ஜண்டை வரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள் முதலியவற்றை இயற்றியுள்ளார். மாயாமாளவகௌளை என்னும் ராகம் தான் ஆரம்பப் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ராகம் எனத் தேர்ந்தெடுத்தவரும் இவரே. இவர் பக்திப் பாடல்களை இயற்றி பாடுவதில் வல்லவரானார். விஜய நகர சாம்ராஜ்யத்தில் முக்கிய பதவியில் இருந்தவரும் திருப்பதி வேங்கடவனின் ஆலயத்தில் பல காலங்கள் சேவை புரிந்தவரும் மத்வ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானவருமான ஸ்ரீ வியாசராஜர் புரந்தரதாசரின் குருவாவார். இவர் தனது சீடரான புரந்தரதாசரை பாராட்டி ஒரு பாடல் பாடி புரந்தரதாசரை பெருமைப்படுத்தி இருக்கிறார். மேலும் பாகவதம் மற்றும் உபநிஷத்களின் சாரமாகக் கருதப்படும் புரந்தரதாசரின் பாடல்களை தொகுத்து அவற்றிற்கு புரந்தரோபநிஷத் என்று பெயரிட்டார் ஸ்ரீவியாசராஜர்.
கர்நாடகாவிலுள்ள ஹம்பி என்ற சரித்திர புகழ் மிக்க ஊரில் குடிபெயர்ந்தார். ஒவ்வொரு நாளும் தன்னுடைய தம்பூராவுடன் துளசிமணிமாலை அணிந்து கொண்டு தெருவில் பக்தி பாடல்களை பாடிக் கொண்டிருப்பார். அப்போது அப்பண்ணா என்ற ஒரு ஏழை குயவன் தினமும் பாண்டுரங்கனுடம் பேசுவதாக அறிந்தார். இதை காண விரும்பிய புரந்தரதாஸர் துங்கபத்ரா நதிக்கரையிலுள்ள அவரது குடிசைக்குச் சென்றார். குடிசை சாத்தப்பட்டு ஒரே இருளாக இருந்தது. ஆனால் யாரோ பேசிக்கொண்டிருப்பது மட்டும் இவரால் கேட்க முடிந்தது. ஆர்வத்தில் கதவைத் திறந்து உள்ளே சென்றார். அப்பண்ணா கண்ணை மூடிக்கொண்டு தானே பேசிக்கொண்டிருப்பதை கண்டார். கடுமையான கோபம் கொண்டு தானே பேசிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறாயா என்று அவரது தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டு வந்துவிட்டார். அன்று இரவு மற்றவர்கள் செயலில் நான் யார் தவறு கண்டு பிடிக்க என்று மனம் வருந்தினார். அவரவருக்கு அவரவர் சித்தாந்தம் என்று எண்ணி தூங்கிவிட்டார். மறுநாள் காலை விட்டலன் கோயிலுக்குச் சென்று தரிசித்தபோது விட்டலனின் தலையில் வீக்கம் இருப்பதும் விட்டலன் விக்ரஹத்திலிருந்து ஒரு விசும்பல் சத்தம் கேட்பதையும் பார்த்து பதைபதைத்தார். நேராக அப்பண்ணாவிடம் சென்று தன்னை மன்னிக்கும்படி அவரது காலில் விழுந்தார். அப்பாண்ணாவோ ஒன்றும் புரியாதவராய் நீங்கள் எவ்வளவு பெரிய மஹான் நீங்கள் ஏழையான என் காலில் விழுவதோ மன்னிப்பு கேட்பதோ மாபாதகச் செயல் எழுந்திருங்கள் என்றார். அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காத புரந்தரர் இவர் பெருமை ஊராருக்கும் தெரிய வேண்டுமென நினைந்து அவரை ஊரரிய கோயிலுக்கு அழைத்து வந்து மன்னிப்பு கேட்டார். உடனே விட்டலனின் தலை வீக்கமும் விசும்பல் சத்தமும் நின்றது.
புரந்தரதாசரின் பரம பக்தை ஒரு அழகான இளம் பெண். அவளது பெயர் லீலாவதி தாசியாக இருந்தாலும் எப்போதும் அவளது உதடுகள் புரந்தரதாசரின் பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். சுழன்றடிக்கும் மழை இடிமின்னல் அடித்தது. அப்போது வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தாள். எதிரே வாட்ட சாட்டமான மனிதர் ஒருவர் புன்னகையுடன் நின்றிருந்தார். மழை உடலை நனைத்திருந்ததால் அவர் நடுங்கிக் கொண்டிருந்தார். அவள் உள்ளே வாருங்கள் சுவாமி என்று அவரை அழைத்துச் சென்று ஆசனம் ஒன்றில் அமர வைத்து மாற்றுடை ஒன்றை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள். பின்பு சுவாமி அந்த அறைக்குச் சென்று உடை மாற்றி விட்டு ஓய்வெடுங்கள். நான் சாப்பிட ஏதேனும் கொண்டு வருகிறேன் என்றாள். மாற்றுடையை வாங்கிக் கொண்ட அதனை மாற்றிக்கொண்டார். புரந்தரதாஸரின் பாடலை முணுமுணுத்தவாறே அவரிடம் பழத்தட்டை நீட்டினாள் லீலாவதி.
தட்டை வாங்கிய அவர் அம்மணீ அருமையாகப் பாடுகிறீர்கள். இந்தப் பாடலை இயற்றியது யார் என்று தெரியுமா என்று கேட்டார். மகான் புரந்தரதாசரை அறியாதவர்கள் யாராவது இருப்பார்களா? அவரின் பக்தை நான். அவரது இசைக்கு நான் அடிமை என்றாள் லீலாவதி. அம்மணீ! தங்கள் அழகில் மயங்கி கொட்டும் மழையில் இச்சையுடன் தங்களது இல்லம் நாடி வந்திருக்கும் நான் தான் அந்த புரந்தரதாசன் என்றார். என்ன தாங்கள் தான் புரந்தர தாசரா தங்களை என் தெய்வமாக பூஜித்து வருபவள் நான். தங்கள் திருப்பாதங்களால் இந்த ஏழையின் குடிசை புனிதம் பெற்றது. எனினும் தாங்கள் கூறிய வார்த்தைகள் என்னைத் தீயாகச் சுடுகிறது. தயை கூர்ந்து அந்த எண்ணத்தை விடுத்து, எனக்கு ஆசி புரியுங்கள் கண்களில் நீர் பெருக அவர் பாதங்களில் வீழ்ந்தாள் லீலாவதி. அவளின் பதற்றத்தை ரசித்த அவர் அம்மணீ! தங்களது பக்திக்கு என் மனமார்ந்த நன்றி. தங்களைக் கண்டதே என் பாக்கியம். இதோ இதை என் அன்புக்கு அடையாளமாகப் இதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தன் வலக் கரத்திலிருந்த பொற்காப்பைக் கழற்றி அவளிடம் கொடுத்தார். அவள் அதை வாங்க மறுத்தாள். பலவந்தமாக அவள் கையில் திணித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார் புரந்தர தாசர். பொற்காப்பை தனது பூஜை அறையில் வைத்தாள் லீலாவதி.
அதிகாலை அரண்மனை காவலாளி ஒருவன் முச்சந்தியில் முரசு கொட்டி செய்தி ஒன்று தெரிவித்தான். நம் பாண்டுரங்கப் பெருமானின் சிலையில் இருந்த பொற்காப்பைக் காணவில்லை. அது தொடர்பான தகவல் அறிந்தால் உடனே மன்னரிடம் தெரிவிக்குமாறு பக்த ஜனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சொல்லி விட்டு சென்று விட்டான். அரசின் சிப்பந்தி கூறிய செய்தியை கேட்டதும் அதிர்ந்த லீலாவதி சட்டென்று எழுந்து அருகில் இருந்த தனது இல்லத்தின் பூஜை அறையை நோக்கி விரைந்தாள். அங்கு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட புரந்தரதாஸர் கொடுத்த பொற்காப்பு இருந்தது. புரந்தரதாசர் மீது அவளுக்கு ஆத்திரத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது. அந்தப் பொற்காப்புடன் அரண்மனையை நோக்கி விரைந்தாள். நடந்தவற்றை மன்னரிடம் எடுத்துரைத்தாள். அதைக் கேட்ட மன்னர் வியப்புற்றார். பண்டரிநாதனின் பக்தரான புரந்தரதாசரின் இந்தச் செயல் புதிராக இருந்தாலும் அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தார் அவர். தர்பாரில் லீலாவதியின் குற்றச்சாட்டுகளைக் கேட்டுக் குழம்பினார் புரந்தரதாசர். மன்னா நான் பகவானது பொற்காப்பைத் திருடவில்லை. அதை இந்த அம்மணியிடம் கொடுக்கவும் இல்லை. முதலில் இவர் யார் என்றே எனக்குத் தெரியாது. எல்லாவற்றுக்கும் மேலாக நேற்று நான் பண்டரிபுரம் செல்லவே இல்லை என்றார்.
லீலாவதியின் கண்கள் நெருப்பை உமிழ்ந்தன. மன்னா இவர் நேற்று எனது இல்லத்துக்கு வந்து என்னை நேசிப்பதாகக் கூறினார். இவரது இச்சைக்கு இணங்காமல் இவரை நான் தெய்வமாக வழிபடுவதைக் கூறினேன். இறுதியில் இந்தப் பொற்காப்பை என் கையில் திணித்து விட்டுச் சென்றார். பண்டரிநாதன் மேல் ஆணையாக நான் கூறியவை அனைத்தும் சத்தியம் என்றாள். புரந்தரதாசர் பிரமை பிடித்தவராகத் தலை குனிந்து நின்றார். கோபம் கொண்ட மன்னன் பாண்டுரங்கனது பொற்காப்பைத் திருடியது பெருங்குற்றம். அதற்கு தண்டனையாக இவருக்கு முப்பது கசையடி கொடுக்க உத்தர விடுகிறேன் என்று தீர்ப்பளித்தான். இதைக் கேட்டு புரந்தரதாசர் மனம் உடைந்தார். அப்போது அங்கு ஓர் அசரீரி கேட்டது மன்னா கோயில் கதவு பூட்டியது பூட்டியபடி இருந் தது என்று அர்ச்சகர் கூறியது ஞாபகம் இல்லையோ? கதவு பூட்டி இருக்கும்போது பொற்காப்பை புரந்தரதாசர் எப்படி எடுத்திருக்க முடியும்? என் பரம பக்தன் புரந்தரதாசனிடம் கொஞ்சம் அகம்பாவமும் இருந்தது. அதைப் போக்கவும் அவன் புகழை உலகறியச் செய்யவுமே யாம் லீலாவதியின் இல்லத்துக்குச் சென்றோம் என்று அசீரீரி கூறியது. புரந்தரதாசர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். மன்னரும் மற்றவர்களும் அவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினர்.
பல்வேறு சந்தர்பங்களில் புரந்தரதாஸருடைய பக்தியை தனது லீலா விநோதங்கள் மூலம் பாண்டுரங்கன் வெளிப்படுத்தியுள்ளார். திருமலை வேங்கடேசனின் தரிசனமும் சரஸ்வதி தேவியின் தரிசனமும் ஒருங்கே கிடைக்கப்பெற்ற புரந்தரதாஸர் திருமலையில் தங்கி பாடல்களை எழுதியுள்ளார். கர்நாடக சங்கீத உலகில் நாரத மஹரிஷியின் அவதாரமாகப் பார்க்கப்படும் இவரை சங்கீத பிதாமகர் என்று அழைப்பார்கள். இவருக்கு பல சீடர்கள் உண்டென்றாலும் இவரது பாடல்களை பரப்பியவர்களில் முக்கியமானவர் கனகதாஸர் ஆவார். ஒரு சமயம் இவர் வயிற்று வலியால் அல்லலுற்றார். இதைப் போக்க யாராலும் முடியவில்லை. பண்டரிபுரத்தில் கோயில் கொண்டுள்ள பாண்டுரங்கனை மூன்று முறை தீர்த்தயாத்திரை செய்த பின் வயிற்று வலி நீங்கியது. கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்தார் புரந்தரதாசர். திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையே சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவரது கடைசிக்காலத்தில் சந்நியாச ஆசிரமத்தை அடைந்து 1564 ம் ஆண்டு தை மாதம் இரண்டாம் திகதி அமாவாசையன்று இப்பூவுலகை நீத்தார்.
மகாராஷ்டிராவில் வசித்து வந்த ஜானுதேவர் சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகர். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவர். திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சால் அவர்களை அவமதிக்கத் துவங்கினான். மனம் நொந்த பெற்றோர் காசி யாத்திரைக்குப் புறப்பட்டனர். அவர்கள் மட்டும் எப்படிப் போகலாம் நாமும் காசி போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள் புண்டரீகனின் மனைவி. காசி போகும் குழுவில் அவர்களும் சேர்ந்தனர். பெற்றோர் நடந்து வர புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரையில் சவாரி செய்தனர். பெற்றோரை அனைவர் எதிரிலும் சில நேரங்களில் அவமரியாதை செய்தான் புண்டரீகர். காசி செல்லும் வழியில் யாத்ரீகர்கள் அனைவரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தின் அருகே இரவு ஓய்வெடுத்தார்கள். அதிகாலை நேரத்தில் விழித்த புண்டரீகர் நைந்து போன ஆடைகளில் அழுக்கும் அருவருப்பான தோற்றமுமாக அழகான யுவதிகள் பலர் குக்குட முனிவரின் ஆசிரமத்துக்குள் நுழைவதைப் பார்த்தான். அவர்கள் அனைவரும் ஆசிரமத்தை சுத்தம் செய்தனர். முனிவரின் உடைகளைத் துவைத்தனர். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வைத்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு முனிவரின் ஆசிரமத்திலிருந்து வெளிப்பட்ட போது அவர்கள் மிகச் சுத்தமான உடைகளைத் தரித்து தூய்மையின் அம்சங்களாக அழகாக மாறி இருந்தார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் புண்டரீகருக்கு புரியவில்லை. மறுநாளும் அப்பெண்கள் அழுக்காக ஆசிரமத்துக்குள் வந்ததைக் கவனித்தவர் வேலைகளை முடித்துவிட்டுத் தூய்மையாக வெளியே வந்தபோது அவர்களின் பாதங்களில் விழுந்து நீங்கள் யார் அழுக்காக வரும் நீங்கள் அழகாக மாறுவது எப்படி என்று கேட்டார்.
கங்கை யமுனை சரஸ்வதி போன்ற பல புண்ணிய நதிகள் நாங்கள். எங்களிடம் வருபவர்கள் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களிடம் இறக்கி வைத்து விட்டுத் தூய்மை பெறுகிறார்கள். தினமும் அந்தப் பாவங்களுடன் நாங்கள் இந்த ஆசிரமத்துக்கு வருகிறோம். தன் பெற்றோரை தெய்வங்களாக எண்ணிப் பார்த்துக்கொள்ளும் இந்த குக்குட முனிவருக்கு சேவை செய்வதால் எங்கள் பாவங்கள் கழுவப்பட்டு மீண்டும் தூய்மையடைந்து திரும்புகிறோம் என்று கூறிவிட்டு அவர்கள் மறைந்தார்கள். அக்கணமே புண்டரீகர் மனம் திருந்தினார். பெற்றோருக்குச் சேவை செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டார். புண்டரீகர் தன் தாய் தந்தையின் மீது வைத்துள்ள பக்தியை அறிந்த கிருஷ்ணன் துவாரகையிலிருந்து ருக்மணியுடன் புண்டரீகனைப் பார்க்க வந்தார். இவர்கள் வந்த சமயம் புண்டரீகர் தன் தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கிறார். வாசலில் வந்து நின்ற கிருஷ்ணர் நான் கிருஷ்ணர் ருக்மணியுடன் வந்திருக்கிறேன் என்றார். இதனை கேட்ட புண்டரீகர் அங்கே இருந்த இரண்டு செங்கற்களை எடுத்துப் போட்டு சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள் நான் என் கடமையை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்றார். பணிவிடை செய்துவிட்டு வர நேரம் ஆகியதால் கிருஷ்ணரும் ருக்மணியும் இடுப்பில் கைவைத்துக் கொண்டு நின்றார்கள். தனது பெற்றோர் சேவையை முடித்துக்கொண்டு புண்டரீகர் அவர்களை காண சென்றார். வந்திருப்பது கிருஷ்ணர் ருக்மிணி தேவி என்பதை அறிந்த புண்டரீகன் காத்திருக்க வைத்ததற்காக அவர்களின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார். கிருஷ்ணர் புன்னகைத்தார். உன் தாய் தந்தைக்கு நீ செய்யும் சேவையில் மனம் மகிழ்ந்தேன் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். பாண்டுரங்கனே நீ எழுந்தருளியுள்ள இத்தலம் புண்ணியத் தலமாக விளங்கவேண்டும். உன் பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீ இங்கே விட்டலனாக சாந்நித்தியம் கொள்ள வேண்டும் என்று வேண்டினார் புண்டரீகர். அதற்கு கிருஷ்ணர் இங்கே ஓடும் பீமா நதியில் நீராடி என்னை தரிசிப்பவர்கள் தங்களது துன்பம் எல்லாம் நீங்கி சர்வ மங்கலங்களையும் பெற்று வாழ்வார்கள் என்று அருளினார்.
புண்டரீபுரம் என்னும் அப்புண்ணிய இடத்தில் அற்புதமான ஆலயம் ஒன்று நதிக்கரையில் எழுப்பப்பட்டது. பின்னாளில் புண்டரீகபுரம் என்பது மருவி பண்டரீபுரம் ஆகிவிட்டது. பண்டரீபுரத்தில் பீமா நதி சந்திர பிறையைப் போல வளைந்து செல்வதால் அந்த நதி இங்கு சந்திரபாகா நதி என அழைக்கப்படுகிறது. சந்திரபாகா என்றால் பிறைச் சந்திரன் என்று பொருள். இந்தச் சந்திரபாகா நதிக்கரையில் கிருஷ்ணர் பாண்டுரங்கன் என்ற திருநாமத்துடன் தனது மனைவி ருக்மிணியுடன் எழுந்தருளியிருக்கிறார்.