நாராயணபட்டத்ரி

நாராயண பட்டத்ரி 1560 ஆம் ஆண்டு பாரதப் புழா ஆற்றின் வடகரையில் திருநாவா என்ற விஷ்ணு சேத்திரத்திற்கு அருகில் மேல்புத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தகப்பனார் மாத்ருதத்தர் இவருக்கு சிறு வயதில் கல்வி கற்றுக் கொடுத்தார் பிறகு இவர் ரிக் வேதத்தை மாதவாச்சாரியார் என்பவரிடமும் தர்க்க சாஸ்திரத்தை தாமோதராச்சாரியாரிடமும் கற்றுத் தேர்ந்தார். இவர் வ்யாகரணம் என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருத இலக்கணத்தை அச்யுதபிஷாரடி என்பவரிடம் பயின்றார். இவர் தன் இளமையிலேயே கல்வியைக் கற்று முடித்தார். ஒரு நாள் இவரது குருவான அச்யுதபிஷாரடி இவரை அழைத்து இன்றோடு உன் குருகுல வாசம் முடிகிறது. உனக்கு சமஸ்கிருதத்தில் எல்லாம் கற்றுக் கொடுத்து விட்டேன். இனி நீ உன் இல்லத்திற்குச் சென்று திருமணம் செய்து கொண்டு கிரகஸ்தாஸரமத்தை ஏற்றுக் கொள். தேவர்களுக்குப் பண்ண வேண்டிய யாகங்கள் ஹோமங்கள் எல்லாம் செய் என்று கூறி ஆசிர்வதித்தார். இதைக் கேட்ட பட்டத்ரி அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து. குருவே இத்தனை காலமும் சமஸ்கிருதத்திலேயே மிகவும் கடினமான வ்யாகரணத்தை நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு நான் குருதக்ஷணையாக என்ன தரட்டும் என்று பணிந்து கேட்டார். அப்பொழுது அச்யுதபிஷாரடி எனக்கு எந்த குருதக்ஷணையும் வேண்டாம். குருவுக்கு யாரும் தட்சணை கொடுக்க முடியாது. ஒரு குருவுக்கு அவர் சீடன் கொடுக்கும் சிறந்த தட்சணை அவன் கற்ற பாடத்தை மற்றவருக்கும் குற்றம் இல்லாமல் கற்றுக் கொடுப்பதுதான். அப்படியும் நீ குருதக்ஷணை கொடுக்க நினைத்தால் நீ கற்ற சமஸ்கிருதத்தை தக்ஷணை வாங்காமல் எல்லோருக்கும் கற்றுக் கொடு அதுவே எனக்குப் போதும் என்று கூறினார்.

பட்டத்ரி குருவிடம் குருவே நீங்கள் சொன்னது போலவே நான் செய்கிறேன். ஆயினும் நான் தங்களுக்கு ஏதாவது குரு தட்சணை தர விரும்புகிறேன் என்று கேட்டார். இதைக் கேட்ட குரு உன்னால் எனக்கு என்ன தர முடியும் என்று சொல் அதை வாங்கிக் கொள்ள முடியுமா முடியாதா என்று நான் சொல்லுகிறேன் என்று கூறினார். பட்டத்ரியின் விடாப்பிடியான வேண்டுகோளுக்கு ஒரு காரணம் இருந்தது. அவரது குருவான அச்யுதபிஷாரடிக்கு வாதரோகம் இருந்தது. அவரால் தன் கை கால்களை நகர்த்தக் கூட முடியாது. அப்படிப்பட்ட நிலையிலும் அவர் தன் சீடர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தார். தினமும் அவரை 15 20 சீடர்கள் குளிப்பாட்டி அவரைக் கொண்டு வந்து ஒரு நாற்காலியில் உட்கார வைப்பார்கள். அந்த நிலையிலேயே அவர் தன் சீடர்களுக்குப் பாடம் நடத்துவார். இதனை தினமும் கண்ணுற்ற பட்டத்ரிக்கு இவரது நோயை நாம் ஏன் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது. இவர் குருகுலம் சேர்ந்த முதல் நாளிலிருந்தே நம் குரு இவ்வளவு கஷ்டப்பட்டு நமக்குப் பாடம் நடத்துகிறாரே நாம் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது. இப்பொழுது அதைக் கேட்டே விட்டார். குருவே நீங்கள் உங்கள் வாத நோயை எனக்கு ஆவாகனம் செய்து கொடுங்கள் வாத ரோக நிவர்த்தி என்ற குருதட்சணையை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன். அந்த சந்தோஷத்துடன் நான் இந்த குருகுலத்தை விட்டுச் செல்வேன். உங்களால் அந்த மாதிரி தத்தம் செய்ய முடியும். ஏனென்றால் நீங்கள் சித்த புருஷர். நீங்கள் உங்கள் கர்மபலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் உங்கள் கைகளில் ஜலத்தை எடுத்து ஆவாகனம் செய்து எனக்கு தத்தம் செய்து கொடுத்தால் உங்கள் வாத நோய் சரியாகி விடும். அது உங்களால் முடியும் என்று கூறினார். இதைக் கேட்ட குரு சிரித்துக் கொண்டு சொல்லலானார். ஒரு குருவானவன் தன் சிஷ்யனுக்கு ஆத்ம ஞானத்தையும் கல்வி கேள்விகளையும் சாஸ்திரங்களையும் சகல வித்தைகளையும் கடவுள் பக்தியையும் புராணங்களையும் போதிக்க வேண்டுமே தவிர நீ கேட்டாய் என்பதற்காக நான் என் நோயைத் தரக் கூடாது. அவ்வாறு நான் செய்தால் இந்த ஊர் மக்கள் என்னை பழிப்பார்கள்.

குருவானவர் தன் சீடனை சொந்த மகனாக பாவிக்க வேண்டும். என்னுடைய கர்ம பலனால் வந்த இந்த ரோகம் என்னுடனே போகட்டும். இதை வாங்கிக் கொண்டு நீ அவஸ்தைப் பட வேண்டாம். நீ இங்கிருந்து புறப்படு என்றார். ஆனால் பட்டத்ரி அதெல்லாம் இல்லை. நீங்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று அவரை வற்புறுத்தினார். அதற்கு குரு நீ வியாதியால் கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீ என்னை விடச் சிறியவன். உன் ஆச்சார்ய பக்தியைக் கண்டு என் மனம் மகிழ்கிறது. உன்னைப் போல் ஒரு சிஷ்யன் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன். இருந்தாலும் இது தர்மம் கிடையாது. ஆகையால் நீ கிளம்பு என்று கூறுகிறார். அதற்கு பட்டத்ரி குருவே எனக்கும் உங்களுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது. நான் உங்களை விட வயதில் சிறியவன். அதனால் இந்த ரோகத்தைத் தாங்கும் சக்தி உங்களை விட எனக்கு அதிகம் இருக்கும். அது மட்டுமில்லை நீங்கள் இந்த வியாதியை எனக்குக் கொடுத்தாலும் கூட நான் இதனால் கஷ்டப்பட மாட்டேன் ஏனென்றால் நீங்கள் ஆச்சார ஸ்ரேஷ்டராக இருக்கிறீர்கள். நீங்கள் வைத்தியரிடம் செல்வது கிடையாது. இதற்கு எந்த மருந்து மாத்திரையும் எடுத்துக் கொள்வது கிடையாது. ஆனால் நான் அப்படி இல்லை. நான் கேரள மாநிலத்தில் உள்ள சிறந்த வைத்தியரிடம் காட்டி என் நோயை குணப்படுத்திக் கொள்வேன். அதனால் உங்கள் நோய் என்னிடம் வெகு நாட்கள் இருக்கும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் இன்னும் ஒரு வாரத்தில் நன்கு குணமாகி உங்களை வந்து நமஸ்கரிப்பேன். அதற்கு எனக்கு ஆசிர்வதியுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார்.

பட்டத்ரியின் பிடிவாதமான வார்த்தைகளைக் கேட்ட அச்யுதபிஷாரடி தன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்தார் தன்னுடைய ஆத்ம பலத்தால் வருங்காலத்தை நினைத்துப் பார்த்தார். சிருஷ்டியின் சூட்சுமம் புரிந்துவிட்டது அவருக்கு. இவையெல்லாம் அந்த இறைவனின் திருவிளையாடலே இவனின் பிடிவாதத்திற்குக் காரணம் அந்த குருவாயூரப்பனே. இவன் தன் வாயால் நாராயணியம் கேட்க வேண்டும் என்று அந்த கிருஷ்ணன் முடிவு செய்து விட்டான் என்று அவர் நினைக்கையில் அவர் மனக்கண் முன் கிருஷ்ணன் வந்தான். தலையில் மயில் பீலி அணிந்து பட்டுப் பீதாம்பரம் உடுத்தி புல்லாங்குழலுடன் நின்று புன்முறுவல் புரிந்தான். தான் கண்ட காட்சியைக் கண்டு அச்யுதபிஷாரடி மெய் சிலிர்த்துப் போனார். பக்தியின் ஆழத்தை நினைத்து வியந்து போனார். தன் பக்தனுக்காக அந்த மாயக் கண்ணன் என்ன லீலை வேண்டுமானாலும் செய்வான் என்று நினைத்தார். அதனால் இதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. இது தெய்வ சங்கல்பம் என்று புரிந்து கொண்டார். எனவே தன் கையில் ஜலத்தை எடுத்து அவருக்கு தன் ரோகத்தை தத்தம் செய்து கொடுத்து விட்டார். அடுத்த நிமிஷம் குரு எப்படி இருந்தாரோ அப்படி பட்டத்ரியும் பட்டத்ரி எப்படி இருந்தாரோ அப்படி குருவும் ஆகி விட்டனர். உடனே குரு தன் மற்ற சீடர்களிடம் இவனைக் கொண்டு போய் இவனது வீட்டில் சொல்லி விட்டுவிட்டு வாருங்கள். ஏனென்றால் படிக்கச் சென்ற குழந்தை ரோகத்துடன் வந்தால் அந்த பெற்றோர் மனம் எவ்வளவு பாடுபடும் குரு எவ்வளவு சொல்லியும் கேளாமல் குருவே நிர்பந்தப்படுத்தி அவரின் ரோகத்தை இவன்தான் வாங்கிக் கொண்டு விட்டான் என்று கூறுங்கள். அவர்கள் என்னை தப்பாக நினைக்கக் கூடாது என்றார்.

பட்டத்ரியை ஒரு பல்லக்கில் வைத்து தூக்கிக் கொண்டு வந்து அவரது வீட்டில் விட்டனர் சிஷ்யர்கள். வீட்டுக்கு வந்த பட்டத்ரியைப் பார்த்த குடும்பத்தினருக்கு குரு மீது மிகுந்த கோபம். இவன்தான் கேட்டான் என்றால் அந்த குரு எப்படி ரோகத்தைத் தன் சீடனுக்குக் கொடுக்கலாம். மற்ற சீடர்களுக்கு இல்லாத அக்கறை இவனுக்கு ஏன் படிக்கச் சென்ற பிள்ளை இப்படி ரோகத்துடன் வந்து விட்டானே இவனை எப்படி குணமாக்குவது. எந்த வைத்தியரைப் பார்ப்பது என்று மனச் சஞ்சலம் அடைந்தனர். இவரை அழைத்துக் கொண்டு பிரபல வைத்தியர்களிடம் சென்றனர். ஆனால் எங்கு சென்றாலும் அவரது நோயின் வலிமை கூடியதே அன்றி ஒரு துளியும் குறையவில்லை. அவர் சாப்பிட்ட மருந்து மாத்திரைகள் சூர்ணத்தினால் உடலில் உள்ள வியாதியின் வலி குறையும் ஆனால் இவருக்கு நாளுக்கு நாள் வலி கூடியது. கை, கால்களை துளிக் கூட அசைக்க முடியவில்லை. வைத்தியத்தினால் அவர் உடலில் ஒரு முன்னேற்றமும் இல்லை. அவர் குருவிடம் இருந்து எப்படி அந்த ரோகத்தை வாங்கினாரோ அப்படியே இருந்தது. எல்லா வைத்தியர்களிடமும் காட்டி விட்டு இனி செல்ல கேரளாவில் வைத்தியரே இல்லை என்ற நிலைமைக்கு வந்தாகிவிட்டது.

இப்பொழுது பட்டத்ரி சிந்திக்க ஆரம்பித்தார். நாம் நல்ல சிந்தனையோடு தானே நம் குருவிடம் இருந்து இந்த வியாதியை வாங்கிக் கொண்டோம். ஆனாலும் ஏன் குணமாகவில்லை அதற்கு ஒரே காரணம் நாம் குருவிடம் கர்வமாகப் பேசி விட்டோம். வியாதி போகாததற்கு உங்கள் ஆசாரம் தான் காரணம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. வைத்தியரிடம் சென்றால் தீர்ந்து விடும். ஒரு வாரத்தில் வந்து உங்களை நமஸ்கரிக்கின்றேன் என்று கூறி விட்டேன். பகவானிடம் கூட கர்வமாகப் பேசலாம். ஆனால் குருவிடம் கர்வமாகப் பேசக் கூடாது. நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. நான் மாபெரும் அபச்சாரம் அல்லவா செய்திருக்கிறேன் அதனால்தான் என்ரோகம் இன்னும் தீரவில்லை. இப்படியாகத் தான் தன் குருவை அபசாரமாகப் பேசியதற்காக பட்டத்ரி மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டார். இனி நாம் என்ன செய்வது இந்த நோயை எப்படிப் போக்குவது என்று தன் மனதினுள் சிந்தித்துக் கொண்டிருந்தார். எப்பொழுதுமே வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுபவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது தான் தன் ஜாதகத்தை நினைப்பார்கள். எந்த ஜோசியரிடம் போவது என்ன பரிகாரம் செய்வது என்று சிந்திக்கத் தொடங்குவார்கள். அதுபோலத்தான் இவரும் நினைத்தார். எந்த ஜோதிடரிடமாவது தன் ஜாதகத்தைக் காட்டி ஏதாவது பரிகாரம் உண்டா என்று கேட்கலாம் என்று நினைத்தார். அப்போது அவர்கள் ஊரில் எழுத்தச்சன் என்று ஒரு பிரபல ஜோசியர் இருந்தார். அவர் யார் வீட்டுக்கும் போய் ஜோதிடம் பார்க்க மாட்டார். அவர் வீட்டிற்கு நாம் சென்றால் மட்டுமே ஜோதிடம் பார்ப்பார். அவர் அஷ்ட மங்கல ப்ரஸனம் என்று எட்டு விதமான மங்கலப் பொருட்களை வைத்துக் கொண்டு சோழி உருட்டி அவர்கள் வந்த நேரத்தையும் கணக்கில் வைத்து அவர்கள் கஷ்டத்தையும் மனதில் நினைத்து அது தீர ஜோதிடம் பார்த்துச் சொல்வார். பட்டத்திரியும் நோயின் காரணமாக அவர் வீட்டுக்குச் செல்ல முடியாது. அவரும் வரமாட்டார். என்ன செய்வது என்று யோசித்தார்.

அவர் தம் குடும்பத்தினரிடம் தன்னை அழைத்துக் கொண்டு செல்லும்படி கேட்டதற்கு வைத்தியருக்கு செலவு செய்ததே போதும். இன்னும் ஜோதிடருக்கு வேறு செலவா நீங்கள் இப்படியே இருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி விட்டனர். ஆனால் நாளுக்கு நாள் அவரது ரோகத்தின் வீரியம் அதிகரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவன். சிறு வயது முதலே அந்த வீட்டில் வேலை செய்வதாலும் பரம்பரை பரம்பரையாக அவர்களைத் தெரியும் என்பதாலும் அவனுக்கு பட்டத்ரி மீது மிகுந்த பாசம் உண்டு. பட்டத்ரி அவன் மனம் நம் எஜமானர் இப்படி கஷ்டப்படுகிறாரே அவருக்காக நாம் சென்று அவரது ஜாதகத்தைக் காட்டி பார்த்துக் கொண்டு வரலாம். என்று நினைத்தான். அதை மெதுவாக அவரிடமும் கூறினான். ஐயா நான் வேண்டுமானால் உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் ஜோசியர்கிட்ட காட்டி கேட்டுக் கொண்டு வருகிறேன் என்றான். இதைக் கேட்ட பட்டத்ரி மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டு என் குடும்பத்தாரும் உறவினர்களும் கூட முடியாது என்று சொல்லி விட்டபோது நீ எனக்காக செல்கிறேன் என்று சொல்கிறாயே எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது என்று கூறி தன் ஜாதகத்தை அவனிடம் கொடுத்து அனுப்பினார். அவன் சென்று அந்த ஜோதிடரின் காலில் விழுந்து நமஸ்கரித்து, பட்டத்ரியைப் பற்றி முழுமையாகக் கூறி அவருடைய ஜாதகத்தைக் காட்டி இது என் எஜமானரின் ஜாதகம். அவர் வாத நோயால் வாடுகிறார். அவரால் வர இயலாது. அவர் குடும்பத்தாரும் வர மறுக்கின்றனர். அதனால்தான் நான் வந்தேன். இவர் நோய் தீருமா என்று பார்த்துச் சொல்லுங்கள் என்று கேட்டான்.

எஜமான விஸ்வாசத்தைப் பார்த்த ஜோதிடர். உனக்காக நான் பார்த்துச் சொல்கிறேன் என்று கூறி பட்டத்ரியின் ஜாதகத்தைப் பார்த்தவர் பிரமித்துப் போனார். பின் அவர் சோழியைப் போட்டுப் பார்த்து அஷ்ட மங்கல ப்ரஸனம் பார்த்து அவன் வந்த நேரத்தையும் பார்த்து அவனது உள்ளக் கிடக்கையும் அறிந்து சொல்லலானார். உன் எஜமானனுக்குக் கண்டிப்பாக இந்த வியாதி நீங்கும். இதற்குப் பரிகாரம் இருக்கிறது. ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றார். உடனே அந்த வேலைக்காரன் ஆவலோடு அப்படியா என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா நான் உடனே செய்கிறேன் என்றார். அதற்கு எழுத்தச்சர் இந்த பரிகாரத்தை நீ செய்ய வேண்டாம் உன் எஜமானார் தான் செய்ய வேண்டும். திருச்சூர் அருகில் குருவாயூர் என்றொரு பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்த தெய்வம் கிருஷ்ணரே ஸ்நானம் செய்த புண்ணியக் குளமான நாராயண சரஸ் உள்ள கோவில். அந்த நாராயண சரஸ் என்னும் தீர்த்தத்தில் நீராட வைத்து பின் புது வஸ்திரம் அணிவித்து கொடிக்கம்பமாகிய ஜ்வஜஸ்தம்பம் தாண்டி உள்ளே நுழையும் இடத்தில் பகவானுக்கு வலது பக்கம் நமக்கு இடது பக்கம் உள்ள திண்ணையில் அவரை உட்கார வைத்து மத்ஸ்யம் (மீன்) தொட்டுப் பாட சொல் என்று கூறினார்.

இதைக் கேட்ட அந்த வேலைக்காரன் வீட்டிற்கு ஓடி வந்து விட்டான். அவனைக் கண்ட பட்டத்ரி எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று சொன்னாரா என்று மிகவும் ஆவலுடன் கேட்டார். அதற்கு அவன் ஐயா அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது என்று கூறினார். அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது என்றான். அதற்கு பட்டத்ரி அப்படி என்ன சொல்லி விட்டார்? என்று ஆர்வமாகக் கேட்க அவன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி புனிதமான கோவில் குருவாயூரில் தங்களை மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடச் சொல்கிறார். அந்தக் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம் என்ற சுத்தி செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள். அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில் உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார். அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம். நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன். நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ என்று வருத்தப்படுகிறேன் என்றான். ஜோசியர் கூறியதன் உட்பொருளைப் புரிந்து கொண்டார் பட்டத்ரி. அவர் மிகவும் சந்தோஷப்பட்டுக் கூறலானார். நாம் இன்றே குருவாயூர் செல்ல வேண்டும். அதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்யுங்கள் என்றார். இதைக்கேட்ட வேலைக்காரன் நான் கூட வர முடியாது. குருவாயூர் போன்ற புண்ணிய கோவிலை நீங்கள் அசுத்தம் செய்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் உங்கள் வியாதி குணமாக வேண்டும் என்பதற்காக இதைச் செய்யலாம். ஆனால் இதற்கு உடன்பட என்னால் முடியாது என்று கூறினான்.

அவனை சாந்தப்படுத்திய பட்டத்ரி மத்ஸ்யம் தொட்டுப் பாடணும் என்றால் சாதாரண மீன் என்று நீ ஏன் நினைத்துக் கொள்கிறாய் பகவான் குருவாயூரப்பனின் அவதாரங்களில் முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான். மத்ஸ்யம் தொட்டு என்றால் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரம் முழுவதையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவ தாரங்களைப் பற்றி குருவாயூரில் பாட வேண்டும். அதனால் இப்பொழுதே என்னை குருவாயூருக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார். தன் வியாதிக்குப் பரிகாரம் கிடைத்த சந்தோஷம் அவருக்கு. அதுமட்டுமில்லாமல் தம் குரு தமக்குக் கற்றுக் கொடுத்த சமஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று நினைத்து அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததும் அவர் மனம் ஆனந்தக் கூத்தாடியது. பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது. ஆனால் இவருடைய வியாதியால் ஏற்கெனவே நொந்து போயிருந்த உறவினர்கள் இது வேறா என்ற வெறுப்புடன் வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர். ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் வைத்துத் தூக்கிக் கொண்டு குருவாயூர் சென்றனர். பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. அந்த குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக அவர் மனம் ஏங்கியது. அவர் மனத்தில் இருந்த பயம் விலகியது. இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான். நாளை காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம் என்று எண்ணிக் கொண்டார்.

அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர். அவரை அழைத்து வந்தவர்கள் அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர். புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர். அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர். பகவானுக்கு வலப் பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர். பட்டத்ரி அந்த மண்டபத்தில் அமர்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. பட்டத்ரிக்கோ வாத ரோகம் இருந்ததால் தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை. அப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால் எப்படி நாராயணியம் எழுத முடியும். அதனால் நீ எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா என்று அழுது கண்ணீர் மல்குகிறார். அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம் நீ ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்கிறார். அப்போது குருவாயூரப்பன் முதன் முதலில் பட்டத்ரியிடம் பேச ஆரம்பிக்கிறார். எண்ணால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்று நீ வந்த காரியம் முடிவடைகிறதோ அன்றுதான் உன் வியாதி நீங்கும் என்று கூறுகிறார்.

அப்பொழுது பட்டத்ரி எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும் இதைக் கேட்ட குருவாயூரப்பன் கருணையோடு சொல்லலானார். பட்டத்ரி நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு கழுத்தை சாய்த்து தான் என்னைப் பார்க்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். எனக்குக் கழுத்தின் இரு பக்கமும் நன்றாகத்தான் இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும். நான் என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து நீ நாராயணியம் ஆரம்பித்துக் கொள் என்று கூறி அனுகிரகம் செய்கிறார். இப்பொழுதும் நாராயண பட்டத்ரி மண்டபத்தில் உட்கார்ந்து பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும். பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன் இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் மட்டும் உனக்கு சொந்தம். இது இனிமேல் பட்டத்ரி மண்டபம் என்று அழைக்கப்படும் என்று குருவாயுரப்பன் கூறினார். இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. நான் நாராயணியம் எழுத ஆரம்பிக்கட்டுமா என்று பட்டத்ரி கேட்க ம் எழுது நான் கேட்க ஆவலாக இருக்கிறேன் என்று குருவாயூரப்பன் கூறுகிறான். அப்போது பட்டத்ரி நான் நாராயணியத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணியம் பாட முடியும். இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன் என்கிறார். இப்படி முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாக்ஷணை போல் அமைந்திருக்கிறது.

குருவாயூரப்பனின் இடது பக்கம் உள்ள திண்ணையில் ஒரு செப்புப் பட்டயம் இருக்கிறது. அதில் மலையாளத்திலும் தமிழிலும் நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம் என்று எழுதப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான் நாராயணபட்டத்ரி நூறு நாட்கள் அமர்ந்து குருவாயூரப்பனின் பெருமையை ஸ்ரீமத் பாகவதத்தின் சாரமான நாராயணியம் எழுதினார்.

சக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார், சுதர்சனர், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சனாழ்வான், திருவாழிஆழ்வான் என்று பல்வேறு நாமங்களால் போற்றப்படும் சுதர்சன சக்கரமே சக்கரத்தாழ்வாராகும். மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான திவ்ய தேசங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பார். சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் என்று திருப்பாவையில் திருமாலை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலை எப்போதும் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வான் என்றும் வாகனமான கருடனை கருடாழ்வார் என்றும் நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளியமரத்தை திருப்புளியாழ்வான் என்றும் மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை திருவாழிஆழ்வான் எனும் சக்கரத்தாழ்வான் என வைணவ சாஸ்திரங்களும் சில்பரத்தினம் என்ற நூலும் தெரிவிக்கிறது.

பெருமாள் கோயில்களில் 8 கரங்கள் கொண்ட சுதர்சனரையும் 16 கரங்கள் கொண்ட மூர்த்தியையும் 32 கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சி தருவார். ஷட்கோண சக்கரம் என்னும் ஆறுகோணத்தின் மத்தியில் உக்கிர வடிவ சுதர்சனரும் திரிகோண சக்கரம் எனும் முக்கோணத்தில் பின் பக்கம் யோக நரசிம்மரும் அருள் பாலிக்கின்றனர். சுதர்சனர் தனது திருக்கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம்,அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என 16 கைகளில் 16 வகையான ஆயுதங்களுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார். அழிக்க முடியாத பகையை அழித்து நீக்க முடியாத பயத்தை நீக்க வல்லவர் சுதர்சன மூர்த்தி. திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.

சக்கரத்தாழ்வார் எதிரிக்கு எதிரி சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி சிசுபாலனின் தவறை நூறு முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர். அவனது நூற்றியோராவது தவறைக் கண்டு கொதித்த சுதர்சன சக்கரம் சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது. மகாபாரத யுத்தத்தின்போது ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டது. இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது. கஜேந்திர மோட்சம் என்ற புராணக் கதையில் யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே. பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார். சக்கரத்தாழ்வார் வரலாற்றை முழுமையாக பக்தியுடன் நம்பிக்கையுடன் படித்தால் பிறவி இல்லா நிலையை அடையலாம் என்கிறது புராணம்.

சதாசிவ பிரம்மேந்திரர்

ராமேஸ்வரத்தில் குடிகொண்டிருக்கும் ராமநாத சுவாமியின் அருளால் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவராமன் அவர்களது குலதெய்வமான கிருஷ்ண பகவானின் பெயரையும் இணைத்து சிவராம கிருஷ்ணன் என்று அழைக்கப் பெற்றார். இளம் வயதிலேயே வேதம், புராணம், இதிகாசம், உபநிடதம், சாத்திரம், தர்க்கம் போன்றவற்றில் சிறந்த புலமை பெற்றார் சிவராம கிருஷ்ணன். இவரது தந்தை சோமநாத யோகி இல்லறத்தைத் துறந்து இமயம் சென்றுவிடவே தாய் பார்வதியின் ஆதரவில் வளர்ந்து வந்தார். சிவராமனின் பரந்த அறிவாற்றலைக் கண்ட தாய் அவரை காஞ்சி மடத்தின் 57-ஆவது பீடாதிபதியான சதாசிவேந்திர சுவாமிகளிடம் ஒப்புவித்தார். அங்கே இவரது அறிவு மேலும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. தர்க்கத்தில் தன்னிகரற்றவராக விளங்கினார். பல இடங்களுக்கும் சென்று மிகச்சிறந்த வித்வான்கள் பலரையும் தன் வாக்கு சாதுர்யத்தால் மடக்கித் தோல்வியுறச் செய்தார். இதைக் கேள்விப்பட்ட குரு சதாசிவேந்திரர் இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றி பெற்றால் சிறந்த கல்விமானாக இருந்தாலும் அவன் மனதில் ஆணவம் குடியேறிவிடும் அதனால் ஆன்ம முன்னேற்றம் தடைப்படும் என்றெண்ணி சிவராமனை காஞ்சிக்கு வரும்படி கட்டளையிட்டார். அங்கு வந்த சிவராமன் வித்வான்களிடம் மிகப்பெரிய தர்க்கத்தில் ஈடுபட குருவானவர் அவரை அழைத்து ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே என்றார். அதுவே வேத வாக்காக குரு ஆணையாக சிவராமனுக்குத் தோன்றியது. அந்த நொடியிலிருந்து பேசுவதையே நிறுத்திவிட்டார் சிவராமன். சீடனின் பண்பட்ட நிலையை அறிந்து மகிழ்ந்த குரு சிவராம கிருஷ்ணனுக்கு சதாசிவப் பிரம்மேந்திரர் என்று பெயர் சூட்டி சந்நியாச தீட்சையும் வழங்கினார். அதன்பின்னர் அத்வை தானந்த நிலையில் மூழ்கிய சதாசிவர் சிவன் சம்பந்தமான பல கிரந்தங்களை இயற்றினார்.

சுமார் நூறாண்டு காலம் அவர் ஒருநாள் வழக்கம் போல் நிர்வாணமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அது ஒரு முகம்மதிய மன்னரின் அந்தப்புரம். ராணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள் ராஜாவும் அங்கே இருந்தார். சதாசிவப் பிரம்மேந்திரர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து அந்தப்புறம் போய்க் கொண்டே இருந்தார். முகம்மதிய மன்னர் தொலைவிலிருந்து அவரைப் பார்த்துவிட்டார். யார் இந்த ஆசாமி ராணிகள் குளிக்கும் குளக்கரையில் நிர்வாணமாக எதிலும் லட்சியமே இல்லாதவர் போல் நடந்து செல்கிறாரே என்ன ஆணவம் ஓடிச்சென்று அவரைப் பிடித்த மன்னர் அவரது வலக் கரத்தைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார். குளித்துக் கொண்டிருந்த ராணிகள் எல்லாம் பதறியவாறு தங்கள் துணிகளை எடுத்துப் போர்த்திக் கொண்டு திகைத்து நின்றார்கள். அவர்கள் திகைத்து நிற்கும்படி ஒரு விந்தையான செயல் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. வலக்கரம் கீழே துண்டாய் விழுந்தபோதும் சதாசிவப் பிரம்மேந்திரர் தன் உடலில் நடந்தது என்னவென்றே தெரியாதவராய்த் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் அவர் வேதனையில் துடிதுடிக்கவும் இல்லை.

இறைவனையே அகக்கண்ணால் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு வலக்கரம் வெட்டுப்பட்டதே தெரியவில்லை. ராணிகள் நடந்து செல்பவர் யாரோ பெரிய மகானாக இருக்கவேண்டும். தெய்வக் குற்றமாகிவிடும். ஓடிப்போய் அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள் என்று அரசரிடம் வேண்டினார்கள். உடனடியாக மன்னிப்புக் கேட்கும் எண்ணத்தில் அரசரும் நின்றுகொண்டிருந்தார். கண்முன் நடந்து செல்லும் அந்த அற்புதத்தை அவரால் நம்பமுடியவில்லை. துண்டுபட்ட வலக்கரத்தை எடுத்துக் கொண்டு பிரம்மேந்திரர் பின்னே ஓடினார் அரசர். அவரை நிறுத்தி அவர் உடலைப் பிடித்து உலுக்கினார். மெல்ல மெல்ல பிரம்மேந்திரருக்கு இந்த உலக நினைப்பு வந்தது. அரசரிடம் என்ன வேண்டும் என்று கேட்டார் பிரம்மேந்திரர். அவர் பாதங்களில் விழுந்து வணங்கிய அரசர் தான் அவர் வலக்கரத்தை வெட்டிய செயலைக் கூறி வருந்தினார். கண்ணீர் சொரிந்தவாறே மன்னிப்புக் கேட்டார். பரவாயில்லை. போனால் போகிறது. இந்த உடல் முழுவதுமே ஒருநாள் போகத்தானே போகிறது. வலக்கரம் கொஞ்சம் முந்திக் கொண்டுவிட்டது போலிருக்கிறது என்று சொல்லி நகைத்தார் பிரம்மேந்திரர். மன்னரின் துயரம் ஆறாய்ப் பெருகியது. .

சுவாமி ஒரு மகானின் வலக்கரத்தை வெட்டிய குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுவதும் என்னை வருத்தும். இதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள் என்று கேட்டார் மன்னர். எனக்கு வலக்கரம் இல்லை என்பது உனக்குக் கஷ்டம் தரும் என்கிறாயா அப்படியானால் என் வலக்கரத்தை அது இருந்த இடத்தில் வைத்துவிடு என்றார் பிரம்மேந்திரர். முகம்மதிய மன்னர் ஜாக்கிரதையாக தான் கையில் வைத்திருந்த அவரது வலக்கரத்தை அவரது வலது தோளில் பொருத்தினார். பிரம்மேந்திரர் தன் இடக்கையால் வலது தோளைத் தடவிக் கொண்டார். மறுகணம் வலக்கரம் முன்புபோலவே உடலோடு இணைந்துவிட்டது. இனி உனக்குக் குற்ற உணர்ச்சி இருக்காதில்லையா என்று அன்போடு கேட்ட பிரம்மேந்திரர் அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். குளக்கரையில் கைகூப்பியவாறு தன்னைத் தொழுதுகொண்டிருந்த ராணிகளுக்கும் புதிதாய் ஒட்டிக் கொண்ட தன் பழைய வலக்கரத்தைத் தூக்கி ஆசி வழங்கினார். பிறகு மீண்டும் இறை தியானத்தில் மூழ்கியவராய் விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். மன்னர் கைகூப்பியவாறு அவர் செல்வதைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.

இன்னொரு சமயம், காவிரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து மணலில் ஆழமாகப் பள்ளம் தோண்டச் சொன்னார். அவ்வாறு தோண்டியவுடன் அதிலிறங்கி அமர்ந்து கொண்டவர் மண்ணைப் போட்டு மூடிவிடும்படிக் கூறினார். சிறுவர்களும் மூடிவிட்டுச் சென்று விட்டனர். இது நடந்து சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து அங்கிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு ஒரு சாமியார் இருந்தாரே ரொம்ப நாட்களாகக் காணவில்லையே என்று பேசிக்கொண்டார்கள். அப்போது சிறுவர்கள் காவிரி மணலில் அவரைப் புதைத்த விஷயத்தைக் கூறினார்கள். இதைக் கேட்டு பதைத்துப் போன கிராம மக்கள் காவிரிக் கரைக்குப் போய் சிறுவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் மணலை மெதுவாக அகற்ற நிஷ்டையிலிருந்த பிரம்மேந்திரர் சிரித்தபடி எழுந்து சென்றார். அதேபோல ஒரு முறை சில குழந்தைகளை அழைத்து நாமெல்லாம் மதுரை மீனாட்சி கல்யாண உற்சவத்தைக் காணப் போகலாமா என்றார். குழந்தைகள் குதூகலத்துடன் போகலாம் என்றனர். என்னைக் கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொள்ளுங்கள் என்றார். குழந்தைகள் அவ்வாறே செய்ய அடுத்த நிமிடம் அவர்களெல்லாம் மீனாட்சி அம்மையின் திருமண உற்சவ விழாவில் இருந்தனர். விழா முடிந்ததும் முன்புபோலவே தன்னைக் கட்டிக்கொள்ளும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்ய மறு நிமிடம் எல்லாரும் தத்தமது வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர். இதுபோல பல அற்புதங்களை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் உள்ள மாரியம்மனின் திருமேனி புற்று மண்ணால் ஆனது. அதனால் அதற்கு அபிஷேகம் செய்யமாட்டார்கள் புனுகு மட்டுமே சாற்றுவார்கள். தஞ்சை மன்னரின் நோயைத் தீர்க்க சதாசிவப் பிரம்மேந்திரர் அமைத்த திருவுருவம்தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன். கரூர் அருகே மூன்று கி.மீ. தூரத்தில் தான்தோன்றி மலையில் அமைந்துள்ளது கல்யாண வேங்கடேசப் பெருமான் ஆலயம். உற்சவமூர்த்தி. திருவுருவிற்கு உயிரூட்டி கும்பாபிஷேகம் செய்வித்தவர் சதாசிவப் பிரம்மேந்திரர். புதுக்கோட்டை மன்னரின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு சிறிது மணலை மந்திரித்துக் கொடுத்தார் சதாசிவர். அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து இன்றளவும் பூஜையறையில் பாதுகாத்து வருகின்றனர் அந்த வம்சத்தினர். இத்தகைய பெருமை வாய்ந்த சதா சிவப் பிரம்மேந்திரர் தன் சீடர்களிடம் ஒரு குழியை வெட்டச் சொல்லி 1753-ம் ஆண்டு சித்திரை மாத சுத்த தசமி நாளில் ஜீவசமாதி அடைந்தார். மறுநாள் காலை காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றை அங்கே ஒருவர் கொண்டு வந்தார். அதை அங்கே பிரதிஷ்டை செய்தனர். வில்வமரம் ஒன்றையும் நட்டனர். இவையெல்லாம் ஜீவசமாதி அடையும்முன் பிரம்மேந்திரர் சீடர்களிடம் கூறியபடி நடந்தது.

ஸ்ரீ வாதிராஜர்

ஸ்ரீ வாதிராஜரின் ஸ்ரீ மடத்தை ஒட்டி தனியார் ஒருவருக்குச் சொந்தமான பரந்த நிலப்பரப்பு இருந்தது. அதன் உரிமையாளர் கடலையை விதைத்திருந்தார். அது செழிப்பாக வளர்ந்திருந்தது. ஒரு நாள் காலையில் உரிமையாளர் நிலத்தைப் பார்வையிட வந்தபோது ஒரு பகுதியில் வளர்ந்திருந்த பயிர்கள் சிதைவடைந்து அலங்கோலமாக இருந்தன. கவலையுடன் வீடு திரும்பிய உரிமையாளர் மறு நாள் காலையிலும் போய்ப் பார்த்தார். அன்றும் மேலும் சில பகுதிகள் சேதம் அடைந்திருந்தன. எப்படியும் இன்று இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்த உரிமையாளர் அன்று இரவு நேரத்தில் அங்கேயே ஒரு பக்கத்தில் மறைவாகக் காத்திருந்தார். சற்று நேரத்தில் ஸ்ரீ வாதிராஜரின் ஸ்ரீ மடத்தில் இருந்து, கண்ணைக் கவரும் வெள்ளை நிற குதிரை ஒன்று வெளிவந்தது. அது நேராக வயலை அடைந்தது. கடலைச் செடிகளைச் சேதப்படுத்தியது. இதைக் கவனித்த நிலத்தின் உரிமையாளர் குதிரையை விரட்டினார். அந்தக் குதிரை அவரிடமிருந்து தப்பித்து ஓடி ஸ்ரீ மடத்துக்குள் புகுந்தது. வீடு திரும்பிய உரிமையாளர் மறு நாள் காலையில் ஸ்ரீ வாதிராஜரிடம் போய் நடந்ததை விவரித்து நியாயம் கேட்டார்.

மடத்தில் அப்படிப்பட்ட குதிரை எதுவும் கிடையாதே நிஜமாகத்தான் சொல்கிறாயா எனக் கேட்டார் ஸ்ரீ வாதிராஜர். நானே என் இரண்டு கண்களாலும் பார்த்தேன் சுவாமி எதற்கும் இன்று இரவு மறுபடியும் பார்த்து விட்டு நாளை காலையில் வந்து சொல்கிறேன் என்ற உரிமையாளர் ஸ்ரீ வாதிராஜரை வணங்கி விடை பெற்றார். அன்று இரவும் அதே வெள்ளை குதிரை மடத்திலிருந்து வெளி வந்தது. வழக்கம் போல் நிலத்தில் புகுந்து கடலைச் செடிகளைத் தின்று சேதப்படுத்தியது. பிறகு முந்தைய நாள் போலவே ஸ்ரீ மடத்துக்குள் நுழைந்தது. ஸ்ரீ மடத்தின் வாயில் வரை அதை துரத்தி வந்த உரிமையாளரால் அன்றும் பிடிக்க முடியவில்லை. எனவே மறு நாள் பொழுது விடிந்ததும் ஸ்ரீ வாதிராஜரின் முன்னால் வந்து நின்றார். சுவாமி நேற்றிரவும் என் கண்ணாரக் கண்டேன். வெள்ளை வெளேர் என்ற குதிரை ஒன்று இந்த ஸ்ரீ மடத்தில் இருந்து வெளியே வந்தது. எனது நிலத்தில் புகுந்து செடிகளை நாசப்படுத்தியது. விடாமல் துரத்தி வந்த என் கைகளில் அகப்படாமல் அது ஸ்ரீ மடத்துக்குள் நுழைந்து விட்டது என்றார் உரிமையாளர். நான் நேற்றே சொன்னேன். ஸ்ரீ மடத்தில் குதிரை கிடையாது. ஆனால் நீயோ இப்படி சொல்கிறாய். இதற்கு என்ன பதில் சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை என்றார். தான் சொன்னதையே மீண்டும் வலியுறுத்திய நில உரிமையாளர் சுவாமி ஏற்கெனவே என் நிலத்தில் நிறையச் செடிகள் பாழாகிவிட்டன. இனிமேலும் இழப்பு வந்தால் என்னால் தாங்க முடியாது சுவாமி என்று மன்றாடினார். அவருக்கு ஆறுதல் சொன்ன ஸ்ரீ வாதிராஜர் சரி உனது வார்த்தையை நான் நம்புகிறேன். நீ போய் உனக்கு எவ்வளவு சேதமாகியுள்ளது என்று மதிப்பிட்டுச் சொல். இங்கிருந்து குதிரை வருகிறது என்று நீ சொல்வதால் அந்த இழப்பை நானே ஈடு செய்கிறேன் என்றார். நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு வழி பிறந்தது என்ற ஆறுதலுடன் நிலத்தை நோக்கிப் போனார் உரிமையாளர். போனதை விட வெகு வேகமாகத் திரும்பி ஓடி வந்தார் உரிமையாளர்.

ஸ்ரீ வாதிராஜரை வணங்கிய சுவாமி என் கண்கள் கூசுகின்றன. எனது நிலத்தில் அற்புதம் விளைந்திருக்கிறது. சேதமாகியிருந்த பகுதியில் எல்லாம் இப்போது தங்கக் கடலைகள் இறைந்து கிடக்கின்றன. சுவாமி தங்கள் மடத்துக் குதிரை சாதாரணமானதல்ல தெய்வீகமானது என்று ஆச்சரியத்துடன் கூறினார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட ஸ்ரீ வாதிராஜர் பின்னர் தியானத்தில் அமர்ந்தார். வெள்ளை குதிரையாக வந்தது ஹயக்ரீவர் என்பதைப் புரிந்து கொண்டார். அவரது தியானம் கலைந்தது. சுவாமி தெரியாமல் வெள்ளைக் குதிரையை விரட்டி விட்டேன். அற்புதம் செய்த அந்தக் குதிரையை இன்று இரவில் மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறேன் என்றார் நில உரிமையாளர். இனிமேல் உன்னால் அந்தக் குதிரையைப் பார்க்க முடியாது. பார்க்க முயன்றால் உன் பார்வை போய்விடும் என்று எச்சரித்தார் ஸ்ரீ வாதிராஜர். எனது பார்வை முற்றிலுமாகப் போனாலும் பரவாயில்லை. அந்த குதிரையை நான் பார்த்தே ஆக வேண்டும் சுவாமி என்ற நில உரிமையாளர் ஸ்ரீ வாதிராஜரிடம் விடைபெற்று வீடு திரும்பினார்.

தனது நிலத்தில் இரவு நேரத்தில் குதிரையின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் நில உரிமையாளர். வழக்கம் போல் குதிரை வந்தது. அதைப் பார்த்த சற்று நேரத்துக்குள் அவரது பார்வை பறிபோனது. அதற்காக அவர் கவலைப்படவில்லை. அதற்கு பதிலாக குதிரையாக தினமும் வந்தது தெய்வமே என்பதை உணர்ந்து மெய்மறந்து அப்படியே உட்கார்ந்திருந்தார் அவரது உன்னதமான பக்தியை கண்ட ஸ்ரீ வாதிராஜர் நில உரிமையாளருக்கு மீண்டும் பார்வை தருமாறு ஸ்ரீ ஹயக்ரீவரிடம் வேண்டிக்கொண்டார். சுவாமியின் அருளால் உரிமையாளருக்கு கண் பார்வை திரும்ப கிடைத்தது. ஸ்ரீ மடத்தில் இருந்து வெளிப்பட்ட தெய்வக் குதிரையின் திருப்பாதங்கள் பதிந்த எனது நிலம் இனிமேல் ஸ்ரீ மடத்துக்கே சொந்தம் என்று சொல்லி தனது நிலத்தை ஸ்ரீ மடத்துக்கு தானமாக கொடுத்துவிட்டார்.

அந்த நிலத்தில் இருந்து விளையும் கடலையை வேக வைத்து வெல்லம் தேங்காய் துருவல் ஆகியவற்றை கலந்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும் பழக்கத்தை உண்டாக்கினார் ஸ்ரீ வாதிராஜர். சுவாமிக்காக தயாரிக்கப்பட்ட அந்த நைவேத்தியத்தை ஒரு தட்டில் வைத்து இரண்டு கைகளாலும் பிடித்து தன் தலைக்கு மேல் வைத்து கொள்வார் ஸ்ரீ வாதிராஜர். அவருக்குப் பின்புறமாக ஸ்ரீ ஹயக்ரீவர் வெண்மையான குதிரை வடிவில் வந்து தனது முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி ஸ்ரீ வாதிராஜரின் தோள்களின் மீது வைத்தபடி நைவேத்யத்தை முழுவதுமாக உண்ணாமல் கொஞ்சம் மீதி வைப்பார். அந்த மீதியை ஸ்ரீ வாதிராஜர் உண்பார். இது அன்றாட நிகழ்ச்சி. இவ்வாறு நடக்கும் போது கோயிலில் உள்ள அர்ச்சகர்களுக்கு நைவேத்தியத்தில் தினமும் ஒரு சிறு பாகம் குறைவது பற்றி சந்தேகம் உண்டாயிற்று. வாதிராஜரே அந்த பகுதியை உட்கொள்கிறார் என்ற முடிவுக்கு வந்தனர். இதனால் ஸ்ரீ வாதிராஜரிடம் பொறாமை கொண்ட ஒரு சிலர் ஒரு நாள் நைவேத்தியத்தில் விஷம் கலந்தனர். வழக்கப்படி நைவேத்தியத்தை ஸ்ரீ வாதிராஜர் உண்பார். அவர் கதை முடிந்து விடும் என்று நம்பினர். வழக்கம்போல் நைவேத்தியத்தை வாதிராஜர் எடுத்துக்கொண்டு சந்நிதியினுள் சென்று கதவைத் தாழிட்டார். நைவேத்தியத்தை உட்கொள்ள ஹயக்ரீவரைப் பணிந்து துதித்தார். பிறகு பாத்திரத்தைத் தாழ்த்தியபோது அதில் வழக்கம்போல் மீதம் நைவேத்தியம் இல்லாமல் வெறும் பாத்திரம் மட்டுமே உள்ளதைக் கண்டு வியந்தார். இந்தப் புனிதப் பிரசாதத்தை உட்கொள்ள தகுதியற்றுப் போனோமோ என்று கடவுளை வேண்டினார்.

வெளியே அர்ச்சகர்கள் சந்நிதியினுள் என்ன நிகழ்கிறதோ என்ற ஆவலுடன் காத்திருந்தார்கள். வாதிராஜர் திட்டமாக ஆனால் வாடிய முகத்துடன் வெளியே கால் பதித்தது கண்டு வியப்படைந்தார்கள். பகவான் சிறிதளவு பிரசாதத்தைக்கூட என்று நமக்கு வைக்கவில்லை என்று மெல்லிய குரலில் கூறினார். சந்நிதியினுள் சென்ற அர்ச்சகர்கள் நைவேத்தியத்தைப் படைக்கும் பாத்திரம் சுத்தமாக நக்கப்பெற்று வெறுமனே உள்ளதைக் கண்டார்கள். ஆனால் பகவானின் உருவம் நீல நிறமாக மாறியிருந்தது. உடனே சுவாமியே இவ்வளவு நாட்களாக பிரசாதத்தை உண்கிறார் என்றுணர்ந்து வாதிராஜரிடம் ஓடிவந்து உண்மையை உரைத்து அவரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினார்கள். வாதிராஜரோ பெருந்துயரத்தில் ஆழ்ந்தார். நான் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தேன். என் கையாலேயே பகவானுக்கு விஷம் கலந்த நைவேத்தியத்தைப் படைத்தேன் ஆனால் பகவான் தன் எல்லையற்ற கருணையினால் ஒரு துளிகூட மிச்சமில்லாமல் உட்கொண்டாரே என வருந்தினார். இவரை அறியாஅல் இக்குற்றம் நடந்தாலும் விஷத்தின் அறிகுறி பகவானின் திருவுருவில் தோன்றியது. பொழுது புலரும் வேளையில் வாதிராஜரின் கனவில் கடவுள் தோன்றி விதைகள் உள்ள ஒரு பொட்டலத்தைக் கொடுத்து மட்டி என்ற ஊரில் இவ்விதைகளை விதையிடு. இவை காய்க்கும். காய்ந்த காய்களிலிருந்து 48 நாட்கள் தொடர்ந்து நைவேத்தியத்தைப் படை. விஷத்திற்கு இது முறிவாக இருக்கும் என்று அருளிச்செய்தார். விழித்தவுடன் வாதிராஜர் மட்டி என்ற ஊருக்குச் சென்று அந்த விதைகளை விதைத்தார். அந்தச் செடியினில் காய்ந்த காய்களைக் கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து நைவேத்தியத்தைப் படைத்தார். இவ்வாறு நைவேத்தியம் செய்யச் செய்ய திருவுருவினின்று நீல நிறம் சிறிது சிறிதாக இறங்கிற்று. 48 நாட்களுக்குப் பிறகு சிறு நீல நிறக் கீறல் ஒன்றே நெஞ்சில் இருந்தது.

ஏகநாதர்

பானுதாசரின் மகன் சக்ரபாணி. பேரன் சூரிய நாராயணன் ருக்மிணி தம்பதிக்குப் பிறந்தவர் ஏகநாதர். இளமையிலேயே கல்வியிலும் பக்தியிலும் சிறந்து விளங்கினார். அதில் முழுமைபெற ஒரு குருவைத் தேடி ஏங்கினார். ஒருநாள் தியானத்தின்போது தேவ்கட்டில் உள்ள ஜனார்த்தனரை அணுகு என்று வாக்கு கேட்டது. அப்படியே தேடிச்சென்று அவர் பாதம் பணிந்தார். குரு ஜனார்த்தனர் தத்தாத்ரேய உபாசகர் தத்தாத்ரேயரின் தரிசனமும் பெற்றவர் வீரத்திலும் சிறந்தவர். தன் பாதம் பணிந்த ஏகநாதரின் தகுதியைப் புரிந்துகொண்ட ஜனார்த்தனர் அவரை பரிவுடன் சீடனாக ஏற்றுக்கொண்டார். அவரிடம் ஆறு ஆண்டுகள் தங்கி தன் பக்தி ஞானத்தை வளர்த்துக் கொண்டார் ஏகநாதர். குருவின் அருளால் தத்தாத்ரேயர் தரிசனமும் பெற்றார். குரு ஜனார்த்தனர், தத்தாத்ரேயர், பாண்டுரங்க விட்டலன் மூவரும் ஒருவரே என்றுணர்ந்தார் ஏகநாதர். மராட்டிய மொழியில் பாவார்த்த ராமாயணம், ஏகநாத் பாகவதம் போன்ற நூல்களை இயற்றினார்.

இவருக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த மகான் ஞானேஸ்வரர். அவர் ஆலந்தி என்னுமிடத்தில் ஜீவசமாதி அடைந்தார். அவர் ஏகநாதரின் கனவில் தோன்றி மரத்தின் வேர் வளர்ந்து என் உடலில் குத்துகிறது. அதனை அப்புறப்படுத்து என்றார். விடிந்ததும் ஆலந்தி சென்ற ஏகநாதர் சமாதியைத் திறந்துபார்க்க மரத்தின் வேர் ஞானேஸ்வரரின் உடலில் குத்தியபடி இருந்தது. அதை அப்புறப்படுத்தி மீண்டும் சமாதியை மூடினார் ஏகநாதர்.

12 ஜோதிர்லிங்கத் தலங்கள், மதுரா, கோகுலம், பிருந்தாவனம் உள்ளிட்ட பல தலங்களையும் தரிசித்து வந்தார். அந்த நிலையில் குரு ஜனார்த்தனரின் ஆணைப்படி கிரிஜா எனும் பெண்ணை மணந்து கொண்டார். அவர்களுக்கு ஹரி என்ற மகனும் கங்கா, லீலா எனும் இரண்டு மகள்களும் பிறந்தனர். குடும்பமே பக்தியில் திளைத்தது. ஒருநாள் கண்டியா என்ற பெயருடைய சிறுவன் ஒருவன் ஏகநாதரின் வீட்டுக்கு வந்தான். அவன் ஏகநாதரை வணங்கி உங்களது பக்தி, பரோபகாரம், சாதிபேதம் பார்க்காமல் அனைவருக்கும் உதவும் தன்மை போன்ற உயர்குணங்களை அறிந்தேன். தங்களுக்குப் பணிவிடை செய்ய விரும்புகிறேன். எனக்கு உற்றார் உறவினர் எவருமில்லை. நான் செய்யும் பணிக்கு கூலி எதுவும் வேண்டாம். பசிக்கு அன்னமிட்டால் போதும் என்றான். சிறுவனின் வினயத்தைக் கண்டுவியந்த ஏகநாதர் அங்கேயே தங்கிக்கொள்ள அனுமதி தந்தார். சிறுவன் அங்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் உதவியாக இருந்தான் எதுவும் வேண்டுமென்று கேட்கவில்லை மனம் கோணவில்லை. அங்கு வரும் சாதுக்களும் அந்த சிறுவனின் தொண்டைக்கண்டு வியந்து அவன்மீது அன்பு செலுத்தினர் கண்டியா என்னும் அந்த சிறுவன் இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் பணி செய்தான்.

இந்த நிலையில் துவாரகையில் மதன் என்பவர் துவாரகா கண்ணனை மிகுந்த பக்தியோடு வணங்கிவந்தார். கண்ணனின் தரிசனம் காண பலவாறு இறைஞ்சி வந்தார். ஒருநாள் அவர் கனவில் தோன்றிய கண்ணன் நான் பைதானில் ஏகநாதர் எனும் பக்தன் வீட்டில் கண்டியா என்னும் பெயரில் இருக்கிறேன். அங்கு சென்றால் என்னை தரிசிக்கலாம் என்றருளினார். பிரமித்த மதன் உடனே புறப்பட்டு பைதான் வந்தார். கோதாவரியில் நீராடினார். அப்போது ஆற்றில் நீர் எடுப்பதற்காக காவடிபோல் இரு குடங்களை தோளில் வைத்துக்கொண்டு வந்த ஒரு சிறுவனைப் பார்த்தார். அவனை அழைத்து ஏகநாதர் வீடு எங்கே என்று கேட்க அவன் நீர் எடுத்துக்கொண்டு அவரையும் அழைத்துச் சென்று ஏகநாதரின் இல்லத்தைக் காட்டினான். பின்னர் நீரை உள்ளே கொண்டு சென்றான்.

ஏகநாதரைப் பார்த்ததும் மதனின் மேனி சிலிர்த்தது. இவர் வீட்டிலல்லவா கண்ணன் இருக்கிறான். எத்தனை பாக்கியம் செய்தவர் என்று நெகிழந்து சுவாமி நான் துவாரகையிலிருந்து வருகிறேன். கண்ணன் கண்டியா எனும் பெயரில் தங்கள் வீட்டில் இருப்பதாக என் கனவில் வந்து கூறினார். அந்த கண்டியாவை தரிசிக்க எனக்கு அனுமதியளிக்க வேண்டும் என்றார். அதைக்கேட்ட ஏகநாதரின் மயிர்க்கால்கள் சிலிர்த்தன. துவாரகைக் கண்ணன் இங்குதான் இருக்கிறானா இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நான் அவனை அறிந்துகொள்ளவில்லையே என்று உருக அங்கே சிறுவன் அவ்விருவருக்கும் கண்ணனாகக் காட்சிதந்தான். பின் ஏகநாதரின் பூஜையறையில் சென்று மறைந்தான். இந்த சம்பவம் பலரும் எழுதியுள்ள ஏகநாதர் சரித்திரத்திலும் ஏகநாதர் பாடல்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது.

பானுதாச ருக்வேதி

பானுதாச ருக்வேதி என்பவர் மகாராஷ்டிர அந்தணர். ஔரங்காபாத் அருகேயுள்ள பைதான் என்னுமிடத்தில் பிறந்தவர். வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் தேர்ச்சிபெற்றவர்கள் வசித்த இடம். பானுதாசர் சிறுவயதில் படிப்பில் மிக மந்தமாக இருந்தார் எனவே தந்தையின் ஏச்சுக்கு அடிக்கடி ஆளாக வேண்டியிருந்தது. ஒருநாள் மனம் வெறுத்து அருகேயிருந்த சூரிய நாராயணன் கோயிலில் அன்ன ஆகாரமின்றி இரண்டு நாட்கள் அமர்ந்து விட்டார். மூன்றாம் நாள் ஒளிப்பிரகாசமாக வந்த ஒரு பெரியவர் சிறுவனிடம் பாலைக் கொடுத்து அருந்தச் சொன்னார். அவ்வாறு ஐந்து நாட்கள் பாலருந்தியவர் ஞானசூரியனாக வெளியே வந்தார். பகவத்பக்தி பஜனை என்று நாட்கள் நகர்ந்தன.

இளைஞனானதும் ஆடைகள் விற்கும் தொழில் புரிந்தார். நியாயமாக விற்றதால் நன்கு வியாபாரமானது. ஒருநாள் வாரச்சந்தையில் விற்பனையை முடித்து விட்டுத் திரும்பிய அவர் அன்றிரவு ஒரு சத்திரத்தில் தங்கினார். அப்போது பஜனை சத்தம் கேட்கவே சக வியாபாரிகளிடம் உடமைகளைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு அங்கு சென்று விட்டார். அவர்கள் பானுதாசர் மீது பொறாமை கொண்டவர்கள். எனவே அவரது குதிரையை அவிழ்த்துவிட்டனர். ஆடைப்பொதியை வேறிடத்தில் ஒளித்து வைத்தனர். பணத்தை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு படுத்துவிட்டனர். அப்போது அங்குவந்த கொள்ளைக்கூட்டத்தினர். அவர்களை அடித்து இருந்த பொருட்கள் அனைத்தையும் பறித்துச் சென்றுவிட்டனர். பஜனை முடிந்து பானுதாசர் திரும்பிவர எதிரில் வந்த ஒருவர் உன் குதிரையும் பணமும் வைத்துக்கொள் என்று ஒப்படைத்துவிட்டு துணிப்பொதி மறைத்து வைக்கப்பட்ட இடத்தையும் காட்டிவிட்டுச் சென்றுவிட்டார். பானுதாசருக்கு எதுவும் புரியவில்லை. அவர் சத்திரத்துக்கு வந்ததும் சக வியாபாரிகள் நடந்ததையெல்லாம் கூற இறைவனே வந்தார் என்பதை அறிந்து மெய்சிலிர்த்துப் போனார்.

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் பண்டரிபுரத்திலுள்ள விட்டலன் சன்னதிக்கு வந்தபோது விட்டலனின் அழகில் மயங்கினார். அவரை எடுத்துச்சென்று தமது பிரதேசத்தில் அனகோந்தி என்னுமிடத்தில் (தற்போதைய ஹம்பி) பிரதிஷ்டை செய்துவிட்டார். பண்டரிபுரத்தில் உள்ளவர்கள் பானுதாசரிடம் விட்டலன் இல்லாக்குறையைச் சொல்லி மனம் வருந்தினார்கள். பானுதாசர் ஹம்பி சென்றார். ஒரு திருவிளையாடல் மூலம் இறைவன் பானுதாசரின் பெருமையை அரசனுக்கு உணர்த்த நெகிழ்ந்த கிருஷ்ணதேவராயர் விட்டலன் விக்ரகத்தை திரும்பக் கொடுத்ததோடு பிரதிஷ்டை வைபவத்திலும் கலந்து கொணடார். இன்றைக்கு பண்டரிபுரத்திலுள்ள விட்டலன் பானுதாசரால் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டவரே.

ஸ்ரீ பாஸ்கர ராயர்

தேவி உபாசகர் ஒருவர் செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பம் இட்டிருந்தார். ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர இயலவில்லை. ஒரு நாள் அவர் பூஜையறையில் அம்பிகையை தியானித்தவாறு பூஜையில் ஆழ்ந்திருந்தார். அப்போது கடன் கொடுத்த அந்த செல்வந்தர் அவர் வீட்டு வாசலில் வந்து அவர் பெயரை சொல்லி அழைக்க அந்த தேவி உபாசகர் வெளியே வராததால் கோபம் கொண்ட செல்வந்தர் அவரை வாயில் வந்தபடி திட்டி கூச்சல் போட ஆரம்பித்தார். அப்போது உள்ளிருந்து அந்த தேவி உபாசகரின் மனைவி வெளியே வந்து உங்களுக்கு பணம் தானே வேண்டும் கூச்சல் போடாதீர்கள் சிறிது நேரத்தில் பணத்துடன் வருகிறேன் என்று மிடுக்காக சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தாள். சிறிது நேரத்தில் சிறு பையுடன் வந்தாள் புன்னகையுடன் அந்த பையை அவரிடம் நீட்டியவாறே இதோ பாருங்கள். இந்த பையில் நீங்கள் கடனாக கொடுத்த பணமும் அதற்குண்டான வட்டியும் உள்ளன. பூஜை முடிந்ததும் நீங்கள் அவர் கையினால் பிரசாதம் பெற்றுக்கொண்டு பின் இந்த பத்திரத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள் என்று புன்னகை மாறாத முகத்துடன் சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட்டாள். செல்வந்தரும் பத்திரத்துடன் வீட்டுதிண்ணையில் அமர்ந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் பிரசாத தட்டுடன் வெளியே வந்த அந்த தேவி உபாசகர் அங்கே அமர்ந்திருந்த செல்வந்தரை கண்டு வியப்புடன் உங்களை கவனிக்க வில்லை மன்னியுங்கள் என்று பிரசாத தட்டை நீட்டினார். செல்வந்தர் முதலில் இந்த பத்திரத்தை வாங்கி கொள்ளுங்கள் என்றார். அவரின் வார்த்தைகள் கேட்டு தேவி உபாசகருக்கு ஆச்சரியம். நான் இன்னும் உங்கள் கடனை அடைக்கவில்லையே என்று பரிதாமாக கூறியவரை புன்னகையுடன் ஏறிட்டார் செல்வந்தர். உங்கள் மனைவி சற்று முன்பு வந்து மொத்த கடனையும் அடைத்துவிட்டு பத்திரத்தை உங்களிடம் கொடுக்க சொன்னார் என்றார். ஆச்சரியத்தில் ஆழ்ந்த தேவி உபாசகர் மனைவியை அழைத்து நீ இவரது கடனை அடைத்ததாக கூறுகிறாரே உண்மையா என்று கேட்டார். அந்த அம்மையாரோ திகைப்புடன் நான் பூஜையறையில் உங்களுடன் தானே இருந்தேன். இது எப்படி சாத்தியம்? என்றார். அப்போது பூஜையறையிலிருந்து ஒரு அசரீரி குரல் கேட்டது நான் தான் பணம் கொடுத்தேன். குரல் கேட்டு பூஜையறைக்கு அனைவரும் விரைந்தனர். அங்கே அம்பிகையின் உருவத்தை தவிர வேறு யாரும் இல்லை.

இப்போது அனைத்தும் புரிந்தது தேவி உபாசகருக்கு. கடனை அடைக்க தன் மனைவி உருவில் வந்தது சாட்ஷாத் அம்பிகையே என்றுணர்ந்த அவரின் கண்களில் இப்போது தாரை தாரையாய் கண்ணீர் அருகே திக்பிரமையுடன் அவரது மனைவி. உங்கள் மேன்மை தெரியாமல் தவறாக பேசி விட்டேன் மன்னியுங்கள் என்று செல்வந்தர் அவரின் கால்களில் விழுந்தார். அந்த தேவி உபாசகர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கரராயர். அவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது. தஞ்சை மாவட்டம் திருவாலங்காட்டுக்கு அருகே காவேரி ஆற்றங்கரையில் வசித்தவர். இவர் தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.

காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும் குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. பாஸ்கர ராயர் பற்றி திரித்துக் கூறி இகழ்ந்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த பாஸ்கர ராயர் தாம் வாதம் செய்ய தயார் என்று பிரகடனம் செய்கிறார். பாஸ்கர ராயருடன் வாதம் செய்ய அங்கிருந்த குங்குமாநந்த நாதர் என்னும் யோகியைத் தயார் செய்து அவரை முதன்மையாகக் கொண்டு வாதத்தை தொடங்குகின்றனர் வைதீகர்கள். பல கேள்விகளுக்கும் சிறப்பாக சுலபமாக பதிலளிக்கிறார் பாஸ்கரர். அவரது வாதத் திறமையையும் மந்திர சாஸ்திரத்தில் இருக்கும் திறமையும் எல்லோரும் வியக்கின்றனர். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில் இருக்கும் சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா (237ஆம் நாமம்) என்பதில் வரும் 64 கோடி யோகினீகள் யார் என்று கேட்கின்றனர். பாஸ்கரரும் அம்பிகையை தியானித்துப் பின்னர் வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து அந்தந்த யோகினிகளுக்கான பெயர் மந்திரங்கள், சரித்திரங்களை வரிசையாகச் சொல்லச் சொல்ல பிரமித்துப் போய்விடுகின்றனர். அப்போது வைதீகர்கள் தமது தலைவரான யோகி குங்குமாநந்த நாதரிடம் எப்படி இது சாத்தியம் என்று கேட்டார்கள். அவரும் பாஸ்கர ராயர் சாதாரணமானவர் அல்ல. நமது கேள்விகளுக்கு அன்னை பராசக்தியே கிளி உருவில் அவர் தோளில் அமர்ந்து அவர் சார்பில் பதிலளிக்கிறாள் என்று கூறுனார். யோகி வைதீகர்ளுக்கு அந்தக் காட்சியை காண விசேஷ பார்வையையும் அளிக்கிறார். வைதீகர்களும் அன்னையைக் கிளி ரூபமாக தரிசித்து பாஸ்கர ராயரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் பாஸ்கர ராயரை குருவாக ஏற்று அவரிடம் மந்திரோபதேசமும் பெற்றனர்.

முத்துத் தாண்டவர்

முத்துத் தாண்டவர் என்பவர் இசைவேளார் குலத்தில் தோன்றியவர். இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்தார். இதனால் தமது தொழிலைச் செய்ய முடியாமல் போனதால் சீர்காழி சிவாலயத்திற்குச் சென்று வணங்கிவிட்டு அங்கேயே தங்கி விடுவார். அங்கு அருள் பாலிக்கும் ஈஸ்வரர் தோணியப்பருக்கு முன் நின்று தேவாரம் திருவாசகம் பாடி வந்தார். உணவுக்கு வருவாய் இல்லாததால் கோயிலில் கிடைக்கும் பிரசாதங்களை வாங்கி உண்டு வந்தார். ஒரு நாள் இரவு முத்துத் தாண்டவருக்கு பிரசாத உணவு கிடைக்கவில்லை. இதனால் ஏற்கெனெவே நலிவுற்றிருந்த அவர் உடல் மேலும் மோசமடைந்தது. ஒரு நாள் சீர்காழி கோயிலில் சிவனை வழிபட்டுத் திரும்புகையில் உடல் தளர்ந்து சிவபெருமானின் பல்லக்குகள் வைத்திருந்த மண்டபத்திற்கு அருகில் வரும்போது தள்ளாடி விழுந்து சிலநொடிகளில் சுய நினைவை இழந்தார். இவர் மயங்கிக் கிடப்பதை கவனிக்காத ஆலய குருக்கள் விளக்கைகளை அணைத்துவிட்டு கோயில் கதவைத் தாழிட்டுச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து சுயநினைவு பெற்ற தாண்டவர் தன் நிலையை உணர்ந்து கலங்கினார். உள்ளே கொலுவிருந்த பிரும்மபுரீஸ்வரரை நோக்கிக் கதறி அழுது அரட்டினார். தனக்கு ஆதரவு தய யாருமே இல்லையா என இறைஞ்சி மன்றாடினார். அழுது அழுது சோர்ந்த அவர் மறுபடியும் மயக்கமானார்.

அப்போது ஒரு சிறுமி வந்து எழுப்பினாள். விழித்துப் பார்த்தார் தாண்டவர். குருக்களின் மகள் முன்னே நிற்பதைத் தெரிந்து கொண்டார். தன் கையில் இருந்த பாத்திரத்தில் இருந்த உணவை தாண்டவருக்கு அளித்தாள். அவர் உண்டு முடித்ததும் உமக்கு என்ன குறை என்று வினவினாள். தன் குறையைச் சொல்லி அழுத தாண்டவரைத் தேற்றிவிட்டு நீ சிதம்பரத்துக்குச் செல் அங்கு வீற்றிருக்கும் நடராஜப் பெருமானை நோக்கி ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் புனை என பணித்தாள். பாடல் புனையவா பாடலுக்கு நான் எங்கே போவேன் என்று புலம்பினார் தாண்டவர். சிதம்பரத்துக் கோயிலில் தினமும் நீ கேட்கும் பக்தர் வாயில் இருந்து வரும் வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு பாடல் புனையுமாறு ஆலோசனை கூறி மாயமாய் மறைந்து விட்டாள் அச்சிறுமி. இவரும் அப்படியே தூங்கிப் போனார். மறு நாள் பொழுது புலர்ந்தது. காலையில் கோயிலைத் திறந்து கொண்டு காவலர்களும், அர்ச்சகர்களும் ஓதுவார்களும் உள் புகுந்தனர். அங்கு அவர்களுக்கு யாரென்றே அடையாளம் தெரியாத ஒருவர் படுத்துக் கிடந்ததைக் கண்டனர். அவன் முகத்தைக் காணும்போது அம்முகத்தில் அலாதியான ஒளி பரவியிருந்தது தெரிந்தது. அப்போது குருக்கள் அவர் முகத்தைத் திருப்பிப் பார்த்து இவர் நம் தாண்டவர் என்றார்.

முந்தைய இரவு சிறுமியாக வந்தது பார்வதி தேவிதான் என்பது இப்போது தாண்டவருக்குப் புரிந்து போனது. அன்னையின் அருளால் நல்முத்தின் சுடரொளி போலத் தோற்றப்பொலிவைப் பெற்ற தாண்டவருக்கு முத்துத்தாண்டவர் என்று பெயரளித்தனர் அங்கிருந்தோர்.
முத்துத்தாண்டவர் அன்னையின் அருள்வாக்குப்படி சிதம்பரத்தை நோக்கிப் பயணமானார். சிதம்பரத்தை அடைந்ததும் அவர் காதில் பூலோக கைலாயகிரி சிதம்பரம் என்ற சொற்கள் விழுந்தது. அவ்வரியையே தொடக்கமாக வைத்து ஒரு பாடலைப் புனைந்தார். அவர் முழுப்பாடலை பாடி முடித்ததும் ஐந்து பொற்காசுகள் அவர் நின்றிருந்த படிக்கருகில் தோன்றின. ஈசன் மனம் கனிந்து அளித்ததை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு நாளும் அவர் காதில் விழுந்த, பக்தர்களின் முதல் வார்த்தையைக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தவாறு காலம் தள்ளினார் முத்துத்தாண்டவர்.

ஒரு நாள் அவர் பாடல் புனைய பக்தர்களிடமிருந்து எந்த வார்த்தை வரியும் வெளிப்படவில்லை. என்ன செய்வதென்று அறியாத தாண்டவர் மனதுக்குள் புலம்ப ஆரம்பித்தார். சில மணித்துளிகளுக்குப் பிறகு சும்மா இருக்க மாட்ட பாழாப் போன மனசே கொஞ்சம் பேசாம இரு என்று தனக்குத்தானே தன்னை சொல்லிக் கொண்டார். இந்த வார்த்தைகள் அவர் உள்ளத்துள் மின்னல் வெட்டியது போல ஒரு நினைவு உண்டானது. உடனே பேசாதே நெஞ்சமே என்ற வார்த்தைகளை தொடக்கமாகக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தார். தன் பாடல் வரிகளுக்கு இனி அடுத்தவரை நம்ப வேண்டாம் என்பதை இறைவன் உணர்த்தினான் என்பதை உணர்ந்து கொண்டார். இதுவும் அவன் உணரச் செய்த விளையாட்டு இது என்பதை உணர்ந்து கொண்டார்.

ஒருமுறை கோயிலுக்குச் செல்கையில் பாம்பு ஒன்று அவரைத் தீண்டிச் சென்று விட்டது, அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே என்று தில்லை ஈசனை நோக்கிப் பாடினார். விஷம் தடித்த இடம் தெரியாதபடி உடலை விட்டு நீங்கிப் போனது. பின்னொருநாளின்போது கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டோடியது. இதனைக் கண்டு சிதம்பரம் செல்ல முடியாதோ என தவித்துப் போனார். காணாமல் வீணிலே காலம் கழித்தோமே என்று மனமுருகப் பாடினார். பாடலைக் கேட்ட கொள்ளிட ஆறு அவருக்கு இரண்டாகப் பிரிந்து வழி கொடுத்தது. சிதம்பரம் செல்ல வழி பிறந்ததும் தரிசனம் செய்வேனே என்ற பாடலைப் பாட ஆரம்பித்து விட்டார்.

1640 ம் வருடத்தில் ஆவணிப் பூச நாளின்போது மாணிக்க வாசகர் பேறு எனக்குத் தரவல்லாயோ அறியேன் என்று நடராஜரை நோக்கி உருகிப் பாடினார். உடனே நடராஜத் திருமேனியிலிருந்து ஒரு பெரிய ஜோதிப்பிழம்பு புறப்பட்டு வந்து அவரை ஆட்கொண்டது. நாள் தவறாமல் முத்துத்தாண்டவர் பாடிய பல பாடல்கள் பின்னாளில் கிடைக்காமல் போனது. சில பாடல்களே இன்று நம்மிடம் வரை இருக்கிறது. அதில் அறுபது கீர்த்தனங்களும் இருபது பதங்களும் மட்டுமே இன்று நம்மிடம் இருக்கிறது. அவற்றுள் ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ போன்ற பாடலை இன்று அதிகம் பலர் பாடுகின்றனர். இக்கீர்த்தனைகள் நடனத்துக்குப் பெரிதும் உதவுவதால் அதற்கு இதை பயன்படுத்தி வருகின்றனர்.

வீரபிரம்மேந்திரர்

விஸ்வகர்மா பொற்கொல்லர் மரபில் வந்த பரிபூரணஆசாரி பிரகதாம்பாள் என்ற தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்தார் வீரபிரம்மேந்திரர். அவர் பிறந்த அன்றே அவர் தந்தை இறந்து விட்டார். அதனால் மிகுந்த கலக்கமெய்தினாள் பிரகதாம்பாள். ஒரு முனிவரிடம் குழந்தையை ஒப்படைத்த அவள் தான் வாழ விரும்பாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். முனிவர் அந்த அழகிய குழந்தையைக் கனிவோடு பார்த்தார். எவ்விதம் அந்த தெய்வீகக் குழந்தையை வளர்ப்பது என சிந்தனையில் ஆழ்ந்தார். இறைவன் கட்டளையேபோல அவரைத் தேடிவந்தார்கள் இருவர். வீரபோஜர் வீரபாப்பம்மா என்ற அவ்விருவரும் அந்தக் குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக உறுதி கூறி வாங்கிச் சென்றார்கள். வீரபிரம்மத்தைப் பதினான்கு வருடம் மிகப் பாசத்துடன் வளர்த்தார்கள் அவர்கள். அப்போது வீரபிரம்மத்தின் வளர்ப்புத் தந்தை காலமாகிவிட்டார். பிறந்த போதே தந்தையையும் பின் தாயையும் இழந்தது இப்போது வளர்ப்புத் தந்தையையும் இழந்தது வீரபிரம்மேந்திரரை சிந்தனையில் ஆழ்த்தின. தத்துவ ஞானத்தில் தோய்ந்தது அவர் மனம். தம் வளர்ப்புத் தாயிடம் தமக்கு வற்றாத ஆன்மிகத் தேடல் இருப்பதால் அந்த வழியில் வாழ்க்கை நடத்தப்போவதாகக் கூறி பிரியாவிடை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

கால்போன போக்கில் நடந்தார். எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அமைதியாக நெடுநேரம் தியானம் செய்தார். இந்த வாழ்வின் பொருள் என்ன என்றறியும் தீராத ஆவல் அவருக்கிருந்தது. அவர் போகாத கோவில் இல்லை. ஒருநாள் இரவு வீரபிரம்மேந்திரர் பனகானபள்ளி என்ற அழகிய சிறு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே அச்சம்மா என்பவளின் வீட்டுத் திண்ணை காலியாக இருந்தது. அதில் படுத்து உறங்கினார். காலை கதவைத் திறந்து வெளியே வந்து திண்ணையைப் பார்த்தாள் அச்சம்மா. யாரோ ஒரு பையன் உறங்குகிறானே? உறங்கும்போதும் அவன் முகத்தில் தென்பட்ட ஒளி அச்சம்மாவை வசீகரித்தது. அந்தப் பையன் மேல் அவளுக்குத் தாயன்பு பெருகியது. அவன் எழுந்ததும் யாரப்பா நீ என்று விசாரித்தாள் அவள். அவன் தான் ஓர் அநாதை என்றும் ஊர் ஊராகச் சுற்றி வருவதாகவும் தெரிவித்தான். எனக்கு நான் வளர்க்கும் மாடுகளை மேய்க்க ஒருவன் தேவை. இனி இங்கேயே இரு என்று கண்டிப்பு கலந்த பிரியத்தோடு சொல்லி அவனுக்கு உணவளித்தாள் அச்சம்மா. இப்படியாக வீரபிரம்மேந்திரர் அச்சம்மாவின் மாடுகளை மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தப்பட்டார்.

வீரபிரம்மேந்திரர் மாடுகளைச் சுற்றி ஒரு மிகப்பெரிய வட்டக் கோடு வரைந்து விடுவார். மாடுகள் அந்தக் கோட்டுக்குள்ளிருந்து புல் மேய்ந்து கொண்டிருக்கும். அதைக் கடந்து செல்லாது. மாடுகள் அவரைப் பெரிதும் நேசித்தன. மாடுகள் புல்மேயும் தருணத்தில் வீரபிரம்மேந்திரர் கால ஞானம் என்ற எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் நூலை எழுதலானார். பனையோலையில் முட்களால் எழுதப்பட்டதே அந்த நூல். ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அந்த நூலை எழுதிவந்தார் அவர். இப்படியாகக் காலம் போய்க்கொண்டிருந்த போது ஒருநாள் மாடுகளை அடித்துச் சாப்பிடும் எண்ணத்தில் காட்டிலிலிருந்து ஒரு புலி அங்கு வந்தது. ஆனால் வீரபிரம்மேந்திரர் கிழித்த கோட்டினுள்ளே செல்ல இயலாமல் புலி தத்தளித்துத் திரும்பிச் சென்றது. இதைப் பார்த்தார்கள் சில இடையர்கள். அவர்கள் அச்சம்மாவிடம் சென்று இந்தத் தகவலைச் சொன்னார்கள். அச்சம்மா வியப்படைந்தாள். ஏற்கெனவே வீரபிரம்மேந்திரரின் முகத்தில் தென்பட்ட தெய்வீக ஒளி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. தவிர அவர் ஏதோ தொடர்ந்து எழுதி வருவதையும் அவள் அறிவாள்.

வீரபிரம்மேந்திரர் வீடு திரும்பியதும் அச்சம்மா அவரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அவர் பெரிய மகான் என்பதைத் தாம் இப்போது தான் அறிந்ததாகவும் அவரை மாடு மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தியது பெரும் தவறு என்றும் அவள் கண்ணீர் உகுத்தாள். ஏதோ ஒரு தொழில் செய்து எல்லாரும் வாழ வேண்டியது தான். கண்ணனே மாடு மேய்த்தவன் தான். அது ஒன்றும் இழிவான தொழில் அல்ல என்று கூறி அவளை சமாதானப் படுத்தினார் வீரபிரம்மேந்திரர். அச்சம்மா அவர் எழுதிவரும் நூல் என்னவென்று விசாரித்தாள். எதிர்காலத்தில் நடக்கப்போவதைத் தான் கணித்து எழுதி வருவதாக அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் என்னென்ன நடக்குமென்று எனக்கு ஓரளவாவது சொல்ல இயலுமா என்று அச்சம்மா கேட்டாள். வீரபிரம்மேந்திரர் நகைத்துக்கொண்டே சில விஷயங்களைச் சொன்னார். அவற்றில் சில:

புண்ணிய நதிகள் வற்றிவிடும். கடல் பொங்கி நகருக்குள் நுழையும். அதனால் அதிகம் பேர் உயிரிழப்பார்கள். கணவனை மட்டுமே மணந்து வாழும் பத்தினிப் பெண்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். ஆண்கள்- பெண்கள் இரு தரப்பாரிடமும் ஒழுக்கம் கெடும். இந்தியாவில் ஜனத்தொகைப் பெருக்கம் அதிகமாவதால் குழந்தை பிறப்பதை செயற்கை முறையில் தடுக்கப் பார்ப்பார்கள். பெரியோருக்கு அடங்கி சிறியோர் நடந்தது போகும் காலம் மாறி சிறியோருக்கு அடங்கி பெரியோர் நடக்க நேரிடும். புண்ணியத் தலங்களில் வாழ்பவர்கள் ஆண்டவனுக்கு அஞ்சி வாழாமல் ஆண்டவன் பெயரால் மோசடி செய்து வஞ்சித்து வாழ்வார்கள்.’ இதையெல்லாம் கேட்ட அச்சம்மா மிகுந்த வியப்படைந்தாள். அவரையே தன் குருவாக ஏற்றாள் அச்சம்மா. தனக்கு உபதேசம் வழங்குமாறு வேண்டினாள். வீரபிரம்மேந்திரர் அவளுக்குச் சிவ மந்திரத்தை உபதேசித்து, அதை ஓயாமல் ஜெபித்து வருமாறு பணித்தார். பொருள் மேல் உள்ள ஆசையை விட்டு விட்டு ஆன்மிகப் பணிகளில் நாட்டம் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அச்சம்மாவின் மனம் வீரபிரம்மேந்திரரின் உபதேசங்களால் ஞானம் அடைந்தது. மெல்ல மெல்லப் பற்றுகள் அவளை விட்டு விலகத் தொடங்கின. இல்லறத்தைத் துறந்து துறவியானாள் அவள். தன் சொத்தையெல்லாம் செலவிட்டு ஏகாந்த மடம் என்றொரு மடம் நிறுவினாள். அதில் வாழ்ந்தபடி வீரபிரம்மேந்திரரின் கொள்கைகளை மக்களிடையே பரப்பிவரலானாள். அச்சம்மாவின் வாழ்க்கை இனி அவ்விதமே தொடரும் என அறிவித்த வீரபிரம்மேந்திரர், அவளிடம் விடைபெற்று மீண்டும் பல்வேறு தலங்களுக்கு யாத்திரை செல்லலானார்.

ஆந்திரவில் இருக்கும் போலேரம்மா என்ற புகழ்பெற்ற அம்மன் கோவிலுக்குச் சென்றார் அவர். அங்கு சிலர் போலேரம்மா புனித யாத்திரைக்கு அவரிடம் நன்கொடை கேட்டனர். நன்கொடை தருவது கட்டாயமென்று அவரை அச்சுறுத்தினர். இப்போது என்னிடம் பணம் எதுவுமில்லையே, பிறகு கிடைத்தால் தருகிறேன் என்றார். பின் தன் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டார் அவர்களிடம். அவர்கள் நன்கொடை தராத அவருக்கு நெருப்புத் தர மறுத்தனர். அவர் போலேரம்மா கோவிலுக்கு வெளியே வந்துநின்றார். உள்ளே சந்நிதியை உற்றுப் பார்த்தார். போலேரம்மா என் சுருட்டுக்குக் கொஞ்சம் நெருப்பு கொடு என்று கேட்டார். மறு நிமிடம் போலேரம்மா சந்நிதியிலிருந்து ஒரு தணல் காற்று வெளியில் புறப்பட்டு வந்தது அவரது சுருட்டைக் கொளுத்தியது சரி சரி நெருப்பு போதும் என்று அவர் சொன்னதும் மீண்டும் கருவறைக்கே சென்று மறைந்தது அந்தத் தணல். இந்த அதிசயத்தைப் பார்த்தவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள். அவரது காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்கள். அவர்கள் அனைவருமே அவரின் அடிய வர்களானார்கள். இப்படி மெல்ல மெல்ல வீரபிரம்மேந்திரரின் அடியவர் எண்ணிக்கை நாள் தோறும் பெருகத் தொடங்கியது.

காலப்போக்கில் அவர் தமது பொற்கொல்லர் மரபில் தோன்றிய கோவிந்தம்மா என்ற பெண்ணை மணந்தார். இல்லறம் துறவறம் இரண்டும் சம மதிப்புடையவை தான் என்று அவர் அடிக்கடிச் சொல்வது வழக்கம். தம் இல்லற வாழ்வில் ஐந்து மகன்களையும் ஒரு மகளையும் பெற்றார். தம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் ஆன்மிகவாதிகளாக மாற்றினார். அனைவருடனும் இணைந்து ஆன்மிகப் பணியாற்றி வந்தார். தாம் ஜீவசமாதி அடைய எண்ணி குடும்பத்தாரிடம் அறிவித்தார் வீரபிரம்மேந்திரர். குடும்பத்தார் கண்கலங்கினர். யாக்கை நிலையற்றது இதன் மேல் பற்று வைக்காதீர்கள் என்று போதித்தார். பின் சமாதிக்குழியில் இறங்கி நிஷ்டையில் அமர்ந்தார். எனக்கு இறப்பில்லை என்பதால் என் மனைவி தன் சுமங்கலிலிக் கோலத்தை மாற்றத் தேவையில்லை என்று அறிவித்தார். சமாதியின் மேலே பலகை போட்டு சமாதி மூடப்பட்டது.

பத்து மாதங்கள் சுழன்றோடின. இன்னுமா அவர் உயிரோடிருப்பார்? அவர் மனைவிக்கேன் சுமங்கலிலிக் கோலம் என்று சிலர் விமர்சித்தனர். மூத்த பிள்ளை மனம் நொந்து தாயிடம் விளக்கம் கேட்டார். மக்களுக்கு அறிவில்லை. அவர்களின் அழிவுக்காலம் நெருங்கி விட்டதால் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். என் கணவர் எனக்கிட்ட கட்டளைப்படியே நான் சுமங்கலிலிக் கோலத்தில் இருந்து வருகிறேன் என்றார் தாயார். மகனுக்குச் சமாதானம் ஏற்படவில்லை அவன் ஆக்ரோஷத்தோடு ஒரு கடப்பாரையை எடுத்து வந்து சமாதியை இடித்துத் திறந்து பார்த்தான். அங்கே சலனமே இல்லாமல் யோக நிஷ்டையில் கம்பீரமாக வீற்றிருந்தார் வீரபிரம்மேந்திரர். சமாதியை இடித்த மூத்த மகனின் கைகள் நடுக்கத்தில் வெலவெலத்தன. அவனை கண்திறந்து பார்த்த வீரபிரம்மேந்திரர் சமாதியைத் திறந்த தோஷம் விலகப் பரிகாரம் செய்யச் சொல்லி மீண்டும் சமாதியை மூடச் சொன்னார். இந்த அதிசயத்தைப் பார்த்த ஊர்க்காரர்கள் வீரபிரம்மேந்திரரின் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டனர். மனைவியையும் பக்தியோடு கும்பிடத்தொடங்கினார்கள். ஆந்திராவில் கந்தி மல்லையபள்ளி என்ற இடத்தில் இருக்கிறது சித்த புருஷரான வீரபிரம்மேந்திரரின் ஜீவசமாதி.

Image may contain: text that says 'எதிர்காலத்தை முன்னமே சொன்ன வீரபிரம்மம்!'

மாணிக்கவாசகர்

This image has an empty alt attribute; its file name is image-6.png

திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும் சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரை மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அமைச்சராகப் பதவி அமர்த்தினார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டு வந்தான். தன் புலமையால் தென்னவன் பிரமராயன் எனும் பட்டத்தையும் பெற்றார். உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்த போதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு செய்து வந்தார்.

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான். மாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையில் உள்ள அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவிலை அடைந்தார். அங்கே ஓரு மரத்தின் அடியில் சிவபெருமான் மானிட வடிவு எடுத்து கையில் ஏடுகள் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அவர் முன்பு சென்று மாணிக்கவாசகர் தங்கள் கரத்தில் இருப்பது என்னவென்று கேட்க அவர் சிவஞான போதம் என்றார். (இது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் அல்ல) சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் என்னவென்று அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன் என்றார் மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்கு போதித்து திருவடி தீட்சையும் கொடுத்தார் குரு வடிவத்தில் வந்த சிவபிரான். தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர்.

பாண்டிய மன்னன் ஒற்றர்களிடம் அரசனின் ஆணை தாங்கிய ஓலை கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகரை அழைத்துவரக் கட்டளையிட்டான். மாணிக்கவாசகரோ குருவின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை என்று கூறி அந்த ஓலைச்சுவடியை குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குரு ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து குதிரைகள் வர இப்போது நல்ல நாளில்லை ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல் என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார். சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்து கொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் எங்குமே குதிரைகள் தென்படவில்லை என்ற செய்தியோடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை.

பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை ஒற்றர்கள் மூலம் பிடித்து சுட்டெரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார். உடனே சிவபெருமான் தமது சிவகணங்களை குதிரை வீரர்களாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றி விடுவித்தான். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி அவற்றின் சிறப்பைக் கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.

அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்து விட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூரரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான். மாணிக்கவாசகர் வெயிலில் நின்றதும் சிவபெருமான் கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார். கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது. உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்க வேண்டும் என்று முரசு அறிவிக்கிறான். ஊரில் உள்ள அனைவரும் வீட்டுக்கு ஒருவர் செல்கின்றனர். வந்திக் கிழவி எனும் ஒருவள் மட்டும் தன் வீட்டில் யாருமில்லாததால் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய் அதற்கு கூலியாக நான் விற்கும் பிட்டில் உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது வேலையைத் தொடங்குகிறார். அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான்.

மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும் படவே பாண்டியன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது. மன்னவா வாதவூரரின் பெருமையை உலகுக்கு தெரிவிக்கும் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய் என்று அக்குரல் சொல்லிற்று. மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்த மன்னன் அவரை விடுவித்தான்.

திருவாதவூரரர் அரசவையை விட்டு திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் சிவபுராணம் திருச்சதகம் முதலிய பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு உத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன் பின்னர் தலயாத்திரை புரிந்து திருவண்ணாமலையில் திருவெம்பாவை திருவம்மானை ஆகியவற்றைப் பாடினார். மேலும் பல சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்து கொண்டிருந்தார். அந்த பாடல்கள் அனைத்தும் திருக்கோவையார் என்ற பெயருடன் இருக்கிறது. பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். அப்போது இலங்கையில் புத்த மதம் மேலோங்கி இருந்தது. தில்லையம்பலத்தைப் பற்றி கேள்விப்பட்டு மன்னனும் புத்தபிட்சுக்களும் தில்லையில் தங்கள் மதத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தில்லைக்கு வந்தனர். அப்போது மன்னன் தனது ஊமை மகளையும் அழைத்து வந்தான். வந்தவர்கள் தில்லையில் தங்கி நாங்கள் சைவர்களோடு வாதம் செய்து புத்த மதத்தை நிலைநாட்ட வந்தோம் என்று தில்லை அந்தணர்களிடம் கூறினார்கள்.

அந்தணர்கள் கலக்கமுற்றார்கள். அன்று இரவு தில்லை நடராஜர் அந்தணர்கள் கனவில் வந்து தில்லைக்கு தற்போது வந்திருக்கும் திருவாதவூரனை அழைத்து வாதம் செய்ய சொல்லுங்கள் அவன் வெல்வான் என்று கூறினார். அந்தணர்கள் திருவாதவூரரிடம் சென்று இறைவன் கூறியதைக் கூறி வாதம் புரிய அழைத்து வந்தனர். வாதம் நடந்தது. புத்தபிட்சுக்கள் தோற்றனர். இதனைப் பொறுக்காத புத்தபிட்சுக்கள் திருவாதவூரரைத் திட்ட ஆரம்பித்தார்கள். இதனை கேட்ட திருவாதவூரர் சரஸ்வதியை வேண்ட புத்தபிட்சுக்கள் அனைவரும் ஊமைகளாயினர். அதனைக் கண்ட இலங்கை மன்னன் பேசுவோரை ஊமை ஆக்கும் ஆற்றல் இருந்தால் ஊமையைப் பேச வைக்கும் ஆற்றல் இருக்குமல்லவா என்று கூறித் தனது மகளை பேச வைக்கும் படி கூறினார். திருவாதவூரரும் இறைவனை வேண்ட மன்னனின் மகள் பேச ஆரம்பித்தாள். இதனைக்கண்ட அனைவரும் திருவாதவூரரிடம் பணிந்து சைவ மதத்திற்கு மாறினர். பின்பு அனைவருக்கும் பேசும் ஆற்றல் வந்தது. மதம் மாறிய புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விக்கு மன்னனின் மகளையே பதில் சொல்ல வைத்தார். புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விகளுக்கு மன்னனின் மகள் கூறிய விடைகளே திருச்சாழல் என்னும் பதிகமாக அமைந்தன.

சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி தாங்கள் யாரோ என்று வாதவூரார் கேட்டார். நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை எழுத வந்தேன். நீங்கள் பாடுங்கள் அவற்றை நான் எழுதுகிறேன் என்று கூறினார் வேதியர். அதற்கு ஒப்புக்கொண்ட மாணிக்கவாசகர் பாட பல செய்யுட்களை எழுதி முடித்தார் வேதியர். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார். முடித்ததும் ஓலைச்சுவடியின் முடிவில் மாணிக்கவாசகன் ஓத சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையொப்பமிட்டு ஓலைச் சுவடிகளைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த தில்லை அந்தணர் ஒருவர் அவ்வோலைகளை எடுத்துப் பார்க்க அது திருவாசகமும் திருக்கோவையும் கொண்ட சுவடிகளாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த தில்லை அந்தணர்கள் இதன் பொருள் என்ன என்று வாதவூரரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்தில் நடராஜர் முன்பாக அழைத்துச் சென்ற வாதவூரர் இந்தப் பாடல்களின் பொருள் இவரே என்று கூறி நடராஜரைக் காட்டி விட்டு நடராஜர் இருக்கும் மூலஸ்தானத்தினுள் சென்று மறைந்தார்.